மதுரையில் இருக்கும் பிரம்மாண்டமான வீடு அது.. பார்க்கவே அப்படியே செட்டிநாடு அரண்மனை போல் மிகப்பெரிய வீடு.. அந்த வீட்டிலேயே நிறைய தூண்களும், ஜன்னல்களும் தான் அதிகம்.. எப்படி பார்த்தாலும் அந்த வீட்டினை சுத்தம் செய்து அதனை புதிது போல பாதுகாக்கவே கிட்டத்தட்ட ஆறு, ஏழு பேருக்கும் மேலான ஆட்கள் தான் தேவைப்படும்.. அப்படிப்பட்ட வீடு கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கவாசகத்தினால் கட்டப்பட்டது.
இதற்கு முன்னால் மாணிக்கவாசகம் மிகப்பெரிய வீடு வைத்திருந்தார் தான். ஆனால் இப்படிப்பட்ட மிகப்பெரிய வீடு அவர் வைத்திருந்தது இல்லை.. சுமார் எட்டு வருடங்களுக்கு பின் அவர் வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு தான் சம்பாதித்த அனைத்து காசினையும் கொண்டுவந்து கட்டியதுதான் இல்லை அந்த வீடு.. அத்தனையும் அவரையே நம்பி தன் வாழ்க்கையினை கொடுத்து, தன் சொத்தையும் கொடுத்து இன்று போட்டோவில் கூட அந்த வீட்டினில் இருக்க முடியாமல் போன கோசலாவின் காசு தான் அந்த வீட்டில் முழுதும் கரைந்திருந்தது.
ஆனால் தற்போது அந்த வீட்டின் வாயில் பக்கமோ காஞ்சனா என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.. அது ஒன்று மாணிக்கவாசகத்தினால் பாசமாக வைக்கப்பட்ட பெயர் அல்ல காஞ்சனாவினால் “என் பேர் வைக்கல அப்புறம் நானும் என் பையனும் கிணத்துல வுழுந்து செத்துடுவோம்..”என்று பயமுறுத்தப்பட்டு வைக்கப்பட்ட பெயர் தான் அது.
மாணிக்கவாசகத்தை பற்றி தான் முதலிலேயே கூறி இருக்கின்றேனே தேவதையாக, அப்பாவியாக அவரை திருமணம் செய்த கோசலாவை விட்டுவிட்டு திருமணத்திற்கு முன்னாலே தன்னுடன் பழகிய காஞ்சனாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதுவும் கோசலா உயிருடன் இருக்கும்போதே. மாணிக்கவாசகம் கோசலாவினை சொத்துக்காக திருமணம் செய்துக்கொண்டவரால் காஞ்சனாவை மறக்க முடியாமல் போனது. அதுவும் காஞ்சனா மறக்கவிடவில்லை.
அடிக்கடி மணிவாசகத்தின் கடைக்கு வந்து அவனை இம்சை செய்து அவனுடன் வெளிநாட்டிற்கு மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டாள். இங்கு கோசலையோ அவனையே கணவனாக தினம் தினம் உருகி கரைய பாவம் அவரின் வாழ்க்கை எப்போதோ சின்னாபின்னாமாகிவிட்டது என்பது தெரியாமலையே எட்டு வருடத்தை ஓட்டினாள் கோசலா.
மாணிக்கவாசகம் காஞ்சனாவுடன் ஜோடியாக வந்து இறங்குவதை பார்த்த கோசலாவிற்கு உலகமே தட்டாமலை சுற்றியது. அப்போதும் கூட ஏதோ தான் கனவு காண்கிறோமோ அல்லது தன் கணவனுடன் வந்து இறங்கும் பெண் அவருக்கு ஏதோ வகையில் சொந்தமாக இருக்குமோ என்று தான் அந்த பூப்போன்ற மனம் நம்பியது. ஆனால் அதனை ஒரடியாக ஆட்டம் காணுவது போல.. காஞ்சனாவின்.. “ஏங்க நம்ம குழந்தைய தூக்காம எங்க போறீங்க..”அதட்டலான பேச்சை கேட்டவுடன் கோசலாவிற்கு அப்படியே உலகம் ஸ்தம்பித்து போன்ற உணர்வு.
அதற்கு அடுத்ததாக காஞ்சனா அதிர்ந்து நின்ற கோசலாவின் முன்னால் வந்து நின்றவளோ.. “என்ன பாக்குற.. அவரு உனக்கும் மட்டும் தாலி கட்டல எனக்கும் தான் தாலி கட்டிருக்காரு..”தன் கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்து வெளியில் காட்டியவள்.. “அதே மாதிரி உனக்கு மட்டும் புள்ளைய குடுக்கல எனக்கும் தான்..”தன் கணவனின் கையில் உறங்கிக்கொண்டிருக்கும் தன் மகனை கைக்காட்ட.. அவ்வளவே கோசலாவோ அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்.
இதனை எல்லாம் கேட்ட ரமணிக்குமே ஆத்திரமும், அதிர்ச்சியும் ஒருங்கே தோன்ற.. “டேய் பாதகா என்னடா செஞ்ச..”மணிவாசகத்தின் சட்டை காலரை பிடித்து உலுக்க.. அவனோ அப்படியே சிலை போல நின்றான்..
“அட கைய எடுங்க அத்த..”காஞ்சனா உரிமையுடன் ரமணியின் கையை பிடிக்க.. ரமணியோ தீப்பட்டது போல தன் கையை உதறிக்கொண்டார். “நீயெல்லாம் ஒரு பொண்ணாடி.. ஏற்கனவே கல்யாணமானவன போய் இப்டி மயக்கி கட்டிக்கிட்டு, புள்ள பெத்துட்டு வந்துருக்க..”ஆத்திரமாக கத்திய ரமணிக்கோ நெஞ்சையே வலித்தது. அவரின் கண்கள் கண்ணீர் மறைக்க தன் அப்பாவி மருமகளை பார்க்க.. கோசலாவோ நெஞ்சில் கை வைத்தவாறே அசையாமல் மாணிக்கவாசகத்தை வெறித்தவாறே உட்கார்ந்தவள் தான் அசையவே இல்லை.
மையு வேகமாக அழுதவாறே தன் அன்னையின் அருகில் உட்கார்ந்தவளுக்கு அங்கு என்ன நடக்கின்றது என்பது புரியாமல் தான் போனது. அவளின் கண்கள் அதிர்ச்சியுடன் நிலைக்குத்திய பார்வையுடன் உட்கார்ந்திருக்கும் தன் அன்னையிடமும், தன்னை போல ஒருவனை உரிமையுடன் தூக்கிக்கொண்டிருக்கும் தன் தந்தையையும் மாற்றி மாற்றி பார்த்தவளுக்கு அழுகையில் உதடு பிதுங்கியது.
“ம்மா..”அழுதவாறே தன் அன்னையின் மேலே சாய்ந்துக்கொண்டாள் மைத்ரேயி.
“அட அவர விடுங்க அத்த.. உங்களுக்கு எங்க போச்சி புத்தி. அதான் நாங்க காதலிக்கிறோம்னு தெரியும்ல. பேசாம எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்காம போயும் போயும் இவள கட்டிவச்சா புடிச்சா வாழமாட்டாறா..”என்றவளோ.. மையுவையே கேலி பார்வை பார்த்தவாறே.. “எனக்கு தெரிஞ்சி இவளையே அவரு உங்க தொல்லைக்காக தான் பெத்துருப்பாறாட்டுக்கு..”அதிகமாக பேசிவிட.. அதில் பாவம் கோசலாவின் உயிர் உடலிலிருந்து பிரிந்தே போனது. நிலைக்குத்திய பார்வையுடன் சரிந்தவளோ மண்ணில் புதைந்தே போனாள்.
ஆம் கோசலா காஞ்சனாவின் பேச்சிலும், தன் கணவனின் செயலிலும் மரிந்தே போனாள்.அன்றிலிருந்து யார் தலையெழுத்து மாறியதோ இல்லையோ கோசலாவின் வயிற்றில் பிறந்த மைத்துவின் வாழ்க்கை அடியோடு மாற்றப்பட்டு இருந்தது..
அந்த வீட்டின் உள்ளே சென்றாலே முதல் அறை மாணிக்கவாசகத்தின் அன்னை ரமணி உடையது தான். ரமணிக்கு கிட்டத்தட்ட இப்போது 80 வயது இருக்கும்.. அவர் வயதின் மூப்பும் வாழ்வில் அடிபட்ட சில அடிகளாலும் மிகவும் தளர்ந்து காணப்பட்டார்.. அதில் அவருக்கு மிகப்பெரிய அடியாக விழுந்தது என்னவோ கோசலாவின் இறப்பு தான்.. கோசலாவின் இறப்பு இன்று வரை அவரை பாடாய்படுத்தியது..
அருந்தினமும் புலம்பலாக ஜெபிப்பது “ஒன்னும் தெரியாத அம்மாஞ்சி பொண்ணா இருந்தவள கொண்டு வந்து இந்த பையக்கிட்ட ஒப்படைச்சு அவ வாழ்க்கையே நாசம் பண்ணிட்டேனே.. பாவி கொன்னேபுட்டேனே என் ராஜாத்திய.. இந்த பாவம் என்ன சும்மா விடுமா.. இந்த ஒன்னும் தெரியாத புள்ளைய எங்கிட்ட ஒப்படச்சிபோட்டு இப்படி போய் சேர்ந்துட்டியேடி கோசலா..”அன்று கதறிய ரமணியோ அந்த வேதனையே அவரை படுத்த படுக்கையில் கிடத்திவிட்டது.
ஆனால் ஒன்று மாணிக்கவாசகம் யாரை எப்படி நடத்தினாரோ இல்லையோ தனது அன்னையை இன்று வரை ஒழுங்காக பார்த்துக் கொண்டிருக்கிறார்.. அதிலேயே கொஞ்சம் மனம் சமாதானப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.. ஆனால் யாரைப் பார்த்துக் கொள்ள வேண்டுமோ அவளை அல்லவா நிற்கதியாக நிறுத்திவிட்டார்.. ஆம் அவரது மகள் மைத்ரேயியை தான் கூறுகின்றேன்..
ரமணி தனக்கு முன்னாள் உட்கார்ந்து இராமாயணத்தை படித்துக் காட்டிக் கொண்டிருக்கும் மைத்ரேயியை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.. அவர் கண்கள் கலங்கி போய் அழகு பதுமையாக தன் முன்னால் உட்கார்ந்திருக்கும் மைத்துவை மறைக்க அதில் சட்டென்று தனது கண்களை துடைத்துக்கொண்டவரோ திரும்பவும் அவளை தான் அசராமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
தினமும் அந்த வயதான பெண்மணிக்கு இதுதான் வேலை இராமாயணத்தை படித்துக் கூற சொல்லும் சாக்கில் தன்னுடைய பேத்தியை அங்கம் அங்கமாக பார்த்து வருந்திக் கொள்வார். அப்படியே அழகில் கோசலாவை கொண்டே வளர்ந்து இருந்தாள் மைத்ரேயி. அப்படியே கோசலா போன்றே அப்பாவித்தனமும் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டி தான் இருந்தது. அவருக்கு எங்கே அதனை வைத்து அவளுடைய சித்தி காஞ்சனா அவளை ஏதேனும் செய்து விடுவாளோ என்று நொடிக்கு ஒரு முறை அந்த வயதானவர் பயந்து கொண்டே தான் இருக்கிறார்.
காஞ்சனா அதற்கும் துணிந்தவள் தான். பின்னே இந்த வீட்டிற்குள் நுழைந்த வேகத்திற்கு மைத்துவின் அன்னை கோசலாவை பேசிய கொன்றவளாயிற்றே.. மைத்துவை மட்டும் விட்டு வைப்பாளா என்ன..
இதோ காலையிலையே மைத்துவை பார்த்து துதி பாட ஆரம்பித்துவிட்டாள் காஞ்சனா.. “ம்ம் போய் உட்கார்ந்துட்டியா அப்படியே உங்க பாட்டி கிட்டையே போய் உக்காந்துட்டியா.. காலையில எழுந்ததும் உனக்கு இதே வேலையா போச்சு.. எப்ப பாரு அந்த கிழவிக்கு முன்னாடி உட்கார்ந்து அந்த ராமாயணத்தை படிக்கிறது தான் உனக்கு பெரிய வேலையா இருக்கு இல்ல.. வேற ஒன்னும் பண்றதுக்கு துப்பில்ல..” என்று காஞ்சனா அடுப்படியில் நின்று கத்திக் கொண்டிருந்தாள்.
அவளின் ஏச்சினை கேட்ட மைத்துவோ கண்களில் கலக்கமும்,நெஞ்சில் படப்படப்புமாக காஞ்சனா பேசுவதையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள்.. ஆனால் தலையை மட்டும் நிமிர்த்துவதாக இல்லை..
காஞ்சனா முகத்தில் அக்னியில் பொறிந்த பாப்கானாக “காதுல வாங்காத மாதிரியே அப்படியே உட்கார்ந்துக்கோ.. உன்னை என்னைக்கு நான் எவனுக்காவது கட்டி கொடுத்து தலை முழுகுறானோ அன்னைக்கு தான் எனக்கும் நல்லது இந்த வீட்டுக்கும் நல்லது.. சனியன் சனியன் எனக்குனு வந்து வாய்க்கிது பாரு.. தெண்டம்..” காஞ்சனா படபடவென்று பாத்திரங்களை போட்டு உருட்டிக் கொண்டிருந்தாள். சொல்லபோனால் அங்கு அவளுக்கு எந்த வேலையும் இல்லை தான். அதான் அனைத்திற்கு ஆள் வைத்திருக்கின்றாளே.. சொல்லபோனால் மைத்துவுக்கும் கூட அங்கு எந்த வேலையுமில்லை. ஆனால் அவளை நிம்மதியாக உட்கார விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தாள் காஞ்சனா.
மைத்ரேயின் மீது காஞ்சனாவிற்கு எப்போதும் வெறுப்பு தான். அந்த ஊரிலையே மைத்ரேயி மட்டும் தான் மாணிக்கவாசகத்திற்கு முறையாக பிறந்தாள் என்ற வார்த்தையே காஞ்சனாவை பத்திரகாளி ஆக்கும். அதானே உண்மை. ஆனால் காஞ்சனாவோ அதனை பற்றி பேசிக்கொண்டு யார் அந்த வீட்டின் பக்கம் வந்தாலும் லேசாக விடுவதில்லை.. சட்டை கிழிய, சிண்டு அவிழ சண்டை முடித்து தான் காஞ்சனா அமைதியாவாள்.
ரமணி நன்றாக இருந்த காலகட்டத்தில் பேத்தியை மகாராணியாக பார்த்துக்கொண்டவரால் படுக்கையில் விழுந்ததற்கு பின்பு பார்த்துக்கொள்ள முடியவில்லை. வெளிவேலைக்கு ஆட்கள் இருந்தாலும் மைத்துவின் தலையில் தான் பண்ணையை சுத்தம் செய்வது, வீட்டினை சுத்தம் செய்வது, வாசலை கூட்டுவது தொடங்கி அனைத்து வெளிவேலையும் திணிக்கப்பட்டது.
ரமணி ஆரம்பத்தில் அதனை தட்டிக்கேட்டவருக்கு அதன் பின்பு உடல்நிலை காரணமாக முக்கால் வாசி நேரம் மயக்கத்திலையே கிடக்க வேண்டியதாகி போக அது காஞ்சனாவிற்கு வசதியாக போனது.
இப்போது காஞ்சனா திட்டுவதை கேட்ட ரமணிக்கோ மனம் வலித்து திக்திக்கென்று அடித்துக் கொண்டுதான் இருந்தது.. “பாவி மக இப்படி வாழ வேண்டிய பொண்ண என்னெல்லாம் பேச்சு பேசுறா பாரு..” என்று அந்த வயதானவரால் மனதில் நினைத்து வெப்பத்தான் முடிந்தது.. வயதின் காரணமாக அவருக்கு பேச்சுமே இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தான் வருகிறது..
“வேணாம் அப்பத்தா.. இதுக்கெல்லாம் எதுக்கு அழுகுற.. இதெல்லாம் சாதாரண விஷயம் தானே.. நான் தினமும் இதைக் கேட்டுட்டு தான இருக்கேன்… புதுசில்லையே..”கூறியவளுக்கோ மனம் கேட்டு கேட்டு புளித்த வார்த்தைகளாகி போனது.
அவள் தனது அப்பத்தாவின் கையைப் பிடித்து ஆறுதலாக வருடிக் கொண்டு இருக்க அவரோ பேச வராமல் திக்கி திணறிக் கொண்டிருந்தார்.. சுத்தமாக பேச்சே வராது என்றெல்லாம் இல்லை.. என்றாவது ஒன்று இரண்டு வார்த்தை பேசுவார் அவ்வளவுதான்..
“இவ்வளவு சொல்றேனே எங்கயாச்சும் அந்த இடத்தை விட்டு நகராலா பாத்தியா அவ..” என்று காஞ்சனா மறுபடியும் கத்திக்கொண்டே இருந்தார்..
“அட இப்ப என்ன காஞ்சனா உனக்கு…”அதட்டல் என்று கூற முடியாது அலுத்தவாறே கேட்டுக்கொண்டு அங்கு வந்தார் மாணிக்கவாசகம்.
“என்ன உனக்கா.. ஏங்க இவளுக்கு வயசு என்ன ஆகுது? வயசு 21 ஆகுது ஒரு டிகிரியே படிச்சு முடிச்சிட்டா.. அப்ப இன்னும் இவள வீட்ல வச்சிட்டு என்ன பண்ண போறோம்.. சீக்கிரமா ஒரு ஏதோ ஒரு “குடிகாரனோ, இல்ல சீர்கெட்டவனோ..”என்ற வார்த்தையை மனதில் பாடிக்கொண்டவள்.. “மாப்ள பார்த்து இவள தள்ளி விடுங்கன்னு சொன்னா கேக்குறீங்களா..”காஞ்சனா தன்னுடைய கணவரிடம் வசைப்பாடிக்கொண்டே இருந்தார்.
மாணிக்கவாசகம் சட்டென்று தனது தலையில் கை வைத்துக் கொண்டவர்.. “கொஞ்சம் அமைதியா இரு..எதையும் எடுத்தோம் கவுத்தோம்னு பண்ண முடியாது இப்பதான் அவளுக்கு 21 வயசு ஆகுது இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம்..” என்று பொறுப்பான தந்தையாக அவர் கேள்வி கேட்டார்.. இதை பார்த்து யாரும் பொறுப்பான தந்தை என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.. அவருக்கு எங்கே தன்னுடைய பணம் எல்லாம் மகளின் திருமணத்திற்கு செலவாகி விடுமோ என்ற ஒரு பயம்..
ம்ம்.. இருக்கத்தான் செய்தது எப்போதும் மாணிக்கவாசகம் என்றால் சுயநலவாதி என்று தான் அர்த்தம்..ரமணி இதையெல்லாம் கேட்டுக்கொண்டு படுக்கையில் படித்திருந்தவருக்கு தன்னுடைய மகன் எதை நினைத்து இப்படி கூறுகிறான் என்று தெரியாதா என்ன.. ஆனால் அந்த வயது மூத்தவருக்கோ எப்படியாவது தன்னுடைய பேத்தியை ஒரு நல்லவன் கையிலோ நல்ல குடும்பத்திலோ ஒப்படைத்துவிட வேண்டும்.. அதுவும் தான் இறப்பதற்கு முன்னால் அவளுக்கு நல்ல வாழ்க்கை ஒன்றை அமைத்து தர வேண்டும் என்று தினமும் அதுவரை தன்னை கூப்பிட்டுக்கொள்ள வேண்டாம் என்று தினம் தன்னுடைய கடவுளிடம் வேண்டிக் கொண்டே தான் இருக்கிறார் அந்த வயதானவர்.
“ஆமா நீங்க இப்படியே சொல்லுங்க அவ என்னடானா முத டிகிரிய படிக்கிறேன்னு காசு செலவு பண்ண வச்சா… இப்போ இரண்டாவது டிகிரி படிக்கப் போறேன்னு வந்து நிக்கிறா.. அடுத்தது மூன்றாவது, நாலாவது படிச்சுக்கிட்டே இருப்பாளா.. இவளுக்கே எல்லாமே பண்ணிட்டா அப்புறம் நமக்குன்னு ஒரு பையன் இருக்கானே அவனுக்கு என்ன பண்ணுவீங்க..”அலுத்தவாறே காஞ்சனா கேள்விக்கு மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தாள்..
காஞ்சனாவின் மகன் ராகவ் அவன் ஒரு சோம்பேறி.. படிப்பு அறவே அவன் மண்டையில் ஏறவே இல்லை.. எவ்வளவுதான் காஞ்சனா கடினப்பட்டு அவனை கல்லூரி வரை அழைத்து சென்றாலும் அனைத்திலும் அரியர், ஃபெயில் ஆகிக்கொண்டே தான் வந்து கொண்டிருந்தான்.இந்நிலையில் ஒழுங்காக படிக்காத அவனுக்கு நிறைய காசினை கொட்டிக்கொடுத்து இன்ஜினியரிங் சீட்டு வாங்கி கொடுத்து படிக்க வைத்தாள் அவனது அன்னை..
இப்போது அவன் மூன்று வருடத்திலேயே கிட்டத்தட்ட 20 அரியருக்கு மேல் வைத்துக் கொண்டுதான் இருந்தான்.. இந்த வருடம் முடிவாக சொல்லிவிட்டான். நான் தான் கல்லூரி செல்லப் போவதே இல்லை என்று காஞ்சனா “எதுக்குடா இப்படி எல்லாம் பண்ற..” என்று அவன் தலையில் கொட்டியவாறு கேட்டதற்கோ.. தன் அன்னையை முறைத்தவாறு “ஐயோ… அம்மா.. இனி நான் காலேஜுக்கு போக மாட்டேன் அவ்வளவுதான்.. என்ன போட்டு இம்சை பண்ணாதீங்க.. எனக்கு சுத்தமா படிப்பு வரல.. நான் அப்பாவோட தொழில பாத்துக்குறேன்.. காலேஜ் போன்னு இம்ச பண்ணுன அப்புறம் எங்கையாச்சும் ஓடிடுவேன்..” என்று மிரட்டலாக கூறியவனோ ஒரு தொழிலை தான் பார்த்துக் கொண்டானா அதுவுமில்லை..
ஏதோ வேண்டியது வேண்டாதது போல ஒரு மில் ஒன்றில் போய் உட்கார்ந்து கொண்டவன் சும்மாக இல்லாமல் ஆன்லைனில் பப்ஜி விளையாடுகிறேன் என்று தன்னுடைய தந்தையின் காசை எல்லாம் கரியாக்கிக் கொண்டுதான் இருக்கிறான்.. கிட்டத்தட்ட அவனால் மட்டுமே அப்பது, அறுபது லட்சத்திற்கு மேல் நட்டமாய் கொண்டே தான் இருந்தது.. முதலில் இதைப்பற்றி தெரியாத மாணிக்கவாசகரோ மகன் கேட்கும் போதெல்லாம் ஐந்து லட்சம் பத்து லட்சம் என்று தூக்கிக் கொண்டு கொடுத்துக் கொண்டிருக்கும் காஞ்சனாவை ஒரு நாள் பிடித்துவிட்டார்.
“என்னடி நீ பாட்டுக்கு காச எடுத்து எடுத்து கொடுத்துட்டு இருக்க.. எதுக்காக கொடுக்கிற அதுவும் நூறு, ஐநூறு ரூபாயா இருந்தா பரவால்ல.. நீ பாட்டுக்கு இரண்டு லட்சம். மூன்று லட்சம், நாலு லட்சம்னு எடுத்து கொடுத்துக்கிட்டே இருக்க.. அதுவும் எத்தனை தடவை கொடுத்திருக்க.. பத்து, பதினைஞ்சி தடவை கொடுத்திருக்க.. என்னடி நெனச்சிட்டு இருக்க உன் மனசுல..”எகிறி கொண்டு வந்தவரை காஞ்சனாவோ..
“அட சும்மா கத்துறது நிறுத்துங்க நமக்கு இருக்கிறது ஒரே புள்ள.. இவனுக்கு அப்புறம் ஒரு புள்ள பொறக்காமலே போயிடுச்சு.. நம்ம சேர்த்து வச்சிருக்கிற சொத்து எல்லாம் அவனுக்கு தானே போய் சேரனும்.. இல்ல உங்க மூத்த தாரத்தோட பொண்ணுக்கு எதுவும் கொடுக்க போறதா மனசுல கோட்டை கட்டிக்கிட்டு இருக்கீங்களா..” என்று எரிச்சலாக பார்த்தவாறு கேட்டாள்.
அதனைக் கேட்ட மாணிக்கத்திற்கு எரிச்சலாக வந்தது.. “அடியேய் உன் மனசுல கைவைத்து சொல்லு அவளுக்கு ஏதாவது நான் செய்றனாடி.. அவ பாட்டுக்கு இந்த வீட்டு மூலையில் தான் கிடக்கா.. உனக்கும் உன் பையனுக்கும் தான எல்லாத்தையும் சம்பாரிச்சு கொண்டு வந்து கொட்டிட்டு இருக்கேன்..”ஆத்திரத்தில் கத்தியவர்.. “ம்ச் இப்படியே அவன் பாட்டுக்கு பொறுப்பில்லாம சம்பாதிக்கிற காசெல்லாம் தூக்கி தூக்கி கொடுத்துட்டு இருந்தா நாளைக்கி நாம நடு ரோட்டுல நிக்க வேண்டியது தான்..” என்று எகிற..
“ம்ச் ஆமா ஆமா அப்படியே நீங்க சம்பாதிச்ச காசு, சொத்து மாதிரி கத்தாதீங்க உங்க மூத்த தாரத்து பொண்டாட்டி கிட்ட இருந்து வந்தது தானே..” காஞ்சனா கோசலாவை ஒரு நாளிற்கு ஒரு முறையாவது இழுக்காமல் இல்லை..
அதில் தலையில் அடித்திக்கொண்டவறோ.. “அவளால கொண்டு வந்த காசுனாலும் அத பல மடங்கு ஆக்குனவன் நான் தான்டி…”ஆத்திரத்தில் கத்தியவரோ “இங்க பாரு இதுதான் முதவும், கடைசியும்.. இனிமே அவன் கேட்கிறான்னு ஏதாவது காசு கொடுத்தன்னு தெரிஞ்சுச்சு வச்சுக்கோ அவ்வளவுதான் சொல்லிட்டேன்..” என்று கத்தியவறை எகத்தாளமாக பார்த்த காஞ்சனா…
“அட இது போனா என்ன அதான் உங்க பொண்ணு பேர்ல பாதி சொத்து இருக்கே..”பாவம் மைத்ரேயின் மீது எழுதி வைத்த சொத்தும் காஞ்சனாவின் கண்களை உறுத்தியது..
அதில் தான் மாணிக்கவாசகத்தின் பல நாள் கண்களும் என்று கூட சொல்லலாம்.. அதற்கு மேலும் காஞ்சனாவை அதட்டல் போடவே முடியவில்லை. ஆரம்பத்தில் காதலிக்கும் போது இனிப்பாக தெரிந்த காஞ்சனா இப்போது புளிப்பாக தெரிகிறாள்.. இதற்கு அவருக்கு கோசலாவே எவ்வளவோ தேவைலாம் என்று தோன்றி விட்டது.. கோசலா இவர் கூறியதற்கு ஒரு பதில் எதிர்த்து கூட பேசிய ஆள் கிடையாது.. அமைதியாக தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தவளை காஞ்சனாவுடன் இப்போது எல்லாம் அதிகமாக ஒப்பிட்டு பார்க்கிறார்.. ஆனால் ஒப்பிட்டு பார்த்து என்ன பிரயோஜனம் கோசலாக தன் உயிரை எப்போதோ விட்டுவிட்டாளே..
“இங்க பாருங்க நமக்கு இருக்கிறது ஒரே புள்ள தான் அவனும் போய் சேர்ந்துட்டான் வச்சுக்கோங்க அப்புறம் என்ன நீங்க உயிரோடயே பாக்க முடியாது என்னையே அனுப்பி வச்சிட்டு நீங்க தாராளமா சந்தோசமா இருக்கலாம்ன்னு நினைச்சுக்காதீங்க அதுக்கும் நான் விடமாட்டேன்..” என்று காஞ்சனா பொடி வைத்து பேச மாணிக்கவாசத்துக்கு காஞ்சனாவை பற்றி நன்றாக தெரியும்.. அவள் எவ்வளவு தூரம் இறங்குவாள் என்றும் அவர் நன்றாக உணர்ந்து கொண்டவராயிற்றே..
அதனால் அமைதியாக வாயை மூடிக்கொண்டுதான் சுற்ற வேண்டியதாக இருந்தது. இப்போது அதை நினைத்து பார்த்த மாணிக்கவாசகத்திற்கும் ஆறு மாதமாக நிலைமை மிகவும் மோசமாகத்தான் இருந்தது.. அதற்கு காரணமும் உண்டு வேறு யாரு அவருடைய மகன் ராகவும், அவரது மனைவி காஞ்சனாவும் தான்.. காசு எல்லாம் மகன் கரியாக்கிக் கொண்டே இருக்க இப்போது இல்லாத பிரச்சனையாக சில இடப் பிரச்சினை, நிலப் பிரச்சனை வேறு அவரை பாடாய்படுத்தியது..
அதெல்லாம் நினைக்க நினைக்க அவருக்கு கொஞ்சம் பயம் வேறு நெஞ்சைக் கவ்வ.. அதற்கெல்லாம் ஒரே தீர்வு தன்னுடைய மகள் தான் என்று தன்னுடைய அன்னையின் அருகில் உட்கார்ந்து இராமாயணத்தை படித்துக் கொண்டிருக்கும் மைத்துவின் மீது யோசனையாக விழுந்தது அவரின் பார்வை..
“ந்தா போதும் நீ உங்க ஆத்தாவுக்கு படிச்சு காட்டுனதெல்லாம்.. வந்து வேலைய பாரு..”காஞ்சனா கத்தியவாறே உள்ளே போக.. மையுவும் ராமாயண புத்தகத்தை அப்படியே மூடி வைத்தவாறு எழுந்தவள் தன்னுடைய அப்பத்தாவிற்கு தேவையான தண்ணீரை கொடுத்துவிட்டு அடுப்படி பக்கம் சென்று விட்டாள்.. என்னதான் அந்த வீட்டில் 10 பேர் சமையல் வேலையும் வீட்டு வேலையும் பார்ப்பதற்கு இருந்தாலும் காஞ்சனாவிற்கு மைத்துவை வேலை வாங்காமல் அந்நாள் ஓடாது.. இப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருக்க அதன் பிறகு மைத்துவின் நாட்கள் அவளை கோரமாக தாக்கியது என்பது உண்மை..