காளையனை இழுக்கும் காந்தமலரே : 19

5
(5)

காந்தம் : 19

உடனே காமாட்சி, மலரின் அறைக்குச் சென்று கூட்டிட்டு வந்தாள். வெஸ்டர்ன் உடையில் மட்டுமே பார்த்த, தனது மகள் இன்று சுடிதார் இருப்பதை பார்த்து விழித்தார் துர்க்கா. பொதுவாக மலருக்கு புடவை, தாவணி, சுடிதார் போடுவதில் பெரிதாக விருப்பம் இருந்ததில்லை. வெஸ்டர்ன் உடைகளையே அவள் விரும்பி அணிவாள். அவரும் அங்கிருந்தபடியால் அந்த நாகரீகத்துக்கு ஏற்றது போல் மகள் இருக்கிறாள் என்று எதுவும் சொன்னதில்லை. 

வெஸ்டர்ன் டைப் உடைய அணிந்தாலும், அதை பிறர் கண்ணை உருத்தாத வகையில் அணிவாள். அப்படிப்பட்ட தனது மகள் இங்கே சுடிதாருடன் இருப்பதைப் பார்த்து துர்கா அதிசயக்காமல் இருக்க முடியவில்லை. 

நிஷாவுக்கும் இதுவரை தான் பார்த்த மலர்மிக்கா மேடமா இது என்று சிந்தித்தாள். அவளுக்கு இந்த சுடிதாரில் இருந்த மலர்னிகாவை பிடித்திருந்தது. 

அவள் வந்ததும் முறைப்படி அவளை அங்கிருந்தவர்களுக்கும், அங்கிருந்தவர்களை அவளுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார் துர்க்கா. அப்படியே நிஷாவையும் அறிமுகப்படுத்தி வைக்க, காளையன் நிஷாவிடம், “நிஷா கண்ணு நீ கவலைப்படாதே. உனக்கு அத்தை மட்டுமல்ல நாங்க எல்லோருமே இருக்கிறம். ஒரு அண்ணனா நான் எப்பவும் உனக்காக இருப்பேன் நிஷா.” என்றான். அவனை பெருமையாக பார்த்தனர். 

அதன் பின்னர் எல்லோரும் சேர்ந்து கூடத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். குணவதியும் நேசவதியும் முதலில் பரிமாறி விட்டு அனைவரும் சாப்பிடுவதற்கு தேவையானவற்றை, எடுத்து வைத்துக் கொண்டு இருந்தனர். எல்லோரும் திருப்திகரமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு சேர்ந்து சாப்பிடுவதை பார்த்து மகிழ்ந்திருந்தனர். 

விசாகம் பாட்டியும் சாப்பிட்ட பின்னர், துர்காவையும் மலர் ரெஸ்ட் எடுக்க சொல்ல, அவரோ கொஞ்ச நேரம் இருந்து விட்டு செல்வதாக கூறினார். ராமச்சந்திரன், “சரி பேசிக்கொண்டிருங்க, மில்லில கொஞ்சம் வேலை இருக்கு போயிட்டு வந்துடறேன்.” என்று சொல்லி தேவசந்திரனையும் அழைத்துக் கொண்டு சென்றார். 

இதற்கிடையில் குணவதியையும் நேசமதியையும் உட்கார வைத்து உணவு பரிமாறிக் கொண்டிருந்தான் காளையன். எதுவும் பேசாமல் இதைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் மலர்னிகா. ஆனால் துர்க்கா தனது அம்மாவிடம்,” ஏன் அம்மா காளையன் ஏன் அண்ணிங்களுக்கு பரிமாறிட்டு இருக்கிறான்?” என்று கேட்டார். 

அதற்கு விசாகம் சிரித்துவிட்டு, “அதை ஏன் கேட்கிற துர்க்கா, அவன் அப்பிடித்தான். எப்பவும் அவங்க ரெண்டு பேருக்கும் பரிமாறிட்டுதான் அங்க இருந்து எழும்புவான். கேட்டா, அவங்க நமக்கெல்லோருக்கும் பரிமாறுறாங்க. அவங்களுக்கு நான் பரிமாறுறன்னு சொல்லுவான். பெண்களை மதிக்கிறதுக்கு அவன்கிட்ட தான் படிக்கணும் துர்க்கா. அதுக்கு இருக்கிறான் சபாபதி, ஐயோ அவனுக்கு பொண்ணுங்கனா வேலை செய்யத்தான் என்ற மாதிரி நடந்திக்குவான்.” என்று காளையனின் புகழ் பாடினார். 

அங்கிருந்த மலர்னிகாவிற்கு களைப்பாக இருக்க, அங்கிருந்து எழுந்து அவள் அறைக்குச் சென்றாள். சாப்பிட்டு முடிந்ததும் காமாட்சியும் நிஷாவும், காமாட்சியின் தோழி வீட்டிற்கு சென்றிருந்தனர். மலர்னிகா அங்கிருந்து சென்றதும் விசாகம்,” ஏன் துர்க்கா மலர் பாப்பா பேசாதா?” என்றார். சாப்பிட்டு விட்டு குணவதி, நேசமதி வர, காளையனும் அவர்களுடன் வந்து இருந்தான். 

ஒரு பெரூமூச்சை விட்ட துர்க்கா, “அம்மா எல்லாப் பிள்ளைகளையும் போல கலகல என்று சுத்திட்டு பேசிட்டு இருந்தவ என் பொண்ணு. அவங்க அப்பாவோட இறப்பு, கேசவனோட துரோகம் எல்லாம் அவளை மாத்திடுச்சி. மும்பையில இருந்த கம்பனியை பொறுப்பேத்ததுக்கு அப்புறம் இவ ரொம்ப மாறிட்டா. என்னை பணயமாக வைச்சி, அவளோட உழைப்பால் முன்னுக்கு வந்த அத்தனை கம்பனி, சொத்து எல்லாத்தையும் அந்த கேசவனோட பையன் முகேஷ் அவன் பேர்ல எழுதி வாங்கிட்டதும் மொத்தமாக உடைஞ்சி போயிட்டா. வாயைத் திறந்து எதுவுமே பேசுறதா இல்லை. பார்க்கலாம் எப்போ பேசுவானு?” என்றார். 

அதற்கு யாரும் பேசுவதற்கு முதல் காளையன் பேசினான்,”அத்தை. அவங்க பாட்டி சொன்ன மாதிரி மனஅழுத்தத்தில இருக்கிறாங்க. ஒரு பொண்ணா அவங்க நிறைய சாதிச்சிருக்கிறாங்க. நிச்சயமா அவங்க இதில இருந்து வெளியே வருவாங்க. புது இடம், நாங்க புது மனுஷங்க, அவங்க பழக டைம் வேணும்ல.” என்றார். அவன் சொன்னதை மற்றவர்களும் ஆமோதித்தனர். 

சபாபதியின் பிளாட்டில் மோனிஷாவும் சபாபதியும் பேசிக் கொண்டு இருந்தனர்.” சபா நீங்க எப்போ உங்களோட வீட்டில நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்ட விஷயத்தை சொல்லப் போறீங்க? “என்று அவனது தோளில் சாய்ந்திருந்தவாறு கேட்டாள் மோனிஷா. 

மோனிஷா இப்படி கேட்பாள் என்று எதிர்பார்க்கவில்லை சபாபதி. என்ன சொல்வது என்று யோசித்தவன், “மோனி கொஞ்ச நாள் போகட்டும், அதற்கு பிறகு வீட்டில சொல்லிக்கலாம்.”என்றான். அவளும் வேறு எதுவும் பேசவில்லை. 

அவள் அமைதியாக இருந்தாலும், சபாபதியின் மனசுக்குள் குழப்பமாக இருந்தது. “வீட்டிற்கு கல்யாண விஷயம் தெரிஞ்சா என்ன சொல்லுவாங்க? எப்படி நடந்துப்பாங்க? என்ன முடிவு எடுப்பாங்கனு?” யோசிச்சிட்டு இருந்தான். 

அவனது தோளில் சாய்ந்து இருந்தவாறே தூங்கினாள் மோனிஷா. அதைக் கவனிக்காமல் யோசித்துக் கொண்டு இருந்த சபாபதி, போன் ஒலிக்க அதை எடுக்க எழும் போது அவனது தோளில் சாய்ந்திருந்தவள், அவனது மடியில் விழுந்தாள். அருகில் இருந்த போனை எட்டி எடுத்தான். மோனிஷா தனது தூக்கத்தை தொடர்ந்தாள். 

சர்க்கரை ஆலையில் இருந்த வேலையைப் பார்க்க வந்த காளையன், டவுணுக்கு கொண்டு போகும் சர்க்கரை மூட்டைகளை பார்த்துக் கொண்டு இருந்தான். அப்போது மூட்டையை தூக்கி வந்த ஒருவர் தடுமாறுவதைப் பார்த்தான். உடனே வேகமாக அவர் அருகில் சென்று, ஒரு கையால் மூட்டையை பிடித்துக் கொண்டு, மறு கையால் அவரை தாங்கிப் பிடித்தான். 

அவரை தாங்கிப் பிடிக்கும் போது, அவரிடம் இருந்து வந்த சாராய வாசனை அவனுக்கு கோபத்தை உண்டாக்கியது. மூட்டையை கீழே வைத்து விட்டு, அவரை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டு வந்து, ஒரு இடத்தில் உட்கார வைத்தான். “ஏன் மாணிக்க அண்ணன் இப்படி பண்ணீங்க?” என்று அவரது வயசினால், அவனது கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டான். 

அதற்கு மாணிக்கம், “நான் வேணும்னு குடிக்கலை தம்பி, நான் வேலைக்கு வரும்போது ஊர்ல வடக்கு எல்லைப்பக்கமா ஒரு சாராய கடை திறந்திருக்கிறாங்க. அங்க இருந்தவங்கதான் வலுக்கட்டாயமாக பிடித்து வாய்ல சாராயத்தை ஊத்திவிட்டாங்க.” என்று வாய் குளறியபடி சொன்னார். 

அதைக் கேட்ட காளையன், அங்கிருந்தவர்களுள் ஒருவரை அழைத்து, மாணிக்கத்தை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, கோபத்தோடு புல்லட்டை எடுக்க, அதில் ஓடி வந்து ஏறிக் கொண்டான் கதிர். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!