21. காயமின்றி வாழும் காதல்

5
(8)

காயமின்றி வாழும் காதல் – 21

கண்களை மூடியவளின் உடல் இறுக்கத்தை உணர்ந்தான் ரவி. மெதுவாக அவளின் கோர்த்து இருந்த விரல்களை பற்றி பிரித்து விட்டான். அவன் பிரிக்க பிரிக்க கண்களை திறந்து அவனை கண்டாள் குறிஞ்சி. அவள் பார்ப்பதை உணர்ந்தவன்,

“இவ்ளோ பயமா உனக்கு? ரிலாக்ஸ்….” என்றான் சின்ன புன்னகையுடன்.

அவன் அவளின் பயத்திற்கு வேறு காரணம் நினைக்க, அதுவல்ல உண்மை காரணம் என்பதால் யோசிக்காமல்,

“இல்லை, அப்படி இல்லை” என்றாள் வேகமாக.

“ஓ! அப்போ ரெடியா இருக்கே! அதனால் நெர்வஸா இருக்கே?” இப்போது பெரிதாக சிரித்தான் ரவி.

“அய்யோ! இல்லை!” தவித்தாள் குறிஞ்சி.

“சரி விடு, என்னவா இருந்தாலும் இவ்ளோ டென்ஷன் தேவையில்லை. நீ இப்படி இருந்தா எனக்கும் டென்ஷன் ஏறுது! ரெண்டு பேரும் ரிலாக்ஸ் ஆவோமா?” சொல்லிக் கொண்டே அவள் கழுத்து வளைவில் புதைந்தான் ரவி. கைகளை அவள் மேனியில் இருக்கும் மற்ற புதையலை தேட அனுப்பி வைத்தான். அவை செவ்வனே அதன் வேலைகளை செய்ய, தாங்க முடியாமல் மெத்தையில் சரிந்தாள் குறிஞ்சி. அவள் ஒரு விலை மதிக்க முடியாத பொக்கிஷம் என்று கண்டு கொண்டவன், மொத்தமாக அவளை களவாட எண்ணி அவள் மேல் படர்ந்தான்.

“அத்தான், ப்ளீஸ் வேண்டாம்” மெல்லமாக முனகி அவளின் விருப்பமின்மையை காட்டினாள் குறிஞ்சி. அவளிலேயே கவனமாக இருந்த அவனுக்கு அது கேட்க,

“இன்னைக்கு வேண்டாமா? இல்லை எப்போதும் வேண்டாமா?” என்றான் ஒரு மாதிரியாக.

“கொஞ்ச நாள் கழிச்சு…..” இருவரும் இருக்கும் நிலையில் அவளால் அழுத்தமாக சொல்ல முடியவில்லை.

“ம்ப்ச்…. நான் முன்னாடியே சொன்னேன்! எனக்கு பொண்டாட்டி தான் வேணும்னு! இப்போ மறுபடி வந்து ஏதோ கதை சொல்றே! என்னை பிடிக்கலைனா கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லி இருக்கணும்! நான் தெளிவா தானே சொன்னேன்!!” கொஞ்சம் ரவியின் குரல் உயர்ந்து விட்டது. உடனே அமைதி ஆகி விட்டாள் குறிஞ்சி. அவள் அமைதி ஆகவும் அவளை பார்த்தவன், அவளை விட்டு விலகி படுத்தான். அவளை போர்ஸ் பண்ணுவது போல் தோன்றி விட்டது அவனுக்கு. அவன் விலகி படுத்ததும் இவளுக்கு குற்ற உணர்வாக போய் விட்டது! வேண்டாம் என்று நினைத்த அவளே “ஸாரி” என்றாள்.

“தெரியாம செய்தா தான் ஸாரி சொல்லணும்!” என்று திரும்பி படுத்து கொண்டான் ரவி. இருவருமே உறங்கவில்லை. சற்று நேரத்தில் எழுந்தவன் கதவை நோக்கி போனான். அவன் போவதை கண்டு பதறினாள் குறிஞ்சி.

“ப்ளீஸ்…. வெளியே போகாதீங்க! யாராவது பார்த்தா….”

“மேலே யாரும் வர மாட்டாங்க” சொன்னாலும் அவள் பதட்டமாக இருப்பதால் போனால் போகிறது என்று மீண்டும் மெத்தையில் வந்து படுத்தான்.

“என்னால் தூங்க முடியலை! என்ன பண்ண இப்போ?” என்றான் அவளிடம்.

“என்னாலையும் தான்” என்றாள் அவள்.

“நான் சொன்னா அதில் ஒரு நியாயம் இருக்கு! நீ சொல்றது கொஞ்சம் ஓவர்!” என்றான் ரவி.

அவன் ஏமாற்றத்தில் இருப்பது புரிந்தது அவளுக்கு. அவனை மறுத்தது அவள் மனதையும் பாதிக்க, இருவருக்கும் எதற்கு இப்போது இந்த வருத்தம்? என்று எண்ணியவள், வேகமாக அவனை நெருங்கி அவன் மேற்கொண்டு எதுவும் பேசும் முன் அவன் வாயை தன் விரல் கொண்டு மூடினாள் குறிஞ்சி. பின் கட்டிலில் அவன் பக்கம் இருந்த இரவு விளக்கின் ஸ்விட்சையும் எட்டி நிறுத்தினாள். வேண்டுமென்றே அவன் மேல் உரசி தான் அதை நிறுத்தினாள் குறிஞ்சி. அந்த இருட்டில் அவன் மேல் உரசுபவளை என்னென்னவோ செய்ய சொல்லி அவன் மனம் அவனை உந்தியது. இப்போது அவளுக்கும் மறுப்பு இல்லை என்று புரிந்தது அவனுக்கு. அவள் சம்மதம் கிடைத்தும் ஏனோ அவசரப்படவில்லை ரவி. இன்று வாழ்க்கையை துவக்கி விடும் எண்ணத்தில் தான் இருந்தான். ஆனால் அவன் எதிர்பாரதது அவனுக்கு அவள் மேல் வரும் ஆசை, தாபம், மோகம் என்று அதை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்! இதை வெறும் உடல் சார்ந்ததாக நினைக்க முடியவில்லை ரவியால். அவள் வேண்டும் தான் ஆனால் அவளின் முழு சம்மதத்தோடு வேண்டும்! அவளும் இவனை போல் இருக்க வேண்டும் என்று நினைத்தான். தன் மனதில் இருக்கும் காதல் புரியதவனுக்கு அவர்கள் இருவருக்கும் நிகழ போகும் அந்தரங்கம் காதலாக இருக்க வேண்டும் என்ற அவன் எண்ணமும் புரியவில்லை. அவளின் ஒத்துழைப்பு வேண்டும் என்ற அளவில் மட்டுமே இருந்தது அவன் யோசனை.

தான் குறிப்பு காட்டியும் வெறுமனே அவளை அணைத்து பிடித்தபடி ரவி அமைதியாகவே இருக்க, அவனுக்கு இப்போது விருப்பம் இல்லை போல், என்று விலகி படுக்க நினைத்து மெதுவாக அவனிடம் இருந்து நகர்ந்தாள் குறிஞ்சி.

அப்போது தான் சுரணை வந்தது போல், ஒரே திருப்பில் அவளை அவனுக்கு கீழே கொண்டு சென்றான் ரவி. அவளை இறுக்கியவன், சற்று வன்மையாக அவள் இதழை கொய்ய, விருப்பமுடன் அவனை இறுக்கி அணைத்தாள் குறிஞ்சி. அவளின் சம்மதம், அவள் இணக்கத்திலும் அணைப்பிலும் நன்றாக புரிய, அதன் பின் அவன் விருப்பம் போல் குறிஞ்சியை கையாண்டான் ரவி. அவ்வப்போது அவளின் முகம் பார்க்க, அவன் பயப்பட தேவையில்லை என்பது போல் உருகி கொண்டு தான் இருந்தாள் குறிஞ்சி. வேண்டியதை கொடுத்து அவளிடம் இருந்து தேவையானதை நிறைவாக எடுத்தும் கொண்டான் ரவி.

அவன் அணைப்பில் இருந்தவளுக்கு, சில காலம் முன்பு வரை அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளியை நினைத்தும், இப்போதைய அவனின் நெருக்கம் நினைத்தும் ஆச்சர்யமாக இருந்தது. எப்படி என்னுடன் இப்படி இழைகிறான்? அவன் மனம் உணராத காதலை அவனையும் அறியாமல் அவன் அணைப்பில் வெளி காட்டி இருந்தான் ரவி. குறிஞ்சிக்கு அது தான் குறுகுறுப்பை கொடுத்தது. இந்த விஷயத்தில் ஆண்கள் இப்படி தான் இருப்பார்கள் போல் என்று நினைத்து கொண்டாள். அவர்களுக்குள் இருக்கும் பிளவால் அவளால் அவனின் அன்பை புரிந்து கொள்ள முடியவில்லை.

இவன் பழைய காதலையும் பெரிதாக எண்ணவில்லை, என்னுடன் அப்படி சண்டையிடுபவன் இப்போது இப்படி மாறி கொண்டான்! அவன் வரையில் தெளிவாக இருக்கிறான்! நான் தான் மனம், காதல் என்று பலதை நினைத்து குழம்புகிறேன் என்று கசப்பாக நினைத்து கொண்டாள் குறிஞ்சி.

அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை அணைத்து கொண்டு கண் மூடியவனுக்கும் அவனை நினைத்து ஆச்சர்யமாக தான் இருந்தது. தனக்குள் இப்படி எல்லாம் ஆசை இருக்கிறது என்று இன்று தான் உணர்ந்தான் ரவி. அந்த அளவிற்கு அவனை ஆட்டி வைத்தாள் குறிஞ்சி. குள்ளி, என்னை என்னவோ செஞ்சுட்டா! என்று சிரித்து கொண்டான்.

அடுத்த ஒரு வாரம் வேகமாக ஓடியது. இருவர் முகத்தையும் வைத்தே அவர்களுக்குள் எல்லாம் சரியாக செல்கிறது என்று தெரிந்து கொண்டார்கள் பெண்கள் மூவரும்.

என் தம்பிக்கு உன்னை பிடிக்கலைனு இப்போவும் சொல்லுவியா வள்ளி? சிரித்தாள் ஷ்யாமளா.

ஆமாம் என்று தான் சொல்ல தோன்றும் குறிஞ்சிக்கு. சொன்னால் நம்ப மாட்டார்களே அந்த அளவிற்கு ரவி கொஞ்சம் நேரம் குறிஞ்சி அவன் கண்ணில் படவில்லை என்றால் அழைத்து விடுவான். எல்லாரும் அவனை கிண்டல் செய்ய, அவன் சமாளிப்பான்.

“என் பொண்டாட்டி என்ன பண்றாளோனு ஒரு பயம் தான். இனி எதுவா இருந்தாலும் நான் தானே பொறுப்பு” என்பான். அவளை தேடுகிறான் என்று மற்றவர் நினைக்க தன்னை கண்காணிக்கிறான் என்று அவள் நினைத்தாள். அதனால் அவனுக்கு இன்னும் அவளை பிடிக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. கணவனாக அவன் அவளை ஆசையாக நாடுவது, அவளில் மூழ்குவது எல்லாம் அவனின் அன்பு என்று நினைக்காமல் ஆண்களின் இயல்பு என்றே எண்ணினாள் குறிஞ்சி.

அன்று அவர்கள் ஊரில் இருக்கும் குடும்ப கோயிலுக்கு சென்றிருந்தார்கள். திருமணம் நல்லபடியாக நடந்த பின், குறிஞ்சி கையால் பொங்கல் வைத்து படையல் போடுவதாக வேண்டி இருந்தார் மேகலா. அதனால் அன்று காலையிலே கிளம்பி அங்கு வந்திருந்தனர்.

பொங்கல் வைக்க அனைத்தும் ஏற்பாட்டையும் மூர்த்தியும் அறிவழகனும் செய்து விட்டனர். அடுப்புக்கூட மருமகள் கஷ்டப்பட வேண்டாம் என்று கேஸ் அடுப்பு வாடகைக்கு வாங்குகிறேன் என்று நின்றார் மூர்த்தி. மேகலாவும் கோகிலாவும் தான் நாங்கள் உதவி செய்வோம் என்று சொல்லி அவரை தடுத்து விறகு அடுப்பு வைத்தனர். அன்று ஷ்யாமளா வரவில்லை.

அம்மாவுடனும் அத்தையுடனும் பொங்கல் வைக்க அனைத்தையும் செய்து கொண்டு இருந்த குறிஞ்சிக்கு அசௌகரியமாக இருந்தது. அவர்களுக்கு சற்று அருகில் அமர்ந்து வேறு வேலை எதுவும் இல்லாததால் பொண்டாட்டியை பார்வையால் தின்பது போல் பார்த்து கொண்டு இருந்தான் ரவி. என்ன தான் கணவனுடன் நெருக்கமாக இருந்து இருந்தாலும் அவனின் பார்வை அவளை தொல்லை செய்தது. அவன் அவளை, அவள் செய்யும் செயலை மேற்பார்வை பார்ப்பது போல் தோன்ற, சின்ன வேலைக்கும் நிறைய தடுமாறினாள் குறிஞ்சி.

ரவியால் அவன் கண்களை அவளிடம் இருந்து அகற்றவே முடியவில்லை. அவளின் ஒவ்வொரு அசைவையும் ஆசையாக பார்த்து இருந்தான். அதில் அழகான குழந்தையை ரசிக்கும் மனநிலை தான் அதிகம் இருந்தது. என் பொண்டாட்டி நான் பார்க்கிறேன் என்பது போல் பார்த்து கொண்டு இருந்தான்.

“என்னடி இது இந்த எடுபுடி வேலைக்கே இப்படி தடுமாறுறே? உன்னை வெளில கட்டி கொடுத்து இருந்தா என் மானம் போய் இருக்கும்!” என்றார் கோகிலா. அவர் விளையாட்டாக எப்போது போல் தான் மகளிடம் பேசினார். மனம் நிலை இல்லாமல் தவித்து கொண்டு இருந்த குறிஞ்சிக்கு அம்மாவின் பேச்சில் கண்கள் குளம் கண்டது.

“ஆமா, எனக்கு ஒன்னும் தெரியாது! என்னால ஒன்னும் சரியா பண்ண முடியாது” என்று சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து போக போனாள் குறிஞ்சி. அப்போது அவள் புடவை தடுக்க, பொங்கல் வைக்க என்று கொண்டு வந்திருந்த தண்ணீர் குடத்தில் போய் இடித்து விட்டாள் குறிஞ்சி. அப்படியே ஒரு குடம் தண்ணீரும் தரையில் ஊற்றியது.

“இப்போ தண்ணிக்கு எங்கேடி போறது? அப்படி என்ன கோவம் உனக்கு?” என்று கோகிலா குறிஞ்சியை அடிக்க கையை ஓங்கி கொண்டு வந்து விட்டார். அவர்களுக்குள் ஏதோ வாக்கு வாதம் என்று உணர்ந்து ரவி வருவதற்குள் தண்ணீர் கொட்டி விட்டது. அனைத்தும் சேர்ந்து குறிஞ்சியின் கண்ணில் கண்ணீர் கரகரவென்று வழிந்து விட்டது. அதிர்ந்து விட்டார் கோகிலா. இந்த சின்ன விஷயத்துக்கு மகள் அழுகிறாளா? இப்படி எல்லாம் அழும் ஆள் இல்லை அவர் மகள் என்று அவருக்கு தெரியுமே! அவள் அழவும் மேகலாவும் பதறினார்.

“ஏய், என் மருமகளுக்கு எல்லாம் தெரியும்! நீ போ, நாங்க பார்த்துக்குவோம். உன்னை யாருடி கூப்பிட்டா இப்போ? நீ வா செல்லம், இதுக்கு போய் கண்ணில் தண்ணி விடலாமா? உன் மாமா கிட்ட சொன்னா, தண்ணீ லாரியே கொண்டு வருவார்” என்று அவளை சமாதானம் செய்தார்.

அம்மா அவன் பொண்டாட்டியை சமாதானம் செய்யும் அழகை பார்த்து கொண்டு நின்றான் ரவி. ஏனோ அவளை எதுவும் சொல்ல தோன்றவில்லை அவனுக்கு. இவள் ஏன் இதுக்கு போய் அழுகிறாள் என்று தான் தோன்றியது. புதுசா கேன் தண்ணீர் இருக்கு அத்தை, நான் எடுத்துட்டு வரேன் என்று சொல்லி விட்டு அதை எடுத்து வந்து கொடுத்தான் ரவி. பின் அவள் அரிசியை போட்டு அது பொங்கும் வரை அங்கு யாரும் பேசவில்லை.

“நீ போய் அந்த மரத்தடில உட்கார் வள்ளி, இனி அரிசி வேகுற வரை நாங்க பார்த்துகிறோம்” என்றார் மேகலா.

மரத்தடிக்கு சென்று அமர்ந்தவளை நோக்கி வந்தான் ரவி. அவனை கண்டதும் அவனால் தானே இவ்ளோ பிரச்சனை என்று தோன்ற அவனை முறைத்தாள் குறிஞ்சி.

“ஏய், தண்ணியை தள்ளி விட்டு பிரச்சனை பண்ணினது இல்லாமல் பிரச்சனையை தீர்த்த என்னை பார்த்து முறைக்கிறே?” பொண்டாட்டியின் அருகாமை கிடைக்க உல்லாசமாக அவளை சீண்டினான் ரவி.

அவள் பதில் சொல்லாமல் இருக்கவும், அவள் கையை எடுத்து தன் கையோடு கோர்த்து கொண்டவன், சிரிப்புடன்,

“நாம என்னைக்கு எதை ஒழுங்கா பண்ணி இருக்கோம்? இன்னைக்கு மட்டும் எல்லாம் எப்படி சரியா வரும்?” சொல்லியபடி அவள் கைகளில் முத்தமிட்டான்.

“எனக்கு தான் எதுவுமே சரியா வராதுனு சொல்றீங்க…. அப்புறம் எதுக்கு கட்டிக்கிட்டீங்க? வேண்டாம்னு சொல்ல வேண்டியது தானே?” வேகமாக அவள் கையை உருவிக் கொண்டாள்.

“சரியா பண்ண வைக்க தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.” மெதுவாக அவள் கழுத்து வளைவில் ஊதினான்.

“நீங்க சொல்லி தந்து பண்ண வைக்கிற அளவு எனக்கு புத்தி இல்லாமல் போயிடலை. உங்க அறிவை உங்களோட வைச்சுக்குங்க. நீங்க ஒழுங்கா இருந்திருந்தா இந்த பிரச்சனையே இல்லை! என்னை கண்காணிக்கிறேன்னு ப்ளீஸ் என்னை படுத்தாதீங்க!” என்றாள் வேகமாக.

“நான் எங்கேடி உன்னை கண்காணிச்சேன்?” அவன் ஜொள்ளு விட்டு கொண்டு இருந்ததை அவள் இப்படி சொன்னால் அவனுக்கு என்ன புரியும்?

“சி.ஐ. டி வேலை பார்க்கிற மாதிரி தூரமா உட்கார்ந்து என்னையே முறைச்சுக்கிட்டு இருந்தா அதுக்கு பேர் என்ன?” வெடித்தாள் குறிஞ்சி.

“ஹஹாஹா, என்னோட பார்வை அவ்ளோ கேவலமாவா இருந்துச்சு? என் பொண்டாட்டிக்கு நான் அவளை ஆசையா பார்க்கிறது கூட தெரியலை” என்று சொல்லி ரவி சிரிக்க,

அப்படியா இருக்கும்? இவன் என்ன ஆசையா பார்ப்பானா? ரவியை நம்பாமல் பார்த்தாள் குறிஞ்சி.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!