48. விஷ்வ மித்ரன்

4
(2)

விஷ்வ மித்ரன்

 

💙 நட்பு 48

 

“மாம்…..!!” என்று தாயைக் கட்டிக் கொண்டாள் அக்ஷரா.

 

“நல்லா இருக்கியா குட்டிமா?” அவளை அணைத்துக் கொண்ட நீலவேணியிடம், “தடியா எங்கே?” என்று வினவினாள் மகள்.

 

“இதோ இருக்கேன்டி ஒல்லிக்குச்சி” ஓடி வந்து அவள் தலையில் தட்டினான் விஷ்வா.

 

“ஸ்ஸ்! எத்தனை நாள் கழிச்சு வந்திருக்கிறேன். எப்படி இருக்கே தங்கச்சிமானு ஆசையாக் கூப்பிட்டு கொஞ்சாமல் இப்படி அடிக்கிறியே. இது உனக்கே நியாயமா?” தலையைத் தடவிக் கொண்டாள் தங்கை.

 

“உன்னை எப்படி கூப்பிடனும்? தங்கச்சிமாவா போடி மைதாமா. மித்து எங்கே?” நண்பனைத் தேடின அவன் விழிகள்.

 

“அவனை என் இடுப்பில் தூக்கி வெச்சுட்டா இருக்கேன். என்னைக் கண்டுக்க மாட்டே. மித்துவைத் தேடுறியா?” செல்லக் கோபத்துடன் முறைத்தாள் அக்ஷு.

 

“ஆமா நீ எதற்கு? எனக்கு அவன் தான் வேணும். அவன் வரலையா?”

 

“அவனுக்கு ஆபிஸ்ல ஒர்க் இருக்குனு சொன்னான். அவனை உன்னை மாதிரி வெட்டிப் பயல்னு நெனச்சியா? பொறுப்பா கிளம்பிட்டான்” பெருமையாகப் பார்த்தாள் அவள்.

 

“செருப்பு. பொறுப்பாக ஆஃபீஸ்கு பருப்பு வேக வைக்க போய்ட்டானா?” என்றவனது கேலிச் சிரிப்பில் அவள் திரும்ப, மலர்ந்த முகத்துடன் நின்றிருந்தான் அருள் மித்ரன்.

 

“ஹாய் மாப்ள!” அவன் தோளில் தட்டிக் கொடுத்து, “உன் பொண்டாட்டி பொறுப்பு பற்றி எல்லாம் பேசினா. ஆஃபீஸ் போகலையா?” என்று கேட்டான் விஷ்வஜித்.

 

“போகலாம்னு கிளம்பினேன். நீயும் இங்கே இருப்பனு தோணுச்சு. அதான் ரிட்டர்ன் வந்தேன்” கண்ணடித்தான் மித்ரன்.

 

“அடடா! பாசம் அடை மழையா பொழியுது” என முகத்தைச் சுளித்தாள் அக்ஷு.

 

“உனக்கு பொறாமை டி” என்றபடி வந்த வைஷ்ணவியைக் கண்டு, “வாங்க அண்ணியாரே! வரும் போதே வக்காலத்து வாங்கிட்டு வரீங்க?” என்றாள் அண்ணன் மனைவி.

 

“என் புருஷன், அண்ணனுக்காக வக்காலத்து வாங்கக் கூடாதா?” என்றவளைப் பார்த்து,

 

“அட இந்த நெட்டைக் கொக்கை மாதிரி பேசுறியே” என வியந்தாள் அக்ஷரா.

 

“எப்படி இருக்கே பாப்பா?” தங்கையிடம் பாசத்துடன் கேட்டான் மித்து.

 

“நல்லா இருக்கேன்ணா. உங்க ப்ரெண்டு நல்லா பார்த்துக்கலைனா உங்க கிட்ட வந்து கம்ப்ளைன்ட் பண்ணுவேன்ல?” என்று கண் சிமிட்டினாள்.

 

“பெருச்சாளி! என்னை மாட்டி விடுவியா?” உள்ளுக்குள் காய்ந்து கொண்டு அவளை நோக்க, உதடு குவித்துக் காட்டினாள் அக்குறும்பழகி.

 

“ஆத்தீ! இவளுக்கு விவஸ்தையே இல்லை. யாராவது பார்த்தா அவ்வளவு தான். கலாய்ச்சே ஒரு வழி பண்ணிருவாங்க” அவளை முறைத்தாலும், இதயத்தில் எங்கோ ஒரு மூலையில் அம்முத்தம் இனிக்கவே செய்தது.

 

“அப்படி கம்ப்ளைன்ட் பண்ணுற அளவுக்கு வழி வைக்க மாட்டான் என் விஷு. ஹீ இஸ் குட்” பாராட்டுப் பத்திரம் வாசித்தான் நண்பன்.

 

“விட்டுக் கொடுக்க மாட்டியே இவனை” இம்முறை பொய்யாக அலுத்துக் கொண்டது அக்ஷரா அல்ல வைஷ்ணவி தான்.

 

அக்ஷராவுக்கோ மித்துவைப் பார்க்கும் போது என்னவோ போல் இருந்தது. அவனோடு சாதாரணாமாக உரையாட மனம் தயங்கியது. ஏனோ அவன் வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து உடனே மீண்டு வர முடியவில்லை.

 

“விஷு போகலாமா?” என்று கேட்ட மித்ரனிடம், “இதோ வரேன் டா” என ரெடியாகிக் கொண்டு வந்தான் விஷ்வா.

 

அக்ஷரா கன்ஸ்ட்ரக்ஷனில் தான் இப்போது விஷ்வாவுடன் இணைந்து வேலை செய்கிறான் மித்ரனும்.

 

தோழனைப் போலவே வெள்ளை சர்ட்டுக்கு மேலாக நீல நிற கோர்ட் அணிந்திருந்தான் விஷு. 

“இது எப்படி உடனே அயர்ன் பண்ணி போட்டே?” ஆச்சரியமாகக் கேட்டான் மித்து.

 

“இதைத் தான் இன்னிக்கு போடனும்னு சொல்லி அயர்ன் பண்ணி வெச்சாரு” என்றாள் வைஷு.

 

“அது எப்படிடா?” மித்து வியக்க,

 

“நண்பேன்டா” அவன் தோளில் கை போட்டு இறுக்கினான் விஷ்வா.

 

“போடா ராஸ்கல்” அவன் வயிற்றில் மெல்ல குத்தினான் அருள்.

 

இருவரும் காரில் ஒன்றாக சென்றனர்.

“ப்ராஜெக்ட் விஷயம் என்னாச்சு மாப்ள? எல்லாம் ஓகேயா?” என வினவினான் மித்து.

 

“ஓகேடா. உன்னோட டீடேல் ஃபைல் மட்டும் வர வேண்டியிருக்கு. அதுவும் கிடைச்சிட்டா பக்கா” காரைச் செலுத்தினான் விஷு.

 

வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் போது மித்து அவனிடம் கேட்டு தானே காரைச் செலுத்தினான்.

 

கண்களை மூடி சீட்டில் சாய்ந்து இருப்பவனைக் கண்டு புருவம் இடுங்க, அவன் பக்க கார் கண்ணாடியைத் திறந்து விட்டவன் சிறிது நேரத்தில் காரை நிறுத்தினான்.

 

கண்களைத் திறந்து யன்னைல் வழியே அவ்விடத்தைப் பார்வையிட்டான் விஷ்வா. அதுவொரு ஆற்றங்கரை. சிறு ஆறு வளைந்து நெளிந்து ஓடிக் கொண்டிருந்தது.

 

“ஹேய்! இங்கே நாம காலேஜ் டேய்ஸ்ல வந்து இருக்கோமே!?” நண்பனிடம் கேட்டான் அவன்.

 

“ஆமா! இறங்கி வா” என்க இருவரும் இறங்கி அங்கிருந்த கல்லில் அமர்ந்தனர்.

 

சற்று நேரமாகவே ஆழ்ந்த யோசனையில் இருந்த விஷ்வாவை, “மாப்ள!” என அழைத்தான் மித்து.

 

“என்ன டா?” சிந்தனை வலையில் இருந்து விடுபட்டுக் கேட்டான் விஷ்வா.

 

“ஏதோ சிந்தனையில் இருக்குற மாதிரி இருக்கு? ஆர் யூ ஓகே?”

 

“நோ மித்து! அய்ம் டிஸ்டர்ப்ட். எனக்கு தர்ஷன் ஞாபகம் வந்துருச்சு டா. அவன் நம்மளைப் பிரிக்காமல் விட மாட்டேன்னு சொன்னது அடிக்கடி மனசுக்குள்ள ஓடிட்டே இருக்கு”

 

“அவன் தான் ஜெயில்ல இருக்கானே. அப்பறம் என்ன டா? அப்படியே ஏதாச்சும் ப்ராப்ளம் வந்தாலும் நம்ம ரெண்டு பேரும் ஒன்னா இருக்கும் வரைக்கும் அது நம்ம கிட்ட நெருங்க முடியாது விஷு” அவன் தோளில் கை வைத்து அழுத்தினான் தோழன்.

 

“அது எனக்குத் தெரியும் மித்து. ஆனாலும் என்னால அதை அப்படியே விட முடியலை. அவனுக்கு யேன்டா நம்மளை பிடிக்காமல் போச்சு? ஏன் நம்மளை பிரிக்க ட்ரை பண்ணுறான்? அவனுக்கு அதனால என்ன இலாபம்?” தர்ஷனின் நினைவு வரும் போதெல்லாம் மனதினுள் எழும் வினாவை நண்பனிடம் முன்வைத்தான் விஷ்வா.

 

“அவங்கவங்க மனசும், அதற்குள் இருக்கும் சில குணங்களும் தான் காரணம். செகன்ட் ராங்க் எடுக்கும் ஒரு ஸ்டுடன்ட்கு ஃப்ர்ஸ்ட் ராங்க் எடுக்கும் ஒருத்தனைப் பார்த்து ஒரு வித பொறாமை கலந்த கோபம் வரும் இல்லையா? அப்படிப்பட்ட ஒரு கோபம் தான் தர்ஷன் மனசுல அளவுக்கதிகமா புகுந்து வெறியாக மாறி இருக்கு.

 

நீ எதுவும் ஃபீல் பண்ணாத. அவனால பிரிவு வரும்னு நினைக்கக் கூடாது. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு விஷு. நீ இதையெல்லாம் போட்டு பெருசா அலட்டிக்காம உன் வாழ்க்கையைப் பார்த்துக்க” அறிவுரை கூறினான் நண்பன்.

 

“என்னால் அப்படி இருக்க முடியலை மாப்ள! தர்ஷன் உன்னையும் என்னையும் வெச்சு என் உயிரா, உன் உயிரானு கேம் ப்ளே பண்ணியதை என்னால் சாதாரணமாக ஒதுக்கித் தள்ள முடியலை”

 

“இத்தனை நாள் கழிச்சு இவனுக்கு ஏன் இந்த நினைப்பு?” மித்ரனின் இதயம் அசுர வேகத்தில் விடை தேடிச் சுழன்றது.

 

“திடீர்னு ஏன் அவன் ஞாபகம் எனக்கு வருதுன்னு தெரியல டா. ஏதாவது ப்ராப்ளம் நமக்குள் வருமோனு பயமா இருக்கு” அச்சம் துளிர்த்தது அவன் குரலில்.

 

“ப்ச் விஷு! எப்போவும் தைரியமா நிற்கின்ற ஆள் நீ. உனக்கு எதுக்கு இந்த கற்பனையும் வீணான பயமும்?” நண்பனை ஏறிட்டான் மித்து.

 

“நான் தைரியமாக நிற்பேன், என் கூட நீ இருப்பதனால். நீ இல்லைனா தைரியம், கம்பீரம், சந்தோஷம் எல்லாம் என்னை விட்டுப் போயிடும்” கவலை ததும்பிட மொழிந்தான் விஷ்வா.

 

எழுந்து சென்ற மித்து கையில் சிறு கற்களை அள்ளிக் கொண்டு வந்து மற்றவனிடம் நீட்டி, “இதில் ஒவ்வொன்றாக எடுத்து ஆற்றில் வீசு, உன் மனசு நிம்மதியடையும் வரைக்கும்” என்றான்.

 

“எனக்குத் தராத. நீயே வெச்சுக்க” என்று நண்பனின் தோளில் சாய்ந்து அவனது கையில் இருந்த கற்களை ஒவ்வொன்றாக ஆற்றில் எறிந்தான்.

 

“நீ கல்லை வீசும் போது மட்டுமே தண்ணீரில் வட்டமா அலை வருது. வீசலைன்னா வராது இல்லையா? நீ தர்ஷன் பற்றி நினைக்கும் போது மட்டுமே உன்னால் நிம்மதியாக இருக்க முடியலை. சோ அவன் பற்றின நினைப்பை மறந்துடு” என்று சொல்லியும் இன்னும் தெளியாமல் இருந்தான் அவன்.

 

“இப்போ என்னடா உனக்கு? சரியாகப் போறியா இல்லையா?”

 

“அதில்லை மித்ரா…”

 

“ஓகே. இப்படியே மூஞ்சை வெச்சுட்டு வா விஷு. எனக்கும் நல்லது” என்றவனைப் புரியாமல் பார்த்தான் விஷ்வா.

 

“உன் கூட வந்தா பொண்ணுங்க கண்ணு உன் மேல இருக்கும். இப்போ நீ மூஞ்சுரு மாதிரி இருக்கே. சோ இன்னிக்கு ஐயாவை தான் சைட் அடிப்பாங்க” பெருமையாக சொன்னான்.

 

“அடிங்ங்! இதுக்காக என்னை அப்படியே இருக்க சொன்னியா? நோ நோ. அய்ம் ஓகே” சட்டென சிரித்தான் விஷு.

 

“பொறாமை பிடிச்சவன். சட்டுனு சிரிச்சுட்ட” அவன் முடியைக் கலைத்து விட்டான் மித்ரன்.

 

“அட சண்டாளா! என்னை யாரும் பார்க்கக் கூடாதுனு முடியைக் கலைத்து விடுறியா?”

 

“ச்சே ச்சே இல்லை. முடியைக் கலைச்சு விட்டா தான் நீ ஸ்டைலா, அழகா இருப்ப” கண்ணடித்தான் அவன்.

 

“தாங்க் யூ தாங்க் யூ” என்று சிரித்த விஷ்வாவைக் கண்டு மனம் குளிர்ந்தான் நண்பன்.

 

…………………

“ஹேய் பூ! எதுக்கு மூஞ்சியை உர்ருனு வெச்சுட்டு இருக்கே?” இடுப்பில் கை வைத்துக் கேட்டான் ரோஹன்.

 

“எதற்கு இருக்கேன்னு உனக்கு தெரியாதா? சும்மா தெரியாத மாதிரி நடிக்காத” முகத்தைத் திருப்பிக் கொண்டாள் பூர்ணி.

 

“நான் என்ன பண்ணட்டும்? நிஜமா ஒர்க் இருக்கு. போயே ஆகனும். என்னைப் போக விடேன்டி” பாவமாகப் பார்த்தான்.

 

“போகாதன்னு உன்னைக் கட்டிப் போட்டிருக்கேனா இல்லைல? போறதா இருந்தா போ” பட்டென வெடித்தாள் வஞ்சி.

 

“நீ இப்படி இருக்கும் போது நான் எப்படி போறது? சிரிச்சுட்டே அனுப்பி வை”

 

“நான் சிரித்தால் தான் உன்னால நடக்க முடியுமா? ஒர்க் முக்கியம்னா அதையே கட்டிக்கிட்டு லவ் பண்ணு” டிவி ரிமோர்ட்டைத் தூக்கி வீசினாள்.

 

அதை கேட்ச் பிடித்தவனோ, “சரி தான் போடி” விறு விறுவென அறையினுள் நுழைந்து கொண்டான்.

 

“ஓவராத் தான் போறாள். நான் மட்டும் ஆசையாவா ஆஃபிஸ் போறேன்? என்னவோ அவ கூட இருக்கப் பிடிக்காததால் போறேன்னு நினைச்சுட்டு பந்தா பண்ணுறா” வாய்க்குள் முனகிக் கொண்டு சர்ட்டை அணிந்தான்.

 

சடாரென அவனருகே வந்து நின்று டையைப் பிடுங்கி எடுத்தாள்.

“அதையும் வீசப் போறியா? எனக்கு கேட்ச் பிடிச்சு விளையாட நேரம் இல்லை. ஓரமா போயி விளையாடு” என வேறு டை எடுக்க கப்போர்ட்டைத் திறந்தான் ரோஹன்.

 

“டேய் கோவக்காரா! என்னமா அனலடிக்குது” அவன் சர்ட்டைப் பிடித்து இழுத்தாள் மனையாட்டி.

 

“என்ன தான்டி உன் ப்ராப்ளம்”

 

“நீ தான்டா ப்ராப்ளம். கொஞ்சம் சண்டை போட முடியுதா உன் கூட? உடனே மூக்கால் புகையை வெளியிடுற” அவனுக்கு டை கட்டி விட்டாள் அவள்.

 

“நெருப்பு இன்றிப் புகையாது. நீ நெருப்பைக் கொளுத்தி விடுற நான் புகையுறேன்” 

 

“ஓஓ! அப்படியா? நான் தான் எல்லாத்துக்கும் காரணமா?” முறுக்கிக் கொண்டு சென்றவளின் கையைப் பிடித்து இழுத்தான் ஆடவன்.

 

“எங்கே போற என் சண்டைக்கோழி?” அவளை இடையூடு கையிட்டு தன்னோடு சேர்த்துக் கொண்டான்.

 

“விடு நான் போறேன்” என்றதும், “சரி போ” என கையை விட்டான்.

 

சற்று தூரம் சென்றவள் திரும்பி வந்து, “விட சொன்னா விடுவியா விடுவியா?” என்று அவன் மார்பில் கையைப் பொத்தி குத்தினாள்.

 

“ஏய்ய் இங்கே அடிக்காதடி. என் இதய ராணி இங்கே இருக்கா” மார்பை வருடிக் காட்டினான்.

 

“இதய ராணி நான் தானே?” ஆவல் மேலிடக் கேட்டாள் காரிகை.

 

“நீ இல்லை. உன்னைப் பார்த்தால் ராணி மாதிரியா இருக்கு?” என்று கிண்டலடித்தவனின் பேச்சில் முகம் வாடினாள் பூ.

 

“அப்…அப்போ யாரு அந்த ராணி?” மெல்லிய குரலில் அவள்.

 

“அவள் சாதாரண ராணி இல்லை. பார்த்த அந்த நிமிஷமே என்னை முழுசா கட்டிப் போட்டு சிறைப்பிடித்த கொடுமைக்காரி. அவளைத் தவிர வேறு எதையும் நினைக்க விடாமல் என் மனசுக்கு கட்டுப் போட்ட மாயக்காரி.

 

என் இதயத்தை யாரும் களவாடாமல் பத்திரமாக தனக்குள் அடைச்சு வெச்சிருக்கும் காவல்காரி. என்னை மயக்கிய மாயக்காரி. எனக்காகவே வாழும், என் கூடவே இருக்க நினைச்சு உரிமையா சண்டை போடும் கோவக்காரி.

 

அவள் தான் என் உதயம். என் வாழ்வின் ஆதாரம். என்னவள், எனக்கானவள், என்னை வாழ வைத்தவள் நீ தான் என் இதய ராணியே!” அவள் கையைப் பற்றி முத்தமிட்டான் காதல் கண்ணாளன்.

 

“என்னை சாய்ச்சுட்ட டா மாயக்காரா!” அவன் வார்த்தைகளில் பூரித்துப் போய் மார்பில் சாய்ந்து கொண்டாள் பூரி.

 

“சாஞ்சுட்டியா? அப்போ நல்லதாப் போச்சு”

 

“என்ன நல்லது?” என்று கேட்டவளின் விழிகளைத் தன் ஊசிமுனைப் பார்வையால் ஊடுறுவி நின்றான் ரோஹி.

 

“அ…ப்படி பார்க்காதே” இமை தாழ்த்தினாள் அவள்.

 

“சரி அப்படி பார்க்கலை” தோளைக் குலுக்கியவன் அவள் கன்னம் தாங்கி இன்னும் ஆழமாய் பார்த்தான்.

 

அவன் பார்வையில் மதுவுண்ட மந்தியாய் மயங்கிப் போகலாயிற்று மதியன்ன மங்கையின் மலர் மனமும்.

 

கால் குதியை உயர்த்தி பெருவிரல்களால் எம்பி, அவன் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்தாள் பூர்ணி. சில நாட்களாக சவரம் செய்யாததால் குத்திய அவனது மீசை முடிகளின் சில்மிஷத்தில், “ஸ்ஸ்!” என இன்ப வேதனையில் இதழ் சுருக்கினாள் செவ்வந்தி அவள்.

 

ரோஜாப் பூவிதழாய்க் குவிந்த இதழ்களை வன்மையாகக் கொய்து அதில் தித்திக்கும் தேன் அருந்தும் வண்டாக மாறிப் போனான் ரோஹன்.

 

நொடி நிமிடமாகிக் கரைந்து சென்றது. அவ்விதழ் எனும் பள்ளத்தாக்கில் விழுந்தவர்கள் விரைவில் தப்பித்து விட்டதாய் எங்கும் சரித்திரம் உண்டோ? இல்லை அல்லவா?

 

ரோஹனும் அதே நிலையில் தான் இன்று இருந்தான். அவளில் மேலும் மேலும் மூழ்கி லயித்தான். அவளை தன் இஷ்டத்துக்கு ஏற்ப ஆட்டி வைத்தான். அவளும் மகுடிக்குட்பட்ட நாகமாய் ஆடினாள்.

 

கடிகாரத்தின் முட்களின் நாடித் துடிப்பில் சட்டென விலகினர் இருவரும்.

 

“டைம் ஆச்சு ரோஹி” அவள் அறிவிப்புக் கொடுக்க,

 

“ம்ம்ம்” ஹூங்காரம் இசைத்தான் அவன்.

 

“ஹேய் ரோஹி. டைம் பார்” அவனை உலுக்கினாள்.

 

நேரத்தைப் பார்த்தவனோ, “காட்! இவ்ளோ நேரமாச்சா? எல்லாம் நீ டை கட்ட வந்ததால் தான்” அவளைக் குற்றம் சாட்டினான் ரோஹன்.

 

“அடேங்கப்பா! நான் டை கட்ட மட்டும் தான் வந்தேன். நீ தான் என்னையே முழுசா கட்டிப் போட்ட. இப்போ என்னைக் குறை சொல்லுறியா?” அவனை முறைத்துப் பார்த்தாள் பெண்.

 

“அதை விடு. நான் என் பாப்பா கூட பேசனும்” என அவள் வயிற்றருகே குனிந்து, “செல்ல குட்டி. அப்பா சீக்கிரமா வரேன். அது வரைக்கும் அம்மாவைப் பத்திரமா பார்த்துக்கோ. உன்ம்மா ஏதாவது சேட்டை பண்ணுனா நான் வந்ததும் சொல்லு. நான் பார்த்துக்கறேன்” தன் மகனுடன் பேசி அவனுக்காக அவள் வயிற்றில் முத்தமிட்டான்.

 

“ஓஓ! பாப்பாவுக்கு மட்டும் தான் கிஸ்ஸா?” முறுக்கிக் கொண்டு நின்றாள் அவள்.

 

“நீயும் பாப்பாவா? சும்மா சண்டை போடுற?” பேக்கை மாட்டிக் கொண்டு கிளம்பியவன் ஈரெட்டில் திரும்பி வந்து அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

 

“போயிட்டு வரேன். டேக் கேர் பூ” அவளைத் தனியே விட்டுச் செல்ல மனமின்றி அவளைப் பார்த்தான்.

 

அவன் மனம் உணர்ந்தவளாய், “ஓகே. நீயும் பத்திரமா போ. நான் பக்கத்து வீட்டு ஆன்ட்டி கூட கோயிலுக்கு போறேன்” சட்டென பூவாய் மலர்ந்தாள் பூர்ணி.

 

“சரிம்மா”

 

“அப்பறம் வரும் போது…” அவள் இழுவையாக சொல்ல, “பிரியாணி தானே? கொண்டு வரேன். நாளைக்கு பீச் போகலாம்” அவளுக்கு கையசைத்துக் காட்டினான்.

 

“ஓகே” அவனுக்கு பறக்கும் முத்தங்களை அள்ளிக் கொடுத்தாள் மனைவி.

 

கண் சிமிட்டி, புன்னகையுடன் விடை பெற்றான் பூர்ணியின் கணவன்.

 

நட்பு தொடரும்……..!!

 

✒️ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!