“ சாமி கண்டதும் சாதி சனங்க சாமி ஏறி ஆடுது……
சாதி சனங்க கோடி சனங்க சாதி மறந்து கூடுது….”
“வாராரு வாராரு… அழகர் வாராரு…
சப்பரம் ஏறி வாராரு….
நம்ம சங்கடம் தீர்க்கப் போறாரு…”
என திரும்பிய இடமெல்லாம் மதுரையின் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக விளங்கும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் சிறப்பினை உணர்த்தும் வகையில் பாடல்கள் ஒலிக்க ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. ஊர் முழுதும் மனித தலைகளே தெரிந்தது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் கூட்டமாக வேடமணிந்து சென்று கொண்டிருந்தனர்.
வெளியூர்களில் இருந்து வரும் மக்களுக்கு மட்டுமில்லாமல் உள்ளூர் மக்களின் பசி தீர்க்க ஊர் முழுவதும் மக்கள் கணக்கில்லாமல் அன்னதானம் வழங்கிக் கொண்டிருந்தனர்.
சிறு குழந்தைகளை தோளில் சுமந்தபடி தந்தைமார்கள் சிரித்து மகிழ்ந்தபடி வைகையாற்று பாலத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
லட்சோப லட்சம் மக்கள் ஆரவாரத்துடன் பாலத்தின் மேலும் , கீழே தரைப்பாலத்திலும் நின்று அழகர் ஆற்றில் இறங்கும் காட்சியைக் காண ஆர்வத்துடன் நின்றிருந்தனர்.
தூங்கா நகரத்திற்கு என்றுமே மங்கா புகழ் சேர்ப்பது கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவமே.
இந்த சித்திரை திருவிழாவைக் காண சுற்று வட்டாரத்திலுருக்கும் ஊர்களில் இருக்கும் மக்கள் மதுரைக்கு படையெடுப்பார்கள்.
இன்றும் மக்கள் வெள்ளத்தில் நீந்திக் கொண்டு கள்ளழகரைக் காண மீனாட்சியின் கையைப் பிடித்துக் கொண்டு கூட்டத்தை விலக்கிவிட்டு நடந்தான் ஈஸ்வரன்.
” ஏய்…புள்ள …! கையை பத்திரமா புடிச்சுக்கோ. கூட்டத்துல அப்படியே தள்ளிட்டே போயிடுவான் உன்னை…..தொலைஞ்சி போயிடாதே…அப்புறம் உங்க அப்பாருக்கு என்னால பதில் சொல்ல முடியாதாக்கும்…” என தனது மீசையை முறுக்கியவாறே கூறினான் ஈஸ்வரன்.
அவனுடன் இணைந்து நடந்து கொண்டே…” ம்ம்ம்…அத ஏன் உம்ம மாமான்னு சொல்ல
கூடாதோ..” என நொடித்துக் கொண்டாள் மீனாட்சி.
அவளைத் திரும்பப் பார்த்தவன் பதிலொன்றும் கூறாமல் கூட்டத்தை விலக்கிக்கொண்டு நடந்துக் கொண்டே இருந்தான்.
” என்ன மாமா ஒண்ணும் பேச மாட்டிக்கிற..?” என்றாள் .
“உங்கப்பா ஊர்ல இல்லைங்குறதுனால உனக்கு ரொம்பவே வசதியா போச்சு… என்னையும் சேர்த்து அழகரை பாக்க இழுத்துட்டு வந்துபுட்ட…உங்க அப்பாவுக்கு மட்டும் தெரியட்டும்…இருக்கு உனக்கு கச்சேரி…” என சலித்துக் கொண்டான்.
“ ஆமா… இல்லையா பின்னே…என்னோட ஈஸ்வரனோட சேர்ந்து இந்த மீனாட்சி அவ அண்ணனை பாக்க வந்துருக்கால்ல… எம்புட்டு வருஷமாச்சு உங்கூட இப்படி ஊர் சுத்தி.. அதுவும் அழகர் ஆத்துல இறக்குறத பார்த்து…இந்த சென்மம் முழுதும் இது போதும் மாமா…. இன்னிக்கு பூராவும் இப்படியே இந்த மருதயை சுத்தி வரணும்…உன் கையை புடிச்சிக்கிட்டே தான் வருவேன்…” என் அவனிடம் செல்லங்கொஞ்சிக் கொண்டே வேர்க்க விறுவிறுக்க நடந்து வந்தாள் அவனுடைய செல்லக்கிளி மீனாட்சி.
அவளை தன் தன் தோளோடு இறுக்கி அணைத்தவன் ஒரு நிமிடம் அவளை ஆழ்ந்து பார்த்தவன் எப்போதும் போல் அவளது கயல்விழிகளில் வீழ்ந்தே போனான். மீளும் மார்க்கம் தான் அவனுக்குத் தெரியவில்லை.
“மாறாத அன்பு வச்ச மகராசி..
மறையாத எண்ணம் வச்ச மீனாட்சி…”
என்ற வரிகள் எங்கிருந்தோ அவனது செவிகளில் விழுந்து இன்னமும் அவளுள் தொலைந்து போக வித்திட்டது.
“ சீக்கிரம் வா மாமா…என்ன…? என்னைய புதுசா பாக்குற மாதிரி பாக்குற… பாலத்துக்கு அடியில போய் நிக்கனும்… எங்கிருந்து தான் இம்புட்டு சலனமும் வருதோ நம்ம அழகரைப் பார்க்க…” என சலிப்பாக கூறினாலும் அதில் ஊர் பெருமையே அதிகம் இருந்தது.
அவளை பத்திரமாக தனது தோளோடு அணைத்துக் கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்களுடன் மக்களாக கலந்து கூட்டத்தை விலக்கிக்கொண்டு கள்ளழகரை காண வைகை ஆற்றில் இறங்கி நின்றார்கள் ஈஸ்வரனும் மீனாட்சியும்.
தலை நிறைய நெருக்கமாக கட்டிய மல்லிகைச் சரத்தை தனது மாமனின் கைகளால் வாங்கி சூடிக் கொண்டு , பச்சை பட்டு பாவாடை மற்றும் அரக்கு நிற தாவணியில் எழிலரசியாய் இருந்தாள் மீனாட்சி. பால்
போன்று கள்ளங் கபடமில்லாத முகத்தில் சிறிய கல் மூக்குத்தி அவளது அழகினை இன்னும் தூக்கிக் காட்டியது. கரு கருவென கார்மேகக் கூந்தலில் மூடியிருந்த மல்லிகை என்றும் போல் ஈஸ்வரனை இன்றும் மயக்கியது.
“ அழகி டி ..நீ..” என மனதினுள் அவளை சிலாகித்து கொண்டான்.
ஆஜானுபாகுவான உடற்கட்டும், முறுக்கிய மீசையும் , அகன்றதோளும், கூரியப் பார்வையும் எதிரில் இருப்பவர்களை மிரளச் செய்தாலும் அவளுக்கு அவன் என்றுமே இறுகக் கட்டிக் கொள்ளும் கரடி பொம்மை போன்றவனே.
பல்லாயிர கணக்கான மக்களை விலக்கிக் கொண்டு தன்னவளை தோளோடு இறுக்கி அணைத்துக் கொண்டு பாலத்தின் கீழே இறங்கினான் ஈஸ்வரன்.
தங்கையின் ( மீனாட்சி – சுந்தரேஸ்வரர்) திருக்கல்யாணம் தான் வருவதற்குள் முடிவடைந்து விட்டதால் கோபித்துக் கொண்டு வைகையாற்றில் இறங்கும் வைபவமே அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு. அலங்காநல்லூரிலிருந்து தேனூர் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வைகையாற்றில் இறங்குகிறார்.
“வாராரு வாராரு அழகர் வாராரு
சப்பரம் ஏறி வாராரு
நம்ம சங்கடம் தீர்க்கப் போறாரு…” என பாடல் எங்கும் ஒலிக்க அழகர் வைகையாற்றில் இறங்கிக்கொண்டிருந்தார்.
“மாமா…மாமா…எனக்கும் அந்த தண்ணீ பீய்ச்சரது வேணும்…வாங்கித்தா…” என்றாள் மீனாட்சி.
“அதெல்லாம் வேணாம்…உடுப்பெல்லாம் ஈரமாகிடும்…” என மறுத்தான் ஈஸ்வரன்.
” ப்ளீஸ்….மாமா…”என தனது விழிகளை சுருக்கிக் கேட்ட விதத்தில் அவளின் கயல்விழிகளின் வீச்சினை தாள முடியாமல் எங்கிருந்தோ தோல் பையுடன் தண்ணீர் பீய்ச்சும் குழலை வாங்கி கொண்டு வந்து கொடுத்து விட்டான்.