காயமின்றி வாழும் காதல் – 11
“ஏங்க, அவங்க வந்தா யாரு என்னனு அக்கம் பக்கத்தில் கேட்க மாட்டாங்களா? நீங்க குடும்பமா வர சொல்லுனு சுளுவா சொல்றீங்க!”
“எல்லாரும் கேட்பாங்க தான், கண்டிப்பா கேட்பாங்க. அவங்க வர்ற நேரத்தில் நாம சின்ன நிச்சயம் கூட வைச்சுக்கலாம். எனக்கும் ஆசை தான். ஆனா அவங்க நம்ம வீட்டை, நிலைமையை பார்க்க வர்றாங்க. வந்து பார்த்திட்டு போய் தான் முடிவு சொல்வாங்க” என்றார் கிண்டலாக.
ரவி அமைதியாகவே இருக்க, “என்ன பா நான் தப்பா சொல்லிட்டேனா?” என்று கேட்டார் மகனிடம். அவன் கவனம் எங்கே இங்கே இருந்தது? உணர்வே இல்லாதவன் போல் ஆகி இருந்தான்.
“என்ன பா, என்ன சொன்னீங்க?” மீண்டும் கேட்டவனை ஆழ்ந்து பார்த்தபடி மறுபடியும் அவர் சொல்ல,
“அப்படி எல்லாம் ஒன்னுமில்லை பா. கௌஷிகா அப்படி எல்லாம் இல்லை பா.” என்றான் மெதுவாக.
“அந்த பிள்ளை அப்படி இல்லை…. சரி! ஆனா பெத்தவங்க என்ன சொல்றாங்களோ அதை தான் கேப்பாக போலவே?”
அமைதியாக தலையை குனிந்து கொண்டான் ரவி.
அவன் அப்படி செய்யவும் “அதில் ஒன்னும் தப்பில்லை மவனே. அவுங்க அப்பா அம்மா பேச்சே கேட்கட்டும். பெத்தவங்களுக்கு இல்லாத உரிமையா?” என்றார்.
“ஹான்…. என் பிள்ளையை காதலிக்கிறதுக்கு தானா முடிவு எடுத்த பிள்ளைக்கு மத்ததும் தான் தெரியணும்!” படப்படத்தார் மேகலா.
“இந்த பேச்சை விடு” என்று மனைவியிடம் சொன்னவர், மகனிடம் திரும்பி,
“நாளைக்கு சொல்றேன்னு சொல்லிடு பா. இங்க என்ன முடிவு ஆகுதுனு தெரிஞ்சுகிட்டு அதுக்கு ஏத்த மாதிரி பார்ப்போம். ஏன் சொல்றேனா? என் மருமகளுக்கு விசேஷம்னா, நானும் அம்மாவும் அங்க தான் இருப்போம். வர்ற விருந்தாளியை கவனிக்க முடியாது! அதனால் தான் சொல்றேன். வேற ஒன்னும் விஷயம் இல்லை பா” என்று விளக்கினார் மகனிடம்.
“எனக்கு புரியுது பா. நீங்க இவ்ளோ சொல்லணுமா? நான் உங்களை தப்பா நினைப்பேனா பா?” மனத்தாங்கலுடன் கேட்டான் ரவி.
“சில நேரம் நான் பாரபட்சம் பார்க்கிறேன்னு உனக்கு தோணிட்டா? அதான் சொல்லிடுறேன் தெளிவா” என்றவர்,
“என் மருமக விஷயம்னாவே உனக்கு பிடிக்காது வேற” என்று அவனை வம்பு செய்தார்.
“ஆமா! அது உண்மை தான். எங்களை விட அவ தான் உங்களுக்கு உசத்தி” என்று கோபமாக சொல்வது போல் சொல்லிவிட்டு சென்றான் ரவி. சற்றுநேரத்தில் மொட்டை மாடியில் தெரிந்த தம்பியை எதிர் வீட்டில் இருந்து வீடு திரும்பி கொண்டு இருந்த ஷ்யாமளா ஒன்றும் புரியாமல் பார்த்தாள்.
இவ்ளோ வெயில்ல இவன் மொட்டை மாடியில் என்ன பண்றான்? முணுமுணுத்தபடி வீட்டிற்குள் சென்றவள்,
“என்ன மா ஆச்சு இவனுக்கு? இப்போ போய் மொட்டை மாடியில் நிற்கிறான்?” என்றாள்.
நடந்ததை சொன்னார் மேகலா. அவர் சொல்லியவுடன் அவர்கள் இருவருமே அவன் காதலையும் கல்யாணத்தையும் நினைத்து தான் வருந்துகிறான் என்று நினைத்து கொண்டார்கள்.
“அதிசயமா ஒரு பொண்ணை தேடி கண்டுபிடிச்சு இருக்கான் உன் எருமை பிள்ளை! இப்போவே இப்படி! எனக்கு பயமா இருக்குமா…. அவன் கல்யாணத்துக்கு அப்புறம் அவன் நிலைமை என்ன ஆகுமோ?”
“சும்மா இருடி! அந்த பொண்ணு நல்ல குணமா இருக்கட்டும்! என் பிள்ளை வாழ்க்கையை நினைச்சா எனக்கு கவலையா இருக்கு” என்று கண் கலங்கினார் மேகலா.
“சரி சரி நல்லதாவே நினைப்போம்! நான் போய் அவனை அழைச்சிட்டு வரேன்.”
“இதை பத்தி ஒன்னும் பேசாதே!”
“சரி மா” என்று தம்பியை தேடி போனாள். வெயில் என்பதால் முதல் மாடிக்கு இறங்கி வந்திருந்தான். அங்கிருந்த கதவில் சாய்ந்து அமர்ந்து இருந்தான். முதல் மாடியில் பெரிய ஹால், பாத்ரூம் வைத்து இரண்டு அறை மட்டுமே. அதற்கு வீட்டிற்குள்ளும் படி உண்டு. மொட்டை மாடிக்கு வெளியே இருந்து தான் செல்ல முடியும்.
அக்காவை கண்டவன் கேள்வியாய் அவளை நோக்கினான்.
“இங்க என்னடா பண்றே?”
“சும்மா தான்! ஆமா, நீ அந்த குள்ளிக்காக தான் ஊருக்கு போயிட்டு திரும்பி வந்தியா? நான் கூட எனக்காக தான்னு தப்பா நினைச்சுட்டேன்” என்றான் கடுப்பாக.
“டேய் எருமை! உனக்காக தான் டா! இது நேத்து தான் முடிவாச்சு. குறிஞ்சி இழுத்துகிட்டே இருந்தா, நேத்து தான் ஒத்துக்கிட்டா.”
“ஓ!”
“பையன் யாரு? நமக்கு தெரியுமா? என்ன பண்றான்?”
“நமக்கு தெரிஞ்சவங்க இல்லை. திருநெல்வேலி. மருந்து கடை வைச்சு இருக்காங்க. ஒரே பையன். அவங்களா தான் யார் மூலமாகவோ பொண்ணு கேட்டு வந்தாங்க. அப்பாவும் மாமாவும் நல்லா விசாரிச்சு அப்புறம் தான் குறிஞ்சிகிட்டே பேசினாங்க.”
*******
மறுநாள் மாலை,
அப்போது தான் ஒரு மீட்டிங் முடிந்து இருந்தது. போனை நோண்டி கொண்டு இருந்தான் ரவி. வேகமாக வந்தார் மூர்த்தி. “ரவி நீ நம்ம காரை எடுத்திட்டு போய் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை அழைச்சிட்டு வந்துடு.”
“அப்பா அதெல்லாம் என்னால் முடியாது பா! நான் வேலையில் இருக்கேன் பா.”
“முழுசா கேளு டா. அவங்க வந்த கார் பஞ்சர் ஆகி நிக்குதாம். இருபது நிமிஷ தூரத்தில் தான் இருக்காங்க. நமக்கு வண்டி ஒட்டுறவர் ஊருக்கு போயிட்டார். இப்போ வேற ஆள் தேட எல்லாம் நேரம் இல்லை. நான் ஆள் அனுப்புறேன் சொல்லிட்டேன்” பதட்டப்பட்டார் மூர்த்தி.
மெதுவாக அவன் அசைய, “இப்போ நீ வேகமா போறியா இல்லை நான் போகவா? இங்க அறிவு கூட நிற்கணுமே பார்க்கிறேன் இல்லை நானே கிளம்பி இருப்பேன்” என்றார்.
“கிளம்புறேன் பா!” பல்லை கடித்து சொல்லிக் கொண்டே கிளம்பினான் ரவி.
*********
மிகுந்த கடுப்பில் வண்டி ஒட்டி கொண்டிருந்தான் ரவி. அவனே ஒரு மார்க்கமாக இருந்தான் விஷயம் கேள்விப்பட்டதில் இருந்து. அவனை போய் மாப்பிள்ளையை அழைத்து வா என்றால் எப்படி இருக்கும்?
அவனால் அவனின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியவில்லை. விஷயம் தெரிந்ததில் இருந்து அவன் மனம் சற்று சோர்வாக இருப்பது போலவே இருந்தது. நான் ஏன் இப்படி அழுது வடியுற மாதிரி இருக்கேன்? அவளுக்கு கல்யாணம் ஆகணும் தானே? என்ன டா இது சோதனை? அவளை நினைச்சு கவலைப்படுறேனா? அக்கறையா? என்ன இது? குழம்பி போனான் ரவி.
மாப்பிள்ளை வீட்டுகாரர்கள் நிற்கும் இடத்திற்கு வந்தவன், அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு அவர்களை அழைத்து கொண்டு கிளம்பினான்.
மாப்பிள்ளை என்று அறிமுகப்படுத்தப்பட்ட குமரப்பன் ஆள் பார்க்க நன்றாகத்தான் இருந்தான். நன்றாக பேசினான். ஆனாலும் ரவிக்கு பிடிக்கவில்லை. என்னவோ மிஸ் ஆகுது இவன்கிட்ட என்று நினைத்து கொண்டான் ரவி. அவனை விட அவன் பெற்றோர்களை மிகவும் பிடித்தது ரவிக்கு. அப்பாவிகளாக இருந்தார்கள். கார் பஞ்சர் ஆகியதை சகுணத்தடை என்று பேசாமல் சாதாரணமாக எடுத்து கொண்டு இருந்தனர். குமாரும் ரவியும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை அந்த இருபது நிமிட பயணத்தில். அவன் அப்பா ரவியிடம் ஏதாவது கேட்டு கொண்டே இருக்க, குமார் அமைதியாகவே வந்தான்.
மாப்பிள்ளை குடும்பத்தை அழைத்து கொண்டு வந்தவனை வீட்டிற்கு செல்ல விடவில்லை அறிவழகன். “உள்ளே போங்க ரவி, டிபன் சாப்பிட்டு அப்பறம் வீட்டிற்கு போலாம்” என்றார். முக்கியமான வேலை இல்லாததால் இந்த பெருசுகளை சமாளிக்க முடியுது. ஒர்க் பிரம் ஹோம் பண்ணா இதுங்க எல்லாம் சேர்ந்து ஒர்க் பார் ஹோம் ஆக்கிட்டாங்க என்று திட்டி கொண்டே உள்ளே சென்றான் ரவி. அவர்கள் அனைவரும் ஹாலில் அமர, இவன் ஹாலை தாண்டி டைனிங் ஏரியா சென்றான். வீட்டிற்கு வருபவர்கள் பார்க்க முடியாதபடி, கிட்சன் மற்றும் இரண்டு அறைகள், டைனிங் ஏரியாவை தாண்டி இருக்கும்.
டேபிளில் அமரப்போனவனை, “இங்க வாடா” என்று குறிஞ்சியின் அறை வாசலில் நின்றிருந்த ஷ்யாமளா அழைத்தாள். அவளுக்கு பின்னால் குறிஞ்சி நின்று கொண்டு இருந்தாள். குடும்ப ஆட்கள் தவிர வேறு யாரையும் அழைக்கவில்லை. அதனால் அலங்காரம் எதுவும் இன்றி சிம்பிளாக புடவை மட்டும் கட்டி இருந்தாள் குறிஞ்சி.
புடவையில் அவளை பார்த்தவுடன், ஏன் என்று தெரியாமல் அவர்களுக்குள் நடந்த நிகழ்வு சட்டென்று அவன் நினைவில் வந்தது. இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட அதை நினைத்ததில்லை ரவி. குறிஞ்சியின் முகத்தை பார்த்தான். அவள் சாதாரணமாக இருந்தாள். இவனுக்கு தானே குழப்பம்! அவளுக்கு இல்லையே!
“மாப்பிள்ளை நல்லா இருக்காரா டா?”
“ஏன் உனக்கு போட்டோ காட்டலையா உன் வள்ளி?” பேசும் போது குறிஞ்சியின் முகத்தையே பார்த்து பேசினான் ரவி. அவள் இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் நின்றிருந்தாள்.
“காட்டினா தான்! நீ இப்போ நேரில் பார்த்தியே, அதனால் கேட்டேன்!”
“கட்டிக்க போறவங்களுக்கு பிடிச்சா போதும்! நமக்கென்ன? என்ன குறில்? சரி தானே? என்றான் ரவி. அவள் தலையை மட்டும் அசைக்க, அவளை பேச வைக்க எண்ணி,
“மாப்பிள்ளையை பிடிச்சு தான் இப்போ பொண்ணு பார்க்கிற வரை வந்திருக்குனு எங்க அக்கா கிட்ட சொல்லு குறில்!”
“டேய் நான் உன்னை சும்மா கேட்டேன்! நீயேன் இப்போ அவளை நோண்டுறே? போ, போய் சாப்பிடு….” என்று அவனை அனுப்பி வைக்க பார்த்தாள்.
“உனக்கு எங்க அக்கா என்ன மவுத் பீஸா? ஏன் இன்னிக்கு பேச்சே வரலையா? வெட்கமா?” அதிகமாக சீண்டினான் ரவி குறிஞ்சியை. அவள் வாயில் இருந்து குமார் பற்றி ஏதாவது வார்த்தை வாங்க விரும்பினான் ரவி.
அப்போது கோகிலா ஷ்யாமளாவை அழைக்க, அவள் அங்கிருந்து சென்றாள். போகும் போது தம்பியிடம் சும்மா அவளை சீண்ட வேண்டியது அப்புறம் சண்டை போட வேண்டியது, சும்மா இரு டா என்று சொல்லிக்கொண்டே போனாள்.
அவன் கேட்ட எதற்கும் பதில் சொல்லாமல் அவனை பார்த்தபடி நின்றாள் குறிஞ்சி.
“உன் பெருமை எல்லாம் தெரியுமா இந்த மாப்பிள்ளைக்கு? அவர் கிட்ட தனியா பேசும் போது, கொஞ்சம் பார்த்து பேசு! உன்னை பத்தி தெரிஞ்சு பயந்து ஓடிட போறார்!” அவளிடம் ஏதாவது பேச்சை வளர்க்க வேண்டும் என்று பேசினான் ரவி.
அவ்வளவு நேரம் பேசாமல் நின்றவள் இதற்கு பதில் கேள்வி கேட்டாள். “எப்படி நீங்க பயந்து ஓடின மாதிரியா?” சிரித்து கொண்டே கேட்டாலும் அவள் கண்கள் அடிவாங்கியது போல் வலிகளை காட்டியது.
அவள் முகத்தை பார்த்து பேசிக் கொண்டு இருந்தவனுக்கு அவள் கண்கள் காட்டிய பாவத்தில் நெஞ்சில் ஏதோ புரண்டது. உள்ளுக்குள் ஏதோ பிசைந்தது.
இதே கேள்வியை வேறு இடத்தில், வேறு நேரத்தில் கேட்டு இருந்தால் அவளை உண்டு இல்லை என்று ஆக்கி இருந்திருப்பான் ரவி. ஆனால் இன்று அவனும் சாதாரணமாக இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியதாபடி உணர்ச்சிவசப்பட்டு இருந்தான். உள்ளுக்குள் இருவருமே ஏதோ ஒரு விதத்தில் தடுமாறினாலும் வெளியில் சமாளித்தார்கள்.
“என்ன உனக்கு நான் பயந்தேனா? இது என்ன கதை?” குரலில் எந்த உணர்வையும் காட்டாமல் கேட்டான் ரவி.
“மாமா என்னை உங்களுக்கு கட்டி வைச்சாலும் வைச்சுடுவார்னு தானே நீங்களே உங்களுக்கு பொண்ணு பார்த்துகிட்டீங்க?”
அவனிடம் எந்த காலத்திலும் தங்களை குறித்து பேசவே கூடாது என்று தான் இருந்தாள் குறிஞ்சி. ஆனால் அவளையும் மீறி சூழ்நிலை அந்த விஷயத்தை தொட வைத்து விட்டது!
நேரடியாக அவள் இப்படி கேட்பாள் என்று எதிர்பார்க்காத ரவி ஒரு நிமிடம் என்ன பதில் சொல்வது என்று தடுமாறி விட்டான். இன்று அவள் மனம் நோக பதில் கொடுக்க அவனுக்கு மனமே இல்லை! பழைய ரவி என்றால் உனக்கு அப்படி வேற ஆசையா? என்று கேட்டு இருப்பான்! ஆனால் இன்று பார்த்து பார்த்து வார்த்தைகளை சேர்த்தான் ரவி.
“ரொம்ப கற்பனை உனக்கு! லவ் எல்லாம் தேடி போக முடியாது குறில்! அது தானா நடக்கணும்! அவளோ தான்! நான் ஒன்னும் பிளான் பண்ணலை” என்றான் சின்ன குரலில்.
“ஓ! அப்போ அக்கா மேல உங்களுக்கு அவ்ளோ லவ்!” சிரித்தாள் குறிஞ்சி. அவளுடன் சேர்ந்து சிரிக்க முடியாமல் ஏதோ ஒன்று அவனை உள்ளுக்குள் பதற வைத்தது. அமைதியாக சிரிக்கும் குறிஞ்சியை பார்த்து கொண்டு நின்றான் ரவி.