காயமின்றி வாழும் காதல் – 23
கீழே பார்க்கில் அமர்ந்து இருந்த ரவியை தேடி வந்தாள் அனு.
“என்ன அண்ணா? நீங்க குறிஞ்சியை அடிச்சுட்டீங்க? நீங்க ரொம்ப பாசமா இருப்பீங்கனு சொல்லுவா குறிஞ்சி. அதை நம்பி தான் நான் என் மேல் இருந்த தப்பை அவள் பண்ணதா சொன்னேன். நீங்க புரிஞ்சுக்குவீங்கனு நினைச்சேன். ப்ளீஸ் அண்ணா, அவ கிட்ட நான் மன்னிப்பு கேட்டதா சொல்லிடுங்க. நான் தான் கவனக் குறைவில் என் பிள்ளையை எங்கோ விட்டுட்டேன். என் வீட்டுக்காரர் என்னை அடிப்பார் அதுக்கு பயந்து குறிஞ்சி கிட்டே விட்டு இருந்தேன் சொல்லிட்டேன் அண்ணா! இப்போ நான் வந்தது கூட அவருக்கு தெரியாது. இனி நான் குறிஞ்சி கிட்ட பேச முடியாது. ப்ளீஸ் அண்ணா, என்னை மன்னிச்சுட சொல்லுங்க என்று கடகடவென்று சொல்லி விட்டு ஓடிப் போனாள் அனு.
என்ன குறிஞ்சி மீது தப்பில்லையா? இவள் பொய் சொன்னாளா? அதிர்ச்சி ஆனான் ரவி. கடவுளே, அவளை அறைந்து என்னவெல்லாம் பேசி விட்டேன்! இந்த பொண்ணை! ஒரு நாள் என் கையில் கிடைக்கட்டும்! புலம்பியபடி வேகமாக வீட்டிற்கு விரைந்தான் ரவி.
அனுவின் கணவன் வந்து, அவன் மனைவி கடைக்கு போய் இருக்கும் போது பிள்ளையோடு விளையாடிய குறிஞ்சி பொறுப்பில்லாமல் பிள்ளையை தொலைத்து விட்டாள். பல இடத்தில் தேடி பின் யாரோ கண்டு பிடித்து கொடுத்தார்கள். இனிமேல் அவன் மனைவியோடும் மகனோடும் குறிஞ்சி பேசக் கூடாது. இப்படி பொறுப்பில்லாத பெண்ணின் பழக்கம் எங்களுக்கு வேண்டாம். உங்கள் மனைவிக்கு எப்படி நடக்க வேண்டும் என்று சொல்லி கொடுங்கள் என்றான்.
உண்மையில் நடந்தது என்னவென்றால், அனு கடையில் இருந்து திரும்பி வரும் போது, அபார்ட்மெண்ட் கீழே ஒரு தோழி வர அவளுடன் கதை பேச ஆரம்பித்தாள். அவர்கள் பேச்சில் இருக்க, அங்கேயே விளையாடி கொண்டு இருந்த அனுவின் பிள்ளை எங்கோ நழுவி இருந்தான். அவனை அவர்கள் தேட, அனு சென்று வெகு நேரம் ஆகி விட்டதே என்று அவள் கணவன் கீழே வந்தான். அவன் வந்த நேரம் பிள்ளை கிடைத்து விட்டது. கணவனுக்கு பயந்து பழியை தூக்கி குறிஞ்சியின் மீது போட்டு விட்டாள் அனு. குறிஞ்சி எங்கே என்று அவன் கேட்ட போது, பிள்ளை கிடைத்து இப்போது தான் வீட்டிற்கு போனாள் என்று சொல்லி விட்டாள். அனு எதிர்பாராதது, அப்போதே குறிஞ்சியின் வீட்டிற்கு கணவன் செல்வான் என்பதை. பின்னால் குறிஞ்சியிடம் விஷயத்தை சொல்லி விடலாம் என்று இருந்தாள்.
வீட்டிற்கு விரைந்தவனுக்கு மக்கள் இப்படி எல்லாம் பொய் சொல்லி சமாளிப்பார்களா? என்றிருந்தது.
வீட்டிற்கு வந்தவன் கண்டது, பெட்டி அடுக்கி கொண்டு இருந்த குறிஞ்சியை தான். அவளை நெருங்கி வேகமாக அவளை இறுக்கி அணைத்தவன், அவள் கன்னங்களில் முத்தமிட்டு, தாங்கி,
“ஸாரி ஸாரி குறிஞ்சி. உன் மேல் தப்பு இல்லைனு இப்போ தான் அந்த பொண்ணு சொன்னுச்சு. ரொம்ப ஸாரி! தப்பா நினைச்சுட்டேன்” என்றான்.
அவன் அணைப்பில் இருந்து வெளிவந்தவள்,
“அந்தாள் வந்து பேசினப்போ, ஜஸ்ட் கொஞ்சம் லாஜிக்கா யோசிச்சு இருந்தா கூட நான் காலையிலே இருந்து வீட்டில் தான் இருக்கேங்கிறதை சொல்லி இருக்கலாம் நீங்க! என் மேல் தான் தப்பு இருக்கும்னு விசாரிக்காம, கொஞ்சம் கூட யோசிக்காம நீங்களே முடிவு பண்ணிட்டீங்க!” என்றாள் வருத்தமாக.
“தப்பு தாண்டா. ப்ளீஸ் ஸாரி! ஒருவேளை நான் திரும்ப தூங்கும் போது நீ எதுவும் கீழே போய் இருப்பியோனு….” சமாதானம் செய்ய அவன் முயற்சி செய்ய,
“சரி அப்படியே நான் கீழே போய் இருந்தாலும் அந்த குழந்தையை நான் தான் தொலைச்சு இருப்பேன்னு ஏன் நினைச்சீங்க?”
அந்த கேள்விக்கு நிச்சயம் பதில் சொல்ல முடியாது ரவியால். சொன்னால் அவளை நிச்சயம் காயப்படுத்தும் அந்த வார்த்தைகள். அதனால் அமைதியாக நின்றான் ரவி. ஆனால் குறிஞ்சியே சரியாக அவன் மனதில் இருப்பதை சொன்னாள்.
“ஏன்னா என் ஹிஸ்டரி ஜாக்ரபி எல்லாம் சரியில்லை. இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் அந்த பழைய விஷயத்தை அடிப்படையா வைச்சு தான் என்னை கணிப்பீங்க! அப்படி தானே? அதனால் தான் உங்களுக்கு என்னை பார்த்தாவே எரிச்சலா இருக்கு! வெறுப்பா இருக்கு! கரெக்ட்டா?”
அவள் உண்மையை சொல்லும் போது இவன் என்ன சொல்வான்? முகம் கசங்க நின்றிருந்தான்.
“என்னை நைட் பஸ் ஏத்தி விட்ருங்க. நான் எல்லாம் பேக் பண்ணிட்டேன்” என்றாள் குறிஞ்சி இறுக்கமாக.
“ஹேய் குறிஞ்சி, நான் இன்னைக்கு ரொம்ப தப்பு பண்ணிட்டேன் தான். சொன்னது தப்பு தான். இந்த ஒரு தடவை விடேன். நீ எத்தனை தடவை சொதப்பி இருக்கே! இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சு விடேன்.” அவளின் மனவருத்தம் புரியாமல் இலகுவாக அவளை கையாள துணிந்தான் ரவி.
“நான் தப்பு பண்ணி இருந்தாலும் யாருக்கும் என் இஷ்டத்துக்கு தண்டனை கொடுக்க நினைச்சதில்லை.”
“ஏன் இப்போ இவ்ளோ சீரியஸ் பேச்சு! இது ஏதோ தப்பா போச்சு! இது கூட நீ தேடிக்கிட்ட பிரண்டுனால தான். என்னால இல்லை!” சலிப்பாக சொன்னான் ரவி.
“இது மாறாது! இனி அடிக்கடி இப்படி தான் தப்பா தப்பா போகும்! ஏன்னா உங்களுக்கு என் மேல் அடிப்படை நம்பிக்கை, அன்பு எதுவுமே இல்லை! கொஞ்சமாச்சும் அன்பு இருந்தா என் பக்கம் இருந்து யோசிப்பீங்க! என்னை இவ்ளோ சீக்கிரம் காயப்படுத்த வராது உங்களுக்கு!” என்றாள்.
“நான் தான் தெரியாம பண்ணிட்டேன்னு சொல்றேன்ல…. உனக்கு என் மேல் ரொம்ப வருஷமா நிறைய அன்பு இருக்கே…. நீ என் பக்கம் இருந்து யோசி” அவளிடம் பேசி ஜெயிக்க முடியாமல் அவளை கார்னர் பண்ணுவதாக நினைத்து பேசினான் ரவி. ஆனால் அது நிலைமையை இன்னும் மோசம் ஆக்கியது.
“மதினி சொல்லிட்டங்களா?” அதிர்ச்சியாக கேட்டாள் குறிஞ்சி. திருமணம் ஆனதால் ஷ்யாமளா தம்பியிடம் சொல்லி விட்டாள் போல் என்று நினைத்து தான் கேட்டாள் குறிஞ்சி. இல்லையேல் தன் ரகசியத்தை சொல்லும் ஆள் இல்லை ஷ்யாமளா என்று அவளுக்கு நன்றாக தெரியும்.
“ஏன் அவ சொல்லணும்? எனக்கே புரிஞ்சுது! உன்கிட்ட நல்லா தெரிஞ்சுது அந்த மாற்றம்! என்றான் சிரிப்புடன். காதலை பற்றி சொல்லியவுடன் அவள் மனம் மாறும் என்ற நம்பிக்கை!
“அப்போ உங்களுக்கு தெரிஞ்சுதால் தான் என்கிட்ட கடுமையா பேசிட்டு போனீங்களா? கல்யாணம் பத்தி எல்லாம் பேசினீங்களே?” சரியாக கேட்டாள் குறிஞ்சி.
அப்போது தான் உணர்ந்தான் ரவி பேச்சு ஆபத்தான நிலைமைக்கு போகிறது என்று. “அது…. எனக்கு நியாபகம் இல்லை” பின் வாங்கினான் ரவி.
“பொய்! என்னை பத்தி உங்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லாம தான், நான் எங்கே வீட்டில் சொல்லி உங்களை கல்யாணம் வரை கொண்டு வந்துடுவேன்னு பயந்து என்கிட்ட மோசமா பேசி இருக்கீங்க! கடவுளே இவ்ளோ கேவலமா நினைச்சவர் கிட்டயே என்னை கொண்டு வந்து சேர்ந்துட்டியே?” முகத்தை மூடி கொண்டு அழுதாள் குறிஞ்சி.
“ஹேய் இதெல்லாம் ரொம்ப அதிகம்! இப்போ ஏன் இப்படி அழுறே?” அவள் அப்படி அழுகவும் அவனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.
“உண்மையா சொல்லுங்க! நான் சொன்னது உண்மை தானே? இல்லைனா ஏன் உங்களால் என்கிட்ட நல்ல விதமா நடந்துக்க முடியலை! என்னை புரிஞ்சுக்க முடியலை?”
“இன்னைக்கு தவிர நமக்குள்ள இந்த ஒன்றரை மாசமா நல்லா தானே போகுது? நான் உன்னை மோசமா வா நடத்துறேன்?”
“இல்லை தான்! நடத்தலை. ஆனா அப்படி நடத்த முடியாதபடி பார்த்து பார்த்து நடந்துகிறேன் நான்! நான் எவ்ளோ விட்டு கொடுக்கிறேன் தெரியுமா? இந்த ரெண்டு மாசமா நான் உங்களுக்காக என் இயல்பையே மாத்திக்கிட்டு, யாருக்கிட்டயும் பேசாம பழகாம, வெளியேவே போகாம இருக்கேன். அதனால் நல்லா போச்சு! இன்னைக்கு ஒரு பிரச்சனை வந்தவுடனே சாயம் வெளுத்து போச்சே!!” கசப்பாக பேசினாள் குறிஞ்சி.
“இப்போ என்ன தான் சொல்ல வர்றே நீ? ஆமா நீ சொன்னது எல்லாம் உண்மை தான். உன்னால ஏதாவது பிரச்சனை வரும்னு நான் நினைச்சேன் தான்! அதுக்கு காரணம், பின் விளைவுகளை பத்தி யோசிக்காமல் உதவி செய்யும் உன் குணம் தான்.”
“இன்னைக்கு நான் என்ன பண்ணினேன்?”
“அந்த பொண்ணு கிட்ட நீ ரொம்ப பிரீயா பழகி இருப்பே! சரி இவகிட்ட நாம என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு அந்த பொண்ணுக்கு தெரிஞ்சு இருக்கும்” என்று அவள் மேலேயே பழியை போட்டான் ரவி.
அவன் பேச்சில் வெறுத்து போனாள் குறிஞ்சி. இவனுக்கு கொஞ்சம் கூட என் மனதை பற்றிய கவலை இல்லை என்று உணர்ந்தவள்,
“உங்க காதல் தெரிஞ்ச பிறகு உங்களுக்கும் எனக்கும் முடிஞ்சு போச்சுங்கிற தெளிவோட தான் இருந்தேன். ஆனா இடையில் நடந்த சில குழப்பத்தில், என் காதல் என்னை குழப்பி உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்போ கூட நீங்க என்னை குறை தான் சொன்னீங்க!”
“குறை இல்லை! உண்மையை தான் சொன்னேன்!” பிடிவாதமாக பேசினான் ரவி.
“உங்களால் என்னை புரிஞ்சுக்கவும் முடியாது! என்கிட்ட நல்லா நடந்துக்கவும் முடியாது. இந்த கல்யாணம் பெரிய தப்பு” என்றவள் அவள் கரத்தில் இருக்கும் தழும்பை வருடினாள்.
“உன் வீட்டில் இருக்க எல்லாரும் கூட தான் போன மாசம் கோயில்ல பண்ண விஷயம் தப்பு சொன்னாங்க! அப்போ அவங்களும் தப்பா?”
“அவங்க பேச்சில் என் மேல் இருக்க அக்கறை தான் ஜாஸ்தியா இருந்துச்சு! உங்க பேச்சில் என் மேல் இருக்கும் எரிச்சல் தான் தெரிஞ்சுது! என்னை ஒரு சுமையா தானே பார்க்கிறீங்க? அதனால் தானே எனக்கு கட்டுபாடு, கண்காணிப்பு எல்லாம்?” கோபமாக ஆரம்பித்து வருத்தமாக முடித்தாள் குறிஞ்சி.
“நான் உன்னை ஜாக்கிரதையா தான் இருக்க சொன்னேனே தவிர உன்னை நான் அடைச்சு வைக்கலை. கட்டுப்படுத்தலை” என்றான் ரவி கோபமாக. அவள் அவன் தப்பு செய்தவன் போல் பேச அவனுக்கு கோபம் வந்து விட்டது.
சற்று நேரம் அமைதியாக இருந்தவள், “இவ்ளோ பிடிக்காம இருக்கும் போது ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?” என்றாள் மிகவும் அமைதியான தொனியில். பின் அவளே,
“உங்க காதல் கை கூடலை, உங்க அப்பாவை கஷ்டப்படுத்தின குற்ற உணர்ச்சியில் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டீங்க நினைக்கிறேன்!” என்றாள்.
“நீயே ஏதோ சொல்றே! நான் அப்படி சொல்லவே இல்லை!” என்றான் ரவி கடுப்பாக.
ஆரம்பத்தில் கொஞ்சம் கோபமாக பேசியவள் இப்போது நிதானித்து பேசுவது ரவிக்கு கிலியை பரப்பியது வயிற்றில்.
ஒரு விஷயத்தில் நமக்கு பற்று இருக்கும் வரை தான் நாம் அதற்காக அதிகம் உணர்ச்சிவசப்படுவோம். எப்போது அந்த பற்று அற்று போகிறதோ அப்போதே அந்த விஷயத்திற்காக கோபப்படுவதோ, போராடுவதோ உணர்ச்சிவசப்படுவதோ இருக்காது!
கொஞ்சம் நேரம் முன்பு வரை அவனின் தவறை புரிய வைக்கும் நோக்கில் பேசியவள் இப்போது நீ எப்படி வேண்டுமானாலும் இரு என்று மனம் விட்டு போனவள் போல் அல்லவா பேசுகிறாள்!
“இந்த கல்யாணம் போதும் அத்தான்! எல்லார்கிட்டயும் நீங்க சொல்றீங்களா? நான் சொல்லவா?” என்றாள் குறிஞ்சி.
முதல் முறையாக நெஞ்சில் வலி என்பதை உணர்ந்தான் ரவி. எப்படி சொல்கிறாள் இவ்வளவு சுலபமாக? என்னுடன் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லையா? அவ்ளோ தானா? அதிர்ந்தது அவன் நெஞ்சம். இவ்வளவு உறுதியாக பேசுகிறாளே! பயம் வந்தது அவனுக்கு. மிகவும் காயப்படுத்தி விட்டேனோ! இப்போது வருந்தினான் ரவி.
“சரி இவ்ளோ நாள் நான் உன்னை புரிஞ்சுக்கலை! இனிமே நீ எனக்கு புரிய வை! அவ்ளோ தானா உன் காதல்? என்னால யாருக்கிட்டயும் போய் நீ சொல்ற மாதிரி எல்லாம் சொல்ல முடியாது!” என்றான் ரவி. அவள் அவனை வேண்டாம் என்று சொல்லும் போது அவன் இதயம் பன்மடங்கு துடித்தது. அவளில்லாத வாழ்க்கையா? நினைக்கவே முடியவில்லை ரவியால்.
“எனக்கு அப்படி புரிய வைக்க இஷ்டம் இல்லை அத்தான். இத்தனை நாள் நான் பொறுமையா இருந்தது கூட என் மேல் அன்பு வைச்சவங்களை நான் காயப்படுத்துறேன் அப்படிங்கிற உணர்வில் தான். உங்களுக்கு அது பொருந்தாதுனு தெரிஞ்சு போச்சு!”
“எனக்கு உன்மேல் கொஞ்சம் கூட அன்பு இல்லைனு சொல்றியா?”
“இருக்கு! உங்களை சந்தோஷமா வைச்சுக்கிட்டா வர்ற அன்பு அது! அது எப்போதும் சாத்தியம் இல்லையே! எதிர்பாராமல் ஏதாவது வந்துட்டா என்ன பண்றது? நான் இன்னொரு தடவை அடி வாங்க முடியாது! அடி வாங்கிட்டு சும்மாவும் இருக்க மாட்டேன்!” என்றாள் சிரித்து கொண்டே.
“இப்போ கூட அடி, பரவாயில்லை” என்றான் ரவி. அவன் மேல் தவறு இருக்கிறதே!
“வேண்டாம் எனக்கு விருப்பம் இல்லை! உங்களை நான் என் உரிமையாவும் பார்க்கலை. இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டதில என் மேலேயும் தப்பு இருக்கு. அதுக்கு தண்டனை நினைச்சுக்கிறேன்” என்றாள்.
என்ன சொல்வது என்றே புரியாமல் நின்றான் ரவி. வேண்டாம் என்பதில் இவ்வளவு தெளிவாக இருக்கிறாளே! அவன் வேண்டும், வாழ்க்கையை சரி பண்ணுவோம் என்ற எண்ணம் இல்லையே அவளுக்கு என்று மறுகினான் ரவி. அவன் மனம் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்று விரும்பியது. ஆனால் அவள் மனதில் தன்னை பற்றிய எண்ணம் மிகவும் கீழ் இறங்கி விட்டதை உணர்ந்து, குற்ற உணர்ச்சியில் அதை சொல்ல முடியாமல் நின்றான் ரவி. ஆனால் சற்று நேரத்தில் வாழ்க்கை முக்கியம் என்று தோன்ற,
“நாம இதை சரி பண்ணிக்க பார்க்கலாம் குறிஞ்சி” என்றான்.
“அது ரொம்ப கஷ்டம் அத்தான்! பல வருஷமா என் மேல் எரிச்சலை வளர்த்து வைச்சு இருக்கீங்க! எனக்கு உங்க பொண்டாட்டியா இருந்து அதை தாங்கிக்கிற தெம்பு இல்லை! அத்தை மகளா இருந்தா எபெக்ட் கம்மியா இருக்கு” என்றாள்.
அதற்குமேல் எதுவும் பேசவில்லை ரவி. அவள் கோபமாக இருப்பது போல் எந்த பாசாங்கும் இல்லாமல் இயல்பாக அவன் முகம் பார்த்து பேசினாள். வீட்டில் அவனுக்கு தெரிய வேண்டிய விஷயத்தை சொன்னாள். ஊருக்கு போவதிலும், பிரிவிலும் அவள் பிடிவாதமாக இருக்க வேறு வழியில்லாமல் அவளை பஸ் ஏற்றி அனுப்பி வைத்தான் ரவி. அவன் ஊருக்கு வரும் போது விஷயத்தை பெரியவர்களிடம் சொல்லி கொள்ளலாம் அது வரை அமைதியாக இரு என்று சொல்லி அனுப்பினான் ரவி. அவளும் ஒத்துக்கொண்டாள்.
அவள் பஸ் ஏற போக, அவனுக்கு கண் கலங்கியது. கல்நெஞ்சக்காரி! மனதிற்குள் திட்டியவன்,
“இவ்ளோ ஜாலியா புருஷனை பிரிஞ்சு போற பொண்ணை இப்போ தான் பார்க்கிறேன்” என்றான் கடுப்பாக.
விரக்தி புன்னகை புரிந்தவள், “எனக்கு லவ் பெயிலர் ஆனப்போ நீங்க வந்திருந்தா இப்போ நீங்க எதிர்பார்க்கிற பீலிங்ஸ் பார்த்து இருக்கலாம்!” என்றாள். பின் அவளே,
“என் மனசில எப்போதும் உங்க மேல் இருக்க அன்பு, காதல் அப்படியே தான் இருக்கும். உங்களால் நான் காயப்பட்டாலும், என் காதல் காயப்படாது! அதனால் தான் இப்போ என்னால உங்க கூட சகஜமா பேச முடியுது. உங்க மேல் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை தான் ஆனா அதுக்காக என் சுய மரியாதையை விட்டுட்டு நீங்க என்ன பண்ணாலும் உங்க கூட இருக்க முடியாது” என்றாள்.
அதே நேரம் பஸ் கிளம்ப,
“பை பை அத்தான்!” சிரித்த முகமாகவே விடை பெற்றாள் குறிஞ்சி.
போகும் பஸ்ஸை பார்த்தபடி நின்றான் ரவி. மனமும் மூளையும் காலி ஆனது போல் உணர்வற்று போனான் ரவி.