நெஞ்சம் – 1
“கண்ணு, எல்லாம் ரெடியா?” பஸ்க்கு லேட் ஆய்ட போகுது! மலரு என்ன பண்றா? எல்லாம் எடுத்து வைச்சுட்டாளா?” பரபரத்தார் மாணிக்கவாசகம்.
திருவண்ணாமலை அருகே இருக்கும் திருக்கோவிலூர் தான் இவர்கள் சொந்த ஊர். மாணிக்கவாசகம் ஒரு டைலர். அவரின் மனைவி கண்ணகி, அவரும் தைப்பார். வீட்டு வேலை தவிர, தையல் வேலை அனைத்திலும் கணவருக்கு உறுதுணையாக இருப்பார். அவர்களுக்கு இரண்டு பெண். மூத்தவள் மலர்விழி, பிஏ தமிழ் முடித்து ஒரு மாதம் தான் ஆகிறது. இரண்டாமவள் கனிமொழி பதினொன்றாவது படிக்கிறாள். கஷ்ட ஜீவனம் தான். பிஏ தமிழுக்கு உடனே என்ன வேலை கிடைக்கும்? மகளை கடைகளுக்கு வேலைக்கு அனுப்பவும் அவருக்கு இஷ்டம் இல்லை.
மலர் மிகவும் பயந்த சுபாவம். எதையும் உடனே பேசிடவோ சொல்லிடவோ மாட்டாள். வீட்டினருக்கு அவள் சுபாவம் தெரியும் என்பதால், அவளுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்களே உணர்ந்து செய்வார்கள். இப்படிபட்ட பெண்ணை எப்படி வெளியில் வேலைக்கு அனுப்புவது என்று பயந்தனர். பெண்கள் பள்ளி, கல்லூரியில் படித்தாலும் தோழிகளும் குறைவு. அப்பாவை விட தையல் வேலை மிக நன்றாக செய்வாள். சமையலும் மிக அருமையாக செய்வாள். அவள் சமைத்தால், பக்கத்து வீட்டில் எல்லாம் இன்னைக்கு மலர் சமையலா என்று கேட்கும் அளவு மணம் இருக்கும்.
சிறிது நாட்களுக்கு முன், மாணிக்கவாசகத்தின் நெருங்கிய நண்பரின் மூலம் ஒரு வேலை வந்தது மலர்விழிக்கு. அவருக்கு தெரிந்தவர் ஒருவரின் மனைவிக்கு கர்ப்பப்பை நீக்கும் ஆப்ரேஷன் செய்ய போவதால், வீட்டோடு இருந்து சமையல் செய்து அவரை பார்த்துக்கொள்ளும் வேலை. ரொம்ப நல்லவர்கள், மலரும் நல்ல குணம். அதனால் தான் சொல்கிறேன். உதவியாக செய்வதோடு நல்ல சம்பளம் தருவார்கள் என்றார். மற்ற வேலைகளுக்கு ஆள் இருக்கிறார்கள். அவரின் நண்பருடைய தாயார் வயதானவர் வீட்டில் இருப்பதால், நம்பி அனுப்பலாம் என்று சொல்ல, மலர்விழியை அங்கே சேர்த்து விட்டார் அவர். மாதம் இருபதாயிரம் ரூபாய் தருவதாக அவர்கள் சொல்லவும் மலரின் திருமணத்திற்கு உதவும், அதோடு கொஞ்சம் நல்ல இடத்தில இருந்து வெளியுலகம் பழகட்டும் என்று சம்மதம் சொல்லி விட்டனர் மாணிக்க வாசகமும், கண்ணகியும்.
இப்போது வீட்டில் இருந்து கிளம்பி, திருவண்ணாமலை சென்று, பின் அங்கிருந்து பெங்களூர் செல்ல வேண்டும்.
விடியற்காலையில் பெங்களூர் வந்து இறங்கியவர்களை குளிர் வந்து தழுவியது. ஏசி பஸ்சில் வர தோதாக வந்திருந்ததால் தப்பித்தார்கள். அந்நேரத்திலும் பரபரப்பாக இருந்த ஊரை பிரம்மிப்பாக பார்த்தாள் மலர். மார்டர்ன் யுவதிகள், ஏன் தன் அம்மா வயதில் இருப்பவர் கூட மார்டனாக இருப்பதை ஆசையாக பார்த்தாள் மலர். என்ன தான் போனில், டிவியில், சினிமாவில் பார்த்து இருந்தாலும் நேரில் பார்ப்பது வேறு தானே?
“இப்படி தான் நாள் பூரா குளிருமா பா இங்க?”
“முன்னாடி அப்படி இருக்கும் போல், இப்போ எல்லாம் மாறிடுச்சு சொல்றாங்க”
“எப்படி போக போறோம் அவங்க வீட்டுக்கு?”
“ஆள் வருவாங்க, எனக்கு ஊர் தெரியாதே!”
அப்பாவும் பொண்ணும் சம்பாஷனை செய்து கொண்டு இருக்கும் போதே அவர்களை நெருங்கினார் ஒருவர்.
“நீங்க தானே திருக்கோவிலூர்ல இருந்து வரீங்க?”
“ஆமாங்க ஆமா” வேகமாக பதில் சொன்னார் மாணிக்கம்.
“நான் தான் தியாகராஜன், வாங்க வீட்டுக்கு போகலாம்.” இருவரையும் ஏற்றி கொண்டு மார்த்தஹள்ளியை நோக்கி விரைந்தார் தியாகு. வழி அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி வந்தார்கள் அப்பாவும் மகளும்.
தியாகு ஒரு கம்ப்யூட்டர் எஞ்சினீயர். படித்ததே பெங்களூரில் தான். அதனால் அங்கேயே செட்டில் ஆகி விட்டார். அவர் மனைவி அருணா சென்னை பெண், பெரியவர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம் தான். மிகவும் நல்லவர். மாமியார் தேவகி மெச்சிய மருமகள். இப்போது அவரின் பிடிவாதத்தில் தான் வீட்டோடு ஆள் வைக்க போகிறார் தியாகு. அவளுக்கு எந்த டென்ஷனும் இல்லாமல் இருக்கணும். இல்லைனா நம்மளை பத்தியே கவலைப்படுவா என்று மருமகளுக்காக கவலைப்படுபவர்.
இவர்களுக்கு இரு பிள்ளைகள். மூத்தவள் ஜனனி, மும்பையில் இருக்கிறாள் திருமணம் ஆகி. காதல் திருமணம். பஞ்சாபி பையன், ஆரவ். அவளுக்கு ஒரு பெண் குழந்தை அவந்திகா.
இளையவன், அரவிந்தன். அவனும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் தான். மேற்படிப்பு கனடாவில் படித்தான். பின் அங்கேயே வேலை செய்தான். பின் அமெரிக்காவில் வேலை செய்தான். இப்போது ஒரு வருடமாக இந்தியாவில் வேலை செய்கிறான்.
வீடு வந்து விட, இறங்கி தானே சென்று கதவை திறந்து விட்டு வந்து காரை உள்ளே சென்று நிறுத்தினார் தியாகு. தனி வீடு தான். அந்த காலத்திலயே கட்டிய வீடு. வாட்ச்மேன் எல்லாம் வைக்கவில்லை. பெரும் பணக்காரர்கள் அல்ல. உழைப்பால் உயர்ந்த உயர்தர நடுத்தர வர்க்கம் என்று சொல்லலாம். தன்னிடம் கூட சொல்லாமல், அவரே இறங்கி திறக்கிறார், நல்ல மனிதர் என்று நினைத்துக் கொண்டார் மாணிக்கம்.
இப்போது மகனும் சம்பாதிப்பதில் மிகவும் நல்ல நிலைமை தான். இன்னும் வேலைக்கு செல்கிறார் தியாகு. ஓரிரு வருடம் செல்லட்டும் பிறகு ரிடையர் ஆகி கொள்கிறேன் என்றார். இப்போது ஒரு கல்லூரியில் வேலை செய்கிறார்.
தேவகி, அருணா, தியாகு அனைவரும் பேசுவது பழகுவது எல்லாம் மாணிக்கத்திற்கு திருப்தியாக இருக்க, கனத்த இதயத்துடன் மகளை அங்கு விட்டு விட்டு அன்று இரவு ஊருக்கு கிளம்பினார்.
மாலையில், மகளுடன் சற்று வெளியே நடந்தவர்,
“தைரியமா இரு! சமையல் வேலைக்கு விட்டுட்டார் அப்பானு நினைக்காத…. மூணு மாசம் மட்டும் தான்…. ஓடி போயிடும்…. நமக்கு அந்த காசு ரொம்ப உபயோகமா இருக்கும்! உனக்கும் நாலு விஷயம் புரிபடும், அதனால் தான்….” என்றார்.
“இல்லை பா, எனக்கு எந்த வருத்தமும் இல்லை பா. நான் இருந்துக்கிறேன்…. நீ கவலைப்படாம போய்ட்டு வாங்க….” தன் பயத்தை மறைத்து கொண்டு கூறினாள் மலர்.
என்ன தான் அவள் நன்றாக சமைப்பாள் என்றாலும், இவர்கள் வீடு, உயர் தட்டு நிலை எல்லாம் பார்த்து அவளுக்கு பயமாக இருந்தது.
“இன்னைக்கு முதல் நாள், நீ ஒன்னும் செய்ய வேண்டாம், நான் தோசை ஊத்தி தரேன் சாப்பிடு. நாளையில் இருந்து நீ பொறுப்பை எடுத்துக்கோ” என்று கனிவாக பேசிய அருணாவை மிகவும் பிடித்து போனது மலருக்கு.
பாட்டியின் அறையில், தரையில் பாய் விரித்து, நல்ல கனமான கம்பளியும் விரித்து படுக்க சொன்னார்கள் அவளை. போர்வையும் தர, தன்னை இவர்கள் வீட்டில் நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை வந்தது அவளுக்கு. அவளும் நன்றாக வேலை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு உறங்கி போனாள்.
மறுநாள் காலை ஆறு மணிக்கு எல்லாம் குளித்து ரெடியாக சமையல் அறைக்கு சென்று விட்டாள் மலர். நேற்று இரவே அருணாவிடம் பால் காய்ச்சுவது பற்றி கேட்டு கொண்டாள். தியாகு சரியாக பால் பாக்கெட் எடுத்து வந்து தர,
“கதவை எப்படி திறக்கணும்னு சொல்லி தாங்க சார், நாளையில் இருந்து நானே எடுத்துக்கிறேன்” என்றாள் மெதுவாக.
“சொல்லி தரேன், ஆனா அவசியம் இருக்காது. நான் எப்படியும் சீக்கிரம் எழுந்துடுவேன்” என்று சிரித்தார் அவர்.
அருணா சொன்ன அளவில் தண்ணீர் ஊற்றி காய்ச்சி வைத்து விட்டு, தேவகி பாட்டியை பார்க்க போனாள். முன்பு அருணா செய்த வேலை எல்லாம் இப்போது மலர் செய்தாள். பாட்டிக்கு முகம் கழுவ, பல் விளக்க உதவி செய்து விட்டு காபி கொடுத்தாள். தியாகுவிற்கும் கொடுத்தாள். டிகாஷன் சரியாக கலந்து இருந்ததை வைத்து, பெண் நன்றாக சமைப்பாள் என்று நிம்மதி கொண்டனர். சோறு முக்கியம் பிகிலு! குணமும் நன்றாக இருக்க, அவர்களுக்கு பெரிய நிம்மதி.
சற்று நேரத்தில் எழுந்து வந்த அருணாவுடன் சேர்ந்து வேலைகளை செய்தாள் மலர். அவள் நறுவிசாக செய்வது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அருணாவிற்கு.
“இன்னும் மூணு நாள்ல எனக்கு ஆபரேஷன் மா…. அதுவரை நான் உனக்கு எல்லாம் சொல்லி தரேன். அப்பறம் உனக்கு என்ன சந்தேகம்னாலும் நீ அத்தையை கேளு. அவங்க சொல்வாங்க. என் பொண்ணு நாளைக்கு வரா, அவ கூட உனக்கு ஹெல்ப் பண்ணுவா. பயப்படதே, கொஞ்ச நாளைக்கு நாம எல்லாரும் அட்ஜெஸ்ட் ஆகுற வரை அப்படி இப்படி தான் நாட்கள் போகும்…. நீ பயப்படாதே என்றார் அருணா.
“சரி மேடம்” என்று மலர் சொல்ல,
“என்னை மேடம் எல்லாம் சொல்லாதே, அம்மா சொல்லு” அருணா செல்லமாக அதட்டினார்.
“சரிங்க மா” சொல்லும் போது புன்னகை கூட வந்தது மலருக்கு. அந்த பயந்த உள்ளத்தை கொஞ்சம் சகஜம் செய்தார் அருணா அவரின் இயல்பான நல்ல குணத்தால்.
“அப்பறம், முக்கியமா ஒன்னு சொல்லணும், இப்போ இங்க இருக்க எங்க யாருக்கும் கோபம் வராது ஆனா என் பையனுக்கு டப்பு டப்புனு கோவம் வரும், ஒரு டைப்பா பேசுவான், உடனே மறந்திடவும் செய்வான்…. அவனை மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க மா….”
அருணா சொன்னதை கேட்டு மலர் பயந்த பார்வை பார்க்க,
“கவலைப்படாதே அவனை நீ ரொம்ப பார்க்க வேண்டி வராது, அவன் வீட்டில் இருக்கிறதே கொஞ்சம் நேரம் தான்…. அதுவும் முக்கால்வாசி ரூமுக்குள்ளே தான் இருப்பான்!” என்றார்.
கொஞ்சம் நிம்மதி வந்தவளாக, வேலையை கவனிக்க போனாள்.
அருணாவிற்கு வீசிங் பிரச்சனை உண்டு. சுகர் உண்டு. அதனால் இந்த சர்ஜெரியை நினைத்து கவலை பட்டனர். லேப்பராஸ்கோப்பியில் செய்ய முடியாத அளவு, கட்டி கர்ப்பப்பைக்கு வெளியில் இருக்கிறது, மற்ற உறுப்புகளோடு லேசாக ஒட்டி கொண்டும் இருக்கிறது என்று வேறு சொல்லி இருந்தார்கள். கட்டி பெரிதாகும் வரை அருணாவிற்கு எந்த அறிகுறியும் இல்லை. தாமதமாக தெரிந்ததால் ரிஸ்க் அதிகம் ஆகி விட்டது.
வீட்டின் அழைப்புமணி கிர்ரென்று அடிக்க, அருணா பாத்ரூமினுள் இருப்பது தெரியாமல், வீட்டினர் திறப்பார்கள் என்று இவள் பாட்டில் இருந்தாள். மறுபடியும் விடாமல் கிர்ரென்று அடிக்க, யாரும் திறக்கலை போல என்று இவள் ஓடினாள். காலையில் தானே தியாகு சொல்லி தந்திருந்தார். ஆனால் பதட்டத்தில் இப்படி திருகுவதா, அப்படி திருகுவதா என்று புரியாமல் லேட் செய்து திறக்க,
அவள் மெதுவாக திறக்க, அதற்கு கூட பொறுமை இல்லாமல் வெளியில் இருந்து கதவை வேகமாக வந்தவர் தள்ள, அந்த கனமான கதவு அவள் கால் மற்றும் தலையை நன்றாக பதம் பார்த்தது. தலையில் வந்து அந்த கனமான தேக்கு கதவு இடித்த வேகத்திற்கு, “அம்மா” என்று அலறியவாறு கிழே விழ போனாள் மலர்.
வேகமாக வந்து அவளை அவனோடு சேர்த்து தாங்கி பிடித்தான் அப்போது தான் வீட்டிற்கு வந்த அந்த வீட்டு வாரிசு, நம்ம ஹீரோ அரவிந்தன், அர்விந்த்! அர்வி! எப்படி வேணாலும் வைத்துக் கொள்ளலாம். ஆரும்மா, அவனின் பாட்டிக்கு மட்டும். அவன் எவ்வளவு திட்டியும் அவர் அப்படி தான் அழைப்பேன் என்பார்.
அவன் முகத்தை கூட பார்க்க முடியாதபடி சரியாக புருவத்தில் அடி பட்டு இருக்க, உயிர் போற வலியில் கண்களை இறுக்க மூடி இருந்தாள் மலர்.
யாரு இவள் என்று அவளை பார்த்தான் அரவிந்தன், அவன் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அவள் புருவம் அடிப்பட்ட இடத்தில் பணியாரம் போல் புஸ் என்று வீங்கியது! (சமையல் வேலை தானே செய்ய வந்தாள் ஹீரோயின், அதனால் தான் இந்த உதாரணம்)
“ஹேய் ஹேய் ஆர் யூ ஆல்ரைட்?” அவளை உலுக்கி கொண்டே அலறினான் அர்விந்த்.
Super very nice story, innocent heroine and nice intro to hero