விஷ்வ மித்ரன்
🍻 எபிலாக்
இரண்டு வருடங்களின் பின்
‘மவுன்டன் ஸ்கூல்’ அன்றைய நாள் வெகு பரபரப்புடன் தான் இயங்கிக் கொண்டிருந்தது. இன்று ஐம்பது வருட நிறைவையொட்டி பொன் விழா கொண்டாடும் அப்பாடசாலை அலங்கார தோரணங்களில் ஜொலித்துக் கொண்டிருந்தது.
பொன் விழாவையொட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலை விழாவில் அதிதிகள், அதிபர் உட்பட ஆசிரியர்கள் அனைவரும் முன்வரிசையில் அமர்ந்திருக்க, மாணவர்கள் நிசப்தமாக நிகழ்வை ரசித்துக் கொண்டிருந்தனர்.
“அடுத்து ‘மாயக்கண்ணன்’ நடனம் மேடையேற்றப்படும். பங்குபற்றும் மாணவர்கள் ஆயத்தமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டது.
அதனைக் கேட்டு பெற்றோர் தம் பிள்ளைகளை ஆயத்தமாக்கி வைத்திருக்க, அந்நடனக் குழுவின் நாயகனோ தன் பெற்றோரின் முறைப்புக்கு ஆளாகிக் கொண்டிருந்தான்.
“டேய் என் பொறுமையை ரொம்ப சோதிக்காத. சமத்தா வா” என்று கத்தியது வைஷ்ணவியே தான்.
“என்னால முடியாது. பென்குயீன் வராம நான் வர மாட்டேன்” அழுத்தமாக நின்றான் கண்ணன் போல் வேடமிட்டிருந்தவன். அவன் ஐந்து வயதுச் சிறுவன் ஷ்ரவன்.
“ஜித்து என்னால முடியல. ஏதாச்சும் பண்ணுங்க இவன் போகலனா மிஸ் திட்டுவா” என்று அவள் கூறவும் அவனது நிகழ்ச்சி அரங்கேறப் போவதாகக் அறிவிக்கவும் சரியாக இருந்தது.
“கண்ணா வா!” அன்போடு மகனை அழைக்க, “அப்பா! பென்குயீன்…” என இழுத்தான்.
“சொன்னா கேட்க மாட்டியா. இங்கே வா” லேசாக துளிர்விட்ட கோபத்துடன் அவன் முழங்கையைப் பற்றி இழுத்துக் கொண்டு போய் விட்டான் விஷு.
இதுவரை அதிகம் சத்தம் போட்டுக் கூட இல்லாத தந்தை இன்று கடுமையாகப் பேசியது கண்களை கலங்க வைத்தது அவனுக்கு.
திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே மேடையேறினான் அவன். அவன் மனம் புரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை பெற்றவர்களால்.
பாட்டு பாடிக் கொண்டே அந்தச் சின்னஞ்சிட்டுகள் ஆட ஆரம்பிக்க, பிரதானமாக ஆட வேண்டியவனோ அசைவற்று இருந்தான்.
“என்ன பண்ணுறான் இவன்? ஆடாம அசையாம இருக்கானே” தாயானவள் தலையில் கை வைத்து விட்டு மீண்டும் மகனைப் பார்க்க அவனோ அழகாக நடனம் பயிலத் துவங்கியிருந்தான்.
அவன் முகமோ புன்னகையில் விரிந்திருக்க, விழிகள் மட்டும் அசையாமல் ஓரிடத்தில் நிலைக்குத்தி நின்றன. அவ்விடத்தை நோக்கினர் வைஷுவும் விஷுவும்.
அக்ஷராவும் மித்ரனும் பின் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். மித்ரனின் தோள்களில் இருக்கை கொண்டு அமர்ந்திருந்தாள்
அந்தக் கிருஷ்ணனுக்கு ஏற்றதாக ராதை போல் உடை அணிந்திருந்தவள்!
ஷ்ரவனின் பென்குயீன்!
அக்ஷரா மற்றும் மித்துவின் இரண்டு வயதுப் புதல்வி ஷிவானி….!!
பயிற்சியின் போது வழமையாக ஆடியதை விட இன்னும் சிறப்பாகவே தன் திறமையைக் காட்டிய ஷ்ரவனைக் கண்டு மனம் மகிழ்ந்தார் அவனுக்குப் பயிற்றுவித்த வகுப்பாசிரியை.
நடனம் முடிந்ததும் கைத்தட்டல்கள் செவியை நிறைக்க, மற்றவர்களைப் பார்த்து தானும் அது போல் பட்டுக் கைகளைக் கொட்டும் பட்டாம்பூச்சியை மட்டுமே இமை கொட்டாமல் பார்த்து அங்கிருந்தே கையைக் காட்டியபடி ஓடி வந்தான் அவன்.
“அச்சு தாங்க் யூ! சொன்ன மாதிரி பென்குயீனை கூட்டி வந்துட்ட” தன் அத்தைக்கு நன்றி தெரிவித்தான் சின்னவன்.
“நான் உன் கூட கோபம் பட்டு! கார் ப்ரேக்டவுன் ஆயிடுச்சு அதான் லேட். நல்ல வேளை ஆட்டோ பிடிச்சு வந்தோம். இல்லனா நீ எல்லாம் சொதப்பி இருப்ப. ஷிவு வரலைனு ஆடாம இருப்பியா அப்படியே” கோபம் போல் கேட்டாள் அக்ஷரா.
“ஆமாடி! பார்த்த தானே இவன் பண்ண வேலையை. நீங்க மட்டும் வர லேட் ஆகிருந்தா அப்படியே இருந்திருப்பான். இந்த வயசுலயே அவ்ளோ அழுத்தம் இவனுக்கு” என்று மனத்தாங்கலுடன் கூறினாள் நவி.
“விடுமா சின்னப் பையன் தானே. போக போக சரியாகிடும்” என்று தங்கையைத் தேற்றினான் மித்ரன்.
“ஷான்” என கையை நீட்டி துள்ளிக் குதித்த சிறு மலரைக் கண்டு, “கொஞ்சம் இரு” என்று ஓடிச் சென்றான்.
சென்றவன் மறுகணம் ஓடி வந்தான் கையில் சாக்லேட்டுடன்.
“இது எப்படி உனக்கு? டீச்சர் தந்ததை சாப்பிட்ட தானே?” என வினவினான் விஷ்வா.
“எல்லாரும் சாப்பிட்டாங்க. நான் இவளுக்கு கொடுக்க வெச்சேன்” என கவரைப் பிரித்து சாக்லேட்டை தன் அத்தை மகளிடம் நீட்டினான், அவள் மீது பேரன்பு கொண்டவன்.
அவளோ குதூகலமாக வாங்கிக் கொண்டு அவனிடம் தாவ, அவளைத் தூக்கி கவனமாகப் பிடித்துக் கொண்டான்.
தானும் கொறித்து விட்டு அவன் வாயருகே கொண்டு செல்ல, அதிலிருந்து ஒரு கடி கடித்து விட்டு, “எனக்கு போதும் டா நீ சாப்பிடு” என அவள் சாப்பிடும் அழகைப் பார்த்துச் சிரித்தான்.
அவன் அன்பில் அனைவரும் நெகிழ்ந்து தான் போயிருந்தனர். ஆம்! விஷ்வ மித்ரனின் நட்பைப் போல் ஷ்ரவன் ஷிவானியின் பிணைப்பும் காண்போரை பூரிக்கத் தான் வைக்கும்.
விழா முடிந்து அனைவரும் கலைந்து விட, அலங்காரங்களைக் கலைத்து வகுப்புகளை மீள ஒழுங்கமைப்பதற்கு பெற்றோர் உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
“நீயும் போ வைஷு. காலையில் இருந்து இங்கே ஓடியாடி டயர்டா இருப்ப. நான் விஷு கூட இருக்கேன்” என்று மித்து சொல்ல, அவளும் சரியென்று புறப்பட்டாள்.
அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தனர் இருவரும். அவர்களைச் செதுக்கிய பாடசாலை அல்லவா அது?
ஒவ்வொரு இடமும் இருவருக்கும் பழைய ஞாபகங்களை, நட்பில் திளைத்த நாட்களை நினைவுபடுத்தியது. கதிரைகளை ஒரு வகுப்பில் வைத்த மித்ரன் விஷ்வைக் காணாது தேடினான்.
எங்கே சென்று விட்டான் என ஒவ்வொரு இடமாக தேடிக் கொண்டு செல்ல, நிறைய பெட்டிகளைக் கையில் அடுக்கிக் கொண்டு வந்த ஒருவன் அவன் மீது மோத அனைத்து பெட்டிகளும் கீழே சரிந்தன.
மித்து அதனை எடுப்பதற்குக் குனிய எத்தனிக்கும் முன், “உனக்கென்ன குருடா? கண்ணை எங்க வெச்சிட்டு வர” எனக் கேட்டான் மோதியவன்.
அவன் பதிலளிக்க நிமிரும் போது மோதியவன் “ஆஆஆ” என்ற அலறல் செவி தீண்டியது.
புரிந்து விட்டது அந்த அலறல் உண்டாகக் காரணம் யார் என்று. அவன் நினைத்ததை உண்மைப்படுத்தும் விதத்தில் மற்றவனின் சர்ட் காலரைப் பிடித்து முகத்தில் குத்து விட்டிருந்தான் விஷ்வா.
“விஷு விடு” அவனது கையைப் பிடித்துத் தடுக்க, “நீ என்னை தடுக்காத. மோதியது நீ இல்லை, இவன் தான். அப்போ இவன் சாரி கேட்கனும். அதை விட்டுட்டு உனக்கு குருடானு எகிறுறான் குருட்டுப்பய” அவனுக்கு அடிக்கச் சென்றான் விஷ்வா.
மோதியவன் தான் வந்த வழியைப் பார்க்க, அவனுக்கு தற்போது புரிந்தது மித்து மோதவில்லை, நாம் தான் தவறுதலாக இந்தப் பக்கமாக வந்து விட்டோம் என்று.
“சா..சாரி சார்” என அவன் சொல்ல வருகையில், “அடிங்ங்கு சாரி கேட்குறியா” கோபத்தில் மீண்டும் அவன் முகத்தில் குத்தப் போக, மித்து அவனைத் தடுத்தான்.
அவனோ பயத்தில் ஓடியே விட்டான். முகம் சிவந்த விஷ்வாவிடம், “என்னடா உனக்கு அவ்ளோ கோபம்” என்று கேட்டான்.
“ஓஓ! குருடன்னு சொன்னா வாயை மூடிட்டு இருக்கனுமா. உனக்கு ஏதாச்சும் சொன்னா விட்றுவேனா? அவனை நாலு வார்த்தை கேட்காம என்னை அடக்க வரியா. போடா” என்று சொல்ல, முகத்தை தூக்கிக் கொண்டு சென்று விட்டான் மித்து.
“அய்யோ கோபமா போய்ட்டானே” என நண்பனின் பின்னால் செல்ல, அவன் போனை நோண்டிக் கொண்டிருந்தான்.
“டேய் மித்து”
“பேசு டா”
“மாப்ள”
அழைத்து ஓய்ந்து போனவனுக்கு ஏதோ நினைவு வர, “ஹலோ வாட்ஸ் யூர் நேம்?” அதிகார தோரணையில் கேட்டான்.
தலை தூக்கிய மித்ரனோ, “அருள் மித்ரன்” என்று கடுப்புடன் சொல்லி விட்டு மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தான்.
“ஹ்ம்ம் மித்து! நைஸ் நேம். அய்ம் விஷ்வா” என்றதும் சட்டென மற்றவனுக்கு மின்னல் அடித்தது போல் சில ஞாபகங்கள் தோன்ற அங்கிருந்து சென்றான். அவர்களது முதல் சந்திப்பு இதே போல் அல்லவா நிகழ்ந்தது?!
சிறிது நேரம் கழித்து அவனிடம் வந்து, “ப்ரெண்ட்ஸ்” என கையை நீட்டினான் விஷ்வஜித்.
கைகளைக் கட்டிக் கொண்டு “முடியாது விஷ்வா” என உறுதியுடன் மொழிந்தான் மித்து.
“ஏன்?” தம் முதல் சந்திப்பிலும் இவ்வாறாகத் தானே கேட்டான் மறுப்பை வெளியிட்டவனிடம்.
“நீ என் விஷயத்தில் அதிகம் கோபப்படுறது எனக்கு பிடிக்கல விஷ்வா. அதனால மத்தவங்க உன்னை ஒரு மாதிரி பார்க்குறதும் எனக்குப் பிடிக்காது” என்றான் மித்ரன்.
நாடியில் விரல் வைத்து யோசித்தவன், “அப்போ நான் கோபத்தை குறைச்சுக்கிட்டா நீ என் கூட ப்ரெண்ட் ஆகிருவியா?” எனக் கேட்க, “கண்டிப்பா” தீவிரமாக இருந்தது மித்ரனின் முகபாவனை.
அதேநேரம், விஷுவால் அடிவாங்கியவன் அவனது ஆறு வயது மகனோடு வந்தான்.
“என் அப்பாவுக்கு யார் அடிச்சது” என்று சின்னவன் கேட்க, “பெரிய ஆளை இல்ல நீ கூட்டிட்டு வந்திருக்க” என்றான் விஷு.
அப்பாவின் முகத்தில் இருந்த வீக்கத்தைக் கண்டு மகன் துருவித் துருவிக் கேட்கவும் அவன் விடயத்தைக் கூறினான். உடனே அவர்களிடம் அழைத்துச் செல்லுமாறு அடம்பிடிக்க வேறு வழியின்றி மகனிடம் காண்பித்தான்.
“அப்போ நீங்க தான் அடிச்சிருக்கீங்க. தப்பு பண்ணா சாரி கேட்கனும்னு எங்க டீச்சர் சொல்லிருக்கா. தப்பா பேசினதுக்காக அப்பா சாரி கேட்பார். அடிச்சதுக்கு நீங்க சாரி கேளுங்க அங்கிள்”
“இவன் பெரிய மனுஷன் மாதிரி பேசுறான் சார். நீங்க போங்க ஒன்னும் தேவையில்லை” என மறுத்தான் வந்தவன்.
“இல்லை! சின்னப் பையன் ஆசைப்படறானே” என்ற விஷ்வாவுக்கு தற்போது துளியும் கோபமில்லை.
ஒரு வார்த்தை சொல்வதால் ஒன்றும் ஆகி விடப் போவதில்லை என வாயைத் திறக்கும் முன், “சாரி” என மன்னிப்பு வேண்டியிருந்தான் மித்ரன்.
“அடிச்சது அவரு. நீங்க ஏன் அங்கிள் சாரி கேட்டீங்க?” சிறுவனின் சந்தேகம் அவன் தந்தையையும் ஆட்கொண்டது.
“ஏன்னா அவன் என் ப்ரெண்டு! அவன் கேட்டாலும் நான் கேட்டாலும் ஒன்னு தான் பாப்பா” என்று சொல்லிய மித்ரனை புன்னகை ததும்ப நோக்கினான் நண்பன்.
“ப்ரெண்ட்ஸ் இப்படி தான் இருக்கனும்னு டீச்சர் சொல்லிருக்கா. நீங்க எப்போவும் ஜாலியா ப்ரெண்டஸா இருங்க. நான் அதுக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்” என சிறுவன் சொல்ல,
தன் பாக்கெட்டில் இருந்த சாக்லேட்டை எடுத்து அவனிடம் கொடுத்து முடியைக் கலைத்து விட்டுச் சென்றான் விஷு. தம் நட்புக்காக வேண்டுவதாகக் கூறிய அந்த குழந்தை உள்ளம் அவனை நெகிழ வைத்தது.
சற்று முன் கோபத்துடன் இருந்த விஷ்வாவா தற்போது மென்மையே உருவாக மாறியது என வியந்தான் மோதியவன். முன்னைய கோபத்திற்கும் காரணம் மித்ரன் தான், இந்த அன்புக்கும் காரணம் மித்ரன். ஆக இவனை ஆட்டி வைப்பது அந்த நட்பு தான் என்பதைப் புரிந்து கொண்டவனாய் மகனுடன் சென்றான்.
தனக்குப் பின்னால் நடக்கும் மித்ரனை எட்டிப் பிடிக்க விஷு அவசரமாக நடக்க, முன்னே சென்றவனோ நடையின் வேகத்தைக் குறைக்காமல் தான் சென்றான்.
“நிக்கிறானா பாரு? வெட்டிக் கோபம் இவனுக்கு. அங்கே ப்ரெண்டுனு சொன்னான். இப்போ நண்டு மாதிரி ஒடுறான்” இவன் சத்தமாக முணுமுணுத்தது அவனுக்கும் கேட்கச் செய்ய தலையைக் கோதிக் கொண்டான் சிரிப்புடன்.
மித்ரனின் வேக நடை தளர்ந்து போக ஓரிடத்தில் நின்றவன் திரும்பி நின்று நண்பன் முகம் பார்க்க, அவனோ கைகளைக் கட்டிக் கொண்டு முறைப்புடன் நின்றான்.
தலையை சரித்து அவனைப் பார்த்து இம்முறை, “அப்போ நாம ப்ரெண்ட்ஸ் ஆகிரலாமா?” எனக் கேட்டான் மித்து.
“முடியாது போடா” என்க இவன் முகம் வாடியது.
“நாம எதுக்கு ப்ரெண்ட்ஸ் ஆகனும்?நாம தான் பல வருஷத்துக்கு முன்னாடி இதே இடத்தில் வெச்சு ப்ரெண்ட்ஸ் ஆகிட்டோமே” என்ற கூற்றில் முகம் மலர்ந்த மித்துவின் கையைப் பற்றி, “யாஹ் ப்ரெண்ட்ஸ்” அவனை அணைத்துக் கொண்டான் தோழன்.
விலகி உட்கார்ந்தனர் அந்த புல்வெளியில். அதே இடம்! அவர்களது நட்பு துவங்கிய அதே இடம்! விஷ்வா பெற்ற தண்டனைக்காக தானும் மைதானத்தைச் சுற்றி ஓடி அவனது நட்புக் கரத்தை இறுகப் பற்றிய அதே இடம்!
இங்கு மீண்டும் இப்படி ஒரு விடயம் நிகழும் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. ஆனால் நிறைவேறியதே. எதிர்பார்த்து நடைபெறுவதை விட எதிர்பாராத நிகழ்வொன்று நடைபெறுவது என்றும் அழகு தான்.
அதே உணர்வோடு, தம் நட்பு துவங்கிய அவ்விடத்தில் பழைய நிகழ்வுகளை பரிமாறிக் கொண்டனர் உயிர் நண்பர்கள்.
………….
வீழ்வதும் ஓர் அழகு தான் என பறைசாற்றியது அந்த ரம்மியமான நீர்வீழ்ச்சி.
பட்சிகள் படபடத்துப் பறக்க, தண்ணீர் இன்னிசையாய் சலசலக்க, மாந்தர்களின் மகிழ்ச்சிக் குரல் எங்கும் ஒலிக்க, காண்போர் வியக்கும் கொள்ளை அழகுடன் தன் வனப்புகளை வரமளமித்தது இயற்கை.
கார் கதவைத் திறந்து துள்ளிக் குதித்து இறங்கிய ஷ்ரவன் அவ்வழகைக் கண்டு குதூகலித்தான்.
“பென்குயீன் வா வா” அவளது கையைப் பிடித்து மெதுவாக அழைத்துச் செல்ல, “அடேய் நாம எல்லாம் உன் கண்ணுக்கு தெரிய மாட்டோமா? பென்குயீன் மட்டும் தான் தெரிவாளா” நொடித்துக் கொண்டாள் அக்ஷரா.
“பூனையைத் தெரியலனா கூட ஒத்துக்கலாம் அச்சு. ஆனா யானை மாதிரி வளர்ந்து இருக்கிற உன்னை என் கண்ணுக்குத் தெரியாம இருக்குமா?” சிரிக்காமல் தான் காலை வாரினான் டா ண மருமகன்.
“இது உனக்குத் தேவையா?” என்று வைஷு சிரிப்பை அடக்க, “போடா போ. அப்பறம் வருவியே அச்சு புச்சுனு அப்போ பார்த்துக்கிறேன் உன்னை” இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.
“ஷான் ஷான்” என்று மழலை மொழியில் தன் கையைப் பிடித்து சுரண்டியவளைப் பார்த்து, “என்னடா” என வினவினான் அவன்.
“டாடி! மம்மா” என விழிகளால் அங்குமிங்கும் தேடுதல் வேட்டை நடாத்தினாள்.
“உன் டாடியும் மாமாவும் அங்கே பாரு சண்டைக் கோழி மாதிரி நிக்கிறாங்க” கை காட்டினான் அவன்.
“இவனுங்களுக்கு இப்போ குசும்பு கூடி போச்சு. என்னனு கேட்கவே கூடாது. சப்ப மேட்டருக்கு எல்லாம் சண்டை போடுவாங்க. இடையில போனா நம்மளுக்கு தான் அசிங்கம்” அங்கலாய்த்துக் கொண்டாள் அக்ஷு.
“அதுவும் சரி தான்” என ஆமோதித்த வைஷு இயற்கையை ரசிப்பதில் கவனத்தை செலுத்தினாள்.
“அப்பா! ஐஸ்கிரீம் வாங்கி தாங்க” என்று கேட்டான் ஷ்ரவன்.
தலையசைப்புடன் விஷு செல்ல, “என்னாச்சு அருளு? உன் அருமை நண்பன் ஏன் சுடச்சுட இருக்கான்?” தன்னவனிடம் வினவினாள் அக்ஷரா.
“அதை அவன் கிட்ட கேளு” என முறைக்கும் போதே வந்தவன், அனைவருக்கும் ஐஸ்கிரீமை பகிர்ந்து கொடுத்தான்.
நண்பனிடம் நீட்ட, “எனக்கு வேணா” என மறுத்தவனிடம், “இப்படி சொன்னா கெஞ்சுவேன்னு நெனச்சியா? வேணானா விடு” அவனுடையதை வாயில் வைக்க எத்தனித்தான்.
அதனை அவசரமாகப் பிடுங்கி எடுத்து சுவைத்தவனைக் கண்டு முகத்தில் புன்னகை பீறிட்டது நண்பனுக்கு.
“அம்முலு! அவனை சிரிக்க வேணானு சொல்லு” என அவன் சொல்ல,
“நவி! இவனை முறைக்க வேணானு சொல்லு” என்றான் மற்றவன்.
“இப்போ என்ன தான் ஆச்சு உங்களுக்கு?” பொறுக்க முடியாமல் கேட்டே விட்டாள் வைஷு.
“எல்லாம் இவன் பண்ண வேலை. நான் ஒருத்தன் கூட பேசிட்டு இருக்கும் போது பாதில இழுத்துட்டு வந்துட்டான்” என முறைத்தான் மித்து.
“நான் கூப்பிட்டும் இவன் வரல. அதான் இழுத்துட்டு வந்தேன்”
“எதுக்கு இழுக்கனும். பேசி முடிஞ்சு வர மாட்டேனா?” அவனது நடவடிக்கையின் காரணம் உள்ளத்தில் உதித்ததால் தற்போது குரல் இளகி ஒலித்தது.
“அதானே. இழுத்துட்டு வருவியா?” என கேட்ட அக்ஷுவை, “ப்ச் சும்மா இரு டி” எதுவும் பேச வேண்டாம் என்பதாய் செய்கை செய்தான் கணவன்.
“நீ முறைச்சு பார்ப்ப. நான் ஏதாச்சும் சொல்ல வந்தா என்னை பேச விட மாட்ற. நீயாச்சு உன் நண்பனாச்சு. உங்க சண்டைக்கே நான் வரல” கடுப்புடன் நின்று விட்டாள் அக்ஷரா.
“அவன் மித்துவை இன்னொருத்தர் கிட்ட ப்ரெண்டுனு சொல்லி அறிமுகப்படுத்தினான். இவன் கூட க்ளோஸா பேசினான். அது எனக்கு பிடிக்கல” என்ற பேச்சில் விஷ்வாவின் மீது நிலைத்தன மற்றவர்களின் கண்கள்.
புதிதாக வந்த நண்பியை பெற்றோர் புகழ்வதைப் பார்த்து, “நீங்க அவளை கொஞ்சுறது எனக்கு பிடிக்கல” என சொல்லும் குட்டிச் சிறுவனாகத் தான் தோன்றினான் அவன்.
“அடடே இதுவா விஷயம்? நட்புக்குள்ள பாசசிவ்னஸ்ஸா?” நாடியில் விரல் தட்டி வினாத் தொடுத்தாள்.
“லவ்வுல மட்டுமா பாசசிவ்னஸ் இருக்கும்? நட்பிலும் தான். நம்ம அன்பு காட்டி நெருக்கமா, ஸ்பெஷலா நெனச்சி பழகுறத ஒருத்தர் நம்மளை விட்டு இன்னொருத்தர் கூட அப்படி பழகுற மாதிரி தோணுனா இப்படி தான் இருக்கும். பொறாமை இல்லை. ஒரு விதமா கவலையா நம்ம கூட மட்டுமே அப்படி இருக்கனும்னு உரிமையா ஒரு உணர்வு வரும். எல்லா அன்பும் நமக்கே கிடைக்கனும்னு தோணும்” இதழ்கள் விரியக் கூறினான் அருள் மித்ரன்.
“போடா! இப்படி சொல்லிட்டு அவன் கூட கொஞ்சி கொஞ்சி பேசு ராஸ்கல்” என முகத்தைத் திருப்பினான் விஷு.
“எத்தனை பேரோட பேசினாலும் அது உன்னைப் போல் வருமா? என் பெஸ்ட் ப்ரெண்டு நீ மட்டும் தான் மாப்ள” அவன் தோளில் தட்ட புன்னகைத்தான்.
“நாங்க நீர்வீழ்ச்சில நனைய வந்திருக்கோம். அதுக்கு முன்னால உங்க பாச மழையை கொட்டி பீவர் வர வெச்சிடாதீங்க” என அக்ஷு கிண்டலடித்தாள்.
“குள்ள கத்திரிக்கா. உனக்கு வாய் மட்டும் குறையவே குறையாது” அவன் தலையில் கொட்டினான் அண்ணன்.
“அச்சு பாவம் பா. கொட்டாதீங்க” அத்தைக்காக பரிந்து பேசிய ஷ்ரவனை, “என் செல்லம் டா” என பார்த்தாள்.
“உனக்கு வலிக்கும்னு சொல்லல. நம்ம அம்மாவுக்கு கொட்டுறாங்களேனு என் பென்குயீன் பீல் பண்ணுவாளே அதான்” என்று விளக்கமளித்தான்.
“அடப்பாவி! இப்படி டேமேஜ் பண்ணிட்டியே என்னை. நீ அடுத்த விஷ்வா தான். அவனை காப்பியடிச்சு வந்திருக்க என்னை வாட்டி எடுக்க” அவன் கன்னத்தை அக்ஷு வலிக்க கிள்ள அங்கே நகைப்பொலி.
போட்டோ எடுக்க வேண்டும் என அக்ஷுவும் மித்துவும் தம் மத்தியில் ஷிவானியை இருக்க வைக்க விஷு படம்பிடித்தான்.
“ஷான் ஷான்” என அவள் கையை நீட்ட, “அவளுக்கு ஷானை விட்டு இருக்க முடியாது” மகனின் முடியை செல்லமாக கலைத்து விட்டுக் கொண்டு கூறினாள் வைஷ்ணவி.
அதே போன்று விஷ்வா, நவி மற்றும் ஷ்ரவனை மித்து அழகாய் படம்பிடித்தான்.
“ஜோடியா எடுக்கலாமே” என அக்ஷரா சொல்ல, “ஆஹ்ஹான் ஆசையைப் பாரு” சிரித்தான் விஷு.
“ஆசை தான்” என்றதும், மித்து முட்டி போட்டு அமர்ந்து அருகிலிருந்த ரோஜாவைப் பறித்து, “ஐ லவ் யூ அம்முலு” என்று சொல்ல,
“ஐ லவ் யூ டூ அருள்” அதனைக் காதல் பொங்க வாங்கியவளின் நெற்றியில் அவன் முத்தமிடும் காட்சி விஷ்வாவினால் கேமராவில் சேமிக்கப்பட்டது.
விஷ்வாவும் பூக்கொய்து அதனை அவள் கூந்தலில் சூடுகையில், ரகசியமாய் “ஹனி” என்றழைத்தான்.
“ஹ்ம்ம் ஜித்து” அவளும் ரகசியக் குரலில் அழைக்க அவன் கண்ணடித்ததில் நாணம் கொண்டு மார்பில் சாய்ந்தாள். அவளைத் தோளோடு சேர்த்து அணைத்ததும் க்ளிக் ஓசையோடு படமாகியது.
ஷிவானியின் அழுகுரலில் “என்னாச்சு பாப்பா” என்று கேட்டான் விஷு.
“ஷான் வா வா” என விசும்பும் போதே அங்கு ஷ்ரவன் இல்லை என்பது உறைத்தது.
பதற்றம் சூழ நிற்கையில் ஓடி வந்தான் அவன்.
“எங்கடா போன?” படபடத்தது தாயுள்ளம்.
“கார் கிட்ட போனேன். ட்ரைவர் அங்கிள் கூடத் தான்” என்றான் மகன்.
“எங்கே போறதா இருந்தாலும் சொல்லிட்டு போகனும் ஷ்ரவ்! ஒரு நிமிஷத்துல பதறிப் போய்ட்டோம்” அவனை அணைத்துக் கொண்டாள் வைஷு.
அவன் கைகளில் எதையோ மறைத்து வைத்திருப்பதைக் கண்டு, என்னவென்று அனைவரும் ஆவலோடு நோக்கினர்.
“என் பென்குயீனுக்கு குட்டி பென்குயீன்” என்று தான் கொண்டு வந்த பென்குயீன் பொம்மையை அவளிடம் நீட்டினான்.
“யேஹ் ஷான் பொம்ம” அதனை வாங்கிக் கொண்டு மழலை மொழியில் மிழற்றி துள்ளிக் குதித்தாள் சிறுமி.
தன்னைத் தேடும் போது அவள் கண்களில் துளிர்த்திருந்த விழிநீரைத் தன் கரம் கொண்டு துடைத்து விட்டான் ஷ்ரவன்.
இக்காட்சிகள் ஒவ்வொன்றும் அழகான நினைவுகளாக சேமிக்கப்பட்டன.
இறுதியாக ட்ரைவரை அழைத்து அனைவரையும் ஒன்றாக புகைப்படம் எடுக்குமாறு கூற அவனும் ஒப்புக் கொண்டான்.
விஷ்வா மித்ரனின் தோளில் கை போட்டு நின்றான். மித்ரனின் அருகில் அக்ஷு அவன் கையைப் பிடித்துக் கொள்ள, அதே போல் வைஷ்ணவியும் விஷ்வாவின் கையைப் பிடித்தாள்.
மித்துவின் தோளில் ஷிவானியும் விஷ்வாவின் தோளில் ஷ்ரவனையும் அமர வைத்தனர். ஷிவானியின் தோள்களில் ஷ்ரவன் கை போட்டு நிற்க அவ்வழகிய காட்சி இனிதே படமாக்கப்பட்டது!
“ஹப்பா முடிஞ்சாச்சா உங்க போட்டோ அலப்பறை” நவி சிரிப்புடன் கேட்க, “இவனுங்க அலப்பறை என்னிக்கும் முடியாது. ஏழேழு ஜென்மமும் தொடரும்” கைகளை விரித்துக் காட்டிய அக்ஷரா இந்நட்பு என்றும் இவ்வாறே தொடர வேண்டுமென வேண்டிக் கொள்ளவும் தான் செய்தாள்.
“மாமா என்னை தூக்கிப் பிடிங்க. அப்பா பாப்பாவை தூக்குங்க” என கட்டளை விடுத்தான் ஷ்ரவன்.
“இப்போ ஏன்டா?” என விஷு கேட்டாலும் அவன் சொன்னது போலவே நண்பனின் மகளைப் பிடித்து தலைக்கு மேலால் உயர்த்தினான்.
மித்ரனும் அவ்வாறே ஷ்ரவனைத் தூக்கிப் பிடிக்க, சின்னவளின் காதில் ஏதோ குசுகுசுத்தான் ஷ்ரவன்.
என்ன தான் நடக்கிறது என்று புரியாத பாவனையுடன் பெரியவர்கள் நின்றனர்.
தலையசைப்புடன், “விஷ்வஜித்” என மழலையில் சொன்னாள் ஷிவானி.
அதனைத் தொடர்ந்து, “ப்ளஸ் அருள் மித்ரன்” என்று விட்டுத் தன் கையில் வைத்திருந்த பலூனை பென்குயீனுடன் சேர்ந்து உயர்த்திப் பிடித்து “விஷ்வ மித்ரன்” என சத்தமாக கத்தியபடி பறக்க விட்டான்.
தலையுயர்த்திப் பார்த்தனர் நண்பர்கள். அதில் “விஷ்வ மித்ரன்” என்று எழுதியிருந்தது. ஷ்ரவன் தான் தனது கையெழுத்தில் எழுதியிருந்தான்.
ஷிவானியை இறக்கி விட்டு, அவனைப் பிடித்து மேலே தூக்கிப் போட்டு பிடித்து, மகிழ்வு பெருக அவன் கன்னத்தில் ஏக காலத்தில் முத்தமிட்டனர் நண்பர்கள்.
அடங்காது அடம்பிடித்து
முரடனாய் தடம் பதித்தவனை
அடிபணிய வைத்தது
அழகாய் பூத்த நட்பு! (விஷ்வா)
உறவுகள் துணையற்றவன்
தனிமை துடைத்தெறிந்து
திடமாய் புன்னகை சிந்த
மென்மையாய் மலர்ந்தது நட்பு! (மித்ரன்)
சட்டென எழுந்த பிடித்தத்தில்
ஒருவன் நீட்டிய நட்புக் கரமதை
கெட்டியாய் மற்றவன் பற்றவே
அன்று கிட்டியது ஓர் வரம்!
குடும்பம் இணக்கமாய் இணைய
அன்பால் உறவுகள் பிணைய
இடைவெளி ஏதும் இன்றியே
பொழிந்தது நட்பின் அடைமழை!
சலிக்காத சேட்டைகள் சில
வலிக்காத சண்டைகள் பல
மறக்காத ஒரு பிரிவும் கூட அழிந்தது
மறையாத நட்பின் முன்!
இறுக்கமாய் பதிந்த இனியனுக்காக
இதயத்தைக் கொடுக்கவே
இயல்பாய் முன்வந்தான்
இதமான அந்நண்பன்! (விஷ்வா)
நெஞ்சில் சுமக்கும் தோழனுக்காய்
அஞ்சாது உயிரையும் கொடுக்க
துப்பாக்கி முனைக்கும் இலக்கானான்
உயிரான அவன் அன்பன்! (மித்ரன்)
_சுவாசமிழக்கும் தருவாயும்
சினேகிதன் மடி தேடும்;
சிறு பிரிவிலும் வாடும் – இந்நட்பு
நேசமொன்றையே தினம் நாடும்!
அவன் முகமே இன்பம்
அவன் நட்பே வாழ்க்கை – என
தோள் கொடுத்து வலி மறக்கும்
தோழர்களுக்கு ஏது துன்பம்?!
அன்பும் புரிதலும் ஒன்றாய் சேர
உருவெடுத்ததே நட்பின் சரித்திரம்
அதன் மகுடவாசம் – என்றும்
விஷ்வ மித்திரன்…!
தன் மித்துவைப் பார்த்தான் விஷ்வா.
அவனைப் பார்த்து நட்போடு புன்னகை பூத்தான் மித்ரன்!
அவன் விஷ்வாவின் மித்திரன்!
இருவரைப் பார்த்து நெகிழ்ந்து போன நட்பும் உரைத்தது இனி தன் மாற்றுப் பெயர் விஷ்வ மித்ரன் என்று!
_இனிதே நிறைவுற்றது……_💙
ஹாய் கியூட்டீஸ்! ஹப்பாடா ஒரு வழியா ஸ்டோரி முடிச்சுட்டேன்னு வழமை மாதிரி இன்னிக்கு சத்தியமா சொல்ல முடியல. ஏன்னா இந்த ஸ்டோரி எனக்கு ரொம்ப ஸ்பெஷல். முதல் காரணம் எனக்குப் பிடிச்ச நட்பு எனும் உறவை அடிப்படையாகக் கொண்டு எழுதியதால. நிஜத்தில் இப்படி இருக்குமானு தெரியல. இருந்தா இப்படி இருக்கனும்னு கற்பனை உலகத்தில் வாழ்ந்துட்டே நான் எழுதியது.
ஓகே! தாங்க் யூ செல்லக் குட்டீஸ்! இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடித்திருந்ததா? இவங்க நட்பு பற்றி உங்க கருத்தை எதிர்பார்க்குறேன். உங்களுக்கு பிடிச்ச கேரக்டர் என்ன? மறக்காம சொல்லிட்டு போங்க!
என்றும் அன்புடன்,
✒️ஷம்லா பஸ்லி