காயமின்றி வாழும் காதல் – 16
மறுநாள் காலை, காரில் வந்திறங்கிய ரவியை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை யாரும். இறங்கியவன் கண்ணில், குறிஞ்சியின் வீட்டு வாசலில் சோகமே உருவாக அமர்ந்திருந்த அனைவரும் தான் கண்ணில் பட்டனர். ஷ்யாமளா கூட இருந்தாள். அதிகாலையில் கிளம்பி வந்திருந்தாள் அவள். காருக்கு கணக்கு கூட தீர்க்காமல் அவர்களிடம் விரைந்தான் ரவி.
காரில் இருந்து பதட்டமாக இறங்கி வரும் அவனை எழுந்து நின்று எதிர்கொண்டார்கள் அனைவரும். அவனுக்கு இவர்கள் யாரும் விஷயத்தை சொல்லவில்லையே, அவனுக்கு ஏதாவது பிரச்சனையோ என்று தான் நினைத்தார்கள் அவர்கள். ஷ்யாமளாவும் அவனிடம் விஷயத்தை சொன்னதை பற்றி யாரிடமும் சொல்லவில்லை. அவன் வருவான் என்று அவளுக்கும் தெரியாதே.
“என்ன பா? தீடீர்னு வந்திருக்கே? ஏதாவது பிரச்சனையா?” என்றார் மூர்த்தி வேகமாக.
“உடம்புக்கு ஒன்னுமில்லையே?” என்றார் மேகலா.
அவர்களின் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல், “குறிஞ்சியை பத்தி ஏதாவது தெரிஞ்சுதா பா? கமிஷனர் ஆபிஸ் போவோம் பா! என் பிரண்டோட மாமா பெரிய பிசினஸ் பண்றார். அவரை அழைச்சிட்டு வருவான் பா அவன்” என்று படப்படத்தான் ரவி.
“உனக்கு எப்படி தெரியும்?” அவனின் படப்படப்பு பார்த்தும் மூர்த்தி பொறுமையாக கேட்க, வெடித்து விட்டான் ரவி.
“நீங்க எல்லாம் போன் எடுக்கலைனு அக்காவுக்கு பண்ணப்போ தான் எனக்கு விஷயம் தெரிஞ்சுது. ஏன் நீங்க எனக்கு சொல்லலை? பேசலை? எனக்கு எவ்ளோ டென்ஷன் ஆய்டுச்சு தெரியுமா? அக்காவுக்கு போன் பண்ணி சொல்லி இருக்கீங்க! எனக்கு சொல்லலை?” குதித்தான் ரவி.
“ஏண்டி, காணலைனு சொன்னவ, கிடைச்சுட்டானு சொல்லலையா? அறிவு கெட்டவளே!” ஷ்யாமளாவை திட்டினார் மேகலா.
“அவ ராத்திரி எல்லாம் கண் முழிக்காம இருந்ததில எனக்கு ஒண்ணும் புரியலை மா. அதனால் ரவிக்கு சொல்லணும்னே மறந்துட்டேன் மா!”
கிடைச்சுட்டாளா? கண் முழிக்கலையா? என்ன சொல்றீங்க! எனக்கு தெளிவா தான் சொல்லுங்களேன்! கத்தினான் ரவி.
“வாங்க ரவி, நீங்களே உள்ளே வந்து பாருங்க. வள்ளி இப்போ நல்லா இருக்கா. நீங்க வர்றதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி தான் ஆஸ்பத்திரியில் இருந்து அழைச்சுட்டு வந்தோம்” என்று அவனை வீட்டினுள் அழைத்து சென்றார் அறிவழகன். அவன் குறிஞ்சிக்காக இவ்வளவு கவலைப்பட்டு கிளம்பி வந்தது எல்லாம் அவருக்கு பெரிய ஆறுதல் தந்தது. பாசமான சொந்தங்கள் கிடைப்பது அரிது அல்லவா? மிகவும் நெகிழ்ந்து இருந்தார். வெளியே இருந்த கோகிலாவும் அப்படி தான் உணர்ந்தார்.
ரவி உள்ளே சென்று குறிஞ்சியை காணும் போது அவள் கண்களை மூடி படுத்து இருந்தாள். அரைகுறையாக தான் அவளுக்கு உணர்வு இருந்தது. ஆங்காங்கே கட்டு, தோல் உராய்ந்து சிவந்து இருந்தது. அவளை அப்படி கண்டதும், நெஞ்சம் கலங்கி, கண்ணில் நீர் திரண்டு விட்டது ரவிக்கு.
“என்ன மாமா? எப்படி இப்படி?” அவன் உள்ளம் படும் பாடு அவன் குரலின் தவிப்பில் தெரிந்தது.
“வழக்கம் போல் தான் யாருக்கோ உதவி பண்ண போய் இருக்கா, யாரையோ தொடர்ந்து வண்டியில் வேகமாக போய் இருக்கா போனப்போ குறுக்க நாய் வந்து கவுத்து விட்ருக்கு. ரொம்ப அடிபட்டவுடனே யாரோ ஆம்புலன்ஸ் வர வைச்சுட்டாங்க. ஹாஸ்பிடல்ல யாருக்கும் தெரியலை. நாமளும் லேட்டா போலீஸ்ல சொன்னதால் பதினோரு மணிக்கு மேல் தான் நமக்கு தகவல் வந்துச்சு. நாங்க போனப்போ கண் திறக்கலை. ஹெல்மெட் போட்டு இருந்ததால் தலையில் காயமில்லை. கால் கைல எல்லாம் நிறைய சிராய்ப்பு. நல்ல காலம் எலும்பு முறிவு மாதிரி இல்லை. விடியற்காலையில் தான் கண் முழிச்சு பேசினா. அப்புறம் பெரிய டாக்டர் வந்து பார்த்து டிஸ்சார்ஜ் பண்ணாரு. பிள்ளையை பார்க்கிற வரை உயிரே இல்லை தம்பி. என்னென்னவோ கெட்டது எல்லாம் கண்முன்னாடி வந்து தவிச்சு போயிட்டோம்” என்றார் அறிவழகன் கண் கலங்க. அந்த உணர்வுகளை மீண்டும் இப்போது அனுபவிப்பது போல் கண்ணீர் கொட்டியது அவருக்கு.
“இனிமே இவளை வீட்டை விட்டு எங்கேயும் அனுப்பாதீங்க மாமா. அதோடு கண்டிச்சு வைக்கணும். எல்லாரும் சேர்ந்து செல்லம் கொடுத்து தான் கொஞ்சம் கூட பயமே இல்லை இவளுக்கு!” படபடவென பேசினான் ரவி.
“அத்தான்! போதும் அத்தான்” என்று மெல்லமாக முனகினாள் குறிஞ்சி.
அவள் சொல்லும் போது தான் அறையினுள் நுழைந்தார் மூர்த்தி. ரவி வந்த காருக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்து விட்டு வந்தார். வந்தவர் காதில் குறிஞ்சி சொன்னது விழ,
“ஏண்டா? இந்த நிலைமையில் கூட பிள்ளையை திட்டுறியா?” என்றார்.
அவரை எங்கே கவனித்தான் ரவி? அவள் அத்தான் என்றதுமே மெத்தையில் அவள் அருகில் அமர்ந்து விட்டான் ரவி.
“குறிஞ்சி, ரொம்ப வலிக்குதா? இப்படியா போய் அடிபட்டுகிட்டு வருவே?” குரல் அன்பு, தவிப்பு, ஆற்றாமை என உணர்வுகளை கொட்டியது!
“அந்த நாய்க்கு என்னை பத்தி தெரியலை அதான்!” தூக்கமா மயக்கமா என்று புரியாத நிலையிலும் நேரத்திலும் வாய் தானாக வம்பு வளர்த்தது.
நின்றிருந்த ஆண்கள் மூவர் முகத்திலும் புன்னகை பூத்தது.
“நீ தூங்கு மா” என்றார் அறிவழகன்.
தூங்கு, நல்லா ரெஸ்ட் எடுக்கணும் என்று சொல்லி விட்டு மனமே இல்லாமல் அவளை விட்டு எழுந்தான் ரவி. மூவரும் வெளியே வர,
“வர்றதுக்கு முன்னாடி ஒரு போன் பண்ணிட்டு வந்து இருக்கலாம் ரவி.வீண் அலைச்சல் இப்போ!” என்றார் அறிவழகன்.
“என்ன மாமா இப்படி சொல்றீங்க? குறிஞ்சியை காணும்னு சொன்னா, நான் போன்ல அப்டேட் கேட்டுகிட்டு சென்னையிலே இருப்பேனா? பாருங்க பா, இவளை பார்க்க நான் வர மாட்டேனா? எனக்கு அக்கறை இல்லையா?” மூர்த்தியிடம் முறையிட்டான் ரவி.
“அய்யோ! அப்படி இல்லை ரவி. உங்களை பார்த்தவுடன் எனக்கு அவ்ளோ சந்தோஷம். நீங்க எல்லாரும் தான் எனக்கு பலமே!” சொல்லி விட்டு ரவியின் கைகளை பிடித்து கொண்டார் அவர்.
“மாமா உனக்காக சொல்றார்! விடு!” என்றார் மூர்த்தி.
“சரி நீ வீட்டுக்கு போய் தூங்கு” என்றதை மறுத்துவிட்டு அவனும் அவர்களுடனேயே அங்கேயே இருந்தான். அவன் போய் குளித்து விட்டு மட்டும் வந்தான். மற்றபடி குறிஞ்சியின் வீட்டிலேயே இருந்தான். மூர்த்தி, மேகலாவை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அனுப்பி ஓய்வு எடுக்க அனுப்பி வைத்தவன், இங்கே கோகிலா அறிவழகனிடமும் அதையே சொல்லி செய்ய வைத்தான். அவனும் ஷ்யாமளாவும் குறிஞ்சியின் அறையிலேயே அமர்ந்து கொண்டார்கள்.
இரண்டு நாட்கள் செல்ல, குறிஞ்சி தானே எழுந்து நடக்கும் அளவு தேறி இருந்தாள். குமார் வீட்டிற்கு தெரிவித்தும் அவர்கள் யாரும் பார்க்கவில்லை என்பது அனைவருக்கும் நெருடலாகவே இருந்தது. அவர்களுக்கு என்ன சூழ்நிலையோ என்று நல்லவிதமாகவே ஏற்று கொள்ள நினைத்தார்கள். ஆனால் பொறுமையாக இருந்தது போதும் என்று நினைத்த மூர்த்தி மூன்றாம் நாள் குமாரின் தந்தைக்கு அழைத்தபோது அவர் மிகவும் தயங்கி தயங்கி,
“மன்னிச்சுக்குங்க, பையன் பொண்ணை பிடிக்கலை. இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்றான்” என்றார்.
“என்னங்க? இப்போ என்ன பிரச்சனை? என்ன காரணம்?” மூர்த்தி கேட்க,
“அதெல்லாம் வேண்டாங்க. விட்ருங்க. இந்த கல்யாணம் நடக்காது. அதை மட்டும் நீங்க சொல்லிடுங்க.”
“அதெப்படி நீங்க சரியான தகவல் சொல்லாம, இப்படி செய்வீங்க? உங்க பையன் கிட்ட கொடுங்க. நான் கேட்கிறேன்.”
“அவன் சொல்றது எனக்கே பிடிக்கலைங்க. ஆனா மாட்டேன்னு சொல்ற பையன் கிட்ட நான் என்ன பண்ண முடியும்? நீங்களே சொல்லுங்க? அதனால் தான் நான் பேசவே இல்லை!” தழைந்து பேசினார் அவர்.
“அப்படி என்ன தான் சொல்றார்?”
“உங்க பொண்ணை இந்த ஒரு மாசத்தில் அடிக்கடி ஒரு பையனோட பார்த்ததா அவனுக்கு தெரிஞ்வங்க சொன்னாங்களாம். எப்போ பாரு வெளியவே தான் சுத்துதுனு அந்த பொண்ணுனு சொன்னதில் என் பையன், இந்த பொண்ணு எனக்கு வேண்டாம்” சொல்றான்.
“இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமே இல்லைங்க. இப்படி இஷ்டத்துக்கு பேசுவாரா உங்க பையன்? நான் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லுறேன்” என்று அழைப்பை துண்டித்தார் மூர்த்தி.
பேசி விட்டு வந்தவர், உடனடியாக அவர்களுக்கு என இருக்கும் சங்கத்தில் புகார் செய்தார். அவரே பலருக்கு அதில் பஞ்சாயத்து செய்பவர் தான். ஆனால் இது அவர் குடும்ப விஷயம் என்பதால் அவரை போல் இருக்கும் மற்றவர்கள் செய்வார்கள்.
விஷயம் அறிந்து அனைவருக்கும் மிகுந்த வருத்தம். என்ன டா இது? இப்படி ஒரு குழப்பம்? இப்படி மனம் வருந்துவதை போலவே விஷயங்கள் நடக்கிறது என்று வருந்தினர்.
சங்கத்தில், பிரச்சனையை தீர்க்க நாள் குறித்தனர். குமார் மற்றும் அவன் பெற்றோர் நிச்சயம் வரவேண்டும் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டு இருந்தது. இதற்கு போகாமல் இருந்து யாரையும் பகைத்து கொள்ள முடியாது என்பதால் அவர்களும் வருவதாக சொல்லி விட்டனர்.
அப்போது தான் ஒரு வாரம் ஆகி குறிஞ்சி உடல் தேறிக் கொண்டு இருந்தாள். அவளிடம் அனைத்தும் முடிந்த பின் சொல்லி கொள்ளலாம் என்று எதையும் தெரிவிக்கவில்லை. அவளும் நாளின் பெரும்பான்மையான நேரம் உறங்க அவளுக்கு தெரியாமல் பேச அவர்களுக்கு வசதியாக போய் விட்டது.
ரவி இருந்தால் நன்றாக இருக்கும் என்று இரு தந்தைகளும் சொல்ல, அவனும் ஒர்க் பிரம் ஹோம் வாங்கி கொண்டு இந்த கூட்டம் நடக்கும் வரை இருக்கலாம் என்று ஊரிலே இருந்தான்.
கூட்டம் நடக்க போகும் நாளும் வந்தது. அன்று மாலையில் தான் கூட்டம். காலையில், அறிவழகன் வெளியில் சென்றிருந்தார். கோகிலாவின் முகம் மிகவும் வாடி இருப்பதை கண்ட குறிஞ்சி,
“எனக்கு தான் சரி ஆய்டுச்சே மா! நீ ஏன் இப்படி இருக்கே?” என்றாள்.
கோகிலாவிற்கு துக்கம் தொண்டையை அடக்க, அவரால் பேசவே முடியவில்லை. அவர் அழுகையை அடக்க, இவள் பதறி போனாள்.
“என்ன மா? என்ன ஆச்சு?”
அதற்கு மேல் அடக்க முடியாமல் அனைத்தையும் சொல்லி விட்டார் கோகிலா.
இத்தனை நாள் பலர் வந்து குறிஞ்சியை நலம் விசாரித்து சென்றிருக்க குமார் வீட்டில் இருந்து வரவில்லையே என்று ஓரிரு முறை நினைத்தாள் குறிஞ்சி. ஒரு வேளை இவள் வீட்டினர் விஷயத்தை தெரியப்படுத்தவில்லை போல் என்றும் நினைத்து கொண்டாள். அதை பெரிதாக எண்ணவும் இல்லை. அவள் கடமைக்கு தானே கல்யாணம் செய்து கொள்ள இருந்தாள்.
கோகிலா விஷயத்தை சொன்னதும், குறிஞ்சி கத்திய கத்தில் எதிர்வீட்டில் இருந்து ரவியும் மேகலாவும் ஓடி வந்தனர். மூர்த்தி வீட்டில் இல்லை.
“என்ன ஏன் இப்படி கத்துறே?” எடுத்தவுடன் திட்டினான் ரவி. அது அவள் மேல் இருந்த அக்கறையில் தான். ஆனால் குறிஞ்சி இருந்த மனநிலையில் அவளுக்கு பொறுமையாக பேச முடியவில்லை. அதனால் உச்சசஸ்தாயில் கத்தினாள்.
“ஆமா, அப்படி தான் கத்துவேன்! எவனோ என்னை வேண்டாம் சொல்லுவானாம்! அவன்கிட்ட போய் கெஞ்சி என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்ல போறீங்களா எல்லாரும்? இனி அவன் ஒத்துகிட்டாலும் நான் ஒத்துக்கமாட்டேன்!” என்றாள்.
அவள் கோபம் நியாயமானது தான் என்று நினைத்த மேகலா, “சரி நீ பண்ணிக்க வேண்டாம். ஆனா உன்னை பத்தி தப்பா சொன்ன பயலை சும்மா விடக் கூடாது! அதுக்கு தான் இந்த கூட்டம்” என்றார்.
அப்பாவும் மாமாவும் என்ன எண்ணத்தில் இருகிறார்கள் என்று தெரியாமல் அம்மா தன் இஷ்டத்துக்கு ஏதோ சொல்கிறாரே என்ற எண்ணத்தில்,
“அம்மா, நீ பாட்டுக்கு எதையாவது சொல்லாதே! இவ இஷ்டத்துக்கு எல்லாம் ஆட முடியாது இனிமே. பெரியவங்க சொல்றதை கேட்கணும்னு சொல்லு!” என்றான்.
“அதை நீங்க சொல்லாதீங்க!” கோபமாக சொன்னாள் குறிஞ்சி
“ஏன் சொல்ல கூடாது, சொல்லுவேன்! சரியான இம்சை நீ! உங்க அம்மாவும் அப்பாவும் எப்படி துடிச்சு போய்ட்டாங்க தெரியுமா உனக்கு? எங்க எல்லாருக்கும் எவ்வளவு பயம்? கவலை தெரியுமா? கத்துறதை பாரு! நீ ஒழுங்கா இருந்திருந்தா இவ்வளவு தூரம் வந்து இருக்குமா? எப்போ பாரு உன்னால ஏதாவது ஒரு பிரச்சனை. வம்பு, சண்டை , போலீஸ், கூட்டம், பஞ்சாயத்து வரை வந்தாச்சு! இன்னும் மிச்சம் ஏதாவது இருக்கா?” கன்னா பின்னாவென்று திட்டி தீர்த்து விட்டான் ரவி.
அவள் மேல் இருக்கும் அக்கறையில் தான் சொல்கிறான் என்று கோகிலா நிற்க, மேகலா, “ரொம்ப திட்டாதே டா” என்றார். அதெல்லாம் அவன் காதில் விழவே இல்லை. அவன் ரொம்ப திட்டவும்,
“நீங்க ரொம்ப ஒழுங்கா? என்னை சொல்ல வந்துட்டீங்க?” என்று குறிஞ்சி ஆரம்பிக்க, இப்போது கோகிலா அதட்டினார்.
“ஏய், அத்தானை என்ன பேசுறே?”
“நீ வா, அவங்க மாத்தி மாத்தி சண்டை போட்டுக்கட்டும்” என்று கோகிலாவை இழுத்து போனார் மேகலா.
“என்ன நான் என்ன ஒழுங்கா இல்லை? சொல்லு! ஊரெல்லாம் சுத்தி உன்னை மாதிரி பிரச்சனையை தேடி கொண்டு வர்றேனா?”
“லவ்னு சொல்லி ஒரு பொண்ணோட நெருக்கமா பழகிட்டு, அப்புறம் வேண்டாம்னு சொன்னவர் தானே நீங்க? நீங்களும் அவனும் ஒன்னும் தான்!
முகம் கன்றி அவளை உறுத்து விழித்தான் ரவி.