4 . காயமின்றி வாழும் காதல்

4.6
(5)

காயமின்றி வாழும் காதல் – 4

நடந்த களேபரம் ரவியின் நண்பர்களுக்கும் ஒரு மாதிரி ஆகிவிட, அவனிடம் மன்னிப்பு கேட்டனர்.

“டேய்! நாங்க ஏதோ விளையாட்டா கிண்டல் பண்ணா, நீ எங்களால் அந்த பொண்ணை அடிச்சிட்டியே…. ஸாரி டா” என்றனர்.

“உங்களால் எல்லாம் இல்லை டா…. நீங்க விடுங்க” என்றான் ரவி.

அன்று இரவு உணவிற்கு மூர்த்தி வரவும், கொஞ்சம் பயமாக தான் இருந்தது ரவிக்கு. ஆனால் மேகலா எதுவும் சொல்லாததால் அந்த விஷயம் அப்படியே அமுங்கி போய் விட்டது. குறிஞ்சியை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார் மேகலா. அடுத்த நாள் குறிஞ்சி இவன் வீட்டு பக்கமே வரவில்லை! எப்போதும் அவன் வீட்டை சுற்றி வரும் அவள் இல்லாமல் அவனுக்கு அவன் வீடே வித்தியாசமாக இருந்தது. அவளை காணோம் என்று ஷ்யாமளா புலம்ப, அப்போது தான் விஷயத்தை அவளிடம் சொன்னார் மேகலா. நேற்று அவள் வெளியில் சென்றிருந்ததால் அவளுக்கு நடந்த விஷயம் எதுவும் தெரியாது. உடனே தம்பியை நன்றாக திட்டி விட்டு குறிஞ்சியை தேடி அவள் வீட்டிற்கு கிளம்பினாள். போகும் மகளை நிறுத்திய மேகலா,

“வள்ளி, கோகிலா கிட்ட கூட விஷயத்தை சொல்லலைடி! நீ ஏதாவது உளறிடாதே!” என்றார். அதில் ஷ்யாமளாவிற்கு மிகுந்த கோபம் வந்தது.

“அவன் பண்ணின வேலையை நீயும் சேர்ந்து மறைக்கிறியா?” என்றாள்.

மகள் கேட்பது நியாயமான கேள்வி என்பதால் அமைதி காத்தார் மேகலா. பின்,

“தப்பு தான்! ஆனா அப்பாவுக்கு தெரிஞ்சா அவனை என்ன செய்வார்னே தெரியாது. யோசிச்சு பாரு…. அதை விட கோகிலா அத்தையும் மாமாவும் எப்படி வருத்தப்படுவாங்க! நான் நல்லா கண்டிச்சு இருக்கேன்டி அவனை” என்றார்.

“இன்னொரு முறை அவன் குறிஞ்சியை ஏதாவது பண்ணினா நானே அவனை சும்மா விடமாட்டேன் மா!” என்று கோபமாக சொல்லி விட்டு போனாள் ஷ்யாமளா.

அக்காவும் அம்மாவும் பேசுவதை உள்ளிருந்து கேட்டு கொண்டு அமைதியாக இருந்தான் ரவி. நண்பர்களுடன் இன்று அவன் வெளியே செல்வதாக இருந்தது ஆனால் அவனுக்கு மனமே இல்லாததால் அவர்களை மட்டும் துணைக்கு ஆள் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தான். அவன் வீட்டிலேயே அமைதியாக படுத்து இருந்தான். அவன் மனமெல்லாம் குறிஞ்சியிடமே இருந்தது. அவன் எவ்வளவு தான் திட்டினாலும் ஒரு நிமிடம் தான் ஒதுங்கி போவாள் மறுநிமிடமே மாமா என்று அவனிடம் ஏதாவது சொல்ல வந்து விடுவாள். அவன் மேல் அவளுக்கு நிறைய பாசம் இருக்கிறது என்று தெரியும் அவனுக்கு. எங்கும் தென்படுகிறாளா என்று எழுந்து ஜன்னல் வழியே அவள் வீட்டை பார்வையிட்டான் ரவி. அவள் இல்லை என்றதும்,

“ம்ப்ச்…. தேவையில்லாத வேலை பார்த்து விட்டேனே…. ” வாய் விட்டு புலம்பினான்.

குறிஞ்சியின் வீட்டிற்கு சென்ற ஷ்யாமளாவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இவர்கள் வீட்டிற்கு வராததால் அவள் வருத்தமாக இருக்க கூடும் என்று நினைத்திருந்தாள். ஆனால் அவள் சகஜமாக இருந்தாள். ஷ்யாமளாவை கண்ட கோகிலா குறிஞ்சியிடம்,

“இங்க பாரு மதினியே உன்னை அழைச்சிட்டு போக வந்துட்டா! போ, அதெல்லாம் அத்தான் உன்னை கோவிக்க மாட்டான்” என்றார் கோகிலா.

சொல்லிட்டாளா? கோகிலாவிற்கு வருத்தம் இல்லையா? என்பது போல் பார்த்த ஷ்யாமளாவை தனியே அழைத்து சென்றாள் குறிஞ்சி.

“அத்தான் அடிச்சதை நான் யாருக்கிட்டயும் சொல்லலை. அவங்க ரொம்ப கோபப்பட்டதால அம்மா கிட்ட நான் பேசினது தப்பானு கேட்டேன். அத்தான் கோபப்பட்டாங்கனு மட்டும் தான் சொன்னேன். அம்மா, காலேஜ் படிக்கிற அத்தானை நான் இப்படி கிண்டலா பேசினது ரொம்ப தப்புனு சொன்னாங்க. அவங்க பிரண்ட்ஸ் முன்னாடி வேற சொல்லிட்டேன்னு திட்டுனாங்க. எனக்கு அவங்க பிரண்ட்ஸ் வந்தது தெரியாது மதனி” என்றாள் வருத்தமாக.

“நீ வேணும்னே செய்யலை, ஆனா அவன் தெரிஞ்சே தான் உன்னை அடிச்சான். அவனுக்குகாக நீ ஒன்னும் வருத்தப்பட வேண்டாம். விடு…. எப்போதும் போல் வீட்டுக்கு வா. இல்லைனா அப்பா கேட்பார்….” என்று சொல்லி அவளை கையோடு அழைத்து கொண்டு சென்றாள்.

குறிஞ்சியின் குரல் தன் வீட்டில் கேட்க, வேகமாக அறையை விட்டு வெளியே வந்தான் ரவி. கோகிலா சொன்னதில் அவள் தவறு புரிய, தப்பு செய்த எண்ணத்தில் அவனை பார்க்காமல் ஷ்யாமளாவின் பின்னேயே வேகமாக சென்று விட்டாள் குறிஞ்சி. அவன் முகத்தை பார்க்கவே இல்லை அவள். முதல் முறையாக குறிஞ்சி அவனிடம் இருந்து விலகி செல்வது ரவியை மிகவும் வருத்தப்பட வைத்தது. தப்பு செய்து விட்டு இப்போ என்னை வில்லன் ஆக்கிட்டா…. கண்டுக்காம போறதை பாரு என்று அவள் மேல் கோபம் கொண்டான் ரவி.

அதற்கு பின் எதற்கு வீண் பிரச்சனை என்று அவளை தவிர்க்க ஆரம்பித்தான். எப்போது கல்லூரியில் இருந்து வந்தாலும் அவளை கண்டுகொள்ளாமல் இருப்பான் ரவி. முதலில் ஒதுங்கி சென்றாலும் நாளைடைவில் ரொம்ப தான் பண்ணுது அத்தான் என்று நினைத்த குறிஞ்சி, அவனிடம் வலிய சென்று பேசினாள். அவன் பதிலே பேசாமல் அவளை முறைப்பான். அவள் செய்த தவறினால் தான் அவளுடன் பேசாமல் இருக்கிறான் என்று அவனை பேச வைக்க, அவன் கவனத்தை கவர சேட்டை மிக செய்ய ஆரம்பித்தாள். அவனின் கவனத்தை கவர முயல்கிறாள் என்று ரவிக்கு நன்றாக புரிய அவன் இன்னும் பிகு செய்தான். அவன் பேசமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க அவள் உன்னை பேச வைக்கிறேன் என்று பிடிவாதம் கொண்டாள்.

செமஸ்டர் லீவிற்கு ஊருக்கு வந்து இருந்தான் ரவி. எப்போதும் போல் இரண்டு நாட்கள் மட்டுமில்லாமல் இம்முறை நிறைய நாள் இருப்பானே என்று உற்சாகமானாள் குறிஞ்சி. எப்படியாவது அத்தானுடன் பேசி விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.

*********

குறிஞ்சியின் தந்தை, அவர்கள் தோப்பில் இருந்து ரவியின் வீட்டிற்கு கொஞ்சம் தேங்காய் கொடுத்து இருந்தார். பொழுது போகாமல், வீட்டில் இருந்த ரவி, சின்ன கடப்பாரை போல் முனையில் கூர்மையாக இருக்கும் இருக்கும் கருவியை வைத்து தேங்காய் மட்டையை உரித்து கொண்டு இருந்தான். அதிகாலையிலேயே கிளம்பி தூத்துக்குடி கடைக்கு சென்று விட்டார் மூர்த்தி.

ரவியைக் காண அவன் வீட்டிற்கு குதித்து கொண்டு வந்தாள் குறிஞ்சி. அவன் வீட்டின் பின்புறம் வேலை செய்வதை பார்த்து விட்டு,

“அத்தான், நான் ஒன்னு உரிச்சி பார்க்கிறேன். எங்க அப்பா தோப்பில் இருக்க ஆளுங்களை வைச்சு உரிச்சு முடிச்சுடுறார். என்னை உரிக்க விடவே மாட்டேங்கிறார்….” என்றாள் கொஞ்சலாக.

அவன் பதில் சொல்லாமல் வேலையை தொடரவும், அவன் அருகில் சென்று கொண்டு அவனை வேலை செய்ய விடாமல் தடுத்தாள். அவளின் மேல் இருந்த கோபத்தை,

“அக்கா….” என்று அந்த தெருவே அலறும்படி கத்தி காட்டினான் ரவி. நல்ல பெரிய வீடு அவர்களுடையது. வீட்டை சுற்றி நிறைய இடம் உண்டு. வீட்டிற்கு பின்னாலும் வாழை, மாங்காய் என மரங்கள் உண்டு. இரண்டு தென்னை மரங்கள் கூட உண்டு. வீட்டிற்குள் இருந்த மேகலா, ஷ்யாமளா இருவரும் அடித்து பிடித்து ஓடி வந்தனர்,

“என்ன டா? எதுக்கு இப்போ இப்படி கத்துறே?”

“இவளை இப்போ நகர சொல்லு. என்னை வேலை பார்க்க விடாம படுத்துறா! இவ கிறுக்குத்தனம் எல்லாம் அப்புறம் என் தலையில் தானே வந்து விடியும்!” என்றான் கடுமையான முகத்துடன்.

“நீ வா வள்ளி, அவன் தான் ரொம்ப பேசுறானே…. நீ ஏன் அவன்கிட்ட போறே?” என்றாள் ஷ்யாமளா கோபமாக. சின்ன பெண் அவள் மேல் போய் கோபத்தை வளர்த்து கொள்கிறானே என்று அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

“இல்லை மதினி, எனக்கு தேங்காய் உரிச்சு பார்க்க ஆசையா இருக்கு அதான் அத்தான் கிட்ட கேட்டு கிட்டு இருந்தேன்” என்றாள் அப்போதும் அந்த இடத்தை விட்டு நகராமல்.

“குடேன் டா…. ஒண்ணே ஒன்னு தானே?” அலுப்பாக சொன்னாள் ஷ்யாமளா.

“அவ வீட்டில் போய் உரிக்க சொல்லு. என்னால முடியாது.”

“அத்தான் ப்ளீஸ்….”

“ரொம்ப பண்றே டா!”

“முதல்ல இவளை என்கிட்ட பேச வேண்டாம் சொல்லு. இல்லை இந்த தேங்காயாலே இவ மண்டையை உடைச்சுடுவேன்….” கத்தினான் ரவி மீண்டும்.

அதுவரை அமைதியாக இருந்த மேகலா, ரவியிடம்,

“என்ன டா? போனா போகுதுனு பார்த்தா ரொம்ப பேசுறே! அவ கிட்ட பேச மாட்டியா என்ன? அதான் உன்னை கிண்டல் பண்ணினதுக்கு அடிச்சிட்டியே! அப்புறம் என்ன?” என்றார் கோபமாக. அவர் அப்படி சொன்னவுடன்,

“அதானே அயித்தே! நல்லா கேளுங்க….” என்றாள் வேகமாக குறிஞ்சி.

“நான் அடிச்சத்தால அவ பேசினது ஒன்னுமில்லாம போச்சு! தப்பெல்லாம் என்மேல மாதிரி நீங்களும் அக்காவும் என்னை திட்டி தீர்த்தீங்க. அதனால் இனிமே எனக்கு அவ சகவாசமே வேண்டாம்! ஆளை விடுங்க” என்றான் ஆத்திரமாக ரவி.

“நீ எப்படி திட்டி இருந்தாலும் பரவாயில்லை, ஆனா நீ கையை நீட்டினது தப்பு தான் ராஜா” மகனின் வருத்தம் புரிந்து சமாதானம் செய்ய முயற்சித்தார் மேகலா.

“நான் என்ன இவளை மாதிரி மக்கா? எங்க எப்படி நடந்துக்கணும், யாருக்கிட்ட எப்படி பேசணும்னு ஒரு எழவும் தெரியாத லூசு இவ! இவளால் எனக்கு எப்போது தொல்லை தான். இவளுக்கு சமமா என்னால எல்லாம் பேச முடியாது. இவளை மரியாதையா என்கிட்ட இருந்து ஒதுங்கி நடந்துக்க சொல்லுங்க” அம்மாவிடம் சீறினான் ரவி.

அதற்குள் அடுப்படியில் இருந்து தீய்ந்த நாற்றம் வர, அய்யோ குழம்பு என்று அம்மாவும் மகளும் ஓடினர். போகும் போது ஷ்யாமளா,

“வா வள்ளி நாம அவனை அப்புறம் பார்த்துக்குவோம்” என்று அவளையும் அழைத்தபடி சொல்லி கொண்டே போனாள்.

அவன் ஓவராக கொதித்து, அவளை மட்டமாக வேறு பேசவும் குறிஞ்சிக்கும் கோபம் வந்தது. அங்கிருந்து நகராமல் அவளை முறைத்தபடி நிற்கும் அவனை வேகமாக அவனை தள்ளி விட்டு அவன் மறுத்ததை செய்து காட்டி விடும் வேகத்துடன் ஒரு தேங்காயை எடுத்து உரிக்க ஆரம்பித்தாள் குறிஞ்சி.

அவள் தள்ளுவாள் என்று எதிர்பார்க்காத ரவி கீழே விழாமல் இருக்க இரண்டு மூன்று அடி வைத்து தான் சமாளிக்க வேண்டி இருந்தது. தன்னை நிலைப்படுத்தி கொண்டவன்,

“எவ்ளோ திமிருடி குள்ளி உனக்கு?” என்று ஆக்ரோஷமாக கத்திக்கொண்டு வந்து அவளை வேகமாக பிடித்து தள்ளினான். அவனுடன் மல்லுகிட்ட நினைத்த குறிஞ்சி அழுத்தமாக நிற்க நினைத்தாள் ஆனால் முடியவில்லை. அவன் தள்ளிய வேகத்திற்கு, அருகில் இருந்த கருவியையும் இழுத்து கொண்டே கீழே விழுந்தாள். சரியாக சொருகாமல் இருந்த தேங்காய் சற்று தள்ளி போய் விழ, கூர்மையான முனை குறிஞ்சியின் இடது கையில், மணிகட்டிற்கு மேலே இருந்த சதையில் சொருகியது.

சரியாக அந்நேரம் வீட்டிற்கு வந்த மூர்த்தி, வீட்டு வாசலில் ஏறும் போது கண்டது, நேரே தெரிந்த கொள்ளைபுறத்தில் குறிஞ்சியை தள்ளி விடும் ரவியை தான்.

“ரவி” என்று கத்தி கொண்டே அவர் ஓடி வரவும், ரத்தம் குபு குபுவென்று வெளியே வரவும் சரியாக இருந்தது. அவர் கத்துவதை கேட்ட தாயும் மகளும் மீண்டும் அரண்டு ஓடி வந்தனர்.

அனைவரும் ரத்தத்தை கண்டவுன் ஆளாளுக்கு வள்ளி, அய்யோ, ரத்தம் என அலற அப்போது தான் குறிஞ்சி வலியே உணர்ந்தாள்.

அம்மா என்று அவளும் அலற, ஏற்கனவே ரத்தத்தை கண்டு பதறி இருந்த ரவி, அனைவரும் வருவதை கண்டு, தப்பு நடந்து போச்சே என்று சிறுவன் போல் பயந்து உறைந்து நின்றான்.

“வள்ளி” என வேகமாக அவள் அருகில் வந்தவர், மகனை உக்கிரமாக முறைத்து “உன்னை அப்புறம் பார்க்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே வேட்டியை மடித்து கட்டி கொண்டு குறிஞ்சியை கையில் வேகமாக அள்ளினார். அவர் வந்து இறங்கிய கார் வீட்டின் வெளியிலேயே நிற்க, மருத்துவமனைக்கு பறந்தார். யாரையும் அழைக்கவில்லை, குறிஞ்சி மட்டுமே முக்கியம் என்று செயல்பட்டார் மூர்த்தி.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!