அசுரனின் குறிஞ்சி மலரே.. 12

4.6
(16)

குறிஞ்சி 12

லாந்தர் விளக்கின் உபயத்தால் அறையில் இருந்த இருட்டை விலக்கி, அங்கே என்னென்ன இருக்கிறது என்பதை கோதையால் பார்க்க முடிந்திருந்தது.

வாசலோடு இருந்தால் மட்டும் போதும் என்று அழைத்து வந்திருந்த வியாகேசை, அவள் மெல்ல பேசிப் பேசியே அறையினுள் அழைத்துச் சென்று விட்டிருந்தாள்.

“என்னடி பிள்ளை.. அறையோ இது பாழடைஞ்ச பங்களா மாரிக் கிடக்குது..”

“போங்கோப்பா காமெடி செஞ்சு கொண்டு.. பாழடைஞ்ச பங்களாவாச்சும் பாக்குறதுக்கு பக்காவா இருக்கும்.. இது ஏதவோ வர்ணிக்க வார்த்தையே வருகுதில்லை..”

“அதெல்லாம் கிடக்கட்டும்.. கதைச்சுக் கதைச்சு என்னைய ஒரு வழியா உள்ளயே கூட்டி வந்திட்டாய் என்ன.. சரியான விஷயகாரி தான் நீ..”

“ஹீ ஹீ ஹீ..”

“கையில விளக்கை வைச்சு முகத்துக்கு நேராப் புடிச்சுக் கொண்டு சிரிக்காத பிள்ளை.. பயமாக் கிடக்குது..”

“மாறனண்ணாச்சி சொன்ன மாரி உங்களுக்கு குசும்பு தானப்பா..”

“அவரிட்டை இருந்து தான் உந்தக் குசும்புகள் எல்லாம் எனக்கு வந்தது.. சரி சரி லாம்பைத் தந்திட்டு இந்த மாஸ்க்கைப் போடு பிள்ளை.. பிறகு தும்மிக் கொண்டு கிடக்கப் போறாய்..”

“அதெல்லாம் இருக்கட்டும் அப்பா.. உங்களை ஒரு விசியம் கேக்கோணும் கேக்கோணும் எண்டிட்டு மறந்திட்டன் பாருங்கோவன்..”

“என்ன விசியம் பிள்ளை..”

“நீங்கள் உப்புடி எனக்கு உதவி செய்றதைப் பாத்தால் உங்கடை பாஸ் உங்களில கோபிக்க மாட்டாரோ..”

“ஏன் கோபிக்காமல்.. சும்மா அப்புடி முறைச்சுக் கொண்டு நிப்பான்..”

“பிறகு தைரியமா வந்து நிக்கிறியளே எப்புடி..”

“கோபம் மட்டும் தான் படுவான்.. பொருளுகளை எல்லாம் தூக்கி அடிக்க மாட்டான்..”

“அதென்ன நீங்கள் மட்டும் ஸ்பெஷல்..”

“அதைப் பிறகு ஒரு நாள் சொல்லுறன் பிள்ளை..”

“சொல்ல விருப்பம் இல்லாட்டிக்கு விடுங்கோ..”

“அப்புடியெல்லாம் இல்லைப் பிள்ளை.. இதுக்குள்ள நிண்டு கொண்டு கதைக்க முடியேல்லை..”

“ஓ சாரியப்பா.. நானும் அதை மறந்திட்டன்.. சரியான வெக்கையாக் கிடக்கு.. இருங்கோ முதல் ஜன்னல் எங்க கிடக்கு எண்டு தேடிக் கொண்டு வாரன்..”
என்று சொல்லி ஜன்னலைத் தேடியவள், ஒரு வழியாக ஜன்னல்களைத் தேடி இறுகிப் போய்க் கிடந்த ஜன்னல் திராங்குகளை வெகு சிரமப் பட்டு ஒரு வழியாகத் திறக்க, வெளிக் காற்று வேகமாக உள்ளே வந்தது.

அதன் பின்னர் அதை இதைப் பேசியபடியே அவள் வேலைகளைச் செய்ய, வியாகேசும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்யவே, கொஞ்சம் கொஞ்சமாக அந்த அறை, அறை போன்ற தோற்றத்தைக் கொடுக்கத் தொடங்கியது. அங்கேயும் இங்கேயும் கிடந்த பொருட்களைத் தட்டிக் கொட்டி ஒரு வழியாக அறையை நேர்த்தியாக்கிய கோதை, குடம் குடமாகத் தண்ணீரைக் கொண்டு வந்து அந்த அறையை நன்றாகக் கழுவி விட்டு, வியாகேசிடம் கடன் வாங்கிய சாம்பிராணியைக் கொண்டு வந்து அறையினுள் ஒரு ஓரமாகச் செருகி விட, அறையினுள் ஊதுபத்தி வாசனை எங்கும் பரவி ஒரு நேர்மறையான உணர்வைத் தூண்டி விட்டது.

மாலை மயங்கி சூரியன் மேல் திசையில் முழுக முதல் அந்தப் பெரிய அறை அத்தனை அழகாகத் தயாரானது.

வியாகேசும் கோதையும் வேலைகளை முடித்து விட்டுக் கீழே போக, மாடியின் இடப் புறமிருந்து வந்த ஜேம்ஸ் அந்த அறையைப் பார்த்தான். அவனுடைய நீலவிழிகள் மீண்டும் சுருங்கிக் கொண்டன.

மாடியின் சாளரத்தின் பக்கம் போய் நின்று கொண்டான். வெளியே வியாகேசோடு சிரித்துக் கதைத்துக் கொண்டு போகும் கோதை மீது அவனுடைய நீலக் கண்கள் அழுத்தமாகப் படியவே யோசனையில் புருவத்தை நீவி விட்டுக் கொண்டான்.

அதே நேரத்தில் ஜேம்ஸைத் தேடி ஓடி வந்தான் ரகுமான். அவனது கைகளில் அலைபேசி இருந்தது. அதனை அவுட் மைக்கில் வைத்து விட்டு அவன் பவ்வியமாக நின்று கொள்ள, சுவரோடு காலை ஊன்றிக் கொண்டு, அதைக் கவனித்தான் ஜேம்ஸ்.

எதிர் முனையில் தில்லையம்பலம் தான் கதைத்துக் கொண்டிருந்தார். வழமையான அவரது திமிர் பேச்சும் தெனாவெட்டுப் பேச்சும் இம்மியளவு கூட குறையவில்லை.

“என்ன தம்பி ஜேம்சு எப்புடி சுகம்.. என்ரை மகளை நல்லாப் பாத்துக் கொள்ளுறியோ.. அவள் சரியான கெட்டிக்காரி குடுத்த வேலையை சும்மா டப்பு டப்பெண்டு செஞ்சு முடிச்சிடுவாள்.. அநேகமாக அஞ்சு மாசம் முடியவும் நீயாவே என்னட்டை வந்து நான் வாங்கின கடனுகள் எல்லாமே இப்ப ஒண்டுமில்லை எண்டு சொல்லுவாய்.. அதோட உன்ரை சாம்ராஜ்யத்தையும் விட்டுக் கொடுப்பாய் பாரு.. நீ சொன்னபடி என்ரை மகள் நீ சொல்ற வேலையள் எல்லாத்தையும் கச்சிதமாச் செய்து முடிச்சால்.. உன்ரை அண்டகிரவுண்ட் சரக்குகள் எல்லாத்தையும் எனக்குக் கொடுத்திட வேண்டியது தான்.. உன்ரை உந்த அக்ரிமெண்ட் மற்ற ஆக்கள் விசியத்துல உனக்குச் சாதகமாக இருந்திருக்கலாம்.. ஆனா என்ரை விசியத்துல அது நடக்காது.. எனக்கு என்ரை மகள்ல அவ்வளவு நம்பிக்கை இருக்குது.. உன்னோட சாம்ராஜ்யம் என்ரை கைக்கு வர இன்னும் நாலு மாதமும் இருபத்தொரு நாளும் தான் இருக்கு.. என்கிட்ட ஏன்டா மோதினோம் எண்டு நீ யோசிக்கிற நாளும் சீக்கிரமே வந்திடும்.. இப்ப வைக்கட்டுமா..”
என்றபடி தில்லையம்பலம் அலைபேசியை வைத்து விட, ரகுமானோ தன்னிச்சையாய் இரண்டடி பின்னால் போனான்.

ரகுமானை ஒரு நொடி அழுத்தமாகப் பார்த்தவனோ அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு, பக்கத்தில் இருந்த சிறிய பூங்குவளையைக் கையில் எடுத்துக் கொள்ள, ரகுமானோ சட்டென்று காதுகளைப் பொத்திக் கொண்டான்.

ரகுமான் நினைத்தது போல ஜேம்ஸ் பூங்குவளையைக் கீழே போட்டுடைக்கவில்லை. அதன் நுணுக்கத்தையே திருப்பித் திருப்பிப் பார்த்தவன், அதை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு, ரகுமானைப் பார்த்துக் கண்ணசைக்க, அதைப் புரிந்த ரகுமான் கோதையைத் தேடி ஓடினான்.

அவன் அங்கிருந்து சென்றதும் சோபாவின் திண்டில் தலையை வைத்துத் தலைக்குப் பின்னால் கரங்களைக் கோர்த்துக் கொண்டு, வழமை போல விட்டத்தை வெறிக்கத் தொடங்கினான் ஜேம்ஸ்.

தில்லையம்பலத்தின் பேச்சே அவனது காதுகளில் ரீங்காரமிட, அவனது மூளை, கோதைக்கான அடுத்த கடின வேலையைச் சடுதியில் முடிவு செய்து விட, அந்த வேலைக்குள் தலையைக் கொடுத்து இடி படுவதற்காகவே பிறந்தவள் போல, அவன் இருந்த இடத்தை நோக்கிக் கோதை வர, அவளை நிழல் போலத் தொடர்ந்து வியாகேசு வர, சற்றுத் தூரமாக வந்து எட்டிப் பார்த்தபடி வஞ்சி நின்று கொண்டான்.

விட்டத்தை வெறித்தபடி இருந்தவனுக்கு முன்னால் வந்து நின்ற கோதை,
“நீங்கள் இப்ப என்னையக் கூப்பிட்டு விட்டீங்களாமே.. என்ன விசியம்..”
என்று கேட்க, அவளது குரலை மெல்ல உள் வாங்கியபடி நிதானமாக நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான் அந்த அழுத்தக்காரன்.

அவளை உச்சந்தலையில் இருந்து பாதம் வரை பார்வையால் அளந்தவன், வியாகேசையும் ஒரு பார்வை பார்த்தபடி, காலுக்கு மேல் கால் போட்டபடி சாய்வாக அமர்ந்து கொண்டு, மீண்டும் தன் பார்வைத் தொழிலைச் செய்யவே, கோதைக்குக் கடுப்பாகிப் போனது.

“வளந்து கெட்ட மாடு.. அதென்ன அப்புடிப் பாக்குறது.. செய்யப் போற வேலையைச் சொன்னால் நான் செஞ்சு முடிச்சிட்டுப் போயிடுவனே.. எப்ப பாரு குறுகுறுண்டே பாத்து வைக்கிறது.. வாயைத் திறக்கிறதேயில்லை திறந்தால் வைரம் வைடூரியம் எண்டு ஏதும் கொட்டுப் பட்டு அதை நாங்கள் அள்ளிக் கொண்டு ஓடிருவம் எண்டு பயமாக்கும் வெள்ளைப்பண்ணிக்கு..”
என முணுமுணுத்தவள்,
“இஞ்சே உங்களைத் தான் கேக்கிறன்.. இப்ப என்னைய வரச் சொன்னியளாமே.. என்னத்துக்கு எண்டு சொன்னால் நல்லா இருக்கும்.. எனக்கு நிறைய வேலை இருக்கு.. இப்புடியே எவ்வளவு நேரம் தானுங்கோ நான் நிக்கிறது..”
எனக் கொஞ்சம் சத்தமாகச் சொல்ல,
“இந்தா பாருங்கோ.. ஐயா வரச் சொன்னா வரோணும் நிக்கச் சொன்னால் நிக்கோணும்.. இருக்கச் சொன்னால் இருக்கோணும்.. அவருக்கு எப்ப என்ன தோணுதோ அப்ப தான் அதைச் செய்வார்.. அதை விட்டிட்டு அவருக்கு நீங்கள் ஓடர் போடக் கூடாது சரியோ.. அதோட அஞ்சு மாசத்துக்கு அவர் சொல்லுறதைச் செய்வன் எண்டு தான வந்தனியள்.. எங்கடை ஐயாவுக்கு முன்னால ஆருமே குரல் உசத்திப் பேச மாட்டினம்.. அவ்வளவு ஏன் ஆரும் பேசவே மாட்டினம் தெரியுமோ..”
என்று ரகுமான் இடையிட்டுப் பேசினான்.

ரகுமான் பேசுவதையே நாடியில் கையை வைத்துக் கொண்டு பார்த்த கோதை
“ஆருமே பேச மாட்டினம் எண்டிட்டு நீங்கள் பேசுறியள்.. என்ன ஏதெண்டு தானே கேட்டன் அது ஒரு குத்தமா சாமி.. இனி உங்கடை ஐயாவுக்கு முன்னால வாயைத் திறக்கவே இல்லை போதுமா..”
என்றபடி ஒரு கையால் வாயைப் பொத்திக் கொள்ள, அப்போதும் ஜேம்ஸ் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளுக்குப் பின்னால் தள்ளி நின்றிருந்த வியாகேசுவுக்கு உள்ளூர லேசாக உதறல் எடுத்தது.
“தில்லையம்பலத்துல இருக்கிற கடுப்புல.. பீட்டர் மகளுக்கு கடினமான வேலை குடுக்காமல் விட்டால் சரிதான்..”
என அவர் தனக்குள் முனக, வஞ்சியோ வாயைப் பிளந்து கொண்டு கோதையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

வஞ்சியே ஜேம்ஸுக்கு முன்னால் நின்று இரண்டு வார்த்தை கூடத் தைரியமாகப் பேச மாட்டான். அவனுக்கு ஜேம்ஸை பார்த்தாலே பதறும். ஆனால் கோதை அவனுக்கு முன்னால் ஒரு பதட்டமும் இல்லாமல் நிற்பதைப் பார்க்க அவனுக்கு கொஞ்சம் பயமாகவும் இருந்தது. பாஸ் எதையாவது தூக்கி உடைத்தால் என்ன செய்வது என அவன் பயந்து நின்றான்.

ஆனால் அவன் பயந்தது போல ஜேம்ஸ் எதையும் போட்டு உடைக்கவில்லை. மாறாகத் தன் தலையை அழுந்தக் கோதி விட்டபடி, கோதையை அழுத்தப் பார்வை ஒன்று பார்த்து விட்டு, ரகுமானைப் பார்த்து மூலையாக இருந்த பெரிய அறையைக் காட்டினான்.

அவன் காட்டிய அறையைப் பார்த்த வியாகேசுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பீட்டர் எதற்காக அந்த அறையைக் காட்டுகிறான். அந்த அறைக்குள் யாருமே போவதில்லையே என யோசனை செய்தவர் ரகுமானைப் பார்க்க, அவனோ கோதையிடம் அந்த அறையைக் காட்டி,
“அந்தா இருக்கே அந்த அறைக்குள்ள ரெண்டு பேர் இருக்கினம்.. இனி ரெண்டு பேரையும் பாத்துக் கொள்ளுற பொறுப்பு உங்களோடது தான்..”
என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

அதைக் கேட்டதும் பதறிப் போன வியாகேசு ஜேம்ஸிடம் ஓடிச் சென்று, அவன் வலக் கையை இறுகப் பற்றிக் கொண்டு,
“பீட்டரு.. நீ என்ன காரியம் செய்யிறாய் எண்டு தெரிஞ்சு தான் செய்யுறியோ.. பாவம் அந்தப் பிள்ளை அது அங்க போய் வேறை ஏதும் விபரீதம் நடந்தால் அதுக்கு ஆரு பொறுப்பு.. இந்த விஷப் பரீட்சை தேவை தானா.. நீ நினைச்சால் உதை எல்லாம் தூக்கிப் போட்டிட்டுப் பேசாமல் இருக்கலாமே.. இல்லாட்டிக்கு வேறை வேலை குடு.. நூறு பேருக்கு சமைக்கச் சொல்லு.. அந்த மாதிரி வேலை குடு.. உது வேண்டாமே..”
என்று கிட்டத்தட்ட மன்றாட, அவனோ தன் இடது கையால் அவரது கையை அழுத்திக் கொடுத்து விட்டு, ரகுமானை ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து போய் விட, வியாகேசோ தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டார்.

ரகுமானோ அந்த அறையின் சாவியைக் கொண்டு வந்து கோதையிடம் கொடுத்து விட்டுப் போக, அந்தச் சாவியின் நுணுக்கமான டிசைனையை உற்று உற்றுப் பார்த்த கோதை, வியாகேசின் பக்கம் போய்
“என்னப்பா.. தலைவலியோ வாங்கோ  இஞ்சி இடிச்சுத் தேத்தண்ணி போட்டுத் தாரன்..”
என்று சொல்லியபடி அவரைப் பிடித்து எழுப்ப, அவரோ பதிலொன்றும் பேசாமல் அவளையே பார்த்திருந்தார்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!