நெஞ்சம் – 6
ஹாஸ்பிடலை நெருங்கும் போது ஆரவ் அர்விந்தை அழைத்து சொல்ல, அவன் மலரை அழைத்து செல்ல கீழே வந்து காத்திருந்தான். இறங்கியவள் அவன் கண்களை சந்திக்காமல் வேறெங்கோ பார்த்தாள். அவளுக்கு இருந்த பதட்டத்தில், எதிலும் கவனமில்லை. அவ்வளவு பெரிய மருத்துவமனையை வியந்து பார்த்தாள். இதென்ன இவ்ளோ பெரிசா இருக்கு, ஆஸ்பத்திரி மாதிரியே இல்லையே! அவள் திருவண்ணாமலையை தாண்டியது இல்லை, அவள் ஆச்சரியப்படுவதில் தப்பில்லை! ஆரவ் அப்படியே கிளம்பி விட, மலரை அழைத்துக் கொண்டு லிப்ட்டிற்கு வந்தான் அர்விந்த்!
நடக்கும் போது முன்னே சென்ற அர்விந்த், அவள் தன்னை தொடர்வாள் என்று அவளை கவனிக்காமல் நடந்தான். லிப்டின் அருகே வந்தபின் தான் அவனுக்கு அவனின் லாப்டாப் பேக் நியாபகம் வர, லேசாக பக்கவாட்டில் திரும்பியவன், அவள் கையில் வைத்து இருக்கும் அவனின் லேப் டாப் பையை வாங்கிக் கொள்ள கையை நீட்டினான், நீட்டிய அவன் கையை கண்டவள், லிப்டின் அருகே கூட்டமாக இருக்கவும், அதில் ஏற தான் தன்னை அழைக்கிறார் போல் என்று நினைத்துக் கொண்டு, நீட்டிய அவன் கையை பற்றிக் கொண்டாள். அவள் இருந்த மனநிலையில் அவளுக்கு யோசிக்கும் திறன் அப்போது முற்றிலும் இல்லை.
“வாட் தி….” என்று மலரை முறைக்க போனவன், அவள் முழித்த முழியை கண்டு தன் முறைப்பை மாற்றிக் கொண்டான். அதேநேரம் அவள் கைகளின் ஜில்லிப்பையும் உணர்ந்தான். அவன் கையை அவள் இறுக்கி பிடித்த விதத்தில் அவள் பயப்படுகிறாள் என்று புரிந்தது அவனுக்கு. அதனால் ஒன்றும் சொல்லாமல் அவள் கைகளை பிடித்துக் கொண்டே லிப்டில் நுழைந்தான். கூட்டத்தை கண்டு அவளையும் அறியாமல் அவனை நெருங்கி நின்றாள் மலர். அவளை இயல்பாக்க எண்ணி,
“ஹேய் விழி, ஏன் இப்படி முழிக்கிற? என்ன பயம் உனக்கு?”
ஒண்ணுமில்லை என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
“கண்ணாடி இருந்தா உன்னை பார்க்க சொல்லி இருப்பேன், உனக்கே தெரிஞ்சுருக்கும் உன் முகம் எப்படி இருக்குனு!”
பதிலேதும் சொல்லவில்லை அவள். அவள் அமைதியாகவே நிற்க, மாலை அவன் அவளை நெருங்கிய போது தெரியாத நூதனமான உணர்வு இப்போது உரைத்தது அர்விந்திற்கு. அவளிடம் இருந்து விலக வேண்டும் போல் இருந்தது ஆனால் அவளை விலக்க முடியாமல் நின்றான். அவன் விலகினாலோ, விலக்கினாலோ நிச்சயம் அவள் காயப்பட்டு போவாள் என்று அவனுக்குள் காரணம் சொல்லிக் கொண்டான்.
அந்த சில நிமிடங்களில் அவனின் மணம் அவளை மொத்தமாக சூழ்ந்து கொள்ள, தவித்தாள் மலர். ஆனாலும் அந்த சூழ்நிலை சற்று மிரட்ட அவன் அருகிலேயே நின்றாள். அவர்கள் தளம் வந்துவிட, இருவரும் இறங்கினார்கள். அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்கு செல்லும் போது, காலியாக இருந்த காரிடருக்கு வந்த பின் கொஞ்சம் தெளிந்தாள் மலர். இன்னுமும் அவன் கையை பிடித்துக் கொண்டு இருப்பதை உணர்ந்தவள், படாரென்று அவன் கையை விட்டாள் மலர்.
“அட விழிக்கு தைரியம் வந்துடுச்சு போல….” அவன் குரலில் என்ன இருந்தது? அவன் கையை அவள் விட்டதில் ஏமாற்றமா?
இவ்வளவு நேரமாக அவன் கையை பிடித்து கொண்டு இருந்தோமே என்ற சங்கடத்தில், “ஸாரி சார், பெரிய இடம், நிறைய ஆளுங்கனு ஒரு மாதிரி ஆய்டுச்சு!” தன்னிலை விளக்கம் கொடுத்தாள் மலர்.
“அப்போ உன்னை கூட்டமா இருக்க அழைச்சிட்டு போனா போதும், ம்ம்ம்….” வில்லன் போல பேசினான் அர்விந்த்.
“ஸார்….” மலர் புரியாமல் நோக்க,
“நட நட ஒண்ணுமில்லை, முழிக்காத”
பின் அறைக்கு வந்து அருணாவை கண்டு நலம் விசாரித்து, அவருடன் இருந்தாள் மலர். அர்விந்த் அவன் ஆபிஸ் வேலை பார்த்துக் கொண்டு இருந்தான். அருணாவுக்கு இரவு உணவு மருத்துவமனையில் கொடுத்துவிட்டார்கள். கூட இருப்பவர்களுக்கும் வேண்டும் என்றால் முன்னதாக சொல்ல வேண்டும். ஆனால் அது வேண்டாம் என்ற அர்விந்த் வேறு ஒரு பிளானோடு இருந்தான். அங்கே இருக்கும் காண்டீனுக்கே சென்று சாப்பிடலாம் என்று சொல்லி விட்டான். லிப்டில் அல்லவா சென்றுவர வேண்டும்!
“ஸார், நீங்க சாப்பிட்டு எனக்கு வாங்கிட்டு வரீங்களா? அம்மா தனியா இருப்பாங்களே!”
அது அவனுக்கு தெரியாதா? தெரிந்தே செய்பவன் அனைத்தையும் சமாளிப்பானென்று தெரியாமல் பேசினாள் மலர்.
“இங்க சாப்பிடுறதுனா உனக்கு கொண்டு வரவே சொல்லி இருப்பேனே! இங்க கொண்டு வரும் போது சாப்பாடு நல்லாவே இருக்காது. பேஷண்ட்க்கு கொடுக்கிற சாப்பாடு வேற! நீ ஒழுங்கா என்கூட வந்து சாப்பிடு!”
“அம்மா…”
அருணாவே மெதுவாக, “பெல் அடிச்சா நர்ஸ் வருவாங்க, நீங்க போய் சாப்பிட்டு வாங்க” என்றார். தனி அறை, பெரிய அறை பேஷண்ட் என்பதால் வெளியே தான் நர்ஸ் இருந்தார்கள்.
தன்னை அறைக்குள்ளேயே விட்டால் பரவாயில்லை என்று இருந்தது அவளுக்கு. ஒரு மாதிரி தாழ்வு மனப்பான்மையாக இருந்தது அவளுக்கு. அனைவரும் தன்னையே பார்ப்பது போல் உணர்ந்தாள் மலர். அவளை விடாப்பிடியாக அழைத்து சென்றவன், கீழே சென்றதும், ஒரு இடத்தை காட்டி,
“ஏன், எதுக்குனு கேட்காம இங்க ஒரு அஞ்சு நிமிஷம் அப்படியே நில்லு!” என்றான். அவளும் அவன் சொன்னது போல் கேட்க, அவளை சுற்றிக் கொண்டும், அவளை கடந்தும் பலர் போனார்கள், வந்தார்கள். யாரும் அவள் பயந்த மாதிரி அவளிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை.
“வா போலாம்!” என்று அவளை அழைத்து சென்றவன்,
“இங்க எல்லாருக்கும் நிறைய வேலை, கவலை இருக்கு! எல்லாரும் நம்மளையே பார்ப்பாங்கனு உனக்கு தோணும்! ஆனா யாரும் நம்மளை கவனிக்கமாட்டாங்க! அப்படியே கவனிச்சாலும் கண்டுக்க மாட்டாங்க! அவ்வளவு வேகமான உலகம் இது! உனக்கு என்ன வேணுமோ நீதான் கத்துக்கணும், கேட்கணும்! புரியுதா?” என்றான்.
அவளின் அலைப்புரிதலை புரிந்து கொண்டவன், அழகாக அவளுக்கு அதை களைய உதவி செய்தான். அவள் மனதில் சட்டென்று அழுத்தமாக அமர்ந்தான் அரவிந்த்.
இன்னும் பிரமிப்பு நீங்காவிட்டாலும், கொஞ்சம் சகஜமாக அவனுடன் உண்டாள் மலர். நான் ஏன் இவளை இவ்ளோ கேர் பண்றேன்? அவளுக்கு எதுவுமே தெரியலை, சொல்லி கொடுக்கிறது எனக்கு ஒரு திருப்தி தருது! அதனால் போல் என்று நினைத்துக் கொண்டான்.
இது போல் பொறுமையாக நீ வேற யாருக்கும் சொல்வியா அர்வி? அவள் ஏன் அனைத்தையும் தெரிந்துக் கொள்ள வேண்டும்? அவள் ஏன் மனதளவில் வளர வேண்டும் என்று நீ நினைக்கிறாய்? இந்த கேள்வி எல்லாம் யார் கேட்பது? மனசாட்சி தான்! வழக்கம் போல், உங்களுக்கு அவர் பதில் அளிக்கவில்லை, மீண்டும் முயற்சியுங்கள் தான்!
உண்டு விட்டு லிப்டில் வரும்போது, “நல்லா பார்த்துக்கோ, நாளைக்கு நீ தனியா தான் வந்து போகணும் கீழே” என்றான் வேண்டுமென்றே.
“ஸார்…!”அதானே இவரால முழுக்க நல்லவரா எல்லாம் இருக்க முடியாதே! நொந்து போனாள் மலர்.
அன்று இரவு உறங்கும் நேரம் வர, பெரிய தயக்கம் வந்தது மலருக்கு. அவனும் அந்த அறையில் இருக்கையில் அவளுக்கு படுக்கவே ஒரு மாதிரியாக இருந்தது. அட்டெண்டர் படுக்க ஒரு கட்டில் இருக்கும். அதில் அவளை படுக்க சொன்னான் அர்விந்த்.
ஒரு சிறிய சைஸ் சோபா ஒன்று இருந்தது, அதில் அவன் சாய்ந்து கொள்கிறேன் என்றான். உறங்க சிரமம் தான், ஆனால் இரவு மட்டும் தானே அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம் என்று நினைத்தான் அர்விந்த். ஆனால் மலர் அந்த கட்டிலில் படுக்கவே முடியாது என்று சாதித்தாள். அருணாவின் கட்டிலுக்கு அருகே கீழே படுக்க தயாரானாள்.
அவளால் அவன் முன்னே கட்டிலில் படுக்கவே முடியாது. அதனால் உறுதியாக மறுத்தவள், தான் கொண்டு வந்து இருந்த விரிப்பை தரையில் விரித்தாள். சொல்லி பார்த்து விட்டு, அவள் பிடிவாதமாக இருக்கவே அவனும் விட்டு விட்டான். அருணாவின் மருத்துவமனை கட்டில் சற்றே உயர்த்தப்பட்டு இருக்க, இவன் அருகில் இருந்த சிறிய உயரம் குறைந்த கட்டிலில் படுக்க, மலரை நன்றாக பார்க்க முடிந்தது அவனால். அருணாவுக்கு என மங்கலான விளக்கு எரிய, அந்த வெளிச்சத்தில் அவனுக்கு முதுகு காட்டி படுத்து இருந்த மலரை கண் கொட்டாமல் பார்த்தான். ஏன் பார்க்கிறான் என்று தெரியவில்லை, அதே சமயம் பார்க்காமலும் இருக்க முடியவில்லை. அவளின் மேல் எந்த தப்பான நோக்கமும் அவனுக்கு வரவில்லை. பார்க்கும் பெண்ணை எல்லாம் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கும் அளவு அவன் தரம் தாழ்ந்தவனும் இல்லை. ஆனால் அவளை பார்த்துக்கொண்டே இருந்தான்.
எண்ணங்கள், காரணங்கள் எதுவும் இல்லாமல் ஒருவரை பார்க்க முடியுமா? முடியும்! நமக்கு பெரிதாக தெரியாத ஒருவரை நமக்கு பிடித்தால், அவர்கள் செய்கை அத்தனையையும் நாம் கவனிப்போமே, அது போல் அவள் உறங்குவதை பார்த்துக் கொண்டே இருந்தான் அர்விந்த். தன்னை ஒருவன் பார்க்கிறான் என்ற எந்த உள்ளுணர்வும் அவளுக்கு இல்லாததால், உறங்கி விட்டாள் மலர்.
அர்விந்த் எப்போது கண் அயர்ந்தனோ தெரியாது, ஆனால் தூக்கத்தில் மலர் வந்து ஏதோ சொல்லி, அவனை எழுப்ப,
“உனக்கு எப்போ பாரு எதுக்காவது பயப்படணுமா? ஒன்னுமில்லை பேசாம தூங்கு” என்றான் தூக்கத்தில்.
விடியற்காலையில், நர்ஸ் வந்து அருணாவிற்கான செக் அப் செய்ய வர, சத்தம் கேட்டு முழித்தான் அர்விந்த்! நர்ஸ் அவர் வேலையை செய்து விட்டு போய் விட்டார். ஆனால் முழித்த இவன் அதிர்ச்சி ஆனான். ஏனென்றால் இவன் முழிக்கும் போது, இவன் அணைப்பில் மலர். அவளை அணைத்தபடி தான் உறங்கி கொண்டு இருந்திருக்கிறான் அர்விந்த்! எப்படி? இப்படி? அவனுக்கு எதுவுமே நியாபகத்தில் இல்லை! நன்றாக உறங்கி கொண்டு இருந்தாள் மலர். அருணாவால் எட்டியோ, கீழேயோ எல்லாம் பார்க்க முடியாததால் மலர் எங்கு படுத்து இருக்கிறாள் என்று தெரியவில்லை அவருக்கு. அவர் மீண்டும் தூக்கத்திற்கு போக, இவன் மெதுவாக மலரை எழுப்பினான்.
அவன் கட்டிலின் வெளிப்பக்கம் அமர்ந்தபடி, சுவற்றின் ஓரம் படுத்து இருந்த மலரை எழுப்ப, முதலில் சாதாரணமாக கண்ணை திறந்தவள், அவனை கண்டு அரண்டு மிரண்டு எழுந்து அமர்ந்தாள். அப்போது தான் அவளுக்கு இரவு நடந்தது அனைத்தும் நினைவிற்கு வந்தது.
“ஸார்…. நான்… இல்லை… நீங்க….நைட்….” எங்கே அவளை திட்டி விடுவானோ என்று அவள் பதறி பயந்து பேசத் துடிக்க,
“நான் உன்னை தப்பா நினைக்கலை, நீ எப்படி இங்க வந்து படுத்தேனு மட்டும் சொல்லு” என்றான் பொறுமையாக.
“பாதி நைட்ல என்னால குளிர் தாங்கமுடியலை சார், விரிப்பும் மெல்லிசா இருந்ததால் என்னால் கீழே படுக்கவே முடியலை….சோபாவில் படுத்து பார்த்தேன், அப்போவும் குளிர் தாங்கலை! உங்க கிட்ட வந்து, உங்களை எழுப்பி ஏசியை குறைக்க முடியுமானு கேட்டேன் சார், நீங்க உனக்கு எல்லாத்துக்கும் பயமானு கேட்டு, என்னை இழுத்து உங்க பக்கத்தில படுக்க வைச்சுட்டீங்க, நான் எழுந்து போக தான் பார்த்தேன், நீங்க விடவே இல்லை சார்! தூக்கத்திலே பேசினீங்க! நீங்க சொல்றதை தான் கேட்கணும், நீங்க என்னை பத்திரமா பர்த்துப்பீங்கனு அட்வைஸ் செஞ்சீங்க….சரி கொஞ்சம் நேரம் கழிச்சு இறங்கி போயிடலாம்னு நினைச்சேன் சார், ஆனா களைப்பிலே நானும் தூங்கிட்டேன் போல் சார்!” வேகமாக சொல்லி முடித்தாள் மலர்.
“சும்மா தூங்கலை! என்னை நல்லா கட்டிப்பிடிச்சுகிட்டே சுகமா தூங்கி இருக்க! என்னை நல்லா உலுக்கி எழுப்பி விடாம ஏதோ கதை சொல்ற….” ஒரு மாதிரி எரிச்சலாக பேசினான் அர்விந்த்.
“ஸார்! சத்தியமா சார்! என் கையை கெட்டியா பிடிச்சுட்டீங்க! அம்மா எழுந்துப்பாங்கனு நான் சத்தம் போடலை சார், கொஞ்ச நேரத்தில அங்க இருந்து எழுந்து போயிடலாம்னு தான் சார் இருந்தேன்!” கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. என்னை நம்புங்களேன் என்று அவனிடம் இறைஞ்சியது அவள் விழிகள்.
Semma analum paavom malar oru thanee feelah iruku keep going
thank you, sari pannuvom