தேன் – 1
இரவின் பிடியில் அந்த வைத்தியசாலை மயான அமைதியுடன் இருளில் புதைந்து காணப்பட்டது.
தலைமை வைத்திய அதிகாரி மிகவும் பதற்றத்துடன்,
“நர்ஸ் என்ன நடக்குது இங்க கரண்ட் போயிடுச்சா உடனே ஈபிக்கு கால் பண்ணி என்னன்னு பாக்க சொல்லுங்க..”
“ஆமா சார் திடீர்னு போயிடுச்சு இதோ சார் கால் பண்ணிட்டேன் இன்னும் 10 நிமிசத்துல வந்து பார்க்கிறேன்னு சொல்லி இருக்காங்க..”
“ஓகே பேசண்ட்ஸ் எல்லாம் பயப்பட போறாங்க சீக்கிரமா அவங்கள வந்து பார்க்க சொல்லுங்க..”
“ஓகே சார்..” என்றதும் தலைமை வைத்திய அதிகாரி வேகமாக அந்த அறையை விட்டு தனது பிரத்தியேக அறைக்குள் நுழைந்தார்.
அங்கோ ஒரு கருத்த உருவம் கால் மேல் கால் போட்டுக் கொண்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தபடி,
“என்ன விக்ரம் நீ கேட்ட பணம் இதோ இந்த பெட்டியில இருக்கு நான் கேட்ட விஷயத்தை முடிச்சிட்டியா..?”
அவ்விடத்தில் அவனை சற்றும் எதிர்பார்க்காத விக்ரமோ இருளில் அவனது கணீர் குரலை கேட்டதும் ஒரு நிமிடம் அதிர்ச்சி அலைகளுக்குள் சிக்கி மீண்டவன் அந்த உருவத்தைப் பார்த்து,
“நீங்க கேட்டது சின்ன விஷயம் இல்ல அதுல எவ்வளவு ரிஸ்க் இருக்கு தெரியுமா என்னோட டாக்டர் வாழ்க்கையே முடிஞ்சு போயிடும் ஆனாலும் உங்களுக்காக நான் இதை பண்ண சம்மதிச்சேன் ஆனா இன்னும் அதுக்கான நேரம் வரல கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..”
“விஷயத்தை முடிக்கிறேன்னு தான் பணம் கேட்ட இப்போ என்ன பின்வாங்குற நீ இல்லன்னா எனக்கு வேலை முடிக்க எத்தனையோ பேர் இருக்காங்க அது உனக்கும் நல்லாத் தெரியும்..” என்று உச்ச கோபத்தில் அந்த உருவம் மிரட்ட,
அந்நேரம் அந்த அறையின் கதவு தட்டப்பட்டது. விக்ரம் மெதுவாக கதவைத் திறக்க, நர்ஸ் கையில் குழந்தையுடன் நின்று கொண்டு இருந்தாள். உடனே கதவைத் திறந்து நர்ஸை உள்ளே அழைத்தார்.
உள்ளே வந்த நர்ஸ்,
“டாக்டர் நீங்க சொன்ன பேஷண்ட்க்கு குழந்தை பிறந்துடுச்சு இதோ பாருங்க..” என்று கூறியதும்,
உடனே குழந்தையை வேண்டி பார்த்துவிட்டு தனது பேன்ட் பாக்கெட்டுக்குள் இருந்து பணத்தினை கொத்தாக எடுத்து நர்சின் கையில் திணித்தவர்,
“நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது..”
“என்ன டாக்டர் கார்ட்டர்என் மேல நம்பிக்கை இல்லையா..?” என்று பணத்தைப் பார்த்து சிரித்தபடி கூறியவள்,
விக்ரம் பார்த்த பார்வையில் அவ்விடத்தை விட்டு உடனே சென்று விட்டாள்.
விக்ரம் அந்த உருவத்தை பார்த்து,
“இதோ நீங்க கேட்ட பொருள் வந்துடுச்சு..” என்றதும் அவன் புருவம் உயர்த்த,
“எல்லாம் நீங்க நினைச்ச மாதிரி பெண் குழந்தை தான்..” என்று விக்ரம் கூற,
“ஆஹா அப்படி போடு அருவாள என்னோட திட்டம் கூடிய சீக்கிரம் பழிச்சிடும்னு சொல்லு குழந்தையை தா நான் சீக்கிரமா கிளம்பனும்..” என்று அந்த உருவம் அதீத சந்தோஷத்தில் அங்கலாய்த்தது.
விக்ரம் குழந்தையை அவனது கையில் ஒப்படைக்க அவன் புயலாக அந்த நான்கு மாடி கட்டிடத்தில் இருந்து புயலாக வெளியேறி காரில் புறப்பட்டான்.
அன்று மலர்ந்த பூ போல இருந்த மழலையின் அழுகைக் குரல் ஏனோ அந்த அரக்கனின் காதில் எட்டவே இல்லை.
இவனது கீழ்த்தரமான செயலைப் பார்த்து வானமே திட்டி தூற்றுவது போல இடி மின்னல் முழங்க மழை பொழிந்தது.
எதிர்காலத்தில் இவனது பாவத்தின் சம்பளம் எதுவாக இருக்கும்..?
*************************************
25 வருடங்களுக்குப் பின்
‘காயத்ரி நேரமாச்சு நான் கிளம்புறேன்..” என்று அவசர அவசரமாக மாடிப்படிகளில் இருந்து இறங்கியபடி கூறினார் கருணாகரன்.
“இல்லைங்க இதோ சாப்பாடு செய்திட்டேன் ஒரு வாய் சாப்பிட்டு போங்க..” என்று தட்டில் உணவை பரிமாறியபடி காயத்ரி கூற, அவரது அன்பான மனைவியின் பேச்சுக்கு மறு பேச்சு என்பதே கருணாகரனின் அகராதியில் இல்லையே..!
சிறு புன்னகையுடன் வந்து அமர்ந்து காயத்ரி எடுத்து வைத்த இட்லியை உண்டு கொண்டிருக்க,
“டாடி..” என்று குதூகலத்துடன் தனது தந்தையை கட்டி அணைத்தபடி நெற்றியில் முத்தம் பதிக்கும் சாட்டில் அவரின் காதின் அருகே இரகசியமாக,
“அவசரமா எனக்கு ஒரு லட்சம் பணம் வேணும் டாடி அம்மாவுக்கு தெரியாம ப்ளீஸ்..” என்று கேட்டாள் நிவேதா.
அவள் ஏதோ தந்தையிடம் சொல்வதை கவனித்த காயத்ரி,
“என்ன நிவேதா உங்க அப்பாகிட்ட என்ன ரகசியம் பேசிட்டு இருக்க..?” என்று கேட்டதும்,
“அ..து..வா அது ஒன்னும் இல்லம்மா சும்மா..” என சமாளிக்க முயன்றவளைப் பார்த்து முறைத்தபடி,
“என்னங்க உங்க பொண்ணு என்ன சொல்றா..?” என்று நிவேதாவிடம் இருந்து உண்மை வராது என அறிந்ததால் நேரடியாக கணவனிடமே கேட்டார் காயத்ரி.
“செலவுக்கு கொஞ்சம் பணம் கேட்கிறா கபர்ட்டில் இருந்து எடுத்துக் கொடுத்துரு நான் கிளம்புறேன் எனக்கு மீட்டிங்கு லேட் ஆகுது..” என்று உண்மையை உடைத்த படி நழுவப் பார்த்த கருணாகரனை,
“நீங்கதான் இவளுக்கு ரொம்ப செல்லம் கொடுக்குறீங்க 25 வயசு ஆகுது இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இப்படி ஊதாரியா சுத்திக்கிட்டு இருக்கா இவளோட வயச ஒத்த பொண்ணுங்க எல்லாம் இப்ப கல்யாணம் கட்டி புள்ள குட்டியோட திரியுதுங்க ஆனா உங்க பொண்ணு..” என்று காயத்ரி பொறிந்து தள்ள,
“என்னம்மா நீங்க ஒரே என்னை திட்டிகிட்டே இருக்கீங்க பாருங்கப்பா..” என்று நிவேதா சினுங்க,
“காயத்ரி பொண்ண ஒன்னும் சொல்லாத அவ ஒரு லட்சம் தானே கேட்கிறா கொடுத்துரு ஏன் அவளோட சண்டை போடுற..?” என கருணாகரன் நிவேதாவுக்காக பரிந்து கொண்டு வர, ஒற்றைப் பார்வையில் கருணாகரனின் வாயை அடக்கினார் காயத்ரி.
“எதுக்குடி ஒரு லட்சம்..?”
“என்னோட ப்ரண்டு பார்ட்டி வைக்கப் போறாள் அதுக்கு காசு போதாதாம் அதனால என்கிட்ட ஒரு லட்சம் கடனா கேட்டா அது தான்மா..”
“யாரு சைலஜாவா..?”
“இல்லம்மா போன வாரம் கோயம்புத்தூர்ல கல்யாணம் நடந்துச்சே..”
“ஆமா அவ பேரு ரோகிணில்ல கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதுக்கு பார்ட்டி வைக்கிறாளா..?”
“இல்லம்மா அவளோட புருஷன் அவளோட தொல்ல தாங்க முடியாம ஓடிப் போயிட்டானா அதுக்குத்தான் பார்ட்டி வைக்கிறா..” என்று சர்வ சாதாரணமாக நிவேதா கூற,
“என்னடி இது புதினமா இருக்கு இதுக்கெல்லாமா பார்ட்டி வைப்பாங்க..” என்று தலையில் கை வைத்தபடி அதிர்ச்சியுடன் கேட்டார் காயத்ரி.
“இப்ப இதுதாம்மா ட்ரென்ட்டு உங்களுக்கு ஒன்னும் தெரியாது..”
இவர்கள் இருவரின் உரையாடலையும் கேட்டு சிரித்தபடி கருணாகரன் எழுந்து கை கழுவச் செல்ல காயத்ரி பணத்தை எடுத்து வந்து,
“சரி நான் பணத்த தாரன் அதுக்கு முன்னுக்கு நான் சொல்ற விஷயத்தை கொஞ்சம் காது கொடுத்து கேளு..”
“என்ன சொல்லப் போறீங்க கல்யாணம் பண்ணு குழந்தை குட்டிகளைப் பெத்துக்கோ ப்ளா ப்ளா ப்ளா அதுதானே..”
“ஏன் ஏன் நிவேதா நான் சொல்றத கேட்கவே மாட்டேன்னு அடம் பிடிக்கிற இங்க பாரு நான் சொல்றத நீ கேக்கலனா இந்த சொத்துல இருந்து ஒரு பத்து பைசாவும் உனக்குக் கிடைக்காது..” என்று காயத்ரி கூறிக் கொண்டிருக்கும் போதே அவ்விடத்திற்கு கருணாகரன் வந்தார்.
“அப்பா அம்மாவை சும்மா இருக்க சொல்லுங்கப்பா..”
“காயத்ரி இப்ப எதுக்கு காலங்காத்தால அவளோட வம்புக்கு நிற்கிற பணத்தை கொடு அவள் போகட்டும் அப்புறமா பேசிக்கலாம்..”
“இல்லைங்க இன்னைக்கு ரெண்டுல ஒரு முடிவு எனக்கு தெரிஞ்சாகணும் இவளுக்கு இந்த சொத்து வேணும்னா நான் சொல்றத கேட்கணும் இந்த போட்டோல இருக்க பையன் தான் நான் இவளுக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை
இந்தப் பையன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஒத்துக்கிட்டா சரி இல்லன்னா இந்த ஒரு லட்சம் கூட அவளுக்கு கிடையாது சொத்துல ஒரு பைசாவும் கொடுக்க மாட்டேன்..” என்று பிடிவாதமாக பேசிய காயத்ரியை எவ்வாறு சமாளிப்பது என புரியாமல் திணறினார் கருணாகரன்.
தாய் கூறிய கண்டிஷனை கேட்டதும் ஒரு நிமிடம் நிவேதாவிற்கு தூக்கி வாரிப் போட்டது.
சாப்பாடு இல்லாமல் கூட இருந்து விடுவாள் ஆனால் செலவழிப்பதற்கு பணம் இல்லாமல் அவளால் அன்றைய நாளை கொண்டு நடத்தவே முடியாது.
அப்படிப்பட்ட மிகுந்த செலவாளி தான் நிவேதா. அவளது பேர் நிவேதா என்று இருந்தாலும் அவளது நட்பு வட்டாரத்தில் வேதா என்றே அழைப்பார்கள் அதுவும் அவளுக்கு மிகவும் பிடிக்கும். அப்படி கூறும் போது அவளை அறியாமல் ஒரு சந்தோசம் தோன்றும்.
‘சரி அப்படி யாரத்தான் சொல்றாங்கன்னு பாப்போம்..’ என்று அன்னையின் கையில் இருந்த புகைப்படத்தை வாங்கி பார்த்தவள், “இவனா..?” என உதடுகள் அறியாமலே வார்த்தைகள் வெளிவர கண்கள் இமைக்க மறந்து திகைத்துப்போய் வேரூன்றிய மரம் போல் அசையாமல் நின்றாள் நிவேதா.
அப்படி அந்தப் புகைப்படத்தில் இருப்பது யாராக இருக்கும்…?
அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்….
உங்களது ஆதரவும், கருத்துக்களும் தான் என்னை மென்மேலும் எழுதுவதற்கு வளப்படுத்தும். ஆகவே மறக்காமல் உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள்..
Post Views: 451