காயமின்றி வாழும் காதல் – 1
“என்ன கௌஷிகா இப்படி சொல்றே? எங்க அப்பாவும் அம்மாவும் உன்னை நேரில் பார்க்க எவ்ளோ ஆசையா இருக்காங்க தெரியுமா?” ஏமாற்றமாக பேசினான் ரவி. உள்ளூர கோபம் கனன்றது, ஆனால் அவனின் கோபத்தை காட்ட முடியாதபடி இருந்தது அவன் நிலைமை. அவன் கோபப்பட்டால் கௌஷிகா ரூல்ஸ் பேசுவாள் என்று அவனுக்கு தெரியும். அவன் காதல் சொன்னபோதே அவள் சில விஷயங்களை தெளிவாக அவனிடம் சொல்லி விட்டாள். அதனால் இப்போது ரவி அடக்கி வாசிக்க வேண்டி இருந்தது.
“நீ தான் இன்னும் மூணு மாசத்தில் வந்துடுவியே? அப்போ இந்த மீட் அப் வைச்சுக்கலாம் ரவி!” அவனின் ஏமாற்றத்தை கொஞ்சம் கூட கணக்கில் எடுக்காமல் கூலாக பேசினாள் கௌஷிகா.
ரவியும், கௌஷிகாவும் ஐடி வேலை மூலம் வெளிநாடு சென்றவர்கள். இப்போது ஜெர்மனியில் இருக்கிறார்கள். ஒரே கம்பெனிக்காக தான் வேலை செய்கிறார்கள். ரவி சென்னையில் இருந்து சென்றான். கௌஷிகா புனேவில் இருந்து சென்றிருந்தாள்.
ஒரே சமயத்தில் ஜெர்மனி சென்றதில், கம்பெனியில் அறிமுகமாகி பழகி பின் காதலில் விழுந்தார்கள். கடந்த இரண்டு வருடமாக இருவரும் பழகி வந்தாலும் காதல் என்று சொல்லி கொண்டது ஆறு மாதங்களுக்கு முன்பு தான். ரவி தான் முதலில் கேட்டான். கௌஷிகாவும் ஒத்துக் கொண்டாள். அவனை மறுக்க அவளுக்கு காரணம் எதுவும் இல்லை. அதோடு அவனை அவளுக்கு பிடித்தும் இருந்தது. அவனின் அறிவு, பழக்க வழக்கம், நாகரிகம் என அவள் வாழ்க்கை துணைக்கு என அவள் வைத்திருந்த எதிர்பார்ப்பு அனைத்தையும் ரவி பூர்த்தி செய்தான். அதனால் அவன் காதலை ஏற்றுக்கொண்டாள். அதே சமயம் காதலை ஏற்று கொண்ட பின், அவள் எண்ணங்களை தெளிவாக சொல்லியும் விட்டாள்.
“எனக்கு முன்னாடியே உன்னை ரொம்ப பிடிக்கும் ரவி. நானே உன்கிட்ட சொல்லி இருப்பேன்…. ஆனால் நாம வளர்ந்த விதம் வேற. அதனால் எனக்கு கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. இப்போ நீயே என்னை லவ் பண்றேன்னு சொல்லும் போது எனக்கு சந்தோஷமா இருக்கு. என்னை உனக்கு நல்லா தெரியும் தானே? என்னால தமிழ்நாட்டில் இருக்க டிபிக்கல் மருமகள் மாதிரி எல்லாம் இருக்க முடியாது. நான் பக்கா நியூக்கிளியர் பேமிலில வளர்ந்த பொண்ணு. நாம தனியா தான் இருக்க முடியும் ரவி. நமக்குள்ள என்னால் ஏதாவது அட்ஜெஸ்ட் பண்ண முடியும், மத்தவங்களுக்கு எல்லாம் என்னால முடியாது. இப்போவே சொல்லிடுறேன்” என்று கூறி இருந்தாள் அவனிடம்.
அவனுக்கும் தான் தெரியுமே அவள் குணம். ஒரு வருடத்திற்கும் மேலாக பழகி இருந்தானே. தனக்கு ஏதாவது உதவி வேண்டுமென்றால்
மற்றவரின் உதவியை நாடும் கௌஷிகா, மற்ற நேரத்தில் யாரோடும் பெரிதாக பேச்சு வைத்துக் கொள்ள மாட்டாள். அவள் உண்டு, அவள் வேலை உண்டு என்றிருப்பாள். அந்த அமைதி, ஒதுக்கம் தான் ரவியை கவர்ந்தது. எவ்ளோ டீசென்ட், தெளிவு, பிரச்சனை இல்லாத நடத்தை, இது தான் வாழ்க்கைக்கு சரி வரும் என்று நினைத்தான் அவன். அதனால் கௌஷிகா சொன்னதற்கு,
“எப்போவாவது தான் நாம எங்க ஊருக்கு போவோம். ஸோ நாம தனியா தான் இருப்போம். கவலைப்படாதே எனக்கு உன்னை நல்லா தெரியுமே!” என்று அவளுக்கு பதிலும் சொல்லி இருந்தான் ரவி.
ஆனால் இன்று முதல் முறையாக இது நாள் வரை தோன்றாத பிரச்சனை அவர்களுக்குள் வந்தது. அதை சமாளிக்க முடியாமல் தடுமாறினான் ரவி. எரிச்சலாக வந்தது அவனுக்கு. என்ன பெண் இவள்? இதை கூட செய்ய முடியாதா? இதில் என்ன பிடிவாதம்? புரியவே இல்லை அவனுக்கு.
ரவி வீட்டில் அவன் கௌஷிகாவை பற்றி சொல்லியவுடன், பெரிய எதிர்ப்பு இல்லாவிட்டாலும் ஏமாற்றமாக பேசினார்கள். அதன் பின் இரண்டு நாட்கள் அவன் அழைப்பு எதையும் ஏற்காமல் இருந்து அதன் பின் இறங்கி வந்தார்கள். இறங்கி வந்தவர்கள், அவன் காதலியை பார்க்க வேண்டும் என்றார்கள்.
ரவி இன்னும் மூன்று மாதம் ஜெர்மனியில் தான் இருப்பான். ஆனால் கௌஷிகா கிளம்புகிறாள். முதலில் இந்தியாவிற்கு வரும் கௌஷிகாவையும், வட இந்தியாவில் இருக்கும் அவள் பெற்றோரையும் சென்னைக்கு வரச்சொல்லு, நாங்கள் சென்று பார்க்கிறோம் என்றார் அவன் தந்தை. அவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் தனக்காக தன் காதலை ஏற்று கொள்ளும் பெற்றோர்களுக்கு அவர்கள் கேட்பதை செய்ய வேண்டும் என்று நினைத்தான் ரவி. முக்கியமாக அவர்கள் மனதில் இருந்த ஏமாற்றம் மறைந்து போகும் விதமாக கௌஷிகா நடந்து கொண்டால் நல்லது என்று நினைத்தான். ஆனால் அதற்கு மறுத்தாள் கௌஷிகா.
“அதுக்குள்ள என்ன அவசரம் ரவி? நம்ம காதலை பத்தி நம்ம பேரண்ட்ஸுக்கு சொல்லி ஒரு வாரம் தான் ஆகுது! அதுக்குள்ள நீங்க கல்யாணம் வரை பேசிட்டீங்க! என் பேரண்ட்ஸ் உன்னை ஏதாவது தொல்லை செய்தாங்களா? உங்க வீட்டில மட்டும் ஏன் இவ்ளோ அவசரப்படுறீங்க?”
“இப்போ நீ இந்தியா போறதால் தானே என் பேரண்ட்ஸ் உன்னையும், உன் பேரண்ட்ஸையும் பார்க்க வரேன் சொல்றாங்க. நீ மும்பை போகாம சென்னை பிளைட்ல போனா என்ன? உங்க அப்பா அம்மாக்கு சென்னை பழக்கம் தானே? எங்க அப்பாக்கு நார்த் இந்தியா பழக்கம் இல்லை, இல்லைனா நேரா உங்க வீட்டுக்கே வந்து இருப்பாங்க!” என்றான் ரவியும் இப்போது கடுப்பாக.
“நீ இருந்தா தான் எனக்கு ஈஸியா இருக்கும் ரவி. ப்ளீஸ் என்னை கம்பெல் பண்ணாதே!” உறுதியாக மறுத்து பேசினாள் கௌஷிகா.
திரும்ப திரும்ப பேசினால் பிரச்சனை பெரிதாகி விட வாய்ப்பு இருக்கிறது என்று அப்போதைக்கு அமைதி ஆனான் ரவி. மீண்டும் இரண்டு நாள் கழித்து அவளிடம் பேசினான்.
“அங்கிள், ஆன்ட்டி கிட்ட சொன்னியா?” என்றான். அவளின் பெற்றோர் ரவியிடம் அவர்கள் காதல் பற்றி எதுவும் பேசவில்லை. அவனும் அவளும் நண்பர்களாக இருந்தே போது ரவியை நன்றாக தெரியும் அவர்களுக்கு. அதனால் கூட இருக்கலாம் என்று நினைத்தான்.
“என் பேரண்ட்ஸ் போன்ல வீடியோ கால் பண்ணிக்கலாம் சொல்றாங்க. அவங்களுக்கு இப்போ சென்னை வரை ட்ராவல் பண்ண முடியாது ரவி.”
“எங்க அப்பா அம்மா என் கல்யாணத்துக்கு ரொம்ப நாளா வெயிட்டிங்! அதான் அவசரப்படுறாங்க. உங்க அம்மா அப்பா கிட்ட நம்ம கல்யாணம் பத்தி பேசத்தான் இருக்கும் கௌஷிகா.”
“உடனே கல்யாணமா? நாம ரெண்டு பேரும் எந்த ஊரில் இருக்க போறோம் தெரியலை. ஒரே ஊரில் வேலை வாங்கணும் பர்ஸ்ட். அதுக்கு அப்பறம் தான் கல்யாணம் எல்லாம். எனக்கு வேலை ரொம்ப முக்கியம்” என்றாள் பட்டென்று.
என்கூட நான் இருக்க ஊரில் வந்து அங்கே வேலை தேடலாமே என்று கௌஷிகாவிடம் சொல்ல முடியாது ரவியால். அவனை அதே போல் செய்ய சொல்வாள். அது தவறும் இல்லை. ஆனால் இப்போது பிரச்சனை அது இல்லை என்பதால் அதை விட்டு விட்டு,
“கல்யாணம் பத்தி அப்புறம் நாம டிஸ்கஸ் பண்ணுவோம். இப்போ ஜஸ்ட் என் பேரெண்ட்ஸை மீட் பண்ணி பேசுங்க. அவங்க கல்யாணம் பத்தி சொன்னா ஓக்கே மட்டும் சொல்லுங்க. முடிவு எல்லாம் அப்புறம் பார்ப்போம்” என்றான்.
“ஓக்கே எங்க அப்பா கிட்ட கேட்கிறேன். முக்கியமா இதை சொல்லணும்…. என்னால உங்க ஊரில் எல்லாம் வந்து கல்யாணம் பண்ணிக்க முடியாது. எங்க ஊரில் மெஹந்தி, சங்கீத்னு எல்லாம் செய்து எனக்கு மேரேஜ் பண்ணிக்க ஆசை. அப்புறம் உங்க ஊரில் சிம்பிளா, முக்கியமான ஆளுங்களை மட்டும் அழைத்து ரிசப்ஷன் வைச்சுக்கலாம். அது போதும்!” என்றாள்.
அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சி ஆனான் ரவி. திருமண விஷயத்தில் எப்படி இப்படி ஒரு தலைபட்சமாக நடந்து கொள்ள சொல்கிறாள்? சம உரிமை பேசும் அவளின் பேச்சு படி பார்த்தால் அவன் ஊரில் செய்ய முடியாது என்றால் அவள் ஊரிலும் தான் செய்ய கூடாது!! அதை சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டாள்! இதை பற்றி இன்னொரு நாள் பேசுவோம் என்று அவனின் ஆத்திரத்தை அடக்கி கொண்டான். அதே சமயம் ஊரை கூட்டி, மகனுக்கு கல்யாணம் செய்ய காத்திருக்கும் தன் பெற்றோர்களுக்கு இது தெரிந்தால் என்னவாகும்? தலை வலித்தது ரவிக்கு. அவளிடம் எதையும் காட்டிக்கொள்ளவில்லை அவன். எதுவரைக்கும் போகிறாள் என்று பார்க்க முடிவு செய்தான். அவன் மனதில் பல சஞ்சலம் தோன்ற ஆரம்பித்தது.
என்ன சொன்னாலும் கொஞ்சம் கூட இறங்கி வராமல் வேறு விதமாக பிடிவாதமாக பேசும் இது தான் இவள் குணமா? எல்லா விஷயத்திலும் இப்படி தான் இருப்பாளா? நான் இவளை சரியாக புரிந்து கொள்ளவில்லையோ? இவளின் எண்ண போக்கு எனக்கு சரி வருமா? காலமெல்லாம் நான் அட்ஜஸ்ட் செய்ய முடியுமா? அவனுக்குள்ளேயே குழம்பினான்.
இத்தனை நாள் அவர்களுக்குள் எவ்விதமான கருத்து வேறுபாடும் வரவில்லை. வரும் அளவிற்கு முக்கியமான பேச்சு வார்த்தை ஏற்படவில்லை. அவர்கள் சேர்ந்தும் வசிக்கவில்லை. அதனால் வெளியில் சந்திப்பது, பேசுவது, கொஞ்சம் காதல் செய்வது என்று போய் விடும். இப்போது கல்யாணம் என்று வரும் போது பல பிரச்சனை வருகிறது.
கௌஷிகா தமிழ்ப்பெண் தான். தமிழ் பெண் என்றாலும் வளர்ந்தது படித்தது எல்லாம் மஹராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் அவுங்கராபாத்தில். வட இந்தியாவில் வளர்ந்ததால் பார்க்கவும் பழகவும் வட இந்திய பெண் போலவே இருப்பாள். ஓரளவிற்கு தமிழ் சரளமாக பேசுவாள். அவள் தந்தை ஸ்ரீராம், அங்கிருக்கும் மருந்து கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறார். அம்மா ராதிகா, அக்கவுண்டண்ட். இவள் ஒரே பெண். சொந்தங்கள் அனைவரும் தமிழ்நாட்டில் இருக்க, யாருடனும் பழக்கம் இல்லை கௌஷிகாவிற்கு. ஸ்ரீராமும் ராதிகாவும் மிகவும் முக்கியமான சொந்தத்தில் விசேஷம் என்று அழைப்பு வந்தாலும் உடனே எதற்கும் செல்ல மாட்டார்கள். அவர்கள் எப்போது ஊர் பக்கம் செல்ல நினைக்கிறார்களோ அப்போது தான் சென்று அனைவரையும் பார்ப்பார்கள். நாம், நமது என்று மட்டுமே யோசிக்கும் குணம் அவர்களுக்கு. இவர்கள் இப்படி இருந்ததால் அவர்களுடைய சொந்தங்களும் இவர்களிடம் இருந்து விலகி கொண்டனர். இதனால் கௌஷிகாவிற்கு நெருங்கிய சொந்தங்கள், அவர்களுடன் நெருக்கமாக பழகுவது என்பது இல்லாமல் போய் விட்டது. யாருக்காகவும் யோசிப்பதோ, விட்டு கொடுப்பதோ எதுவும் தெரியாது, தேவைப்படவும் இல்லை. நண்பர்கள் குடும்பங்கள் மட்டும் தான் அவளுக்கு தெரியும். அவர்களுடன் பழகும் போது நெருக்கம் இருந்தாலும் உரிமை இருக்காதே! அதனால் அவளும் அவள் வாழ்க்கையை அவள் விருப்பம் போல் வாழ்ந்தாள்.
கௌஷிகா பேசியதற்கு பதில் பேசாமல், ஏதோ சிந்தனையில் இருந்த ரவியை பார்த்தாள்.
“என்ன ரவி? எதுவுமே சொல்ல மாட்டேங்கிற?”
“இப்படி எதுக்குமே என் கூட ஒத்துழைக்காம மல்லுக்கட்டினா நம்ம வாழ்க்கை எப்படி இருக்குமோனு பயமா இருக்கு கௌஷிகா!” எதையும் காட்டிக்கொள்ள கூடாது என்று நினைத்தாலும் மனதின் அதீத குழப்பத்தில் வார்த்தைகளை விட்டான் ரவி.
“எனக்கும் தான்! கல்யாணத்துக்கு முன்னேயே உங்க அப்பா கேட்கிறார்னு எனக்கு இஷ்டம் இல்லாததை செய்ய சொல்றே நீ! நான் என்ன மீட் பண்ணவே மாட்டேன்னா சொல்றேன்! நீ வந்த அப்புறம் பார்க்கலாம்னு தானே சொல்றேன்!” அவளும் படபடவென பொறிந்தாள். கூடவே கண்ணீரும் வர, சட்டென்று இளகி விட்டான் ரவி. மனமும் அவள் பக்கம் யோசித்தது.
அவள் சொல்வதும் சரி தானோ? இன்னும் மூன்று மாதம் தானே? ஏன் அப்பா அவசரப்பட வேண்டும்? அவளுக்காக யோசிக்கும் அதே நேரத்தில் காதல் திருமணம் எனும் போது சில விட்டு கொடுத்தல் இருபக்கமும் இருக்க வேண்டும் அல்லவா? என்றும் தோன்றியது ரவிக்கு. ஒன்றும் புரியாமல், கௌஷிகாவும் பிடிவாதமாக இருக்க, வேறு வழியில்லாமல் தன் தந்தையிடம் அவன் வந்த பிறகு பார்த்து கொள்ளலாம் என்று சொன்னான்.
“என்ன பா நீ? நீ வந்த அப்புறம் நான் உடனே நிச்சயம் வைச்சுக்கலாம் நினைச்சேன். அதனால் தான் இப்போ நாங்க சந்தித்து பேசினா நல்லா இருக்கும்னு பார்த்தேன்” என்றார் அவன் தந்தை, மூர்த்தி.
உடனே நிச்சயமா? அய்யோ! அதற்கு கௌஷிகா என்ன சொல்ல போகிறாளோ? இப்போதே பயம் வந்தது ரவிக்கு.
“முதல்ல நான் ஊருக்கு வரேன் பா! அப்புறம் பார்ப்போம்! நீங்க ஒரு மூணு மாசம் அமைதியா இருங்க!” நானும் கொஞ்சம் நிம்மதியா இருந்துகிறேன் என்று மனதினில் சொல்லி கொண்டான்.
இப்போதைக்கு பிரச்சனையை தள்ளி போட்டவனால் எப்போதும் இதே போல் பிரச்சனையை தள்ளி போட முடியுமா?
மூன்று மாதம் கழித்து,
ஜெர்மனியில் இருந்து கிளம்பி விட்டான் ரவி. கிளம்பும் முன் புனேவில் இருந்த கௌஷிகாவிடம் பேசி, அவளையும் அவள் பெற்றோரும் சென்னை வருகிறார்கள் என்பதை உறுதி செய்தான். ரவியின் பெற்றோரும் அவன் ஊரில் இருந்து கிளம்பி விட்டனர்.
திருச்செந்தூர் தான் ரவியின் சொந்த ஊர். அவன் தந்தை உரக்கடை வைத்து இருந்தார். திருச்செந்தூரில் மட்டுமின்றி திருநெல்வேலி, தூத்துக்குடி என அந்த சுற்றுவட்டாரத்தில் பத்து கடைகளுக்கு மேல் இருந்தது அவருக்கு. அவன் அம்மா மேகலா இல்லத்தரசி. அவனை விட மூன்று வயது பெரிய அக்கா ஷ்யாமளா, திருமணம் ஆகி அருகில் பெருங்குளம் என்ற ஊரில் இருக்கிறாள். அவள் கணவன் பாலன் வி.ஏ.ஓ எனும் கிராம நிர்வாக அலுவலர். ஒரு பையன் கிஷோர் ஆறு வயது.
சென்னை வந்து இறங்கியவனை அவனுக்கு முன்பே சென்னைக்கு வந்து இருந்த அவன் பெற்றோர் விமான நிலையத்திற்கே வந்து வரவேற்றனர். இரண்டே கால் வருடம் கழித்து பார்க்கும் மகனை ஆரத்தழுவி ஆனந்த கண்ணீர் விட்டார் மேகலா. மூர்த்தி மகனின் தோளில் தட்டி தன் அன்பை வெளிப்படுத்தினார். ஷ்யாமளாவிற்கு தம்பியின் காதல் பிடிக்கவில்லை அதனால் அவள் கௌஷிகாவை பார்க்க வரவில்லை. தம்பியை அவர்கள் வீட்டில் வந்து பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டாள். காரணம் தெரிந்த ரவி அக்காவின் ஒதுக்கத்தை புரிந்து கொண்டான். என்ன இருந்தாலும் என்னை விட அக்காக்கு அந்த குள்ளி மேல் தான் பாசம் அதிகம், அதனால் தான் இப்படி என்று பொருமி கொண்டான். அவன் அம்மா அப்பாவிற்கும் அந்த குள்ளியை அவன் தலையில் கட்டி விட மிகுந்த ஆசை என்பதும் அவனுக்கு தெரியும்! அதை தான் முறியடித்து விட்டானே! அதை நினைத்து மனம் கும்மாளம் இட்டது!
ரவி வந்துவிட்டான் என்று அந்த நேரத்திலும் ஷ்யாமளாவை தொலைபேசியில் அழைத்து, மகனுடன் பேச வைத்தார் மூர்த்தி. இருவரும் இயல்பான பாசத்தோடு நலம் விசாரித்து கொண்டனர். அவளிடம் பேசி விட்டு வைத்த பின்,
“கௌஷிகா வரலையா பா?” என்றான் ரவி தந்தையிடம்.
“எங்களுக்கு எப்படி பா தெரியும்? நீ தான் சொல்லணும்!” என்றார் மேகலா.
பல்லை கடித்தான் ரவி. போன வாரம்,
“ரவி உங்க அப்பா அம்மாக்கு எந்த ஹோட்டல் புக் பண்றீங்க? எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, இப்போ எங்களுக்கு பிளைட் டிக்கெட் மட்டும் புக் பண்ணி தர்றீங்களா? நான் அப்புறம் ஹோட்டல் ரூம் புக் பண்றேன்….” என்று கௌஷிகா சொல்ல,
“ஹயாட்! நீ உங்க டீடெயில்ஸ் எல்லாம் அனுப்பு….” என்று பதில் சொன்னவன் எந்த வித்தியாசமும் பார்க்காமல் கௌஷிகாவிற்கும் அவள் பெற்றோர்களுக்கும் பிளைட் டிக்கெட், ஹோட்டலில் அறை எல்லாம் புக் செய்தான். புக் செய்து விட்டு, அவளிடம்,
“நான் வர்றதுக்கு முன்னாடியே நீங்க ரீச் ஆய்டுவீங்க! ஸோ நீ போய் எங்க அம்மா அப்பாவை பாரு, பேசு” என்று சொல்லி இருந்தான்.
இப்போது அவள் இவர்களை பார்க்கவில்லை என்று தெரிந்ததும் அவனுக்கு பயங்கர கோபம் வந்தது. அவள் பெற்றோர் வரவேண்டாம். இவள் வந்து பார்த்து இருக்கலாம் அல்லவா? என்ன தான் நினைத்து கொண்டு இருக்கிறாள்? மூச்சை ஆழ்ந்து இழுத்து விட்டு, கொந்தளிக்கும் மனதை சமன் செய்து கொள்ள முயற்சித்தான் ரவி.
மகனின் முக மாறுதலில் இருந்து ஏதோ சரியில்லை என்று புரிந்து கொண்ட அவன் பெற்றோர், அவனை சமாதானம் செய்வது போல் பேசினார்கள்.
“எப்படியும் நாளைக்கு பார்க்கத்தானே போறோம்! விடு. களைப்பா இருப்பே, இப்போ கிளம்பலாம் வா” என்றார் மேகலா.
“மருமகளுக்கு சங்கோஜமா இருந்துச்சோ என்னவோ?” மூர்த்தியும் தன் பங்குக்கு சொன்னார்.
“இம்ம்….” வாய் சொன்னாலும், இவ்வளவு நல்லவர்களுக்கு நான் நியாயம் செய்யவில்லையோ? தப்பு செய்கிறேனா? தடுமாறினான் ரவி.