காயமின்றி வாழும் காதல் – 27
கலையரசி சொன்ன இடத்தை அடைந்த குறிஞ்சிக்கு ஏனோ மனம் படபடவென அடித்தது. அவ்வளவாக ஆள் நடமாட்டமே இல்லாத இடமாக இருந்தது அது. அவளையும் காணவில்லை என்றதும் திரும்பி போய் விடுவோமா என்று நினைக்கையில் ஓட்டமும் நடையுமாக வந்தாள் கலை.
“ஸாரி பா லேட் ஆய்டுச்சு!”
“பரவாயில்லை, பணத்தை பிடி. நான் கிளம்புறேன். என் அத்தான் வந்துடுவார். நான் சீக்கிரம் வீட்டுக்கு போகணும்.”
“இருப்பா, நானும் பணத்தை என் பிரண்ட் கிட்டே கொடுத்திட்டு உன் கூடவே வீட்டுக்கு வந்துருறேன். உன் போன் குடேன் ஒரு நிமிஷம், அவன் எங்க இருக்கான் கேட்கிறேன்” என்றாள்.
குறிஞ்சி போனை கொடுக்க, சற்று தள்ளி நின்று பேசிக் கொண்டு இருந்த கலை, பேசுவதாக பாவ்லா பண்ணிய கலை, அங்கிருந்தே “ஸாரி குறிஞ்சி” என்று சொல்லியபடி அவள் அருகில் வந்து நின்ற காரில் ஏறி பறந்தாள்.
ஒரு நிமிடம் என்ன நடந்தது என்றே புரியாமல் திகைத்து போய் நின்றிருந்தாள் குறிஞ்சி. அந்த அதிர்ச்சிக்கு மேல் இன்னொரு அதிர்ச்சியாக வேகமாக வந்த கார் ஒன்று அவளை இடிப்பது போல் வந்து நின்றது. துள்ளி விலகிய குறிஞ்சி, வேகமாக தன் வண்டியை எடுக்க போனாள்.
காரில் இருந்து வேகமாக வந்தவனை கண்டு ஆச்சர்யமாக இருந்தாலும் ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவள் அங்கிருந்து கிளம்பினால் போதும் என்று நினைத்து அவனை பொருட்படுத்தாமல் வேகமாக ஓடி வண்டியை எடுக்க போனாள்.
அவளையும் விட வேகமாக நடந்து அவளை எட்டியவன், “இப்போ என் கூட வந்தா உயிர் தப்பிக்கும்! இல்லைனா உன் மாமனை அடிச்சு தூக்கின மாதிரி உன்னையும் அடிச்சு தூக்கிடுவேன். அந்தாளை ரோட்டிலே விட்டுட்டு போயிட்டேன். ஆனா உன்னை அப்படி எல்லாம் விட மாட்டேன். ஒரு வருஷமா போட்ட ஸ்கெட்ச்! அவ்ளோ ஈஸியா விடுவேனா?” சிரித்தான் குமார்.
என்ன மாமாவை இவன் தான் இடிச்சானா? இது எல்லாம் பல நாள் திட்டமா? அதிர்ந்து போனாள் குறிஞ்சி. கலையும் இதற்கு உடந்தையா? இதயம் தாறுமாறாக துடிக்க, வேகமாக சுற்றி முற்றி பார்த்தாள்.
“இங்க ஒரு ஆள் கூட வராது! இதெல்லாம் எங்க இடம். பாரு ஒரு சிசிடிவி கூட இருக்காது! எல்லாம் தெரிஞ்சு தானே இந்த இடத்தை சூஸ் பண்ணினோம்! வேணும்னா சத்தம் போட்டு பார்க்கிறியா?” நக்கலாக கேட்டான் குமார்.
“உனக்கு என்ன வேணும்? இப்போ ஏன் இப்படி எல்லாம் பண்றே?” பயத்தில் அழுகை வர பேசினாள் குறிஞ்சி.
“வா, போய்க்கிட்டே பேசுவோம்” என்று அவளை தரதரவென இழுத்து சென்று காரில் அடைத்தான் குமார். அவள் அருகில் அமர்ந்தவன், சத்தம் வரக்கூடாது என்றவன் அவன் பாக்கெட்டில் இருந்த கத்தியை காட்டினான்.
“ப்ளீஸ்…. என்னை விட்ரு….” பயங்கரமாக அழ ஆரம்பித்தாள் குறிஞ்சி.
“அடடா!!! ஜான்சி ராணி இப்படி அழுறீங்க??!! ஷேம் ஷேம் பப்பி ஷேம்! ச்சு…. உண்மையிலே நீ இன்னும் கொஞ்சம் நேரத்தில ஷேம் ஷேம் பப்பி ஷேமா தான் ஆக போறே! ஹாஹா” பயங்கரமாக சிரித்தான் குமார்.
“நீ தான் என்னை வேண்டாம் சொன்னே? நான் என்ன பண்ணினேன்? ப்ளீஸ் என்னை விட்ரு!” கெஞ்சினாள் குறிஞ்சி. அவன் என்ன சொல்கிறான் என்று புரிய அவளால் சிந்திக்கவே முடியவில்லை. என்னென்ன சித்திரவதை பண்ணுவானோ என்ற பயம் நெஞ்சை கவ்வியது.
“இப்போ வேணும்னு தோணுதே! என் மூக்கை உடைச்சானே, அவனை தானே கல்யாணம் பண்ணிருக்கே! உன்னை பேக் அப் பண்ண போறோமே, இனி யார் மூக்கை உடைப்பான் பார்ப்போம்!”
“ஏன் இப்படி எல்லாம் பண்றே? உனக்கு என்ன வேணும்? நான் என்ன பண்ணின என்னை விடுவே?”
“ஹேய் நான் பாஸ் இல்லை மா! என் பாஸ் உன்மேல் கொள்ளை கொள்ளையா வளர்த்து வைச்சு இருக்கார்…. அவர் சொல்லுவார்! என்ன வளர்த்து வைச்சு இருக்கார் கேளு? ஓ! நீ தான் பயந்து இருக்கியே, நானே சொல்றேன்! வெறி, வெறுப்பு, கோபம், ஆத்திரம் எல்லாம்! அவர் தான் சொல்லணும்! அதுவரை வெய்ட் பண்ணு! இன்னைக்கு நைட் தான் வர்றார். அவருக்கு ஸ்பெஷல் ட்ரீட் நீ தான்! அதுக்கு அப்புறம் எனக்கு! என்ன இருந்தாலும் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க இருந்தவன் தானே?” கண்ணடித்தான் குமார்.
பயத்தில் உறைந்து போய் விட்டாள் குறிஞ்சி. மூச்சு விடுகிறாளா இல்லையா என்று அவளுக்கே தெரியவில்லை. அந்த அளவிற்கு இருந்தாள். இதயம் மட்டும் அதி வேகமாக துடிக்கவில்லை என்றால் செத்து விட்டதாக கூட எண்ணி விடலாம்.
ஏதோ ஒரு வீடு வர, யாரோ கேட்டை திறந்தார்கள். காரை உள்ளே விட்டான் குமார். கையை இறுக்கி பிடித்து அவளை இறங்க வைத்தான். பெரிய மதில் சுவர், அவளுக்கு என்ன இடம் என்று கூட தெரியவில்லை.
அவளால் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் அவளை சாதாரணமாக ஒரு அறையில் விட்டு வைத்தான். அந்த அறையில் ஒரு பொருள் கூட இல்லை.
மாலை மங்கி, இரவு வந்தது தெரிய, கேவி கேவி அழுதாள் குறிஞ்சி. அவள் எங்கு சென்றாள் என்று கூட யாருக்கும் தெரியாது. எத்தனையோ முறை சொல்லி இருக்கிறான் ரவி,
“நீ யாருக்கு வேணா ஹெல்ப் பண்ணு ஆனா உன் இஷ்டத்துக்கு செய்யாதே! எங்க கிட்ட சொல்லிட்டு செய். நீ இன்டிபென்டெண்ட்டா இருக்கிறது சந்தோஷம், ஆனா அதே சமயம் சேப் ஆகவும் இருக்கணும். உன்னோட எல்லாமும், அது சின்னதோ பெரிசோ குடும்பத்தில் யாருக்காவது தெரிஞ்சு இருக்கணும்.”
அவன் சொல்லியதின் முக்கியத்துவம் இன்று புரிந்தது. நாம் குடும்பத்தில் அதை பகிர்ந்து கொள்ளும் போது நமக்கு தோன்றாத ஏதாவது ஒரு விஷயம் மற்றவர்களுக்கு தோன்றும்! அன்றே கலையின் போக்கு அவளுக்கு ஒரு மாதிரி தான் இருந்தது.
இது என்னடா இது? அம்பாதயிரம் கேட்டவ, டக்குனு ஐந்தாயிரம் பராவயில்லை சொல்றாளே என்று ஒரு நிமிடம் தோன்றியது குறிஞ்சிக்கு. பின் நமக்கு என்ன? இந்த பணம் வராது என்று தெரிந்து தான் கொடுக்கிறோம் என்று அதை பெரிதாக எண்ணவில்லை குறிஞ்சி. அதை புறம் தள்ளியது எவ்வளவு தவறு!! தலையில் அடித்து கொண்டு அழுதாள் குறிஞ்சி.
அத்தான், உங்க மேல் தப்பு தப்புனு நீங்க சொல்றதை பெரிசா எடுத்துக்காம போய்ட்டேன்! இப்போ தான் என் பக்கம் இவ்ளோ பெரிய தப்பு இருக்குனு எனக்கு புரியுது. நான் உதவி தானே செய்றேன்னு நினைச்சேன். ஆபத்து எப்படி வேணா வருங்கிற அறிவு கொஞ்சமும் எனக்கு இல்லையே!!! உங்க கிட்ட திரும்பி வருவேனா? அய்யோ!!! அழுகையில் கரைவது தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தாள் குறிஞ்சி.
***********
மாலையில் வீடு வந்த ரவி, குறிஞ்சியை கேட்க எங்கே சென்றாள் என்று தெரியவில்லை என்றதும் மிகவும் கோபமாகி விட்டான். அவள் தொலைபேசிக்கு அழைக்க, அது ஸ்விட்ச் அப் செய்யப்பட்டு இருந்தது. மிகவும் பதட்டம் ஆகி விட்டான் ரவி. லோகேஷன் ட்ராக்கர் போட்டு இருந்தான் அவளின் போனில் ரவி. அது கடைசியாக திருச்செந்தூரின் மையப்பகுதியை தான் காட்டியது. வேண்டுமென்றே அவள் போனை அது வரை எடுத்து சென்று ஆப் செய்து தூக்கி போடுமாறு உத்தரவு இட்டு இருந்தான் குமாரின் பாஸ். அதை போலவே செய்து இருந்தாள் கலை.
குறிஞ்சி சார்ஜ் எல்லாம் சரியாக போட்டு வைப்பாள், ஆப் பண்ணும் பழக்கம் அவளுக்கு இல்லை. தன் பதட்டத்தை காட்டி கொள்ளாமல் மேகலாவிடம் கேட்க, அவர் கொஞ்சம் நேரம் முன்னாடி தான் கோகிலா சொன்னா, நாங்களும் தூங்கிட்டோம் பா. போனது தெரியாது. ஒரு இரண்டரை மூணு மணி இருக்கும் போல் என்றார். அவள் அடிக்கடி வெளியில் செல்வதால் அவர்கள் பயப்படுவதில்லை. ஆனால் இப்போது மணி ஐந்தாகி இருக்க அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
எதற்கும் இருக்கட்டும் என்று அவனுக்கு பேட்மிண்டன் கிளப்பில் பழக்கம் ஆகி இருந்த டாக்டர் நண்பரை அழைத்து, காவல்துறையில் யாரையும் தெரியுமா? என்று கேட்டான். அவருடைய நண்பரின் மச்சான் தான் நம்ம ஊர் திருநெல்வேலி எம்.எல்.ஏ என்று அவர் சொல்ல, இப்போ இது பிரச்சனையா இல்லையானே எனக்கு தெரியலை. ஏதாவது என்றால் எனக்கு உங்க உதவி தேவை என்று சொல்லி வைத்தான் ரவி. அவரும் எதுவென்றாலும் சொல்லுங்கள் என்றார்.
அவனின் முகத்தை பார்த்த மூர்த்திக்கு மிகவும் சந்தேகம் வர, அவனைக் கேட்டார். அவன் தன் சந்தேகத்தை சொல்ல, யோசிக்க வேண்டாம் பா. நாம புகார் கொடுத்துடுவோம் என்ற சொல்ல, அவனுக்குமே அது சரியாக பட்டது. நண்பரின் உதவியுடன், ஆட்சியில் இருக்கும் ஆட்களின் தொடர்பில் அதிகாரிகள் உடனே ரவியின் புகாருக்கு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தார்கள்.
அவன் வீட்டிற்கு விசாரணை என்று வர, அந்த தெருவில் இருந்த ஒரு வீட்டில் தெருவை நோக்கி சிசிடிவி இருக்க அவர்கள் வீட்டில் சென்று பார்த்தனர். அதில் ரவியின் வீட்டு வாசல் பதிவாகி இருந்தது. அதை காணும் போது, கலை வந்திருந்து பதிவாகி இருந்தது. அவள் மதிய நேரம் வந்ததால் இவர்கள் யாரும் பார்க்கவில்லை. ரவி வாசுகியை அழைத்து கேட்க, அவருக்கு அவளை தெரிந்து இருந்தது. அடுத்த தெரு என்றதும் அவர்கள் வீட்டிற்கு செல்ல அங்கே, கலையரசியை மதியத்தில் இருந்து காணவில்லை ஒரே களேபரமாக இருந்தது.
நாம் நினைத்ததை விட பெரிய விஷயமாக இருக்கும் போலவே என்று எண்ணிய காவல்துறை ஆய்வாளார், விசாரணையை அவர்களிடமும் துவக்கினார்.
அவள் கணவன் மூலையில் அமைதியாக அமர்ந்து இருந்தான். அவள் மாமியார் தான் புலம்பி கொண்டு இருந்தார். எந்நேரமும் சண்டை தான் போடுவா, இன்னைக்கு இப்படி ஒரு வயசு பிள்ளையை கூட நினைக்காமல் எங்கே போனாளோ தெரியவில்லை என்று. அவளின் தொலைபேசியை எடுத்து பார்க்க, கால் ஹிஸ்டரி எல்லாம் அழிக்க பட்டு இருந்தது.
“உங்களுக்கு யார் மேலையாவது சந்தேகமா?” என்று கலையின் கணவனை கேட்க,
“இல்லை சார். கோபப்பட்டு தான் எங்கேயாவது போய் இருப்பா சார். ஏதாவது வாங்கி தர சொல்லி சண்டை போட்டு கிட்டே இருப்பா!” என்றான் அவன் அப்பாவியாக. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மூர்த்தி ரவியை அழைத்தார். அவர் சொன்ன விஷயங்களை ரவி சொல்ல, கேட்ட போலீஸ் வேகமாக அங்கிருந்து கிளம்பினார்கள்.
அதன் பின்னர் நடந்தது எல்லாம் அதிவேகம் தான். சென்னையை நோக்கி சென்று கொண்டு இருந்த காரில் இருந்த குறிஞ்சியை எந்த சேதாரமும் இன்றி மீட்டனர்.
குறிஞ்சியின் கடத்தலுக்கு பின் இருந்த குமாரின் பாஸ் வேறு யாருமில்லை அவள் கல்லூரி காலத்தில் ஒருவனை தோல் உரித்து காட்டினாளே அவன் தான். சத்தமில்லாமல் அவன் வரையில் அவனுக்கு தெரிந்த டெக்னாலஜி வைத்து பெண்கள் விஷயத்தில் கெட்ட வேலை செய்த அவன், குறைந்த தண்டைனையை தான் பெற்றான். அதற்கு பின் அவமானம் தாங்காமல் ஊரை விட்டு சென்று ஒரு கும்பலுடன் இணைந்து கொண்டான். திருநெல்வேலியில் அவனை போலவே இருந்த குமார், அவன் நண்பன், குறிஞ்சி குமாரின் சமூகம் என்று தெரிய, அவளை திருமணம் செய்து கொள்வது போல் செய்து கொண்டு அவளை அனுபவித்து விற்று விடுவது தான் அவர்கள் பிளான். திருமணம் நெருங்கி வர, அவர்கள் கும்பலுக்குள் பெரிய பிரச்சனை. அதனால் திருமணத்தை நிறுத்தி விடு என்று சொல்லி விட்டான் குமாரிடம். காலம் கனிந்து வரும் போது அவளை பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டான். மூர்த்தியின் மேல் இருந்த கோபத்தை மட்டும் அவரை இடித்து அடிபட வைத்து குறைத்து கொண்டான் குமார்.
குறிஞ்சியை அவர்களிடத்திற்கு எப்படி வரவழைப்பது என்று யோசித்த போது தான் ஒரு நாள் அவள் கலையுடன் பேசுவதை கண்டனர். கலைக்கு வேறு ஒருவனுடன் இருக்கும் தொடர்பை கண்டுபிடித்த அவர்கள், கலை அவனுடன் நெருக்கமாக இருந்ததை எல்லாம் அவர்களுக்கு தெரியாமல் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு, கலையை சந்தித்து மிரட்டினர்.
குறிஞ்சியை அவர்கள் இடத்திற்கு அழைத்து வருவது அவள் பொறுப்பு, இல்லையேல் உன்னுடைய கள்ள தொடர்பை உன் வீட்டினர், உறவினர் அனைவருக்கு காட்டுவோம் என்று அவளை மிரட்டினர். அழைத்து வந்தால் அவளுக்கு நிறைய பணம் கொடுப்பதாகவும் அவள் காதலுனுடன் வேறு ஊருக்கு சென்று வாழ வழி செய்து கொடுப்பதாகவும் சொல்ல, கலையரசி குறிஞ்சியை அழைத்து வர சம்மதம் சொல்லி விட்டாள்.
இது ஒரு பக்கம் நடக்க, திருமணத்தை நிறுத்திய குமார் மீது மிகுந்த அதிருப்தியாக இருந்தார் அவன் தந்தை. அவனுடன் பேசுவதே இல்லை அவர். மகனால் அவருக்கு எவ்வளவு தலைகுனிவு என்று வேதனைப்பட்டார்.
ஒரு வாரம் முன் அவரை தேடி வந்த ஒரு வயதான பெண்மணி, என் மகன் இறந்து போயிட்டான். நானும் மருமகளும் மட்டும் தான் இருக்கோம். உங்க பையனுக்கும் மருமகளுக்கும் பழக்கம். சரி கல்யாணம் பண்ணிக்கங்கனு சொன்னா, அவனுக்கு இஷ்டம் இல்லைனு சொல்றா! அப்புறம் ஏன் பழகுறாங்க தெரியலை. நான் சொன்னேன் சொல்லாதீங்க சார். நீங்களா கண்டுபிடிச்ச மாதிரி சொல்லி, கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க சார். இப்போவே அக்கம் பக்கத்தில் எங்களை ஒதுக்க ஆரம்பிச்சுட்டாங்க என்று சொல்லி சென்றார்.
அப்போது இருந்து மகனை கண்காணிக்க ஆரம்பித்தவருக்கு அவனின் நடவடிக்கை பல புதிராக இருந்தது. பலரை சந்தித்தான் அவன். அதனால் என்னவோ தப்பு இருக்கு இவன்கிட்ட என்று தோன்ற அவனை தொடர ஒரு ஆளை வைத்தார். நேரடியாக அவனிடம் பேச அவருக்கு யோசனையாக இருந்தது. அவன் இரண்டு நாட்களுக்கு முன் திருச்செந்தூரில் ஒரு பெண்ணை சந்தித்தான் என்று அந்த ஆள் வந்து சொல்ல, அவருக்கு ஒரே குழப்பம். குமார் பார்த்தது கலையை. ஆனால் ஏரியா குறிஞ்சியின் வீடு இருக்கும் இடம் என்பதால் குழம்பி போனார் அவர். குறிஞ்சியிடம் ஏதும் பிரச்சனை செய்கிறானோ என்று பயமாக இருந்தது அவருக்கு.
எப்படி கேட்பது? கேட்போமா வேண்டாமா என்று குழம்பி பின் மூர்த்திக்கு அழைத்து, அவர் உடல் நலம் விசாரிப்பது போல் பேசி, குறிஞ்சியை கவனமாக பார்த்துக் கொள்ள சொல்லலாம் என்று நினைத்தார். அவர் அழைக்கிறார் என்றதும் யோசனையாக இருந்தாலும் அவர் நியாயஸ்தர் என்று அவர் அழைப்பை ஏற்று பேசினார் மூர்த்தி.
நலம் விசாரித்து விட்டு, “உங்க பையன் மருமகள் எல்லாரும் சௌக்கியமா?” என்றார் மூர்த்தியிடம்.
மிகுந்த கலக்கத்தில் இருந்த மூர்த்தி, தன் மருமகள் மறுபடி என்ன பிரச்சனையில் மாட்டி இருக்கிறாளோ என்று புலம்ப, தயங்காமல் குமார் இரண்டு நாள் முன்பு உங்கள் பெண்ணை சந்தித்து இருக்கிறான் என்று சொல்லி விட்டார் அவர். சொல்லும் போதே உள்ளே பதறியது அவருக்கு. மகன் அந்த பெண்ணை எதுவும் செய்து விட்டானோ, தாமதம் செய்து விட்டோமோ என்று பயந்தார்.
குமாரின் தந்தை கொடுத்த தகவலின் படி அவனின் தொலைபேசி எண்ணை வைத்து போனை ட்ராக் செய்து அவன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, குறிஞ்சியை மீட்டனர். எவ்வளவ்வோ யோசித்து செய்தவன், தந்தையால் மாட்டுவோம் என்று துளி கூட நினைக்கவில்லை. அந்த போன் நம்பர் அவனின் கள்ள வேலைக்கு கிடையாது. வீட்டினருக்கு மட்டுமே தெரிந்த நம்பர். அதன் மூலம் அவனை கண்டுபிடிக்க ஒரே காரணம் அவன் தந்தை, அந்த நல்லவர் தான்.
விசாரணைக்கு முன்பு வரையும் கூட அவன் இவ்வளவு மோசமானவனாக இருப்பான் என்று யாரும் நினைக்கவில்லை. பழைய விஷயத்தை நினைவு வைத்து கொண்டு ஏதாவது பேசி இருக்க கூடும் என்று தான் நினைத்தார்கள். விசாரிக்கும்படி விசாரித்தும், குறிஞ்சியை அவன் தான் சென்னைக்கு அனுப்பி வைத்து இருக்கிறான் அதுவும் கலையின் கதை எல்லாம் தெரிய வர ஒரே அதிர்ச்சி.
வெளிநாட்டில் இருந்து அன்று இரவு சென்னை வந்து இறங்கும் அந்த குட்டி தலையையும் கைது செய்ய அனைத்தும் தயார்.
அனைத்து பார்மாலிட்டிஸும் முடிந்து அனைவருக்கும் நன்றி சொல்லி நடுராத்திரி வீடு வந்தார்கள் ரவி, குறிஞ்சி மற்றும் அறிவழகன். வரும் வழி எல்லாம் மகளை திட்டி தீர்த்து விட்டார் அறிவு.
“உனக்கு செல்லம் கொடுத்தது எவ்வளவு தப்புனு இப்போ புரியுது! பொம்பிளை பிள்ளை தைரியமா இருக்கட்டும்னு நினைச்சு தான் சுதந்திரம் கொடுத்து வளர்த்தேன். ஆனா உனக்கு அதை எப்படி பயன்படுத்தனும்னே தெரியலை! நம்மளோட பத்திரத்தையும் பார்க்கணும். எங்க இருந்து வேணா பிரச்சனை வரும்னு யோசிக்கணும்! பாரு உன்னோட கவனமின்மை இன்னைக்கு எங்கே கொண்டு வந்து விட்ருக்கு பாரு!”
எதுவுமே மறுத்து சொல்லவில்லை குறிஞ்சி. கலையை பற்றிய விஷயம் கேள்விப்பட்டு ஆடி போயிருந்தாள். மனிதர்கள் இவ்வளவு மோசமா? தங்கள் சுயநலத்திற்கு அடுத்தவர் வாழ்வை பலி கொடுக்க பார்க்கிறார்களே!
ரவியும் எதுவும் பேசவில்லை. மிகவும் இறுக்கமாக அமர்ந்து இருந்தான். காரில் இருந்து கீழே இறங்கியவுடன், அறிவழகன்,
“மன்னிச்சுடுங்க மாப்பிள்ளை. என் பெண்ணால் எப்போது உங்களுக்கு மன உளைச்சல் தான்” என்று வருந்தினார். அதற்கு பதில் பேசவில்லை ரவி. ஆனால் அவரிடம்,
“உங்க பொண்ணை அழைச்சிட்டு போங்க மாமா. நாளைக்கு பேசலாம். ரொம்ப நேரம் ஆச்சு. நீங்க படுங்க” என்று சொல்லி விட்டு அவன் வீட்டிற்கு விரைந்தான்.
“அத்தான்….” என்று குறிஞ்சி அழுகையுடன் அழைக்க, காதில் வாங்காதவன் போல் சென்றான் ரவி.
“நீ பண்ண வேலைக்கு உன்னை கொஞ்சுவாரா மாப்பிள்ளை? யாருக்கிட்டயாவது சொல்றியா எதையும்?” திட்டிக் கொண்டே மகளை வீட்டினுள் அழைத்து சென்றார் அறிவழகன்.