நிதர்சனக் கனவோ நீ! : 8

4.8
(35)

அத்தியாயம் – 8

அடுத்த நாள் காலை ஒவ்வொருவருக்கும்  இனிதே விடிந்தது.

அதி காலையிலேயே எழுந்து தனது உடற்பயிற்சியை முடித்துக் கொண்டே மருத்துவமனைக்கு செல்ல தயாரானவன் வெளியில் வந்த சமயம் வித்யாவுடன் பிரதாபன் பேசிக் கொண்டு இருந்த காட்சியே முதலில் தென்பட்டது.

ஜெய் ஆனந்த்தைக் கண்டதும் வித்யாவின் முகம் நொடியில் மலர “என்னடா வந்ததுல இருந்து என்னை  பார்க்கணும்னு தோணவே இல்லைல” என்று கோவித்துக் கொள்ள…

 “அத்தை நானே வீட்டுக்கு வந்து பார்க்கலாம்னு நினைச்சேன் தேங்க் கோட் நீங்களே வந்துட்டீங்க” என்றதும் “அது சரி என்னவோ நீ லவ் பண்றனு கேள்வி பட்டேனே” என்று வித்யா கேட்க…

அவரை மென் புன்னகையுடன் பார்த்தவன் “நானே இன்னும்  அந்த பொண்ணுகிட்ட எதுவும் பேசல சோ பேசிட்டு கூடிய சீக்கிரமா குட் நியூஸ் சொல்றேன்” என்றான்.

மகனின் முகத்தில் தெரிந்த பூரிப்பு பிரதாபனின் அகத்தை நிறைக்க, மனதார அவனது காதல் நிறைவேற வேண்டும் என்று தனது குலதெய்வத்திடம் வேண்டுதல் ஒன்றையும் வைத்துக் கொண்டவர் “அப்போ இன்னைக்கி பேசிடுவியா?” என்று கேட்டார் பிரதாபன்.

“ஷோர் பா… ஈவ்னிங் பேசிட்டு சொல்றேன்” என்றவன் மருத்துவமனைக்கு கிளம்பி இருந்தான்.

காதலை சொல்லும் வாய்ப்பே அவனுக்கு கிடைக்க போவதில்லை என பாவம் அவன் அறிந்திருக்க வில்லை.

“ஜெய்யை என் மருமகனா வரணும்னு ரொம்பவே ஆசை பட்டு இருந்தேன் அண்ணா ஆனால் அவனுக்கு ஒரு பொண்ணை பிடிச்சு இருக்குனு சொல்றப்போ என்னால அவன்கிட்ட என்னோட விருப்பத்தை திணிக்க விருப்பம் இல்ல என்றவர் ஒரு பெரு மூச்சுடன்  விபீஷனுக்கு என்னோட பொண்ணை கட்டிக்க சம்மதம் சொல்வானா?” என்று இத்தோடு ஐந்தாவது தடவையாக கேட்கும் அவரிடம் “அவன் மில்லுக்கு கிளம்பிட்டான் வித்யா. அவன் வந்ததும் நீயே வேணும்னா  அவன்கிட்ட பேசிக்கோ” என்றவர் வெளியே செல்ல…. அதனைத் தொடர்ந்து சித்ராவுடன்  சேர்ந்து அருகில் உள்ள கோயிலுக்கு கிளம்பி இருந்தார்.

மில்லிற்கு வந்தவனுக்கோ கொஞ்சமும் இருப்பு கொள்ளவே முடியவில்லை.

ஜெய் ஆனந்த் அவனின் காதலை சொல்லி விடுவானோ? என்ற எண்ணம் அவனை நிலைகுலைய வைத்தது.

எதிலும் லயிக்க முடியவில்லை.

“ஷிட்…” என்று சொல்லிக் கொண்டே இருக்கையை விட்டு எழுந்தவன் அலைபேசியை எடுத்துக் கொண்டே வெளியில் கிளம்ப, அப்போது எனப் பார்த்து உள்ளே வந்த பிரதாபன் “விபீஷன் எங்கடா போற?” என்ற கேள்வி அவனை தடுக்க, சற்று குரலை செருமிக் கொண்டே “தலை வலிக்கிற போல இருக்கு பா வீட்டுக்கு கிளம்புறேன்” என்று சொன்னவன் நேராக சென்றது என்னவோ ஆஹித்யாவின் கல்லூரிக்கு தான்.

அங்கே சென்றவன் அவள் வெளியில் வரும் வரை நுழைவாயிலுக்கு அருகில் போடப்பட்டு இருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து இருந்தான்.

அவனின் தோற்றம் பார்ப்போரை சட்டென கவர்ந்து இழுத்துவிடும். அதற்கு ஏற்றாற் போல அவன் அமர்ந்து இருந்த தோரணைக் கூட அவனைக் கடந்து சென்ற பெண்கள் ஒரு கணம் நின்று பார்த்து விட்டே சென்று இருந்தனர்.

ஆனால், அங்கு அமர்ந்து இருந்தவனுக்கோ பலவித யோசனைகள் வலம் வந்த வண்ணம் இருக்க, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தான் அவனது சிந்தையோ வேகமாக கணக்கிட்டு கொண்டு இருந்தது.

யோசித்துக் கொண்டு இருந்தவன் சட்டென தன் அருகில் யாரோ வந்தமருவது போல இருக்க பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்தவன் திகைத்து விழித்தான்.

“என்ன மாம்ஸ் செம்ம ஷாக் ஆகிட்டீங்க போல” என்று ஒற்றைக் கண் அடித்து கேட்டது வேறு யாராக இருக்க முடியும் சாட்சாத் பவ்யாவே தான்.

ஆஹித்யாவுக்கும் பவ்யாவிற்கும் ஒரு வயது வித்தியாசம் என்பதாலோ என்னவோ அடுத்தடுத்த வருடங்களிலேயே இதுவரைக்கும் ஒரே கல்லூரியில் இடம் கிடைத்தும் இருந்தது.

சலிப்பாக நெற்றியை நீவிக் கொண்டே தன் பார்வையை  திருப்பிக் கொண்டவன் “இதோ பார் நானே செம்ம டென்ஷன்ல இருக்கேன் சோ வெறி ஏத்தாமல் கிளம்பு” என்றான்.

யாரும்  அவனைப் பார்த்தால் சாதாரணமாக பேசிக் கொண்டு இருப்பதைப் போல தான் தோன்றும்  ஆனால் அவனின் பேச்சிலேயே அனல் தெறித்துக் கொண்டு இருந்ததை அருகில் இருந்தவளைத் தவிர யாருக்கும் தெரிய வாய்ப்பில்லையே…

“ஷப்பா… முடியல என அவன் புறம் நன்றாக திரும்பி அமர்ந்தவள் இதோ பாருங்க மாம்ஸ் தெரிஞ்சோ தெரியாமல் இன்னைக்கு காலேஜ் வந்து என்னோட கண்ணுல பட்டது ஒரு பக்கம் இருக்கட்டும் அதெப்படி உங்களை அப்படியே விழுங்குற போல வெறிக்க வெறிக்க பார்த்திட்டு போறாளுங்க. நீங்களும் பேசாம இருக்கீங்க” என்றாள் இறுகிய குரலில்…

கோபத்தில் பற்களைக் கடித்தவன் “ஷட் அப் பவ்யா” என்றவன் சட்டென எழுந்து கொள்ள… அவளோ அவனின் இறுகிய குரலில் திடுக்கிட்டவள் எழுந்து நின்றவன் கையை எட்டிப் பிடித்து இருந்தாள்.

அவ்வளவு தான். சும்மாவே அழுத்தத்தில் அமர்ந்து இருந்தவன் இப்போது இவளின் கொடைச்சலில் பொறுமை இழந்தவன் அவளின் கன்னத்தில் இழுத்து அறைந்து இருந்தான்.

நல்லவேளை யாரும் இக் காட்சியை பார்க்கவில்லை.

விண்விண்ணென்று வலித்த கன்னத்தை பிடித்துக் கொண்டவள் கலங்கிய விழிகளுடன் அவனை உறுத்து விழித்தாள்.

“நானும் பார்த்துட்டே இருக்கேன் ஓவரா என்கிட்ட அட்வான்டேஜ் எடுத்திட்டு இருக்க. இதுவே லாஸ்ட் ஆஹ் இருக்கட்டும்” என சுட்டு விரல் நீட்டி எச்சரிக்க, அவளோ தொண்டை வரை பேச வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டவள் அவன் முன் வெடித்து அழுது விடுவோமோ என அஞ்சி திரும்பியும் பாராமல் சென்று இருந்தாள்.

போகும் அவளை வெறித்தவனுக்கு சட்டென கை நீட்டி அறைந்தது ஏதோ போல் இருக்க “ஷிட்” என்ற படி நிலத்தை காலால் ஓங்கி உதைத்தவன் தன் பின்னால் கேட்ட குரலில் சுயம் அடைந்து திரும்ப, அங்கு நின்று இருந்தது என்னவோ ஆஹித்யா தான்.

அவளை அறைந்த விடயத்தை அதற்குள் ஆஹித்யாவிடம் கூறி இருப்பாளோ என்ற எண்ணத்தில் அவன் கேள்வியாக அவளைப் பார்த்து இருக்க, அவளோ சாதாரணமாக “என்… என்னை பார்க்கணும்ன்னு வர சொன்னீங்களாமே” என திக்கித் திணறி அவள் கேட்க….

சற்று ஆசுவாசமடைந்தவன் “எஸ் பேபி” என்றானே  பார்க்கலாம்.

அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டவள் மனதிலோ “எதே பேபியா?….ஒவ்வொரு நாளும் டிசைன் டிசைன் ஆஹ் பேசுறானே”  எனத் தனக்குள் சொல்லிக் கொண்டவள் விழித்துக் கொண்டு நிற்க….

அவனோ, அவளின் முகத்தின் முன் சொடக்கிட்டவன் “என்னடி அப்படியே நிக்கிற கிளம்பு” என்று சொல்ல…

“என்ன கிளம்பனுமா? எங்க?” என்றாள் அதிர்ச்சியாக…

“என்கூட வா சொல்றேன்” என்றான்.

“அப்படி எல்லாம் என்னால வர முடியாது” என்றாள் பதற்றமாக…

“வை பேபி?”

“இப்போ இன்டர்வல் சோ அதுனால தான் பேசிட்டு நிக்கிறேன் இன்னும் டென் மினிட்ஸ்ல கிளாஸ்ல இருக்கணும்” என்றாள்.

“சோ இதுதான் ப்ராப்ளமா?”

“எஸ்… என்று இழுவையாக சொன்னவள் பட் இருந்தாலும் நான் வரல”

“பிளீஸ் பேபி உன்கூட நான் பேசணும்” என்று சொல்ல…

“எதுக்காக புதுசா பேபின்னு எல்லாம் கூப்பிடுறீங்க  என்று கேட்டவள் குரலை செருமிய படி வீட்டுக்கு போனதும் பேசிக்கலாம்” என்று சொல்ல…

“ஏன் நான் எதுக்காக சொல்றேன்னு உனக்கு புரியலையா இல்ல புரியாத போல நடிக்கிறியா? என்று கேட்டவன் அவளின் திகைத்த தோற்றத்தைப் பார்த்து விட்டு ப்ச்…ரொம்பவே முக்கியமான விஷயம் பேசணும் பேபி பிளீஸ் காப்ரேட் மீ” என்று சொல்ல…

முக்கியமான விடயம் என்றதும் மனது பிசைய, “ம்ம்… வெயிட் பண்ணுங்க பெர்மிஷன் கேட்டுட்டு வரேன்” என்று அவனிடம் சொன்னவள் நேரே  அதிபரின் அறையை நோக்கி விரைந்து இருந்தாள்.

நொடியில் தனக்குள் தோன்றிய திட்டத்தை செயல்படுத்த துணிந்து இருந்தான் விபீஷன்.

அவனால் ஒன்றை மட்டும் தெள்ளத் தெளிவாக ஊகிக்க முடிந்தது.

தன்னால் அவள் தடுமாறுகின்றாள் என்று உணர்ந்து கொண்டவனுக்கு இதழ்கடையோர மெல்லிய கர்வப் புன்னகையும் தோன்றி மறைந்தது.

ஒரு பெண்ணை காதலால் உணர வைக்காமல் அவளின் உணர்வுகளில் விளையாடுவது எத்தகைய பாதக செயல் என அவனின் சிந்தை சிந்திக்க மறுத்து இருக்க, எங்கனம் உணர்வான்?

அடுத்த சில நிமிடங்களில் அனுமதி கேட்டு விட்டு வந்தவளின் கையை பற்றியவன் அவளை அழைத்துச் சென்றது என்னவோ அடுத்த தெருவில் உள்ள விநாயகர் கோயிலிற்கு தான்.

அவளுக்கோ இப்போதே உதறல் எடுக்க ஆரம்பித்து இருந்தது.

கோயில் சன்னதியில் விழிகளை மூடி கை கூப்பி வணங்கிக் கொண்டு நின்று இருந்தவனை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவள் “விபீஷன்” என்று அழைத்து இருந்தாள்.

விழிகளைத் திறந்து பக்கவாட்டாக நிற்கும் அவளை பார்த்தவன் புருவம் உயர்த்தி என்ன என்ற ரீதியில் கேள்வியாக நோக்க, “என்ன விஷயம்? யாருக்காவது…” என்று பேச எத்தனித்தவளின் செவியில் சற்றே குனிந்து “ஐ லவ் யூ பேபி” என்றவன்  தன் காதலை சொன்ன அதே கணம், அதை அவள் முழுதாக கிரகிக்கும் முன்னரே அவளின் சங்கு கழுத்தில் தாலிக்கயிற்றை அணிவித்து மூன்று முடிச்சிட்டிருந்தான்.

அதே சமயம் அவசரமாக  அவர்களை நோக்கி சுவாமி சன்னதிக்கு வந்த ஜெய் ஆனந்த்தோ விபீஷன் செய்த செயலில் உறைந்து நின்று விட்டான்.

இதயமோ வெடித்து விடுவது போல படு பயங்கரமாகத் துடித்தது.

 உடன் பிறந்தவனின் செயல் சத்தமில்லாமல் அவனின் இதயத்தை சுக்குநூறாக நொறுக்கி இருந்தது.

உயிருக்கும் மேலாக காதலிக்கும் பெண்ணின் திருமணத்தை கண் முன்னே காண்பது எவ்வளவு பெரிய நரக வேதனை என அக்கணம் உணர்ந்தான்.

யார் சொன்னது ஆண்கள் அழக் கூடாதென?

ஆம், அழுதான் அந்த ஆறடி ஆண்மகன்.

நிலைக் கொள்ள முடியாமல் அருகில் இருந்த நிலை சுவரில் சரிந்து விழிகளை மூடிக் கொண்டவன் கன்னத்தில் கண்ணீரோ நில்லாமல் வழிந்தது.

சட்டென அருகில் கேட்ட “அண்ணா” என்ற  விபீஷனின் குரலில் வியப்பின் உச்சிக்கே சென்றவன் சட்டென விழிகளைத் திறந்தான்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 35

No votes so far! Be the first to rate this post.

1 thought on “நிதர்சனக் கனவோ நீ! : 8”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!