காயமின்றி வாழும் காதல் – 2
“ஹலோ….”
வருத்தத்தில் இருந்த ஷ்யாமளா, எப்போதடா விடியும்? போன் செய்வோம் என்று காத்திருந்து, விடிந்த உடனே அவள் எழும் நேரத்திற்கு அவளை அழைத்தாள். அவள், வேறு யாருமில்லை…. ரவியால் மனதில் அர்ச்சனை செய்யப்பட்ட குள்ளி தான்! அவள் குள்ளி அல்ல. அழகான, அன்பான அனைவருக்கும் பிரியமான குறிஞ்சிவள்ளி. அவளை கோபம் வந்தால் குள்ளி என்றும், கேலி கிண்டல் செய்ய குறில் என்று அழைப்பான் ரவி. ஐந்தே கால் அடியில் இருக்கும் அவளை ஆறு அடிக்கு கொஞ்சம் கம்மியாக இருக்கும் ரவி குள்ளி என்பது சரிதானே!
“சொல்லுங்க மதனி….” ஷ்யாமளாவின் ஒற்றை ஹலோவில் அவள் மனம் புரிந்தது குறிஞ்சிக்கு. ஆனால் அவள் சொல்வதற்கும் செய்வதற்கும் அதில் ஒன்றுமில்லை என்பதால் சாதாரணமாக பேசினாள்.
“என்னத்த சொல்ல? போடி….” அலுப்பும் சலிப்புமாக ஷ்யாமளா திட்ட,
“ஹாஹா…. பிரீயா விடுங்க மதனி. விஷயம் தெரிஞ்சு மூணு மாசம் மேல ஆச்சு! ஆசையே அறுபது நாள் தானாம்! நீங்க என்னடானா கோபத்தை இத்தனை நாள் பிடிச்சு வைச்சுக்கிட்டு வேதாளம் மாதிரி தொங்கிக்கிட்டு இருக்கீங்க!” மனம் கேளாமல் ஷ்யாமளாவை தேற்றுவது போல் பேசினாள் குறிஞ்சி.
“உண்மையிலே நீ எப்படி டா இந்த விஷயத்தை தாங்கிக்கிட்டே?” ஆற்றாமையுடன் கேட்டாள் ஷ்யாமளா.
“எனக்கு என்ன மதனி? உங்க தம்பிக்கு தான் என்னை கல்யாணம் பண்ணிக்க கொடுத்து வைக்கலை” கூலாக பேசினாள் குறிஞ்சி.
“அது உண்மை தான்! உன்னை மாதிரி ஒரு பொண்ணை மிஸ் பண்ணினா அவனுக்கு தான் நஷ்டம்!” உடனே ஒத்துக்கொண்டாள் ஷ்யாமளா.
“மதனி இதை விட்டு வெளியே வாங்க நீங்க. எனக்கே போர் அடிக்குது நீங்க இப்படி பண்றது” குறிஞ்சி அப்படி சொல்ல, அதற்கு மேல் அதை பற்றிய எந்த பேச்சையும் வளர்க்கவில்லை ஷ்யாமளா. குறிஞ்சியிடம் இருந்து வார்த்தை வாங்குவது கஷ்டம் என்பது ஒரு காரணம்.
குறிஞ்சி சிறு வயதில் இருந்தே அவள் மனதிலிருக்கும் வருத்தத்தை, கஷ்டத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டாள். அது வேண்டுமென்றே மறைக்க நினைத்து இல்லை. குறிஞ்சி முயற்சித்தும் அவளால் சொல்ல முடிந்ததில்லை. அந்த பிரச்சனையில் சிக்கி இருக்கும் மனது பாரமாக இருக்கும், அதை பற்றி பேச முடியாத அளவு வார்த்தைகள் வெளி வராமல் அடைத்து கிடக்கும் அவள் மனதில். அதனால் அவள் பிரச்சனையை வார்த்தையில் கொண்டு வர முடியாது என்பாள். அந்த பிரச்சனை தீர்ந்த பின்னர் தான் என்ன நடந்தது, அவள் எவ்வாறு கஷ்டப்பட்டாள், என்ன நினைத்தாள் என்று சொல்லுவாள் குறிஞ்சி. அவளை பற்றி நன்றாக தெரிந்த ஷ்யாமளா, அதற்கு மேல் அவளை சங்கடப்படுத்தாமல் அதோடு விட்டு விட்டாள்.
குறிஞ்சி சொன்னதற்கு பதில் சொல்லாமல், “ம்ப்ச்…. போடி” என்றவளிடம்,
“எனக்காக உங்க தம்பியை குறை சொல்ல வேண்டாம் மதனி. உங்க தம்பியை உங்களுக்கு எவ்ளோ பிடிக்கும்னு எனக்கு தெரியும்!” கிண்டலாக சொன்னாள் குறிஞ்சி.
“உன்னையும் தான் பிடிக்கும்! அவன் என் தம்பினாலும் நான் உண்மையை தான் சொல்வேன்.”
“சரி சரி! அதை விடுங்க! எப்போ வரீங்க ஊருக்கு? கிஷோர் என்ன பண்றான்?” பேச்சை மாற்றினாள் குறிஞ்சி. அவளின் முயற்சி புரிந்து ஷ்யாமளாவும் சாதரணமாக பேசி வைத்தாள்
குறிஞ்சிவள்ளியின் தந்தை அறிவழகன். தாய் கோகிலா. கோகிலாவும் மேகலாவும் அத்தை மகள், மாமன் மகள் உறவு. சிறு வயதில் இருந்தே மிகவும் நெருக்கமான தோழிகள். மாப்பிள்ளை ஒரே ஊரில் தான் வேண்டும் என்று சொல்ல, அதே போல் அமைந்தார்கள் அறிவழகனும் மூர்த்தியும். அறிவழகன் திருச்செந்தூர் அருகே இருக்கும் குலசேகரப்பட்டினம் என்ற ஊரில் விவசாயம் செய்கிறார். தென்னந்தோப்பும் வைத்து இருக்கிறார். வீட்டை மட்டும் திருச்செந்தூரில் கட்டி விட்டார். இருவர் வீடும் எதிர் எதிர் வீடு தான்.
சிறு வயதில் இருந்தே, ஒற்றை பெண்ணான குறிஞ்சி, ஷ்யாமளா மற்றும் ரவியுடன் தான் இருப்பாள். சற்று தாமதமாக பிறந்த குறிஞ்சி இரு வீட்டிற்கும் மிகுந்த பிரியமானவள். தனக்கு பின் பிறந்து தன் வீட்டில் ஆட்சி செய்யும் குறிஞ்சியை விதம் விதமாக வம்பு இழுப்பான் ரவி. தன்னை விட எட்டு வயது சிறியவளான குறிஞ்சியை மிகவும் பிரியமாக பார்த்து கொள்வாள் ஷ்யாமளா.
மிகவும் துறுதுறுவென்று, அனைத்திற்கும் வாயடிக்கும் குறிஞ்சியை பிடிக்காது என்றும் ரவியால் சொல்ல முடியாது. ஆனால் அவளின் தேவையில்லாத செயல்கள், தேடிப் போய் பிரச்சனையை வாங்கி வரும் அவள் இயல்பு அவனுக்கு அறவே பிடிக்காது.
ரவிக்கு தான் இப்படி, ஆனால் குறிஞ்சிக்கு ரவி என்றால் கொள்ளை பிரியம். பெரியவர்களுக்கு தெரியாது இவளின் பிரியம். இயல்பாகவே அவர்களுக்கு ரவிக்கும் குறிஞ்சிக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மிகுந்த ஆசை இருந்தது. இவள் மனதில் இருக்கும் ஆசை மட்டும் மூர்த்திக்கு தெரிந்து இருந்தால், ரவியின் காதலை ஒத்துக்கொண்டு இருந்திருக்கவே மாட்டார். அந்த அளவிற்கு குறிஞ்சி அவரின் செல்ல மருமகள்.
சென்னை
விடியற்காலை வந்து இறங்கிய ரவி பெற்றோருடன் ஹோட்டல் அறைக்கு வந்து சற்று நேரம் உறங்கி எழுந்து பின் காலை உணவிற்கு செல்ல தயாரானான். ஹோட்டலிலேயே காலை உணவு பபே முறையில் வழங்கப்பட்டது. அங்கே சென்று உண்ண ஒரு குறிப்பிட்ட நேரம் வரை தான் உணவு இருக்கும். அதனால் ரவி, அவனும் அவன் பெற்றோரும் தயாரான பின் கௌஷிகாவை அழைத்தான். வெகு நேரம் ரிங் சென்றும் எடுக்கவில்லை அவள். ஒருவேளை பாத்ரூமில் இருப்பாளோ என்று நினைத்தவன், ஒரு ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் அழைத்தான். இப்போது அழைப்பை ஏற்றவள், தூக்க கலக்கத்தில்,
“ஹலோ! யாரு?” என்றாள்.
“நான் நல்லபடியா வந்துட்டேனானு கேட்கிற அக்கறை கூட இல்லையா உனக்கு கௌஷிகா?” இம்முறை எந்த தயக்கமும் இன்றி கோபத்தை வெளிக்காட்டினான் ரவி.
“ஹேய் ரவி, வந்தாச்சா? காலையிலே என்னை மூட் அவுட் பண்ணாதே ரவி ப்ளீஸ்.”
அதற்குள் மூர்த்தி அவன் அருகில் வர, மேற்கொண்டு அவளிடம் வாதம் செய்யாமல், “நாங்க பிரேக் பாஸ்ட் கிளம்பியாச்சு. நீ ரெடி ஆகலை போலையே…. எப்போ வருவீங்க? என்றான்.
“ஓ! நாங்க இன்னும் எழுந்துக்கவே இல்லை ரவி. நான் அம்மா அப்பாவை எழுப்புறேன். நாங்க ரூமுக்கே வரவழைத்து சாப்பிடுறோம். அதுக்கு அப்புறம் நாம எங்க மீட் பண்ணலாம் சொல்லு. கிளம்பி வரோம்” என்றாள் அசால்ட்டாக.
அவளிடம் நேரம் சொல்லிட்டு அழைப்பை துண்டித்தவனுக்கு அவளின் நடத்தையால் ஏமாற்றம், கோபம் என மனம் கொந்தளித்தது. கொஞ்சமும் அவனையும் நினைக்கவில்லை அவள், அவன் பெற்றோரை பற்றியும் கேட்கவில்லை. வருங்கால மாமியார் மாமனார் என்ற மரியதையையும் கொடுக்க நினைக்கவில்லை என்று ஆத்திரம் அடைந்தான். அவள் பெற்றோர் மீதும் வருத்தம் வந்தது. அவர்களும் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார்களே!
காலையில் ஹோட்டல் நிர்வாகம் வழங்கும் இந்த பபே முறையில் உண்ணுவது காம்ப்ளிமெண்ட்ரி போல். நாம் கட்டும் அதிக அறை வாடைகைக்கு இது சரி என்பது போல் எடுத்து கொள்ளலாம். அதனால் அனைவரும் காலை உணவை அங்கே தான் உண்பார்கள். இதில் தனியே அறைக்கு வரவழைத்து உண்டால் அது இவன் பில்லில் தான் சேரும். அது தெரியாதவள் அல்ல கௌஷிகா, தெரிந்தும் செய்கிறாள் என்றால் ரவி தானே பில் கட்ட போகிறான் என்ற மெத்தனம் தான் காரணம் என்று உணர்ந்தான் ரவி. ஏனென்றால் அவள் காசு என்று வருகையில் அவள் எவ்வளவு சிக்கனம் பார்ப்பாள் என்று அவனுக்கு நன்றாக தெரியும்.
தாய் தந்தையிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல், “அவங்க வர நேரமாகுமாம், வாங்க நாம போய் சாப்பிடலாம்” என்று அழைத்து சென்றான்.
இவர்கள் சாப்பிட்டு முடித்தனர். கௌஷிகாவும் அவள் பெற்றோரும் வர நேரம் ஆகும் என்பதால் இவர்கள் மீண்டும் அறைக்கே வந்தனர். அறைக்கு வந்த உடன் மூர்த்தி ஆரம்பித்தார்.
“என்ன பா இது? நாம நிறைய அட்ஜெஸ்ட் பண்ணணும் போலவே? அப்படி என்ன காதல்? நம்ம ஊர் பக்கம் பொண்ணு பார்த்தா இப்படி யா இருக்கும்? இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாவே இல்லை” என்றார் மனது கேட்காமல்.
மூர்த்தியே பேசிவிட மேகலாவும், “வள்ளிக்கு இப்ப தான் ஒரு இடம் ஒத்து வர மாதிரி இருக்கு, நீ இப்போ சொன்னா கூட நாம பேசி முடிச்சுடலாம்! நல்லா யோசி பா!” என்றார்.
கௌஷிகாவின் நடத்தையில் ஒரு மாதிரி மனம் சுணங்கி குழப்பத்தில் இருந்தவன், குறிஞ்சியின் பெயரை கேட்டவுடன்,
“அம்மா, அந்த குள்ளியை எல்லாம் என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது. நான் கௌஷிகாவை தான் கல்யாணம் பண்ணிக்குவேன். அவளை தான் விரும்புறேன். கொஞ்சம் தனியா இருந்து பழகின குடும்பம். அதனால் இப்படி இருக்காங்க. நான் சொல்லி கொடுக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவாங்க” என்றான் குழப்பத்தை கை விட்டு மொத்தமாக கௌஷிகா பக்கம் சாய்ந்து.
வள்ளியை சொன்னவுடன் மூர்த்திக்கு கோபம் வந்தது.
“ஏண்டி! என் மருமகளுக்கு என்ன மாப்பிள்ளையா கிடைக்காது? வேணாம்னு சொல்ற இவன் கிட்ட போய் கெஞ்சிக்கிட்டு இருக்கே….?” என்று மனைவியிடம் எகிறினார்.
“ஆமா, ஊர் பொல்லாப்பு எல்லாத்தையும் இழுத்துகிட்டு வர இவர் மருமகளுக்கு மாப்பிள்ளை வந்து குவியும்! அதில நல்லதா பொறுக்கி எடுத்து கல்யாணம் பண்ணி வைங்க! பொண்ணா அவ?” திட்டி விட்டு வேகமாக எழுந்து வெளியே போய் விட்டான் ரவி. அதற்கு மேல் அங்கிருந்தால் அவனுக்கும் மூர்த்திக்கும் வாக்குவாதம் வந்து விடும் என்று தெரியும் அவனுக்கு.
குறிஞ்சி என்றால் மூர்த்தி எந்த எல்லைக்கும் போவார். சிறு வயதில் ஒரு முறை அனைவரும் அறிவழகனின் தோப்பில் விளையாடி கொண்டு இருந்தனர். அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் மேல் ஏறி நின்ற குறிஞ்சி இருபக்கமும் தாவி விளையாட பார்த்தாள். அப்போது அவளுக்கு எட்டு வயது தான். இவனும் ஷ்யாமளாவும் பிடித்து தடுத்து வேறு பக்கம் அழைத்து சென்றனர். தோப்பின் மூலையில் இருந்த வீட்டில் இரு பெண்களும் சமையல் வேலையில் இருந்தார்கள். ஆண்கள் அப்போது இல்லை. சற்று நேரம் விளையாடிய பின் ஷ்யாமளாவும் ரவியும் வீட்டிற்கு திரும்பி விட்டனர். தூங்குமூஞ்சு செடியோடு விளையாடி விட்டு வரேன் என்ற குறிஞ்சியை அவளுக்கும் பழகிய இடம் தானே என்று விட்டு விட்டு அவர்கள் மட்டும் சென்று விட்டனர்.
ஆண்களும் அப்போது வர, சரியாக குறிஞ்சி அம்மா என்று அலறும் சத்தம். அனைவரும் ஓடிச்சென்று பார்க்க, வாயை சுற்றி ரத்தம். எங்கிருந்து ரத்தம் வருகிறது என்றே முதலில் தெரியவில்லை. பல் உடைந்து விட்டதோ என்று வாயை கழுவி ஆராய்ந்தால், கழுத்திற்கும் தாடைக்கும் இடையில் பெரிய காயம், தாடையிலும் பெரிய ஓட்டை. ஷ்யாமளாவும் ரவியும் சென்ற பின் அந்த பெரிய தண்ணீர் தொட்டியை தாண்டி விளையாட முயற்சித்து தண்ணீர் இல்லாத அந்த தொட்டிக்குள் விழுந்து தாடையை பெயர்த்து கொண்டாள் குறிஞ்சி.
ஆஸ்பத்திரி செல்வதற்குள் ஒரு பெரிய துண்டு அவள் ரத்தத்தால் நனைந்து போனது. தையல் போட்ட மருத்துவர், இன்னும் கொஞ்சம் பலமாக அடி பட்டு இருந்தால் பேசும் திறனை இழந்து இருப்பாள் என்றதும், பதட்டம் அடைந்து என்ன செய்கிறோம் என்று புரியாமல் பதிமூன்று வயது ரவியையும் பதினாறு வயது ஷ்யாமளாவையும் அனைவர் முன்பும் திட்டி தீர்த்தார் மூர்த்தி. ரவிக்கு இரண்டு அடி வேறு விழுந்தது. அதுவரைக்கும் குறிஞ்சியின் சேட்டையால் அவ்வப்போது எரிச்சலை மட்டும் காண்பித்து கொண்டு இருந்த ரவி, இந்த சம்பவத்திற்கு பின் மிகுந்த கடுப்பானான். அவளை எந்நேரமும் திட்டி கொண்டும் அதட்டி கொண்டுமே இருப்பான். அவன் மனதில் அவள் என்றும் அவனுக்கு ஒரு தொல்லை என்ற எண்ணம் வேரூன்றி போனது. அதற்கு மேலும் வலு சேர்ப்பது போல் குறிஞ்சியும் வளர வளர பல பிரச்சனைகள் கொண்டு வந்தாள்.
ஒரே பள்ளியில் தான் படித்தார்கள் இவர்கள் மூவரும். ஷ்யாமளா பெரியவள் என்பதால் சீக்கிரம் பள்ளியை விட்டு போய் விட்டாள். அதனால் ரவி தான் பொறுப்பு குறிஞ்சிக்கு.
ஒரு முறை பள்ளியில் இருந்து வரும் போது, ரோட்டில் ஒரு மூதாட்டியை இடித்து விட்டான் ஒரு ஆட்டோக்காரன். பாட்டி மயங்கி விட, கூட்டம் சேர்ந்து விட்டது. பாட்டி மயங்கி கீழே விழுந்ததால் தான் என் வண்டி இடித்து விட்டது என்று சமாளித்தான் அந்த ஆட்டோக்காரன்.
“எப்படி பொய் சொல்றான் பாரேன் அத்தான்!”
“ஷ்ஷ். பேசாம இரு நீ! சத்தமா சொல்லாதே. ரவுடி மாதிரி இருக்கான் அந்த ஆட்டோ டிரைவர்….” என்று ரவி அவளை அடக்க, அவனை மீறி கொண்டு, அங்கு நின்று கொண்டு இருந்தவர்களிடம்,
“சார்…. சார்…. நான் பார்த்தேன். இவர் இடிச்சு தான் அந்த பாட்டி விழுந்தாங்க….” என்று போட்டு கொடுத்தாள் குறிஞ்சி. அப்போது அவளுக்கு பத்து வயது தான்.
“ஏய்! பாப்பா! உனக்கு தெரியுமா? இரு உன்னை அப்புறம் கவனிக்கிறேன்” என்று அந்த ஆட்டோக்காரன் மிரட்டினான்.
மறுநாள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் அந்த ஆட்டோக்காரன் வந்து மிரட்டவும், ரவி தான் அவனிடம் கெஞ்ச வேண்டியதாயிற்று. “வாயை வைச்சுக்கிட்டு அமைதியா இருக்கணும், இல்லை வாயை உடைக்க வேண்டி இருக்கும்” என்று குறிஞ்சியை மிரட்டி விட்டு போனான் அவன்.
அதன் பின் ரவி, “நான் இவளை பள்ளிக்கு அழைத்து செல்ல மாட்டேன்” என்று சொல்லி விட்டான். இது போல் இன்னும் பெரிய பிரச்சனை இழுத்து கொண்டு வந்து விடுவாளோ என்று பயந்து போன அறிவழகன் அதன் பின் மகளை தானே பள்ளியில் விட்டு அழைத்து வந்தார்.
அவன் பன்னிரெண்டாவது படிக்கும் போது அவள் ஏழாம் வகுப்பில் இருந்தாள். அவன் நண்பர்கள் அனைவரும் அவனையும் அவளையும் சேர்த்து வைத்து தான் பேசி வம்பு இழுப்பார்கள். வேண்டாம் என்று சொல்லி சொல்லி பார்த்தவன் ஒரு கட்டத்திற்கு மேல் யாரையும் கட்டுப்படுத்த முடியாமல் விட்டு விட்டான். ஆனால் மனதினில், இவளை மட்டும் கல்யாணம் செய்து கொள்ளவே கூடாது என்ற வைராக்கியத்தை வளர்த்து கொண்டான்.