காயமின்றி வாழும் காதல் – 15
மறுநாள் மேகலாவின் மூலம் விஷயம் அறிந்து கொண்டார்கள் வள்ளியின் வீட்டில். மற்றவர்கள் வருத்தப்பட, குறிஞ்சிக்கு கோபம் வந்தது. லவ்வை சொல்றதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் யோசிக்காம, இப்போ இந்த அத்தான் இப்படி பண்ணது கொஞ்சமும் சரி இல்லை! கொஞ்சம் நாள் தான் என்றாலும் அவன் குடும்பத்தார்கள் எவ்வளவு வருத்தப்பட்டார்கள்! தேவையில்லாத கவலை ஆயிற்று இப்போது!
இன்னொன்றும் தோன்றியது அவளுக்கு. அவனின் காதல் முறிவு சற்று நாட்களுக்கு முன் நேர்ந்து இருந்தால் அவள் ஏதாவது முயற்சி செய்து இருப்பாள். ஆனால் இவர்களுக்குள் திருமணம் செய்து கொள்ள யோகம் இல்லை போல், அதனால் தான் இவளுக்கு நிச்சயம் ஆனதும் அவன் காதல் முறிந்து இருக்கிறது!
இன்னொரு பொண்ணுக்கு முத்தம் கொடுத்த அத்தான் எனக்கு வேண்டாம்! சொல்லி கொண்டாள் குறிஞ்சி. சீ…சீ…. இந்த பழம் புளிக்கும் கதை தான்! வேறு வழி? அவள் மனம் அவளை எட்டி உதைத்தது!
அன்று மதியம் அவன் வீட்டிற்கு சென்றாள் குறிஞ்சி. ஷ்யாமளா மாலை ஊருக்கு கிளம்புவதால், அவளுக்கு பலகாரம் செய்ய போவதாக சொல்லி இருந்தார் மேகலா. வாசுகி இருப்பார் என்றாலும் பலகாரம் என்றால் மேகலா தான் செய்வார்.
ஹாலில் அமர்ந்து இருக்கும் அவனை கடந்து தான் சென்றாள் குறிஞ்சி. உள்ளே சென்றவள்,
“ஏன் அயித்தே? உங்க பிள்ளை நிஜமாலுமே வேலை பார்க்கிறாரா? இல்லையா? நான் பார்க்கிற நேரம் எல்லாம் லேப்டாப் முன்னாடி சும்மா தான் உட்கார்ந்து இருக்கிறார்” என்றாள் கிண்டலாக.
“அவன் அப்படி தாண்டி சொல்றான்!” அவரும் அவளுடன் சேர்ந்து சிரித்தார்.
அவள் வந்ததும் அவளுடன் பேச வேண்டும் போல் இருந்தது அவனுக்கு. விஷயம் தெரிந்து அவள் என்ன நினைக்கிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான். ஆனால் தயக்கமாகவும் இருந்தது. இருந்தாலும் அவள் என்ன செய்கிறாள் என்று பார்ப்போம் என்று எழுந்து வந்தவன் காதில் அவர்கள் பேசியது விழ,
“ஹேய் குள்ளி, வெறும் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்ச உனக்கு எவ்ளோ கொழுப்பு? ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயரை கிண்டல் பண்ணுறே? ஏம்மா, நீயும் இவ கூட சேர்ந்து என்னை கிண்டல் பண்றியா? உனக்கு நான் வாங்கி கொடுத்த வைர வளையலை திருப்பி கொடு” என்றான்.
“டேய்! நீ வேலை பார்க்கிறேனு தான் டா சொன்னேன்!” சிரிப்பு பொங்கியது மேகலாவிற்கு.
“யாரா இருந்தாலும் இந்த குறிஞ்சி உண்மையை தான் பேசுவாள்!” என்றாள் குறிஞ்சி கெத்தாக.
“அதில உண்மை இருந்தா பரவாயில்லையே, நீ பாட்டுக்கு உன் இஷ்டம் போல அள்ளி விட்டுட்டு போனா என் இமேஜ் என்னவாகிறது? வா இங்கே, நான் என்ன பண்றேன் காட்டுறேன்” என்று அவளை இழுத்து போனான். ஹாலிற்கு சென்றவுடன்,
“விடுங்க அத்தான், நான் தான் பார்க்கிறேனே ஒரு வாரமா!”
“அப்போ என்னை பார்க்கிறதை தான் வேலையா வைச்சு இருக்கே?”
பேச்சு பேச்சாக இருக்க, இருவரின் கண்களும் கவ்வி கொண்டு நின்றது. அவன் பிடியில் இருந்த கைகளில் இறுக்கத்தை உணர்ந்தாள் குறிஞ்சி. ரவியின் இதய துடிப்பு ஏகத்திற்கும் எகிறியது. அவளை இழுத்து அவனோட கட்டி அணைக்க பரபரத்தது உள்ளம்!
இதற்கு முன் அவன் இது போல் உணர்ந்ததே இல்லை. கௌஷிகாவை பிடிக்கிறது, காதலிக்கிறான் என்று நினைத்த காலத்தில் ஒரு முறை கூட அவனுக்கு இப்படி ஆனது இல்லை. என்னடா இது லவ்னா இப்படி இருக்கும் அப்படி இருக்கும்னு சொல்றாங்க! நமக்கு ஒன்னும் இல்லை! நாம் இப்போது மெச்சூர்ட் ஆன வயசுனால் அந்த பீலிங் எல்லாம் நமக்கு இல்லை போல் என்று தான் நினைத்து இருந்தான் ரவி.
ஆனால் இன்று அவன் அதை உணர அவனுக்கு வித்தியாசமாக இருந்தது. எந்த வயதானாலும் ஈர்ப்பு, காதல் என்கிற போது இதெல்லாம் நடக்குமே உடம்பில்! இந்த குள்ளி மேல் எனக்கு ஏதோ வருது! இந்த தடவை ஊருக்கு வந்ததில் இருந்து நான் ஒரு மார்க்கமா தான் இருக்கேன் என்று சட்டென்று அவள் கையை விட்டு விட்டான்.
அவன் கையை விட்டதும் ஆசுவாசம் அடைந்தாள் குறிஞ்சி. விலகி ஓட போனவளை தொடாமல், கையை மட்டும் அவளை தடுப்பது போல் குறுக்கே நீட்டினான் ரவி.
“கையை எடுங்க அத்தான்! நான் போறேன்” கெஞ்சி கொஞ்சினாள் குறிஞ்சி.
“சொல்லிட்டு போ, என்னையே ஏன் பார்க்கிறே?” அவனுக்கே தெரியாமல் குழைந்தது ரவியின் குரல்.
அவன் முகத்தை பார்க்க முடியாமல் தவித்தாள் குறிஞ்சி. தான் தடுமாறுகிறோம் என்று அவளுக்கு புரிய, சுதாரித்து,
“ம்ம்…. எங்க அயித்தே எப்படி இப்படி ஒரு அறிவாளியை பெத்தாங்கனு ஆச்சரியமா பார்ப்பேன்” என்று பழிப்பு காட்டி சொல்லி விட்டு அவன் கையை பட்டென்று தட்டி விட்டு வேகமாக அவள் வீட்டிற்கு ஓடிப் போனாள் குறிஞ்சி.
“ஹேய் குள்ளி, என்னை கிண்டல் பண்றியா? என்கிட்ட மாட்டும் போது இருக்கு உனக்கு!” சிரிப்புடன் சத்தமாக சொன்னான் ரவி.
காலையில் இருந்து சோர்ந்து கிடந்த அவன் மனம், மாயம் போட்டது போல் அவளை பார்த்ததும், அவளுடன் இரண்டு வார்த்தை பேசி சிரித்ததும் உற்சாகமானதை மீண்டும் நன்றாக உணர்ந்தான் ரவி.
வீட்டிற்குள் வந்தவளுக்கு அதீத இதயதுடிப்பில் கை எல்லாம் நடுங்கியது.
“என்ன இது அத்தான் இன்னைக்கு புதுசா வித்தியாசமா பார்க்குது நம்மளை? பேச்சும் வேற மாதிரி வருது! காதல் தோல்வியில் இருக்க ஆள் மாதிரியே இல்லை!” குழம்பினாள் குறிஞ்சி.
அவளுக்கு தெரியாதே ரவி, அவன் கௌஷிகாவின் மேல் தான் கொண்டது காதலே இல்லை என்று சொல்லியது. பேச்சு வார்த்தை ஒத்து வரவில்லை, அதனால் வேண்டாம் என்று விட்டு விட்டார்கள் என்று தான் அவளுக்கு தெரிந்து இருந்தது.
அந்த வாரம் ஓடி, வாரக்கடைசியும் வந்தது. அன்று இரவு சென்னைக்கு கிளம்புகிறான் ரவி. அவனுக்கு மனதே இல்லை ஊருக்கு செல்ல. ஏனோ இம்முறை குறிஞ்சியுடன் செலவழித்த நிமிஷங்கள் அவன் மனதை நிறைத்து இருந்தது. அவளோடான பொழுதுகள் அவனை உற்சாகபடுத்துவது போல் இருக்க, இன்னும் இன்னும் வேண்டும் என்று தவித்தது மனம். ஏன் இப்படி புதிதாக என்று நினைத்து கொண்டு இருந்தவனை கலைத்தது மூர்த்தியின் குரல்.
“இரண்டு மாசம் கழிச்சு வள்ளிக்கு கல்யாணத்துக்கு வர, டிக்கெட் எடுத்துரு பா” என்றார் ரவியிடம். அவர் சொன்னதை கேட்டவனுக்கு,
அந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லலாமா? இப்போ நல்லா தானே இருக்கு அவகிட்ட பழக! அம்மா ஆசைப்படி நாமே கல்யாணம் பண்ணிக்கலாமா? அவன் மனம் சட்டென்று அவனிடம் எழுப்பிய அந்த கேள்வியில் அதிர்ந்து விட்டான் ரவி. அந்த அளவிற்கா எனக்கு குறிஞ்சி பைத்தியம் பிடித்து இருக்கிறது? தீடீர்னு என்ன இப்படி ஒரு விருப்பம் எனக்கு அவள் மீது? மூர்த்திக்கு பதில் சொல்லாமல் அவன் எண்ணங்களுக்குள் மூழ்கி இருந்தான் ரவி.
அவன் அமைதியாக இருக்கவும், அவனுக்கு விருப்பம் இல்லை என்று நினைத்தார் மூர்த்தி.
“அப்போ நீ வள்ளி கல்யாணத்துக்கு வரமாட்டே? அப்படி தானே?” குரலை உயர்த்தினார் மூர்த்தி. அவர் சத்தம் போட்டதும்,
“என்ன பா? என்ன சொன்னீங்க?” அன்று போலவே இன்றும் கேள்வியை திருப்பி கேட்ட மகனை வித்தியாசமாக பார்த்தார் மூர்த்தி.
“கல்யாணத்துக்கு வரமாட்டியா?”
“வரே…. வரேன் பா…. டிக்கெட் பார்க்கிறேன் பா”
“சரி, மறந்திடாதே!” என்றதோடு அவர் கிளம்பிவிட்டார்.
அவர் சென்றதும், சே! பைத்தியம் மாதிரி யோசிக்கிறேன். கல்யாணம் நிச்சயம் ஆன பொண்ணு! ரொம்ப வருஷம் கழிச்சு பார்த்ததும், அவளும் வளர்ந்து பொறுப்பா, நல்லா ஜாலியாக பேசி பழகவும் நான் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆய்ட்டேன் போல்!
எல்லாம் இந்த அம்மாவால, எப்போதும் அவளை கட்டிக்கிறியா கட்டிக்கிறியானு கேட்ட எபெக்ட்! இப்போ தான் கௌஷிகா விஷயத்தில் அடி வாங்கி இருக்கே? அதுக்குள்ள இன்னொன்னு ஆரம்பிக்கிறியே? அறிவு இல்லை? வேண்டாம் டா, விட்ரு! எந்த குழப்பமும் வேண்டாம்! இனிமே எதுனாலும் யோசிச்சு நிதானமா செய்! இன்னொரு முக்கியமான விஷயம், எப்போதும் அவளுக்கும் உனக்கும் இடைவெளி இருந்தா தான் நல்லது என்று சொல்லிக் கொண்டான் ரவி.
அன்று இரவு ஊருக்கு கிளம்பி சென்று விட்டான் ரவி.
ரவி சென்னைக்கு வந்து இரண்டு வாரம் ஆகி விட்டது. ஆனால் மனம் இன்னும் திருச்செந்தூரிலேயே இருந்தது. சிரிக்கும், பேசும், குறும்பு செய்யும் குறிஞ்சியின் முகம் தான் அவன் மனமெங்கும் நிறைந்து கிடந்தது. எவ்வளவு தான் தன்னை வேலையில் ஆழ்த்தி கொண்டாலும் அவள் நினைவுகளை விரட்ட முடியவில்லை அவனால்.
என்ன டா இது சோதனை? என்று நொந்து போனான் ரவி. அவன் மனமே அவனுக்கு புரியவில்லை அதை விட அவனுக்கு அதை ஆராய மிகவும் பயமாக இருந்தது. ஊரில் இருந்து வரும் செய்திகள் வேறு அவனை மேற்கொண்டு யோசிக்க விடவில்லை. ஊரில், தமிழ் மாசக் கணக்கு என்று இப்போதே குறிஞ்சியின் கல்யாண வேலைகளை ஆரம்பித்து இருந்தனர். பத்திரிக்கை அடிக்க, ஜவுளி வாங்க என்று பல வேலைகள் நடக்க ஆரம்பித்து விட்டது!
எத்தனை எத்தனை வாய்ப்பு வந்தது டா உனக்கு குறிஞ்சியை கல்யாணம் செய்து கொள்ள? அப்போது எல்லாம் முறுக்கி கொண்டு விட்டு இப்போது தவித்து என்ன பயன்? அவன் மனம் அவனை கேள்வி கேட்க,
இல்லை இல்லை அவள் இப்போது நன்றாக பழகியதால் வந்த வினை! ஆனால் என்றும் அவள் தொல்லை தான்! அவள் குணம் மாறவே மாறாது! என்னுடைய இந்த சலனம் சரியாகி விடும்! அவளுக்கும் திருமணம் ஆக போகிறது! தனக்கு தானே உரக்க அழுத்தி அழுத்தி சொல்லி கொண்டான் ரவி.
ஒரு மாதம் தாக்கு பிடித்த ரவியால் அதற்கு மேல் முடியவில்லை. ஊருக்கு போய் விட்டு வரலாம் என்று முடிவு எடுத்தான். இன்னும் இரண்டு நாளில் செல்லலாம் என்று நினைத்து கொண்டு இருந்தவனை, அன்றே பதறி அடித்து கிளம்ப வைத்தது சூழ்நிலை!
வழக்கம் போல் ஊருக்கு அழைத்த பேசியவனுக்கு கிடைத்த விஷயம் அவனின் சகலத்தையும் பதற வைத்தது! அதற்கும் மேல் அவனை யாரும் ஒரு பொருட்டாக நினைக்காததில் இன்னும் கோபம் வந்தது.
அன்று இரவு ஒன்பது மணிக்கு வழக்கம் போல் அம்மாவை அழைத்தான் ரவி. ரிங் போய் கொண்டே இருந்ததே தவிர அவர் எடுக்கவில்லை. அப்பாவும் வீட்டில் தானே இருப்பார் என்று அப்பாவை அழைத்தான். அவரும் எடுக்கவில்லை என்றதும் என்னவோ ஏதோ என்று பயம் வந்தது அவனுக்கு.
ஷ்யாமளாவிடம் பேசலாம், அவள் எப்படியும் அம்மாவிடம் பேசி இருப்பாள். நன்றாக இருக்கிறார்கள் என்றால் போதும் என்று அவளுக்கு அழைக்க, அவள் அழுது கொண்டே பேசினாள்.
“ரவி!” என்று அழும் அவள் குரல் கேட்டவுடன், பயந்து விட்டான் ரவி.
“அக்கா, என்னாச்சு? ஏன் அழுறே? அம்மா அப்பா நல்லா இருக்காங்க தானே?பதட்டமாக கேட்டான்.
“வள்ளியை காணோம் டா. எனக்கு பயமா இருக்கு டா” ஓவென்று அழுதாள் ஷ்யாமளா.
“ஏய், அவ எங்கேயாவது போய் இருப்பா! பயப்படாதீங்க. எப்போ இருந்து காணும்?” மனம் படப்படத்தாலும் அவள் எதற்கும் பயப்படாமல் செல்பவள் என்பதால் ஏதாவது வேலையாக சென்றிருப்பாள் என்று கொஞ்சம் நம்பிக்கை கொண்டான் ரவி.
“சாயந்திரம் தெரிஞ்சவங்களை பார்த்திட்டு வரேன்னு சொல்லிட்டு கிளம்பி போய் இருக்கா! அதுக்கு அப்புறம் ஆளையே காணும். ஏழு மணிக்கு மேல் வெளில இருக்க மாட்டாளே, அப்போ இருந்து தான் அத்தைக்கு பயம் வந்திருச்சு. அப்போ இருந்து தேடுறோம். போலீஸ்ல கூட சொல்லியாச்சு. ஆனா இப்போ வரை ஒரு தகவல் கூட கிடைக்கலை டா” சொல்லி விட்டு தேம்பி தேம்பி அழுதாள் ஷ்யாமளா.
“பயப்படாதே கா. கிடைச்சுடுவா. அவ போன் வைச்சு போலீஸ் இடம் எதுவும் கண்டுபிடிச்சாங்களா?”
“அவ போன் வீட்டில் இருக்கு டா! அவளுக்கு கடைசியா கால் பண்ணவங்களை அழைச்சா ரிங் போய் கிட்டே இருக்கு யாரும் எடுக்கலை. அதனால் தான் இன்னும் பயமா இருக்கு” என்றாள் ஷ்யாமளா.
அதை கேட்டவனுக்கு மனதெல்லாம் பயம் வந்து அப்பி கொண்டது. பயம்! பயம் மட்டுமே உணர்ந்தான் ரவி. ஷ்யாமளா போல் ரவி அழவில்லை அவ்வளவு தான் வித்தியாசம். அவன் மனம் துடித்தது. அய்யோ! என்னடி பண்ணி வைச்சு இருக்கே? எங்கடி போனே? கடவுளே! அவளுக்கு எந்த கெட்டதையும் பண்ணிடாதே கடவுளே! மனதுள் கடவுளிடம் மன்றாடினான் ரவி. நம்முடைய உயிரான ஒருவருக்கு பிரச்சனை, ஆனால் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை, ஒன்றும் தெரியவில்லை என்பது எவ்வளவு கொடுமை என்று அன்று உணர்ந்தான் ரவி.
அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட அவன் சென்னையில் இல்லை. உடனே கார் ஒன்று புக் செய்து கொண்டு கிளம்பி விட்டான். திருச்செந்தூரை அடையும் வரை அவன் மனம் பட்ட பாட்டை வார்த்தையில் வடிக்க முடியாது. அவளை கண்ணால் காணும் வரை அந்த தவிப்பு குறையாது அவனுக்கு. அவள் நல்லபடியாக திரும்ப வந்து விட வேண்டும் என்று உலகத்தில் உள்ள கடவுளை எல்லாம் வேண்டியபடி பயணம் செய்தான் ரவி.