ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

4.3
(13)

ஆரல் – 05

ரீனாவின் தந்தை, யாரா யார்.. எதற்காக அவள் இங்கு வந்திருக்கிறாள் என்பதை முழுவதுமாக ஆரோனிடம் கூற, அதைக் கேட்டவனோ யாராவை உன்னுடன் தனியாக பேச வேண்டும் என்று அவளை ரீனாவின் அறைக்கு அழைத்துச் சென்றவன், எதுவும் கூறாமல் அவளை இறுக கட்டி அணைத்து அவளுடைய நெஞ்சத்தில் அவன் முகம் புதைத்தான்.

அவன் செய்த இந்தச் செயலில் சட்டெனத் திகைத்தவள் அவனைத் தன்னிலிருந்து தள்ள முயற்சிக்க அவனோ,

“ஷ்ஊஊ.. கொஞ்ச நேரம் அமைதியா இரு.. நான் என்னோட ரீனாவோட இதயத்துடிப்ப கேட்க்கணும்னு ஆசைப்படுறேன்.. கொஞ்ச நேரம் சத்தம் போடாம இரு..” என்று அவளிடம் மென்மையாகச் சொன்னவன், மீண்டும் அவளுடைய நெஞ்சத்தில் அவனுடைய காதை அழுத்தமாகப் புதைத்தான் அவன்.

அவன் சொன்ன விடயங்கள் அவளுக்கோ புரிந்தாலும் ஒரு பக்கம், ஒரு ஆண் தன்னை இறுக்கி அணைத்ததும் அவளுடைய நெஞ்சத்தில் அவன் முகம் புதைத்திருப்பதும் அவளுக்கு இம்சையாக இருந்தது. அவனுடைய பிடியில் இருந்து அவளால் விலகவும் முடியவில்லை.

அதேசமயம் அவனுடைய அணைப்பில் அவளால் அடங்கவும் முடியவில்லை. இருதலைக்கொல்லி எறும்பாக அவளுடைய நிலை இருந்தது. ஆரோனோ அவளுடைய அவஸ்தையை புரிந்து கொள்ளாமல் ரீனாவின் இதயத்துடிப்பை கேட்கிறேன் என்று அவளுடைய நெஞ்சத்தில் அழுத்தமாகக் காதை வைத்த அந்த இதயத்தின் ஓசையை மிகத் துல்லியமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“லப் டப் லப் டப்..” கண்களை மூடி அந்த இதத்தை ரசித்துக் கொண்டிருந்தான்.

சில நொடிகளில் அவளுடைய இதயத்துடிப்பு ஏகத்துக்கும் அதிகரிக்க அதன் வேகத்தை உணர்ந்தவன், அவளை நிமிர்ந்து பார்த்து,

“இப்ப எதுக்காக இவ்வளவு பதட்டப்படுற இதயம் எவ்வளவு வேகமாக துடிக்குது தெரியுமா..? கொஞ்ச நேரம் அமைதியா இரு.. எத பத்தியும் யோசிக்காத.. நான் உன்ன எதுவும் பண்ண மாட்டேன்.. கொஞ்ச நேரம் என் ரீனாவோட இதயத்துடிப்பைக் கேட்டுட்டு நான் போயிடுவேன்..” என்றான் சாதாரணமாக. அவளுக்கோ எங்கு சென்று தன் தலையை முட்டிக் கொள்வது என்றே தெரியவில்லை. அவனுடைய பதிலில் அவளுக்கு கோபம் கூட வந்தது.

‘அட லூசு பயலே இதயம் வேணா உன்னோட ரீனாவோடதா இருக்கலாம்.. ஆனா நீ புடிச்சிருக்கிற உடம்பு என்னோடதுடா நானும் பொண்ணுதான் எனக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு.. இப்படி யாருன்னே தெரியாத ஒருத்தனுடைய அணைப்புல எப்படி என்னால நார்மலா இருக்க முடியும்.. இதுல அமைதியா இரு இதயத்துடிப்பு வேகமா துடிக்குதுன்னு வேற சொல்ற.. உன்னை என்ன பண்ணலாம்..’ என்று மனதில் தான் அவளால் திட்ட முடிந்தது.

வெளியில் அவனிடம் திட்ட முடியுமா..? அப்படி திட்டினால் இப்பொழுது வரை தன்னை இறுக அணைத்து இருப்பவன் இதை சொன்ன பின்பு வேறு ஏதும் செய்து விட்டால் என்ன செய்வது..? அதனால் விதியே என்று நினைத்து அவனுடைய அணைப்பில் அமைதியாக நிற்க முயன்றாள்.

முயற்சி மட்டும் தான் செய்தாள். ஆனால் முடியுமா..? பார்ப்போம். சிறிது நேரத்தில் அவளுடைய இதயத்துடிப்பு நார்மலாக மாற அவனுடைய இதழ்களிலோ சிறிய புன்னகை விரிந்தன.

பின் தன் தலையை நிமிர்த்தியவன் அவளுடையக் கண்களை பார்த்தான். அவனோ தன்னை மறந்து விழிகளை அவளுடைய விழிகளோடு கலக்க விட்டான்.

“இந்த கண்கள் எவ்வளவு அழகு தெரியுமா..? என் ரீனாவுக்கு அவ்வளவு அழகா இருக்கும் இந்த கண்கள்.‌. ஆனா, உன் மூஞ்சிக்கு இது நல்லா இல்ல.. வேற எதுவும் அழகு இல்லை.. இப்போ இந்த கண்கள் தான் உன்னோட மூஞ்சிய கொஞ்சம் அழகா காட்டுது..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க அவளோ அவனை முறைத்துப் பார்த்தாள்.

“என்ன முறைக்கிற.. அதுதான் உண்மை.. என் ரீனாவோட கண்கள் உனக்கு இருக்கிறதுனால தான் நீ கொஞ்சம் அழகா தெரிகிற..” என்றவன் எதைப் பற்றியும் யோசிக்காது சட்டென அவளுடைய இரு விழிகளிலும் முத்தத்தைப் பதித்தான்.

அதோடு மட்டுமா விட்டான் சட்டென குனிந்து அவளுடைய வலது பக்க மார்பில் முத்தம் பதித்தான். அவ்வளவுதான் யாராவிற்கு இருந்த கொஞ்சம் நெஞ்ச தைரியமும் பறந்து போய்விட்டது.

சட்டென தன்னிலிருந்து அவனைத் தள்ளி விட்டாள். அவனும் ரீனாவின் நினைவு சற்று தளர்ந்து போய் நின்றவன், அவளுடைய தள்ளலில் ஒரு அடி பின்னால் நகர்ந்து நின்றான். அப்பொழுதே அவனுக்கு தான் செய்த செயலின் வீரியம் புரிந்தது. ஆனாலும் அதை அவன் ஒத்துக் கொள்ளவா செய்வான்..? எதையும் கண்டுகொள்ளாது திமிராகவே அவளைப் பார்த்தான்.

அவளோ.. “என்ன பண்றீங்க நீங்க ஏதோ இதய துடிப்ப கேட்க ஆசைப்பட்டிங்கன்னு என்னை சகிச்சுக்கிட்டு பொறுமையா இருந்தா.. கொஞ்ச நேரத்துல என்ன என்னமோ பண்றீங்க..” என்று கேட்க,

அவனோ அவள் அருகே நெருங்கி வந்தவன், ரீனாவின் இதயம் இருக்கும் யாராவின் மார்பை சுட்டிக்காட்டியவன், “உனக்குள்ள என் ரீனா இருக்கா.. சோ நான் உன்னை எதுவுமே பண்ணல என்னோட ரீனாவை தான் நான் கிஸ் பண்ணுனேன்.. இனியும் பண்ணுவேன் உன்னால என்ன தடுக்க முடியாது.. இதுக்கு ஒரு நல்ல முடிவு என்னன்னா இதுக்கு அப்புறம் என் கண்ணுல நீ படாத.. அப்படி பட்ட என் கண்ணுக்கு ரீனாவா தான் தெரிவ.. சோ, எனக்கு என்ன தோணுதோ நான் செய்வேன்.. உன்னால என்ன தடுக்க முடியாது..” என்று அதிகாரமாகவே அவளிடம் கூறினான்.

அவளுக்கோ இது என்ன பைத்தியக்காரத்தனம் என்றுதான் தோன்றியது. ஆனாலும், அவனுடைய ஆளுமையில் சற்று மெய் சிலிர்த்துப் போனவள், எதுவும் கூறாது அவனை முறைத்து விட்டு அந்த அறையில் இருந்து வெளியேறிச் சென்றாள். அவனோ தன் தலைக் கேசத்தை அழுந்தக் போதியவன் அவள் பின்னாடியே வெளியே வந்தான். “அங்கிள், ஆன்ட்டி நான் கிளம்புறேன்.. சந்தியா பாய் டா.. “ என்றதும், யாராவை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான். அந்த ஒற்றை பார்வையில் உடல் கூசியது.

யாராவோ ‘என்ன ஒரு பார்வை அது ஆளை விழுங்கும் பார்வை.. காந்தம் போல் என்னை இழுக்கிறது.  இனி இவன் வழியில் நாம் செல்லவே கூடாது..’ என்ற முடிவை எடுத்துக் கொண்டாள் யாரா.

ஆரோன் அங்கிருந்துச் சென்றதும் தான் அவளால் அங்கு இயல்பாக இருக்க முடிந்தது. சந்தியா அவளைத் தொட அவளோ சட்டெனத் துள்ளி விழுந்தாள்.

“என்ன ஆச்சு டி.. ஏன் இப்படி பயப்படற..” என்று கேட்டாள் சந்தியா.

யாராவோ,“இல்ல ஒன்னும் இல்ல சந்தியா நீ டக்குனு தொட்டியா அதான் பயந்துட்டேன்.. வேற ஒன்னும் இல்ல..” என்று கூறிச் சமாளித்தாள்.

அதன்பின்பு அன்றைய நாள் முழுவதும் அவர்களுடனே கழித்துவிட்டு தன்னுடைய ஆசிரமம் சென்றாள் யாரா. அன்று இரவு தன்னுடைய படுக்கையில் படுத்திருந்த யாராவுக்கோ அன்றைய நாள் நடந்த நிகழ்வுகள் நினைவில் தோன்றின.

ஆரோன் அங்கிருந்து சென்றதும் சிறிது நேரம் கழித்து சந்தியா ரீனாவிற்கும் ஆரோனுக்கும் உள்ள காதலை இவளிடம் கூறியிருந்தாள்.

அதைக் கேட்டு அவளுக்கோ ஆச்சரியமாக இருந்தது.

“இரண்டு பேரும் எவ்வளவு அன்போடு இருந்திருக்காங்க.. அப்புறம் எதுக்காக இந்த ரீனா தற்கொலை செஞ்சுக்கிட்டாங்க.. என்ன பிரச்சனையா இருக்கும்.. ச்சை.. பாவம் அவர்.. தான் உயிருக்கு உயிரா காதலிச்ச ஒரு பொண்ணு திடீர்னு இல்லாம போனா.. எவ்வளவு கஷ்டமா இருக்கும்..” என்று அவர்களுக்காக வருந்தினாலும் அவன் இன்று அவளிடம் அத்துமீறியச் செயலை நினைத்துப் பார்த்தாள்.

அவனுடைய காதலுக்காக அவன் மேல் பரிதாபப்பட்டவள், அவன் தன் மேல் கொண்ட எல்லை மீறலில் அவனை திட்டவும் செய்தாள்.

“ என்னதான் ரீனா அவங்களோட காதலியா இருந்தாலும் அதுக்காக இன்னொரு பொண்ணு கிட்ட போயி அவங்க ரீனாவை தேட முடியுமா..? சரியான முரடன் டா.. என்னா பிடி… ச்சபா.. இனிமே அவன் திசைபாக்கம் கூட போகக்கூடாது..”

“அப்போ இதுக்கு முன்னாடி அந்த ஆள் திசைப்பக்கம் போனியா என்ன..?” என்று மனசாட்சி கேட்டாலும்,

“எனக்கு என்ன வேற வேலையே இல்லையா அந்த ஆளு பின்னாடி போறதுக்கு.. ஏற்கனவே என்னோட ஃபேவரிட் ஷால கிழிச்சவன் அவன்.. இன்னைக்கி என்ன அத்துமீறிதொட்டு இருக்கான்.. இதுல என்னன்னா இனி அவன் கண்ணு முன்னாடி நான் போகக்கூடாதாம்… போடா டேய்.. இவர் பெரிய ஹீரோ… சரியான லூசு பய..” என்று திட்டியவாறே தூங்கிப் போனாள் யாரா.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!