அத்தியாயம் 14
என் விழியில்
உன் இமையாய்…
என் மொழியில்
உன் பதமாய்…
என் உணர்வில்
உன் உணர்வாய்…
நம் அன்பில்
நிறைந்திடுவாய்!!!
—————-
கண்ணை மூடிப் பிரகிருதியின் முத்தத்தை ஏற்றுக்கொண்ட ஷக்தி மகிழவனின் மூடிய கருவிழிகள் அங்கும் இங்கும் உருண்டது.
“என்ன பீல் பண்றீங்க மகிழ்?” வெட்கம் மின்னப் பிரகிருதி கேட்க, அவன் கைக்கடிகாரத்தினுள் தலையைப் புகுத்தினான்.
கையைக் கட்டிக்கொண்டு அவனை ரசித்திருந்தாள் பிரகிருதி.
‘என்ன சொல்லப் போகிறான்’ என்ற ஆர்வம் மின்னியது. சில நொடிகளில் அவன் விழிகளிலும் சிறு மின்னல்.
“உன் கிஸ் உள்ளே கலவரம் பண்ணுது ருதிடா. இட்ஸ் ஆஸம்!” அவள் செட் செய்து வைத்திருந்த வாசகத்தைக் கூறியதும் அவளுள் சிலிர்ப்பு.
வார்த்தையால் அவனது உணர்வுகளை வெளிப்படுத்துவது, அவளுக்கு அதீத மகிழ்வைக் கொடுத்தது.
புன்னகைத்திருந்த பாவையின் இதழ்களின் ஈரம் ஈர்க்க, “லிப் டச்” என்றான் ரசனையாக.
கன்னம் சிவந்து தலை குனிந்தவள், “ம்ம்” எனத் தலையசைக்க, “இந்தத் தடவை என் கண்ணைப் பார்க்கணும்.” அவன் ரசித்துக் கூறியதில் மீண்டும் தலையசைத்தாள்.
ஷக்தி அவள் கன்னத்தை இரு கைகளிலும் பற்றிக் கொள்ள, மூச்சு விடவே சிரமம் எழுந்தது அவளுக்கு.
நிமிர்ந்து அவனது கண்களைக் கண்டவளுக்கு, ஒட்டு மொத்த உலகமும் உறைந்து விட்டது போலொரு பிரம்மை.
பிரகிருதியின் கண் சிறைக்குள் சிக்கிக் கொண்ட ஷக்திக்கும் பெயர் தெரியா உணர்வு. இதழ் வரியில் சிக்கித் தவித்த ஷக்தியின் அதரங்கள் முழுச் சுவையையும் ருசி பார்க்க உவகை கொண்டது.
ஆகினும், அவளது மனநிலையைக் கருத்தில் கொண்டு அவள் இதழ் மீது தன்னிதழைப் பொருந்தியவன், அந்தச் சூட்டில் உருகினான்.
தன்னை ஆழமாய் உற்று நோக்கும் கருவிழிகளை எத்தனை நேரம் தான் கண்ணிமைக்காமல் காண்பதாம்?
நாணம் பிரவாகமெடுக்க அவனிடம் இருந்து விலகியவளுக்கு, நெஞ்சமெல்லாம் பனித்துளிகள் படர்ந்த வண்ணம் இருந்தது.
“டைம் ஆச்சு. கிளம்பலாமா ருதி?”
அவன் எவ்வித உணர்வுமற்றுக் கேட்க, அம்முத்தம் தந்த தாக்கத்தை அனுபவிக்க, அவளுக்குச் சில நிமிடங்கள் தேவைப்பட்டது.
“ஒரு அஞ்சு நிமிஷத்துல வரேன்…”
“ம்ம்… ஓகே, நான் கார்ல இருக்கேன்.” என அவன் காரை நோக்கிச் சென்றான்.
ஷக்தி மகிழவனும், பிரகிருதியும் லேகா வீட்டிற்குச் செல்ல, அங்கோ உறவினர்களின் வரவால் வீடே ஜொலித்தது.
‘பார்ட்டி’ என்றதும் இருவரும் இதனை எதிர்பார்த்ததால் சற்றே இயல்பாகவே இருந்தனர்.
லேகா மருமகளை அனைவரிடமும் பெருமையாய் அறிமுகம் செய்ய, அவர்கள் வீட்டிற்கு முன் இருக்கும் லானில் தான் கேக் கட் செய்யவும் ஏற்பாடு ஆகியிருந்தது.
சிகப்பு நிற வெல்வெட் கேக்கின் வாசமும், அதிக நறுமணம் கொண்ட பிரியாணியின் மணமும், குடலைப் பிரட்ட வைத்தது பிரகிருதிக்கு.
அந்த உணவைத் தட்டில் வைத்து வம்படியாக உண்ணும்படி சொல்லும் உறவினர்கள் ஒரு பக்கம்.
லேகாவோ, மகனைப் பற்றித் தெரிந்து அவனை எதற்கும் வற்புறுத்தாது, மருமகளை அவனுக்கும் சேர்த்து உறவினர்களின் முன் சாதாரணம் போல இருக்க அதிக அழுத்தம் கொடுத்தார்.
இப்போது வரை அவளிடம், மகனைப் பற்றிய உண்மையைக் கூறாத குற்ற உணர்வு எதுவும் எழவில்லை அவருக்கு.
கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கிறான். மூளைக்காரன்! அவனை ரிஜெக்ட் செய்த பெண்கள் அனைவரும் மனசாட்சியற்றவர்கள் என்பதே அவரின் எண்ணம்.
தாயாக, மகனுக்கு நல்வாழ்க்கை அமைய வேண்டுமென எண்ணியது வரை பரவாயில்லை. ஆனால், அவனைப் பற்றிய உண்மையை மறைத்தது தவறு தானே!
அதை எல்லாம் பொருட்படுத்தாது, “பிரகா… என் ஒன்னுவிட்ட சித்தி வந்துருக்காங்க. அவங்களுக்குக் கேக் குடு.” என்று பத்தாவது முறையாக வேலை சொல்ல அவளுக்கு அழுகையே வரும்போல இருந்தது.
அந்தக் கேக்கின் மினுமினுக்கும் வண்ணமும், அவளது தாம்பத்ய வாழ்வு பற்றியும் கேட்டுக் கேலி புரிந்து, அவர்களின் ஒட்டுதலை அறிய எண்ணிய உறவினர்களின் பேச்சும் அவளுக்கு ரசிக்கவில்லை.
லேகாவால் நேரடியாகக் கேட்க இயலாததை, அவரின் உற்ற உறவினர்களின் மூலம் அவளிடம் கேட்க வைத்ததைப் பாவம் அவள் அறியவில்லை.
ஏற்கெனவே ஒரு வித அழுத்தத்தில் இருந்தவள், புன்னகை மாறாது இருக்க அரும்பாடுபட, லேகா அவளைப் பற்றி இன்னொருவரிடம் பேசும் பொருட்டு, “இவள் என் மருமக…” என அறிமுகம் செய்ய அவளது தோள் மீது கைபோட்டுக் கொண்டார்.
அதிலேயே அவளுக்கு நடுக்கம் பிறக்கத் தொடங்கியது.
மாமியாரின் கையை எடுக்க முயன்றவளுக்குத் தோல்வியே கிட்ட, சற்றே தூரத்தில் நின்று பழச்சாறு அருந்திக் கொண்டிருந்த ஷக்தி மகிழவனின் கண்ணில் விழுந்தாள்.
அவளது உடல்மொழியில், அவளின் தவிப்புகளை உணர்ந்தவன் போல வேக நடையுடன் அவளருகில் வந்தவன், பிரகிருதியின் மீதிருந்த லேகாவின் கையை எடுத்து விட்டான்.
“அவளுக்குத் தொட்டுப் பேசுனா பிடிக்காதுமா… ஸ்டே அவே ஃபிரம் ஹர்…” என்றவன் அவளைத் தன் கை வளைவிற்குள் வைத்துக் கொண்டான்.
இன்னும் நடுக்கம் நின்ற பாடில்லை பிரகிருதிக்கு.
“ஃப்ரெஷ் ஏர் வேணுமா ருதிடா?”
அவள் புறம் குனிந்து ஷக்தி கேட்க, இருவரையும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த லேகாவின் மீது எழுந்த பயத்தை மறைத்தபடி தலையசைத்தாள்.
“பார்ட்டி போதும்மா, நாங்க வீட்டுக்குக் கிளம்புறோம்.” என்றவன் மற்றவர்களின் பதிலை எதிர்பாராது மனையாளை அழைத்துக் கொண்டு கிளம்பியே விட்டான்.
காரில் அவளை அமரச்செய்து சில நொடிகள் தனிமை கொடுத்தவன், “இப்ப ஓகேவாடா?” எனக் கேட்க, கலங்கிய கண்களுடன் தலையாட்டினாள்.
“உனக்கு கம்ஃபர்ட்டா இல்லைன்னா சொல்லிருக்கலாம்ல?” அவனது கேள்விக்குப் பதில் கூறாதவளாக,
“நீங்க ஏன் எல்லார் முன்னாடியும் எனக்குத் தொட்டால் பிடிக்காதுன்னு சொன்னீங்க? எல்லாரும் என்ன நினைப்பாங்க…” என்றவளுக்கு அழுகை வந்தது.
“உனக்குப் பிடிக்காது தான? அதைத்தான் சொன்னேன். மத்தவங்களுக்காக, நம்ம ஏன் யோசிக்கணும்?” ஷக்தி புருவம் சுருக்கிப் பார்த்தான்.
“எனக்கு இருக்குற பிராப்ளம் மத்தவங்களுக்குத் தெரிஞ்சா பரவாயில்லையா?” கண்ணில் நீர் தேங்கக் கேட்டவளிடம், “யாருக்குத் தெரிஞ்சாலும் ஐ டோன்ட் கேர்!” என்றான் அழுத்தமாய்.
“ஆனா எனக்கு அப்படி இல்ல. எல்லார்ட்டயும் நான் பெர்ஃபக்ட்டா இருக்கணும்னு நினைப்பேன். என்னைப் பத்தித் தெரிஞ்சா எல்லாரும் என்னை ஒரு மாதிரியா பார்ப்பாங்க. எனக்கு ஆக்வர்டா இருக்கும்.” என மூக்கை உறிஞ்ச, அவளை நிதானமாக ஏறிட்டவன்,
“அப்போ என்னைப் பத்தி மத்தவங்களுக்குத் தெரிஞ்சாலும், உனக்கு ஆக்வர்டா இருக்குமா?” என வினவினான்.
“உங்களை அப்படித் தப்பாய் பார்த்தா நான் சும்மா இருக்க மாட்டேன் மகிழ்” மெலிதாய் சீறினாள்.
“சோ, நானும் அப்படித்தான்! எதையும் யார்கிட்டயும் மறைச்சு வைக்கணும்னு எனக்குத் தேவையும் இல்ல. எல்லாம் தெரிஞ்சு உன்னை ஆக்வர்டா பீல் பண்ண வச்சா, சைலண்டாடவும் இருக்க மாட்டேன் ருதி…” என்றவனின் குரலில் அழுத்தம் மிகுந்தது.
அதில் மனத்திலிருக்கும் அழுத்தமெலாம் மறைந்து போவது போலொரு மாயை பிரகிருதிக்கு.
நாள்கள் அதன் போக்கில் கரைய, இருவருக்கும் இருக்கும் நெருக்கம் அதிகரித்தது.
தினமும் ஒரு முறையாவது அவள் பரிசளித்த கைக்கடிகாரத்தில் இருந்து ஒரு காதல் வார்த்தையைக் கூறி அவளைக் குளிரச் செய்வான்.
அது ஒரு ஷெடியூலாக இருவருக்கும் மாறினாலும், திட்டமிட்டுக் காதல் செய்வதும் அவர்களைப் பொறுத்தவரை இனிமையாக இருந்தது.
அவர்களது உறவில் ஆச்சரியங்களுக்கு இடமில்லை.
“உன்னை வியக்க வைக்கப் போகிறேன்” என அவளைத் தயார்படுத்தி விட்டே அவளுக்குப் பரிசுகள் கொடுப்பான்.
“நாளைக்கு எனக்குக் கிஸ் குடுக்கணும். நோட் பண்ணிக்கோங்க.” என்று முந்தைய நாளே கணவனுக்கு அறிவுறுத்தி விடுவாள் பிரகிருதி.
அவளுக்கு அதீத நறுமணம் கொண்ட பெர்ஃபியூம்கள், உணவு வகைகள் பிடிக்காததால் அவனும் அவற்றை எல்லாம் தவிர்த்துக் கொண்டான்.
அவனுக்கு ஒரே உணவு முறையை வழக்கமாக்கி இருப்பதால், அவனது உணவுப் பழக்கத்திற்கு அவள் தன்னை மாற்றி இருந்தாள்.
நாள் செல்லச் செல்ல, தன்னைப் பற்றித் தனது உணர்வுகள் பற்றி அறிய அந்தக் கைக்கடிகாரம் தேவைப்படவில்லை ஷக்திக்கு.
“ருதிடா… இன்னைக்கு ஆபிஸ்ல நிறைய வேலை பெண்டிங்ல இருந்துச்சு. மனசு ஒரு மாதிரி எரியுது, என்ன செய்யுது எனக்கு?” என அவள் தோள்மீது சாய்ந்து கொண்டு கேட்பான்.
அவன் தலையின் மீது தானும் சாய்ந்து கொள்பவள், “ஒர்க் பெண்டிங்ல வச்சது யார் மகிழ்?” என வினவ, “என் மேனேஜர்…” என்றான்.
“அப்போ உங்களுக்கு அவர் மேல கோபம் வந்துருக்கு. அதைக் காட்ட முடியாம டிப்ரெஸ் ஆகிட்டீங்க. அந்த மாதிரி நேரத்துல டீப் பிரீதிங் எடுத்துக்கோங்க!”
“என் பிரீத்திங் எடுத்தா, எனக்கு எரிச்சல் குறைய மாட்டேங்குது. உன்னை ப்ரீத் பண்ணுனா இட்ஸ் பெட்டர்!” அவன் தீவிரத்துடன் கூற, பிரகிருதியின் வதனத்தில் சிவப்பின் சாயல்.
அதனை ரசித்தவன், “நான் உன்னை டெம்ப்ட் பண்ணிட்டேனோ. ஷை ஆகுற…” எனக் கேட்க, “அச்சோ!” என முகத்தை மூடி அவன் நெஞ்சில் வெட்கத்தை மறைத்துக் கொண்டாள்.
மேலும் சில நாள்கள் செல்ல, அவளது மடியில் தலை வைத்துப் படுத்திருந்த ஷக்தி மகிழவன், பிரகிருதியின் முகவடிவைக் கண்களால் அளந்து கொண்டிருந்தான்.
“ருதிடா!”
“ம்ம்…”
“லிப் டச்சிங், எப்ப லிப் கிஸ்ஸா மாறும்? யூ நோ அபவுட் ஃபிரென்ச் கிஸ்?” எனச் சாதாரணமாய் கேட்க, அவளுக்குத் தான் அவஸ்தையாகிப் போனது.
“சொல்லிக் கொடுங்க!” அவன் கண்ணைப் பாராமல் பிரகிருதி கூற,
“என் கண்ணைப் பார்த்தா கண்டிப்பா சொல்லித் தரேன்!” என்றான் ஷக்தி.
“ஃபீலிங்ஸ் இல்ல, இல்லனு சொல்லிட்டு, என்னை ரொம்ப நீங்க ஃபீல் பண்ண வைக்கிறீங்க மகிழ். டூ பேட் நீங்க!” எனச் சிணுங்கினாள்.
அந்தச் சிணுங்கலில் சிக்கிக் கொண்ட இதயத்தைப் பிரிக்க மனம் வராதவனாக, “நான் பீல் பண்ண மாட்டேன்னு சொல்லல. எக்ஸாட்டா எப்படி ஃபீல் பண்ணுவேன், அந்த ஃபீலிங்க்கு என்ன பேர்னு எனக்குச் சொல்லத் தெரியாது, அவ்ளோ தான். ஐ கேன் பீல் யூ!” என்றான் சின்னப் புன்னகையுடன்.
தெளிந்த நீரோடையாக நகர்ந்து கொண்டிருந்த நாள்கள், மகிழ்வை அள்ளிக் கொடுத்தது இருவருக்கும்.
அன்று ரேடியோ ஸ்டேஷனில் இருந்து சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்து விட்ட பிரகிருதியை, அதிர்ச்சியூட்டும் வண்ணம் லேகா வந்திருந்தார்.
பிறந்தநாள் விழாவில் இருந்து பாதியில் வந்தது முதல், மருமகளிடம் சரியாகப் பேசுவதில்லை அவர்.
அவரைக் கண்டதும் மெல்லத் திகைத்தவள், “என்ன திடீர்னு வந்துருக்கீங்க?” எனக் கேட்க வந்து விட்டு, அந்த வார்த்தையை விழுங்கிக் கொண்டாள்.
“வாங்க அத்தை…” என்றவளிடம் முகம் திருப்பிக் கொண்டவர்,
“பர்த்டே முடிஞ்சு எவ்ளோ நாள் ஆகுது? ஏன் எனக்கு போன் பண்ணல. நேர்ல வந்து பார்த்துச் சீக்கிரம் கிளம்புனதுக்கு விளக்கமும் சொல்லல.” எனக் கோபம் கொள்ள, அவள் திருதிருவென விழித்தாள்.
“அது வந்து அத்தை… உங்களுக்கு போன் பண்ணுனேன், நீங்க எடுக்கல.” அவள் எச்சிலை விழுங்க,
“கால் எடுக்கலைன்னா நேர்ல வந்து கேட்கணும்னு தெரியாதா உனக்கு? கோபமா இருக்கேன்னு தெரியுது தான?” எனச் சீறினார்.
“நான் என்ன தப்புச் செஞ்சேன் அத்தை? நீங்க ஏதோ வேலையா இருக்குறதுனால எடுக்கலைன்னு நினைச்சேன்.”
“உன்னை நம்பி ஒரு பார்ட்டி அரேஞ்சு பண்ணுனா, பாதில கிளம்புற. உனக்கு அவன் வேற சப்போர்ட்! ஏற்கெனவே சொந்தக்காரங்க உன் மகனுக்கு எப்படி நார்மல் பொண்ணு கிடைச்சான்னு கேட்டு…” என ஆரம்பித்தவர் அதனை விழுங்கிக் கொண்டார்.
அவர் சொல்ல வருவது அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது. ஆகினும், தன்னை ஏமாற்றி உண்மையை மறைத்ததற்காகக் கோபம் கொள்ளத் தோன்றவில்லை.
அதேநேரம், தன்னைப் பற்றித் தெரிந்தால் என்னவாகுமென்ற பயமும் எழுந்தது.
அவள் பதில் பேசாது யோசனையில் இருக்க, “சரி சரி, 5 மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கேன். கிளம்பு!” என்றார் லேகா.
புருவம் சுருக்கிய பிரகிருதி, “எதுக்கு அத்தை?” எனக் கேட்க,
“மேரேஜ் முடிஞ்சு நாலு மாசம் ஆகிடுச்சு பிரகா…” என்றார் சம்பந்தமின்றி.
அப்போதும் குழப்பத்துடன் நின்றாள்.
“நீயும் குட் நியூஸ் சொல்லுவன்னு ஒவ்வொரு மாசமும் எதிர்பார்த்துட்டு இருக்கேன். ஊட்டிக்கு ஹனிமூன் போயிட்டு வந்த மாசமே நான் எதிர்பார்த்தேன்.”
“என்ன எதிர்பார்த்தீங்க?”
“ப்ச்! நீ கன்சீவ் ஆகுவன்னு தான். எதுக்கும் டாக்டர்கிட்ட செக் பண்ணிட்டு வரலாம்… உங்களைத் தனியா இருக்க விட்டதே இதுக்குத் தான?” என்றவரை அதிர்ந்து பார்த்தாள்.
—————
அத்தியாயம் 15
நின் புரிதல்
நான் புரிந்தால்
நம் பிரிதல்
நேராதோ!
என் நேசம்
நீ நினைந்தால்
நம் நோவும்
தீறாதோ!
நம் நினைவில்
நாம் உழன்றால்
உள்நெஞ்சம்
உறவாடுமோ!
——————-