8. காயமின்றி வாழும் காதல்

5
(7)

காயமின்றி வாழும் காதல் – 8

அன்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு கொஞ்சம் தாமதமாக தான் வந்தாள் குறிஞ்சி.

“என்னடி இன்னைக்கு இவ்ளோ லேட்? போன் பண்ணாலும் எடுக்கலை….” திட்டினார் கோகிலா.

“இப்போவே திட்டி களைச்சு போயிடாதே மா, இன்னைக்கு பெரிய பஞ்சாயத்தே வைக்க போறே அப்பா கிட்ட. அதனால் கொஞ்சம் மிச்சம் வைச்சுக்க” பில்டப் செய்தாள் குறிஞ்சி.

“என்னத்த பண்ணி வைச்சே டி? இதே வேலையா போச்சு உனக்கு! உன் வயசு பிள்ளைங்க யாரும் இப்படி இல்லை டி…. ” அங்கலாய்த்தார் கோகிலா.

“என்ன நடந்தாலும் உன் பொண்ணு தப்பு பண்ண மாட்டேன் நம்பணும் நீ! அதை தான் யார் கேட்டாலும் சொல்லணும் நீ! புரியுதா?”

“என்னை பயமுறுத்தாத வள்ளி. விஷயம் என்னனு சொல்லு! அப்பாவுக்கு போன் போடவா?”

அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே அவர்கள் வீட்டு வாசலில் ஓரே சத்தம். வெளியே எட்டி பார்த்த கோகிலாவிடம் உங்க பொண்ணை அழைச்சிட்டு வாங்க, எங்க வீட்டு பையன் கிட்ட தப்பு தப்பா பேசி இருக்கு என்றார் வந்தவர். இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் இருந்தார்கள். அவர்கள் பையனும் இருந்தான்.

“யாரு நீங்க? எதுவா இருந்தாலும் எங்க வீட்டுக்காரர் வரட்டும். அப்புறம் பேசலாம்” என்றார் கோகிலா வெளியே வந்து. கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும் மகள் தைரியமாக இருக்கிறாள், அவள் மேல் தப்பு இருக்காது என்று நம்பினார்.

“அவருக்கு போன் பண்ணிட்டு தான் வந்து இருக்கோம். வரேன் சொன்னார். வரட்டும் அவர், உங்க பொண்ணோட லட்சணத்தை சொல்றோம் நாங்களும்” என்றனர்.

சத்தம் கேட்டு, அக்கம் பக்கம் அனைவரும் வந்து விட்டனர். எதிர் வீட்டில் இருந்து மேகலா வேகமாக ஓடி வந்தார். இப்போ என்ன பிரச்சனையை கூட்டி இருக்கா தெரியலையே? என்று ஓடி வந்தான் ரவி. அதற்குள் அறிவழகன் வந்து விட்டார். வரும் போதே மூர்த்தியையும் கையோடு அழைத்து வந்து விட்டார். மூர்த்தி இருந்தார் அவருக்கு மனபலம் கூடும்.

“உங்க பொண்ணை வரச்சொல்லுங்க, எங்க பையன் கிட்ட பழகி, ஒரு லட்சம் எடுத்துக்கிட்டு வா, அப்போ தான் உன்னை லவ் பண்ணுவேன் சொல்லி இருக்கு…. அதுவும் இன்னைக்கு வேணும், ராத்திரி வீட்டுக்கு பக்கத்தில வா சொல்லி இருக்கு…. அசிங்கமா இல்லை?” என்று அவளின் மேல் புகார் வாசித்தார்கள்.

வெளியில் வந்திருந்த குறிஞ்சியை முறைத்தார் அறிவழகன். ஏதோ பிளான் பண்ணி தான் செஞ்சு இருக்கா என்று மகளை பற்றி தெரிந்தவர் புரிந்து கொண்டார்.

“எங்ககிட்ட இல்லாத பணமா? எங்க பொண்ணு அப்படி சொல்லி இருக்குன்னா ஏதோ காரணம் இருக்குனு அர்த்தம்” என்றார் மூர்த்தி.

இவர் இப்படி செல்லம் கொஞ்சுறதால தான் இவ எதுக்கும் எந்த பயமும் இல்லாமல் ஆடுறா! மனதினில் குறிஞ்சியை கரித்து கொட்டினான் ரவி.

“என்ன மா இது? இப்போ எதுக்கு இப்படி ஒரு பிரச்சனை. நமக்கு இதெல்லாம் தேவையா?” என்றார் அறிவழகன் மகளிடம்.

மெதுவாக ரவியின் அருகில் சென்றவள், அவன் காதில் ஏதோ சொல்லி விட்டு அவள் அப்பாவிடம் திரும்பி,

“இவன் மோசமான பொறுக்கி பா! ஆனா காலேஜில், பசங்கள்ல இருந்து ப்ரெபஸர் வரை எல்லார்கிட்டயும் நல்ல பேர் வாங்கி வைச்சு இருக்கான். இவனுக்குள்ள இப்படி ஒரு கேவலமான குணம் இருக்கிறது யாருக்குமே தெரியாது. என்கிட்ட போனே இல்லைனு சொல்லிட்டு, ரகசியமா ஒரு போன் வைச்சு இருக்கான். நல்லா பழகி அவங்களை பத்தி தெரிந்து வைச்சுக்கிட்டு, அவங்க வெளில போறப்போ இவனும் அங்கே போய் அவங்களுக்கு தெரியாம போட்டோ எடுக்கிறது, சில சமயம் போன் பண்ணி தப்பா பேசுறது, மெசேஜ் பண்றதுனு இருக்கான் பா….”

“பொய் ! பொய்….” என்றவனின் அருகில் வேகமாக சென்று வலுக்கட்டாயமாக அவன் பையை பறித்து அதில் இருந்த அவன் போனை எடுத்தான் ரவி. தன்னை பற்றிய உண்மையை எல்லாம் இப்படி சொல்லுவாள் குறிஞ்சி என்று கொஞ்சமும் நினைக்கவில்லை அவன். அவனை மிகவும் பிடித்து இருப்பது போலவே தான் இத்தனை நாள் நடந்து கொண்டு இருந்தாள் குறிஞ்சி. ஆனால் அமைதியாக அவனின் ரகசியங்களை கண்டு பிடிக்க நடித்து இருக்கிறாள் என்று இப்போது தெரிந்தது. இன்று கூட இரவில் வருவதால் வந்து அவளுக்கு போன் செய்ய சொன்னாள். அதன் மூலம் அவன் போன் கொண்டு வருவதை உறுதி செய்திருக்கிறாள் என்று உணர்ந்தான் அவன். அவன் பணம் எடுத்ததும் அவனை கண் பார்வையில் வைத்திருந்த அவன் குடும்பம் இன்று அவன் கிளம்பியதும் அவன் பின்னயே வந்து விட்டனர்.

ரவி வந்து பையை வாங்குவான் என்று எதிர்பார்க்காத அவன் வேகமாக அதை பறிக்க பார்த்தான் அவன். விடவில்லை ரவி. அக்கம் பக்கம் இருந்தவர்களும் சேர்ந்து அவனை பிடித்துக் கொள்ள ரவி அவன் போனை ஆராய்ந்தான். பல போல்டர் வைத்து பல பெண்களின் போட்டோ, அது போக பலருக்கு ஆபாச மெசேஜ் செய்தது என்று எல்லாம் இருந்தது. மிகவும் அசிங்கமான எண்ணம் கொண்டவனாக இருந்தான் அவன்.

அப்போது அங்கு வந்தார்கள் குறிஞ்சியுடன் படிக்கும் மாணவிகள் இருவர். அவர்கள் போனில் இருந்த மெசேஜ்களை காட்ட அவன் போனில் ஒத்து பார்க்க, அவர்களுக்கு அனுப்பியது இருந்தது. அந்த பெண்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்களை கண்ட அவன் முகமும் வெளுத்து போனது. அவர்களிடம் மிகவும் நல்லவன் போல் பேசி நண்பனாக பழகுபவன் இவன். இனிமேல் அவர்களுக்கு அனைவர் மேலும் சந்தேகம் வரும். யாரையும் நம்புவது மிக கடினம். ஆனால் இந்த காலத்தில் இப்படி தான் இருக்க வேண்டும் போல், நெருக்கமானவர்கள் தான் நம்மை கவுத்து விடுவார்கள்!

அவன் பையில் இருந்து போனை எடுத்தவுடனேயே அமைதி ஆகிவிட்டார்கள் அவன் வீட்டினர். அவனிடம் போனே இல்லை, மற்ற பிள்ளைகள் போல் இல்லை எங்கள் பிள்ளை என்று மற்றவர்களிடம் பெருமைபட்டவர்கள் அவர்கள்.

ரவி அனைவரிடமும் காட்ட, போலீஸ் போக வேண்டும் என்றார்கள் அனைவரும்.

“இவனை தோல் உரிச்சு காட்டணும்னு தான் நானா வலிய போய் இவன் கிட்ட பேசினேன். ஒரு நாள் இவனை திருநெல்வேலியில் போனோட பார்த்தேன். ஜூஸ் குடிச்சிட்டு இருந்த ஒரு ஆன்ட்டியை பக்கவாட்டில் போய் அவங்களுக்கு தெரியாம அவங்களை அசிங்கமா போட்டோ எடுத்தான். பார்த்த நான் ரொம்ப ஷாக் ஆயிட்டேன். இவனை அவளோ நல்ல பையன்னு நாங்க எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருந்தோம். என் பிரண்ட்ஸ் கிட்ட சொன்னப்போ யாரும் நம்பளை. உன் அமைதி எனக்கு ரொம்ப பிடிக்கும், உன்னை லவ் பண்றேன்னு நான் வைச்ச பொறியில் நல்லா வந்து மாட்டினான். ஆனா என்கிட்டயும் போன் இருக்கிறதை பத்தி சொல்லலை. அப்போ அதில நிறைய தப்பு இருக்கும் போலனு நான் வேற பிளான் போட்டேன். பணம், நகை, பெரிய தொகை எதாவதுனா அவங்க வீட்டில் மாட்டுவன்னு எதிர்பார்த்து தான் போன வாரம் அவன் கிட்ட சொல்லி இருந்தேன். அவன் போனை அவன்கூடவே வைச்சுக்கிறான்னு கண்டுபிடிச்சு வைச்சு இருந்தேன். இப்படி வரும் போது மடக்கணும் தான் அவன் ப்ரண்ட்ஸையும் வர சொன்னேன்” என்றாள்.

யாருடனும் சுற்றாமல், தனியாக எப்போதும் அறைக்குள் படித்து கொண்டோ தூங்கி கொண்டோ இருக்கும் நம் மகன் மிகவும் நல்லவன் என்று நம்பி இருந்த பெற்றோருக்கு பெரிய அதிர்ச்சி. அவனால் அந்த பெண்களின் முகத்தை பார்க்க கூட முடியவில்லை. அனைவர் முன்பும் தன் மறுபக்கம் வெளியாக அவனுக்கு மிகவும் அவமானம், அசிங்கம் ஆகிவிட்டது.

போலீஸ் வேண்டாம் நாங்கள் ஊரை விட்டே போகிறோம் என்று சொன்னதை யாரும் காதில் வாங்கவில்லை. அழைத்து சென்று போலீசில் விட்டு அவர்கள் முடிவு சொல்லட்டும் என்று விட்டார்கள்.

*******

அக்கம் பக்கம் அனைவரும் அவளின் பொதுநலன், நல்ல குணம் என அனைத்தையும் பாராட்டினாலும் குடும்பத்தில் மூர்த்தி தவிர அனைவரும் அவளை திட்டினார்கள். அது அவளின் பாதுகாப்பில் அவர்களுக்கு ஏற்பட்ட பயத்தினால். மூர்த்தி மட்டும் பொறுமையாக,

“இதே இந்த பையன் ஒரு பெரிய கும்பலோடு சம்பந்தபட்டோ இல்லை சைக்கோ வா இருந்தாலோ உன் நிலைமை என்னவாகிறது? யாரையும் ஈசியா எடை போட கூடாது! எதுனாலும் எங்க கிட்ட சொல்லிட்டு செய். நாங்களும் உனக்கு உதவி செய்வோம்” என்றார் மூர்த்தி.

அவர் சொல்லியது உண்மை தானே? இவனின் உண்மை ரூபத்தை கண்டுபிடிக்கிறேன் என்று இவளுக்கு ஏதாவது ஆகி இருந்தால்? “இனிமேல் எதையும் மறைக்க மாட்டேன்….” என்றாள் குறிஞ்சி புரிந்து கொண்டவளாக.

*******

அனைவரும் செல்ல, தனி ஆவர்த்தனமாக ஆரம்பித்தான் ரவி.

“உன்னால பிரச்சனை பண்ணாம இருக்கவே முடியாதா?”

“நான் பிரச்சனையை ஆரம்பிச்சு வைக்கலை, முடிச்சு தான் வைச்சு இருக்கேன்….”

“ஆமா ஆமா நீங்க பெரிய சூப்பர் வுமன்…. எங்க என்ன பிரச்சனை நடந்தாலும் அங்கே போய் குதிச்சு சரி பண்ணனும்!!”

“இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு அத்தான்?”

“நீதான்….நீயும் உன் நடத்தையும் தான்…. இன்னைக்கு நடந்தது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா? கொஞ்சம் பிசகி இருந்தாலும் உன்னால எல்லாருக்கும் கஷ்டம் ஆகி இருக்கும்…. ஆனா நீ ஏதோ சாதிச்சிட்ட மாதிரி சந்தோஷமா இருக்கே….”

மூர்த்தி சொன்னதில் இருந்து இந்த விஷயத்துக்குள் இருந்த இன்னொரு கோணம் புரிய அமைதியாக இருந்தாள். எல்லாம் சரியாக நடந்தற்கு மனதினில் கடவுளுக்கு நன்றி சொல்லி கொண்டாள். அவள் அமைதியாக இருக்கவும்,

“உன் இஷ்டத்திற்கு தானே எல்லாம் செய்வே! அதுக்கு அப்புறம் உன்னால மத்தவங்களுக்கு என்ன கஷ்டம்னு உனக்கு எப்படி தெரியும்? உனக்கு உன் வேலை, எண்ணம் முடிஞ்சா சரி!”

“மனசில ஏதோ வைச்சுக்கிட்டு பேசறீங்க அத்தான்! இப்போ யாருக்கு என்ன கஷ்டம்? இந்த விஷயத்தில நான் நல்லது தான் பண்ணி இருக்கேன்!” அவன் இவளை திட்டி கொண்டே இருக்க கோபமாக பேசினாள் குறிஞ்சியும்.

“இப்படி எல்லாம் நல்லது பண்ணேன்னு நீதான் சொல்லிக்கணும். எனக்கு என்னமோ நீ பிரச்சனை பண்ற ஆளுனு தான் தோணுது! எரிச்சலா இருக்கு!” மனதை மறைக்காமல் சொன்னான் ரவி. அவன் மனதில் இருந்த தீர்மானமும் அவன் இப்படி பேச ஒரு காரணம்!

தன் அத்தான் தன்னை பற்றி அப்படி சொல்லியதில் ஒரு நிமிடம் அமைதியாகி விட்டாள் குறிஞ்சி. அவள் மனதில் இருக்கும் ஆசையை நினைத்தாள். பின் மெதுவாக ரவியிடம்,

“பழசை எல்லாம் மறக்க முடியலை யா?” என்றாள்.

“அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. நீ வளர்ந்தாலும் இன்னும் சின்ன பிள்ளை மாதிரி தேவையில்லாத பேச்சு, வேலை தான் பார்க்கிறே….”

அவனுக்காக யோசித்து, அவன் முகம் பார்த்து நடந்தது எல்லாம் அர்த்தமற்றதாகி விட மனமும் முகமும் சுருங்கியது அவளுக்கு. அவளை கண்டவன்,

“என்ன மூஞ்சியை சுருக்கிறே? நான் உண்மையை தானே சொல்றேன்.”

மறுபடி மறுபடி அவன் அதே போல் பேசவும்,

“உங்களுக்கும் எனக்கு செட் ஆகாது எப்போதும்னு புரியுது எனக்கு!” என்று கிளம்ப போனாள்.

அவன் சொல்ல நினைத்ததை அவள் சொல்லிவிட, அவனுக்கு கோபம் தலைக்கேறியது. அதில்,

“நீயெல்லாம் பொண்ணா? உன்னை மாதிரி பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு நாள் கூட நிம்மதியா இருக்க முடியாது தெரியுமா? நான் தான் எல்லாம்னு நடந்துகிற உன்னால எல்லார் நிம்மதியும் போயிடும்” என்றான் படபடவென்று.

அவள் திருமணம் பற்றி பேசவே இல்லை. சாதரணமாக கருத்து வேறுபாடிற்கு மட்டும் தான் கூறினாள். ஆனால் அவன், அவன் மனதில் இருந்த எண்ணத்தில் திருமணம் வரை பேசி விட்டான். அவன் வார்த்தைகளை ஈட்டியாக அவளை துளைத்து வேதனை படுத்தியது. அவ்வளவு வலி இருந்த போதும் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல்,

“அது என்னை கட்டிக்க போறவன் பிரச்சனை. அதை பத்தி நீங்க கவலைப்படாதீங்க. நீங்க நல்ல குடும்ப குத்துவிளக்கா பார்த்து கல்யாணம் பண்ணிக்கங்க” என்றாள் நக்கலாக.

ஏதாவது அவனை மாற்றும் விதமாக பேசுவாள், அதற்கு என்ன பதில் சொல்லி தப்பிப்பது என்று அவன் யோசிக்க, அவள் வேறு விதமாக அவன் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க ஏமாற்றமாக உணர்ந்தான் ரவி. அவள் மனதில் தான் இருக்கிறோம், தன்னை விரும்புவது பற்றி பேசுவாள் என்று எதிர்பார்த்தது போல் அவனின் உள் மனம். அப்படி இல்லை எனவும், ஏமாற்றம், எரிச்சல் எல்லாம் சேர்ந்து,

“நிச்சயமா, நீ பார்க்க தான் போறே! நான் எப்படிபட்ட பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன் பாரு” என்றான் கர்வமாக.

“சந்தோஷம்!” என்று சொல்லிவிட்டு அவள் கிளம்பி விட, அவனை சூழ்ந்த ஏமாற்றம் மட்டும் குறையவே இல்லை ரவிக்கு.

அதற்கு பின் ஒரு வாரத்தில், அந்த பிரச்சனைக்குரிய பையனை காணவில்லை என்று அவர்கள் வீட்டில் இருந்து வந்து குறிஞ்சியை அசிங்கமாக பேசி திட்டி விட்டு சென்றனர். அறிவழகன் குறிஞ்சியிடம் மிகவும் வருத்தப்பட்டார். நிறைய அறிவுரை கூறினார். “உன் வயசுக்கு நீயா இப்படி முடிவு எடுத்து செஞ்சது ரொம்ப தப்பு” என்று அவர் வருத்தப்பட்டார். அது தெரிந்த ரவி அதை வைத்து அவளை இன்னும் சீண்டினான். அவன் சீண்ட சீண்ட அவனிடம் இன்னும் நிமிர்வாக நடந்து கொண்டாள் குறிஞ்சி. இவள் என்னை விரும்பினாளா இல்லையா? என்று ரவிக்கு சந்தேகம் வரும் அளவு அவனை ஒதுக்கினாள் குறிஞ்சி. இது நாள் வரை அவளை அவன் ஒதுக்கி தான் பழக்கம், இப்போது அவள் செய்ய அவனால் தாளவே முடியவில்லை. அதன் பலன், அவன் இருந்த வரை அவளை மட்டம் தட்டி கொண்டே இருந்தான் ரவி. அவளும் இதுநாள் வரை போல் இல்லாமல் நன்றாக திருப்பி கொடுத்தாள். அதனால் இருவரும் சண்டை சேவல் போல் பார்த்து கொள்ளும் நேரம் மொத்தமும் சிலிர்த்து கொண்டு திரிந்தனர். அதன் பின் ஊருக்கு வரும் போதெல்லாம் வாய் சண்டை தான் இருவருக்கும். அவன் ஜெர்மனி செல்லும் முன் குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்காக ஊருக்கு சென்ற போது கூட இணக்கமாக பேசி கொள்ளவில்லை. ஜெர்மனி சென்றபின் அவளுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை ரவிக்கு.

இது அனைத்தையும் நினைத்து கொண்டே வீட்டை அடைந்தான் ரவி. வீட்டிற்கு வந்த பின், ஏற்கனவே எங்க வீட்டுல தான் கிடப்பா, இப்போ நானும் அக்காவும் இல்லாமல் எங்க அம்மா அப்பா மட்டுமில்லாமல் கடை கூட அவ கன்ட்ராலா? விட மாட்டேன்! “வரேன் இருடி குள்ளி….” என்றான் அதே பழைய எரிச்சலுடன்.

குறிஞ்சியால் தான் ரவி கௌஷிகாவை கவனிக்க ஆரம்பித்தது. மற்றவர்கள் கண்ணிற்கு சுயநலம் பிடித்த பெண்ணாக தெரிந்தவள் இவனுக்கு மட்டும் வேறு விதமாக தெரிந்தற்கு காரணம் அவனையும் அறியாமல் அவன் மனதில் இருக்கும் குறிஞ்சி தான் காரணம். அனைத்தையும் அவளுடன் ஒப்பிட்டு ஒப்பிட்டு அதற்கு மாற்று தேடினான் ரவி. அவளுக்கு மாற்று அவள் மட்டும் தான் என்று அவன் எப்போது உணர்வான்? அவன் உணர்ந்தாலும் அவள் ஏற்று கொள்வாளா?

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!