இனி அன்பு கருப்புச்சாமின்னு மாமியார் மருமகள் சண்டை ஆரம்பமாகும் அங்கே.
பட்டணத்து பொண்ணு சுலோச்சனாவுக்கு புகுந்த வீட்டு குலதெய்வம் மீது மதிப்பும் மரியாதையும் பயப்பக்தியும் நம்பிக்கையும் அதிகமாகவே இருந்தது. ஆனால் அவர் பெயரை தன் மகனுக்கு வைக்கவும் எதிர்த்தார். எத்தனையோ பேர் புதுவிதமா இருக்கு. போயும் போய் கருப்புச்சாமின்னு வைக்கறதா முகம் கருத்துப் போனார்.
“எம் பேரன் பிறக்கும் போதே குல சாமி நிறத்தைக் கொண்டு பிறந்திட்டான் தயாளா. அதனால கருப்புச்சாமின்னே வைச்சுடுவோம். அப்பத்தான் நம்ம குலம் செழிக்கும் சொல்லிட்டேன். இல்ல சாமி சாபம் போடும்” ராமாயி ஒரே போடாக போட்டுவிட்டார்.
சுலோச்சனாவின் குமுறல் தொடர, “நீயும் ஒரு பேரை வச்சுக்க சுலோ. ஆளுக்கு ஒரு பேரை சொல்லி கூப்பிடுங்க” தயாளன் இருவருக்கும் சாதகமாய் திட்டம் சொல்ல.
அன்புசெழியன் என்ற பெயரை தன் மகனுக்கு சூட்டிய சுலோச்சனா பர்த் சர்ட்டிபிகேட்டிலும் அதை நிலைக்க வைத்துவிட்டே ஓய்ந்து அமர்ந்தார்.
ராமாயி அதையெல்லாம் கவனித்தும் கண்டுக்கவில்லை. குலசாமி முன் வச்சு கருப்புச்சாமின்னு பேர் சூட்டணும் என மனதார வேண்டியவர் அப்படியே வைத்துவிட்டார். ஆனால் பேத்திக்கு ரெண்டு பெயர் சூட்ட அனுமதிக்கவில்லை ராமாயி.
“ஆம்பளைப் பையன் என்னவோ பண்ணிக்க சுலோச்சனா. பொம்பளப் புள்ள லட்சணமா ஒழுங்கா ஒரு பேரை நானே வைக்கறேன். நீ கூப்பிட்டா கூப்பிடு இல்ல கண்ணு மணியேன்னு சொல்லிக்க என நான்தான் பேர் சூட்டுவேன் என குதித்த மருமகளை அடக்கிவிட்டு அன்னலட்சுமி என்ற பெயரை சூட்டினார்.
“அன்னம் வா கிளம்பலாம். உனக்கு நேரமாச்சு” தயாளன் மகளை அழைத்தார்.
“அன்னம் எங்கம்மா நான் வாங்கி தந்த செயின்? “ சுலோச்சனா அன்னத்தின் கழுத்தை அப்போதுதான் கவனித்தார்.
“அம்மா அது வேண்டாம். கிராண்டா தெரியுதுன்னு சௌமித்ரா சொன்னா. கழட்டி உங்க ரூம்ல வச்சிட்டேன்” அன்னம் மெல்ல சொன்னாள்.
“சத்தமா பேசு அன்னம். இப்படிப்பட்ட வீட்டுல உன்னைப் போல ஒரு பொண்ணு. நீ பேசறது உனக்கு கூட கேக்காது” சுலோச்சனா படபடத்தார்.
“பொண்ணுன்னா எம் பேத்தி மாதிரிதான் இருக்கணும். உன்னை மாதிரி அல்டாப் ராணியா இருந்து என்ன பிரயோசனம்” என்னையாடி ஜாடை காட்டுற பேச்சால் ஒரு இடி இடித்துவிட்டே நகர்ந்தார் ராமாயி.
“அம்மா போட்டிருக்கேன் பாருங்கம்மா. நேத்து அப்பா வாங்கி தந்தார்” மின்னல் மாதிரி மெல்லிசான சங்கிலி கழுத்தில் நெளிய,
அதிருப்தியுடன் பார்த்து, “என்னம்மா நீ. உன்னோட பியூட்டியை குறைக்குது இந்த செயின்” சொன்னவருக்கு அவள் மணிக்கட்டில் நெளிந்த மெல்லிய ஃபிரேஸ்லட், கண்ணில் விழ, பார்வை பாதங்களுக்கு செல்ல, விருப்பமாய் வாங்கி அணிந்த வெள்ளிக் கொழுசை அவசரமாய் உள்ளிழுத்து மறைத்தாள்.
“அதுசரி கால்ல போட்டிருக்க கொலுசும் வெள்ளியா? தங்கத்தில் கொலுசு வாங்கி தந்தா போடறதே இல்ல நீ” சுலோச்சனா அடுத்ததை ஆரம்பித்தார்.
தயாளன் வந்துவிட அவர் முன் மகளை ஏதும் பேச பயந்து, “சரி சரி கிளம்பு. ஒழுங்கா படி” அனுப்பி வைத்தார்.
“நீ போ கண்ணு. உனக்கு என்ன பிரியமோ அதையே பண்ணு. அப்பத்தா சொல்லு கேட்டு நடந்துக்க போதும்” பேத்தியை அனுப்பிய ராமாயி,
“உன்னோட பட்டணத்து பழக்கமெல்லாம் இங்க வச்சிக்காத சுலோச்சனா. ஒழுங்கா வளர்ற பிள்ளையை கெடுக்க பாக்காத ஏதாவது தப்பு தண்டா நடந்துச்சு என் மகன் விஷயத்துல ஏமாந்த மாதிரி இதுல இருக்க மாட்டன் சொல்லிட்டேன். பேரன் பேத்திங்க ரெண்டும் என் குலசாமிங்க. நல்லா வாழணும்னு உசுரை வச்சுக்கிட்டு இருக்கேன்” விரலை உயர்த்தி மிரட்டிவிட்டு வெத்தலை பெட்டியை எடுக்கப் போனார்.
மாமியார் செல்வதை பார்த்தபடி நின்ற சுலோச்சனாவுக்கு உடல் மொத்தமும் கோபத்தில் நடுங்கியது. மருமகளாய் இந்த ஊருக்கு கால் வச்ச நாள்ல இருந்து இந்த தேதி வரைக்கும் ராமாயிதான் வீட்டை ஆட்சி செய்கிறார்.
அவர் சொல்லுதான் எடுபடுகிறது. தான் பெத்த பிள்ளைகள் விசயத்தில் முடிவெடுக்கும் உரிமை கூட தனக்கு இல்லை.
“ஆறு மாதத்தில் பால் குடிக்கறதை மறக்க வச்சிடு சுலோ இல்லைன்னா உன்னோட மார்பகம் சரிஞ்சு அழகு மொத்தமும் போய்டும்” என ஃப்ரண்ட்ஸ் தவுசன்ட் டைம்ஸ் மண்டைக்குள் ஏத்தி வைத்தார்கள்.
அதனால் பெரியவனுக்கு மறக்க வைக்க நினைத்து தயாளன் அருகில் படுத்த வைத்தார். ராமாயிக்கு மறைத்து பவுடர் பால் கலந்து கொடுத்தார். குழந்தைக்கு ஒத்துக் கொள்ளாது வாயிலும் வயிற்றிலும் போக. ஜுரம் விட்டு விட்டு வந்து போக, வீட்டினர் அரண்டு போனார்கள்.
தயாளனுக்கு பால் பவுடர் தரும் விஷயம் தெரியும். ஆனால் தன்னை நம்பி வந்தவளை அன்னையிடம் காட்டி தர மனதில்லாமல் இருந்துவிட்டார். அப்படி சொன்னால் சுலோச்சனா கதி என்னவாகும் என்பதையும் உணர்ந்தார்.
சுலோச்சனா குடும்பத்தையே கூப்பிட்டு சந்தி சிரிக்கும் அளவுக்கு நியாயம் கேட்டுவிடுவார். அதனால் பச்ச உடம்புகாரியை எதுக்கு தேவையில்லாம காயப்படுத்த என மௌனமாகிவிட்டார்.
கருப்புச்சாமி கோவில் பூசாரியிடம் பாடம் போட்டும், திருநீர் மந்திருச்சும், சுத்தியும் போட்டுப் பார்த்துவிட்டார். இரண்டு திங்கள் குழந்தை படாதபாடுபட்டுப் போனான். கொழுக்கட்டை கணக்காக புஷ்டியாய் இருந்தவன் இளைத்து போனான்.
தொடர்ந்து வயிற்றுப் போக்காகவே இருக்க என்ன காரணம் தெரியாமல் சுலோச்சனாவுக்கு தரும் சாப்பாட்டில் கவனம் செலுத்தினார்.
சுலோச்சனாவுக்கு அந்த பயம் எதுவும் இல்லை. தாய்பால் மறக்க வைத்து புட்டிப்பால் கொடுக்கும் ஆரம்பம் காலத்தில் இப்படித்தான் குழந்தைக்கு உடல் ரீதியாக மாற்றம் வரும் என ஆலோசனை வழங்கட்டிருந்தது. அதனால் அன்றும் புட்டிப்பால் கலந்து குழந்தைக்கு தந்தார்.
உஷாராக கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தார். அவர் நேரம் தயாளன் வேலை என்று கதவை திறந்து வெளியே போனதை பார்க்காது விட்டார்.
அந்த வழியாக வந்த ராமாயி கதவு திறந்து இருந்ததால் பேரன் முகத்தை பார்த்துவிட்டு போகலாம் என உள்ளே வந்தவர், “சண்டாளி இப்படி கழுத்தறுத்திட்டியே” நெஞ்சைப் பிடித்து நின்றுவிட்டார்.
அந்த சம்பவத்துக்கு பின் மகன் மருமகள் இருவர் முகத்தையும் ஏறிட்டுக் கூட பார்க்க பிடிக்காமல்,
மாமனார் மாமியார் மற்றும் ராமாயி கல்யாணம் ஆனதில் இருந்து புருஷன் உசுரோடு இருந்த காலம் வரையில் வாழ்ந்த வீடு புதிதாய் கட்டிய வீட்டுக்கு பக்கத்தில் இருந்தது. புதிதாய் கட்டிய வீட்டில் குடிவந்தவர்கள் பூர்வீக வீட்டை பராமரிப்பதோடு விட்டுவிட்டார்கள்.
அதை சுத்தம் செய்யச் சொன்னவர், “நானு ஒரு ஆளுதான. சாகுற காலத்துக்கு அவங்க நினைவா இங்க கட்டையை சாத்திக்கறேன். எமன் கூட்டிட்டு போறப்போ போயிக்கறேன்” என கேட்பவர்கள் வாயை அடைத்துவிட்டார்.
தயாளன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டும், “அவதான் அசலு மறைக்க மனசு வந்திடுச்சு. நீ யாருடா எனக்கு. பத்து மாசம் சுமந்து பெத்தவ. ஒரு அடிகூட நாங்க வச்சது இல்லடா. நீ மறைச்சிட்ட பாரு. அடப்போங்கடா” மனசு இறங்கவே இல்லை அவர். பெத்த மவனுக்காவ புடிக்காத பொண்ணுன்னாலும் கட்டி வச்சோம். ஆனாக்கா இப்புடி ஒரு விஷயத்தை எங்கிட்ட இருந்து மறைச்சுப்புட்டானே பொண்டாட்டி சொல்லு கேட்டுன்னு நெஞ்சுக்குள்ள குத்துச்சு ஊசியாட்டம்.
அன்னம் பிறந்து அவளுக்கு காது குத்தி பெயர் சூட்டும் போதுதான் இருவர் முகத்தையும் பார்த்தார்.
“எல்லாமே இவர் இஷ்டம்தான். எனக்கு இங்க என்ன வேலை” மனம் வெதும்பி நின்றார். கோபம் விசமாக உறுமாறி மனதில் தேங்கி நின்றது.