11. சிறைமிடாதே கருடா

4.6
(5)

கருடா 11

அமர்க்களத்திற்குக் குறைவில்லாமல் விடிந்தது விடியல். நேற்று இரவு முழுவதும் இருவரும் தூங்காமல் இரவிற்குத் துணை இருக்க, எனக்கும் வேண்டும் என்று வரவேற்றது விடியல். நான்கு மணிக்கெல்லாம் எழும் பழக்கம் கொண்டவன், கன்னியப்பன் நினைவோடு ஏங்கிக் கொண்டிருக்க, பலத்த சிந்தனையோடு கடற்கரையைப் பார்த்துக் கொண்டிருக்கும் தன்னவனைச் சிறிதும் கணக்கில் கொள்ளாது கிளம்பத் தயாராகினாள் ரிது.

படித்த படிப்பிற்கான வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலையில் போதுமான வருமானம் இல்லை. உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாடகைக்கு எடுத்த ஆட்டோவைச் சொந்தமாக்கிக் கொள்ளும் அளவிற்கு மாடு போல் உழைத்தான். வீட்டில் இருப்பவர்கள் முதல் கொண்டு, தெரிந்தவர்கள் வரை எதற்கு இந்தத் தொழில் என்று பலமுறை கேட்டும் விட மனம் வரவில்லை கருடேந்திரனுக்கு. என்னவோ, இதுதான் தனக்கான வழி என்று கன்னியப்பனை முழுவதுமாக நம்பி இறங்கி விட்டான்.

சிறு தொகையாக இருந்தாலும் சிறிது நேரம் கூட ஓய்வெடுக்காமல், கிடைக்கும் அனைத்துச் சவாரியையும் ஓட்டுவான். அது மட்டுமல்லாமல், காலையில் நான்கு பள்ளி சவாரியையும், அதன் பின் வங்கியில் வேலை செய்யும் இருவரின் சவாரியையும் பிடித்து நிலையான வருமானத்திற்கும் ஏற்பாடு செய்து விட்டான். அவர் இருவரின் உதவியால், மாலை மட்டும் உடல் ஊனமுற்ற ஒருவரைக் கடற்கரை வரை அழைத்துச் செல்லும் சவாரியும் கிடைத்தது. இப்போது அத்தனைப் பேரும் சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

அனைவரையும் அழைத்துப் பத்து நாள் மட்டும் விடுப்புக் கேட்டிருந்தான். இவன் வராதது பெரிய தொந்தரவு தான் என்றாலும், கருடேந்திரன் மனத்திற்காக பழகிய பழக்கத்திற்காகச் சரி என்று சம்மதித்தார்கள். பத்து நாளில் ஆறு நாள் ஏற்கெனவே முடிந்துவிட்டது. இன்னும் நான்கு நாளில் கன்னியப்பனை மீட்க வேண்டும். தனக்காக இல்லை என்றாலும், தன்னை நம்பி இருக்கும் அவர்களுக்காக மீட்க முடிவெடுத்தவனுக்கு வழி ஒன்றும் கிடைக்கவில்லை.

“ஆட்டோக்காரா…”

அவள் அழைத்தும் திரும்பாதிருந்தவன் செயலில் யோசனைக்கு ஆளானவள், “ஏய்! காது கேட்கல?” கேட்டாள் அதிகாரமாக.

“சொல்லு!”

“சொல்லுங்க முதலாளி…”

“காலைலயே வந்துட்டியா?”

“ஆசை பாரு எனக்கு!”

“எப்போ என் கன்னியப்பனைத் தருவ?”

“எப்பவோ அதுக்கான பதிலைச் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்.”

“என்னை நம்பி நிறையப் பேர் இருக்காங்க.”

“இதோ பாருடா, சோழ நாட்டு இளவரசர் பேச்சை!” என நக்கலாகச் சிரித்தவள், “ஏண்டா, நீ என்ன கலெக்டரா? இல்ல பெரிய பிஸினஸ் மேனா? உனக்குக் கீழ கைகட்டி நிக்க எத்தனைப் பேர் இருக்காங்க? உன் மயில் வாகனத்தை எடுத்துட்டுப் போகலைன்னா, சாப்பிடாம பட்டினி கிடந்து சாகப் போறாங்களா? கேவலம் ஒரு ஆட்டோக்கு இவ்ளோ சீன் ஆகாது.” என்றவளின் வார்த்தைகள் ஊசியாய் உடலைத் தைத்தாலும், வலியைக் காட்ட முடியாமல் நின்றிருந்தான்.

“வர வர, யாரு எவ்ளோ சீன் போடணும்னு விவஸ்தையே இல்லாமல் போயிடுச்சு. ஒரு நாள் முழுக்க ஓடுனா தான், அடுத்த நாளுக்கு ஓட டீசலைப் போட முடியும். இதுல என்னமோ, கோடி கோடியாய் சம்பாதிக்கிற மாதிரி பீலிங்! உன்ன விட என்கிட்ட வேலை பார்க்குற டிரைவருங்க அதிகமா சம்பாதிக்கிறாங்க தெரியுமா?”

“செய்யும் தொழிலே தெய்வம். என்னைப் பொறுத்த வரைக்கும் சோறு போடுற எந்த வேலையும் கேவலமில்லை. ஏசி ரூம்ல உட்கார்ந்து சம்பாதிக்க என்னாலயும் முடியும். அந்த அளவுக்குப் படிச்சும் இருக்கேன். இருந்தாலும், இந்த ஆட்டோதான் திண்டாடித் தவிச்சப்போ காப்பாத்துச்சு. என்னைக் காப்பாத்துனது, உயிர் இல்லாத ஒரு எந்திரமா இருந்தாலும் எனக்குச் சாமி தான்!”

“அடப்பாவி! ஒரு ஆட்டோக்கா இவ்ளோ பீல் பண்ற? இப்பத் தெரியுதா என் தகுதியும், உன் தகுதியும் எங்க இருக்குன்னு.” என்றதும் அவளை ஏறிட,

“வாழ்க்கையில இதுவரைக்கும் ஒரு தடவை கூட ஆட்டோல போனதில்ல.” என்றாள்.

“உழைக்காம சாப்பிட உடம்பு கூசுது.”

“அவ்ளோதான் உன் பிரச்சினையா? அதுக்கு ஒரு சூப்பரான வழி இருக்கு.” என்றதும் திரும்பி நின்றவன் சட்டைப் பாக்கெட்டில் தன் கார் சாவியை வைத்தவள்,

“இன்னையில இருந்து நீ தான் எனக்கு டிரைவர்…” என இரு கண்களையும் சிமிட்டினாள்.

அதுவரை கன்னியப்பனுக்காக வருந்திக் கொண்டிருந்தவன், அந்த முகத்தை வழியனுப்பி வைத்து ருத்ர முகத்தைப் போட்டுக் கொள்ள, “சம்பளத்தைப் பத்தி ஒன்னும் கவலைப்படாத. நான் கொடுக்கிற காசுல, உன் குடும்பம் மொத்தமும் சாப்பிட்டது போகச் சேர்த்து வைக்கிற அளவுக்கு இருக்கும். என்கிட்ட வேலை பார்க்குற வரைக்கும் தான் இந்தச் சலுகை. புத்தியுள்ளவனா இருக்குற வரைக்கும் சம்பாதிச்சுக்க…” என்றாள்.

“ரோட்ல உட்கார்ந்து பிச்சை எடுத்தாலும் எடுப்பனே தவிர, உனக்குக் கீழ வேலை பார்க்க மாட்டேன்டி.”

“எனக்கு டிரைவரா வேலை பார்த்தா, நாலு பேருக்குப் பிச்சையே போடலாம்.”

வெடுக்கென்று அவள் கழுத்தைப் பிடித்தவன் அங்கிருந்த கண்ணாடிச் சுவரில் சாய்த்து, “இவ்ளோ கொழுப்பு எங்க இருந்து வந்துச்சு உனக்கு. பணம் இருந்தா நீ பெரிய இவளா? என்னைக் குனிய வச்சு மட்டம் தட்டலாம்னு நினைக்காத. உன் ஆசை ஒருநாளும் நடக்காது.” என்றவனிடமிருந்து தன் கழுத்தைக் காப்பாற்றிக் கொள்ள எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை ரிது சதிகா.

ஆணவத்தோடு தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவள் பார்வையில், உஷ்ணம் தலைக்கேறி இன்னும் மூர்க்கத்தனத்தைக் காட்டியவன், “ஒரு நாள் இல்ல ஒரு நாள், ரோட்ல தான்டி நிப்ப. அந்த மாதிரி நேரத்துல ஒரு ஈ, காக்கா கூட உதவி செய்ய வராது. தாகத்துக்குத் தண்ணி கூடக் கிடைக்காம துடிதுடிச்சு சாகப் போறடி.” என்றதும் அவள் உதடுகள் விரிந்தது.

“சிரிக்காத, அப்படியே சாவடிச்சிடுவேன்.”

“உன் சாபம் என்னைக்கும் பலிக்காது.”

“திரும்பத் திரும்ப ஆணவத்துல பேசாதடி. என் சாபம் பலிக்குதோ இல்லையோ, கண்டிப்பா உன்ன ஒரு நாள் அப்படி நிற்க வைப்பேன்.”

“ஹா ஹா…”

“பணத்துக்கும், ஆணவத்துக்கும் பிறந்த ரத்தக் காட்டேரிடி நீ. உன்ன மாதிரி ஒருத்தி பக்கத்துல நிக்கிறது அவ்ளோ அசிங்கமா இருக்கு. கடவுள் எல்லாருக்கும் அளந்துதான் வைப்பான்னு உன் விஷயத்துல நிரூபணம் ஆயிடுச்சு. ஒண்ணுமே இல்லாம வெறும் பணத்த வச்சுக்கிட்டு இவ்ளோ ஆணவமா பேசுறியே, எல்லாம் இருந்துட்டா எவ்ளோ ஆடுவ? உன்னோட பாவம் தான்டி, உங்க அம்மாவ இப்படிப் படுத்த படுக்கையா வச்சிருக்கு.”

“கருடா!” என்றவள் குரலில் அந்த அறை நிலநடுக்கத்தின் அதிர்வைக் கண்டது.

“இன்னொரு தடவை என் பேரு உன் வாயில இருந்து வந்துச்சு, அப்படியே குரல் வளையக் கடிச்சுத் துப்பிடுவேன். என் பேரைச் சொல்றதுக்கு ஒரு தகுதி வேணும். உன்னை மாதிரி ஈவு இரக்கமில்லாத ரத்தக் காட்டேரி சொல்லக் கூடாது.”

“கைய எடு!”

“ஆணவம்!” என அவன் இன்னும் கழுத்தை நசுக்க, “கைய எடுடா…” என்று பல்லைக் கடித்தாள்.

“முடிஞ்சா எடுத்துக்க.”

“நீயா எடுத்துட்டா மரியாதையா இருக்கும்.”

“உன்கிட்ட இருந்து கிடைக்கிற மரியாதை எனக்கு வேண்டாம்டி.”

“எடுடா…”

“உன்னலாம் பேசவே விடக்கூடாது.” என அவள் மூச்சு சிதையும் அளவிற்கு இறுக்கத்தைக் கொடுத்தான். மீட்க முடியாமல் மீட்டெடுத்தவள்,

“பார்த்தீங்களா, உங்க பையன் பண்றதை.” என்றாள்.

இரவு போல் தன்னை ஏமாற்றுவதாக நினைத்தவன், “எங்க அம்மாவக் காட்டி என்னை அடக்கலாம்னு பார்க்கறியா? அவங்க முகத்துக்காகத் தான் இன்னும் நீ உயிரோடு இருக்க.” என்றான்.

“இப்பச் சொல்லுங்க, உங்க வளர்ப்பு நல்ல வளர்ப்பா?”

“எவ்ளோ தத்ரூபமா நடிக்கிற? உன்ன விட்டு வச்சால் தானடி எங்க அம்மா பேரைச் சொல்லி மிரட்டுவ.” என அவன் முழுத் தீவிரத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் நேரம்,

“கருடா…” என்ற அன்னையின் குரல் கேட்டது.

வெடிக்கத் துடிக்கும் இரு மின்சார ஒயர்களை முறுக்கி, இதயத்தில் சொருகியது போல் அரண்டு திரும்பினான். மகன் செய்யும் அட்டூழியங்களைப் பார்த்தபடி கைப்பேசிக்குள் இருந்தார் சரளா. அவரோடு சத்யராஜ் அமர்ந்திருந்தார். இவை ரிதுசதிகாவின் பக்காவான சதித்திட்டம்! நேற்று இரவு அவன் பேசியது மண்டையைக் குடைந்தது. அதற்கான தகுந்த பாடத்தையும், தனக்குக் கீழ் வேலை செய்ய வைக்கவும் முடிவெடுத்தவள் கட்டியவனின் பெற்றோர்களைத் தொடர்பு கொண்டாள்.

“நம்ம ஸ்டேட்டஸ்க்கு இனி ஆட்டோ ஓட்டாத, ஆபீஸ்ல வந்து வேலை பாருன்னு எவ்வளவோ சொல்லிட்டேன். உங்க பையன் முரண்டு பிடிச்சிட்டு நிக்கிறான். எங்களுக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு. அதை ஏற்கெனவே தாலி கட்டி, உங்க பையன் பாதி குறைச்சிட்டான். மீதி இருக்கிறதையும் குறைக்கப் பார்க்கிறான். என்னைப் பெத்த என் அப்பாவுக்கு என்னால எவ்ளோ தலைக்குனிவு தெரியுமா? நீங்களே உங்க பையன் எப்படி நடந்துக்கிறான்னு பாருங்க.” என்றவள் வீடியோ அழைப்பின் மூலம் அனைத்தையும் பார்க்க வைத்தாள்.

“அம்மா!” என்ற வார்த்தைக்குப் பின் கருடேந்திரன் வாயிலிருந்து எந்த வார்த்தையும் உதிக்கவில்லை. மகனைக் கண்காணிப்பதற்காக வாய்க்குப் பூட்டுப் போட்டு அமைதியாக அமர்ந்திருந்த சரளா,

“எதுக்குடா இவ்வளவு முரட்டுத்தனமா அந்தப் பொண்ணுகிட்ட நடந்துக்குற. நீ பண்ண எல்லாத்தையும் மன்னிச்சுட்டு, உன்ன ஒரு நல்ல இடத்துல உட்கார வைக்கணும்னு நினைக்கிறாடா. அதைப் புரிஞ்சிக்காம இப்படி நடந்துக்கறியே. திரும்பத் திரும்ப என்னையும், என் வளர்ப்பையும் ரொம்ப அவமானப்படுத்துற. உன் மேல இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிடுச்சு. இனி என்னையும், நம்ம குடும்பத்தையும் மறந்துடு.” என்றவர் அழைப்பைத் துண்டித்தார்.

“அம்மா… அப்பா…” என மறைந்தவர்களைக் கண்டு பதறி ஓடி வந்தவன் கையைப் பிடித்தவள்,

“அவங்க போயிட்டாங்க.” என்றாள் குதூகலமாக.

பதில் வாதம் செய்வதற்கு மனத்தில் தெம்பு இல்லாததால் முறைப்பும் தவிப்புமாக நின்றிருக்க, “நானா கண் காட்டுற வரை பேசாதீங்கன்னு சொல்லிட்டு மியூட்ல போட்டுட்டேன். நான் சொல்றதை நம்பி எப்படிச் சத்தம் போடாம இருந்தாங்க பார்த்தியா?” என்றவளின் கூர்மையான சதியைப் புரிந்து கொண்டவனால் ஒன்றும் செய்ய முடியாத நிலை.

விசில் அடித்துக் கொண்டு தன்னுடைய கைப்பையைத் தூக்கி அவனிடம் போட, பிடித்துக் கொண்டான்.

அதைக் கண்டவள், தன் வழிக்கு வந்து விட்டதை உணர்ந்து, “குட்” எனப் பாராட்டினாள்.

முறைக்கக் கூட முடியாமல் முழுத் தோல்வியில் நின்றிருக்கும் கருடனைப் பார்க்க மகிழ்வாக இருந்தது.

அந்த மகிழ்வோடு தன் மீது முழுவதும் வாசனைத் திரவியத்தை அடித்துக் கொண்டவள், “இன்னையில இருந்து இந்த ரிதுசதிகாவுக்கு நீ தான் டிரைவர். அந்தக் காக்கி சட்டையைத் தூக்கிப் போட்டுட்டு, பக்காவா ஒரு ஒயிட் ஷர்ட் போட்டுட்டு வந்து நில்லு. டிபன் முடிச்சிட்டு வரேன்.” எனக் கையசைத்து விட்டு வெளியேறினாள்.

***

“என்னடா ஆட்டோக்காரா ரெடியா?”

“ரெடிங்க முதலாளி!” என அவன் கை இரண்டையும் கட்டிக்கொண்டு பவ்யமாகக் குனிய, “பரவாயில்லையே, நடப்பைப் புரிஞ்சு சமத்தா நடந்துக்குற.” எனப் பாராட்டியவாறு வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

“எல்லாம் உங்க பாக்கியம் முதலாளி!”

“ரொம்பக் காக்கா பிடிக்காம ஆஃபீஸ்க்கு வண்டியை விடு.”

“சரிங்க முதலாளி!” என ஓட்டுநர் இருக்கையில் ஏறியமர்ந்தவன், இரு கைகளையும் ஒன்று குவித்துத் தலைக்கு மேல் உயர்த்தி, “தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” எனச் சத்தமாகக் கூறினான்.

சாதாரணமாக அமர்ந்திருந்தவள், கார்க் கதவுகள் உடையும் அளவிற்குக் கத்தும் அவன் வாசகத்தில் அரண்டு, “டேய்! எதுக்கு இப்படிக் கத்துற?” கேட்க,

“முதல் தடவையா கார் ஓட்டப் போறேன் முதலாளி. எதிர்ல வர வண்டில மோதி உங்க மண்டையை உடைச்சிடக் கூடாதுன்னு அந்த ஆண்டவன் கிட்ட வேண்டுறேன்.” என்றானே பார்க்கலாம்.

“என்னடா சொல்ற?”

அதிர்ச்சியில் வாய் பிளந்து கொண்டதைக் கூட அறியாது முகப்புக் கண்ணாடி வழியாக அவனைப் பார்த்திருக்க, “உங்க தயவால இப்படி ஒரு அனுபவம் கிடைச்சிருக்கு முதலாளி.” எனத் திரும்பி வாய்க்குள் இருக்கும் அத்தனைப் பற்களையும் பளிச்சிட்டுக் காட்டினான்.

“நிஜமாவே இதுக்கு முன்னாடி கார் ஓட்டுனது இல்லையா?”

“என்னை மாதிரி ஆளுக்கெல்லாம் ஆட்டோவே அதிகம் முதலாளி. கார் எங்க இருந்து…”

“கார் ஓட்டத் தெரியாதுன்னு முன்னாடியே சொல்றது தான…”

“எங்க முதலாளி சொல்ல விட்டீங்க?”

“ச்சீ! முதல்ல கார விட்டு இறங்கு.”

“டிரைவர் சீட்ல உட்கார்ந்துட்டேன் முதலாளி. இனி நானே நினைச்சாலும் எந்திரிக்க முடியாது. உங்களைச் சேர்க்க வேண்டிய இடத்துல சேர்த்ததுக்கு அப்புறம் தான் இதுக்குப் பிரியா விடை கொடுப்பேன்.” என்றவன் ப்ளூடூத்தைக் கனெக்ட் செய்து,

“செல்லாத்தா, செல்ல மாரியாத்தா…” என்ற அம்மன் பாடலை மிகச் சத்தமாக வைத்தான்.

உயிர் பற்றிய பயத்தில் உறைந்திருந்தவள், அதை அலற வைப்பது போல் ஒலிக்கும் பாடலில் இன்னும் மிரண்டு, “பாட்ட ஆஃப் பண்ணுடா.” கத்தினாள்.

“இப்படிச் சத்தமாப் பாட்டு ஓடுனா தான், தூங்காம வண்டி ஓட்டுவேன் முதலாளி.”

“எது!”

“அட, ஆமா முதலாளி. ஒரு நாள் ஆட்டோ ஓட்டிட்டுப் போகும்போது என்னையும் மீறித் தூங்கிட்டேன். ஆட்டோல வந்த ரெண்டு பேரு எமதர்மன் காலடியில இடம் கேட்டுப் போயிட்டாங்க. அதுல இருந்து இப்படிச் சாமி பாட்டுப் போட்டா தான் வண்டி ஓட்டத் தெம்பு வரும்.”

“டேய் பரதேசி! இன்னும் என்னென்ன வச்சிருக்க? கொஞ்சம் கொஞ்சமா சொல்லி என் உசுர வாங்காம மொத்தத்தையும் சொல்லித் தொலை. உன்ன நம்பி உட்கார்ந்து இருக்கேன்.”

“இது மட்டும் தான் முதலாளி.” என்றவன் செய்த செயலைக் கண்டு பேசுவதையே நிறுத்தி விட்டாள் ரிது சதிகா.

சட்டைப் பையில் இருந்த முருகர் புகைப்படத்தைக் காரில் ஒட்ட வைத்தவன், அவரின் தந்தை முதல் கொண்டு தமையன் வரை வரிசையாகப் பக்கத்தில் ஒட்ட வைத்தான். அனைவருக்கும் மஞ்சள் நிறச் சாமந்திப் பூவைச் சூட்டியவன், ஊதுபத்தி ஒன்றை ஏற்றித் தீப தூப ஆராதனை காட்டினான். கடவுள் படத்திற்கு மூன்று முறை சுத்திப் புகை போட்டவன், பின்னால் திரும்பி ரிதுவிற்கு மூன்று முறை சுற்ற,

“லொக்! லொக்!” என இருமினாள்.

“நல்ல சகுனம்!” என அவள் இருமலுக்கு ஒரு பாராட்டைக் கொடுத்தவன், திருநீற்றை எடுத்து நெற்றியில் பட்டை போட்டான். ஏதோ மந்திரவாதியைப் பார்ப்பது போல் அவனின் கட்டியவள் பேய் முழியில் பார்த்துக் கொண்டிருக்க,

“வச்சுக்கோங்க முதலாளி!” அவள் புறமும் நீட்டினான்.

குமட்டிக் கொண்டு வந்தது அவன் தோரணையும், செயலும். அதை அவள் விழிகளை வைத்துப் புரிந்து கொண்டவன், “கடவுளே! எங்க முதலாளிக்கு தீர்க்க ஆயுசைக் கொடு!” என்று விட்டு மூன்று விரலில் திருநீற்றை நிரப்பி அவள் நெற்றியில் பட்டை போட்டான்.

“கையை எடுடா”

“கொல்லிமலை திருநீறு மேடம். வேண்டாம்னு சொல்லாதீங்க. எங்க அப்பனுக்குக் கோபம் வந்து சல்லுன்னு மேல இழுத்துக்கப் போறான். இங்கயாவது உங்க அம்மா, அப்பா ரெண்டு பேர் இருக்காங்க. அங்க உங்க அண்ணன் மட்டும் தான் இருக்காரு. அதுவும் இல்லாம அங்கப் பணமெல்லாம் இருக்காது.”

“உன் பைத்தியக்காரத் தனத்தை மூட்டை கட்டி வச்சுட்டு ஒழுங்கா ரோட்டப் பார்த்து வண்டிய ஓட்டு.”

“சரிங்க முதலாளி!” என்றவன் அவ்வளவு எளிதாக அந்த வண்டியை எடுத்து விடவில்லை.

ஆரம்பித்த உடனே சடன் பிரேக் போட்டவன், மீண்டும் இயக்க நான்கைந்து முறைகளை எடுத்துக் கொண்டான். பொறுமை கொஞ்சம் காற்றில் பறக்க ஆரம்பித்தது ரிதுவிற்கு. அதை முடிந்த மட்டும் சோதித்துப் பார்க்க முடிவெடுத்தான். வேகமாகக் காரை இயக்கிக் கேட்டில் இடிக்கச் சென்று அவள் இதயத்தை எகிற வைத்தான்.

“நீ வண்டி ஓட்டவே வேண்டாம். முதல்ல இறங்கு.”

“அம்மாக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க முதலாளி!”

“இறங்குடா…”

“அம்மா கிட்டச் சொல்லிடுவீங்க முதலாளி!” அநியாயத்திற்குச் சிணுங்கினான்.

“வாயில ஏதாச்சும் அசிங்கமா வந்துடும். இறங்குன்னு சொல்லிட்டேன்.”

அதுவரை பச்சைப்பிள்ளை போல் சிணுங்கிக் கொண்டிருந்தவன், கை முட்டியைப் பின்னால் ஓங்கி அவளை அடிக்கச் செல்ல, கைகளை முகத்திற்கு முன்வைத்துத் தலையைத் திருப்பிக் கொண்டாள்.

“அந்தப் பயம் இருக்கணும்!” என்று விட்டுக் கையைக் கீழ் இறக்கியவன்,

“இப்படித்தான் ஓட்டுவேன். நானா இறக்கி விடுற வரைக்கும் பேசாம இருக்கணும். இல்லன்னா பல்லு வாயெல்லாம் பறந்துடும். அப்புறம் கோடி கோடியாய் பதுக்கி வச்ச பணத்தைக் கொட்டி பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்க வேண்டியதா இருக்கும். இப்பவே உன் மூஞ்சியப் பார்க்க முடியல. இதுல அப்படி எல்லாம் பண்ணினா, எதிர்ல இருக்கிறவன் கண்ணு அவிஞ்சிடும்.” என்றதும் அவளின் முறைப்பு அதிகமானது.

“பெரிய ஆயிரம் கண் கண்ணாத்தா இவ… கண்ணாலயே எரிச்சுப் பஸ்பம் ஆக்கிடுவா. மூடிக்கிட்டு வாடி மூதேவி!”

“யூ ராஸ்கல்! உன்னை என்ன பண்றேன்னு பாருடா.” எனக் கைப்பைக்குள் இருந்த போனைத் தேட,

“இதுவான்னு பாருடி ராட்சசி!” எனத் தன் கைக்குள் இருந்த அவள் போனை உயர்த்திக் காட்டினான்.

“இது எப்படிடா உன் கிட்ட வந்துச்சு?”

“உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல நேரம் இல்லை. நானா வண்டிய நிறுத்துற வரைக்கும் இந்தக் கார் உனக்கு ஜெயில், நான் சிறை அதிகாரி! நீ குற்றவாளி!” என வஞ்சகமான சிரிப்பைப் படர விட்டு,

“போவோமா, சிறை ஊர் கோலம்!” பாடினான்.

“வேணாம்டா, மரியாதையா இத்தோட நிறுத்திக்க. உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன் உன்ன. எந்திரிக்க முடியாத அளவுக்கு அடிப்பேன்டா.”

ரிது சதிகா ஆக்ரோஷத்தோடு எச்சரித்துக் கொண்டிருக்க, சிறிதும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை கருடேந்திரன். அதில் அவளின் சினம் எகிறியது. கண்டமேனிக்கு, வார்த்தைகளைக் கடிந்து துப்பினாள். சின்னதாக இருக்கும் முன்பக்கக் கண்ணாடி வழியாக, அவள் முகத்தைக் கண்டவனுக்குக் காலையில் பட்ட அவஸ்தைக்கான மருந்து கிடைத்தது.

“இருடா, உனக்கு இருக்கு.” எனக் காரை விட்டு இறங்க முயற்சிக்கும் நேரம், “ட்டுர்ர்ர்…” வேகமாகக் காரை எடுத்தான்.

“ஆ… ஹே… இடியட்!”

“டோர க்ளோஸ் பண்ணுடி.”

“கார நிறுத்துடா…”

“க்ளோஸ் பண்றியா, இல்ல நேரா போய் செவுத்துல முட்டவா?”

“அப்பா…” எனத் தந்தையை அவள் அழைக்க, மின்னலை ஓட்டத்தில் காட்டினான். அடித்துப் பிடித்துச் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டவள் பலமான மூச்சுகளோடு அமர்ந்து வர, அவனின் வேகம் குறைவதாக இல்லை.

அங்கு ஆரம்பித்த அவளின் ஓட்டம், நான்கு மணி நேரம் ஆகியும் நின்ற பாடில்லை. ஒரு மணி நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு, நான்கு மணி நேரமாக அலைந்து கொண்டிருக்கிறான். பின்னால் இருந்தவள், கத்திக் கூப்பாடு போட்டும் பிரயோஜனம் இல்லாமல் போனது. காலை உணவை முடித்தவள் மரண பயத்தில் அமர்ந்து வர, தாலி கட்டியவளை ஒருவழி செய்துவிட்டு, நேராக மதிய உணவையே உண்ணலாம் என்ற முடிவோடு ஓட்டிக் கொண்டிருக்கிறான்.

ஒரு வழியாக நண்பகல் 12 மணிக்கு அவளது அலுவலகத்தின் முன் காரை நிறுத்தினான். ராட்சத ராட்டினத்தில், ஒரு நாள் முழுவதும் சுற்றிய உணர்வோடு கண் மூடியவளுக்கு இன்னும் அந்தத் தலைசுற்றல் அடங்கவில்லை.

“முதலாளி! எந்திரிங்க முதலாளி!”

அவள் அசையாமல், இருக்கையில் தலை சாய்ந்து கண் மூடியவாறு அமர்ந்திருக்க, “அய்யய்யோ! செத்துப் போயிட்டீங்களா முதலாளி. இப்ப நான் என்ன பண்ணுவேன்? ஒரு நாள் சம்பளம் போச்சே. அப்பவே சொன்னேன், எங்க அப்பன் திருநீறைப் பகைக்காதிங்கன்னு. இப்படி அநியாயமா மொட்டத் தலையோட மேல போயிட்டிங்களே…” என அவளை உசுப்பி ஒப்பாரி வைத்தான்.

அவசரம் இல்லாமல், ஆர்ப்பாட்டம் காட்டாமல், அழுத்தமான பார்வையோடு கண் திறந்தவள், மூச்சு வழியாகத் தன் கோபத்தைக் காட்டிக் கொண்டிருக்க, “அப்பாடா!” என நெஞ்சில் கை வைத்தான்.

அவளின் கனல் மூச்சு இன்னும் அதிகரித்தது. அவை எனக்கு ஒரு விஷயமே இல்லை என்பது போல், “எப்படி முதலாளி இருந்துச்சு, என்னோட டிரைவிங்? சம்பளத்தைக் கொஞ்சம் கூட்டிக் கொடுப்பீங்க தான.” என்றான்.

“இதுக்கு உனக்கு இருக்குடா”

“சரிதான் போடி!” எனக் காரை விட்டு இறங்கினான்.

அவளும் இறங்கிட, “இங்க எதுக்குடா கூட்டிட்டு வந்திருக்க?” வினவினாள்.

“இந்த இன்ஸ்டிட்யூட்ல எவ்ளோ பெரிய பிரச்சினை போகுதுன்னு தெரிஞ்சும், எட்டிப் பார்க்காமல் இருக்க. இருக்கற பணத்தைப் பாதுகாக்கவே உன் ஆயுசு முடிஞ்சிடும். இன்னும் சேர்த்து வைக்காம உண்மையைக் கண்டுபிடி.”

“எப்ப, என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும். நீ எனக்கு ஆர்டர் போடாத.”

“இன்னைக்கு நீ இங்கதான் இருக்கணும். இந்த இடத்தை விட்டு எங்கயும் நகரக் கூடாது.”

பொறுமையே இல்லாதவள் பெயருக்கென்று பிடித்து வைத்த பொறுமையைத் தூக்கி அடித்து விட்டு, “மரியாதை கெட்டுடும். என் வீட்டு வேலைக்காரனா மட்டும் நடந்துக்க. என்னை இது செய், அது செய்யின்னு சொல்லாத. அப்புறம் பின் விளைவுகள் மோசமா இருக்கும்.”

“அடப்போடி!” என்றவன் பவ்வியமாகப் பட்டன் போட்டு வைத்திருந்த கை பட்டன்களை அவிழ்த்து, முட்டிவரை ஏற்றிக் கட்டி, “வா போகலாம்” என அலேக்காக அவளைத் தூக்கிக் கொண்டான்.

சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், அவன் கொடுத்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாது தடுமாறியவள் துள்ள, “உன்கிட்ட வேலை பார்க்குறவங்க யாராவது பார்த்தாங்கன்னா, உன் மானம்தான் போகும்.” என அவள் வாயை அடைத்தான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!