குறிஞ்சி மலர்.. 35
“அம்மா..”
என்று கொண்டு அங்கே வந்த கோதையைப் பார்த்து வியாகேசு முட்டைக் கண்ணை உருட்ட, நீலரூபி நெஞ்சை அழுத்தி பிடிக்க, ஒருத்தன் மட்டும் தன் பேபியை இரசித்துக் கொண்டு நின்றிருந்தான்.
இது நாள் வரையில் வெள்ளையில் கறுப்பு கரையிட்ட புடவையுடன் வலம் வந்தவள் இன்று கூரைப் பட்டில் அவன் முன்னால் நிற்கிறாள். அதுவும் அவளுக்கென அவன் ஆசையாக எடுத்துக் கொடுத்த புடவையில். அவளது சாக்லேட் நிறத்துக்கு அந்தப் புடவை எடுப்பாகத் தான் இருந்தது. அவளது சுமாரான தோற்றத்தையே அவன் உலகழகி ரேஞ்சுக்கு இரசித்தான். காதல் கொண்ட மனதுக்கு அவரவர் மனைவி தானே உலகழகி. அதனால் அவனின் காதல் கொண்ட மனதும் தன்னவளை உரிமையாய் இரசித்துத் தள்ளியது.
திலகமில்லாத அவள் நெற்றியில் அவன் வைத்த குங்குமம் கர்வத்தோடு மிளிர, அவன் கட்டிய தாலியோ அவள் கழுத்தில் மின்னியது.
உச்சி முதல் பாதம் வரை தன்னையே பார்த்தவனது பார்வையில் ஒரு கணம் தடுமாறிய கோதை மறு கணமே
“யாருக்குமே தெரியக் கூடாத விசியம் என்ன நீலும்மா ஏதும் பிரச்சனையோ..”
என ஒரு கேள்வியைக் கேட்டு தன்னை நிதானப் படுத்த, அப்போது தான் நீலரூபிக்கும் வியாகேசுக்கும் உயிரே வந்து தொலைத்தது.
“அது ஒண்டுமில்லை பிள்ளை.. ரூபா வீட்டை விட்டு போனது யாருக்கும் தெரிய வேண்டாம் எண்டு உன்ரை கொம்மா சொல்லுறா..”
என வியாகேசு விளக்கம் கொடுக்க,
“ஓ..”
என்று கொண்டு தாயைப் பார்த்தவள்
தயக்கத்துடன்
“நீலும்மா.. கொஞ்சம் வாரிங்களோ..”
என மெதுவாகக் கேட்க, அவள் நின்ற நிலையில் அவளுக்கு ஏதோ பிரச்சினை என்பதனை புரிந்து கொண்ட நீலரூபி, அவளது கையைப் பிடித்து கொண்டு பக்கத்து அறைக்குள் நுழைந்தார்.
அதைப் பார்த்த ஜேம்ஸுக்கு உடனே கோபம் வந்து விட்டது. அவனது முகத்தில் தெரிந்த கோபத்தை வியாகேசு பார்த்து விட்டார். அது சரி இவனுக்கு கோபம் வராமல் போனால் தான் ஆச்சரியம் என நினைத்துக் கொண்டு, அவர் அங்கிருந்து போக எத்தனிக்க அவரின் கையைப் பிடித்துக் கொண்டான் வியாகேசு.
“எனக்கு தெரியாமல் அப்புடியென்ன ரகசியமாம்..”
“என்னைக் கேட்டா எனக்கென்ன தெரியும்.. அதை உம் பொண்டாட்டி கிட்டயே கேளன்..”
“கேட்டா சொல்லுவாளோ..”
“அது நீ கேக்கிற விதத்துல இருக்கு.. ஆ ஊ எண்டால் கண்டதையும் தூக்கி அடிப்பியே அதை கொஞ்சம் குறை.. என்னடா அப்புடிப் பாக்கிறாய்.. உம் பொண்டாட்டிக்கு உன்னுல பாசம் வரோணும் எண்டால் மட்டும் இல்லை.. பக்கத்துல வரோணும் எண்டால் கூட நீ உந்தப் பழக்கத்தை குறைக்கோணும்..”
“ஓ..”
“என்ன ஓ.. பிறகு அவள் பத்தடி தள்ளி நிண்டு தான் உன்னோட குடித்தனம் நடத்த வேண்டி இருக்கும்..”
என வியாகேசு சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஜேம்ஸ் தலையைப் பிடித்துக் கொண்டு கீழே அமர்ந்து விட்டான்.
“என்ன பீட்டரு என்ன யோசனை..”
“இல்லை பேபிக்கு என்னைய பிடிக்குமா..”
“ஓம் இதை வந்து இப்ப கேளு..”
எனத் தொடங்கிய வியாகேசு, அவன் முகத்தை பார்த்ததும் அந்த பேச்சை நிறுத்தி விட்டு, அவனது தலையை கோதி விட்டபடி
“உன்னைய போயி ஆருக்கும் பிடிக்காமல் இருக்குமாடா.. நம்ம கோதை பாசத்துக்கு ஏங்கிற பிள்ளை.. அவளுக்கு நீ உன்ரை பாசத்தை கொட்டிக் குடு.. பிறகு பார் உன்னைய விட்டு போகவே மாட்டாள்..”
என கனிவோடு சொன்னார்.
அங்கே பக்கத்து அறைக்கு மகளை அழைத்துச் சென்ற நீலரூபி, மகளின் முகத்தை நிமிர்த்தி அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தார்.
“என்னடி பிள்ளை.. முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு..”
“எனக்கு பயமா இருக்கும்மா..”
“ஏன்டி என்ன பயம்..”
“என்ரை அத்தையை நினைக்கத் தான்..”
“ஏன் அந்த விசரிக்கு என்ன வந்த.. காலகாலமா அவள்ரை வீட்டுல வடிச்சுக் கொட்டோணும் எண்டு உனக்கென்ன தலையெழுத்தோ..”
“இல்லையம்மா.. அவா எனக்கு திரும்ப கலியாணம் ஆன விசியம் தெரிஞ்சால் என்னவெல்லாம் கதைப்பா..”
“என்ரை கோதை தைரியமான பிள்ளையாச்சே.. போயும் போயும் அவளுந்தை பேச்சுக்கோ இவ்வளவு யோசிக்கிறாய் நீ..”
“எவ்வளவு தான் தைரியமான பிள்ளையா இருந்தாலும்.. அவா கதைக்கிற கதை அப்புடியம்மா.. என்னைய எவ்வளவு தரக் குறைவா பேசோணுமோ அவ்வளவு கேவலமா பேசுவா..”
“அவள் கிடக்கிறாள் விசரி.. இவ்வளவு நாளும் உனக்கு ஒண்டெண்டால் பக்கத்துல நிண்டு குரல் கொடுக்க ஆளில்லாமல் இருந்த.. இனி அப்புடி இல்லை மருமகன்தம்பி இருக்கிறார்.. அவரைத் தாண்டி உன்னைய அந்த சிருக்கி ஒரு வார்த்தை சொல்லிடுவாளோ.. பேசாமல் கண்டதையும் நினைச்சு குழம்பாமல் அவரோட வாழுற வழியைப் பாரு..”
“பாவம்மா அவரு.. ரூபா இப்புடி செஞ்சிருக்கவே கூடாது.. ஆரம்பத்துலயே இந்த கலியாணத்தை வேண்டாம் எண்டு அவள் சொல்லியிருந்தால் இது கலியாணம் வரை வந்து நிண்டிருக்காது.. அவரும் பாவம் பிடிக்காத என்னையக் கட்டி இனி அவஸ்தைப் படப் போறாரு..”
“அவருக்கு உன்னை பிடிக்காதெண்டு எதை வைச்சு சொல்லுறாய் பிள்ளை..”
“அவர் என்ரை கழுத்துல தாலி கட்டினதே ஒரு இக்கட்டுல தான்.. அதுவரை அவர் ரூபாவைத் தானே மனுஷியா நினைச்சிருப்பார்.. அது போக நான் அவருக்கு அஞ்சு மாச அக்ரிமெண்ட்ல வந்த வேலைக்காரி.. ஒரு வேலைக்காரியை கட்ட எந்த முதலாளிக்கு தான் விருப்பம் வரும்..”
“பிள்ளை நீ கண்டதையும் நினைச்சுக் குழம்பாத..”
“நான் குழம்பேல்லை அம்மா.. இப்ப தெளிவா ஒரு முடிவு எடுத்திருக்கிறன்..”
“என்னது..”
“ஒரு ஆறு மாசம் இங்க ஒரு ஓரமா இருந்திட்டு..”
“இருந்துட்டு..”
“அவருக்கு டிவோர்ஸ் குடுக்கலாம் எண்டு முடிவு எடுத்து இருக்கிறன்..”
என கோதை சொல்லி முடிக்கவும், அவளது கன்னத்தில் நீலரூபியின் கரம் இடியென இறங்கியது.
நீலரூபி அடித்த வேகத்தில் கன்னத்தை பொத்திக் கொண்டு, கண்கலங்கத் தாயைப் பார்த்து,
“அம்மா..”
என்றவளை
“பொத்தடி வாயை.. கலியாணம் எண்டால் உனக்கு அவ்வளவு விளையாட்டா போச்சோ.. நீ வாழ்வை இழந்திட்டு பட்ட மரமா நிண்டப்போ நான் எவ்வளவு துடிச்சன் தெரியுமோடி.. ஐயோ என்ரை கோதைக்கோ இப்புடி ஆகோணும் எண்டு எப்புடி அழுதன் தெரியுமே.. என்ரை புருஷன் எண்டுற பேரில சுத்தீண்டு திரியுதே ஒரு வெங்காயம் அதிட்டை காலில விழாத குறையா.. உனக்கு கொஞ்சம் நாள் போக இன்னொரு கலியாணம் செஞ்சு வைப்பம் எண்டு கேட்டன்.. அதுக்கு அந்தாள் வானத்துக்கும் பூமிக்குமா குதிச்சாரு.. சரி தான் உனக்கானவன் பிறக்காமலோ போயிருப்பான் எண்டு கொஞ்சம் அமைதி ஆயிட்டன்.. அது போல இந்த வெள்ளைக்கார மகாராசா வந்தாரு.. அவருக்கு நீ தான் உனக்கு அவரு தான் எண்டு எழுதி வைச்சிருந்தால் நடுவுல யாரு தாண்டி வர முடியும்.. அது தான் உங்கள் ரெண்டு பேருக்கும் கலியாணம் நடந்திச்சு.. சரி என்ரை பிள்ளை இனியாவது நிம்மதியா இருக்கட்டும்.. அவளுக்கும் பிள்ளைகுட்டி எண்டு பிறக்கும் அதைத் தூக்கி ஆசை தீரக் கொஞ்சீட்டு நிம்மதியா போய்ச் சேரலாம் எண்டு நான் கனவு காணுறன்.. நீ என்னடா எண்டால் கடையில வெங்காயம் மிளகாய் வாங்குற கணக்கா டிவோர்ஸ் வாங்கப் போறன் எண்டு சொல்லுறாய்..”
எனத் திட்டிய நீலரூபி, பெரிய பெரிய மூச்செடுத்து தன்னை நிதானப் படுத்திக் கொண்டார்.
தாயின் ஆவேசத்தில் கொஞ்சம் மிரண்டு போன, கோதை அவரது கையைப் பிடிக்க போக
“தொடாதேடி என்னைய.. எனக்கு மனசு ஆறவே மாட்டன் எண்டுது..”
என்று கையை உதறினார்.
கோதையின் கழுத்தில் ஜேம்ஸ் தாலி கட்ட வேண்டும் என்பதற்காக, பெற்ற மகள் ரூபாவை மறைத்து வைப்பதற்கு துணை போய் எவ்வளவு பெரிய பெரிய வேலை எல்லாம் செய்து, ஒரு வழியாக இந்த திருமணத்தை முடித்து வைத்திருக்கிறார். ஆனால் கோதை அசால்ட்டாக டிவோர்ஸ் பற்றி பேசியது அவருக்கு இப்போதும் உள்ளூர பதட்டத்தையே கொடுத்தது.
மகளை முறைத்துப் பார்த்துக் கொண்டே சில நிமிடங்கள் நின்றவர், அவள் வயிற்றில் அடிக்கடி கையை வைத்து அழுத்தவும்
“என்னடி..”
என்று அவளை நெருங்கி வயிற்றைத் தொட்டுப் பார்க்க, எங்கே தாய் கோபத்தில் பேசாமலேயே போய் விடுவாரோ என்று பயந்து நின்றவள், அவர் அருகே வரவும் கொஞ்சம் இலகுவானாள்.
இப்போது நீலரூபியும் கொஞ்சம் நிதானத்துக்கு வந்திருந்தார். திடீர் திருமணத்தில் அவளும் கொஞ்சம் மனதளவில் குழம்பி அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பாள். அதனால் தான் இப்படி பேசுகிறாள். இதெல்லாம் போகப் போக சரியாகி விடும். எனத் தனக்குத் தானே சமாதானமும் சொல்லிக் கொண்டார்.
“என்னடி நான் சொக்கில தான அடிச்சனான்.. நீ வயித்தைப் பிடிக்கிறாய்..”
“ஆ அடிச்ச வேகத்துல.. சொக்கில இருக்கிற நரம்பு கழண்டு வயித்துக்குள்ள விழுந்திட்டு..”
“விழும் விழும்.. இனி உப்புடி லூசுக் கதை கதைச்சியோ பல்லு மொத்தமும் விழும் சொல்லியீட்டன்..”
“என்னையப் பெறாத ஆத்தா.. அடிச்ச அடிக்கு இப்பவும் காதுக்கள்ள கொய்ங் எண்டு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்குது..”
“சாரிடி தங்கம்.. நீ அப்புடி சொன்னதும் அம்மாவுக்கு கோபம் வந்திட்டுது.. ரொம்ப நோவுதோ..”
“இல்லை ரொம்ப இதம்மா கிடக்கு..”
“அம்மா தான அடிச்சன்..”
“ஏன் அம்மா அடிச்சால் வலிக்க கூடாதெண்டு ஏதாவது சட்டம் கிடக்கோ..”
“சரி சரி கோச்சுக்காத..”
“எனக்கு சரியான வயித்துக்குத்து.. மரியாதையா அடிச்ச குத்தத்துக்காக வேர்க்கொம்பு போட்டு தேத்தண்ணி ஆத்திக் குடும்மா.. இல்லாட்டிக்கு இப்புடியே எங்கையாவது ஓடிப் போயிருவன்..”
“இருடி இருடி ஊத்திக் குடுக்கிறன்.. வாய் தான் உனக்கு.. இனிமேல் இங்க நல்ல பிள்ளையா இருக்கோணும்.. இந்த வீட்டு மருமகள் நீ.. உனக்கெண்டு நிறைய பொறுப்புகள் கிடக்கு சரியோ..”
“சரி..”
“மருமகனை அனுசரிச்சு போகோணும்..”
“சரி..”
“அவர் என்ன சொன்னாலும் கூடக் கூடப் பேசக் கூடாது..”
“சரி..”
“உன்ரை அத்தைக்காரியை கனவுல கூட இனி நினைச்சுப் பாக்க கூடாது..”
“சரி..”
“இனி எங்க போறதெண்டாலும் மருமகனோட சோடியா தான் போகோணும்..”
“சரி..”
“என்னடி சரி சரி எண்டுறாய்..”
“அப்ப வேறை என்ன சொல்ல..”
“நீ ஒண்டும் சொல்ல வேண்டாம்.. உன்ரை வாயை மூடிட்டே இரு.. அது சரி ஏன் வயித்துக்குத்து..”
என நீலரூபி கேட்க,
கோதையோ வாயை இறுக மூடிக் கொண்டு ஒற்றைக் கையால் வாயைத் தொட்டு காட்டினாள்.
“ம்க்கும் இதுக்கொண்டும் குறைச்சல் இல்லை.. நான் வாயை மூடிக் கொண்டிரு எண்டு சொன்னதும்.. அப்புடியே கேட்டிட்டாவாம்.. சரி சொல்லு ஏன் வயித்துக்குத்து ஏலாமல் வந்திட்டோ..”
“வரப் போகுதம்மா இன்னும் அஞ்சு நாள் இருக்கு..”
“நீ ஒரு விசித்திர பிறவியடி எல்லாருக்கும் ஏலாமல் வந்த மூண்டு நாளும் தான் வயிறு குத்தும்.. உனக்கு மட்டும் ஏலாமல் வாரதுக்கு முன் அஞ்சு நாளும் குத்தி.. பிறகு மூண்டு நாள் முடிஞ்சு ஒன்பதாவது நாளும் குத்தும்..”
“நீலும்மா நடு மூண்டு நாளை விட்டிட்டியலே.. அந்த நாளும் கூட குத்தும்.. ஆக மொத்தம் மாதத்துல பாதி நாள் இப்புடியே போயிடுது..”
“என்ன செய்ய பிள்ளை பொம்பிளைப் பிள்ளையா பிறந்தால் இப்புடி தான் வலி அனுபவிச்சே ஆகோணும்..”
“அதுக்கெண்டு இப்புடியோ.. உங்களுக்கு தெரியுமோ நான் ஸ்கூல் படிச்ச காலத்துல தாரணி எண்டு ஒரு பிள்ளை படிச்சவள்.. அவளுக்கு ஏலாமல் வந்தால் கண்டபடி வயிறு குத்துமாம்.. ஊரைக் கூட்டியே கத்தி அழுவாளாம்.. அவளிந்தை அண்ணா தாங்க முடியாமல் கொஸ்பிடல் எல்லாம் கூட்டிட்டு ஓடுவாராம்.. பிறகு தான் இது மாசா மாசம் வாரது எண்டு அவருக்கு தெரிய வந்திச்சாம்.. அதுக்கு பிறகு அவளுக்கு ஏலாமல் வந்தால் அவர் வீட்டையே நிக்க மாட்டாராம்.. தங்கச்சி அழுகுற அழுகையில அவருக்கும் அழுகை வந்திடும் எண்டு எங்கையாவது போயிடுவாராம்..”
“ஓம் பிள்ளை.. இது ஒவ்வொருத்தரின்ரை உடல்வாகைப் பொறுத்து வேறு படும்.. எனக்கெல்லாம் வயிறு குத்தி சத்தி வரும்..”
“எனக்கு ஒரே எரிச்சலா இருக்கும்.. ஆரையும் பிடிச்சு குத்தோணும் போல கிடக்கும்.. போதாக்குறைக்கு கால் வேறை நோகும்..”
“இனி உன்ரை புருஷனை பிடிச்சுக் குத்து.. சரி வா.. வேர்க்கொம்பு போட்டு தேத்தண்ணி தாரன்.. இப்ப என்ன செய்யுது வயிறு..”
“ஆ அந்தாளைக் கண்ட உடனேயே வயித்துக்குத்தே பயத்துல ஓடிரும்.. கதைச்சுக் கொண்டு இருக்க பெருசா தெரியேல்லை..”
“ஹா ஹா.. அப்ப நல்லம் தானே.. வயிறுகுத்து தொடங்கவும் உன்ரை புருஷனை கூப்பிட்டு பாரு..”
“நல்ல ஜோக்கு நாளைக்கு சிரிக்கிறன் போங்கோம்மா நீங்கள்.. ஏதாவது சாப்பிடவும் செஞ்சு குடுங்கோ..”
என்று சொன்ன கோதையை அழைத்துக் கொண்டு சமையலறை சென்றார் நீலரூபி.