12. காயமின்றி வாழும் காதல்

4.6
(9)

காயமின்றி வாழும் காதல் – 12

“நீ இங்க என்னடா பண்றே? போய் வீட்டு ஆளா மாப்பிள்ளை பையன் கிட்ட பேசிட்டு இரு” என்றார் குறிஞ்சியை அழைக்க வந்த மேகலா.

ம்ம்… என்றவன் உள்ளுக்குள் உருளும் புரளும் விஷயம் என்னவென்று தெரியாமல், அது அவனைப் படுத்தும் விதத்தில் பொத்தென்று அங்கிருந்து வந்து டைனிங் டேபிள் சேரில் அமர்ந்தான்.

“வள்ளி, வா வந்து எல்லாருக்கும் காபி கொடு!” என்று அழைத்து போனார் மேகலா.

“உட்கார் மா” என்றார் குமாரின் அம்மா.

“என் பையனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருக்குனு சொல்லிட்டான். உனக்கு என் பையனை பிடிச்சு இருக்கா?” என்றார். அவரிடம் தலையை மெதுவாக அசைத்து சம்மதம் சொன்னாள் குறிஞ்சி. அவள் குமாரின் புகைப்படத்தை சரியாக கூட பார்க்கவில்லை. இப்போதும் அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. இந்த திருமணம் அவள் பெற்றோர், மேகலா மூர்த்தியின் மன நிம்மதிக்காக மட்டுமே! அவர்கள் யாரும் இவளிடம் ரவி பற்றி கேட்காவிட்டாலும் அவர்கள் மனதினில் பயம் இருப்பது இவளுக்கு தெரியும். எங்கே ரவியை நினைத்துக்கொண்டு இருந்தாளோ? அவன் நினைப்பில் வருத்தபடுகிறாளோ? திருமணம் செய்துகொள்ள மாட்டாளோ என்று. இன்று அவர்கள் அனைவர் முகத்திலும் நிம்மதி தெரிந்தது. குறிஞ்சியும் யதார்த்தம் தெரிந்தவள் அதனால் வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ள முடிவு செய்து விட்டாள்.

அவள் சம்மதம் சொன்னதும், குமாரின் தந்தை “இன்னும் இரண்டு மாதம் கழித்து திருமணம் வைத்து கொள்ளலாம், அது இவர்களுக்கு சம்மதமா?” என்று கேட்டார்.

இவர்கள் சம்மதம் என்று சொல்ல, அவர் அறிவழகனிடம்,

“பையன் பொண்ணு கிட்ட தனியா பேசணும்னு ஆசைப்பட்டான்…. நான், நீங்க ஒத்துகிட்டா பேசலாம் சொன்னேன் ” என்றார் அவர்களின் சம்மதத்தை எதிர்பார்த்து.

“வள்ளி, மாப்பிள்ளையை உன் ரூமிற்கு அழைச்சிட்டு போம்மா. கதவை திறந்து வை. நாங்க இங்கே இருக்கோம். நீங்க போய் பேசிட்டு வாங்க” என்றார் அறிவழகன்.

இன்னமும் டைனிங் ஏரியாவிலேயே அமர்ந்து இருந்த ரவி, குமாருடன் வந்த குறிஞ்சியை கண்டவுடன் அவர்களை பார்த்து சின்ன புன்னகை புரிந்து விட்டு விருட்டென்று எழுந்து வீட்டின் பின்புற கதவை திறந்து கொண்டு வெளியே சென்று விட்டான்.

குமார் அமர நாற்காலி கொடுத்த குறிஞ்சி, அப்பா சொன்னது போல் கதவை திறந்து வைத்து விட்டு, அந்த காதவிலேயே சாய்ந்து நின்று கொண்டாள்.

“இப்படி நீங்க பயந்து கதவுகிட்டயே நிற்கிற அளவுக்கு என்னை பார்த்தா அவ்ளோ மோசமானவா இருக்கு?” ஆற்றாமையுடன் கேட்டான் குமார்.

“அச்சோ! அப்படி இல்லை!” வேகமாக மறுத்தாள் குறிஞ்சி.

“உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு! இனிமே நீங்க தான் எனக்கு எல்லாம்னு நான் நினைக்கிறேன். அது மாதிரி உங்களுக்கும் நான் தான் எல்லாமுமா இருக்கணும். உங்க அப்பா அம்மா எனக்கும் அப்பா அம்மா மாதிரி தான்! நான் இனிமே அவங்களுக்கு பையன் மாதிரி!” உருகினான் குமார்.

“அய்யோ இவன் ஏன் இப்படி டயலாக் அடிக்கிறான்? சாதாரணமா பேசினா என்ன?” தனக்குள் நினைத்து கொண்டவளுக்கு அவன் பேச்சு மிகுந்த எரிச்சலாக இருந்தது.

அவள் பதிலை எதிர்பார்த்து இவள் முகம் பார்த்தபடி குமார் இருக்க, “ஸாரி உங்களை மாதிரி எல்லாம் எனக்கு பேச வராது.” என்றாள் குறிஞ்சி.

அடப்பாவி உனக்கா பேச தெரியாது? மைண்ட் வாய்ஸ் கொடுத்தது.

“பரவாயில்லை பரவாயில்லை” என்றவன்,

“பக்கத்தில் வரலாமே” என்றான்.

“இல்லை…. அது….” என்று இன்னும் கதவோடு ஒன்றினாள் குறிஞ்சி.

“அய்யோ ஒன்னுமில்லை…. நீங்க பயப்படாதீங்க! சும்மா நமக்கு நாமே விஷ் பண்ணி கை குலுக்கிக்கலாமேனு தான்…. வேற ஒன்னுமில்லை” அசடு வழிந்தான் குமார்.

“கல்யாணத்துக்கு அப்பறம்….” என்று குறிஞ்சியும் இழுத்தாள்.

“கையை கூட பிடிக்க கூடாதா?” ஏக்கமாக கேட்டான் குமார்!

மனதினில், டேய் குமாரு….இதையே கேட்டே உன் கையை குலுக்க மாட்டேன் அதுக்கு பதிலா உன்னை மொத்தமா கும்மிடுவேன் பார்த்துக்க என்று சொல்லிக் கொண்டவள் வெளியில் அமைதியாக தலையை மட்டும் அசைத்து வைத்தாள்.

அதற்குள் நேரம் போதும் என்று நினைத்த அறிவழகன், மகளை அழைத்தார். அப்பாடா தப்பித்தோம் என்று ஆசுவாசப்பட்ட குறிஞ்சி வேகமாக சென்று கோகிலாவின் அருகில் நின்று கொண்டாள்.

மற்றது எல்லாம் அனைவரும் கலந்து பேசி முடிவு செய்வோம் என்று சொல்லி விடைபெற்றனர் குமார் வீட்டினர். அவர்கள் கிளம்பும் முன், அறிவழகன்,

“மாப்பிள்ளை, நீங்க தப்பா நினைக்ககூடாது. இந்த போன்ல பேசுறது எல்லாம் வேண்டாம். இரண்டு மாசம் தானே இருக்கு கல்யாணத்துக்கு. அதனால் அப்பறம் பேசுங்கள்” என்று சொல்லி விட்டார்.

அவருக்கு பயம், எங்கே போனில் பேசிய பின் இருவருக்கும் ஒத்து வரவில்லை என்று மகள் சொல்லி விடுவாளோ என்று.

“ஹிஹி பரவாயில்லை மாமா” என்று சிரித்து மழுப்பி விட்டு போனான் குமார். அவனுக்கு ஆத்திரமாக வந்தது. அவளும் சரியாக நடந்து கொள்ளவில்லை, அவள் அப்பாவும் ரொம்ப ஓவரா பண்றார்! என்ன உலகத்தில் இல்லாத அழகியா இவள்?

அவர்கள் சென்ற பின் கோகிலா கோபப்பட்டார்.

“ஏங்க! இந்த காலத்திலே போய் யாராவது இப்படி சொல்வாங்களா?”

“இந்த காலத்துக்கு தான் கண்டிப்பா சொல்லணும்! இப்போ இருக்க பிள்ளைங்க, பேசினோம் சரியா வரலை, வேண்டாம் அப்படினு ஈஸியா சொல்றாங்க. யாரும் விட்டு கொடுத்து போக ரெடியா இல்லை. உனக்கு ஒன்னும் தெரியாது, நீ அமைதியா இரு” என்று மனைவியை அடக்கினார்.

********

ஜோடியாக வந்தவர்களை கண்டு ஓடி வந்தது இப்போது சிறுபிள்ளை தனமாக தோன்றியது ரவிக்கு. எதுக்கு நான் அப்படி வித்தியாசமா நடந்துகிட்டேன்? அய்யோ, சும்மாவே என்னோட மல்லுகட்டுவா! இப்போ ரொம்ப பேச போறா! நினைத்து நினைத்து சங்கடப்பட்டான் ரவி. குறிஞ்சி தன்னை கிண்டல் பண்ணுவாள் என்றதிலேயே அவன் எண்ணம் போக, எதனால் அவன் அப்படி ஓடி வந்தான், அதற்கு முன் ஏன் அப்படி உடைந்து போனது போல் இருந்தான் என்பதை ஆழ்ந்து யோசிக்காமல் விட்டு விட்டான்.

அந்த வாரத்திலேயே பெரியவர்கள் மீண்டும் சந்தித்து அவர்கள் முடிவு செய்த மாதத்தில் ஒரு முகூர்த்த நாளை முடிவு செய்தனர். எல்லாம் வேகமாக நடப்பது போல் இருந்தது ரவிக்கு. விளையாட்டாய் சொல்வது போல் மேகலாவிடம்,

“என் கல்யாணத்தை கிடப்பில் போட்டுட்டு அந்தக் குள்ளி கல்யாணத்துக்கு மாங்கு மாங்குனு வேலை பார்க்கிறார் அப்பா” என்றான்.

“நாங்க எங்கே டா போட்டோம்? நீ பார்த்த பொண்ணு வீட்டுக்காரங்க தான் அப்படி இருக்காங்க” என்றார்.

“அதான் அடுத்த வாரம் வராங்களே! அப்போ பேசி முடிச்சுடுவோம்!” என்றான் ரவி.

அவர்களை வர சொல்லி சொல்லி விட்டார் மூர்த்தி. ரவியும் எதையும் இழுக்காமல் விரைவாக ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தான். அனைத்தும் ஒரு விதமான குழப்பத்திலேயே இருப்பது போல் இருந்தது அவனுக்கு.

அவன் இங்கு இருந்து கிளம்பினால் குறிஞ்சி விஷயம் சரியாகி விடும். அவளை காணா விட்டால் அவனுக்கு அவளை பற்றி ஒன்றும் தோன்றாது என்ற எண்ணத்திற்கு வந்து விட்டான். அதனால் அவன் திருமண விஷயத்தை சரி செய்ய நினைத்தான்.

“எதை பேசி முடிக்கணும்?” கேட்டு கொண்டே வந்தார் மூர்த்தி.

“அவன் கல்யாணத்தை பேசி முடிக்கணுமாம்! நீங்க வள்ளி கல்யாணத்தில காட்டுற ஆர்வத்தை உங்க பிள்ளை கல்யாணத்தில காட்டலையாம்!” போட்டு கொடுத்தார் மேகலா.

“எம்மா ஏம்மா?” மேகலாவை முறைத்தான் ரவி.

“அது உண்மை தான்! உன் கல்யாணத்துக்கு முன்னாடி வள்ளி கல்யாணம் முடிஞ்சுடனுங்கிறது தான் என் விருப்பம்! ஏன் தெரியுமா? உனக்கும் வள்ளிக்கும் தான் கல்யாணம் நடக்கும்னு தான் எல்லாருடைய எதிர்பார்ப்பும். அதுக்கு ஏத்த மாதிரி இது வரை வள்ளிக்கு மாப்பிள்ளையே பார்க்கலை! வந்த மாப்பிள்ளைக்கும் சரி சொல்லலை அறிவும் கோகிலாவும்.”

“இப்போ உன் காதல் விஷயம் தெரிஞ்சா, அந்த பையன் வள்ளியை வேண்டாம்னு சொல்லிட்டான்னு விஷயம் பரவும். முன்னாடி பல மாப்பிள்ளையை வேண்டாம்னு சொன்னதால் இனி பேச்சு எப்படி வேணா வரும்! வள்ளி உன்னை விரும்பினாள், நீ வேண்டாம் சொல்லிட்டேனு கூட பேச்சு வரும். அப்படி இருக்கும் போது நல்ல மாப்பிள்ளை வர்றது தட்டி போக வாய்ப்பு இருக்கு. அதனால் உனக்கு முன்னாடி நாமளே பேசி முடிச்சு கல்யாணம் பண்ணினா, இவங்க ரெண்டு வீட்டுக்கும் அப்படி ஒரு எண்ணம் இல்லை போல்னு முடிஞ்சுடும்! உன் விஷயம் அப்புறம் தெரிஞ்சா கூட ஒரு பிரச்சனையும் இல்லை ” என்றார் மூர்த்தி.

அப்பா எப்படி எல்லாம் யோசிக்கிறார். வள்ளி மீது எவ்ளோ பாசம் இவருக்கு. ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு. நிச்சயம் வள்ளி என்று இல்லை, வேறு பெண் என்றாலும் மூர்த்தி இப்படி தான் சொல்லி இருப்பார்!

“நான் கூட இப்படி எல்லாம் யோசிக்கலைங்க” என்றார் மேகலா.

“நீ எப்போதும் போல் இரு அது போதும்! உனக்காவும் சேர்த்து செய்ய தான் நான் இருக்கேனே!” என்றார் மூர்த்தி. அந்த வார்த்தைகளில் தான் எவ்வளவு அன்பு, வாஞ்சை? தந்தையை நினைத்து பெருமை பட்டான் ரவி.

அடுத்த வாரத்தின் தொடக்கம்,

இன்று இரவு குடும்பத்தோடு வந்து இறங்கி விடுவாள் கௌஷிகா என்று அன்று காலை தாய் தந்தையிடம் தெரிவித்தான் ரவி. சரி என்று கேட்டு கொண்டனர் இருவரும். மாலை ஷ்யாமளா வருவதாக சொல்லி இருந்தாள்.

வாசுகியை, கொல்லையில் கிடந்த தேங்காய்களை எடுத்து வராண்டவில் போட வைத்து கொண்டிருந்தார் மேகலா.

“என்ன மதினி நீ, விருந்தாளி வர்ற நேரத்தில் எல்லாரும் பொருளை எடுத்து வெளியே போடுவாங்க. நீ வீட்டுக்குள்ளே போட சொல்றே?” கேட்டு கொண்டே வந்தார் கோகிலா.

“அவங்க நம்ம வீட்டையும் நம்மளையும் நோட்டம் பார்க்க தான் வராக! நல்ல எண்ணத்தோட வரலை! அதான் இப்படி பண்றேன். அந்த பொம்பிளையை எனக்கு கொஞ்சமும் பிடிக்கலை. படிச்சா போதுமா? மரியாதை இல்லாதவ! அவளுக்கு இப்படி தான் காட்டணும் எல்லாம்!” என்றார் மேகலா ஆத்திரமாக.

“அவுக பொண்ணு தான் நம்ம மருமகனா நம்ம பிள்ளைக்காக நாம விட்டு கொடுத்து தான் போகணும் மதினி. நீ இப்படி எல்லாம் பண்ணாதே” என்றார் கோகிலா.

“என் பிள்ளைக்கு ஏன் இப்படி போச்சு புத்தி? நமக்கு இதெல்லாம் சரி பட்டு வருமா? அவுக பழக்கம் வழக்கமே வேற மாதிரி இருக்கு! அந்த பிள்ளையை காட்டிக்கிட்டா என் பிள்ளை எங்ககிட்டயே தாமரை இலை தண்ணீ மாதிரி ஆய்டுவான்” கண் கலங்கினார் மேகலா. அவருக்கு பல விஷயங்களை நினைத்து பயமாக இருந்தது.

அவரை அணைத்து கொண்டார் கோகிலா. “என்ன மதினி நீ? நம்ம பிள்ளை, நம்ம வளர்ப்பு அப்படி எல்லாம் ஒட்டாம போகுமா? தேவையில்லாதது எல்லாம் யோசித்து கவலைப்படாதே!” என்று ஆறுதல் கூறினார்.

அன்று இரவு வந்தவர்கள், எங்களுக்கு ஹோட்டலில் அறை வேண்டும். உங்க வீட்டில் தங்குவது சரியாக வராது என்றார்கள். தொலைபேசியில் மூர்த்தியை அழைத்து சொல்லி விட்டு அவர்கள் கேட்டது போலவே செய்தான் ரவி.

மறுநாள் மதிய உணவிற்கு ரவியின் வீட்டிற்கு வர சொல்லி விட்டு வந்தான். காலை உணவிற்கு வாருங்கள் என்றால் நிச்சயம் தாமதம் செய்வார்கள் என்று அவனே மதியம் என்று சொல்லிவிட்டான். காலையில் எழுந்து கோயிலுக்கு போய் விட்டு வருகிறோம் என்றார்கள் அவர்களும்.

மதியம் சைவ சாப்பாடு தயாராகி கொண்டு இருந்தது. கௌஷிகா நாங்கள் தயார் என்று சொல்லியதால் அவர்களை அழைக்க சென்றிருந்தான். அறிவழகன், கோகிலா, குறிஞ்சி என அனைவருக்கும் இன்று இங்கு தான் சாப்பாடு.

அவர்கள் வந்து விட, வரவேற்று அமர வைத்தார்கள். அமர்ந்த சில நிமிஷத்தில் எழுந்து வீட்டை சுற்றி பார்க்க ஆரம்பித்தார்கள் ஸ்ரீராமும் ராதிகாவும். மூர்த்தி இவர்களை பற்றி தெரிந்து அமைதியாகவே இருந்தார். மேகலா எதிர்பார்த்தது போல், ராதிகா முன் வராண்டாவில் கிடந்த தேங்காய் மற்றும் சில மூட்டைகள் எல்லாம் கண்டு முகம் சுளித்தார். கொல்லையில் நின்ற பசுவை கண்டு கீழே இறங்கவே இல்லை அவர். கொல்லையில் இருந்த திண்ணையில் தான் அமர்ந்து இருந்தாள் குறிஞ்சி. ராதிகாவின் முகம் போன போக்கை பார்த்தவள்,

“பசுவை கோமாதா, லஷ்மினு சொல்ற கலாசாரத்தில் இருந்து வந்திட்டு என்ன ஆன்ட்டி முகத்தை சுளிக்கிறீங்க?” என்றாள்.

“இப்போ எல்லாம் யாரு இதெல்லாம் வளர்க்கிறா?” என்றார் எரிச்சலாக.

“இந்த மாதிரி ஆடு, மாடு, கோழி வளர்க்கிறது எல்லாம் இப்போ பெரிய விஷயம் ஆன்ட்டி. கம்ப்யூட்டர் எல்லாம் ஈஸியா கத்துக்கலாம். இதை எல்லாம் பேணி பாதுகாக்கிறது இப்போ இருக்க யங் ஜெனரேஷன் எல்லாராலும் முடியாது. என்னையும் சேர்த்து தான். இப்போ பெரிசா பேசுறாங்களே ஈக்கோ ஸிஸ்டம்னு அதுக்குள்ள வர்ற முக்கியமான விஷயங்கள் ஆன்ட்டி இதெல்லாம். இதை வைச்சு பராமரிச்சு வீட்டில் இருக்க லேடீஸ் பொருளாதாரத்திலும் ஒரு பங்கு வகிக்கிறாங்க. அதனால் இதை சாதாரணமா, சின்ன விஷயமா நினைக்காதீங்க! எங்க அத்தைக்கு இதிலெல்லாம் அறிவும், அனுபவமும் ஜாஸ்தி!” என்று நெத்தியடியாக பேசினாள் குறிஞ்சி.

அவர்கள் பின்னேயே வந்த ரவி அவள் பேசியதை கேட்டு அசந்து நின்றான். அவன் கூட மேகலாவிற்காக இப்படி பேசி இருப்பானா என்றால் தெரியாது. அவளின் கோணம் அவனை யோசிக்க வைத்தது. இந்த இரண்டு வாரங்களாக பார்க்கும் குறிஞ்சியின் பரிமாணத்தில் மொத்தமாக வீழ்ந்து போய் இருந்தான் ரவி. இவளை முன்பே புரிந்து கொள்ளாமல் போய் விட்டானே, வெறும் வாய்துடுக்கு, அவசரக்குடுக்கை, சேட்டைக்காரி என்று நினைத்ததை எண்ணி இப்போது வருந்தினான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!