நடுத்தர குடும்பம் வாழும் அழகான ஓட்டு வீடு… வீட்டின் வாசப்படியில் அமர்ந்திருந்த லலிதா கையில் வைத்திருந்த ஃபோனை தட்டியபடி… “இன்னுமா வராங்க!… நம்ம உயிரை எடுக்கவே இவனுக்கு கண்ணாலம்னு ஒன்னை பண்ணியிருப்பாங்க போல” என்று எரிச்சலாக முனகினாள்…
அவளின் முனகளுக்கு காரணமான இருவரும் காந்தி நகரை தாண்டி வந்து கொண்டிருந்தனர்…
அடுத்த சில நிமிடங்களில் வீட்டின் வாசப்படியில் ஆட்டோ நிற்கவும்… புதுமண தம்பதிகள் இருவரும் ஆட்டோவிலிருந்து இறங்கினர்…
எரிச்சலாக முனகிக்கொண்டிருந்த லலிதாவின் முகத்தில் ஏக்கர் கணக்கில் பொய்யான சிரிப்பு பொங்கி வழிந்தது…
“என்னடா இவ்வளவு நேரமா?… ஒரு ஃபோன் போட்டாவது நேரமாவுன்னு சொல்ல மாட்டியா?” என்று கடிந்து கொண்ட லலிதா… “சரி ரெண்டு பேரும் ஒண்ணா நில்லுங்க” என்றவள் வீட்டிற்குள் ஓடினாள்…
கன்னிமாவுடன் ஒட்டியவாறு நின்றான் ரகுவரன்… கன்னிமாவின் வாழ்க்கையில் வரிசையாக வேதனையை கொடுக்கும் வில்லன் தான் இக்கதையின் ஹீரோ…
கண்ணை சுருக்கி அவனை பார்த்த கன்னிமா பின் முந்தானையை கசக்கியபடி கவலையாக நின்றிருந்தாள்….
பிறந்த வீட்டை விட்டு வந்துவிட்டோம் என்ற கவலை அவளை கொன்றது… திருமணத்திற்கு பின்பு இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்பதை அறியாமல் வீட்டார் சொல்லுக்கு சரிசரியென்று ஆட்டிய கன்னிமாவின் வாழ்க்கை புகுந்த வீட்டில் புயலாக மாறும் என்பதை அவளே அறிந்திருக்க மாட்டாள்…
லலிதா ஆர்த்தி தட்டோடு வெளியில் வந்தாள்… அவளின் பின்னாலேயே அவளின் கணவன் சிவா வந்தான்…
தம்பதிகள் இருவருக்கும் ஆர்த்தி எடுத்து முடித்த லலிதா… “உள்ளப்போடா!… நான் இதை கொட்டிட்டு வந்துடறேன்” என்றுவிட்டு அங்கிருந்து அகன்றாள்…
கன்னிமாவின் கையை பற்றிக்கொண்டு வீட்டிற்குள் வந்தான் ரகுவரன்…
“உக்காரு- டா!… தங்கச்சி நீயும் உக்காருமா லலிதா வந்துடுவா” என்று சிவா சொன்னதும் இருவரும் சேரை இழுத்துப்போட்டு அமர்ந்தனர்…
“கன்னிமா” என்று அழைத்தார் கந்தசாமி… அவளின் மாமனார் ரகுவரனின் தந்தை…
அவரை பார்த்தாள் கன்னிமா… ஆனால் வாயைத்திறந்து பேசவில்லை…
“உங்க வீட்டுலருந்து யாரும் வரலையா” என்று கந்தசாமி கேட்க…
“அப்பா! அவங்க வீட்டுல யாரு இருக்கா வரத்துக்கு?… அவங்க பாட்டியும் வயசானவங்க… அண்ணனுங்க தான் இருக்கானுங்க… அவனுங்களா வரமுடியும்… தெரிஞ்சிட்டே எதுக்குப்பா கேட்குறிங்க” என்று ரகுவரன் கேட்க…
“ரகு!…. என்னதான் ஊட்டுல ஆளுங்க இல்லைன்னாலும் சொத்தத்துல யாரையாவது துணைக்கு விடுவாங்க… நைட்டு சடங்கு இருக்குதுல்ல… அதுக்காண்டி பொண்ணு பக்கத்துல ஒருத்தர் இருந்தா கன்னிமாவுக்கு மனசு லேசா இருக்கும்” என்றார் கந்தசாமி…
“அதல்லாம் ஒன்னும் தேவையில்லை… அவங்கவங்க வேலையை பாக்கட்டும்… இவளுக்கு என்ன பயம்!… ஒருநாள் அவங்க இருப்பாங்க… காலமுட்டும் அவங்க கூடவா வரமுடியும்” என்று பட்டென கேட்டான் ரகுவரன்…
அவனின் குணமே இதுதான்… எதுவாக இருந்தாலும் நொடியில் வார்த்தையை விட்டு விடுவான்… அது சரியா? தவறா? என்று ஒருநொடி கூட அவன் யோசித்தது இல்லை… மனதில் பட்டதை வைத்துக்கொள்ளும் ரகமும் கிடையாது…
‘என்ன இவங்க இப்படி பேசுறாங்க!… நல்லவங்கன்னு பாட்டி சொன்னதெல்லாம் பொய்யா?… கல்யாணம் நடக்கணும்- ன்னு இவரை பத்தி நல்லவிதமா சொல்லிருக்கா?… இல்லை என் கண்ணுக்கு தான் இவர் பேசுற எல்லாமே தப்பாவே தெரியுதா?’ என்று மனதிலேயே யோசிக்க ஆரம்பித்தாள் கன்னிமா…
லலிதா வீட்டிற்குள் வந்தாள்… “என்ன உக்காந்துட்டிங்க?… கன்னிமா பூஜை அறையில விளக்கு பொருத்தனும்… வந்ததும் உக்காந்தா எப்படி?… அவனுக்கு தான் தெரியாது… நீ பொட்டப்புள்ளை தானே?… உங்கம்மா இதை சொல்லிக்கொடுக்கலயா?” என்று துடுக்கென்று கேட்டாள்…
திக்கென்று நிமிர்ந்து அவளை பார்த்தாள் கன்னிமா… சாதாரண விசியம் இதற்கு ஏன் வளர்ப்பு வரை இழுக்கவேண்டும் என்றெண்ணி உள்ளுக்குள் மருகியவள் வெளியில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை…
“லலிதா ஏன் இப்போ அவங்கம்மா வரைக்கும் இழுக்குற!… இல்லாதவங்களை இல்லாதப்ப இழுத்து வச்சி பேசுறது சரியில்லை… இப்போ தானே அந்த புள்ளை வந்துறுக்குது… ஒவ்வொண்ணா சொல்லிக்கொடு பழகிக்கும்… மூணு பசங்களுக்கு மத்தியில வழந்த புள்ளைக்கு நல்லது கெட்டதெல்லாம் நல்லாவே தெரியும்… கண்ணாலம் தான் புது பந்தம்… அடுக்கடுக்கா எல்லாத்தையும் சரிவர பண்ண அந்த புள்ளைக்கு உன் அளவுக்கு வயசும் அனுபவமும் கிடையாது… இன்னொருக்கா இப்படி பேசுற வேலை வச்சிக்காத” என்று அதட்டலாக கூறினார் கந்தசாமி…
‘க்கூம்!… பையனை சொன்னதும் அப்பன் காரனுக்கு பொத்துகிட்டு கோவம் வந்துடும்’ என்று மனதிலே முனகிக்கொண்ட லலிதா கன்னிமாவை பூஜை அறைக்கு அழைத்து வந்தாள்…
அனைத்தும் தயாராக இருந்தது… தீப்பெட்டி உதவியுடன் விளக்கேற்றி கடவுளை வணங்கிக்கொண்டாள் கன்னிமா… கடவுளோ அவளுக்கான சோதனைகளை சொகுதாய் கொடுக்க காத்திருக்க, கன்னிமா அதை வென்று சாதனை புரிவாளா?… காலம் தான் அதற்கு சரியான விடையை விதிர்க்க வேண்டும்…
பாலும் பழமும் கொடுக்கப்பட்டது… கன்னிமா கண்ணியத்தோடு பாலை குடிக்க… ரகுவரனோ மீதிப்பாலை முரட்டுத்தனமாக குடித்தான்…
முகத்தை சுழித்து அவனை அற்பமாக பார்த்தாள் கன்னிமா…
அவளின் பார்வையை கண்டு கொண்ட லலிதா… ‘ம்!… இது சரியான டம்மி தான் போல…. எப்படியோ நம்மளோட வேலைக்கு இவதான் சரியான ஆளு… எப்படியெல்லாம் யூஸ் பண்ணனுமோ யூஸ் பண்ணிட்டு தூக்கி போட்டுற வேண்டியது தான்’ என்று அவளுக்குள் நினைத்துக்கொண்டு அடுத்தடுத்து என்னென்ன செய்ய வேண்டுமென்பதை கணக்கு போட ஆரம்பித்தாள்…
லலிதாவின் லங்கோடி குணம் அறியாமல் அறியாமையோடு அமர்ந்திருந்தாள் கன்னிமா…
சடங்குகள் முடிந்ததும் கந்தசாமியை தேடி அவரின் அறைக்கு வந்த லலிதா… “அப்பா!… எனக்கு நேரமாச்சு ஊட்டுக்கு போறேன்… நைட்டு பிரபா பொண்டாட்டி வந்து பாத்துக்குறன்னு சொன்னா… நாங்க இப்போ கிளம்பினா தான் மதியத்துக்குள்ள ஈரோடு போய் சேர முடியும்” என்றாள் கட்டையான குரலில்…
“சரி லலிதா!… நாளைக்கு ஒரேட்டு வந்து பாத்துட்டு போ” என்றார் கந்தசாமி…
“அப்பா நான் என்ன சும்மாவா இருக்கேன்… இங்க வந்து என்ன பண்ணப்போறேன்… ஒருநாள் லீவ் போட்டா மூவாயிரம் சம்பளம் போவும்… நான் அடுத்த வாரம் வரன்… ஆஸ்பித்திரிக்கு வேற போவனும்… அங்கன போயிட்டு நேரம் இருந்தா வரன்” என்றுவிட்டு கணவனை அழைத்துக்கொண்டு சென்றாள் லலிதா…
இரவானது, ரகுவரனின் சித்தப்பா பையன் பிரபா- வின் மனைவி சத்தியா வந்தாள்… கன்னிமாவை அலங்கரித்து விட்டு கிச்சனுக்கு வந்து பால் காய்ச்சினாள்…
கண்ணிமா அறையின் மூலையில் கன்னிமார் சிலை போல ஒரே திசையில் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்…
சொம்பின் மீது கிளாஸை மூடி எடுத்துக்கொண்டு வந்த சத்தியா கன்னிமாவிடம் அதை கொடுத்து… “வயசை தாண்டி நடந்த கண்ணாலம் கன்னிமா… தள்ளி போடுறன்னு நினைக்காம ஒன்னு சேர்ந்து வாழ ஆரம்பிங்க… மாமனாரும் எங்க வீட்டுல படுத்துக்கராராம்… கதவை அடைச்சிக்கோ!… நான் போயிட்டு வரன்” என்றுவிட்டு கிளம்பினாள்…
கதவை அடைத்துவிட்டு பால் சொம்பை எடுத்துக்கொண்டு அறைக்கு வந்தாள் கன்னிமா…
அவளை கன்னிக்கழிக்க கர்வமாக காத்திருந்தான் ரகுவரன்…
கன்னிமா உள்ளே வந்ததும் கதவை தாளிட்ட ரகுவரன் திரும்பி அவளின் முன்பு கையை நீட்டினான்…
பால் சொம்பை அவனிடம் கொடுத்தாள் கன்னிமா…
பாதி பாலை பரதேசி கணக்காய் குடித்து விட்டு மீதியை மியாவுக்கு கொடுப்பது போல அவளிடம் நீட்டினான் ரகுவரன்…
“இல்லை! எனக்கு வேண்டாம்” என்று கன்னிமா சொன்னதும்… “பரவாயில்லை கொஞ்சமா குடி” என்று அவளிடம் சொம்பை நீட்டியவன் சொம்பில் சத்தியமாக கொஞ்சம் தான் பாலே இருந்தது…
“இல்லை எனக்கு வேண்டாம்!… இப்போ தானே சாப்பிட்டேன் அதுவே ஓக்காலிக்கற மாறி இருக்குது” என்று முடிவாய் மறுத்து விட்டாள்…
மீதி பாலையும் மிச்சம் வைக்காமல் குடித்து முடித்த ரகுவரன் சொம்பை கட்டுழுக்கடியில் வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்தான்…
கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தாள் கன்னிமா…
“கன்னி” என்று ரகசியமான குரலில் அழைத்தான் ரகுவரன்…
“ஆங் சொல்லுங்க” என்று அவனை பார்த்து கேட்ட கன்னிமாவிற்கு கணநேரத்தில் அடிமனதில் பிரளயமே உண்டானது…
“இங்க உக்காரு” என்ற ரகுவரன் கண்ணால் இடத்தை ஜாடைக்காட்டினான்…
அவனின் பக்கத்தில் அமர்ந்தாள் கன்னிமா…
அவளின் கையை பற்றிக்கொண்ட ரகுவரன்… “என்னை பத்தி தெரியுமா” என்று கேட்க…
“இல்லை” என்று தலையை இடவளமாக ஆட்டினாள் கன்னிமா…
“சரி!… நான் என்னை பத்தி முன்ன சொல்லிடரேன்… அப்பறம் உன்னை பத்தி சொல்லு… அதுக்கப்பறம் இன்னைக்கான ராத்திரியை ரண்டு பேரும் ரகசியமா கொண்டாடலாம்” என்று தாபமான குரலில் கூறினான்…
முட்டை கண்ணை முழுவதுமாக விரித்து வியர்வை பூத்த முகத்துடன் அவனை பார்த்தாள் கன்னிமா…
அவளின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்ட ரகுவரன்… “எனக்கு 34 வயசு கன்னிமா… அம்மா இல்லை!… மூணு வருஷத்துக்கு முன்னாடியே உடம்பு முடியாம இறந்துட்டாங்க… கூடப்பிறந்தது அக்கா, லலிதா மட்டும் தான்… என் சின்ன வயசுல ஊட்டுல கஞ்சிக்குடிக்க கூட கஷ்டமா இருந்தது… அப்பா மட்டும் தான் வேலைக்கு போயிட்டு இருந்தாரு… எட்டாப்பு மேல எனக்கு படிப்பு வரலை… அதனால நான் பேக்கரி- க்கு வேலைக்கு போனேன்… ஒருநாளைக்கு 250 ரூவா கொடுத்தாங்க… அப்போ இருந்த சூழ்நிலைக்கு அந்த பணம் ரொம்ப உதவியா இருந்தது… அக்காவும் படிச்சிட்டுருந்தா!… அந்த செலவு இந்த செலவுண்ணு சம்பாரிக்க சம்பாரிக்க பணம் செலவாகிட்டே இருந்துச்சி… கடவுள் புண்ணியத்துல அப்போத்தைக்கு கடன் இல்ல… அக்கா கண்ணாலம் நடந்ததுக்கு அப்பறம் தான் கடன்- ல அவதிப்பட்டோம்… அப்பண்ணு பாத்து நான் ரம்மியில 50000 ஜெவிச்சன் அதை வச்சி அந்த கடனையும் அடைச்சாச்சி… இப்போ எனக்கு பேக்கரியில ஒருநாளைக்கு 700 தாராங்க… காலையில எட்டுக்கு போணன்னா சாயங்காலம் 6 மணிக்கு ஊட்டுக்கு வந்துடுவேன்… இப்போ நம்ம கல்யாண செலவுக்கு வெளிய கந்து வாங்கியிருக்குது… தினம் தினம் 400 கட்டணும்… மீதியை வச்சி உன்னால குடும்பம் நடத்த முடியுமில்ல” என்று அனைத்தையும் கூறி கடைசியில் அவளிடம் கேள்வியாக நிறுத்தினான்…
அனைத்தையும் கேட்டுக்கொண்ட கன்னிமா அவனை நிமிர்ந்து பார்த்து… “வாழ்க்கன்றது இப்படித்தான், இதை இப்படி கொண்டு போவியான்னு கேட்டு ஒண்ணா சேர்ந்து வாழுரது கிடையாது… உங்களோட பிளஸ் மைனஸ் எல்லாமே ஒரு நாள்ல என்னால சட்டுனு கணிக்க முடியாது… கல்யாணம் ஆகிடுச்சி… கடைசி வரைக்கும் இந்த உறவை கட்டிக்காப்பாத்தலாம்” என்றாள் மெலிதாக புன்னகைத்தபடி…
பட்டென அவளை கட்டியணைத்து கொண்டான் ரகுவரன்…
அவனின் அணைப்பில் ரயிலின் அதிவேக தடக்தடக் சத்தத்தை இதயத்தில் உணர்ந்தாள் அவனின் இறைவி…
அவளோடு கட்டிலில் கவிழ்ந்தான் அவளை களவாட துடிக்கும் கடங்காரன்…
கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்ட கன்னிமா கணவனின் நெருக்கத்தில் சற்று மயங்கினாள் என்பது உண்மையே!…
தொடரும்….