என ஒருபுறம் அவளின் கைப்பேசியில் உள்ள எஃப்எம்மில் பாடல் ஒலித்துகொண்டிருக்க பெண்ணவளோ மும்முரமாய் புற்களை அறுத்துகொண்டிருந்தாள்.
அதே நேரம் வானில் கருமேகங்கள் சூழ்ந்து தன் சோகத்தை மௌனமான மழையாக வார்க்க,
சின்ன சின்ன மழைத்துளிகள் பெண்ணவளின் பொன் மேனியை பட்டும் படாமல் தொட்டு உறவாட ஆரம்பித்தன. மழையில் தன் உடைகள் நனைய ஆரம்பித்ததும், மழையின் வேகம் அதிகரிப்பதை உணர்ந்தவள், அவளின் கைப்பேசியை எடுத்து நனையாதவாறு தாவணி முந்தியில் வைத்து இடையில் சொருகியவள். இவ்வளவு நேரம் அவள் அறுத்த புல்லுக்கட்டையும் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு சலசலவென நீரோடும் வாய்க்காலின் வழியாக அந்த தோட்டத்தில் இருந்த ஓலை குடிசைக்கு அருகில் வந்து மழைக்காக ஒதுங்கி நின்றாள். பயங்கரமாக காற்று வீச தென்னை மரம் எல்லாம் ஆடியது. அந்த இடத்தில் நிற்பதில் அவளுக்கு விருப்பம் இல்லைதான் இருந்தாலும் தற்போதைக்கு அவளுக்கு வேறு வழியில்லையே.
“மழை எப்போதான் நிக்குமோ தெரியலையே..! நேரம் வேற ஆயிடுச்சு..! அம்மா தேடுவாங்களே” என மனதிற்குள் நினைத்தபடி பெய்யும் மழையையே பார்த்துக் கொண்டிருந்தாள் செம்பருத்தி. அது ரசனையான பார்வை அல்ல. அவள் விழிகள் ரசிப்பதை மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. 23 வயது பருவ மங்கை. மாநிற தேவதை அவள். படிப்பு இடைநிறுத்தம் செய்து மீண்டும் கஷ்டபட்டு படிக்க ஆரம்பித்து இப்போதுதான் செவிலியர் படிப்பை முடித்திருக்கிறாள். முகத்தில் கவலையோ, பயமோ சிறிதும் கிடையாது. ஆண்களுக்கு நிகரான இறுக்கம் அவள் முகத்தில் அதிகமாகவே தெரிந்தது. அது அவளின் கடந்தகால கசப்பான நினைவுகளின் பரிசு. மருந்துக்கும் அவள் இதழ்கள் புன்னகைப்பதை மறந்திருந்தன. மீன் போன்ற விழிகளில் உயிர்ப்பு இல்லை. அவள் அணிந்திருந்த சாயம்போன நீல வண்ண தாவணியே அவள் வீட்டு ஏழ்மையை அழகாக எடுத்துச் சொல்லும். அவளின் இடை நீண்ட கூந்தலை அழகாக பின்னலிட்டு மடித்து ரிப்பனால் கட்டியிருந்தாள். கழுத்தில் கருப்பு நிற கயிறு, காதில் சின்னதாக பொட்டு போன்ற தோடு, கையில் இரண்டு பிளாஸ்டிக் வளையலும் அணிந்திருந்தாள். அடிக்கடி கண்ணாடி வளையல்கள் உடைந்து விடுவதால் அவள் அன்னை பிளாஸ்டிக் வளையல்களை வாங்கிகொடுத்திருந்தார்.
இவ்வளவு நேரம் மழையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு. தீடிரென தன் பின்னால் சூடான மூச்சுக்காற்றப்படுவது போல தோன்ற தன் கையில் வைத்திருந்த அறிவாளை எடுத்து சற்றும் யோசிக்காமல் பின்னால் நின்றிருந்தவனின் கழுத்தில் வைத்தாள்.
ஒரு நொடி அதிர்ச்சி அவன் முகத்தில் தெரிய… அடுத்த நொடியே சுதாரித்தான் அந்த ஊரில் மைனராய் சுற்றும் மருது.
பல்லை காட்டியபடியே “ என்ன செம்பா ஆள் தெரியாமல் கழுத்துக்கு அறிவாளை வச்சுட்டியோ” என ஒரு மார்க்கமாய் சிரிக்க…
அவனைப் பார்த்து முறைத்தவள் கழுத்தில் வைத்த அறிவாளை எடுக்காமலேயே “ஆளு தெரியாமல் தான் கழுத்தில் வைத்தேன். நீதான்னு தெரிந்திருந்தால் கழுத்தை அறுத்துறுப்பேன்” என்றால் திமிராக….
என்ன செம்பா வரவர ரொம்ப பேசுறியே..!
நீ என் கண்ணு முன்னாடி இருக்க இருக்க இன்னும் பேசுவேன். எப்படி வசதி..! என்றால் ஒற்றை புருவத்தை உயர்த்தி பல்லை கடித்தபடி…
நான் யாருன்னு உனக்கு தெரிந்தே பேசுறியே…!
தெரிந்ததால்தான் பேசுறேன்.
நாலு காசுக்கு வழி இல்லனாலும் திமிருக்கு குறைச்சல் இல்லை உனக்கு.
ஓஹ்…! பணம் இருக்கிற இடத்துல தான் திமிர் இருக்கணுமா என்ன..! அப்படி ஏதும் சட்டம் புதுசா வந்திருக்கா..?
ஆமா..! கஞ்சிக்கே வழி இல்லாத உனக்கு ஏண்டி இவ்வளவு திமிரு…
கஞ்சிக்கு வழியில்லனுதான் கடவுள் யாருக்கும் தலைகுனியக் கூடாதுன்னு திமிரை அதிகமா கொடுத்திருக்கிறார் போல…
சத்தமாக சிரித்தவன் “நேத்து தான் உன் அப்பன் என்கிட்ட பிச்சை எடுத்து குடிச்சான்.”
ஓஹ்…! பிச்சைக்காரனுக்கு பிச்சை போட்ட வள்ளலே அதை ஏன் என்கிட்ட வந்து சொல்றிங்க.
இந்த திமிர் பேச்சு என்கிட்ட வேணாம். என் வீட்ல வேலை செய்யகூட ஒரு தகுதி வேணும். அந்த தகுதிகூட இல்லாத உன்னை நான் கட்டிக்கனும்னு ஆசைப்படுறேன். அதுக்காவே நீ எனக்கு கோவில் கட்டி கும்பிடனும்.
கஞ்சிக்கே வழியில்லாத நான் எப்படி உங்களுக்கு கோவில் கட்டிகும்பிட முடியும் தர்மபிரபுவே.
ஏய் என்னடி நக்கலா…?
இந்த “டி” போட்டு பேசுற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத சங்க அறுத்துடுவேன்.
அறுப்படி அறுப்ப..! நீ இப்படி எல்லாம் என்கிட்ட பேசுறதுக்கு உன் அப்பன் மூலமா உன் கழுத்துல நான் தாலி கட்டலைன்னா பாரு..
பார்க்கலாம் பார்க்கலாம்…! என் அப்பா சும்மா தான் இருக்கார். வேணும்னா நீ அவரை கட்டிக்கோ.
“ஏய் நீ பேசுற வாய்க்கு சீக்கிரம் உன்னை என் கட்டிலுக்கு இரையாக்கலை என் பேரு மருது இல்லடி” என காலரை தூக்கி விட பதிலுக்கு செம்பருத்தி பேச வருவதற்குள் “செம்பா” என அவளை அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பினாள்.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடி வந்து அவள் முன் நின்றாள். அவளின் தோழியும், அத்தை மகளுமான கோகிலா.
“நீ ஏன் இப்படி ஓடி வந்து நிற்கிற…? மாட்டை தானே உன்னை பார்த்துக்க சொன்னேன்” என அவளை பார்த்தபடியே செம்பா கேட்க.
ஒரு எருமை இந்த பக்கம் வர்றதை பார்த்தேன். மழையும் வந்ததா அப்போ நீ கண்டிப்பாக அந்த எருமை இருக்கிற குடிசை பக்கம்தான் ஒதுங்கி ஆகணும். அதான் மாட்டை பக்கத்துல இருந்தவனங்ககிட்ட பார்த்துக்க சொல்லிட்டு உன்ன தேடி ஓடி வந்தேன். நான் நினைத்த மாதிரி அந்த எருமை இங்கே தான் வந்து இருக்கு” என்றால் மருதை பார்த்து முறைத்தபடி.
ஆமாடி..! அந்த எருமை ரொம்ப வாலாட்டுது.
வாலை ஒட்ட நறுக்கிய வேண்டியதுதானே செம்பா.
“என்னங்கடி இரண்டு பேரும் சேர்ந்து என்னையே கிண்டல் பண்றீங்களா, செம்பா நீ என் காலுல வந்து விழுகிற நேரம் சீக்கிரம் வரும்” என்றவன். செம்பருத்தியை முறைத்து விட்டு அந்த இடத்தை காலி செய்தான்.
கோகியும் செம்பாவின் தலையில் புல்லுக்கட்டை தூக்கி விட… மாட்டை அவிழ்த்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தனர் இருவரும்.
வரும் வழியிலேயே மாமரத்தில் மாங்காய் பறித்து தின்றபடியே வந்து கொண்டிருந்த கோகிலா “செம்பா நா உன்கிட்ட ஒன்னு கேட்கணும்” என்றாள்.
“கேளு”
“நம்ம ஊர் பெரிய வீட்ல எங்க அம்மா வேலை பாக்குறாங்கல்ல”
“ம்ம்ம்”
“அன்னைக்கு கூட நம்ம எல்லாரும் இருக்கும்போது அம்மா தோட்டத்து வீட்டை சுத்தம் பண்ண போறதா சொன்னாங்களே”
“ம்ம்ம்”
அம்மாவுக்கு கால் வலி அதிகமாகிடுச்சி. உனக்கே தெரியும். அதனால என கோகிலா இழுக்க….
அதனால்…?
“நம்ம ரெண்டு பேரும் போய் சுத்தம் பண்ணிட்டு வந்துடுவோமா” என பாவமாக கேட்டாள்.
செம்பா கோகியை முறைக்க…
“செம்பா உன்கிட்ட கேட்டால் உனக்கு கோபம் வரும்னு எனக்கு தெரியும். ஆனால் எனக்கு வேற வழி தெரியலை. அம்மாவால் முன்னாடி மாதிரி வேலை செய்ய முடியலை. அது மட்டும் இல்லாமல் அந்த பெரிய வீட்டு ஆத்தாகிட்ட முன்பணம் வாங்கின காசையும் செலவு பண்ணிட்டாங்க. இன்னும் மூனு நாள்ல திருவிழாவுக்கு வெளியூர்ல இருந்து ஆட்கள் வாறாங்களாம்.
வெளியூர்ல இருந்தா…?
ஆமா செம்பா. பாலா அண்ணாவும் அவங்க ப்ரெண்ட்ஸ் வாறாங்களாம் என கோகி சொல்ல…
அதை கேட்டதும் ஒரு நொடி தன் நடையை நிறுத்தியவள் பின் நடந்தாள்.
அதான் அதுக்குள்ள வீட்டை சுத்தப்படுத்த சொல்றாங்க. வேற யாரையாவது அனுப்பினால் அம்மா கையில இருந்து தான் பணம் கொடுக்கணும். இதே நீயும் நானும் போனால் பிரச்சனை இல்லை. அந்த பணத்தை நமக்கு வச்சுக்கலாம். நம்ம வேலைக்கு சேருறதுக்கு துணி வேற வாங்கனும்ல, அந்த செலவுக்கு ஆகும் செம்பா. அதுமட்டும் இல்லாமல் அங்கே யாரும் உனக்கு பிடிக்காதவங்க வர மாட்டாங்க. அந்த தோட்டத்தை பார்க்கிறவர் மட்டும்தான் இருப்பார் போகலாமா ப்ளீஸ்டி” என கெஞ்சினாள் கோகி.
செம்பாவிடம் பதில் இல்லை. சில கசப்பான சம்பவங்கள் அவள் மனதிற்குள் ஓட மௌனமாகவே நடந்து கொண்டிருந்தாள்.
அவளின் மௌனம் கோகிலாவுக்கு புரிந்தது.
“ உன் மனசுல என்ன நினைக்கிறன்னு எனக்கு புரியுது செம்பா” நாளைக்கு யோசிச்சு சொல்லு, இல்லன்னா வேற யாரையாவதுதான் அங்கே அனுப்பனும் அம்மா சொன்னாங்க.
“ம்ம்ம்” என்றாள்
அதற்கு மேல் இருவரும் எதுவும் பேசவில்லை வீட்டை நோக்கி நடந்தனர்.