18. காயமின்றி வாழும் காதல்

4.9
(10)

காயமின்றி வாழும் காதல் – 18

வீட்டை அடைந்தனர். மேகலா இன்னும் குறிஞ்சி வீட்டில் தான் இருந்தார். ஆண்கள் இருவரும் அங்கே செல்ல, ரவி மட்டும் வேகமாக அவன் வீட்டிற்கு சென்றான்.

“என்னங்க என்ன ஆச்சு?” வேகமாக கேட்டார் கோகிலா.

எதிர்பார்க்காத நல்ல விஷயம் நடந்து இருக்கு! நம்ம வீட்டில் குறிச்ச முகூர்த்ததில் கல்யாணம் நடக்க போகுது! மகிழ்ச்சியாக அறிவித்தார் அறிவழகன்.

“அப்பா, நான் எவனையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்று படப்படத்தாள் குறிஞ்சி. குமார் எதுவும் மன்னிப்பு கேட்டு இவர்கள் மனசு மாறி விட்டார்களோ என்று நினைத்து அப்படி சொன்னாள் குறிஞ்சி.

பேச ஆரம்பித்த அறிவழகனை தடுத்து விட்டு,

“என் மகனை கூட கட்டிக்க மாட்டியா ராஜாத்தி?” தன் அன்பு மருமகளிடம் குரலில் அன்பும் வாஞ்சையும் தளும்ப கேட்டார் மூர்த்தி.

“மாமா….” விஷயத்தை முழுதாக கிரகிக்க முடியாமல், பேசவும் முடியாமல் தடுமாறினாள் குறிஞ்சி. உண்மையா இருக்குமா? நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது.

“சொல்லு மா!”

“அத்தான்….?” கேட்கும் போதே கண் கலங்கியது அவளுக்கு. அவனுக்கு அவள் மேல் அப்படி ஒரு எண்ணமே இல்லையே!

“உன் அத்தான், உன் அப்பா கிட்டயே உன்னை கட்டிக்க சம்மதம் சொல்லிட்டான். இப்போ நீ என்கிட்ட சம்மதம் சொல்லணும்!” என்றார் சிரிப்புடன்.

“இதெல்லாம் நிஜமாங்க?” மேகலா நடப்பதை நம்ப முடியாமல் மூர்த்தியிடம் கேட்டார்.

“ஆமாடி! கேட்கிறா பாரு கேள்வி! நான் என்ன இந்த காலத்து ஆளா, ஏமாத்தி விளையாட? கோட்டி!”

“சரிங்க சரிங்க….” என்றவர்,

“ஏய் கோகிலா நாம சம்பந்தி ஆக போறோம்டி!!” குதூகலித்தார் மேகலா.

கோகிலாவிற்கும் மிகுந்த சந்தோஷம்! “மாமாவுக்கு வாயை திறந்து பதில் சொல்லு மா” என்று சிலையென சமைந்து நிற்கும் மகளிடம் சொன்னார்.

“சம்மதம் மாமா” என்று முகம் சிவக்க சொன்னவள், வேகமாக அறைக்குள் சென்று விட்டாள்.

“அடடா என் மருமகளுக்கு வெட்கமா?” மூர்த்தி சிரித்தார். வெளியில் அனைவரும் சந்தோஷமாக இருக்க, உள்ளே சென்றவள் வருத்தத்தில் இருந்தாள்.

அவள் முகம் சிவந்தது வெட்கத்தில் அல்ல, அவமானத்தில்! அவளுக்கு உறுதியாக தெரிந்தது, பஞ்சாயத்து நடந்த இடத்தில் ஏதோ பிரச்சனை ஆகி தான் ரவியை தனக்கு தீடீர் மாப்பிள்ளை ஆக்கி விட்டார்கள் என்று! அவள் மாமானை பற்றி அவளுக்கு நன்றாக தெரியுமே! தன்னை குறித்த ரவியின் எண்ணம் தெரிந்தவளுக்கு, இக்கட்டான நிலைமையில், வேறு வழி இல்லாமல் தான் அவன் இந்த முடிவுக்கு ஒத்து கொண்டு இருப்பான்! இப்படி தன்னை கட்டாயப்படுத்தி அவன் தலையில் கட்டுவது போல் செய்து விட்டார்களே என்று கழிவிரக்கம் வந்தது அவளுக்கு.

********

குறிஞ்சியின் வீட்டில் இருந்து தங்கள் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்கள் மேகலாவும் மூர்த்தியும்.

“எனக்கு ரொம்ப சந்தோஷங்க! ஆனாலும் உங்க மேல் ரொம்ப கோபம்! என்னை அடக்கிட்டு இப்போ நீங்க மட்டும் என்ன? இதை என்னை திட்டாமா பண்ணி இருக்கலாம்ல?” என்றார் சலுகையாக மேகலா மூர்த்தியிடம்.

“எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும்! இப்போ நேரம் கூடி வந்துச்சு! அவனும் மறுக்க முடியாம சரி சொல்லி இருக்கான். அது தானே நமக்கு வேணும்!”

“இதை முன்னாடியே பண்ணி இருக்கலாம். காதல் கீதல்னு ஒரே பிரச்சனை” என்றார் மேகலா எரிச்சலாக.

“கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்க இப்போ தான் எனக்கு நம்பிக்கை வந்துச்சு, வழியும் தெரிஞ்சுது. அதனால் தான் விஷயத்தை உடனே முடிச்சுட்டேன்!” என்றவர்,

“வீட்டில் போய் ரவிகிட்ட எதுவும் பேசாதே! அவன் என்ன மனநிலையில் இருக்கிறான்னு தெரியலை” என்றார்.

“ம்ம்…. ஏதாவது பிரச்சனை பண்ணுவானா இனி?” பயப்பட்டார் மேகலா.

“அறிவு கிட்டே சம்மதம் சொல்லிட்டதால் கண்டிப்பா பிரச்சனை பண்ணமாட்டான். நிச்சயம் இந்த கல்யாணம் நடக்கும்!” என்றார் மூர்த்தி நம்பிக்கையாக.

வீட்டிற்குள் வந்த பெற்றோரை கண்டவன், அவர்களுடன் பேச விருப்பம் இல்லை என்பதை காட்ட வேகமாக எழுந்து மாடிக்கு சென்றான். அவனை அப்படியே விடாமல் அவன் பின்னேயே சென்றார் மூர்த்தி.

“என்ன பா? ரொம்ப டென்ஷனா இருக்கியா? என் மேல கோபமா?” கேட்டு கொண்டே அவன் அறைக்கு வந்தார் மூர்த்தி.

“ம்ப்ச்…. அதான் எல்லாம் பிளான் பண்ணி செஞ்சு முடிச்சிட்டீங்களே! இனிமே நான் கோபப்பட்டு என்ன ஆக போகுது? ஒரு பிரயோஜனமும் இல்லை!” இயலாமையுடன் பேசுவது போல் பேசினான் ரவி.

“அடடா! நீ இவ்ளோ வருத்தப்பட வேண்டிய அவசியம் என்ன பா இப்போ? ஒரு காரணம் சொல்லு எனக்கு!”

“என்ன இவ்ளோ ஈசியா காரணம் சொல்லு சொல்றீங்க?” வேகமாக சொல்ல ஆரம்பித்த ரவிக்கு அடுத்த வார்த்தை சொல்லும் போது குரலில் சுதி கம்மியானது.

“எனக்கும் அவளுக்கும் என்னைக்கும் அவ்வளவா ஒத்து வராது! அது உங்களுக்கும் தெரியும்!” மெல்லமாக சொன்னான்.

“ம்ம்…. நான் கூட உன் காதல் தோல்வியை நினைச்சு வருத்தப்படுறியோனு நினைச்சேன்….” என்றார் சம்பந்தமே இல்லாமல்.

“அது காதலே இல்லை!” என்றான் ரவி பட்டென்று.

“அது காதல் இல்லைனு தெரிஞ்ச உனக்கு எது காதல்னு தெரிஞ்சா ரொம்ப நல்லது! என்றவர், கொஞ்சம் யோசித்து, உன்கிட்ட ஒன்னு சொல்லணும்….

“சில சமயம் காதலிக்கிறவங்களுக்கு தான் அவங்க காதல் கடைசியா தெரியும்!” என்றார் அர்த்தமுடன்.

“என்ன பா சொல்றீங்க? புரியலை எனக்கு” என்றான் குழப்பமாக.

“நீ உன்னையே கேட்டுக்க! உன் மனசு என்ன சொல்லுதுனு கவனி! நான் உங்க கல்யாண முடிவை அவசரப்பட்டோ இல்லை குறிஞ்சிக்கு நல்லது பண்ணணும்னு நினைச்சோ எடுக்கலை. என் மகனை பலமுறை கவனிச்ச அப்புறம், சில விஷயம் எனக்கு புரிஞ்ச அப்புறம் தான் எடுத்தேன்!” என்று சொல்லி விட்டு அவன் யோசிக்கட்டும் என்று கீழே இறங்கி சென்றார்.

அவர் அகன்றாலும் அவர் சொன்ன வார்த்தைகளின் தாக்கம் அவனை விட்டு அகலாமல் அவனை சுற்றி சுற்றி வந்தது. தந்தை சொன்னது போல் தன் மனம் என்ன உணர்கிறது என்று யோசித்தான் ரவி.

மூர்த்தி கூட்டத்தில் ரவிக்கும் குறிஞ்சிக்கும் திருமணம் என்ற போது நிச்சயமாக அவனுக்கு அதிர்ச்சி இல்லை. குறிஞ்சியின் திருமணத்தில் பிரச்சனை எனும் போதே இதை எதிர்பார்த்தான் ரவி. அவனும் கௌஷிகாவுடன் உறவை முறித்து இருக்க, இவர்களுக்கு திருமணம் செய்யலாம் என்பதை மேகலா தான் முன்னெடுப்பார் என்று எதிர்பார்த்தான். ஆனால் மூர்த்தி சொன்னது அவனுக்கு ஆச்சர்யமே!

அவனுக்கும் கௌஷிகாவிற்குமான உறவு முறிவதற்கு முன்பே குறிஞ்சியால் அவன் மனதில் எழுந்த சலனத்தை எல்லாம் நினைத்து பார்த்தான் ரவி. நிச்சயம் இம்முறை அவளால் தன்னில் நிறைய மாற்றம், சின்ன சலனம், ஈர்ப்பு என அனைத்தும் இருந்தது என்று அவன் மனம் ஒப்புகொண்டது. ஆனால் அதே சமயம் அதை காதல் என்றோ, அவள் இல்லாமல் அவனில்லை என்றோ அவனுக்கு தோன்றவில்லை. அதை விட முக்கியமாக அவளின் அதிக பிரசங்கிதனத்தை தன்னால் கையாள முடியுமா? என்பது அவனின் முக்கிய சந்தேகம். அவள் செய்யும் குளறுபடி அனைத்தும் அவள் மேல் இருக்கும் ஈர்ப்பை, சலனத்தை துடைத்து எறிந்து விடும் என்பது தான் ரவியின் எண்ணம்! ஆனால் அவன் அப்பா எதை வைத்து உறுதியாக அவ்வாறு பேசினார் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை! அவனின் அக்கறையை அவர் வேறு மாதிரி புரிந்து கொண்டாரோ? குழம்பினான். அதே நேரம் இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்ல கூடிய நிலை அவனுக்கு இல்லாவிட்டாலும் மறுப்பு சொல்லும் மனமும் இல்லையே தனக்கு என்று ஆச்சர்யமாக உணர்ந்தான் ரவி. ஏதோ ஒரு விதத்தில் தான் இந்த திருமணத்தை எதிர்பார்த்தது போல தோன்றியது அவனுக்கு. ஒருவேளை அப்பா அம்மாவின் ஆசை கூட காரணமாக இருக்கலாம் என்று நினைத்தான்.

எப்படியும் இந்த ஊரை சுத்தி இருக்க ஏதோ ஒரு பொண்ணை தான் என் தலையில் கட்டுவாங்க! தெரியாத தேவதையை விட தெரிஞ்ச பிசாசே மேல் என்று ஒரு பழமொழி உண்டே, அது போல் புதுசா வர்ற பொண்ணு கிட்ட என்னென்ன குறை இருக்குமோ? அதுக்கு இவளையே கல்யாணம் பண்ணிக்கலாம்…. அட்லீஸ்ட் இவளை எப்படி ஹண்டில் பண்ணலாம்னு தெரியும் எனக்கு என்று நினைத்து கொண்டான் ரவி.

ஏதேதோ காரணம் அடுக்கி கொண்டானே தவிர அவளை அவன் விரும்புவதாக நினைக்கவே தயாரில்லை ரவி. அவளை திருமணம் செய்து கொண்டு அவளை கண்டிப்புடன் நடத்த வேண்டும். அவள் இஷ்டத்திற்கு எதையும் விட்டு பிரச்சனை என்று வரும் அளவிற்கு விடக் கூடாது என்று நினைத்தான். அவளுடனான திருமணத்தை எதிர்பார்க்கிறோம், அவர்கள் வாழ்வு குறித்து பிளான் செய்கிறோம் என்றெல்லாம் அவனுக்கு தோன்றவே இல்லை! குள்ளி என்கிட்ட மாட்டினியா நல்லா என்று சந்தோஷபட்டவனுக்கு மனசெல்லாம் அவள் நிறைந்து இருக்கிறாள், அதனால் தான் இந்த சந்தோஷம் என்றும் புரியவில்லை.

*******

மாடிக்கு மகனிடம் மூர்த்தி பேச போன நேரத்தில் மகளை அழைத்து விஷயத்தை சொல்லி விட்டார் மேகலா. மகிழ்ச்சியில் குதித்தாள் ஷ்யாமளா. சிறு பெண் போல குதிக்கும் அம்மாவை வினோதமாக பார்த்தான் கிஷோர். அவள் உடனே குறிஞ்சியுடன் பேசுகிறேன் என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டு அவளுக்கு அழைத்தாள்.

சந்தோஷமாக பேசுவாள் என்று எதிர்பார்த்த குறிஞ்சி சோகமாக பேசினாள்.

“என்னடி இப்படி அழுது வடியுறே? உன் ஆசை நிறைவேற போகுது! உனக்கு சந்தோஷமா இல்லையா?” ஏமாற்றமாக கேட்டாள் ஷ்யாமளா.

“உங்க தம்பி என்னை விரும்பி கட்டிக்கலை மதினி!” எரிச்சலாக சொன்னாள் குறிஞ்சி.

“அவனுக்கு இஷ்டம் இல்லாம ஒத்துகிட மாட்டான். நீ தேவையில்லாதது எல்லாம் யோசிக்காதே!” அதட்டினாள் ஷ்யாமளா.

“எங்க வீட்டுக்கு உதவி பண்ற நினைப்பில் தான் அவர் நிச்சயம் இதுக்கு சம்மதிச்சு இருப்பார். எல்லார் முன்னாடியும் மாமாவோட மரியாதை போயிடக் கூடாதுனு தான் ஒத்துகிட்டு இருப்பார்.” சொல்லும் போதே குறிஞ்சிக்கு துக்கம் தொண்டையை அடைத்து கமற வைத்தது.

“நாளைக்கு நான் வரேன். நீ ரொம்ப யோசிக்காமல் இரு” என்று போனை வைத்தாள் ஷ்யாமளா. என்ன தான் சமாதானம் சொன்னாலும் சரி ஆகாது குறிஞ்சியின் மனம் என்று அவளுக்கு புரிந்தது. தம்பியிடம் பேச வேண்டும் என்று நினைத்து கொண்டாள் ஷ்யாமளா.

ஷ்யாமளா போனை வைத்ததும், அது வரை அடக்கிய அழுகையை அழுது தீர்த்து விட்டாள் குறிஞ்சி. கௌஷிகாவும் அவனும் பரிமாறி கொண்ட முத்தமே கண் முன் வந்தது. அவர் வேணும்னு கேட்டப்போ நீ கொடுக்கலை, நானே என்னை சமாதானம் செஞ்சு அவர் வேண்டாம்னு தேறிகிட்ட அப்புறம் என்னை ஏன் கடவுளே சோதிக்கிறே? புலம்பினாள் குறிஞ்சி.

வேறொருத்தியின் காதலன் எனக்கு வேண்டாம் என்ற நிலைப்பாடில் அவள் ரவியின் மீதான உரிமை உணர்வை என்றோ விட்டு விட்டாளே! இன்று அவன் அவளுக்கு உரிமைபட்டவனாக மாற போகிறான் என்பதை எப்படி ஏற்று கொள்வது என்று தவித்தாள் அவள்.

என்னை வேண்டாம் என்றவனிடம் என்னை கொண்டு சேர்க்கிறார்கள்! என்னால் அதை மறுக்க முடியவில்லையே? என்னால் அவனை வேண்டாம் என்று சொல்ல முடியவில்லையே என்று மறுகியது அவள் உள்ளம்!

இன்னும் யோசிக்க யோசிக்க வருத்தம் போய் அவன் மேல் கொள்ளை கொள்ளையாக கோபம் வந்தது. இருக்கு அவனுக்கு, என்னை என்னெல்லாம் பேசி இருப்பான்? இப்போ பெரியவங்களுக்காக என்னை கல்யாணம் பண்ற வரை வந்துட்டான்! பெரிய தியாகி! நான் படுத்துற பாட்டில் அவன் தியாகம் என்னவாகுது பார்ப்போம்! கருவினாள் குறிஞ்சி.

கீழ்ப்படிதல் கற்று கொடுக்கும் எண்ணத்தில் ரவி! இவர் கல்யாணம் பண்ணிக்க வந்துட்டா நான் இவரை தலையில் தூக்கி வைச்சுக்கணுமா? முடியாது, நான் எப்போதும் போல் தான் இருப்பேன் என்ற எண்ணத்தில் குறிஞ்சி!

யார் யாருக்கு என்ன கற்றுக்கொடுப்பார்களோ? பார்ப்போம்!

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!