2. நேசம் கூடிய நெஞ்சம்

4.7
(9)

நெஞ்சம் – 2

கண்களை  தான்  திறக்க முடியவில்லையே தவிர, புலன்கள் தெளிவாக இருந்தன. அதனால் மெதுவாக,

“ஒக்கே தான் சார்” என்றாள்.

“எழுந்துக்கோ” என்றவன், மெதுவாக அவளை எழுப்பி கண் மூடி இருந்த அவளை மெதுவாக டைனிங் அறை வரை கைப்பிடித்து அழைத்து சென்று, சேரில் அமர வைத்தான். பின் வேகமாக ஐஸ் கட்டியை எடுத்து வந்து துணியில் சுத்தி வீங்கி இருந்த இடத்தில் வைத்து,

“இதை ஒரு பைவ் மினிட்ஸ் வைச்சுக்கோ” என்று சொல்லிவிட்டு அருகே இன்னொரு சேரில் அமர்ந்தான்.

இப்படி ஒரு பெண் வேலைக்கு வருகிறாள் என்று அவனுக்கு தெரியும். நேற்று அதிகாலையிலேயே அவன் வெளியே சென்று விட்டான். இப்போது தான் வருகிறான்.

கண்களை மூடி இருக்கும் அவளை ஆராய்ந்தான் அவன். ஐந்தரை அடி இருப்பாள் நிச்சயம், நீட்டா இருக்கா, குட்… ஹெல்த்தி பொண்ணு தான்…. நோஞ்சான் மாதிரி இல்லை! பெட்டர், அம்மாவை நல்லா பார்த்துக்கிற தெம்பு இருக்கு இவளுக்கு…. இப்படி தான் போனது அவன் எண்ணம்!

ஐஸ் கட்டி வைத்த பின் கொஞ்சம் வலி குறைய, கண்களை திறந்தாள். எதிரில் அவனை கண்டதும், படாரென்று சேரை விட்டு எழுந்து கொள்ள,

“தெய்வமே மறுபடி விழுந்துடாதே! டேக் கேர், இல்லை டாக்டர் கிட்ட போகணும்னா, அப்பா கிட்ட சொல்லு!” என்றதோடு போய் விட்டான்.

அவன் போய் விட்டான், ஆனால் அவன் கையின் ஸ்பரிசம் அவளுடனேயே இருந்தது. அந்த உணர்வில் இருந்து வெளிவர கைகள் இரண்டையும் பரபரவென்று தேய்த்தாள் மலர். அந்த உணர்வில் இருந்து வெளிவந்த மாதிரி இருக்க, கண்களையும் மூடி பார்த்துடுவோம் என்று கண்களை மூடினாள். நான் எங்கேயும் போகலை, இங்கேயே தான் இருப்பேன் என்பது போல் அவன் கைக்குள் தன் கை இருப்பது போலவே இருக்க, ஒருவேளை இப்போ வந்து பிடிச்சு இருக்காரோ? குழந்தை தனமாக யோசித்து படக்கென்று கண்களை திறந்து பார்த்தாள் மலர். யாரும் இல்லை! ஐயோ, இதென்ன இப்படி ஒரு பீல்? மிரண்டாள் மலர்.

அப்போது தான் பாத்ரூமினுள் இருந்து வந்த அருணா, வீங்கிய இவளின் நெற்றியை கண்டுவிட்டு பதறினார்.

“என்ன மா இது? ஒரு பத்து நிமிஷத்துக்குள்ள இவ்ளோ ஆய்டுச்சா? ஸாரி மா” என்றார் அவள் விஷயத்தை சொல்லியபின்.

அப்போது சரியாக அர்விந்த் அறையை விட்டு வெளியே வர,

“ஏண்டா, கொஞ்சம் பொறுமையா இருக்க கூடாதா?” ஆதங்கமாக கேட்க,

“எப்படி? இந்த பொண்ணு மாதிரி கதவை தடவி தடவி திறக்கணுமா?” அடிபட்டுடிச்சேனு விட்டுடேன்…. கதவை டக்குனு திறக்க தெரியாதா இவளுக்கு?” என்றான் கோபமாக.

அமைதியாக தலையை குனிந்தபடி அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு இருந்தாள் மலர். அருணா இவனை பற்றி சொன்னது புரிந்தது அவளுக்கு. சற்று முன் நன்றாக கவனித்தவனா இவன் என்பது போல் இப்பொழுது கடுகடுவென்கிறானே!

“ஹேய் பொண்ணு!” அவன் அழைக்க.

“அவ பேர் மலர்விழி….” அருணா சொல்ல,

“ஹாஹா, மலர்விழியா…. விழி போய் இருக்கும்…. ஜஸ்ட் மிஸ்… என்று கிண்டல் அடித்து விட்டு, “ஹேய் விழி, எனக்கு எல்லாம் டக் டக்னு செய்யணும்! பாஸ்ட்டா …. புரியுதா…. வழவழனு இழுக்க கூடாது” என்றபடி போனான்.

அவன் சொன்ன மத்த எதுவும் அவள் மண்டையில் ஏறவே இல்லை! அவனின் குரலில், தெளிவான தமிழில், ஹேய் விழி என்றது மட்டுமே அவள் மண்டையில் நின்றது! விளங்க வைக்கவோ, விளங்கி கொள்ளவோ முடியாத வகையில் ஏதோ உணர்ந்தாள் மலர்.

நீ வேலைக்கு வந்திருக்க மலர்! அவளுக்கு அவளே நினைவுறுத்தி கொண்டாள். அவளின் மிரண்ட முகம் கண்டு,

‘நீ கொஞ்சம் நேரம் படுக்கிறியா? ரொம்ப வலிக்குதா? டாக்டர் கிட்ட போகணுமா?” வேகமாக கேட்டார் அருணா.

“அதெல்லாம் இல்லைமா” என்றவள் வலியை சமாளித்து கொண்டு வேலையை தொடர்ந்தாள். அடுத்தடுத்து பாட்டியும் தியாகுவும் அவளை கவனித்து, பார்த்து நடந்து கொள்ளும்படி கூறினர்.

அன்று இரவு படுத்தவளுக்கு உறக்கம் வருவேனா என்றது! அவள் உருண்டு உருண்டு படுப்பதை உணர்ந்த பாட்டி,

“என்ன மா நேத்து முதல் நாள் கூட தூங்கிட்டே, இன்னைக்கு உருண்டுகிட்டே இருக்க?”

பதிலேதும் சொல்லவில்லை மலர், பாட்டி பகலிலேயே பாதி நேரம் காது கேட்பதற்கான மிஷினை பொருத்திகொள்ள மாட்டார், இரவில் போடுவதில்லை என்று தெரியும் அவளுக்கு.

மெதுவாக அவள் விரல்கள் அவள் புருவத்தை வருடின. இன்னும் வலி இருந்தது. அதை அனைத்தையும் மீறி அவனுடனான ஸ்பரிசம், அவனின் வாசனை, அவனின் அணைப்பில் இருந்த சில நிமிடம், அனைத்தும் அவளையும் மீறி நினைவுக்கு வந்துக் கொண்டே இருந்தது. பகல் எல்லாம் இது தப்பு என்று மனதிற்குள் போராடியவள், இப்பொழுது இரவில் விட்டு விட்டாள். ஒரு முழு ஆண்மகனின் அருகாமை அவளை கொஞ்சம் அசைத்து பார்த்தது உண்மை, ஆனால் அவள் அதை யாருக்கும் காட்டிக்கொள்ள மாட்டாள். வந்தது வேலைக்கு என்ற தெளிவு அவளுக்கு இருந்தது. இப்படி தான் நினைப்பது யாருக்கு தெரிய போகிறது போ! சீக்கிரம் மனசு மாறிடும், நமக்கு இதெல்லாம் புதுசு தானே என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டு அவனின் நினைவுகளுடனேயே தூங்க விழைந்தாள்.

@@@@@@@@@@@

மறுநாள் காலை,

இரவெல்லாம் கனவா நினைவா என்று தெரியாமல் உறங்கியவளுக்கு எழுந்து கொள்ளவே சிரமமாக இருந்தது. இருந்தாலும் தியாகுவிற்கு முன்பு பாலை எடுத்து விட வேண்டும் என்ற முனைப்போடு தயாராகி, நினைத்தது போலவே பால் பாக்கெட்டை எடுத்தாள் மலர். அவள் முகத்தில் அத்தனை சந்தோஷம்.

அவரின் அறையில் லேசாக கதவை திறந்து வைத்துக் கொண்டு நின்ற தியாகு, அவள் உள்ளே வரும் போது அப்போது தான் வருவதை போல் வந்து,

“இன்னைக்கு நீ எனக்கு முன்னால் எடுத்திட்டியா?” என்று சிரித்தார்.

“இனிமே டெய்லி நான் தான் எடுப்பேன்” என்றாள் தலையை குனிந்து கொண்டு மெதுவாக.

“பார்போம்!” என்று அவள் தலையில் லேசாக தட்டி விட்டு சென்றார் தியாகு.

அவள் அந்த பக்கம் சென்றதும், அதுவரை ஹாலில் லைட் போடாமல் இருட்டில் அமர்ந்திருந்தவன்,

“என்ன பா இது? நீங்க ரொம்ப நேரமா உங்க ரூமில இருந்து திருடன் மாதிரி ஏன் எட்டி எட்டி பார்த்தீங்க? இப்போ அந்த பொண்ணுகிட்ட ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசுறீங்க?” என்றான்.

“சின்ன பொண்ணு டா, ஊரு விட்டு ஊரு வந்து தெரியாத இடத்தில வேலை பார்க்கிறா, அவளை சின்னதா சந்தோஷப்படுத்துறேன், இதெல்லாம் சொன்னா புரியாது உனக்கு!”

“அந்த விழியை நல்லா ஏமாத்துறீங்க, உண்மை தெரியும் போது நாம முட்டாள் ஆயிட்டோம்னு தான் பீல் பண்ணுவா!”

“உனக்கு தெரிஞ்சது அவ்ளோதான்! சார் எனக்காக இப்படி பண்ணாரானு சந்தோஷம் தான் படுவா!”

“அப்படியா?”

“நீ சொல்ற மாதிரி எப்போ நடக்கும் தெரியுமா? ஒருத்தங்களை நம்ப வைச்சு ஏமாத்தும் போது! இது அப்படி இல்லை, அந்த பொண்ணு மேல எனக்கு இருக்க சின்ன அக்கறை, அன்பு!”

அன்று மாலை, மும்பையில் இருந்து ஜனனி, கணவன் குழந்தையுடன் வந்துவிட, மிகவும் பிசியாக இருந்தாள் மலர். அருணா சொன்னது போல ஜனனி உதவினாள், சிலது சொல்லி கொடுத்தாள்.

நாளை காலை ஆஸ்பிடல் சென்று அட்மிட் ஆக வேண்டும் என்பதால் இன்றே கொண்டு செல்ல வேண்டிய அனைத்தையும் எடுத்து வைத்து தயார் செய்தனர். நாளை மறுநாள் ஆபரேஷன்!

@@@@@@

மறுநாள் காலை, டைனிங் டேபிளில் தியாகு காபி குடிக்க, அருணா அமைதியாக அமர்ந்திருந்தார். ஜனனியும், அரவிந்தும் இன்னும் எழுந்து வரவில்லை. நீங்கள் சென்று அட்மிட் ஆகுங்கள், நாங்கள் பிறகு வருகிறோம் என்று சொல்லி விட்டனர்.

“பிள்ளைகள் யதார்த்தமாக இருக்கிறார்கள், அவர்களை போல் இருங்கள்”  என்றார் அருணா சோகமாக இருக்கும் தியாகுவிடம்.

“அவங்களுக்கு வேற வாழ்க்கை இருக்கு! எனக்கு நீ தான் வாழ்க்கை! எனக்கு இப்படி தான் இருக்கும் மனசு” என்றார் தியாகு.

அவர்கள் பேசுவதை கேட்க, மிகுந்த வருத்தமாக இருந்தது மலருக்கு. ஆனாலும் ஜனனி மீதோ, அர்விந்த் மீதோ அவளுக்கு வேறு மாதிரியான அபிப்பிராயம் வரவில்லை. இருவருமே அம்மா மீது மிகுந்த அன்பும் அக்கறையும் வைத்து இருந்தார்கள். அவங்க என்ன நினைச்சு போகாம இருக்காங்கனு அவங்களுக்கு தான் தெரியும்! என்று நினைத்து கொண்டாள்.

அருணாவும் தியாகுவும் கிளம்பி செல்லும்முன்,

“அம்மா ஒரு விஷயம் சொல்றேன்…. தப்பா நினைக்காதீங்க…. இஷ்டம் இல்லைனா வேண்டாம்” என்றாள்.

சொல்லு மலர், இருவருமே சொல்ல,

“எங்க குலதெய்வம் ரொம்ப சக்தி வாய்ந்த அய்யனார். அவரை மனசில நினைச்சுக்கிட்டு, உங்களுக்கு தோன்ற காணிக்கையை ஒரு மஞ்சத் துணியில் முடிஞ்சு சாமியறையில் வைங்க மா. நீங்க நல்லபடியா திரும்ப வந்து, அதை உங்க கையால எடுத்து என்கிட்ட கொடுங்க, நான் ஊருக்கு திரும்ப போறப்போ எடுத்திட்டு போய் காணிக்கை செலுத்திடுறேன்…. உங்களுக்காக வேண்டி இருக்கேன் மா, நீங்க முடிஞ்சு தந்தா ரொம்ப நல்லது அதான்!”

“அவ்வளவு தானே, இதோ பண்றேன்’ என்றவர் அவள் சொன்னது போலவே செய்தார். பெரிதாக கடவுள் நம்பிக்கை இல்லாதவன் அரவிந்தன், மெதுவாக மலரின் அருகே வந்து,

“நிஜமா உண்டியல் போடுவியா? இல்லை எப்படியும் எங்க அம்மா நிறைய காசு வைப்பாங்கனு அடிச்சு விடுறியா?” என்றான்.

“அச்சோ சார், அய்யனார் விஷயத்தில விளையாடாதீங்க சார்!” பதறினாள் மலர்.

“அப்போ எதுக்கு செண்டிமெண்டா எங்க அப்பா அம்மாவை லாக் பண்ண பார்க்கிற…. இங்கேயே செட்டில் ஆகவா? எங்க அம்மா மாதிரி ஒரு ஈஸி பாஸ் கிடைக்காதுனு ஒரே நாள்ல தெரிஞ்சுகிட்ட தானே?”

அழுது விடுபவள் போல் ஆனாள் மலர். இவர் என்ன இவ்ளோ குதர்க்கமா யோசிக்கிறார்? நான் நிஜமா வேண்டிகிட்டது தானே சொன்னேன்! மனதிற்குள் புலம்பினாள்.

“ஹேய் விழி, அழ போறியா? அது எப்படி டக்குனு கண்ணில் தண்ணி வரும்? எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடேன்!”

“ஆரும்மா, பாவம் சின்ன பொண்ணு! சாமி பத்தி சொல்லிட்டான்னு அவளை வறுத்து எடுக்காதே! மலரு குட்டி, ஓடி வந்துடு என் பக்கத்தில, அவன் பேசியே கொள்வான் உன்னை” என்றார் பாட்டி.

ஒ! இவர் நாத்திகரா….வேணும்னு தான் இப்படி பண்றாரா, பயந்து போயிட்டேன் பா…. மனதில் நினைத்து கொண்டவளின் முகத்தில் ஆசுவாசம் தெரிய, இங்கு இவன் சிரித்தான்.

அவள் பாதி நேரம் மனசுக்குள் பேசி கொள்கிறாள் என்று அவனுக்கு முன்பே தெரிந்து விட்டது. கண்ணை மூடிக் கொண்டு அவள் அமர்ந்து இருந்த போது, இவன் தான் பார்த்தானே, அவள் எண்ணங்களுக்கு ஏற்றார் போல் முகத்தில் பல பாவனை வந்து சென்றதை. அதனாலேயே அவளை விடாமல் சீண்டினான் இன்று.

சாமியை சாக்கு சொல்லி இந்த ஆசாமி ஏதோ பண்ண போகுது, அவன் சத்தமாக கிண்டல் செய்ய, பெரியவர்கள் மூவரும் அவனை கண்டனம் செய்தனர்.

“அட, சப்போர்ட் பலமா தான் இருக்கு!” தோளை குலுக்கி கொண்டான்.

அருணாவும் தியாகுவும் கிளம்பி சென்ற பின், பாட்டி உறங்க சென்று விட்டார். ஜனனி குழந்தையுடன் பிசியாக இருக்க, டீ கேட்டு வந்தான் அர்விந்த். கேட்டு விட்டு அறைக்கு செல்லாமல், டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டான். கிட்சனில் நின்று சமைப்பவர்கள் வலது பக்கம் திரும்பினால் சாப்பாட்டு அறை. கிட்சனில் கதவு இருந்தாலும், இப்போது திறந்து தான் இருந்தது. மலரால், இயல்பாக நிற்கவே முடியவில்லை. ஐயோ, என்னடா கஷ்டம் இது? இவர் ஏன் இங்கேயே இருக்கார்? ரூமுக்கு போக சொல்வோமா என்றெல்லாம் தவித்தாள். ஓரப் பார்வையில் அவனை நோட்டம் விட, அவன் போனை பார்த்துக் கொண்டு இருந்தான். சே! நாம தான் ஓவரா பண்றோம்! அவர் நம்மளை கண்டுக்க கூட இல்லை! என்று கொஞ்சம் இயல்பாகி டீயை போட்டு கொண்டு சென்றாள். கொடுத்து விட்டு நகர போனவளை நிறுத்தியவன், ஒரு சிப் செய்தான் டீயை, பின் அவளிடம்,

“நல்லா தான் இருக்கு டீ! நீ கிட்சன்ல நின்னு திரு திரு முழிச்சதை பார்த்தா டீ போட தெரியாதுனு சொல்ல போறேனு நினைச்சேன்… என்னை வேற சைடு கண்ணில் பார்த்தது விழி” அவன் சொல்லிவிட்டு சிரிக்க, இவள் திகைத்து போனாள். பார்க்காதது போல இருந்தாலும் அனைத்தையும் நோட் செய்து இருக்கிறான்!

வேகமாக கிட்சனுக்குள் செல்ல போனவள், நல்லாதானே பேசுறான், சொல்லுவோம் என்ற எண்ணம் தோன்ற, ரொம்ப யோசிக்காமல்,

“அம்மாவோட நீங்களும் ஹாஸ்பிடல் போய் இருக்கலாம்ல….” என்றாள். அவன் அவளை பார்த்த பார்வையில், “இல்லை ப்ரீயா தானே இருக்கீங்க…. பசங்க கூட இருந்தா கொஞ்ச தெம்பா இருக்கும்னு சொன்னேன்…. நமக்கே உடம்பு சரியில்லைனா, கூட ஆள் இருந்தா தெம்பா பீல் பண்ணுவோம்ல….” அவள் இழுக்க,

அவள் பேசும் வரை எந்த வித குறிக்கீடும் இல்லாமல் கேட்டவன்,

“சொல்லியாச்சுல்ல, “இனிமே போய் வேலையை பாரு…. வந்த வேலையை மட்டும் பாரு, குடும்பத்து விஷயம் எல்லாம் பேசவேண்டாம்…. அட்லீஸ்ட் என்கிட்ட பேசாத, மத்தவங்க பத்தி எனக்கு தெரியாது!” என்று முகத்தில் அடித்தாற் போல் சொல்லிவிட்டு அகன்றான்.

தேவை தாண்டி உனக்கு! நல்லா வாங்கிக்கட்டிக்க! புதுசா உனக்கு என்ன அவன் கூட பேச ஆசை? அதுக்கு நல்லா கிடைச்சுதா பூசை? அவளே அவளை திட்டிக் கொண்டு வேலையை தொடர்ந்தாள்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!