காயமின்றி வாழும் காதல் – 9
பெற்றோர்களை வழியனுப்பி விட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான் ரவி. அதே சமயம் சரியாக “ரீச்ட் ஹோம்” என்று கௌஷிகாவிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது. குறிஞ்சியின் நினைவில் கௌஷிகாவை பற்றிய எண்ணங்கள், அவன் திருமணத்தில் இருக்கும் சிக்கல்கள் அனைத்தும் பின்னால் சென்று விட்டது ரவிக்கு. அவளின் மேசேஜை கண்டவனுக்கு கோபமாக வந்தது.
“எல்லா பொண்ணுங்களும் ஒரு விதத்தில் கிறுக்கு தான்!” என்றான் வாய்விட்டு கோபமாக. இந்த கிறுக்கிக்கு பதிலா உன் சொந்தக்கார கிறுக்கியையே அப்போ கல்யாணம் பண்ணிக்கிறியா? அவளும் தான் உன்னை விரும்பினா! உங்க வீட்டில் எல்லாரும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க! மனசாட்சி நக்கலாக சொன்னது. அதற்கு உறுதியாக எந்த பதிலும் சொல்லாமல் அதை அம்போ என்று விட்டான் ரவி.
இப்போதைக்கு கௌஷிகாவிடம் எந்த பேச்சும் வைத்து கொள்ள வேண்டாம், பேசினால் நிச்சயம் பிரச்சனை வெடித்து விடும். ஊருக்கு போயிட்டு வந்து பிறகு பார்த்து கொள்ளலாம் என்று முடிவு செய்தான். அதனால் அவளுக்கு எந்த பதிலும் அனுப்பவில்லை அவன்.
ஒரு வாரம் கழித்து, இரண்டரை வருடம் கழித்து சொந்த ஊர் மண்ணை மிதித்தவனுக்கு அப்படி ஒரு பரவசம், உற்சாகம். பஸ் ஸ்டாண்டிற்கு அழைக்க வந்த அப்பாவிடம் அவன் ஒற்றை பையை கொடுத்து விட்டு, அவரை பின்னால் அமர வைத்து அவன் ஓட்டினான். ஜெர்மனியில் இருந்து அவர்களுக்கு வாங்கி வந்த பொருட்களை அவர்கள் சென்னை வந்த போதே கொடுத்து அனுப்பி விட்டான்.
இன்று காலை தம்பி வருவதால் நேற்று மாலையே வந்துவிட்டாள் ஷ்யாமளா. வீட்டில் வந்து இறங்கியவனுக்கு பலத்த வரவேற்பு. எதிர்வீட்டில் இருந்து அறிவழகனும் கோகிலாவும் கூட வந்து போயினர். கிஷோர் முதலில் கொஞ்சம் வெட்கப்பட்டவன், பின் மாமனுடனே அலைந்தான். யார் யாரோ வந்தார்கள், ஆனால் அவன் எதிர்பார்க்கும் ஆள் வரவில்லை. அவளை ஏன் எதிர்பார்க்கிறான் என்று ரவிக்கே புரியவில்லை. நேரம் ஆக ஆக, ஏமாற்றம் கோபமாக மாறியது. காலையில் ஊருக்கு வந்து இறங்கிய போது இருந்த உற்சாகம் இப்போது எங்கு போனது என்றே தெரியவில்லை! அவளை பார்க்கவா டா நீ ஊருக்கு வந்தே? உன் ஊர், உன் வீடு, உன் சொந்தங்கள் எல்லாம் இருக்கு என்று அவனே அவனுக்கு சொல்லிக் கொண்டாலும், அவன் மனநிலை ஒரு மாதிரி அலைபாய, அவளை பற்றிய எண்ணங்கள் எப்படி என்னை ஆட்டுவிக்கலாம் என்று கடுப்பானவன்,
“அம்மா கோயிலுக்கு போயிட்டு வரேன்….” என்று சொல்லி விட்டு கிளம்பினான்.
“நானே சொல்லணும் நினைச்சேன் டா. சாயந்திரம் சொல்லலாம் இருந்தேன். சரி பத்திரமா போயிட்டு வா” என்றார் மேகலா.
திருச்செந்தூரிலே இருந்தாலும் அடிக்கடி கோயிலுக்கு செல்ல மாட்டான் ரவி. ஆனால் ஷ்யாமளாவும் குறிஞ்சியும் அடிக்கடி போவார்கள். முருகனை தரிசித்து விட்டு, கடலில் கால் நனைத்து, அலையில் சற்று நேரம் விளையாடி விட்டு தான் வருவார்கள். மிகுந்த முருகப்பக்தை குறிஞ்சி. அவள் நினைவின் தாக்கத்தில் அவளுக்கு பிடித்த இடத்திற்கு வந்தானோ ரவி? யாருக்கு தெரியும்? அந்த சுப்ரமணியர் தான் சொல்ல வேண்டும்!
அவன் இறைவனை தரிசிக்க சென்ற நேரத்தில், குறிஞ்சி வெளிப்பிராகத்தில் அமர்ந்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்.
இன்று ரவி வரப்போகிறான் என்று முன்பே தெரியும். ஆனால் இன்று காலையில் இருந்தே மனம் ஒரு மனதாக இல்லை. தவித்து கொண்டு இருந்தது. ஷ்யாமளாவின் திருமணம் முடிந்து அவர்களுக்குள் பிரச்சனை வந்த போதே அவன் மனதில் தான் இல்லை, அவனுக்கு தன்னை திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று தெரிந்தாலும், அவனை தொலைத்து விட்டதாக அவள் நினைக்கவில்லை. மூர்த்தி மேல் இருந்த நம்பிக்கை கூட காரணமாக இருக்கலாம். இல்லை இவளுக்கே ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையாக இருக்கலாம்! ஆனால் அந்த நம்பிக்கை எல்லாம் அவன் காதல் விஷயம் தெரிந்த பிறகு இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.
விஷயம் அறிந்த குறிஞ்சியால் சிறிது நாட்கள் யாரிடமும் இயல்பாக பேசக் கூட முடியவில்லை. நெஞ்சில ஏதோ ஒன்று பிசைந்து கொண்டே இருந்தது. மனம் சோர்ந்தே கிடந்தது. சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை. சதா நெஞ்சை ஒரு பாரம் அழுத்திற்று. அமைதியாக அவனின் நினைவுகளை அசை போட்டபடியே இருக்க விரும்பினாள். ஆனால் அப்படி இருக்க முடியாதபடி பெரியவர்கள் அவளை கவனித்தனர். அவர்களுக்காகவே அவள் நடிக்க வேண்டி இருந்தது. கொடுமையான நாட்கள் அவை. கடவுளே எனக்கு இதில் இருந்து மீட்சி கொடு என்று மனதால் கதறுவாள் குறிஞ்சி. வாய் விட்டு கூட அழ முடியாமல் இருந்தது அவள் நிலைமை. அதில் இருந்து மீண்டு வர மிகவும் சிரமப்பட்டாள் குறிஞ்சி. இப்படியே இருக்க முடியாது என்று உணர்ந்தவள், மீள வழி தேடினாள்.
நிச்சயம் இதில் இருந்து மீண்டே ஆவேன் என்று சொல்லி கொண்டவள், தனக்குள் நிறைய பேசிக் கொண்டாள். உனக்கு அவன் மட்டுமில்லை வாழ்க்கை, உன் வாழ்க்கையில் யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மற்றவர் உன்னை விரும்பினாலும், விரும்பாவிட்டலும் வாழ வேண்டும், சிறப்பாக வாழ வேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டாள். கடும் முயற்சிக்கு பின் ரவி மனதில் அவள் இருந்தாலும் இல்லையென்றாலும் அவளுக்கு பாதிப்பு இல்லை என்று பதிய வைத்து வெற்றிகரமாக அவனை கடந்தாள்.
அவனை கடந்தாளே தவிர அவன் மேல் இருந்த காதலை அவள் கடக்கவில்லை. இன்றளவும் அவன் மேல் மிகுந்த பிரியம் தான். ஆனால் அந்த பிரியத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்ற தெளிவோடு இருந்தாள்! அவன் வாழ்க்கையை அவன் இஷ்டபடி வாழட்டும். அவளுக்கு அவன் வேண்டாம், அவனின் அன்பு வேண்டாம். அவன் இவளிடம் அன்பாகவோ, இசைவாகவோ நடந்து கொள்ள வேண்டாம் என்று நன்றாக தெளிந்து இருந்தாள்.
அவனுக்கும் இவள் அவன் மேல் வைத்திருக்கும் அன்பிற்கும் அவள் எந்த முடிச்சையும் போடவில்லை. அந்த அளவிற்கு சிறப்பாக மீண்டு இருந்தாள். இந்த நிலையை அவள் எளிதாக அடையவில்லை. மிகவும் கடினப்பட்டு, அவளின் மன உறுதியில் மட்டுமே மீண்டு இருந்தாள். மற்ற யாருக்காவும் அவரவர் வாழ்க்கையை யாரும் வீணடிக்க கூடாது, நம்மை நாமே விரும்பி நம் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் சிறப்பாக வாழ வேண்டும்.
அவளை பல விதத்தில் தயார் செய்து வைத்திருந்தாலும், அவனை நேராய் சந்திக்க போகிறோம் என்ற இந்த முதல் நாள் அவளை கொஞ்சம் மிரட்ட தான் செய்தது. நாம் ஒன்றும் மிஷின் இல்லையே,ஒரு முறை பதிய வைத்தால் திரும்பவும் அதே மாதிரி செய்வதற்கு.
காற்றிற்க்கு ஏற்ப கடலில் தடுமாறும் படகு போல் கொஞ்சம் இந்த சூழ்நிலையில் அவள் உள்ளம் கொஞ்சம் தடுமாறியது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நேரப் போகும் இந்த சந்திப்பை, அதுவும் அவன் இன்னொரு பெண்ணை விரும்புகிறான் என்று தெரிந்த பின் அவனை பார்க்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தது அவளுக்கு.
அவளுக்கு நம்பிக்கை இருந்தது, இதையும் தான் கடந்து விடுவோம் என்று. ஆனாலும் அவளின் இஷ்ட தெய்வத்திடம் அதை கடக்க எனக்கு மன உறுதியை கொடு என்று கேட்க தான் காலையிலேயே கோயிலுக்கு வந்து விட்டாள்.
அதே போல் அவளின் நிலை கண்ட கடவுள், வாருங்கள் இருவரும் என் இடத்திலேயே சந்தியுங்கள், உங்கள் சஞ்சலத்தை இங்கே கரைத்து விடுங்கள் என்று அவனையும் அங்கே வரவழைத்து விட்டார்.
கடவுளிடம் என்ன கேட்பது என்று தெரியாமல், ராஜ அலங்காரத்தில் ஜொலித்து கொண்டு இருந்த முருகனை கண் எடுக்காமல் பார்த்தான் ரவி. நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லிய முருகப்பெருமான் அவன் நெஞ்சத்தில் இருந்த சஞ்சலத்தை குறைத்தார். தரிசனம் முடித்து வெளியே வந்தவனின் மனம் எப்படி என்று தெரியாமலேயே அமைதியாக இருந்தது. வியக்கதக்க வகையில் வெளியே வந்தவனின் கண்ணில் பட்டாள் குறிஞ்சி. கோயிலுக்கு வந்து இருக்காளா? அதான் என்னை பார்க்க வரலையா? காரணம் கிடைத்தவுடன் ஏதோ ஒரு தெளிவு கிடைத்தது போல் ஆனான் ரவி.
சட்டென்று எழுந்த ஒரு ஆர்ப்பரிப்புடன் அவளை அழைக்க போனவன் உடனே மனதை மாற்றி கொண்டான். இவ கிட்ட நான் ரொம்ப இளகி பேசிடக்கூடாது, அப்புறம் தலை மேல் ஏறி அவ இஷ்டத்துக்கு பேசுவா! எப்போதும் போல் இருப்போம் என்று நினைத்தவன், எங்கோ பார்வையை நிலைக்க விட்டு அமர்ந்து கொண்டு இருந்தவளின் அருகில் சென்று,
“ஹலோ!” என்றான் கெத்தாக. அவள் அருகில் வரும் வரை அவளை தானே பார்த்து கொண்டு வந்தான். குறிஞ்சி மிகவும் அழகாக இருப்பது போல் தோன்றியது அவனுக்கு. சுடிதார் அணிந்து, அளவான சதை பற்றுடன், மாநிறத்திற்கும் சற்று கூடுதலான நிறத்துடன், தலையில் சிறு மல்லிகை சரம் ஒன்று இருக்க அவனின் மனதிற்கு மிகுந்த இதம் அளித்தாள் குறிஞ்சி. இது தான் நம்ம ஊர் பொண்ணுங்க ஸ்பெஷல். பூ வைச்சாலே ரொம்ப அழகா ஆய்டுறாங்க! என்று பொதுவாக நினைத்து கொண்டான் ரவி. தான் அவளை மட்டுமே இப்படி ரசிக்கிறோம் என்று அவன் உணரும் காலம் வருமா?
யாரோ வந்து ஏதோ கேட்கிறார்கள் என்று வேண்டா வெறுப்பாக திரும்பியவள், அவனை எதிர்பாராமல் அங்கே கண்டவுடன் ஒன்றும் புரியாமல் பதறி எழுந்து நின்று விட்டாள். அவளின் ரியாக்ஷன் அவனுக்கு பரம திருப்தியாக இருந்தது. சிரிப்புடன்,
“இவ்ளோ மரியாதை எல்லாம் வேண்டாம், உட்கார்….” என்று சீண்டினான்.
அவனின் சீண்டலில் சுயம் பெற்றவள், “ஹலோ, யாரு நீங்க? எதுக்கு என்னை கூப்பிட்டீங்க?” என்றாள் திமிராக.
“ஹேய் குள்ளி, என்ன ஆட்டம் ஓவரா இருக்கு? என்கிட்டயே வா?” ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறோமே ஒழுங்கா பேசுவோம்னு இருக்கா உனக்கு?
“ஹான்…. அதையே நானும் சொல்லலாம்ல!” என்றவள்,
“நான் வந்து அத்தான்னு சொன்னா, நீ யார் மா என்னை அத்தான் பொத்தான்னு சொல்றே? உன்னை தெரியாதுனு சொல்லிட்டீங்கனா!!! அதான் நீங்க என்ன லெவல்ல வந்து இருக்கீங்கனு போட்டு பார்த்தேன்!” என்று சொல்லி சிரித்தாள்.
“என்ன தான் உன்னை மாதிரி இங்க நிறைய பேர் இருந்தாலும் எனக்கு எங்க வீட்டு குள்ளியை தெரியாம போயிடுமா? எப்படி அப்படி சொல்லுவேன் நான்?” அங்கே நிறைய குரங்குகள் இருக்க, அவைகளை வைத்து அவளை வம்பு செய்தான் ரவி. அவன் சிரிப்பை அடக்கி கொண்டு பேசுவதை கண்டவள்,
உதட்டை பிதுக்கி, “கிண்டல்! ம்ம்” என்று சொல்லி தலையை மேலும் கீழும் மெதுவாக ஆட்டியவள்,
“எங்க அக்கா நல்ல உயரமா?” என்றாள். அவள் அப்படி கேட்டதும் அவனுக்கு உடனே புரியவில்லை. கௌஷிகா எங்கே இருந்தாள் அவன் நினைவில்?
“யாரு? யார் உங்க அக்கா?”
“உங்க வருங்கால மனைவி தான் என் அக்கா அத்தான்!” கிண்டலாக சொன்னாள் குறிஞ்சி.
“ஓ!” என்றவனுக்கு, என் காதலியை பற்றி இவ்வளவு இயல்பாக கேட்கிறாளே? இவள் மனதில் என் மேல் இருந்த பீலிங் எல்லாம் மாறி விட்டதா? என்று தான் முதலில் தோன்றியது அவனுக்கு. அதோடு அவ்வளவு நேரம் அவளிடம் பேசிக் கொண்டிருந்த போது இருந்த உற்சாகம் சட்டென்று வடிந்து விட்டது.
அவன் அமைதியாக இருக்க, “கேட்க கூடாத கேள்வியா கேட்டுட்டேன்?” என்று வாய் விட்டு சொல்லி யோசிப்பது போல் செய்தாள் குறிஞ்சி.
“ம்ப்ச்….” உச்சு கொட்டிய, “ம்ம்…. ஹைட்டா தான் இருப்பா….” என்று வேண்டாவெறுப்பாய் பதில் சொன்னான் ரவி. அவன் காதலியை பற்றி பேச விரும்பவில்லை அவன் என்று அவனின் செய்கையில் இருந்து உணர்ந்து கொண்டாள். ஆனாலும் அவன் எரிச்சல் அடைவதில் குஷியாகி,
“அப்போ உங்க ஹயிட்க்கு பொருத்தமா இருப்பாங்க!” என்று மீண்டும் அவனை வம்பு இழுத்தாள்.
“ம்ம்…. சாமி கும்பிட்டாச்சு தானே? கிளம்பு வீட்டுக்கு போலாம்” என்று வேறு பேச்சிற்கு தாவினான் ரவி. ஒரு பெண்ணை காதலிக்கிறேன், அவளை தான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று சொன்னவன் தான் அவன்! ஆனால் இன்று குறிஞ்சி கேட்கும் போது அவனுக்கு என்னவோ போல் இருந்தது. என்னடா இது காலையில் இருந்து நான் வேற மாதிரி இருக்கேன்…. வித்தியாசமான பீல் எல்லாம் வருது என்று குழம்பினான்.
“நீங்க போங்க. நான் அலையில் கொஞ்சம் நேரம் நின்னுட்டு வரேன்!” என்றாள். இதற்கு மேல் அவனுக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்தும் பேசி வம்பு இழுத்தால் முதல் நாளே பெரிய சண்டையாகி விடும் இருவருக்கும் என்று விட்டு விட்டாள்.
அவனை தவிர்க்கிறாள் அவள் என்று கோபம் வர, மனதினில், இன்று என்ன ஆனாலும் நீ என்னுடன் தான் வர வேண்டும் என்று பிடிவாதம் கொண்டான் ரவி. அதனால்,
“நான் வெய்ட் பண்றேன். நீ போயிட்டு நின்னுட்டு வா” என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தாளே தவிர வேறு எதுவும் பேசவில்லை குறிஞ்சியும். அமைதியாக சென்று அலையில் கால் நனைத்தாள். தூரத்தில் இருந்து அவளை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தவன், என்ன தோன்றியதோ தானும் எழுந்து அவள் அருகில் சென்றான்.
வேஷ்டியை மடித்து கட்டி கொண்டு, அவள் பக்கத்தில் நின்று தூரத்தை வெறிக்கும் அவனை கண்டவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அவள் மனம் கவர்ந்தவன். எப்படி? ஏன்? எப்போது இருந்து என்று எதுவும் தெரியாது! ஆனால் அவனை விரும்புகிறாள்! இன்று அவள் அருகில் அவன் நிற்க, அவன் தோள் ஆசை வந்தது குறிஞ்சிக்கு. முயன்று மனதை நிலைப்படுத்தினாள்.
மீண்டும் மீண்டும் மனதினில் உரு போட்டாள். என் வாழ்வில் இவன் இல்லை…. அவன் ஒரு பெண்ணை விரும்புகிறான்….. விரும்பி காதலித்து திருமணம் செய்து கொள்ள போகிறான்…. மனம் நிலைபெற, விரக்தியான புன்னகை ஒன்றை வெளியிட்டு கொண்டாள் குறிஞ்சி. அந்த பெண்ணை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் போல் தோன்ற,
“எங்க அக்கா சூப்பரா இருப்பாங்களாமே! அயித்தே சொன்னாங்க! எப்படி கண்டவுன் காதலா?” என்றாள் குறிஞ்சி கொஞ்சம் ஆர்வமாக கேட்பது போல்.
மேகலா சென்னையில் இருந்து வந்து, “பொண்ணு மட்டும் பொம்மை மாதிரி அழகா இருக்கு…. மத்தபடி நமக்கு சுத்தமா சரிப்பட்டு வராத ஆளுங்க. அந்த பளபளப்பு பார்த்து ஏமாந்து போய்ட்டான் என் மவன்….” என்று புலம்பி இருந்தார்.
“நீ ஏன் அவளையே பத்தி கேட்கிறே?”
“ஏன் கேட்க கூடாதா? ஒரு ஆர்வம் தான்! என்ன இருந்தாலும் எங்க அத்தானை லவ் பண்ண வைச்ச பொண்ணு!”
“அதில சொல்ல ஒன்னும் பெரிசா இல்லை. பர்ஸ்ட் பிரண்ட்ஸ் தான், அப்புறம் இப்போ கொஞ்ச நாளா தான் லவ். அதை விடேன்” என்றான் ரவி. ஏனோ குறிஞ்சியிடம் அவனால் அதை பற்றி பேச முடியவில்லை. அவளிடம் சொல்லும் போது அவன் காதலிப்பது தவறு போல் அவனுக்கு தோன்றியது.
“ரொம்ப பண்றீங்க! உங்க லவ் ஸ்டோரியை சொன்னா தான் என்ன?”
“இதையே தான் பேசப் போறியா? உன்கிட்ட பேச வந்தேன் பாரு! நீ என்னைக்கு எனக்கு சரிப்பட்டு வந்து இருக்கே?” அவனின் அவஸ்தை புரியாமல் அவள் கேட்க கடுப்படித்தான் ரவி.
“சரி சொல்லுங்க வேற என்ன பேசணும்? எதை பத்தி பேசணும்?”
இப்படி கேட்டால் என்ன பதில் சொல்வது? பேசாமல் திரும்பி நடந்தான் ரவி.
“நில்லுங்க நில்லுங்க அத்தான்….” வேகமாக நடந்தவன் பின்னால் ஓடினாள் குறிஞ்சி. அவன் புஜத்தை பிடித்து நிறுத்தியவள்,
“நீங்க இல்லாதப்போ என்னைத் தேடி வந்த பிரச்சனை, நான் தேடிப் போன பிரச்சனை அதை பத்தி பேசுவோமா?” என்றாள் கிண்டலாக.
அவளை முறைத்தாலும் நீயே ஒரு பிரச்சனை தான், இதில வேற என்ன பிரச்சனை பத்தி பேச போறே? பேசாம நீ ஏரியா கவுன்சிலர் ஆய்டு! அதான் உனக்கு சரி வரும். புல் டைம் பிரச்சனை, பஞ்சாயத்துனு ஜாலியா இருக்கலாம்.” கடுப்பில் பேசினான் ரவி.
“எப்படி அத்தான்? சூப்பர் போங்க! நானும் இதே ஐடியா தான் வைச்சு இருக்கேன்! நம்ம எதிர்காலம் இங்க தான்னு ஆகி போச்சு! நம்ம ஏரியாவில் மாஸ் காட்டிக்கிட்டு இருக்கிறது தான் என் பிளான். பின்னாடி உங்களுக்கு ஏதாவது வேலை ஆகணும்னா என்னை கேட்கலாம் நீங்க!”
அவள் சொன்ன விதத்தில் சத்தமாக சிரித்தான் ரவி. “பயங்கர பிளான் தான்.”
சிரித்தவனை கண்டு அவள் மனம் நிறைந்தது. கொள்ளை கொண்டான் அவள் மனதை ரவி. மனதிற்குள், யாரை அவன் திருமணம் செய்தாலும் அவனை ரசிப்பேன் நான் என்று சொல்லிக் கொண்டாள்.
அதற்கு பின் அவனுடன் வாதாடாமல் அவள் அத்தானுக்கு பிடித்த மாதிரி பேசினாள் குறிஞ்சி. அப்படியே கிளம்பி அவரவர் வண்டியில் வீட்டிற்கு சென்றனர். அவனுடன் பேசி கொண்டே அவன் வீட்டிற்கே சென்றாள் குறிஞ்சி. கிஷோர்க்கு விளையாட்டு பொருள் வாங்கி இருந்தாள், அதை கொடுக்க வேண்டும் என்று வந்தாள். இருவரும் பேசிக் கொண்டே ஒன்றாக வருவதை கண்ட மேகலாவிற்கு கண்கள் கலங்கியது. அவரின் ஆசை நிராசை ஆகி விட்டதே!
“என்ன அயித்தே…. உங்க எ…. அருமை மகனுக்கு என்ன ஸ்பெஷல் சமையல்?” எருமை என்று சொல்ல வந்து அவள் மாற்றியதை அனைவரும் கண்டுகொண்டாலும் வீண் பிரச்சனை என்று யாரும் அதை தொடரவில்லை. இம்முறை ரவிக்கும் கோபமே இல்லை. குள்ளி…. அடங்க மாட்டா என்று சிரித்து கொண்டான்.
பேச்சும் சிரிப்புமாக அவள் இருந்த வரை நேரம் பறக்க, அப்போது தான் ஊருக்கு வந்த திருப்தியே வந்தது ரவிக்கு. அவள் வரும் வரை அந்நியமாக தெரிந்த அவன் வீடும் இப்போது தான் அவன் வீடு போல் இருந்தது. இப்படி ஒரு இரண்டரை வருட இடைவெளியில் அவனுக்குள் வந்த மாற்றத்தை அவனே எதிர்பார்க்கவில்லை. சென்னையில் அவள் குரல் கேட்டபோது கூட இப்படி எதுவும் இல்லை. அவள் கண்ணில் படாத போது வராத தாக்கம் ஏன் அவளை கண்டவுடன் வந்தது?அவள் அவனிடம் எப்போதும் போல் இருக்க வேண்டும் என்ற அவன் எதிர்பார்ப்பு ஏன்?