கர்ணன் தனக்கு முன்னால் முகம் சிவக்க முறைத்தபடி நிற்கும் சஷ்டியை எச்சில் விழுங்க பயத்துடன் பார்த்தவாறே நின்றவனோ அந்த காவல் நிலையத்தின் நுழைவாயிலையும் மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
சஷ்டியோ தன்னையும், வாசலையும் மிரள மிரள விழித்தவாறே பார்த்துக்கொண்டிருக்கும் அந்த ஆடவனை வித்தியாசமாக பார்த்தவளோ.. ‘என்ன இது ஏன் இவரு பயத்தோட பாத்துட்டு நிக்கிறாரு.. அப்டி யாரு வரப்போறா.. ஒரு வேள இன்னும் சம்பவம் முடிலையோ..”என்ற சிந்தனையிலையே நின்ற பெண்ணவளின் யோசனையை சரிதான் என்பது போல சரசரவென மூன்று, நான்கு கார்கள் வந்து காவல் நிலையத்தில் நின்றது.
சஷ்டி அதனை புரியாமல் பார்க்க, கர்ணனோ கை, கால்கள் வெடவெடக்க நின்றிருந்தான். கர்ணனின் கை, கால்கள் நடுங்குவதை வித்தியாசமாக பார்த்த பெண்ணவளோ இப்படிப்பட்ட ஆணவனை இப்போது தான் முதல் முறையாக பார்க்கின்றாள். ‘இவரு என்ன தெனாலிக்கு சப்ஷிட்டுயூட்டோ..”என்று தான் தோன்றியது அவளுக்கு.
கர்ணன் கொஞ்ச கொஞ்சமாக பம்மிக்கொண்டே வந்து சஷ்டியின் பின்னால் தன்னை மறைத்தவாறே நிற்க. வேகமாக காவல்நிலையத்திற்குள் வந்த அந்த கிடா, கொடுவா மீசைக்காரர்களோ “எங்கம்ல அவன்.. அந்த வைத்தியன் எங்கம்ல..”என்று வீச்சருவாளை வீசி வருவது போல தன் உலைக்கை போன்ற கைகளை வீசிக்கொண்டு வந்தார்.
அவருக்கு பின்னால் ஒரு கும்பல் வர.. சஷ்டி அவர்களை புரியாமல் பார்த்தவளின் தோளை நடுங்கிய கைகளுடன் பிடித்துக்கொண்டு நின்றான் கர்ணன்.
“கோட்டிக்கார பயலே உன்னைய என்னத்துக்கும்ல இங்க அனுப்புனோம்.. டாக்டரு தொழில பாக்க அனுப்புனா தற்கொல செய்ய போறீலோ தற்கொல..”என்றவரின் உலைக்கை கை கர்ணனின் சட்டை காலரை பிடித்து ஒரடியாக தூக்க.. “அய்யோ…”என்று பதறி போனாள் பெண்ணவள்.