உயிர் தொடும் உறவே -41

4.9
(8)

உயிர் 41:

 

பாண்டியன் மற்றும் புகழனியின் திருமண நாளும் வந்தது.

புகழினியிடம் பேசவே இல்லை பாண்டியன். இரண்டு முறை புகழினியும் பேச முயற்சித்தாள் ஆனால் பாண்டியனோ முகம் கொடுத்து பேசவில்லை.

அவளுக்கும் அடுத்தடுத்து வேலைகள் இருந்ததால் விட்டுவிட்டாள்.

பாண்டியனின் திருமணத்திற்கு வந்திருந்தனர் ‌ஆதி மற்றும் மீனாட்சி.

ஈஸ்வரன் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்து கொண்டிருந்தான்.

தங்கைக்கென்று அனைத்து வகையான சீர் வரிசைகளும்‌ எந்த ஒரு குறையும் இல்லாமல் செய்திருந்தான்.

புது வீட்டிற்கு கிரகப்பிரவேசத்தை மட்டும் முடித்திருந்தான்.

இருப்பினும் சில வேலைகள் முடியாததால் அங்கு குடிபோக முடியாத நிலை .

ஈஸ்வரனின் மனம் முழுவதும் நேஹாவைப் பற்றிய சிந்தனையை ஆக்கிரமித்திருந்தது.

புகழினி தனது திருமணத்திற்கு அவளை அழைத்திருந்தாள்.

நேஹா மும்பைக்கு வந்ததை ஈஸ்வரனிடமும் புகழினியிடமும் தெரிவிக்க வில்லை.

ஆதியும் ‌மீனாட்சியும் கூட அதனைப் பற்றி பேசாததால் ஈஸ்வரனுக்கு எந்த விபரமும் தெரியாமல் போயிற்று.

தாம்பூல பைகளை சரிப்பார்த்துக் கொண்டிருந்தவன் அருகில், “ ஹாய்…ஈஸ்வரன்..! எப்படியிருக்கீங்க..?”என்ற குரல் கேட்டவுடன் குற்றாலச் சாரல் வீசியது அவனது மனதில்.

வேகமாக திரும்பியவன் முதலில் ஆராய்ந்தது அவளது கால்களை தான்.

அந்த மக்கிற்கு அது புரியாமல் ,” என்ன பேச மாட்டீங்களா…? கீழ என்னத்தை தேடுறீங்கன்னு சொன்னா…நானும் தேடுவேன்ல….” என்றது.

வெளிப்படையாக தலையில் அடித்துக் கொண்டவன் , “ஒண்ணுமில்ல….நீ‌ உள்ளாற போ…வலது பக்க ரூம்ல புகழு இருக்கா…” என்றான்.

“ அய்யோடா…! ரொம்ப தான் பண்ணுறீங்க…எப்படியிருக்கீங்கன்னு கேட்டேன்…அதுக்கும் பதிலில்லை…அட்லீஸ்ட் நான் எப்படி இருக்கேன்னாவது கேக்கலாம் ல…” என்றவள் ஒரு பெருமூச்சுடன் , “அதுக்கெல்லாம் ‌ஒரு ‌கொடுப்பினை வேணும் போல…”எனப் புலம்பிக் கொண்டே சற்று சாய்ந்து சாய்ந்து நடந்தாள்.

அவள் செல்வதையே விழியகற்றாமல் பார்த்திருந்தவன், “பைத்தியகாரி…அதுக்குதேன் கால்ல பாத்தேன்….அது கூட புரியலை இவளுக்கு…”என முணுமுணுத்தான்.

சங்கர பாண்டியன் அமைதியாக அமர்ந்திருந்தார்.

மீனாட்சியும் கோமதியுமே அனைத்து வேலைகளையும் செய்தனர்.

வடிவாம்பாள் கழுத்து நிறைய நகைகளையும் , ஒரு‌ சாண் அளவிற்கு கெட்டி ஜரிகையில் பட்டுப்புடவை அணிந்து கொண்டு அங்குமிங்கும் வம்பு பேசிக் கொண்டிருந்தாரே ஒழிய சிறு துரும்பையும் கிள்ளி இங்கிருந்து அங்கு போடவில்லை.

வெள்ளை வேஷ்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்த பாண்டியனை ரசனையோடு பார்த்த வண்ணம் அவனருகே வந்து அமர்ந்தாள் புகழினி.

அரக்கு நிற தங்க இழையோடும் புடவையில் தேவதையென தன்னருகே அமரந்தவளை ஒரு கணம் பார்த்துவிட்டு மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தான் பாண்டியன்.

அவன் புறமாக லேசாக சரிந்து மெல்லிய குரலில்,

“ ரொம்பத்தேன் பண்ணுதீக….நைட்டுக்கு பாத்துகிடுதேன்…” என்றாள்.

அவனோ அவளை முறைத்து விட்டு, “சீ..போடி…”என முகத்தை திருப்பிக் கொண்டான்.

“ என்னது சீ…போடியா…? இருக்கட்டும் “ என நினைத்தவள் அவனது தொடையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.

“ ஆஆஆஆ…”என்று அலறினான் பாண்டியன்.

“ என்னாச்சு மாப்பிள்ளை…? ஏன் கத்துறேள்…?” என்றார் அய்யர்.

“எறும்பு அய்யரே…!கடிச்சிருச்சு…” என்றான்

“ அதை நசுக்கி அந்த பக்கம் ‌போட்டுடுங்கோ…இல்லன்னா திரும்ப கடிக்கப்‌ போறது…” என்றார் அய்யர் விவரம் புரியாமல்.

புகழினியை முறைத்துக் கொண்டே, “ இன்னிக்கு அந்த எறும்பை நசுக்காம விடப் போறதில்லை…” என்றான் ‌பல்லைக் கடித்துக் கொண்டு.

புகழினியோ அதையெல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லை.

மீனாட்சியுடன் வளவளத்துக்கு கொண்டிருந்தாள். லட்சுமியோ அவளது காதில்  ,” கொஞ்சம் உன் வாயை மூடிட்டு சபையை பாத்து நேரா உக்காரு…எப்பப்பாரு‌ வாயடிக்கறது…” என கடிந்து கொண்டார்.

அவரை முறைத்துக் கொண்டே முன்னால் திரும்பி‌ அமர்ந்தாள் புகழினி.

 

“கெட்டி மேளம்…கெட்டி மேளம்….”என அய்யர் கூற மங்கல வாத்தியங்கள் முழங்க புகழினியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு மனைவியாக்கிக் கொண்டான் பாண்டியன்.

அனைத்து சம்பிரதாயங்களை புகழினியுடன் வம்பு செய்யாமல் செய்தான்.

அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்றனர் மணமக்கள்.

நேஹாவும் பச்சை நிற பட்டுடுத்தி எளிமையான தோற்றத்தில் ஈஸ்வரனது மனதை கொள்ளைக் கொண்டிருந்தாள்.

வெள்ளை வேஷ்டி சட்டையில் முறுக்கு மீசையை நீவியபடி பேசிக் கொண்டிருந்தவனை ரசனையோடு தழுவியது நேஹாவின் அகன்ற விழிகள்.

ஒருவரையொருவர் மற்றவர் பார்க்காத போது ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதனையெல்லாம் ஆதியும் ‌மீனாட்சியும் பாரத்துக் கொண்டிருந்தனர்.

சங்கர பாண்டியனுக்கும் கோமதிக்கும் மனது நிறைந்து போனது.

முத்துக்காளையும் லட்சுமியும் கண் கலங்கிய படி நின்றனர்.

வம்பிழுத்துக் கொண்டும் படபடவென்று பேசி வாயடித்துக் கொண்டு இருக்கும் ஆசை மகள் ..இனி புகுந்த வீட்டில் குலம் தழைக்க வாழப்போகின்றாள் என ஒருபுறம் மனம் நிறைவாகவும் , தங்களை பிரிந்து செல்கின்றாள் என மறுபுறம்  ஏக்கமும் உண்டானது.

ஈஸ்வரனுக்கு தங்கை புகுந்த வீட்டிற்கு செல்கின்றாள் என்ற ஏக்கம் இருந்தது தான்.

வருத்தத்தை காட்டினால் புகழினியும் வருந்துவாள் என அமைதியாக நின்றான் அந்த பாசமிகு அண்ணன்.

இன்னுமின்னும் அவளுக்கும் அவளது குழந்தைகளுக்கும்‌ கூட சளைக்காமல் செய்வான் ஈஸ்வரன்.

கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தவன் அருகில் வந்து நின்றாள் நேஹா.

“ வாழ்த்துக்கள் ஈஸ்வரன்…தங்கைக்கு கல்யணாம் பண்ணியாச்சு…வீடும் கட்டியாச்சு…. சூப்பர்…உங்க மேல லவ் நாளுக்கு நாள் கூடிட்டே போகுது…என்ன பண்ண..?”என்றாள்.

அவனோ அவளை ஒரு ‌மார்க்கமாக பார்த்து விட்டு,  “ நீ…ஒண்ணும் பண்ண வேண்டாம்…” என்று கூறி விட்டு வெளியே சென்றான்.

அவளோ சலிப்புடன், “இவரை கரெக்ட் பண்ணவே முடியாதா..?”என் முணுமுணுத்து விட்டு வெளியே வந்தாள்.

அனைவரும் திருமணம் முடிந்து கிளம்பி கொண்டிருந்தனர்.

அனைவரையும் வழியனுப்பி வைத்து விட்டு வந்தான் ஈஸ்வரன்.

நேஹாவும் கிளம்ப வேண்டும் .

ஏதோ யோசனையுடன் அமர்ந்திருந்தாள். பின்னர் எழுந்து தனது பையுடன் வெளியே வந்தாள்.

கோமதியிடமும் சங்கர பாண்டியனிடமும் கிளம்புவதாக கூறினாள்.

“இன்னும் ரெண்டு மூணு நாள் இருந்துட்டு போகலாமே…அதுக்குள்ளாற கிளம்புதறேன்னு சொல்லுற?…” என உரிமையாக கோபித்துக் கொண்டார்.

சிரித்தபடி,” இல்லங்க கொஞ்சம் வேலை இருக்கு…அதான் கிளம்புறேன்…” என்று விடைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்தாள்.

எதிரே ஈஸ்வரன் வரவும் அவனிடம், “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்…”என்றாள்.

அவனது மனம் ஏற்கனவே நிறைகுடமாக எழுப்பிக் கொண்டிருந்தது.

இதில் அவள் வேறு பேச வேண்டும் என்று கூறியவுடன் வேண்டுமென்றே கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு, “என்னத்த பேசணும்…?” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.

அவளுக்கு ஏனோ மனம் நத்தையாய் சுருண்டது.

இருப்பினும் சமாளித்துக் கொண்டு, “ நான் ஊருக்கு கிளம்புறேன்…ஈஸ்வரன்…” என்றாள்.

அவளை ஒரு கணம்‌ பார்த்தவன் அவளிடம் மீண்டும் மீண்டும் தாவிய தனது பார்வையை தவிர்த்து கொண்டு இறுகிய குரலில்,” ம்ம்…போயிட்டு வா…” என்றான் பின்னந்தலையை கோதியபடி.

அவளுக்கோ வருத்தமாக இருந்தது.

“ இந்த ரெண்டு வருஷத்தல ஒரு நாள்…ஒரு நிமிஷம் கூட நான் உங்களை பாததிச்சது இல்லையா…? என் மேல துளி அன்பு கூட வரலையா…? சொல்லுங்க…இன்னும் எவ்வளவு நாள் நான் காத்திருக்கனும்…?மனசுல எவ்வளவோ ஆசை இருக்கு…ஈஸ்வரன்..”

என்றாள்.

ஈஸ்வரன் ஏதோ கூற‌ வரும் ‌முன்பே , “ ரொம்ப நாளெல்லாம் நீ காத்திருக்க தேவையில்லை நேஹா…”என்ற குரல் கேட்டது.

நேஹாவும் ஈஸ்வரனும் வேகமாக திரும்பிப் பார்க்க ஆதி தான் வந்து கொண்டிருந்தான்.

“ சார்…உன்னை விரும்ப ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு…உனக்காக தான் அவரு லண்டனுக்கே வந்தாரு. அதை ஏன் மறைக்குறாருன்னும் தெரியும்…” என்றவன் ஈஸ்வரன் புறம் திரும்பி, “நீ அவளை விருப்ப ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு… அதை ஏன் மறைக்குறன்னு சொல்லவா…?” என்றான்.

ஈஸ்வரன் பதிலேதும் பேசாமல் அழுத்தமாக நிற்கவே , ஆதியே தொடர்ந்தான்.

“அவளோட ஸ்டேட்ஸ்…அவளோட புகழ்…பணம்…அந்தஸ்து…அதானே…வசதியா வாழ்ந்த அவளால இந்த எளிமையான லைஃபை வாழ முடியாது…அதுக்கு பதிலா அவ வேற‌ யாராவது வசதியானவரா கல்யாணம் பண்ணிகிட்டா வசதியா வாழ்வான்னு தப்பு கணக்கு போட்டுட்ட ஈஸ்வரா.. எத்தனை கோடீஸ்வரங்க வந்தாலும் அவ திரும்பிக் கூட‌ பார்க்க மாட்டா.. அவளுக்கு நீ வேணும்…உன்னோட சொந்தங்கள் வேணும்… ஆயுசு முழுசும் உன் கூடவே இருக்கனும். அதுக்கு அவ என்ன பண்ணிருக்கா தெரியுமா…? “என்ற கேள்வியுடன் நிறுத்தினான்.

ஈஸ்வரனோ என்னவென்பதை போல ஆதியின் முகத்தை பார்த்தான்.

“ அவ தன்னோட எல்லா சொத்தையும் ட்ரஸ்ட்டுக்கும்…ஆதவரற்றவங்க அசிரமத்துக்கும் எழுதி வச்சிட்டா. கம்பெனியையும் ‌மீனாட்சி பேர்ல எழுதி வச்சிட்டா…அவங்க அப்பா அம்மாவோட ஆரம்ப கால கம்பெனியை மட்டும் தான் அவ வச்சிருக்கா. அதையும் மும்பைக்கு மாத்திட்டு வந்துட்டா…இப்ப அவ பெரிய தொழிலதிபர் நேஹா கிடையாது. சாதாரண ஆள் தான். கம்பெனில வர்ற லாபத்தை எல்லாம் மத்த நல்ல காரியங்களுக்காக முறைப்படியும் சட்டப்படியும் எழுதி வச்சிட்டு உன்னை…உன்னோட அன்பை மட்டும் தான் தேடி வந்துருக்கா…ப்ளீஸ்…அவ…” என்று ஆதி கூறும் முன்பே கையமர்த்தியவன் அவனைப் போ என்பதைப் போல சைகை செய்ய அவன் அங்கிருந்து நகர்ந்தான்.

சுற்றும்முற்றும் பார்த்தவன் யாருமில்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டு அவளருகே வந்தவன், “ஏன் இப்படி பண்ணுன…? “என்றான் அழுத்தமாக.

அவளோ அதற்கு பதிலளிக்காமல் ஆனந்த கண்ணீருடன், “நிஜமாவே என்னை விரும்புறீங்களா…? எனக்காக தான் லண்டனுக்கு வந்தீங்களா…? உங்களுக்கு என்னைய அவ்வளவு பிடிக்குமா…?என  அடுக்கடுக்காக கேள்விகளை கண்ணில் நீர் மல்கக் கேட்டாள்.

எதிர்பார்த்த அவனது அன்பு எதிர்பாராத விதமாக கிடைத்த பரவசத்தில் முகம் விகசிக்க பேசினாள்.

அவளது முகத்தையே சிறிது நேரம் ஆழ்ந்து பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை வேகமாக அவளது முகத்தை தன் புறமாக இழுத்து அவளது இதழ்களை அழுத்தமாக சிறைப்பிடித்தான்.

அத்தனை அழுத்தம் அவனது வன்மையான முத்தத்தில்.

அவளது கண்ணீரும் கூட அவனது உதட்டுக்கள் சென்றது.

தழும்பிய மனதுடன் இருந்தவன் அவளது அளவில்லா காதலில் கட்டுண்டு தான் போனான்.

இவ்வாறு அவள் செய்தது அவனுக்கு கோபத்தையும் வரவழைக்க அதற்கும் பலிகடாவானது அவளது மெல்லிய உதடுகள்.

உதடுகளை மெல்லப் அவளலிருந்து பிரித்து எடுத்தவன் அவளது முகத்தை தனது கரங்களால் ஏந்தி , “ என்ன டி…இப்படியெல்லாம் பண்ணி என்னை மயக்கலாம்ன்னு பாக்கிறியோ…? பைத்தியகாரியா நீயு…அந்த பணத்தை எல்லாம் சம்பாதிக்க எத்தனை பாடுபட்டுருப்பாக…? இப்படி சுளுவா தாரை வார்த்து கொடுத்துட்டு வந்துருக்க…” என்றான் நெற்றியோடு நெற்றி முட்டியவாறே.

அவளோ உணர்வுகளின் பிடியில் இருந்தாள். அவனாக கொடுத்த முதல் முத்தம்.

உதடுகளில் இருந்து இரத்தம் கசிந்தது. அவளது தேசத்தின் அளவு புரிந்ததினால் அத்தனை வன்மை அவனிடம்..

காமத்தை தாண்டி அவளின் அதீத காதலின் பாரத்தை தாங்க முடியாமல் இடம் பொருள் பாராமல் முத்தமிட்டு விட்டான்.

“ ஏன்‌ டி…. இப்படி…?”என்றவனின் குரல் கம்மி ஒலித்தது.

“ நீங்க வேணும்…உங்க உறவு வேணும்…நீங்க எல்லாரும் வேணும்…? கிடைக்குமா..?” என்றாள் .

தாங்க முடியாமல் மீண்டும் அவளது இதழ்களை முற்றுகையிட்டான் அந்த முறுக்கு மீசைக்காரன்.

“ஈஸ்வரன் மச்சான்…அந்த தாம்பூல…பை..”என்று அழைத்துக் கொண்டே வந்தவன் அங்கு கண்ட காட்சியில் உறைந்தே போனான்.

வார்த்தைகளை முழுங்கியபடி வந்த சுவடு தெரியாமல் திரும்பி நடந்தான்.

புகழினியும் ,  “அண்ணே…! அந்த தாம்பூல பை…” என்றவாறே ஈஸ்வரன் இருந்த இடத்தை நோக்கி சென்றவளின் கையை பிடித்து இழுத்தான் பாண்டியன்.

“ இந்தா கையை பிடிச்சி இழுக்குற வேலையெல்லாம்‌ வச்சிக்காதீங்க…அவ்வளவு தான்…சீ…போடியா…?இருங்க பாத்துக்கிறேன்…” என்றவள் திரும்பவும் நகரப் போக அவளது கைகளை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு அப்படியே அவளை சுவற்றில் சாய்த்தான்.

“ அங்கன கொஞ்ச நேரத்துக்கு போவாத…” என்றான் அவளின் முகத்தை பார்த்து கொண்டே.

“ஏன்…? நா அப்படித்தேன் போவேன்…எங்கண்ணனை கூப்பிடனும்…” என்றவாறே நகர முயற்சித்தாள்.

“ உங்கண்ணன் அங்கன கொடுத்தல் வாங்கல் பிரச்சனையில இருக்கான். அப்பறமா போ…” என்றான்.

“ நீங்க சொல்லி நான் என்ன கேக்கறது…ஒரு ‌மாசமா என் கூட பேசம தானே இருந்தீக தானே… உங்க கூட பேசவே கூடாது. ஃபர்ஸ்ட் நைட்டும் கிடையாது…” என முறைத்துக் கொண்டு நின்றாள்.

பாண்டியனோ அதற்கு மேல் கோபத்தை பிடித்து வைக்க முடியாமல் அந்தர் பல்டி அடித்து அவளிடம் சரணடைந்தான்.

ஆயிரம் சமாதானங்கள் கூறி அவளிடம் முதலிரவுக்கு கெஞ்சிக்

கொண்டிருந்தான்.

ஈஸ்வரனோ அவளுக்கும் அவளது இதழுக்கும் மெல்ல விடுதலையளித்து , “கல்யாணம் பண்ணிட்டு இங்கன வந்து என்ன பண்ணுவ..? உன்னோட வேலை..?” என்றான்.

அவளோ அவனது மீசையை முறுக்கி விட்டபடியே, “ ஏற்கனவே சொன்னேனே இங்க இருக்குற லேடீஸ்காக கைத்தொழில் அப்பறம் கைவினை பொருட்கள் செய்றதுக்கான டிரஸ்ட் ஆரம்பிக்க போறேன்னு…அதை பாத்துக்குறேன். அப்பறம் மாசத்துக்கு ஒரு வாரம் மும்பையில் இருந்து அம்மா அப்பாவோட கம்பெனியை மேற்பார்வை பார்த்துட்டு இங்க வந்துடுவேன்.. எல்லாத்தையும் கரெக்டா அரேன்ஜ் பண்ணிட்டு தான் வந்துருக்கேன்.. மீனாட்சி அங்க இருக்குற கம்பெனியை பாத்துப்பா.. வருஷத்துக்கு ஒருதடவை நம்ம அங்க போயிட்டு பாத்துட்டு வரலாம்..”என்றாள்.

“இவ்வளவு பண்ணனுமா…?”என்றான்.

அவளோ தலையை சிரித்தபடி, “உங்களுக்காக என்ன வேணாலும் பண்ணலாம்..  அதுக்கு மேலையும் ஒண்ணு பண்ணனும்…” என்றபடி அவனது மீசையோடு விளையாடினாள்.

” இன்னும் என்ன பண்ணனும்…?”‌

” நிறைய குழந்தைகளை பெத்துக்கனும்…”என்றபடி அவனை காதலுடன் பார்த்தாள்.

சிரித்தபடி அவளுடன் இணைந்து நடந்தான் ஈஸ்வரன்.

தனது பெற்றோரிடம் விவரத்தை தெரிவித்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கினான் ஈஸ்வரன்.

அடுத்த பதினைந்து நாட்களில் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது.

அடிதடியும் கெஞ்சலும் கொஞ்சலுமாக இனிதே முடிந்தது பாண்டியன் புகழினியின்‌ முதலிரவு.

பெண்‌ வீட்டின்‌ சார்பாக ஆதியும் மீனாட்சியும் நேஹாவிற்கு திருமணத்திற்கு தேவையான அனைத்தும் முன்னிருந்து செய்தனர்.

ஈஸ்வரனுடனான திருமண வைபவத்திற்கு ஒவ்வொரு நொடியையும் ரசித்து மகிழ்ந்தாள் நேஹா .

கையில் மருதாணி, அழகிய புடவைகள் கேலி கிண்டல்கள்..என‌ அனைத்தையும் அவளது மனப்பெட்டகத்தில் சேகரித்து வைத்தாள்.

திருமண நாளும் வந்தது.

அழகிய இளஞ்சிவப்பு பட்டுடுத்தி ஈஸ்வரன் அவளுக்கென்று வாங்கிய நகைகளை மட்டுமே அணிந்து அழகிய பதுமையென அவனருகே மணமேடையில் அமர்ந்தாள்.

மங்கல வாத்தியங்கள் முழங்க நேஹாவின் சங்கு கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னில் சரிபாதி ஆக்கிக் கொண்டான்.

நெற்றி வகிட்டில் குங்குமமிட்டு பொன் தாலியிலும் குங்குமமிட்டு நிமிர்ந்தான்.

நேஹாவிற்கு வானத்தில் பறப்பதைப் போலிருந்தது.

முத்துக்காளைக்கும் லட்சுமிக்குமே மனம் நிறைவாக இருந்தது.‌

வாழ்க்கையில் இரண்டாம் முறையாக வரும் காதலும்‌ கூட புரிதலுடன் கூடிய இன்பத்தை கொடுக்கும் என்பதை உணர்ந்தான் ஈஸ்வரன்.

இழந்ததை எண்ணி அங்கேயே தேங்கி விடாமல் அடுத்தடுத்து கடமையை செய்தவனுக்கு சுவர்க்கமே வரமாய் அமைந்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!