காயமின்றி வாழும் காதல் – 3
பழசை நினைத்து குறிஞ்சியை திட்டி கொண்டு நின்றிருந்த ரவியை நிகழ் காலத்திற்கு அழைத்து வந்தது தொலை பேசி அழைப்பு. கௌஷிகா தான் அழைத்துக்கொண்டு இருந்தாள். இவன் அழைப்பை ஏற்க,
“நாங்க ரெடி ஆய்ட்டோம் ரவி.” என்றாள்.
“ஓக்கே, லாபில வெய்ட் பண்ணுங்க, நாங்க வரோம்.”
தங்கள் பெற்றோருடன் அங்கு அமைந்து இருந்த பெரிய வரவேற்பு லாபிக்கு சென்றனர். போடப்பட்டு இருந்த இருக்கைகளில், ஓரமாக தனியாக இருப்பது போல் சென்று அமர்ந்தனர். ராதிகா அவர் இயல்பு போல் கால் மேல் கால் போட்டு அமர, மேகலாவிற்கு சட்டென்று அவரை பிடிக்காமல் போய் விட்டது.
நாம என்ன வெளிநாட்டவரா? மூர்த்தியின் வயதிற்கு கூட மரியாதை தராமல் இது என்ன இப்படி நடந்து கொள்கிறார்கள்? என்று மனதிற்குள் கோபப்பட்டார். மனைவியின் எண்ணம் எப்படி போகும் என்று புரிந்த மூர்த்தி அவர் பக்கம் திரும்பி அமைதியாக இருக்கும்படி ஜாடை காட்டினார்.
வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து மரியாதையான தோற்றத்தில் தான் இருந்தார் மூர்த்தி. அவர் கல்லூரி சென்று படித்தர். ஆனாலும் பேண்ட் சட்டை போட்டு பழக்கம் இல்லாதவர். பெரிய அளவில் தொழில் செய்தாலும் பந்தா காட்டாதவர். அவரின் பெருமை தெரியாமல் அவரை ஏதோ ஒரு படிக்காத கிராமத்தான் என்பது போல் குறைவாகவே நினைத்தனர் கௌஷிகாவின் பெற்றோர்.
வடநாட்டு முறையில் பார்த்தவுடன் சட்டென்று குனிந்து காலை தொட்டு கும்பிட்ட கௌஷிகா, மூர்த்தி மற்றும் மேகலாவின் சஞ்சலத்தை கொஞ்சம் போக்கி இருந்தாள். அதனால் அவள் பெற்றோர் தங்களை குறைத்து மதிப்பீடு செய்கிறார்கள் என்று தெரிந்தும் அதை உதாசீனம் செய்தார் மூர்த்தி. மேலும் மகனிடம்,
“மருமகள் மாதிரி கத்துக்க பா” என்று சிரித்தார். அவர் கூடவே சிரித்தாலும் பழக்கம் இல்லாததால் அவன் அவளின் பெற்றோரிடம் அப்படி செய்யவில்லை.
சகஜமாக பேச வரவில்லை என்றாலும் மேகலா கௌஷிகாவிடம் பேச முயற்சித்தார். பூவை கொடுத்து தலையில் வைத்து கொள்ள சொன்னார். கௌஷிகாவும் பேசினாள். ராதிகாவிடமும் சாதாரணமாக இரண்டு வார்த்தை பேசினார் மேகலா. ஆனால் பதில் சொன்னதோடு அவ்வளவு தான் அமைதியாகி விட்டார் ராதிகா. பேச்சை வளர்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை.
ஸ்ரீராம், மூர்த்தியிடம், “ரவி சொன்னதால் தான் நாங்க வந்தோம். இல்லைனா நாங்க அடிக்கடி ட்ராவல் பண்றதில்லை” என்றார். அப்போ உங்களுக்கு இஷ்டம் இல்லைனு சொல்ல வரீங்களா? என்று கேட்க துடித்த மூர்த்தி கஷ்டப்பட்டு தன்னை அடக்கி கொண்டார்.
நிச்சயதார்த்தம், கல்யாணம் என்று பேச்சு வர, கௌஷிகா சொன்னதையே சொன்னார்கள் ராதிகாவும், ஸ்ரீராமும். மகனை திரும்பி முறைத்த மூர்த்தி, இன்று எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று நினைத்து கொண்டு,
“நாங்க தம்பி கிட்ட சொல்றோம். அப்புறம் எப்படினு முடிவு பண்ணலாம்” என்று சொல்லி விட்டு அமைதியாகி விட்டார். அவருக்கு பேசவே பிடிக்கவில்லை. ஸ்ரீராம் பேசும் விதமும் அவருக்கு பிடிக்கவில்லை.
அதற்கு பின் ஸ்ரீராமும் ராதிகாவும் ரவியிடமே பேசினார்கள். அவனின் எதிர்காலம் குறித்த கேள்வியே அதிகம் இருந்தது அதில். வேண்டுமென்றே ஆங்கிலத்தில் பேசினார்கள். கௌஷிகாவும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள, மேகலாவும் மூர்த்தியும் தனித்து அமர்ந்து இருந்தனர். அப்பா அம்மாவை நினைத்து சங்கடமாக இருந்தது ரவிக்கு. அவர்கள் ஆங்கிலத்தில் பேசினாலும் இவன் தமிழிலேயே பதில் சொன்னான்.
இங்கு இருந்தா சரியா வராது என்று உணர்ந்த ரவி, வெளியில் செல்லலாம் என்று கொஞ்சம் அருகில் இருந்த கோயிலுக்கு அழைத்துச்சென்றான். கோயிலில் அமைதியாக அவரவர் கடவுளை வணங்கினார்கள். பின் அங்கிருந்து மதிய உணவு உண்ண சென்றார்கள்.
“நீங்க சவுத் இந்தியன் புட், நாங்க நார்த் இந்தியன் புட் ஸோ நாங்க தனி டேபிளில் உட்கார்ந்துகிறோம்” என்று சொல்லி விட்டு தன் குடும்பத்துடன் தனியே சென்று அமர்ந்து விட்டார் ஸ்ரீராம்.
தனியே சென்று சாப்பிட அமர்ந்தவர், அவரே பில்லையும் கட்டி இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் இவர்கள் சாப்பிட்டு எழும் முன் அவர்கள் முடிக்க, வெளியில் சென்று நின்று கொண்டார். பில்லிற்கு ரவியை கை காட்டி விட்டு. தந்தையின் முன் அசிங்கமாக இருந்தது ரவிக்கு. பில் கட்டுவதில் ஒன்றுமில்லை, ஆனால் அவரை கட்டி விட சொல்லி விடுவார்கள் போல் எழுந்து வெளியே சென்று நிற்பது கேவலமாக இருந்தது. இதென்ன அல்பமான நடத்தை! பல்லை கடித்து தன் கோபத்தை அடக்கினான் ரவி.
அதற்கு பின் ஹோட்டலுக்கு திரும்ப, அறைக்குள் செல்லும் முன், கௌஷிகா,
“நாங்க கொஞ்சம் ஷாப்பிங் பண்ணிட்டு ஏர்போர்ட் போறோம்” என்று மறுபடி மூர்த்தி, மேகலா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.
எதுவும் பேசாமல் சரி என்பது போல் தலையசைத்து விடை கொடுத்தனர் இந்த மூவரும் அந்த மூவருக்கு.
அறைக்குள் வந்த மேகலா வெடித்து விட்டார். “என்னடா குடும்பம் இது? நல்லபடியா பேசி பொண்ணை கட்டி கொடுப்போங்கிற எண்ணமே அவங்களுக்கு இருக்கிற மாதிரி தெரியலை. இது ஒன்னும் சரியா வராது தம்பி” என்றார் நேராக மகனிடம்.
“ஆமா பா எனக்கும் ஒன்னும் சரியா படலை. அவங்க எதுக்கு வந்தாங்க? நம்மளை பார்த்து பேச தானே? ஆனா பேசவே தயாரில்லையே அவங்க. அவங்க சொல்ற முடிவுக்கு நாம கட்டுப்படணுமா? நமக்கு ஊரில் எவ்ளோ சொந்த பந்தம் இருக்கு? என் மகனுக்கு என் ஊரில், என் சொந்தத்தை கூட்டி கல்யாணம் பண்ண முடியலைனா இவ்ளோ நாள் நான் அங்கே வாழ்ந்ததுக்கு என்ன அர்த்தம்? இவ்ளோ சம்பாரிச்சு என்ன பிரயோஜனம்?” உணர்ச்சிவசப்பட்டார் மூர்த்தி.
“அப்பா…. அப்பா…. டென்ஷன் ஆகாதீங்க பா. நான் பேசுறேன் கௌஷிகா கிட்ட. அவ அவங்க அப்பா அம்மா மாதிரி இல்லை பா.”
“ம்ம்கூம்…. நீ தான் சொல்லிக்கணும். அவங்க அப்பா அம்மா சொன்னதுக்கு பேசாம தான் இருந்துச்சு. காலில் மட்டும் பொசுக்கு பொசுக்குனு விழுது! வேற ஒன்னும் சரி இருக்க மாதிரி தெரியலை.” வேகமாக சொன்னார் மேகலா.
“ஏன் மா? நீ வேற…. கொஞ்சம் சும்மா இரு மா….”
மனைவியும் மகனும் பேசுவதை கண்டுகொள்ளாமல், “சொல்லு பா…. என் ஆசை நியாயமான ஆசை தானே? அவங்க பொழைக்க வேற ஊர் போய் வேற மாதிரி மாறி இருக்காங்க. அந்த பழக்கத்தை செய்யணும் சொல்றாங்க! நாம பொறந்து வளர்ந்த ஊர்ல தான் நம்ம வேர் இருக்கு…. அப்படி இருக்கும் போது எது உசத்தி? சொல்லு, நீயே சொல்லு!” படப்படத்தார் மூர்த்தி.
“நிச்சயமா உங்க ஆசை நியாயமான ஆசை தான் பா. என் கல்யாணம் உங்க ஆசைப்படி தான் நடக்கும் பா. நீங்க கவலைப்படாதீங்க” என்றான் ரவி.
“நல்லது பா” என்றவரின் மனம் அப்போது தான் சாந்தமடைந்தது. பொண்ணு மட்டும் அழகா இருக்கு. அப்பா அம்மா குணம் சரியில்லை. பொண்ணு குணமும் சரியா தெரியலை. மகன் முழுக்க அவங்க பக்கம் போய் விடுவானோ என்று பயந்து இருந்தார் மூர்த்தி.
@@@@@
ஷாப்பிங் மால் போவதாக சொல்லி விட்டு அறைக்கு வந்த ராதிகாவும் ஸ்ரீராமும் மகளிடம் பல விஷயங்களை ஓதினார்கள்.
“அந்த பேமிலி உனக்கு ஒத்து வராது கௌஷி! பையன் மட்டும் ஓக்கே. ஆனா அவனையும் முழுசா நம்ம பக்கம் இழுத்திட்டு போக முடியாது” என்றார் ராதிகா.
“சரியான ஊர்க்காரங்க கௌஷி அவங்க. எப்படியும் அவங்க பழக்கம் வழக்கம்னு நிறைய சொல்வாங்க. நீ அந்த ஊருக்கு போய் இருக்கிற மாதிரி தான் இருக்கும்! எனக்கு பிடிக்கலை டா அவங்களை. எங்களை மாதிரி, ஓர்க்கிங் பேரண்ட்ஸ் இருக்க பையன் தான் உனக்கு செட் ஆவான். அவங்க தான் டீசென்ட்டா உங்களை உங்க இஷ்டத்துக்கு விட்டுட்டு இருப்பாங்க. இவங்கெல்லாம் எல்லா விஷயத்திலும் தலையிடுவாங்க!” என்றார் ஸ்ரீராம்.
“நான் சொல்லிட்டேன் பா ரவி கிட்ட, என்னால யாருக்காவும் அட்ஜெஸ்ட் பண்ண முடியாதுனு. பார்ப்போம் அவன் என்ன சொல்றான்னு!”
“ம்ம்….இந்த கல்யாண விஷயம் வைச்சே அந்த பையன் யார் பக்கம்னு தெரிஞ்சுடும். நீ உறுதியா இரு. அவன் என்ன பண்றான் பார்க்கலாம்” ஏத்தி விட்டார் ராதிகா.
***********
அன்று இரவு ஊருக்கு கிளம்பினார்கள் ரவியின் பெற்றோர். அவன் ஜெர்மனிக்கு சென்ற பின் இப்போது தான் இந்தியாவிற்கு வருகிறான். ஊருக்கு சென்று இரண்டரை வருடங்கள் ஆகி விட்டது. நாளை அலுவலகம் செல்ல வேண்டி இருப்பதால் அந்த வாரக்கடைசியில் அவன் ஊருக்கு வருவதாக சொல்லி விட்டான்.
எக்மோரில் ட்ரெயின் ஏத்தி விட வந்திருந்தான் ரவி. அவர்கள் ட்ரெயினுக்கு காத்திருக்கும் நேரம் மூர்த்திக்கு போன் வந்தது.
அழைப்பது யாரென்று பெயரை பார்த்து தெரிந்து கொண்டவர், அழைப்பை ஏற்று ஹலோ சொல்லாமல் “வள்ளி….” என்று பாசமாக அழைத்தார் மூர்த்தி.
“மாமா, எங்க இருக்கீங்க? பேசலாமா? ப்ரீயா?” என்றாள் குறிஞ்சி.
“ட்ரெயினுக்கு தான் காத்திருக்கோம். நீ எப்ப வேணா பேசலாம் மா….” சிரித்தார் மூர்த்தி.
“அப்படி இல்லை மாமா, நீங்க எதுவும் நடந்து போய்க்கிட்டு இருந்தா பேச வேண்டாம், உங்க கவனம் சிதற கூடாது. அதுக்கு தான்” என்றாள்.
அவள் பேசுவது அருகில் அமர்ந்து இருந்த ரவிக்கு கேட்டது. அவரின் பத்திரம் பற்றி யோசிக்கிறாள் என்று புரிந்து, இதெல்லாம் தெரியுதே இவளுக்கு என்று நக்கலாக நினைத்து கொண்டான்.
“சரி, இன்னைக்கு ரெண்டு பேர் பணம் கொண்டு வந்து கொடுத்தாங்க. வரவு வைச்சு இருக்கேன். லோட் வந்துச்சு. இறக்கி வைக்கிற வரைக்கும் நானும் கோடவுன்ல தான் நின்னேன். எது எது எத்தனை மூட்டைனு கணக்கு சரிப் பார்த்தாச்சு” என்று அவரிடம் தொழில் பற்றி பேசினாள்.
“நீ சொன்னா சரி தான்” என்றவர், “இந்தா உன் அத்தை கையை கையை நீட்டுறா! அவகிட்ட பேசு….” என்று மேகலாவிடம் போனை கொடுத்தார்.
“என்ன அயித்தே?” மேகலாவை வேண்டுமென்றே அப்படி தான் இழுத்து அழைப்பாள் குறிஞ்சி.
“நல்லா இருக்கியா வள்ளி? அம்மா நல்லா இருக்கா?”
“ஒரு நாள் தான் ஆச்சு நீங்க ஊருக்கு போய். நல்லா இருக்கோம் நாங்க” என்று சிரித்தாள் குறிஞ்சி.
“வீட்டுக்கு போனியா? சிகப்பியை பார்த்தியா?”
“உங்க வீட்டில தான் இருக்கேன் இப்போ. வாசுகியோடு இங்க தான் படுக்க போறேன் நானும். சிகப்பி நல்லா இருக்கு. நீங்க பத்திரமா கிளம்பி வாங்க. அதான் நாங்க இருக்கோம் எதை பத்தியும் கவலைப்படாதீங்க சொன்னேன்ல” என்று அவரை அதட்டினாள் குறிஞ்சி. சிகப்பி அவர் வளர்க்கும் பசு. வாசுகி அவர்கள் வீட்டில் வேலை செய்பவர்.
“கவலைப்படலை ஆத்தா! சும்மா கேட்டேன் அவ்ளோ தான். கோவிக்காதே!” என்றவர் போனை வைத்தார்.
“அடேங்கப்பா என்ன அதிகாரம் பண்றா? இவ்ளோ தூரம் அவளை பேச விட்டு வேடிக்கை பார்க்கிறீங்களா ரெண்டு பேரும்?” கடிந்தான் ரவி.
“டேய், அவங்க அப்பா அம்மாவுக்கு விட எங்களுக்கு தான் செல்லம் நிறைய உதவி செய்றா. அவங்க நிலத்தை நிறைய குத்தகைக்கு விட்டுட்டாங்க. தோப்பும் கொஞ்சம் நிலமும் தான் அறிவு பார்க்கிறார். அதனால் நான் கஷ்டப்படுறேன் சொல்லி, எனக்கு கணக்கு பார்க்க, பேங்க் போக எல்லாம் என் செல்ல பிள்ளை தான் எனக்கு உதவி தெரியுமா?” பெருமையாக சொன்னார் மூர்த்தி.
“இத்தனை கடை எதுக்கு இனிமே? இப்போ எல்லாம் நம்பிக்கை ஆனவங்க கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். உங்களுக்கும் வயசாகுது. கடையை குறைங்கப்பா” என்றான் ரவி.
இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சு கூட நீ வந்து பார்க்க மாட்டியா என்ற கேள்வியை அப்படியே முழுங்கினார் மூர்த்தி. ரவி கொஞ்சம் வருடம் கழித்து ஊரோடு வந்து விட வேண்டும் என்பது அவர் ஆசை. ஆனால் அதை அவனிடம் திணிக்கவும் விருப்பம் இல்லை அவருக்கு. அதுவும் அவன் நிறைய கடை வேண்டாம் என்று சொல்லும் போது அந்த விஷயத்தை பற்றி பேச பிடிக்கவில்லை அவருக்கு.
“நல்லா சொல்லு டா, நானும் சொல்லிட்டேன். இப்போல்லாம் அடிக்கடி களைப்பா இருக்கு சொல்றார் ” என்றார் மேகலா. அவருக்கு மூர்த்தியின் உடல்நலம் பற்றிய கவலை. இன்னும் சிறு வயது போல் பைக் ஒட்டிக்கொண்டு அலைகிறார். மற்ற ஊரில் உள்ள கடைகளை பார்வையிட அவ்வப்போது செல்கிறார். அலைச்சல் அவர் உடல் நலத்தை பாதித்து விடுமோ என்று.
“அதெல்லாம் என்னை நான் பார்த்துக்குவேன். நீங்க ரொம்ப கவலைப்பட வேண்டாம்” என்று பேச்சை முடித்தார் மூர்த்தி.
@@@@@
பெற்றோர்களை வழியனுப்பி விட்டு அவன் வீட்டுக்கு செல்லும் வழி எல்லாம் குறிஞ்சியோடான அவன் நினைவுகளை அசை போட்டான் ரவி. அந்த வயதில் பெரிய பிரச்சனையாக தெரிந்த அவள் குணம் இப்போது அப்படி தோன்றவில்லை. கொஞ்சம் ஆர்வக்கோளாறு என்று மட்டும் தோன்றியது. அதே போல் அப்போது எல்லாம் அவளை நினைத்தாலே வரும் எரிச்சல் இப்போது இல்லை.
பன்னிரெண்டாவது முடித்து திருநெல்வேலியில் இருக்கும் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்தான் ரவி. நன்றாக படிப்பான் அதனால் மெரிட்டில் சீட் கிடைத்து விட்டது அவனுக்கு. அதிக தூரம் இல்லாவிட்டாலும், விடுதியில் சேர்ந்து கொண்ட ரவி இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தான் ஊருக்கு வருவான். வரும் போதே அழுக்கு மூட்டையோடு தான் வருவான். அவனுக்கு துவைக்க பிடிக்காததால் வீட்டிற்கு கொண்டு வந்து விடுவான். அதை எப்போது கிண்டல் செய்வாள் குறிஞ்சி.
முதல் வருடம் வரை நண்பர்கள் யாரையும் வீட்டிற்கு அழைத்து வந்ததில்லை ரவி. இரண்டாம் வருடம் ஆரம்பித்து முதல் முறை வீட்டிற்கு வரும் போது மூன்று நண்பர்களை அழைத்து வருவதாக மேகலாவிடம் தகவல் சொல்லி இருந்தான். அது குறிஞ்சிக்கு தெரியாது.
அவன் வரும் நேரத்தை கணக்கிட்டு மேகலாவின் வீட்டிற்கு ஓடியவள்,
“கழுதை பொதி மூட்டையோடு வந்திருக்குமே இந்நேரம்? எங்க அயித்தே உங்க எருமை மகன்?” என்று சத்தமாக கேட்டபடியே உள்ளே வந்தாள்.
“என்ன மச்சான்? நீ கழுதை யா? இல்லை எருமை யா? இப்படி தான் உனக்கு வரவேற்பு இருக்கும்னு சொல்லவே இல்லை….” என அவன் நண்பர்கள் கிடைத்தது காரணம் என்று அவனை கிண்டல் செய்தனர்.
அவன் கல்லூரி நண்பர்கள் முன் மிகுந்த அசிங்கமாக உணர்ந்தான் ரவி. இந்த பொடுசுக்கு இருக்க திமிரை பாரு, என்று ஆத்திரத்தில் எதை பற்றியும் யோசிக்காமல் வேகமாக அவளை நெருங்கி அவள் முதுகில் ஓங்கி ஓங்கி இரண்டு அடி வைத்து விட்டான் ரவி.
அவன் அடிப்பான் என்று எதிர்பார்க்காத குறிஞ்சி, பயத்தோடு அவன் அடித்த வலியும் சேர்ந்து கொள்ள, கத்தி அழுது விட்டாள். இதுவரை அவள் அடி வாங்கியதே இல்லை. ஒற்றை பெண், அதுவும் காலம் தாழ்த்தி பிறந்த பெண் என்று அவளை தாங்குவார்கள் அவள் பெற்றோர்.
சத்தம் கேட்டு ஓடி வந்த மேகலா அழும் குறிஞ்சியை கண்டு அதிர்ந்து, என்ன நடந்து இருக்கும் என்று யூகித்து மகனுக்கு ஒரு அடி போட்டார்.
“பிள்ளை மேல் ஏண்டா கை வைக்கிறே? என்ன கெட்ட பழக்கம் இது? அப்பாக்கு மட்டும் தெரிஞ்சுது அவ்ளோ தான்….” என்று குறிஞ்சியை எழுப்பி அணைத்து கொண்டார்.
அடித்த உடனேயே அவன் கோபம் தணிந்து இருக்க, ரவியே தன் தவறை உணர்ந்து இருந்தான். அவள் எவ்வளவு செல்லம் என்று அவனுக்கும் தெரியுமே! அவளுக்கு வாய் நீளம் என்று தான் தெரியுமே, நான் ஏன் இவ்ளோ கோபப்பட்டேன்? என்று நொந்து கொண்டான். மேகலாவை கட்டி கொண்டு குறிஞ்சி விட்ட கண்ணீரும் அவனின் குற்ற உணர்ச்சியை அதிகரித்தது.
Good
Thank you so much