5. காயமின்றி வாழும் காதல்

5
(7)

காயமின்றி வாழும் காதல் – 5

குறிஞ்சியை தூக்கி கொண்டு மூர்த்தி ஓடுவதை கண்ட மேகலா, என்ன நடந்தது என்று புரியாமல் பதறி கத்தி கொண்டு எதிர்வீட்டை நோக்கி ஓடினார். கோகிலாவின் உயிர் அல்லவா அவள் மகள்! என்ன நடந்தது என்று மகனிடம் கூட கேட்க தோன்றவில்லை அவருக்கு. அவர் அளவிற்கு கத்த வில்லை என்றாலும் தம்பியின் அருகில் வந்து அவனை உலுக்கினாள்.

“என்ன டா ஆச்சு வள்ளிக்கு? என்னை பண்ணினே அவளை?”

அக்கா உலுக்கியவுடன் உறைந்து போய் நின்றிருந்தவன், சுயநினைவிற்கு வந்தான்.

“நான் ஒன்னும் பண்ணலை கா, அவ என்னை தள்ளி விட்டா, பதிலுக்கு நான் அவளை தள்ளி விட்டேன், கையில் ரொம்ப அடிபட்டுருச்சு” என்றான் தயக்கமும் திணறலுமாக.

“அடப்பாவி….” என்றவள் அதற்கு மேல் தாமதிக்காமல் வாசலை நோக்கி ஓடினாள். மேகலா சென்று விஷயத்தை சொல்வதற்குள் அக்கம் பக்கம் எல்லாம் கோகிலாவிடம் மூர்த்தி குறிஞ்சியை தூக்கி சென்றதை சொல்லிவிட்டனர். அவர் பதறி வாசலுக்கு வர, மேகலாவும் சரியாக அதே நேரம் அவர் அருகில் செல்ல, அவரை கட்டி கொண்டார் கோகிலா. ஷ்யாமளாவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.

அங்கு இருந்தவர்களிடம் அறிவழகன் வந்தால் ஆஸ்பத்திரிக்கு வர சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு ஆட்டோ வரவழைத்து அவர்கள் வழக்கமாக செல்லும் ஆஸ்பத்திரிக்கு தான் குறிஞ்சியை அழைத்து சென்றிருப்பார் மூர்த்தி என்று அங்கே சென்றார்கள்.

அவர்கள் அங்கே சென்று சேர்ந்த போது, குறிஞ்சிக்கு தையல் போடுகிறார்கள் என்று ஒரு அறைக்கு வெளியே நின்றிருந்தார் மூர்த்தி. அவர் முகத்தில் அவ்வளவு ஆக்ரோஷம். அவரை பார்க்கவே பயமாக இருந்தது மேகலாவிற்கு.

விவரம் கேட்ட கோகிலாவிற்கு விவரம் சொல்லி, அவர்களை ஒரு பக்கம் அமர வைத்தார் மூர்த்தி. கூர்மையான அந்த கருவியின் முனை குறிஞ்சியின் இளங்கையை நன்றாக பதம் பார்த்து இருந்தது. சதையை கிழிந்ததால் தையல் போட வேண்டிய நிலைமை. நல்ல வேளை, நரம்பு, இரத்தநாளங்களை பாதிக்கவில்லை என்று நன்றாக பழகிய அந்த டாக்டரும் மூர்த்தியுடன் சேர்ந்து ஆசுவாசப்பட்டுக் கொண்டார்.

அவர்களை மருத்துவமனையில் இருக்க சொன்னவர், அவருக்கு இருந்த ஆக்ரோஷத்துடன் வீடு சென்றார். அப்பாவின் முகத்தில் தாண்டவம் ஆடிய ரௌத்திரத்தை கண்ட ரவி தான் என்ன சொன்னாலும் இப்போது எடுபடாது என்று உணர்ந்து அமைதியாக இருக்க முடிவு செய்தான். அவனை தரதரவென்று இழுத்து சென்ற மூர்த்தி, வீட்டின் முன்புறம் பக்கவாட்டில் இருந்த தென்னை மரத்தில் கட்டி வைத்து அவனை கம்பால் அடி பின்னி எடுத்தார்.

“ஒரு சின்ன பிள்ளை மேல் உனக்கு என்ன அப்படி ஆத்திரம்? நம்ம வீட்டு பிள்ளைக்கிட்ட உன்னால பொறுமையா போக முடியாதா? நீ தள்ளி விட்ட வேகத்தை பார்த்தேன் நான்! எவ்ளோ ஆத்திரம் உனக்கு? நீ இப்படி திமிர் பண்ணுவியா? ஏதாவது ஏடாகூடமா ஆகி இருந்தா என்னவாகும்? உன் அத்தையை மாமாவை நினைச்சு பார்த்தியா?” என்று சொல்லி சொல்லி அவர் கை வலிக்க வலிக்க அடித்தார் மூர்த்தி.

சத்தம் கேட்டு பக்கத்தில் இருந்து வந்த யாராலும் அவரை நிறுத்த முடியவில்லை. வெளியூருக்கு சென்ற அறிவழகன் அப்போது தான் திரும்பி வந்தார். அவர் வந்து ரவியை மறைத்தார் போல் நின்றார்.

“தள்ளுங்க மச்சான், விஷயம் தெரிஞ்சா நீங்க இவனுக்கு பாவம் பார்க்க மாட்டீங்க!” என்றார் மூர்த்தி கோபமாக.

“என்னவா இருந்தாலும் காலேஜ் படிக்கிற ஒரு பையனை இப்படி செய்றது தப்பு” என்று வேகமாக அவன் கட்டுகளை அவிழ்த்தார் அறிவு.

மூர்த்தி அடித்த அடியில் கால்கள் நடுங்கியது ரவிக்கு. அவன் லேசாக தடுமாற அவருடன் சேர்ந்து அணைத்து பிடித்தார் அறிவு. உள்ளுக்குள் பதறினாலும் வெளியில் காட்டி கொள்ளாமல் இறுகியபடி நின்று கொண்டார் மூர்த்தி. அறிவழகன் ரவியை வாசலில் அமர வைத்தவுடன்,

“அவனை கவனிச்சது போதும், வாங்க முக்கியமான இடத்துக்கு போகணும்” என்று அவரை இழுத்து கொண்டு கிளம்பினார் மூர்த்தி.

“என்ன மச்சான் இது? ரெண்டு வீட்டிலும் ஆளுங்களை காணும்? எங்க எல்லாரும்?” குழப்பமாக கேட்டார் அறிவு.

“வாங்க, எல்லாரும் ஒரு இடத்தில தான் இருக்காங்க போய் பார்ப்போம்” என்று விவரம் சொல்லாமல் அழைத்து சென்றார் மூர்த்தி. போவதற்குள் அவரை பதற வைக்க வேண்டாம், மகள் இப்போது நன்றாக இருப்பதை பார்த்த பின் விவரம் சொல்லுவோம் என்று நினைத்தார்.

ஆஸ்பத்திரிக்கு வந்த அறிவழகன் விவரம் தெரிந்து கொண்டார். மயக்க மருந்து உபயத்தில் ஆழ்ந்து உறங்கும் மகளின் அருகில் அமர்ந்து அவள் தலையை தடவினார். லேசாக கண்கள் கலங்கியது. தவம் இருந்து பெற்ற மகள் அல்லவா? அவர் கண்கள் கலங்குவதை கண்ட கோகிலா தேம்பி அழ, இப்போது தன்னை சுதாரித்து கொண்டார் அறிவு.

அவர்கள் இருவரையும் கண்ட மூர்த்திக்கும் மேகலாவிற்கும் மிகுந்த வருத்தம் வந்தது. தங்கள் வீட்டில் வைத்து இப்படி நடந்து விட்டதே என்ற சங்கடம் வேறு.

“இப்போ எதுக்கு இப்படி அழுறே? இப்படி நீ அழுகிறதுனால, உன்னால…. உங்க அண்ணன் வளர்ந்த பையனை மரத்தில் கட்டி வைச்சு அடி வெளுத்துட்டார்” என்றார் அறிவு கோகிலாவிடம். அவருக்கு புரிந்து விட்டது. ஏதோ நடந்து அதுக்கு ரவி காரணம் என்று தான் மூர்த்தி இப்படி செய்தார் என்று.

பெண்கள் மூவரும் “அய்யயோ!” என்று பதறினர்.

அவர்கள் பதறியதை கண்டுகொள்ளாமல் நின்றார் மூர்த்தி. மகன் மேல் தவறு இருக்க மேகலாவாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அமைதியாக இருந்தார்.

“அண்ணே, ஏன் இப்படி பண்ணுனீங்க? என் மக பண்ற தப்புக்கெல்லாம் எப்போ பார்த்தாலும் தம்பியை அடிக்கிறீங்க!” என்றார் கோகிலா வருத்தமாக.

“என் மருமக மேல் ஒன்னும் தப்பில்லை மா” என்றார் மூர்த்தி வேகமாக.

“என் மருமகன் மேலேயும் தப்பு இருக்காது மச்சான். நம்ம பிள்ளைங்க” என்றார் இப்போது அறிவழகன்.

மாமா தம்பிக்கு ஆதரவாக பேச, “ஆமா பா அவன் வேணும்னு எதுவும் பண்ணலை. ரெண்டு பேரும் தள்ளிக்கிட்டாங்க, இப்படி ஆய்டுச்சு” என்று வேகமாக சொன்னாள் ஷ்யாமளா. தம்பியை மரத்தில் கட்டி வைத்து அடித்தார் அப்பா என்றதும் அவளுக்கு மனம் தாங்கவில்லை.

“இருந்தாலும் சின்ன பிள்ளைக்கு சமமா வா விளையாடுறது? எங்க கொண்டு வந்து விட்ருக்கு அது!” என்று மகனின் மேல் கோபமாகவே இருந்தார் மூர்த்தி. வள்ளியை ரத்தத்தில் பார்த்து ஆடி போய் இருந்தது அவர் உள்ளம்.

வீட்டில் இருந்தவன் சுயபச்சாதாபத்தில் கரைந்தான். அவமானமாக இருந்தது பலர் பார்க்க அடி வாங்கியது. அப்பாவை தவிர மற்றவர்கள் எல்லாம் அவன் பக்கம் இருக்கிறார்கள் என்று தெரியாத ரவி, ஒவ்வொரு முறையும் அவளால் அவன் குற்றவாளி ஆவதை நினைத்து மனதிற்குள் புழுங்கினான். தன் வாழ்வில் சிக்கலை கொண்டு வருவதற்கென்றே பிறந்தவள் அவள் என்று குறிஞ்சியின் மேல் தீராத கோபம் கொண்டான்.

இரண்டு நாட்கள் கழித்து வீடு வந்தாள் குறிஞ்சி.

அவனிடம் யாரும் அதை பற்றி பேசவில்லை. சகஜமாக இருந்தனர். எதையும் பேசி அவனை வருத்தப்பட விட கூடாது என்று நினைத்தனர். தன்னால் தன் அத்தானுக்கு அடி என்றதும் ரவியின் மேல் இன்னும் அன்பு பெருகியது குறிஞ்சிக்கு. தான் அன்று பிடிவாதம் பிடிக்காமல் இருந்து இருக்கலாம் என்று வருந்தினாள் அவள். அவளுக்கு துளி கூட ரவியின் மேல் கோபமே இல்லை. அவள் மேலேயே தான் கோபம் கொண்டாள். எப்போதும் அத்தானுக்கு அவளுக்கு. சண்டை வந்து விடுகிறது என்று வருந்தினாள்.

அந்த சம்பவத்திற்கு பிறகு, அவளை முழுவதுமாக மனதால் தள்ளி நிறுத்தி இருந்தான் ரவி. பேசாமல் இருக்க தான் நினைத்தான். ஆனால் பிரச்சனை என்னவென்று மேகலாவிடம் கேட்டு தெரிந்து கொண்ட மூர்த்தி அதை செயல் படுத்த முடியாதபடி அவன் குறிஞ்சியிடம் பேசித் தான் ஆக வேண்டும் என்று அவனுக்கு கட்டளை இட்டு இருந்தார். அதை மீறி அவருடன் பிரச்சனை செய்யும் துணிச்சல் இல்லை ரவிக்கு. எப்போதாவது தானே அவளை பார்ப்போம் அப்போது ஓரிரு வார்த்தை பேசி வைப்போம் என்று தலையை ஆட்டி விட்டான் ரவி.

அதன் பின் வீடு வருவதையே குறைத்து கொண்டான் ரவி. நண்பர்களுடன் வெளியே சாப்பிட செல்வது, படம் பார்க்க செல்வது என்று பழகியதும் ஒரு காரணம். ஆனால் தன்னால் தான் என்று வருத்தப்பட்டாள் குறிஞ்சி. அப்படி நினைக்க வைத்தான் ரவி. வீடு வரும் போதும் அவள் ஏதாவது கேட்டால் அவள் முகத்தை கூட பார்க்காமல் பதில் சொல்வது. ஒன்றிரண்டு வார்தைகளோடு நிறுத்தி கொள்வது என்று அந்த சின்ன பெண்ணின் மனதை வருந்த செய்தான். அதன் பின் வலிய சென்று அவனிடம் பேசுவதை விட்டு விட்டாள் குறிஞ்சி. குறிஞ்சி அவன் வீட்டில் வளைய வருவது இயல்பு என்பதால் அவளை கண்டுகொள்ளாமல் சாதாரணமாகவே இருப்பான் ரவி. வீட்டில் மூர்த்தி இருந்தால் இருவரும் அவர்களுக்குள் பிரச்சனை இல்லை என்பது போல் ஓரிரு வார்த்தை பேசி காட்டுவார்கள். அது நடிப்பு என்று மூர்த்திக்கு தெரியும். ஆனால் தெரிந்த மாதிரி காட்டிக்கொள்ள மாட்டார். இப்படியாவது அவர்கள் பேசட்டும் என்று நினைத்து கொள்வார்.

கோகிலாவிற்கும் அறிவழகனுக்கும் இது குறித்து பெரிய வருத்தம் தான். ஒன்றாக வளர்ந்த பிள்ளைகள் இப்போது பேசுவதில்லை என்று. ஆனால் இருபது வயது பையன் தங்கள் பெண்ணின் பொருட்டு அடி வாங்கி இருக்க, அவனின் மனநிலையை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

ரவியின் கல்லூரி படிப்பு முடிய, அவனுக்கு உடனே வேலையும் கிடைத்து விட்டது. அவன் படிப்பை முடிக்கும் நேரம் தான் ஷ்யாமளாவிற்கு திருமணத் தேதி குறிக்கப்பட்டு இருந்தது. ஆறு மாதம் முன்பே முடிவு செய்து இருந்தார்கள். குறிஞ்சியும் பள்ளி படிப்பை முடித்து விட்டாள். உள்ளூரிலேயே கல்லூரி சேர்ந்து இருந்தாள். கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்து இருந்தாள்.

திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரம் என்ற நிலைமையில் கல்லூரி விடுதியை காலி செய்துவிட்டு வீட்டிற்கு வந்தான் ரவி. அவன் வந்த நேரம், ஷ்யாமளா குறிஞ்சியுடன் அவள் வீட்டில் இருந்தாள். அவன் வந்தது எப்படி தான் தெரிந்ததோ குறிஞ்சிக்கு,

“மதினி உங்க தம்பி வந்தாச்சு! போய் நலம் விசாரிச்சிட்டு வாங்க!” என்றாள் கேலியாக.

“என்கூட தான் இருக்கே! உனக்கு எப்படி தெரிஞ்சுது?” கேட்டபடி ஆராய்ச்சியாக அவளை நோக்கினாள் ஷ்யாமளா.

“அதெல்லாம் அப்படி தான்! எதிரி கிட்டே நாம சூதானமா இருக்கணும் மதினி! ஷயாமளாவிற்கு சந்தேகம் வந்து விட்டது என்று புரிந்தாலும் சிரித்தபடி சமாளித்தாள் குறிஞ்சி.

“என் தம்பி உனக்கு எதிரியா? நம்புற மாதிரி இல்லையே வள்ளி….”

“உங்க தம்பிக்கு நான் எதிரி! அப்படி வைச்சுக்கலாமா?”

“ஏன் இப்படி சொல்றே வள்ளி? அவன் உன்கிட்ட பேசலைனாலும் உன்னை அப்படி எல்லாம் நினைக்க மாட்டான்!” தம்பிக்கு வக்காலத்து வாங்கினாள் ஷ்யாமளா.

அவன் அவளை பற்றி என்ன நினைக்கிறான் என்பது பற்றி குறிஞ்சிக்கு உறுதி இல்லை ஆனால் அவன் அவளை எதிரியாக மட்டும் நினைத்து விடக் கூடாது என்பது தான் அவளின் விருப்பமும். அவள் அறியாமல் செய்த பல விஷயத்தால் அவனுக்கு தொல்லையாகி போனோம் என்ற வருத்தம் இன்றும் உண்டு குறிஞ்சிக்கு. மனதில் அவனிடம் பலமுறை மன்னிப்பு வேண்டி இருக்கிறாள் ஆனால் ஒரு முறை கூட அவனிடம் கேட்க முடிந்ததில்லை. கொஞ்ச நாட்களாகவே அவள் மனம் ரவியை வேறு விதமாக காண்பதை உணர்கிறாள் குறிஞ்சி. வயது கோளாறா? இல்லை தன் அத்தான் தன்னால் சில முறை காயப்பட்டு விட்டான் என்ற எண்ணத்தில் அவனையே நினைத்து வருந்தியதால் வந்த விளைவா? இது ஏன், எதனால் என்று புரியவில்லை குறிஞ்சிக்கு.

இன்று அவன் வரப்போகிறான் என்பது தெரியும் என்பதால் வாசலில் ஏறியவுடன் இருக்கும் வராண்டாவில் தான் அமர்ந்து இருந்தாள் குறிஞ்சி. அங்கிருந்த ஜன்னல் சாத்தப்பட்டு இருந்தாலும் அவள் கவனம் எல்லாம் ரோட்டில் தான் இருந்தது. அதனால் தான் அவன் வந்தது அவளுக்கு தெரிந்தது. என்றுமில்லாத வகையில் அவன் குரல் அங்கு கேட்டதும், அவள் மனம் இங்கு மத்தளம் கொட்டியது. தொண்டை வரண்டது. அவனை பார்க்க துடித்தாள். அவளின் உணர்வுகளை மறைத்தபடி தான் ஷ்யாமளாவிடம் வம்பு வளர்த்து கொண்டு இருந்தாள் குறிஞ்சி.

“சரி நான் போய் உன் எதிரியை பார்த்துட்டு வரேன்….” என்று கிளம்பி போனாள் ஷ்யாமளா.

அவளுடன் போக துடித்த கால்களை கட்டுப்படுத்தி கொண்டு இவள் வீட்டு வாசலிலேயே நின்று அவனை கண்களில் நிரப்பி கொண்டு இருந்தாள். இவளுக்கு முதுகு காட்டி நின்று கொண்டு இருந்தான் அவன். அவர்கள் வீட்டு வாசலில் நின்று யாரோ ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த ரவி, அவன் அக்கா வர, அவளிடம் பேசினான். ஷ்யாமளா வந்ததும் அவன் பேசிக்கொண்டு இருந்தவர் கிளம்பி விட்டார். ஷ்யாமளா பேசி விட்டு உள்ளே சென்றதும், வேகமாக திரும்பி எதிர்வீட்டை பார்த்தான் ரவி. அவன் திரும்புவான் என்று தெரியாத குறிஞ்சி பதறி படாரென்று நிலைவாசலில் போடப்பட்டு இருந்த ஸ்க்ரீனுக்கு பின் மறைந்தாள்.

அவளின் செயலை ஆச்சரியமாக பார்த்தான் ரவி. என்னடா இது புதுசா ஒளியுறா? நான் வந்து இருக்கேன்னா குதிச்சு குதிச்சு வந்து நான் இருக்க பக்கமே வந்து ஓரக்கண்ணாலே குறுகுறுனு பார்ப்பா? இப்போ என்ன குள்ளி வித்தியாசமா ஏதோ செய்யுறா? கவனிக்கனுமே! என்று நினைத்தான் ரவி.

அவளிடம் பேசாவிட்டாலும் அவளின் நடத்தை அனைத்தும் அவனுக்கு அத்துபடி. என்றும் இல்லாமல் புதிதாக அவள் நடக்கவும் அவனுக்கு தெரிந்து விட்டது. இது நாள் வரை சலனம் இல்லாமல் இருந்த மனது அதனால் குறிஞ்சி இயல்பாக வளைய வந்தாள், அவனை எளிதாக எதிர்கொண்டாள், குறுகுறுப்பாக பார்த்தாள். இனி அவனை எப்படி எதிர்கொள்வாள்?

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!