குறிஞ்சி மலர்..11
அடிபட்ட புலி ஆக்ரோஷம் தாங்காமல் குறுக்கும் நெடுக்கும் நடப்பது போல ஜேம்ஸ் மாடியில் நடந்து கொண்டிருந்தான்.
கோதையை வீட்டின் பெரிய கூடத்துக்கு அழைத்து வந்த ரகுமான், தேவாவிடம் வீட்டு உறுப்பினர்களையும் வேலைக்காரர்களையும் அழைத்து வரச் சொல்லி அனுப்பி வைத்தான்.
ஜோசப்பும், அல்போன்சும், மேரியும் ஒரு ஓரமாக வந்து நின்று பவ்வியமாக முகத்தை வைத்துக் கொண்டார்கள்.
வேலைக்காரர்களும் ஒரு ஓரமாக நின்றார்கள்.
அவர்கள் எல்லோரையும் பார்த்த ரகுமான்
“இனிமேல் இந்தப் பிள்ளையை நீங்கள் யாருமே வேலை வாங்கக் கூடாது.. இந்தப் பிள்ளையோட யாருமே கதைக்கக் கூடாது.. இது ஐயாவோட உத்தரவு..”
என்று சொல்ல, கோதையோ தன்னை அறியாமலேயே ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள்.
அதன் பின்னர் அனைவரையும் அனுப்பி வைக்க, இப்போது கோதை மட்டும் கூடத்தில் நின்றிருந்தாள்.
“இந்தாம்மா பொண்ணு.. இனி ஐயாவோட வேலையள் எல்லாத்தையும் நீ தான் செய்யோணும்..”
என ரகுமான் சொல்ல, கோதை மேலே அண்ணாந்து பார்த்தாள். மேலே இருந்தவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“யப்பா என்னடா அது பார்வை..”
என முணுமுணுத்தவள் அந்த நீலக்கண்களின் பார்வையில் சட்டென்று தலையைக் குனிந்து கொண்டு, சரி எனத் தலையை ஆட்டினாள்.
“சரி இப்ப ஐயா குளிக்கோணும் அவருக்குச் சுடுதண்ணி வைச்சுக் குடு..”
என்று ரகுமான் சொல்ல, கோதை சமையலறைப் பக்கம் திரும்ப,
“இந்தாம்மா.. சுடுதண்ணி வைக்க வெளியால போகோணும்..”
என்று சொன்ன ரகுமான் அவளை அழைத்துக் கொண்டு கிணற்றடிப் பக்கம் சென்றான்.
கிணற்றுக்குப் பக்கத்தில் ஐந்து பென்னம் பெரிய பானைகளும், ஐந்து பெரிய அண்டாக்களும் இருக்க, ஓரமாக ஒரேயொரு கல்லடுப்பு மட்டும் இருந்தது.
“இன்னும் அரை மணி நேரத்தில ஐயா வந்திடுவார்.. அதுக்குள்ள இந்த அஞ்சு அண்டாவையும் சுடுதண்ணியால நிரப்பி வைக்கோணும்.. அதை உன்னால செய்ய முடியாட்டிக்கு அதுக்குப் பணிஷ்மென்ட் இருக்கு.. நீ தான் ஐயாவுக்கு எண்ணெய் தேய்ச்சு கைகால் உருவி விடோணும்..”
என்று ரகுமான் சொன்னது தான் தாமதம், கோதை கிணற்றடிக்கு ஓடி விட்டாள்.
கோதையோ கிணற்றின் பின்புறம் கிடந்த நீள்வடிவக் கற்களை ஒவ்வொன்றாய்த் தூக்கி வந்து, அடுப்பு போல வைக்கத் தொடங்கினாள். நல்ல வேளையாக அது ஐந்து அடுப்புகளுக்குப் போதுமாக இருந்தது. வேகவேகமாக அடுப்பை மூட்டி நீர் ஊற்றிய பானைகளை வைத்தாள்.
கிணற்றில் கப்பியலில் கிடந்த பெரிய கயிறு, அவளது கைகளை வலிக்கச் செய்தாலும் அதை அவள் பொருட் படுத்தவில்லை. இங்கேயாவது ஐந்து அண்டாவுக்கு தான் நீர் மொண்டு ஊற்ற வேண்டும். ஆனால் அவளது மாமியார் வீட்டில் இரவானாலும் கிணற்றில் நீர் சேந்தும் வேலை அவளுக்கு நின்றதேயில்லை.
இருபது நிமிடங்கள் நீரைக் கொதிக்க வைத்தவள், சுடுநீரை எப்படி அண்டாவினுள் ஊற்றுவது என்று முழித்துக் கொண்டு நில்லாமல், கிணற்றடியில் கயிற்றோடு பிணைக்கப் பட்டிருந்த இரும்பு வாளியை எடுத்து, பானையில் இருந்த நீரை மொண்டு அண்டாவினுள் வேகமாக ஊற்றினாள். இதெல்லாம் அவளுக்குப் பழக்கப் பட்ட வேலைகள் என்பதால் சரியாக அரைமணி நேரத்தில் ஐந்து அண்டாக்களும் சுடுநீரில் நிரம்பி வழிந்தன.
அவளது வேகமான செய்கைகளை மாடியின் சாளரத்தின் வழியே, புருவத்தின் மத்தியில் முடிச்சு விழக் கண்கள் சுருக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான் ஜேம்ஸ்.
எப்போதும் அலவாங்கு விழுங்கி போல எந்த உணர்வுகளையும் காட்டிக் கொள்ளாத ரகுமான் கூட, அவள் கச்சிதமாகவும் வேகமாகவும் செய்யும் வேலைகளை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதோடு அவனுக்குக் கோதை மீது ஒரு நல்ல அபிப்பிராயமும் சட்டென்று உதித்தது. அதற்கான காரணம் என்னவென்றால், போனமுறையும் கோதை இங்கே வந்தது போல ஒரு பெண் வந்திருந்தாள். அவளுக்கு ஒரேயொரு அண்டா தான் கொடுக்கப் பட்டது. அவள் நினைத்திருந்தால் அந்த அண்டாவைச் சுடுநீரால் நிரப்பியிருக்கலாம். ஆனால் அவள் ஜேம்ஸின் தோற்றத்தைப் பார்த்ததுமே மயங்கி, அவனுக்கு எண்ணெய் தேய்த்து விட வேண்டும் என்ற ஆசையில் ஒழுங்காக வேலை செய்யவில்லை. அவளது எண்ணம் புரிந்ததுமே அவளை மாலினிக்குச் சேவகம் செய்ய அனுப்பி வைத்து விட்டான் ரகுமான்.
இங்கே கோதை கஷ்டம் என்று தெரிந்திருந்தும், எங்கே தன்னை ஒரு அந்நிய ஆடவனைத் தொட்டு எண்ணெய் தேய்க்க விட்டு விடுவார்களோ என்கிற பயத்தில் வேகமாக வேலையைச் செய்து விட்டாள்.
கோதையோ வேலையைச் செய்து விட்டு, அடுத்து என்ன செய்ய என்று அவர்களை நிமிர்ந்து பார்க்க, அவர்களோ மேலே அண்ணாந்து பார்த்தார்கள்.
மேலே நின்றிருந்தவனோ கோதையை ஒரு அழுத்தமான பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து போய் விட்டான்.
நின்று நிதானமாக யோசித்த கோதை
“பேசாமல் இங்கே இருந்து வெளியே ஓடினால் என்ன.. அதெப்புடி ஒரு பொடியனுக்கு ஒரு பொம்பிளைப் பிள்ளை எண்ணெய் தேய்ச்சு விட முடியும்.. கொஞ்சங் கூட யோசிக்காமல் சொல்லுறானுவள் பாவியள்.. குனிய வைச்சு உருட்டுக் கட்டையால மொத்தி எடுக்கோணும்.. அது சரி இவனுங்களை நொந்து என்ன பயன்.. மேல நிக்கிற வெள்ளைப்பண்ணியைத் தான் மேல இருந்து உருட்டி விடோணும்.. எல்லாம் என்ரை நேரம்.. பேசாமல் மாமி வீட்டுலயே இருந்திருக்கலாம்.. என்ரை நந்தவனத்தோடையாவது பொழுது போயிருக்கும்.. இப்ப என்ன செய்யிறது.. சரி கொஞ்சம் பொறுத்திருந்து பாப்பம்.. அடுத்த வேலை மானத்தை விடாமல் செய்யக் கூடிய மாதிரி இருந்தால் செய்வம் இல்லாட்டிக்கு நடையைக் கட்டுவம்.. அப்பாவே இப்புடி என்ரை மானத்துக்கு இழுக்கு வார போல நடந்து கொள்ள விட மாட்டார்..”
எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவள் மற்ற இருவரையும் பார்க்க,
“மேல ஐயாட்டைப் போங்கோம்மா..”
எனத் தேவா தான் சொன்னான்.
“மேல கொய்யாட்டைப் போனால் அந்த வெள்ளைப்பண்ணி என்னைய ஒரேயடியா மேல அனுப்பிடும் போலயே..”
என முணுமுணுத்தவள் மேலே போனாள். அவளுக்குப் பின்னால் தேவாவும் ரகுமானும் தொடர்ந்தார்கள்.
மாடிக்குப் போனவள் எந்தப் பக்கம் போவது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டு நிற்க, அவளருகில் வந்த மற்ற இருவரும் மாடியின் வலப் பக்கம் இருந்த பெரிய அறையை கைகாட்டி விட்டு, கீழே போகத் திரும்பினார்கள்.
அவர்கள் அங்கிருந்து கீழே போகத் திரும்பவும் அவர்களை அழைத்து நிறுத்தினாள் கோதை.
“நீங்கள் பாட்டுக்கு அந்த அறையைக் கைகாட்டியிட்டுப் போனால் என்ன அர்த்தம்.. உங்கடை ஐயாவைக் கூப்பிடுங்கோ.. அவர் என்ன வேலை குடுக்கிறார் எண்டு பாப்பம்.. அதை விட்டிட்டு பூட்டின அறையைக் காட்டினால் நான் என்ன செய்ய..”
“இடத்தைக் காட்டுறது மட்டும் தான் எங்கடை வேலை.. மற்றபடி உள்ள போய் வேலை செய்றதெல்லாம் உங்கடை பொறுப்பு..”
“பூட்டிக் கிடக்குற அறைக்குள்ள போய் நுழைய நான் என்ன ஆவியோ.. என்னண்ணா நீங்கள்..”
“கதவு திறந்து தான் கிடக்கு..”
“கதவு திறந்து கிடக்கா..”
என்று கொண்டு வலப் பக்கம் கிடந்த அறையின் கதவை கோதை தள்ள, அது வேகமாகத் திறந்து கொண்டது.
அதற்குள் பின்னால் நின்றிருந்த ரகுமான்
“உந்த அறையை விடியிறதுக்குள்ள கிளீன் பண்ணீட்டு.. உதுக்குள்ள தான் இனி நீங்கள் தங்கோணும்..”
என்று விட்டுப் போய் விட்டான்.
அறைக் கதவைத் திறந்ததுமே ஏதோ பாழடைந்து போன குகையைப் பார்ப்பது போன்றதொரு உணர்வு தான் கோதைக்கு வந்தது. ஒரே தூசியும் குப்பையுமாய்ப் பார்க்கவே சகிக்காத வகையில் கிடந்த அறையைப் பார்த்ததுமே கோதைக்கு ஐயோவென்றிருந்தது.
“காளியாத்தா இதென்ன சோதனை.. அந்த வெள்ளைப் பண்ணி டிசைன் டிசைனா வேலை வாங்குறதுக்கு ஐடியாப் போட்டு வைச்சிருக்குதே.. அறையில இருக்குற தூசியைத் தட்டி முடிக்க முதல் நான் தும்மித் தும்மியே பரலோகம் போயிடுவன் போலயே..”
என முணுமுணுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவளுக்கு அறையின் இருட்டு பயத்தைக் கொடுக்க வெளியே ஓடி வந்து விட்டாள்.
“ஏழு கழுதை வயசாகுது.. உந்த இருட்டெண்டால் பயம் வாரது மட்டும் இன்னும் விட்டுப் போகேல்லையே.. என்னத்தைச் சொல்ல.. பகல் முடிஞ்சு ராத்திரி ஆக முதல் அறையை நீற்றாக்கிடோணும்.. இல்லாட்டிக்கு என்ரை பாடு பெரும் பாடாப் போயிடும் ..”
எனத் தனக்குத் தானே சொன்னவள் வியாகேசைத் தேடி ஓடினாள்.
மூச்சிரைக்கத் தன்னை நோக்கி ஓடி வந்த பெண்ணைப் பார்த்துப் பதறிப் போய்,
“என்னம்மா என்ன.. என்ன நடந்தது ஏன் உப்புடி ஓடி வாராய்..”
என வியாகேசு கேட்க,
“எனக்கு ஒரு லாம்பும், மொப்பரும் வாங்கித் தாரியளோ..”
என்று பாவமாகக் கேட்டாள் அவள்.
“கதைச்சுக் கொண்டு நிக்க நேரமில்லை அப்பா.. உங்கடை பாஸ் எனக்கு நிமிர முடியாத வேலையளாப் பாத்துக் குடுக்கிறார்.. அதை நானும் டப்பெண்டு செய்து முடிக்கோணும் எல்லோ.. அது தான் அதுக்குச் சில சாமானுகள் வேணும்.. இப்ப உடனே வாங்கித் தாரியளோ.. நான் பிறகு காசு தாரன்..”
“சரி சரி தாரன்.. என்னட்டையே கிடக்கு எடுத்துத் தாரன் வா..”
“இந்த வீட்டுல நீங்கள் மட்டும் துணைக்கு இல்லாட்டிக்கு நான் என்ன ஆகியிருப்பனோ தெரியேல்லை அப்பா.. நீங்கள் எனக்குச் செய்யிற உதவிக்கு எப்புடி நன்றி செலுத்தப் போறனோ தெரியேல்லை..”
“பெரிய வாத்தை எல்லாம் சொல்லாத பிள்ளை.. நீ எனக்கு நல்ல சாப்பாடு செய்து குடு அது போதும் எனக்கு..”
“கண்டிப்பா செஞ்சு குடுக்கிறன் அப்பா.. இப்ப அந்த மேல இருக்கிற அறையைத் துப்பரவு செஞ்சிட்டு வாரன்.. அப்ப தான் சாப்பாட்டு வேலையைப் பாக்கலாம்..”
“எந்த அறையெண்டு சொன்னனீ பிள்ளை..”
“மேல மாடியில இருக்கிற வலப் பக்கத்து அறை..”
“ஐயோ கடவுளே..”
“ஏனப்பா.. அந்த அறைக்குள்ள ஏதும் பேய் பிசாசு இருக்கோ.. அறையைப் பகல்ல பாக்கவே பயங்கரமா இருக்குது..”
“சேச்சே பேயாவது பிசாசாவது..நீ எந்தக் காலத்துல இருக்கிறாய்.. அந்த அறை கன வருஷமாப் பாழடைஞ்சு போய்க் கிடக்குது உள்ள பூரான் பூச்சி இருந்தாலும் தெரியாது.. அது தான் நான் பயந்தனான்..”
“அப்பா..”
“என்னம்மா..”
“எனக்கொரு உதவியொண்டு செய்வியளோ..”
“உனக்குச் செய்யாமல் வேறை ஆருக்குச் செய்யப் போறன்.. சொல்லு என்ன செய்யோணும்..”
“இல்லை.. நான் அந்த அறையைத் துப்பரவாக்கிறன்.. எனக்கு அதொரு விசியமே இல்லை.. அப்புடி இன்னும் ரெண்டு அறை தந்தாலும் நான் சுணங்காமல் வேலை செய்வன்.. ஆனா எனக்குத் தனியா அந்த அறைக்குள்ள போகப் பயமாக் கிடக்குது.. நீங்கள் வந்து வெளியால ஒரு கதிரை போட்டு காவலுக்கு இருக்கிறியளோ.. உள்ள கூட வர வேண்டாம்.. பிளீஸப்பா மாட்டன் எண்டு மட்டும் சொல்லிடாதேங்கோ..”
“நான் மாட்டன் எண்டு சொல்லேல்லையே.. வா போவம்.. ஆனா எனக்கு ஏதாவது கொறிக்கக் குடு.. நான் உள்ளயே வந்திருக்கிறன்..”
என்று வியாகேசு சொன்னது தான் தாமதம், அவரது கன்னங்கள் இரண்டையும் கிள்ளி
“அப்பாண்டால் அப்பா தான்.. செல்லக் குட்டி..”
என அவரை உரிமையாகக் கொஞ்சிக் கொண்டே துள்ளிக் குதித்து ஓடிய கோதையை, சிறு சிரிப்போடு பின் தொடர்ந்தார் வியாகேசு.