10. காயமின்றி வாழும் காதல்

5
(6)

காயமின்றி வாழும் காதல் – 10

அவன் ஊருக்கு வந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. ஒரு வார லீவிற்கு பின் அடுத்த இரு வாரங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் படி ஏற்பாடு செய்து கொண்டு வந்திருந்தான் ரவி. கொஞ்ச நாட்கள் ஊரில் இருக்க ஆசையாக இருந்தது. அதிக நாள் பெற்றோரை விட்டு தூரம் இருந்ததால் அவர்களுடன் இருக்க விரும்பினான்.

முன்பு போல் அதே கிண்டல், கேலி, முறைப்பு எல்லாம் இருந்தது ரவிக்கும் குறிஞ்சிக்கும் இடையில். ஆனால் அதை எல்லாம் மீறி அவள் எவ்வளவு பொறுப்பாக இருக்கிறாள் என்பதை கண்டான் ரவி. மூர்த்திக்கு வலது கை போல் இருந்தாள். மேகலா அனைத்து வீட்டு விஷயத்தையும் அவளிடம் சொன்னார். கோகிலாவிற்கும் மேகலாவிற்கும் பொருட்கள் வாங்கி தருவது, அவர்களுடன் நேரம் செலவளிப்பது, அவர்களை போலவே ஒரு நிமிடம் கூட சும்மா இருக்காமல் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டே இருந்தாள். அவளின் குறும்பு தனம் இந்த வயதிற்கு ஏற்ப மாறி இருந்ததால் அவள் செய்வது ரசிக்கும் படி இருந்தது. ரவிக்கு ஒரே ஆச்சரியம்! இந்த குறில் இவ்ளோ க்யூட் டா எப்போ மாறினா? என்று. ஷ்யாமளாவும் திருமணமாகி சென்று விட, ரவியும் அருகில் இல்லாமல் இருவீட்டு பெரியோருக்கும் அவள் தான் மகள் இப்போது!

ஊருக்கு வரும் முன் அனைத்திலும் அவள் தலையீடா என்று நினைத்து ஆத்திரம் கொண்டவனுக்கு, இப்போது இவள் இல்லை என்றால் தன் பெற்றோர்களுக்கு கஷ்டம் தான் என்று உணர்ந்தான். மேகலாவிற்கு சக்கரை இருந்தது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது எல்லாம் மூர்த்தியை எதிர்பார்க்காமல் குறிஞ்சியே செய்தாள். அன்று மேகலா கூட கோகிலாவிடம் சொல்லி கொண்டு இருந்தார்,

அப்போ உனக்கு குழந்தை பிறக்க லேட் ஆகுதுனு கவலைப்பட்டோம். நேரத்தோட பிறந்து இருந்தா இந்நேரம் அவளையும் ஷ்யாமளா மாதிரி முன்னேயே கட்டி கொடுத்திட்டு சுவத்தை பார்த்து கிட்டு இருந்து இருப்போம்! இப்போ இந்த சின்ன குட்டி நம்மளை எவ்ளோ சந்தோஷமா வைச்சு இருக்கா? என்று நெகிழ்ந்தார். அதை கேட்டவனுக்கு இவள் எனக்கு மூத்தவளாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்து சிரித்தான்.

********

அன்று காலை உணவிற்கு பின், ஹாலில் அமர்ந்து வேலை பார்த்து கொண்டு இருந்தான் ரவி. இடையில் ஒரு முறை ஊருக்கு போய் விட்டு மீண்டும் வந்திருந்தாள் ஷ்யாமளா. மேகலாவும் அவரும் பேசிக் கொண்டு இருந்தார்கள். வேலை செய்து கொண்டு இருந்த ரவியின் கவனம் வள்ளி என்ற பெயரை கேட்டதும் அவர்களை நோக்கி திரும்பியது.

“இன்னைக்கு எங்க வள்ளியை காணும் இவ்ளோ நேரம்? கோகிலாவுக்கு போன் பண்ணு” என்றார் மேகலா.

“நீங்க குளிச்சிட்டு இருக்கப்போ வந்து ஏதோ வேலை இருக்காம், அதனால் மாமாவோட தோப்புக்கு போறேன்னு சொல்லிட்டு போனாள்” என்றாள் ஷ்யாமளா.

“அதானே பார்த்தேன்! வள்ளி வராம இருக்காதே! நியாபகமா சொல்ல மாட்டியா நீ?” மகளை அதட்டினார் மேகலா.

“அடேங்கப்பா! அவ கல்யாணம் ஆகி போய்ட்டா என்ன பண்ணுவீங்க?”

“ம்ம்…. கஷ்டம் தான்! ஆனா இப்போ உன்னை அனுப்பலையா? அது மாதிரி தான்! அப்புறம் பழகிடும். கோகிலா தான் இருக்காளே எனக்கு எப்போதும்!”

“அந்த மாப்பிள்ளை என்ன ஆச்சு மா?”

“முடிஞ்ச மாதிரி தான். சீக்கிரம் நிச்சயம் வைக்க வேண்டியது தான்! மாப்பிள்ளை திருநெல்வேலி அது தான் கொஞ்சம் கஷ்டம். உனக்கு மாதிரி பக்கத்திலேயே அமைஞ்சு இருந்தா நல்லா இருக்கும்!” அதை சொல்லி விட்டு, மீண்டும்

“எனக்கு தான் கொடுத்து வைக்கலை!” என்று வருத்தமாக பெருமூச்சு விட்டார் மேகலா.

“ஆமா, எனக்கும் ரொம்ப கஷ்டமா தான் இருக்கு! ஆனா ரவிக்கு பிடிக்கலைங்கிற அப்போ நாம என்ன பண்ண முடியும்?”

பிடிக்காதா எனக்கு அவளை? யோசித்தான் ரவி. அப்படி சொல்லி விட முடியாது. இப்போது அவளுடன் பேச பிடிக்கிறதே! கௌஷிகாவை விரும்பவில்லை என்றால் வீட்டினர் சொல்வது போல் அவளை திருமணம் செய்து கொள்வாயா? அவனையே கேட்டு கொண்டான். திருமணம் செய்யும் அளவு அவள் மேல் ஆசையோ, பிடித்தமோ வரவில்லையே! இப்போது வளர்ந்து அவள் கொஞ்சம் புரிதலுடன் இருக்கிறாள் அதனால் பழக பிடிக்கிறது. இல்லையேல் என்றும் அவளால் பிரச்சனை தான் வரும் என்று நினைத்தான்.

அதே சமயம், இதே குறிஞ்சியை பற்றி எதுவுமே தெரிந்து இருக்கா விட்டால் அரேஞ் மேரேஜ் போல் என்றால் செய்து கொண்டு இருப்பேன். இப்போது அவளை பற்றி எல்லாம் தெரியும் போது முக்கியமாக அவளின் குறைகள் கண் முன்னே வந்து நிற்கும் போது எப்படி திருமணம் செய்து கொள்வது? என்றும் நினைத்தான் ரவி.

சிந்திக்க ஆரம்பித்த பின் அவன் மனதில் பல எண்ணங்கள் தானே வந்தது. கௌஷிகாவிற்கு மட்டும் குறையே இல்லையா என்ன? அவளை பற்றி எல்லாம் தெரியுமா உனக்கு? மனதின் ஒரம் ஒரு குரல் எள்ளி நகையாடியது. இப்போது அவள் பிரச்சனை செய்யும் போது காதல் என்று கமிட் செய்து விட்டதால் விட்டு கொடுக்கிறாய்! இன்னும் அவளை பற்றி முழுமையாக தெரியும் போது அவள் உன் மனைவியாக இருப்பாள். பின் நீ வேறு வழி இன்றி அவளை அட்ஜெஸ்ட் செய்து கொள்வாய்! என்று தோன்ற தலையை பிடித்து கொண்டான் ரவி.

குறிஞ்சியுடன் சிறு வயதில் இருந்து பழகியதால் அவளின் உள்ளும் புறமும் அவனுக்கு தெரிந்து விட்டது! அதனால் அவளை குறையாக எண்ணி சுலபமாக மறுத்து விட்டான். அவளின் மேல் ஈர்ப்போ, காதலோ அல்லது அவளின் நல்ல குணங்கள் தெரியும் முன் அவர்களுக்குள் பல விஷயம் நடந்து விட மற்றது பின்னுக்கு சென்று விலகல் முன்னுக்கு வந்து விட்டது.

இனி குறிஞ்சி விஷயத்தில் தான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று பெருமூச்சு விட்டபடி வேலையில் கவனத்தை திருப்பினான் ரவி.

********

சென்னையில் இருந்து வந்த பின் ரவி அவளிடம் பேசாததை பெரிய விஷயமாக எடுத்து கொள்ளவில்லை கௌஷிகா. அவன் எப்போதும் அப்படி தான். ஏதாவது கோபம் என்றால் கோபம் சரியாகும் வரை பேச மாட்டான். பின் அவனே வருவான். இவளும் கண்டுகொள்ள மாட்டாள். ஆனால்
இம்முறை இரண்டு வாரங்கள் ஆகி விட அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அதனால் அவனை அழைத்தாள். அவளுக்கு வேண்டுமென்றால் அவள் எப்படி வேண்டுமானாலும் மாறி கொள்வாளே!

“ஹலோ! என்ன ரவி என்னை நியாபகம் இருக்கா?”

உண்மையில் பெரிதாக அவன் அவளை பற்றி நினைக்கவே இல்லை. அதை சொல்லாமல், “அதே கேள்வியை நான் திருப்பி கேட்கவா?” என்றான் இறுக்கமாக.

“என்ன கோபம் ரவி இப்போ உனக்கு? நான் எதுவும் பண்ணாம நீ இப்படி பண்றது நல்லா இல்லை ரவி.”

நீ சொன்ன மாதிரி, நீ எதுவுமே பண்ணலை கௌஷிகா! அதான் இப்போ பிரச்சனையே! நீ இப்படியே இருந்தா நான் தப்பு பண்ணிட்டேன்னு பீல் வந்துரும் எனக்கு” என்றான் ரவி.

என்ன தான் அவள் பெற்றோர் அவளை குழப்பினாலும் அவளுக்கு ரவியை மிகவும் பிடிக்கும். அவன் இதுவரை அவளை எவ்விதத்திலும் சின்னதாக கூட மனம் வருந்த வைத்ததில்லை. அவளை பொறுத்தவரை அவள் மீது எந்த தப்பும் இல்லை. ஆனாலும் அவனை சமாதானம் செய்ய நினைத்தாள்.

“சரி நான் சென்னை வரேன் உன்னை பார்க்க!”

“நான் இப்போ ஊரில் இருக்கேன். போன வாரம் லீவ் எடுத்து இருந்தேன். இன்னும் ரெண்டு வாரம் இங்க தான் இருப்பேன். ஒர்க் பிரம் ஹோம்” என்றான் பட்டும் படாமல்.

“ஹோ! ஓக்கே அப்போ நான் உங்க ஊருக்கு வரேன். நீ சொல்லி சொல்லி எனக்கு உங்க ஊர் சைடு பார்க்கணும் போல் இருக்கு” என்றாள்.

அவளை பற்றி புரிந்தவன் அவளை நம்பவில்லை. “ஓக்கே வா” என்றான் சாதாரணமாக.

“இன்னைக்கே கிளம்புறேன். எப்படி வரணும்?”

“ஹேய் ஆர் யூ ஷ்யூர்? லாங் ட்ராவல்! பராவயில்லையா? நிஜமா வர்றியா? என்றான் ரவி ஆச்சர்யமாக.

“உனக்காக!” என்றாள் அவள்.

“ஓக்கே, நான் டிக்கெட்ஸ் பார்க்கிறேன். புனே டு திருவனந்தபுரம் பிளைட்ல வந்திட்டு அங்க இருந்து இங்க கார்ல வந்துடு. எல்லாம் அரேஞ்மெண்ட்ஸ் நான் பண்றேன்” என்றான். அவனுக்காக அவள் இவ்வளவு தூரம் வருகிறேன் என்றதும் அவன் மனம் கொஞ்சம் ஆறுதலாக உணர்ந்தது.

அடுத்த அரைமணியில் மீண்டும் அழைத்தாள் கௌஷிகா. ரவி டிக்கெட் போடுகிறான் என்றதும் ராதிகாவும் வருகிறேன் என்றார். அவருக்கு திருச்செந்தூர், திருநெல்வேலி எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. ராதிகா கிளம்பவும் ஸ்ரீராம் தானும் வருவதாக சொன்னார்.

“அம்மாவும் அப்பாவும் வரேன் சொல்றாங்க ரவி, உங்க வீட்டுக்கு வந்து உன் பேரண்ட்ஸ் கிட்ட பேசி பழகினா நல்லது தானே?” என்றாள் கௌஷிகா.

ஏற்கனவே அவர்கள் நடந்து கொண்ட விதத்தில் மிகுந்த அதிருப்தி அடைந்து இருந்த மூர்த்தி திருமணத்தை பற்றி பேசவே இல்லை! மேகலா நேரடியாகவே மகனிடம் தனக்கு கௌஷிகாவின் குடும்பத்தை சிறிதும் பிடிக்கவில்லை என்று கூறி விட்டார். இந்நிலையில் அவர்கள் இவன் வீட்டிற்கு வந்து ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்றால் இந்த திருமணம் நின்று போனாலும் போய் விடும் என்று பயந்தான் ரவி. அதனால் கௌஷிகாவிடம்,

“எங்க அப்பா கிட்ட கேட்டு சொல்றேன்” என்றான்.

“என்ன ரவி, இப்படி சொல்றே? நாங்க உங்க வீட்டுக்கு வர்றதுக்கு நீ முடிவு எடுக்க முடியாதா? உங்க அப்பா பெர்மிஷன் கொடுக்கணுமா?” என்றாள் ஒரு மாதிரியாக.

“நாம லவ் பண்றோம், கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறோம்! அப்படி இருக்கும் போது, என்னோட பேரண்ட்ஸை கண்டிப்பா பார்க்க வரணும்னு உன்னால உங்க அப்பா அம்மா கிட்ட சொல்ல முடிஞ்சுதா….? அவங்களோட எண்ணம் என்னனு கேட்டே தானே?” அவள் பதில் சொல்ல முடியாதபடி கேள்வி கேட்டான் ரவி.

“இப்போ அவங்களே வரேன் சொல்லும் போது நீ இப்படி பெர்மிஷன் வாங்கணும் சொல்றே?” அவன் கேட்டதை விட்டு விட்டு வேறு விதமாக பேசினாள் கௌஷிகா.

அன்று சென்னைக்கு வர விருப்பம் இல்லாதவர்கள் இன்று இவ்வளவு தூரம் ஏன் வருகிறேன் என்று சொல்கிறார்கள்? காரணம் என்னவாக இருக்கும்? பலமாக யோசித்தான் ரவி. அதை சுலபமாக விட்டு விட முடியவில்லை அவனால்.

“இப்போ மட்டும் ட்ராவல் பண்ண உங்க அம்மா அப்பாவுக்கு ஓக்கே வா?” கொஞ்சம் நக்கலாகவே கேட்டான் ரவி.

“நீ இப்படி கிண்டலா கேள்வியா கேட்கிறது பார்த்தா உனக்கே இஷ்டம் இல்லை போல்” அலுத்து கொண்டாள் கௌஷிகா.

“நான் ஜஸ்ட் கேட்டேன் மா! அவ்ளோ தான்.”

“உங்க வீடு, ஊர் எல்லாம் பார்க்கலாம் தான் வராங்க. நமக்காக தான், நம்ம கல்யாணத்துக்கு தான்!” முதலில் உளறினாலும் சமாளித்தாள் கௌஷிகா.

ஓ! சௌத் இந்தியா டூர் பண்ண வராங்க! அதான் விஷயமா? ரவிக்கு புரிந்து விட்டது.

“ஓக்கே ஓக்கே! எங்க அப்பா கிட்ட பேசிட்டு தான் சொல்ல முடியும்” என்று பிடி கொடுக்காமல் பேசி வைத்தான் ரவி.

*********

அன்று மதிய உணவிற்கு மூர்த்தி வந்த பின், மேகலாவும் இருக்கும் பொழுது ரவி கௌஷிகா சொன்னதை கேட்டான்.

மேகலா, அவர்கள் வர வேண்டாம் என்று சொல்ல துடித்தார். எதையும் யோசிக்காமல் பேசுகிறாய் என்று மூர்த்தி திட்டுவார் என்பதால் அமைதி காத்தார். மூர்த்தி என்ன சொல்ல போகிறார் என்று அவரையே பார்த்தார்கள் இருவரும்.

“என்ன ரெண்டு பேரும் என்னையே பார்க்கிறீங்க? நான் சொல்றதை மட்டும் கேட்கிற மாதிரி என்ன நடிப்பு?” என்று மகனையும் மனைவியையும் வம்பு இழுத்தார் அவர்.

“எங்களுக்கு பிடிச்ச மாதிரி பேசினா கேட்போம்!” சொல்லி விட்டு சிரித்தார் மேகலா.

“அப்படினா நீ கோகிலா கிட்ட மட்டும் தான் பேசணும்! அந்த பிள்ளையை தான் சின்ன வயசுல இருந்து உனக்கு ஆமாம் போட பழக்கி வைச்சு இருக்க!” சிரிக்காமல் மேகலாவை பங்கம் செய்தார் மூர்த்தி.

“எதுக்கு இப்போ என்னை இழுக்கிறீங்க?” மேகலா சீற,

எங்கே அப்பா அம்மாவும் சண்டையில் இறங்கி விடுவார்களோ என்று பயந்த ரவி, “முதல்ல எனக்கு பதில் சொல்லிட்டு அப்புறம் ரெண்டு நீங்க ரெண்டு பேரும் நீயா நானானு சண்டை போடுங்க” என்றான்.

“இதெல்லாம் சண்டை இல்லை டா மவனே! இதை புரிஞ்சுக்க நீ இன்னும் கொஞ்சம் வளரணும்” என்ற மூர்த்தி,

“நீ என்ன நினைக்கிறே சொல்லு? இது சரியா வருமா?” என்று கேட்டார். மூர்த்தி மகனை கேட்டதும், மேகலா

“ரவி, நீ என்னை எப்படி வேணா நினைச்சுக்க, அந்த பொம்பிளைக்கு எல்லாம் என்னால் சமைச்சு போட முடியாது. எனக்கு பிடிக்கலை. அப்பா முன்னாடி கால் மேல் கால் போட்டு உட்காருது!” என்றார் முகத்தை தூக்கி வைத்து கொண்டு.

“ஏய் பிள்ளை, யாரோ ஒருத்தரை நமக்கான மரியாதையை தீர்மானிக்க விடலாமா? ஒவ்வொருத்தரோட நடத்தையும் அவங்க அறிவுக்கு தகுந்த மாதிரி தான் இருக்கும்! இப்போ ஒருத்தங்க பொது இடத்தில் சரியா நடந்துக்கலைனா அவங்களை தானே குறை சொல்வாங்க எல்லாரும்? அவங்க நடத்தை சரியில்லைனு தானே சொல்வாங்க. என் மரியாதை என்கிட்ட தான் இருக்கு! அதனால் நீ தப்பு தப்பா யோசிக்காதே!” என்றார் மூர்த்தி.

எவ்வளவு அழகாக சொல்லி விட்டார் என்று, “வாவ்! அப்பா சூப்பரா சொன்னீங்க பா! செம பா!” சிலாகித்தான் ரவி. மேகலாவிற்கும் புரிந்தது. மரியாதை இல்லாமல் நடந்து கொண்ட ராதிகாவிற்கு தான் மரியாதை குறைவு. அடுத்தவரை மட்டமாக நடத்துவதாக எண்ணி அவர் தன்னை தானே அசிங்கப்படுத்தி கொண்டார்.

“நீ சொல்லு ரவி, அவங்க வரணுமா வேண்டாமா?” விஷயத்திற்கு வந்தார் மூர்த்தி.

“கௌஷிகா மட்டும் வந்தா போதும் பா!” என்றான் ரவி. அவனுக்கு ஸ்ரீராமை சுத்தமாக பிடிக்கவில்லை.

“அது சரியில்லை ரவி. பொண்ணு வாய் விட்டு கேட்டு நீ வேற மாதிரி சொன்னா நல்லா இருக்காது. அதோட என்ன தான் காலம் மாறி இருந்தாலும் அந்த பொண்ணு மட்டும் இங்கே வந்து தங்கினா சுத்தி இருக்கவங்களுக்கு நாம பதில் சொல்ல முடியாது. அதனால் வந்தா குடும்பமா வரட்டும். இப்போ வேண்டாம், அடுத்த வாரம் பார்க்கலாம்” என்றார் மூர்த்தி.

முதல் முறை ஆசையாக மருமகள் என்று சொன்னவர் இன்று பொண்ணு என்று மாற்றி சொல்வதை உணர்ந்தார் மேகலா. அவர்கள் பிடி கொடுக்காமல் பேசிய விதத்தில் அவர் பயப்படுகிறார் என்று புரிந்தது மேகலாவிற்கு.

“இப்போ ஏதோ லீவ்வாம் அவங்களுக்கு, அதான் இந்த வாரமே….” அவன் சொல்லி முடிக்கும் முன்,

“இல்லை பா முடியாது. நாளைக்கு வள்ளியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க. அதுக்கு அப்புறம் என்ன முடிவாக போகுது பார்க்கணும்! ஏதும் வீட்டோட நிச்சயம் மாதிரி செய்ய சொல்றாங்களா தெரியலை” என்றார்.

அதிர்ச்சியாக “அப்படியா?” என்றான் ரவி.

“எதுக்கு உனக்கு இவ்ளோ அதிர்ச்சி பா?” என்றார் மூர்த்தி.

“ஒரு வாரமா வீட்டில் தான் இருக்கேன்! என்கிட்ட யாருமே சொல்லலை. இதுக்கு தான் அக்கா ஊருக்கு போயிட்டு திரும்ப வந்துச்சா?” ஏமாற்றமாக சொன்னான் ரவி.

“வேணும்னு சொல்லாம இருக்கலை டா. வள்ளியே நேத்து தான் சம்மதம் சொன்னா. அதுக்கு அப்புறம் ஒரே நாளில் பேசி அவங்களை வரச் சொல்லி இருக்கு. அதான் உன்கிட்ட சொல்லலை” என்றார் மேகலா.

மகனை பார்த்தபடி அமைதியாக இருந்தார் மூர்த்தி.

குறிஞ்சியை பார்க்க மாப்பிள்ளை வர போகிறார், குறிஞ்சிக்கு திருமணம்! அப்படியா? என்று சாதாரணமாக கேட்டு கொண்டு அந்த வார்த்தைகளை கடக்க முடியவில்லை ரவியால். அதிலேயே மனம் உழன்றது. அதற்கு காரணமும் தெரியவில்லை அவனுக்கு!

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!