“நான் யாருன்னு தெரியாம விளையாடுற. நான் நினைச்சேன் உன்னை உரு தெரியாம அழிச்சிருவேன்.” பயத்தை மறைத்து கொண்டு கடுமையாக எச்சரித்த சூரஜின் குரல் அறையெங்கும் எதிரொலிக்க,
“ம்ம்ம் அப்புறம்” என்று அவன் பொறுமையாக புருவம் உயர்த்த, நிலைகுலைந்தான் சூரஜ்.
“நீ தைரியமானவனா இருந்தா முதல்ல உன் முகத்தை காட்டு டா” மீண்டும் சீறினான் சூராஜ்.
அப்பொழுது காதை மூடிக்கொள்ளும் அளவிற்கு அவனது சிரிப்பொலி எக்காளமாய் எதிரொலிக்க, சூரஜிற்கு தொண்டையில் நீர் வற்றி போனது.
சூரஜின் விழிகளை தன் பார்வையாலே ஆழ துளைத்தவனோ,
“காட்ட நான் தயாரா இருக்கிறேன் பார்க்க உனக்கு தைரியம் இருகாடா” இடியை போல முழங்கியவனின் குரல். சூரஜின் பயத்தை மேலும் அதிகரித்தது.
” கோ.. கோன். ஹே து ??? யா.யார் நீ. என்கிட்ட இருந்து என்ன வேணும்” வார்த்தைகள் தடுமாறியபடி உளறினான் சூரஜ்.
“துமாரா அந்த். உன்னுடைய அழிவு ” விழிகள் சிரித்தபடி நெருப்பை கக்க, நொடி பொழுது தாமதிக்காமல் அவன் தன் முகத்திரையை அகற்ற. நாடி நரம்பெல்லாம் அடங்கிப்போக வார்த்தைகள் இன்றி ” நீ நீ .. ” என்றபடி சூரஜ் தடுமாறினான்.
” நான்… தான். உன் எமன் டா ” பற்களை நறநறத்தபடி. சூரஜின் மார்பில் ஓங்கி மிதித்தான் அந்த மர்ம இளைஞன்.
உள்ளே நடப்பதையும் வெளியே நடந்த துப்பாக்கி தாக்குதலையும் பார்த்தவளின் இதயம் ‘ திடுக் திடுக் ‘ என்று அடித்துக்கொண்டது.
‘ கடவுளே என்ன மனிதர்கள் இவர்கள் ?? எங்கே வந்து எப்படி மாட்டிக்கொண்டோம் ?? ‘ அவளது இருதயம் எகிறிக் குதித்தது.
அவள் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே துப்பாக்கியை சூரஜின் நெற்றிப்பொட்டில் வைத்து அழுத்தினான் அந்த மர்ம இளைஞன் அவ்வளவு தான் ‘ டுமீல் ‘ என்கின்ற சத்தத்துடன் சூரஜின் மண்டையோட்டைத் துளைத்துச் சென்றதுக் குண்டு .
இதைச் சற்றும் எதிர்பார்க்காத மது பயத்தில் ‘ ஆ ‘ என்று சத்தமிட, அவ்வளவு தான் அந்த இளைஞன் மற்றும் அவனுடன் இருந்த அடியாட்கள் அனைவரின் பார்வையும் ஜன்னல் பக்கம் திரும்பியது. மதுமதி மிரண்டு போனாள். போதாக்குறைக்கு இடியும் மின்னலும் மிரட்ட அவளுக்கு இதயம் தாறுமாறாய் துடித்துக்கொண்டிருந்தது.
தன் வாயைக் கைவைத்து மூடியபடி அசையாமல் விதிர் விதிர்த்து போய் நின்றிருந்தாள். அவனோ ரத்தமெனச் சிவக்கச் சூரிய புத்திரன் போல அனலாய் எரிந்து கொண்டிருந்தான்.
ஒரு நொடிப் பொழுதில் ஜன்னல் வழியே வந்த மின்னல் ஒலியில். தெளிவாய் தெரிந்த மதியின் மதி முகத்தை அவன் தன் மனதில் ஆழமாய் பதித்து கொண்டான்.
ஒரு நொடி கூட தாமதிக்காது உடனே அங்கிருந்து கிளம்பவேண்டும் என்று எண்ணியவள் , செயல்படும் முன். கண்கள் மட்டும் தெரிய தன் முகத்தை மூடியபடி அவள் முன்பு நின்றிருந்தான் அந்த மர்ம இளைஞன்.
அவளை ஆக்ரோஷத்துடன் அவன் பார்க்க, உணர்ச்சியற்ற அவன் விழிகளை பார்ப்பதற்குப் படுபயங்கரமாய் இருந்தது. அவனது கூர்மையான பார்வையில் அவளது முதுகுத்தண்டு சில்லிட்டது. அவளுக்குள் ஊடுருவும் அவனது பார்வையைச் சந்திக்கத் தைரியம் இல்லாமல் தடுமாறினாள் மதுமதி.
அவள் கையில் அகப்பட்டிருந்த அலைபேசி அர்ஜுனிடம் இருந்து வந்த அழைப்பால் தன் இருப்பிடத்தைக் காட்டியது. அந்த அதிர்வில் அவளது உடல் மேலும் வெடவெடவென்று நடுங்கியது.
அவன் அவளை நெருங்கினான்.
அவள் உடல் வியர்வையில் குளித்தது.
இதய ஓட்டம் அதிகமாக அவளது கால்கள் அனிச்சையாய் பின்னோக்கி சென்றது.
இப்பொழுது அவனது கனல் பார்வையை இவளது மிரண்ட விழிகள் சந்தித்தது. ரத்த வெறி பிடித்த மிருகத்தின் பார்வை என்று அவள் உள்ளம் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே,
அவன் தன் கையில் இருந்த துப்பாக்கியை உயர்த்த. மூச்சடைத்து போனவள் விழிகளில் மரண பயம் அப்பட்டமாய் தெரிய. அவள் நடுங்கிக்கொண்டிருந்த அந்த நேரம் அவனது துப்பாக்கி மதுவைக் குறிபார்த்த மறுகணம் பயத்தில் மேலும் விரிந்திருந்த அவள் விழிகளில் நீர் வழியத் துவங்கியது.
அடுத்த கணமே ‘ டுமீல் ‘ என்ற சத்தம் கேட்க. உடம்பில் தோட்டா பாய்ந்தது.