6. காயமின்றி வாழும் காதல்

4.5
(8)

காயமின்றி வாழும் காதல் – 6

ரவியை கண்டு வீட்டிற்குள் வந்து பதுங்கியவள், தலையில் அடித்து கொண்டாள். அய்யோ, மக்கு! அத்தான் என்ன நினைச்சு இருக்கும்? ஒழுங்கா எப்போதும் போல் இரு. அதான் நல்லது என்று சொல்லி கொண்டாள். அதன்பின் வெகுநேரம் கழித்து அவளுக்கு அவளே பல அறிவுரை சொல்லிக் கொண்டு அவர்கள் வீட்டை நோக்கி போனாள். ஆனால் எவ்வளவு தான் அவள் அவளை தயார்படுத்தி கொண்டு வந்து இருந்தாலும் அது போதாது என்பது போல் அவன் வீட்டு வாசலை நெருங்கும் போது இதயம் அதி வேகமாக துடிக்க ஆரம்பித்து விட்டது. அய்யோ! இது என்ன சோதனை? இப்போ ஏன் நான் இப்படி ஆகுறேன் என்று நொந்து போனவள் வீட்டிற்குள் சொல்லாமல் அப்படியே திரும்பி விடலாம் என்று நினைத்து திரும்ப நினைக்க,

“ஹலோ மச்சான்! இப்போ கேட்குதா டா?” என்றபடி வெளியே வந்தான் நிலைவாசலில் சாய்ந்து நின்றான் ரவி.

அவனை கண்டவள் தயங்கி அப்படியே நின்றாள்.

வீட்டிற்குள் முதலாவது இருக்கும் மூர்த்தியின் கணக்கு பார்க்கும் அறையில் இருந்தவன் வாசலில் தான் தன் கவனத்தை வைத்து இருந்தான். அவன் வந்து இவ்வளவு நேரம் ஆகியும் வராமல் இருக்கும் குறிஞ்சியை நினைத்து அவனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. உன்னால தான் ரோடும் எங்க வீட்டு வாசலும் பள்ளமா போச்சு என்பான் முன்பு. அந்த அளவிற்கு ஓடி ஓடி வருபவள் இன்று ஏன் வரவில்லை? இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்தத்திற்கு இப்போது ரியாக்ட் பண்ணுகிறாளா? புரியவில்லை அவனுக்கு. அப்படி நினைக்க முடியாதபடி மூன்று மாதம் முன்பு கூட இயல்பாக தானே இருந்தாள். அதனால் அவளையே எதிர்பார்த்து இருந்தவன், அவள் தயக்கத்தையும் எண்ணத்தையும் புரிந்து கொண்டு அவள் போக கூடாது என்று வாசலில் வந்து நின்று கொண்டான்.

தயங்கி நின்றவள் மீண்டும் வீட்டிற்கு செல்ல திரும்ப,

“நான் ஓரமா தான் நிற்கிறேன்” என்றான் ரவி அழுத்தமாக. நீ இப்போது உள்ளே செல்ல வேண்டும் என்று அவன் சொல்வது போல் இருந்தது அவளுக்கு. போன் பேசவில்லை அவன் இப்போது.

“ம்ம்…. இல்லை அத்தான்….” இழுத்தாள் குறிஞ்சி. இதயம் மத்தளம் கொட்ட, கை கால் எல்லாம் நடுங்குவது போல் இருக்க அவளால் பேசவே முடியவில்லை.

“என்ன இப்போ எங்க அப்பா வந்து என்னை தூக்கி போட்டு மிதிக்கணுமா?” கோபமாக கேட்டான் ரவி. அவனுக்கு ஏன் அவ்வளவு கோபம் என்று அவனுக்கே தெரியவில்லை. அவள் மனம் புரியாமல் அவன் திட்டவும் கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு. எந்நேரமும் கலகலவென்று இருக்கும் அவள் கலங்கவும் இன்னும் ஆத்திரம் வந்தது அவனுக்கு.

“செய்யுறது எல்லாம் நீ! ஆனா தண்டனை எனக்கு. இப்போவும் அப்படி தான் எதுக்கோ பிளான் பண்றே போல்….” என்று முகம் கடுகடுக்க சொன்னவன் விறுவிறுவென்று தெருவில் இறங்கி நடந்து சென்று விட்டான்.

இரண்டு வருடமாக ஒப்புக்கு பேசியவன் இன்று அவன் கோபத்தை உரிமையாக காட்டினான் என்று மகிழ்வதாக இல்லை இன்னும் தன் மேல் கோபமாக இருக்கிறான் என்று வருந்துவதா என்று புரியாமல் நின்றாள் குறிஞ்சி. பின் முகத்தை துடைத்து கொண்டு அவன் வீட்டிற்குள் சென்றாள்.

அவர்கள் தெரு முனையில் சென்று அவள் வீட்டை தான் பார்த்து கொண்டு இருந்தான் ரவி. அவள் அவன் சொன்னதையும் மீறி அவள் வீட்டிற்கு திரும்பி விட்டாளா என்று. அவள் வரவில்லை என்றதும் மனம் சற்று சமாதானப் பட்டது. அவனும் வீட்டிற்கு திரும்பி வந்தான். வந்தவன் காதில் அவளின் சிரிப்பு சத்தம் கேட்க அவன் முகத்தில் தானாக ஒரு மென்னகை உருவானது. குள்ளி! முணுமுணுத்துக் கொண்டான்.

சற்று நேரத்திற்கு எல்லாம் மூர்த்தி வீட்டிற்கு வர, ஹாலில் அமர்ந்து பேசி கொண்டு இருந்த மக்களையும் மனைவியையும் பார்த்தவர், சற்று தள்ளி சென்று அமர்ந்து கொண்டார். மகன் அவர்கள் பேச்சில் கலந்து கொள்கிறானா என்பதை கவனிக்க தான்! வேறெதுக்கு? சற்று நேரமாகவே குறிஞ்சியிடம் பேச வேண்டும் என்று தான் இருந்தது ரவிக்கு. இரண்டு வருடம் அவன் கோபத்தை குறைத்து விட்டது. ஆனால் அந்த எரிச்சல் மட்டும் மாறவில்லை. அதனால் தான் அவள் என்ன செய்தாலும் கோபம் வந்தது. தந்தைக்காக பேசுகிறேன் என்ற போர்வையில்,

“என்ன குறில்! காலேஜ் போற அளவு வளர்ந்திட்டியா நீ? உட்கார்ந்தா கம்ப்யூட்டர் எட்டுதா?” செம கிண்டலாக கேட்டான்.

மகன் கிண்டல் செய்கிறான் என்று கோபம் வந்தாலும் ஒரு பக்கம் சிரிப்பு வந்து விட்டது மூர்த்திக்கு. இயல்பாக பேசுகிறான் என்று சந்தோஷப்பட்டு கொண்டவர், கொஞ்சம் அவனை அதட்டினார்.

“ஏண்டா, நீ பரண்ல கை விடுற அளவுக்கு வளர்ந்ததுக்கு என் மருமகளை கிண்டல் பண்றியா?”

“கரெக்ட் மாமா, நல்லா சொல்லுங்க மாமா. ஒட்டடை குச்சி! அயித்தே இனி நீங்க ஒட்டடை அடிக்க ஆள் தேட வேண்டாம். உங்க மகன் கையில் ஒரு விளக்குமாறு கொடுங்க போதும்!” என்றாள் குறிஞ்சி அவள் பங்குக்கு.

அனைவரும் சிரித்து பேச, கொஞ்ச நேரம் அங்கே கலகலப்பாக போனது. அவர்கள் அனைவரும் பேசி சிரித்தாலும், குறிஞ்சியால் முன்பு போல் ரவியின் முகத்தை பார்த்து பேசமுடியவில்லை. ரவிக்கு அவளின் தவிப்பு புரியாவிட்டாலும் வித்தியாசமான அவள் நடத்தை அவனுக்கு குழப்பத்தை விளைவித்தது. அவனுடன் பேசும் போது, அவனை போலவே கலகலப்பாக கிண்டலும் கேலியுமாக பேச முயற்சித்தாலும் அவள் கண்கள் ஒரு இடத்தில் நில்லாமல் அலைபாய்ந்தது. அதை யோசனையுடன் பார்த்தான் ரவி.

இவ ஏன் முதல்ல இருந்து ஏதோ அவஸ்தையில் இருக்க மாதிரியே இருக்கா? என்று சிந்தித்தான். சிறு வயதில் இருந்து பழகியதால் அவனால் அவள் சலனப்படக் கூடும் என்று எண்ணம் கொஞ்சமும் இல்லை ரவிக்கு. அவளை இலகுவாக்க எண்ணி,

“ஏய் குறில்! எங்க அக்கா எதுவும் உன்னை டெஸ்ட் எலி ஆக்கிருச்சா?”

“என்ன அத்தான் சொல்றீங்க?”

“இல்லை, வந்ததில் இருந்து நெளிஞ்சுகிட்டே இருக்கியே! அதான் கேட்டேன். நீ எங்க அக்கா மேல் இருக்க பாசத்தில யோசிக்காம அம்புட்டையும் முழுங்கி வைச்சுட்டியோனு எனக்கு சந்தேகமா இருக்கு….” என்றான் சிரிப்புடன்.

“டேய், அவ மேல் இருக்க அக்கறையை காட்ட ஏண்டா என்னை டேமேஜ் பண்றே?” சிலிர்த்து எழுந்து தம்பியிடம் சண்டை போட்டாள் ஷ்யாமளா.

அவன் ஒன்றும் அவளை தாங்கவில்லை ஆனாலும் ஏதோ ஒரு விதத்தில் அவள் டிஸ்டர்ப்பாக இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு அவன் கேட்ட விதத்தில் இன்னும் அவன் பால் சரிந்தாள் குறிஞ்சி. அவள் அகத்தின் சந்தோஷம் முகத்தில் தெரிய மலர்ந்து சிரித்தாள் குறிஞ்சி. நேரம் ஆகிவிட
அப்படியே சிரித்த முகமாக குறிஞ்சி கிளம்ப மூர்த்தியின் நெஞ்சம் நிறைந்தது. தன் வீட்டில் ஒரு சிறு பெண் கண்ணீர் விடுவதா? அதுவும் தன் மகனால் என்று அவர் வருந்தி இருந்தார். அதனால் தான் அவ்வளவு பிடிவாதம் பிடித்தார் குறிஞ்சி விஷயத்தில் அவர். இன்று அவர்களுக்குள் பேச்சும் சிரிப்பும் வந்து விட அவருக்கு சந்தோஷமாகி விட்டது.

தன் மேல் தன் அத்தானுக்கு என்ன உணர்வு இருக்கிறது என்று தெரியாவிட்டாலும் அக்கறை நிறைய இருக்கிறது என்று அவளுக்கு புரிய உற்சாக வானில் பறந்தாள் குறிஞ்சி. அதே போல் ரவிக்கு தன்னையே நினைத்து ஆச்சரியம். எனக்கு இவள் மேல் இவ்வளவு அக்கறையா? இந்த பிள்ளை எனக்கு சரியான தொல்லைனு தானே நினைப்பேன்…. என்று சிரித்து கொண்டான்.

*******

திருமணத்திற்கு பத்து நாள் இருக்க, மேக் அப் முடிவு செய்ய, ஜாக்கெட் கொஞ்சம் ஆல்டர் செய்ய என திருநெல்வேலிக்கு செல்ல வேண்டி இருந்தது ஷ்யாமளா. துணைக்கு அவளின் தோழியும், குறுஇஞ்சியும் போதும் என்றாள் ஷ்யாமளா. அதெல்லாம் சரி வராது என்று கோகிலாவையும் கூடவே அனுப்பி வைத்தார் மேகலா. இவர்களுக்கு கார் ஓட்ட ரவி. வழியெல்லாம் திட்டி கொண்டே வந்தான் ரவி.

“ஏன் கா, இதெல்லாம் நம்ம ஊரிலே பண்ணிக்க மாட்டியா?”

“நீ மட்டும் ஏண்டா திருநெல்வேலிக்கு வந்து படிச்சே? அம்மா கூட ஜவுளி திருநெல்வேலியில் இருக்க அந்த கடையில் தான் எடுக்கணும்னு சொல்லி எடுத்தாங்க. நான் மட்டும் செய்ய கூடாதா?”

“அதுவும் இதுவும் ஒண்ணா கா?”

“ஆமா, எனக்கு பிடிச்ச நல்ல ப்ராடெக்ட்ஸ் எல்லாம் இவங்க தான் யூஸ் பண்றாங்க. நானும் விசாரிச்சு தான் செய்யுறேன் எல்லாம்” என்றாள் கோபமாக.

“இவ்ளோ இருக்கா இதிலே?” என்று வியந்தார் கோகிலா. ஏனென்றால் அதுவரை அவருக்கும் இதை உள்ளூரிலேயே செய்து கொண்டால் என்ன? என்ற எண்ணம் இருந்தது.

பேசியபடி அவர்கள் வந்து சேர்ந்து விட்டனர். ஷ்யாமளாவும் அவள் தோழியும் பார்லர் செல்ல, கோகிலாவிற்கு கொஞ்சம் வேலை கொடுத்து அனுப்பி இருந்தார் மேகலா. அவர்கள் கடையில் வேலை செய்யும், வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு புடவை வாங்க மறந்து விட்டதால் அவர்களுக்கு வாங்கி வருமாறு சொல்லி இருந்தார். அதனால் கோகிலா, குறிஞ்சியையும் அவர் கூட வருமாறு அழைத்து கொண்டு ஜவுளி கடைக்கு சென்றனர்.

அங்கு சென்ற சற்று நேரத்திற்கு எல்லாம் கோகிலாவின் அருகில் இருந்த குறிஞ்சியின் முகத்தில் ஒரு அசௌகரியம் வந்தது. கோகிலா உடைகள் வாங்க, சற்று தள்ளி அமர்ந்து போனில் ஒரு கண்ணும் அவர்கள் மீது ஒரு கண்ணுமாக இருந்தான் ரவி. கோகிலாவிடம் சொல்லி விட்டு வேகமாக நடந்தாள் குறிஞ்சி.

“என்ன அத்தை? எங்க போறா குறிஞ்சி?”

“பக்கத்தில கடைக்கு போயிட்டு வரேன் சொன்னா தம்பி.”

“என்கிட்ட சொல்லலாம்ல….”

அவளுக்கு எதிர்பாராமல் நாப்கின் வாங்க வேண்டிய சூழ்நிலை வர அவள் சென்றாள். அதை எப்படி ரவியிடம் சொல்வது என்று தயங்கிய கோகிலா, “கடைக்கு போறது எல்லாம் பழக்கம் தானே அவளுக்கு. செய்யட்டும்” என்று சொல்லி விட்டு அவர் வேலையை பார்த்தார்.

மூஞ்சியை வேற சுருக்கி வைச்சுகிட்டு போனா! பசிக்குதோ? நான் வேற எதுவுமே வாங்கி கொடுக்காம கடைக்கு அழைச்சிட்டு வந்துட்டேன் என்றவனுக்கு அவள் தனியே கடைக்கு சென்றதை ஏற்று கொள்ளவே முடியவில்லை. என்னை கேட்க வேண்டியது தானே? நான் செய்ய மாட்டேனா என்ன? உள்ளுக்குள் சுருசுருவென்று கோபம் வந்தது. ஒரு இரண்டு நிமிடத்திற்கு மேல் அங்கு அமர்ந்து இருக்க முடியாதவன்,

“இதோ வரேன் அத்தை….” என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்.

வேகமாக கடையை விட்டு வெளியே சென்றவன், கடை வாசலில் நின்று எந்த பக்கம் இருக்கிறாள் குறிஞ்சி என்று சுற்றுபுறத்தை அதிவேகமாக ஸ்கேன் செய்தான். இடது பக்கம் நடந்து போய் கொண்டு இருந்தாள் அவள். ஒரு மெதுவோட்டம் ஓடி அவள் அருகில் போனான். யாரோ என்று பயந்தவள் சட்டென்று நகர்ந்து ஒரு அடி விலகி நின்றாள். விலகியவள் கண்ணில் அவன் பட, அவனை எதிர்பார்க்காததால் திகைத்து நோக்கினாள் அவனை.

“என்ன பார்க்கிறே? எங்க போறே?” என்ற ரவியின் கேள்விக்கு,

“இல்லை, இங்க கடைக்கு….” என்று இழுத்தாள் குறிஞ்சி.

“என்ன வேணும் சொல்லு நான் வாங்கிட்டு வரேன். நீ அத்தை கிட்ட போ….” என்றான்.

“இல்லை, வேண்டாம்….” என்று மறுபடி அவள் தயங்க, இவனுக்கு பொறுமை கரைந்து விட்டது.

“பெரிய மனுஷி நீங்க…. உங்களுக்கு தான் எல்லாம் தெரியும்னு சுத்துறதை நம்ம ஊரோட வைச்சுக்க…. இப்போ ஒழுங்கா உனக்கு என்ன வேணும்னு சொல்லிட்டு போ” என்று கடுகடுத்தான் ரவி.

அவன் கடுப்பில் இவளுக்கு எரிச்சல் வர, “இந்த விஷயத்தில் எனக்கு தான் தெரியும்…. உங்களுக்கு தெரியாது…. அதனால் நீங்க போங்க” என்று சொல்லிவிட்டு நிற்காமல் நடக்க ஆரம்பித்தாள்.

அவ்ளோ உறுதியாக அவள் சொல்லியவுடன் அவனுக்கு லேசாக புரிந்தது. அதற்கு ஏற்றார் போல் அடுத்து வந்த சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து அவள் வாங்கிய பொருளை கண்டவன், அவள் அதை வாங்கி, அங்கிருக்கும் ரெஸ்ட் ரூம் உபயோகித்து வரும் வரை பொறுமையாக வெளியே காத்திருந்தான்.

வெளியே வந்த அவள் அவனை பார்த்து விழிகளை விரித்தாள். இவள் கோபப்பட்டு பேசியதில் திரும்பி போய் இருப்பான் என்று தான் நினைத்தாள். ஆனால் தனக்காக நிற்கிறானே…. உள்ளம் குதூகலமானது. அவன் இறங்கி வந்து விட்டான் தன்னிடம் என்ற சந்தோஷத்தில் மிதப்பாக நோக்கினாள் ரவியை.

அவளின் எண்ணத்தை புரிந்து கொண்டவன், “இது ஏதோ உன் விஷயமா போச்சு, தப்பிச்சுக்கிட்டே! கொஞ்சம் ரீவைண்ட் பண்ணு, உன் ஹிஸ்டரி, ஜியாகரபி எல்லாம் எவ்வளவு சிக்கலானதுனு…. என் பொறுப்பில் அழைச்சிட்டு வந்து இருக்கேன், அதான் பயந்து ஓடி வந்தேன் நான்.” என்றான் நக்கலாக ரவி.

அவன் சொன்ன விதத்தில் சிரிப்பு வர, பழிப்பு காட்டியபடி அவன் கூட நடந்தாள் குறிஞ்சி.

அவர்களுக்கு இடையே ஓரளவிற்கு நன்றாக பேச்சுவார்த்தை ஆரம்பித்து இருக்க அதை அப்படியே தொடர்ந்தார்கள் இருவரும். அவளும் முன்பு போல் சிறுமி அல்லவே, அதனால் அவன் முகம் பார்த்து அவனுக்கு பிடிக்காதது செய்யாமல் இருந்து கொண்டாள். பெரியவர்கள் நால்வருக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. ரவியும், குறிஞ்சியும் இதே போல் இணக்கமாக பேசி பழகினார்கள் என்றால் அவர்களின் ஆசை எவ்வித சிரமமும் இன்றி நிறைவேறி விடும் என்று நம்பி மகிழ்ந்தார்கள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “6. காயமின்றி வாழும் காதல்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!