குறிஞ்சி மலர்.. 13
இராத்திரி நேரத்துக்கேயுரிய அமைதி அந்த பங்களாவை ஆட்சி செய்து கொண்டிருக்க, ஒருத்தி மட்டும் தொண தொணவெனப் பேசிக் கொண்டேயிருந்தாள்.
அவள் பேசுவதையே பிரமை பிடித்தவர் போலப் பார்த்துக் கொண்டேயிருந்தார் வியாகேசு. பக்கத்தில் இருந்த வஞ்சிமாறனின் நிலையும் அதுவாகத் தான் இருந்தது.
“என்னப்பா நீங்கள்.. நான் பாட்டுக்குத் தனியா அலம்பிக் கொண்டு இருக்கிறன்.. நீங்கள் ரெண்டு பேரும் என்ரை வாயையே பாத்துக் கொண்டு இருக்கிறியள்..”
“ஆ என்ன பிள்ளை..”
“நீங்கள் இங்கினை தானே இருக்கிறியள்..”
“ஓம் பிள்ளை..
“அப்ப இவ்வளவு நேரமா நான் என்ன கதைச்சனான் எண்டு சொல்லுங்கோ பாப்பம்..”
“ஆ அது வந்து..”
“என்னட்டை ஏதவோ கதைக்கோணும் எண்டு தானே ரெண்டு பேரும் கூட்டி வந்தனியள்.. பிறகு ஆளையாள் பாக்குறதும் என்ரை வாயைப் பாக்குறதும்.. பிறகு மேல மாடியைப் பாக்குறதுமா இருந்தால் என்ன அர்த்தம் சொல்லுங்கோ..”
“ஓம் ஒரு விசியம் சொல்லத் தான் வந்தனாங்கள்.. ஆனா எப்புடித் தொடங்கிறது எண்டு தெரியேல்லை..”
“சும்மா சொல்லுங்கோப்பா.. நான் வேறை அந்த அறைக்குள்ள இருக்கிற ரெண்டு பேருக்கு இனி வேலை செய்யோணும்.. நான் நினைக்குறன் அவையளும் உங்கடை பாஸைப் போல கோபக்காரரா இருப்பினம் போல..”
“அதைப் பத்தி தான் சொல்லோணும் பிள்ளை.. நீ பேசாமல் என்னால நீங்கள் சொல்லுற வேலையளைச் செய்ய ஏலாது எண்டு சொல்லிப் போட்டு போயிடு பிள்ளை.. உனக்கு அது தான் நல்லது..”
“ஏனப்பா என்ன நடந்த ஏனப்புடி போகச் சொல்லுறியள்..”
“இனி நீ செய்யப் போற வேலை இது வரை செய்த வேலையளையே தூக்கிச் சாப்புடுற அளவுக்கு கடினமான வேலை பிள்ளை.. அதை உன்னால செய்யவே ஏலாது பிள்ளை..”
“ஏனப்பா ரெண்டு பேரைப் பாத்துக் கொண்டு.. அவைக்கான வேலையளைச் செய்யிறது அவ்வளவு பெரிய கஷ்டமோ..”
“அவை சாதாரணமான ஆக்கள் எண்டால் உன்னால பாத்துக் கொள்ள முடியும்.. ஆனா..”
“ஆனா என்னப்பா..”
“ரெண்டு பேருமே மனநலம் பாதிக்கப் பட்டவையள் அது தான் சொல்லுறன்.. ஆரைக் கண்டாலுமே ஆக்ரோஷமா அடிப்பினம் கடிப்பினம்.. உனக்கு உதெல்லாம் தேவையோ சொல்லு..”
“அவை ஆரா இருந்தாலும் இனி நான் பின் வாங்க மாட்டன்.. உந்த வேலையைச் செய்வன் எண்டு தானே உங்கடை பாஸிட்டை சொன்னான்.. அதன்படி அந்த வேலையைக் கண்டிப்பாச் செய்வன் அப்பா.. தயவு செய்து என்னையப் போகச் சொல்லாதேங்கோ.. என்ரை அப்பாக்கு நான் குடுத்த வாக்கை நான் காப்பாத்தோணும் தானே..”
“நான் உன்ரை நன்மைக்காக மட்டும் தான் பிள்ளை சொல்லுறன்.. மற்றபடி நீ இங்க இருந்து போனால் அது எனக்கும் தான கவலை.. அவையள் ரெண்டு பேரையும் உன்னால பாத்துக் கொள்ள ஏலாது பிள்ளை சொன்னால் கேள்..”
“உங்கள்ரை கவலை எனக்குப் புரியுது அப்பா.. உன்னால அவையளைப் பாத்துக் கொள்ள ஏலாது ஏலாது எண்டு சொல்லச் சொல்லத் தான் இந்த வேலையை ஒழுங்காச் செய்யோணும் எண்ட வெறியே எனக்கு வருகுது.. சரி உங்கடை திருப்திக்காக ஒண்டு சொல்லட்டுக்கே..”
“என்ன சொல்லப் போறாய்..”
“நான் இந்த வேலையை முழு மனசோட திருப்தியாத் தான் செய்யப் போறன் அப்பா..”
“அது எனக்குத் தெரியும் தானே பிள்ளை..”
“முதல் நான் சொல்ல வாரதைக் கேளுங்கோப்பா..”
“சரி சொல்லு..”
“என்னால முடிஞ்ச வரை செய்யிறன்.. ஒரு வேளை என்னால செய்ய முடியாது எண்டு தோணினால்.. அந்த நிமிஷமே நான் வேலையை விட்டுப் போறன் சரியோ..”
“அதுக்கு உனக்குத் தோணோணுமே..”
“என்னப்பா..”
“ஒண்டுமில்லை பிள்ளை.. நல்லது எண்டு சொன்னன்..”
“ஆ சரி.. என்ன அண்ணாச்சி வந்ததில இருந்தே பேசாமல் இருக்குது..”
“அவருக்கு உன்னையப் பாக்க உன்ரை நடவடிக்கையைப் பாக்கப் பிரம்மிப்பா இருக்குதாம்..”
“ஏன் நான் என்ன செஞ்சனான்..”
“நீ என்ன செய்யேல்லை..”
“அப்பா என்னப்பா நீங்கள்.. திரும்பத் திரும்ப அந்த விசியத்தைப் பத்திக் கதைக்க வராதேங்கோ.. எந்தப் பக்கமாப் போனாலும் நீங்கள் அந்தப் பக்கமாத் தான் வந்து நிக்கிறியள்..”
“சரி இனி வரேல்லை போதுமோ.. வந்தாலும் நீ அடுத்த பக்கமாத் துரத்தி விடுறாய்..”
“வந்து தான் பாருங்கோவன்.. அண்ணாச்சி உப்புடியே மௌனவிரதம் அனுஷ்டிச்சுக் கொண்டு இருக்கட்டும்.. நீங்களும் எதையாவது புலம்பிக் கொண்டு இருங்கோ.. நான் போய் அவையளைப் பாத்துட்டு வாரன்..”
“எவையளை..”
“அது தான் அந்த அறைக்குள்ள இருக்கிற ரெண்டு பேரையும்..”
“நாளைக்குப் பாத்தால் என்ன..”
“பாக்கோணும் எண்டு முடிவெடுத்த பிறகு நாளைக்குப் பாத்தால் என்ன இண்டைக்கு பாத்தால் என்ன அப்பா..”
என்று கொண்டு எழுந்து போனவளையே வியாகேசு பாவமாகப் பாத்துக் கொண்டிருக்க, வஞ்சிமாறனோ அந்த இடத்தில் வந்து அமர்ந்த போது எப்படி இருந்தானோ, அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தான்.
வியாகேசு தான் அவனது முதுகில் இரண்டு போட்டு, அவனை எழுப்பி அழைத்துக் கொண்டு போனார்.
வீட்டினுள் வந்த கோதை நேரத்தைப் பார்த்தாள், அது இரவு ஏழு மணி என்பதைத் தெளிவாகக் காட்டியது. அப்படியே போய் மாடியின் மூலையில் இருந்த அறைக்கு முன்னால் நின்றாள் கோதை.
“இஞ்ச பாரு காளியாத்தா இப்பநான் உள்ள போகப் போறன் நீ தான் கூட இருந்து காப்பாத்தோணும்.. அப்பா வேறை என்னைய ரொம்பப் பயப்படுத்தி விட்டிருக்கிறார்.. அவருக்கு முன்னால தெனாவட்டா கதைச்சுட்டு வந்துட்டன்.. இனி உள்ள போனால் தான் என்ன நடக்கும் எண்டு தெரியும்.. சரி அதையும் ஒரு கை பாப்பம் எண்டு வந்திருக்கிறன்.. என்ரை மாமி நாயகியை விடவோ ஆரும் மனநோயாளியா இருப்பினம்.. அவாவையே மூண்டு வருஷமா சமாளிச்சிட்டமாம்.. உள்ள இருக்கவை எந்த மட்டு..”
என தனக்குத்தானே சொல்லியபடி அந்த அறைக் கதவை மெல்ல திறந்தாள் கோதை.
கதவைத் திறந்ததுமே கும்மிருட்டு தான் அவளை இருகரம் நீட்டி வரவேற்றது. ஏற்கனவே இருள் என்றால் பத்தடிக்கு பயந்து பாய்ந்து ஓடும் கோதைக்கு அந்த இருளை பற்றி சொல்லவா வேண்டும்.
அவள் வாசலில் நின்று கொண்டு அப்பா என்று கத்திய கத்தலில் வியாகேசு பதறி அடித்துக் கொண்டு ஓடி வர, அந்த அறைக்கு நேர் எதிராக இருந்த அறையில் இருந்து என்னவென்பது போல எட்டிப் பார்த்த ஜேம்ஸுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கோதை தலையைச் சொறிய, வியாகேசோ என்ன பிள்ளை ஏன் கத்தினாய் என்பது போல அவளையே பார்த்துக் கொண்டு நின்றார்.
திடீரென முன் அறையில் இருந்து ஜேம்ஸ் எட்டிப் பார்ப்பான் என்பதை எதிர்பாராத கோதை, இருட்டுக்கு பயந்து தான் கத்தினேன் என்று சொன்னால் தன்னைப் பற்றி அவன் என்ன நினைப்பான் என எண்ணி, வியாகேசின் காதோரமாக
“அந்த அறைக்குள்ள போக வாசலைத் திறந்த உடனயே ஒரே இருட்டா இருக்குதப்பா.. அதான் பயத்துல என்னைய அறியாமல் கத்திட்டன்..”
என மெதுவாகச் சொன்னாள்.
அவள் சொன்ன தினுசில் வியாகேசுக்கு சிரிப்பு வந்தாலும், ஜேம்ஸ் நிக்கிறான் என்பதை கருத்தில் கொண்டு அந்த சிரிப்பை அடக்கியபடி
“அது ஒண்டும் இல்லை பீட்டரு.. பிள்ளை அறையிந்தை இருட்டைப் பாத்துட்டு பயந்துட்டுது.. அறை ஒரே இருட்டு தான.. நான் பாத்துக் கொள்ளுறன் நீ போ..”
என்று ஜேம்ஸுக்கு விளக்கம் சொல்ல, அவனோ கோதையை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, வலக் கரத்தால் தலையில் அடித்துக் கொண்டு போய் விட்டான்.
எப்படியும் இந்த டம்மி பீஸ் ஒரு கிழமைக்கு மேல் தாங்காது என அவன் நினைத்தானோ தெரியவில்லை.
ஜேம்ஸ் பேசாமல் போயிருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் அவன் தலையில் அடித்து விட்டுப் போனதைப் பார்த்த வியாகேசுக்கு, அதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்பு வெடித்துக் கொண்டு வர, அவர் கோதையை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கி விட்டார்.
ஏற்கனவே ஜேம்ஸ் தன்னைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு போனதைப் பார்த்து கிட்டத்தட்ட ஒரு விதமான கூச்சத்தில் இருந்த கோதைக்கு, வியாகேசு தன்னைப் பார்த்துச் சிரிக்கவும் உண்மையிலும் கடுப்பாகி விட்டது.
“வாயை மூடுங்கோப்பா.. என்ரை மானத்தை வாங்க நீங்கள் ஒராளே போதும்.. எனக்கு நிக்டோஃபோபியா இருக்கு..”
“என்னது நிக்கட்டோ போகட்டோவோ..”
“ஐயோ அப்பா.. இங்கிலீஷை உப்புடிக் கொல்லாதேங்கோ..”
“ஓ இங்கிலீஷா.. இஞ்சை பார் உந்த இங்கிலீசு பிங்கிலீசெல்லாம் எனக்குச் சரிப்பட்டு வராது.. நீ தமிழ்லையே சொல்லு.. நான் தமிழ் மட்டும் தான் எனக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை..”
“இப்ப சொல்லவோ வேண்டாமோ..”
“சரி சரி சொல்லு..”
“எனக்கு இருளச்சம் இருக்கு.. சின்ன வயசுல இருந்தே இருக்குது.. இருட்டைப் பாத்தாலே பயம் பயமா வந்திடும்.. இருட்டுல தனியா எல்லாம் தூங்க மாட்டன்.. நான் படுக்கிற அறைக்குள்ள எப்பவுமே லைட்டு எரிஞ்சு கொண்டே இருக்கோணும்.. ஒரு வேளை எல்லாத்தையும் மீறி இருட்டுல தனியா இருந்தா எனக்கு மூச்சுத் திணறி வேர்த்துக் கொட்டும் அப்பா..”
“என்னடி பிள்ளை புதுப் புது வியாதி எல்லாம் சொல்லுறாய்.. எனக்கு ஒண்டுமே விளங்கேல்லை..”
“அது தான் எனக்கும் வேணும்.. எனக்கு இப்புடி ஒரு பிரச்சினை இருக்கிறது ஆருக்குமே தெரியாது.. இப்பதான் உங்களுக்குச் சொன்னான்.. உங்களுக்கே விளங்கேல்லை எண்டால் நீங்கள் ஆருக்கும் உங்களை மறந்தும் என்ரை வியாதியைப் பத்திச் சொல்ல மாட்டியள் தானே..”
“ரொம்பத் தெளிவு தான் நீ..”
“அதை விடுங்கோப்பா.. அந்த அறைக்கு லைட்டு போட்டு விடுங்கோ.. அப்ப தானே நான் உள்ளுக்கை போகலாம்..”
எனக் கோதை சொல்ல, அறையில் நுழைந்த வியாகேசு அந்த அறை லைட்டை போடவும் அவரைத் தொடர்ந்து கோதை உள்ளே நுழைந்தாள்.
அதே வேளை அங்கு வேகமாக வந்த ரகுமான், அந்த அறை வாசலில் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்க,
“அந்தா வந்திட்டான் பார்.. இனி ஒரு நிமிசமும் நான் இங்க நிக்க ஏலாது.. சரி பிள்ளை நான் போறன் பாத்து நடந்து கொள்ளு.. எடுத்த வீச்சுக்கு கிட்ட போயிடாத..”
என்று சொன்ன வியாகேசு, அறையின் ஒவ்வொரு மூலையாக இருந்த இரண்டு பெண்மணிகளையும் ஒவ்வொருவராய் காட்டி அறிமுகப் படுத்தினார்.
“இது பீட்டரோட அம்மா.. இது பீட்டரோட அப்பம்மா..”
“பீட்டரா.. அது ஆருப்பா..”
“நீ வேலை செய்ய வந்த இந்த வீட்டு முதலாளி.. இப்ப கூட உன்னையப் பாத்திட்டு தலையில அடிச்சிட்டுப் போனானே..”
“முதலாளி எண்டா மட்டும் போதாதோ.. தலையில அடிச்சதைக் கண்டிப்பாச் சொல்லித் தான் ஆகோணுமோ..”
“சரி தெரியாமச் சொல்லீட்டன்..”
“நீங்கள் தெரிஞ்சே தான் சொன்னியள்.. சரி அதை விடுங்கோ உங்கடை முதலாளிடை பேரை முதல்ல சொல்லுங்கோ..”
“ஜேம்ஸ் பீட்டர் ஃபோல்..”
“மூண்டு பேரா..”
“இல்லையே..”
“அப்ப ஏன் பிரிச்சுப் பிரிச்சுச் சொல்லுறியள்..”
“தெரியாமல் சொல்லீட்டன் விட்டுடு தாயே..”
“நீங்கள் தெரிஞ்சே தான் சொன்னியள்..”
“ஐயோ கடவுளே..”
“கடவுளைக் கூப்பிர்ரது இருக்கட்டும் இங்க பாருங்கோ.. உங்கடை முதலாளி கிறிஸ்டியன்ஸோ..”
“ஓம் பிள்ளை..”
“அப்ப எனக்குத் தந்தாரே அறையுக்குள்ள அம்மன் சிலை வைக்க விடுவாரோ..”
“அது அவனைத் தான் கேக்கோணும்..”
“ஆரு உங்கடை பீட்டரையோ.. கிழிஞ்சுது போங்கோ போங்கோ நான் பிறகு கதைக்கிறன்.. இப்ப என்ரை டியூட்டியை நான் பாக்கோணும்..”
“பாரு பாரு.. நான் போறன் பிள்ளை.. திரும்பத் திரும்பச் சொல்லுறன் எண்டு நெத்திக் கண்ணைத் திறக்காத.. பாத்து பத்திரம் சரியோ ஏதும் எண்டால் உடன வெளியால ஓடியாந்திடு.. எதுக்கும் அறையைத் திறந்து வை.. நான் போட்டு வாரன்..”
இன்னும் சில நொடிகள் அவர் அங்கேயே நின்றால், எதிரில் இருக்கும் அறையில் இருந்து பூச்சாடியோ பூச்சட்டியோ கண்டிப்பாக பறந்து வரும் என்பது அவர் அறிந்த உண்மை அல்லவா. அதனால் வியாகேசு கோதைக்கு ஒரு சில வார்த்தைகளை சொல்லிவிட்டு, அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார்.