மான்ஸ்டர்-1

4.6
(10)

கேப்பச்சினோ-1

மதுரை மரக்காணத்தில் இருக்கும் கலைக் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் ஆட்டம், பாட்டமாக அந்த நாளை கொண்டாடிக்கொண்டிருந்தனர். பின்னே இருக்காத அந்த கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு அன்று கடைசி பரிட்சை. அதனை வெற்றிகரமாக முடித்துவிட்டு தான் இப்போது ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். அதே நேரம் அவர்கள் முகத்தில் ஒரு பக்கம் சோகம் வேறு வழிந்தோடியது.

பின்னே மூன்று ஆண்டுகளாக ஒரே வகுப்பில் படித்து, ஒன்றாக சுற்றி, ஆட்டம், பாட்டம், ரகளை, சண்டை என்று எவ்வளவு கண்டுக்கழித்து இனிமையாக வாழ்ந்திருப்பார்கள் அந்த நண்பர்கள் இன்று பிரியப்போகிறார்களே அதனை நினைத்து அவர்களுக்கு கடினமாக தானே இருக்கும். ஆனாலும் ஒன்றாக சுற்றும் இந்த இரண்டு மணி நேரத்தை அழுது, புரண்டு, இம்சையாக்கி சுற்ற வேண்டாம் என்று நினைத்து தான் அந்த மாணவர்கள் சந்தோஷமாக ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர்.

ஆனால் இதனை எல்லாம் பார்த்தவாறே ஒரு மரத்தடியில் சோகமே உருவாக உட்கார்ந்திருந்தாள் மைத்ரேயி.

மைத்ரேயி ஐந்தரை அடி அழகு சிற்பம். நல்ல சிவந்த நிறத்தில் அழகாக காட்சியளிப்பாள். அவளை பார்க்கவே கண் கோடி வேண்டும் என்றும் அளவிற்கு அழகு சொற்பனம். இன்னொரு பக்கம் அப்படி டெடி பியர் போல வடிவமாக கொலுக்கென்று இருப்பவளை யாருக்குத்தான் பிடிக்காது.

அந்த கல்லூரியில் அவளிடம் ப்ரோபோஸ் செய்யாத ஆடவர்களே கிடையாது. ஏன் பல பயிற்சி ஆசிரியர்கள் கூட அவளிடம் தங்களின் காதலை பற்றி கூற. அவளோ அதற்கெல்லாம் மசிவதாகவே இல்லை. அழுத்தக்காரி எல்லாம் இல்லை. அப்படியே பிள்ளை மனம் கொண்டவள். சூழுவாது தெரியாது. ஆனால் தான் இருக்கும் நிலைக்கு காதல் அவசியமா என்று மட்டும் நன்றாக தெரியும். ஏனென்றால் அவள் வளர்ந்த, வளர்கின்ற சூழ்நிலை அப்படி.

மைத்ரேயின் வாழ்க்கை முறைதான் கொஞ்சம் இல்லை இல்லை நிறையவே கஷ்டமானது. அதற்காக கஷ்ட ஜீவனம் எல்லாம் இல்லை. அவள் குடும்பமே நல்ல வழமையான குடும்பம் தான். அப்படிப்பட்டவளுக்கு என்ன கஷ்டம் என்று தானே கேட்கின்றீர்கள். இருக்கின்றதே அன்னை இல்லாததே ஒரு மிகப்பெரிய கஷ்டம் தானே. அதனை தான் அவளும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றாள்.

மைத்ரேயின் அம்மா கோசலா. நல்ல குணம் படைத்தவள் ஆனால் அவளுக்கோ நல்ல குடும்பமோ, நல்ல திருமணமோ, அதற்கும் மேல் நல்ல கணவனோ அமையவே இல்லை. ஆம் கோசலாவிற்கும் மைத்ரேயி போல அன்னை இல்லை. அப்பாவும் அதிக கோவில், பக்தியில் ஈடுபாடு கொண்டவர். அதனால் கோசலாவை அவசர அவசரமாக பதினாறு வயதில் மதுரையில் பெரிய மரப்பட்டறை வைத்திருந்த மாணிக்கவாசகருக்கு திருமணம் செய்து வைத்தார்.

மகளை திருமணம் செய்து வைத்த கையோடு தன் சொத்துக்கள் அனைத்தையும் தன் மகளிற்கும், அவளது வாரிசிற்கும் உயில் எழுதி வைத்த மைத்ரேயின் தந்தை அடுத்த நாளே அந்த ஊரினை விட்டு பக்தி யாத்திரை சென்றுவிட்டார். அதுவும் திரும்பவே வரமாட்டேன் என்ற வார்த்தையுடன் தான். கோசலா தந்தையின் மீது சிறுவயதிலிருந்தே அதிக பயத்துடன் இருந்ததால் அவளோ தன் தந்தையை தடுக்கவே இல்லை.

அவளின் அப்பா போனது போனது தான். திரும்பவும் வரவே இல்லை. போனவரை எண்ணி கோசலா தான் வருந்துவாளே தவிர வேறு யாரும் கண்டுக்கொள்வது கூட இல்லை. மாணிக்கவாசகனோ அதுவரை உள்ளூரில் தொழில் வைத்து நடத்தியவனுக்கு தன் மாமனார் கொடுத்த சொத்துக்கள் உறுத்த, பத்தாதற்கு தன் மனைவியின் அறியாமை, பயம் வேறு அவருக்கு சாதகமாக இருக்க மனைவியிடம் ஆசையாக, அன்பாக, அனுசரணையாக பேசியவரோ கொஞ்சம் கொஞ்சமாக மனைவியின் மீதிருந்த சொத்துக்களை தன் மீது மாற்றிக்கொண்டார்.

அதற்கு அவருக்கு முழு உடந்தையாக இருந்தது அவனின் அன்னை ரமணி தான். “வூட்டுலையே கிடந்து அவியிரவளுக்கு எதுக்கு சொத்துன்றேன்.. நீ சொகுசா இருக்கதானே அவனும் சொத்த கேக்குறான் குடுத்தா குறையவா போற..”நீட்டி முழங்கியவர் திருமணம் ஆகிய ஒற்றை வருடத்தில் அனைத்து சொத்தையும் தன் மகனின் பேருக்கு மாற்றிக்கொண்டார்.

மாணிக்கம் அதன் பிறகு சும்மா இல்லை.. “இங்கனையே கெடந்து தொழில வளக்க முடில.. புதுசா ஒரு தொழில கத்துக்க லண்டன் வர போறேன். வர எப்டியும் மாசக்கணக்கு ஆவும்.. அதுவர பாத்து சூதானமா இரு..”மூன்று மாத கருவை சுமந்துக்கொண்டு நிற்கும் தன் மனைவி கோசலையிடம் கூறியவறோ தன் அன்னையிடமும் அதே பதிலை கூறி பறந்துவிட்டார் லண்டனுக்கு.

கோசலைக்கோ அல்லது ரமணிக்கோ லண்டன் எந்த பக்கம் இருக்கின்றது என்று கூட தெரியாது. ஏதோ தன் கணவனும், தன் மகனும் நல்ல முறையில் தொழிலை வளர்க்க செல்கின்றான் அதனால் அதில் தலையிட்டு வளர்வதை தடுக்க வேண்டாம் என்று அமைதியாக இருந்துவிட்டனர் இருவரும்.

ஆனால் மாணிக்கவாசகம் லண்டன் சென்று ஒரு மாதம் அல்ல இரண்டு மாதம் அல்ல முழுதாக மூன்று வருடம் ஓடிவிட்டது. அவனிடம் ஆரம்பத்தில் தொலைபேசி அழைப்பாவது வந்துக்கொண்டிருக்க.. ஒருவருடத்திற்கு பின் அதுவும் இல்லாமல் போனது.

அதனை நினைத்து பெற்றவளுக்கும், மாணிக்கத்தின் சரிபாதிக்கும் நெஞ்சே வெடிப்பது போல பயம் கவ்வியது. ஆனால் இருவருக்கும் எங்கே, யாரை. எப்படி பார்த்து மகனை பற்றி விசாரிப்பது என்றே தெரியவில்லை.

அத்தே இன்னும் அவர காணலையேத்த.. எங்கன போயிருப்பாறோ தெரிலையே..”கோசலாவின் கீச்கீச்சான பய குரல் அந்த தாயிக்கும் வயிற்றை குடையதான் செய்தது. ஆனாலும் அதற்கு என்ன வழி என்றே தெரியவில்லை. ஆரம்பத்தில் கோசலாவிடம் அதிக மாமியார் கெடுபிடிகள் போட்டவருக்கு கோசலாவின் அமைதியும், சாந்த சொரூபமும், வெகுளியும் கப்பென்று வாயை மூட வைத்திருந்தது.

ஆத்தா.. அத எடுத்தாத்தா..”என்று அன்போடு தான் கோசலாவை அழைப்பார். அவரின் இந்த பாசமழை மற்றவர்களுக்கு கண்களை உறுத்ததான் செய்தது.

ஆனாலும் ரமணி நீ உன்ற மருமக கிட்ட இந்தா சுலூவா இருக்க கூடாது. இதுவே நாள பின்ன உன்ன அவ வெளில தள்ளுறதுக்கு சுலபமா போய்டாது.. சூதானமா இருக்கமாட்டியா நீ..”என்றவர்களை அனல்விழியுடன் முறைத்தவறோ…

வந்துட்டாளுங்க வக்கனையா வக்கன பேச.. என்ற மருமவக்கிட்ட நான் சுலுவா இருந்தா உனக்கென்ன இல்ல கொடுமை செஞ்சா உனக்கென்னடி… உன் கொல்லிக்கண்ண கொண்டாந்து வச்சிப்புட்டியா இனி வெளங்குன பாடுதேன்.. ராவுக்கு சுத்திப்போடனும் என்ற பேத்தியையும், மருமவளையும்.”சில்லாகித்துக்கொண்டவாறே ரமணி பேச.. பேசவந்தவர்களோ அவரின் வாயிற்கு பயந்தே ஓட ஆரம்பித்துவிட்டனர்.

கோசலா மீது எந்த அளவிற்கு பாசமோ அதே அளவிற்கு அவர் பெற்ற மகளான மைத்ரேயின் மீதும் அளவில்லா பாசம் கொட்டியது அந்த கிழவிக்கு.

என் செல்லம்மாயி, என் பட்டம்மாயி, என் ராக்காயி..”என்று எந்நேரமும் வெண்ணெயில் குழைத்தெடுத்த நிறத்தில் கொழுகொழுவென இருக்கும் தன் பேத்தியை கொஞ்சுவதே அவருக்கு இனியில்லா சந்தோஷம்.

என் செல்லம்மாயிக்கு வயசு இரண்டாக போது.. பாவி அவ வயித்துல மூணு மாசமா இருக்கறப்போ ஓடிப்போனவன் இன்னும் வரக்காணும்.. அவன எப்டி பாக்குறது, யாருக்கிட்ட விசாரிக்கிறதுன்னு ஒன்னும் தெரில.. ஒன்னும் தெரியாதவக்கிட்ட இப்டி பொண்டாட்டியையும், அழகு குட்டியையும் உட்டுப்புட்டுல்ல போயிருக்கான்..”எந்நேரமும் இந்த புலம்பல் தான் அவருக்கு..

அத்த அவரா வரட்டும்த்த இப்போ பொலம்பி உங்க உடம்புதான் சுகமில்லாம போவும்.”அக்கறையாக கோசலா பேசியதும் அவருக்கு கொஞ்சம் மனம் சாந்தியடைந்தது.

நான் என்ன புண்ணியம் செஞ்செனோ இந்தா மாறி மருமக கிடச்சா.. வேற யாருன்னா நான் ஆரம்பத்துல பேசுனதுக்கு தொறத்திருக்கமாட்டாங்க..”என நினைத்தவறோ தன் மருமகளும், தன் பேத்தியும் கொஞ்சிக்கொள்வதை கண்ணாரக்கண்டு ரசித்துக்கொண்டிருந்தார்.

இப்படியே காலங்கள் ஓட மைத்ரேயியும் நல்ல செழுமையாக, துருத்துருப்பாக வளர்த்தாள். கிட்டதட்ட அவள் தந்தையை கேட்கும் வயது வந்துவிட்டது.

அப்பத்தா அப்பா எப்போ வருவாங்க.. ஏன் என்ன பாக்க வரவே இல்ல. என்னோட ஸ்கூல்ல படிக்கிற பசங்க எல்லாம் சொன்னாங்க என் அப்பா என்ன பொறந்ததுல இருந்து பாக்கவே வரலனு.. ஏன் அப்பத்தா வரல..”என்று ஆறு வயது மைத்ரேயி பாவமாக கேட்டபோது ரமணிக்கு அடி வயிறே கலங்கி போனது.

செல்லம்மாயி.. அப்பா ஏதோ வேலைக்காக போயிருக்காருனு ஆயிரம் தடவ தினம் சொல்றேன்.. ஆனாலும் என் பேத்திக்கு அப்பன் பாசம் ஆட்டம் காட்டுதேடா..”என்று பேத்தியை மடியில் வைத்து கொஞ்சியவருக்கும் அவளுக்கு என்ன பதில் சொல்லுவது என்றே தெரியவில்லை.

சொல்லு அப்பத்தா…”ஏக்கமாக கேட்ட குழந்தையிடம் தெரியவில்லை என்று சொல்ல மனமில்லாமல்.. “ப்பா இன்னும் கொஞ்ச நாளுல வந்துடுவேனு சொல்லிருக்காரு கண்ணு.. வரும்போது பாப்பாவுக்கு நிறைய வெளாட்டு சாமான் கொண்டு வரதா சொல்லிருக்கான்.. அவன் கொண்டாந்ததும் உன் செட்டுங்க கிட்ட காட்டி என் அப்பன் கொண்டாந்ததுனு பீத்திக்க என்ன..”என்றவாறே அவளை சமாதானம் செய்து வைத்தார் ரமணி.

அந்த அறியா பிள்ளையையும் தன் அப்பத்தா சொல்வது இன்று நடக்கும் நாளை நடக்கும் என்று அமைதியாக, அதே நேரம் தன் அப்பன் மீது அதிக ஆர்வத்துடனும், பாசத்துடனும் காத்திருக்க ஆனால் வந்தது என்னவோ அவள் அன்னைக்கு எமகண்டமாக தான் வந்தது.

கிட்டதட்ட அப்போது மைத்ரேயிக்கு வயது எட்டு இருக்கும்.. அப்போது அவளுக்கு ஓரளவிற்கு விவரம் தெரிய தன் தோழி, தோழர்களுடன் வாசலில் விளையாடிக்கொண்டிருந்தவளுக்கு அமர்த்தலாக ஒரு கார் தன் வீட்டின் வாசலில் வந்து நிற்பதை பார்த்தவளுக்கோ குஷி தாங்க முடியவில்லை.

அவளின் மகிழ்ச்சிக்கு காரணம் என்னவென்றால் அவள் அப்பத்தா ஒருநாள் உன் அப்பன் பாரு ராஜா கணக்கா ஒரு நாளு நம்ம வூட்டுல இருக்குற அந்த அம்பாஷ்டர் கார விட பெரிய காருல வந்து இறங்குவான்.. அப்போ என் செல்லம்மாயி முகத்துல அந்த ஆகாசத்துல தெரிற நிலா மாதிரி அவ்ளோ பிரகாசமா தெரியும் பாரு..”என்றோ ஒருநாள் சொன்னது இன்று அந்த பிஞ்சு குழந்தைக்கு நியாபகம் வந்து தொலைக்க..

அய்ய்ய்ய் அப்பா…”என்று மழலையில் கத்தியவளோ அந்த காரினை நோக்கி வேகமாக ஓட.. காரின் சத்தம் கேட்டு வேகமாக வீட்டினுள் இருந்து வந்த கோசலாவிற்கும், ரமணிக்குமே அவ்வளவு சந்தோஷம் முகத்தில் தெரித்தது..

கோசலா வந்துட்டான்டி உன் புருஷன்..”கண்ணீர் மல்க ரமணியம்மா கூற.

கோசலாவும் ஆம் என்று கண்ணீரில் கலங்கியவாறே தலையாட்டினாள். என்னதான் பல வருடம் கணவனை பிரிந்திருந்தாலும், என்னதான் அவனுடன் மூன்றே மாதம் வாழ்ந்தாலும் அவன் மீது இனியில்லா பாசம் வைத்திருந்தாள் கோசலா.

காரின் கதவினை திறப்பதற்கு முன்பு மைத்ரேயி காரின் அருகில் போய் நிற்க.. கதவினை வேகமாக திறந்த வேகத்திற்கு மைத்ரேயியின் மீது அடிப்பட்டுவிட்டது. “ஆஆ.. அம்மா..”கத்தியவாறே குழந்தை கீழே விழ.. கோசலாவிற்கோ உள்ளம் பதறி போனது. “குட்டி..”பதறியவாறே அவளிடம் ஓட இருந்தவளை இறுக்க பிடித்துக்கொண்ட ரமணியோ.. “அடியேய் தெரியாம புள்ள விழுந்துட்டாடி.. இரு அவன் அப்பன் தானே அங்க நிக்கிறான் அவன் பாத்துப்பான்.”சமாதானப்படுத்தியவரின் கண்களும் பேத்தியையும், சற்று நேரத்திற்கு முன்பு கோர்ட் சகிதமாக இறங்கிய தன் மகனையும் மாறி மாறி பார்த்தார் அந்த வயோதிகர்.

ஆம் மாணிக்கவாசகம் தான் வந்து இறங்கிருந்தான். அதும் ஆளே மாறிப்போயிருந்தான். வெள்ளை சட்டை, வேஷ்டியுடன் போனவன் இப்போது கோர்ட் சகிதமாக வந்திறங்கிருக்கின்றான். அவன் முகத்தில் ஒரு மிடுக்கு, ஒரு கடுகடுப்பு தெரிந்தது. அதனை கண்டுக்கொண்ட ரமணியின் முகமோ யோசனையில் சுருங்கியது.. அதனை உறுதி செய்யும் விதமாக அனைத்தும் அடுத்து நடந்து முடிந்தது,

ஏய்ய் சனியனே நாப்பது லட்சத்து காருல வந்து அரக்கத்தனமா மோதுற.. அறிவில்ல..”கத்தியவாறே காரிலிருந்து இறங்கினாள் காஞ்சனா.

காஞ்சனாவை மாணிக்கவாசகத்துடன் பார்த்தவர்களுக்கு அவ்வளவு அதிர்ச்சி. ரமணியோ.. “இவளா..”மனதில் சுருக்கென்று தைக்க..

கோசலாவிற்கோ காஞ்சனாவை அடையாளமே தெரியவில்லை. ஆனால் அவள் மனதில் கணவனுடன் ஒரு பெண் வந்து இறங்கியதுமே நெஞ்சம் படப்படக்க ஆரம்பித்துவிட்டது.

மைத்ரேயி ஆசையாக தன் தந்தையை கண்டவளுக்கு காஞ்சனாவின் திட்டியினைக்கேட்டு அழுகையில் உதடு பிதுங்கியது. “ப்பா..”உதடு பிதுங்க.. மாணிக்கவாசகனோ அவளை திரும்பியும் பார்க்கவில்லை. நேராக தன் அன்னையிடம் போய் நின்றவனோ.. “ம்மா..”என்று அன்பாக கூப்பிட..

ஏங்க அங்க என்ன பேச்சி வேண்டிக்கிடக்கு.. நம்ம பப்ளு வண்டில படுத்து தூக்குறான்.. அவன தூக்குங்க முதல..”அதட்டலாக ஆணையிட்ட காஞ்சனாவோ வேறு யாருமில்லை மாணிக்கவாசகத்தின் மரப்பட்டறையில் வேலைப்பார்த்த கணக்கரின் மகள் தான். மாணிக்கவாசகமும், காஞ்சனாவும் ஒருகாலத்தில் ஒன்றாக சுற்றுகின்றனர் என்பதை கேள்விப்பட்ட ரமணியோ காஞ்சனாவின் குணம் பிடிக்காமல் தந்தை இல்லாமல் உன்னை எப்படி வளர்த்தேன் என்று அன்பை காட்டி அவனை மடக்கி கோசலாவை திருமணம் செய்துவைத்தார்.

ஆனால் இன்றோ அந்த காஞ்சனாவுடனே ஜோடியாக இறங்குவதை பார்த்த ரமணிக்கோ பகீரென்று தான் இருந்தது. அவர் கண்கள் அதிர்வாக தன் அருகில் நிற்கும் கோசலாவிடம் திரும்ப.. கோசலாவோ அப்படியே நிலைக்குத்திய பார்வையுடன் நின்றிருந்தாள்.

அவளுக்கும் சில விசியம் புரியாதா என்ன.. தன் மகள் ஆசையாக அப்பா என்று அழைக்க அதனை கொஞ்சத்தும் காதில் வாங்காமல் மலைமாடு போல நிற்கும் அந்த மனிதனையும், காஞ்சனா போட்ட அதட்டலில் பொட்டிப்பாம்பாக சென்று காரில் உறங்கும் மைத்ரேயியின் உயரத்திற்கு, அவள் வயதிற்கு ஏற்றது போல இருப்பவனை தூக்கிக்கொண்டு வருவதையும் பார்த்தவளுக்கு ஏதோ புரிய அப்படியே நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு சுவற்றில் சாய்த்தவளுக்கு உலகம் தட்டாமலை சுற்றியது.

அனைத்தையும் நினைத்து பார்த்தவாறே மரத்தடியில் உட்கார்ந்தவளுக்கோ அதன் பின் நடந்தது அனைத்தும் வாழ்க்கையின் கோரம் தான்.

அந்த கோரம் மாறுமா இல்லை இன்னும் கோரமாக அந்த மென்மையான மனம் கொண்டவளின் வாழ்க்கை மாறுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

(சினோ..)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!