காயமின்றி வாழும் காதல் – 19
மறுநாள் காலையிலேயே வந்து விட்டாள் ஷ்யாமளா. மிகவும் அருகில் என்பதாலும் மாமியார் மாமனார் இருவரும் நல்ல அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் குணம் என்பதால் இது சாத்தியம் அவளுக்கு. ஷ்யாமளாவும் தேவையில்லாமல் எந்த செயலையும் செய்ய மாட்டாள் என்று அவர்களுக்கும் தெரியும்.
மேகலாவை அடக்கிய மூர்த்தியால் ஷ்யாமளாவை அடக்க முடியவில்லை. விஷயம் தெரிந்து தான் அவள் வந்து இருக்கிறாள் என்பது புரிந்து அவளிடமும் ரவியுடன் பேச வேண்டாம் என்றார். அவள், “அதெல்லாம் முடியாது, இது வள்ளியோட வாழ்க்கை, நான் கேட்பேன்” என்று சொல்லி விட்டாள். சொன்னது போலவே தம்பியிடம் சென்று,
“இந்த கல்யாணத்தில உனக்கு இஷ்டம் தானே டா?” என்றாள்.
“எனக்கு ஆப்ஷன் கொடுத்த மாதிரி கேட்கிறே? அப்பா முடிவு பண்ணி எல்லார் முன்னாடியும் சொல்லிட்டார்! நானே மாட்டிகிட்ட மாதிரி இருக்கேன்!” சலித்து கொண்டான் ரவி.
“என்னடா இப்படி பேசுறே? வள்ளிக்கு தெரியும்டா அவளை உனக்கு பிடிக்காதுனு! நீ இப்படி வேண்டா வெறுப்பா தான் அவளை கல்யாணம் பண்ணிக்க போறேனு வருத்தப்படுறா டா அவ!”
“அவளே இப்படி சொன்னாளா?” அக்காவிடம் கேட்டான் ரவி. மனதுள் ஏதோ பிராண்டியது ரவியை. வருத்தப்படுறாளா? நான் உண்மையில் அப்படி நினைக்கலையே. ரொம்ப சாதாரணமா தானே இருக்கேன். எனக்கு எந்த வெறுப்பும் இல்லைடி குள்ளி. அவளை எண்ணி தவித்தது இவன் மனம்.
“ஆமா! நீ வேற ஒரு பொண்ணை காதலிச்சு இருக்கே! அதெல்லாமும் அவ மனசை ரொம்ப குழப்புது டா. நீ இஷ்டப்படலைனா இந்த கல்யாணம் வேண்டாம் டா. அப்பா கிட்ட சொல்லிரு!” குறிஞ்சியின் மனதை மறைத்து, தம்பியின் மனமும் சரியாக புரியாமல், விடை காணும் வேகத்தில் பேசினாள் ஷ்யாமளா.
ஷ்யாமளா அப்படி சொன்னதும் உண்மையில் பக்கென்றானது ரவிக்கு. “இப்போ நீ ஏன் புதுசா ஒரு பிரச்சனையை ஆரம்பிக்கிறே கா? கல்யாணம் வேண்டாம்னா அவளை அவங்க அப்பா கிட்ட சொல்ல சொல்லு! நான் எதுவும் சொல்ல மாட்டேன்” என்றான் கடுப்பாக.
“அவளும் அப்படி சொல்லலை டா, உன்னை நினைச்சு தான் எல்லாருக்கும் குழப்பம். உனக்கு பிடிக்காம நடக்குதுனு….” சரியாக சொல்ல முடியாமல் திணறினாள் ஷ்யாமளா. ரவி குறிஞ்சியை விரும்பி திருமணம் செய்யவில்லை என்பது தான் குறிஞ்சியின் வருத்தம் என்று சொல்ல முடியாதே!
“இது ஒரு அரேஞ் மேரேஜ்னு நினைச்சுக்கிறேன் நான்! அவகிட்ட போய் சொல்லு! அதுக்கு மேல அவ விருப்பம்!” என்றான் ரவி அழுத்தமாக.
“நீயே பேசேன்! அவளுக்கு கொஞ்சம் நம்பிக்கை வரும்! பேசுறியா?” மெல்லமாக கேட்டாள் ஷ்யாமளா.
“என்னை கல்யாணம் பண்ணிக்கனு நான் கேட்கணுமா?” எரிந்து விழுந்தான் ரவி. அவனை திருமணம் செய்ய அவள் தயங்குகிறாளா? அந்த எண்ணமே அவனுக்கு பிடிக்கவில்லை. அவள் மறுக்க கூடுமோ? தவிப்பாக இருந்தது அவனுக்கு.
“ரொம்ப பண்றே டா! அரேஞ் மேரேஜ்னா கூட மாப்பிள்ளை பொண்ணு கிட்ட என்னை பிடிச்சு இருக்கானு கேட்பாங்க! உங்க மாமா என்னை கேட்டார்” என்றார் ஷ்யாமளா முகத்தை தூக்கி வைத்து கொண்டு.
“உங்க கல்யாணம் மாதிரி இல்லை இந்த கல்யாணம். முதல்ல நீ கிளம்பு. எனக்கு வேலை இருக்கு!” துரத்தி அடித்தான் அக்காவை ரவி.
அவன் பேசியதை எல்லாம் குறிஞ்சியிடம் சொன்னாள் ஷ்யாமளா. அனைத்தையும் கேட்டு கொண்டவள், “எனக்கு அத்தான் கிட்ட பேசணும் மதனி” என்றாள் பிடிவாதமாக. ரவியிடம் சொல்ல, அவனுக்கு விருப்பமே இல்லை குறிஞ்சியுடன் பேச. அவளின் மறுப்பை கேட்டு நான் சமாதானம் செய்ய வேண்டுமா? முறுக்கியது மனது. ஆனால் விஷயம் பெரியவர்கள் வரை செல்ல, இருவரையும் பேச சொன்னார்கள்.
ஷ்யாமளா,
“ஒழுங்கா பேசு டா” என்று ரவியிடம் சொல்லி விட்டு ஊருக்கு கிளம்பி போனாள். போகும் முன் குறிஞ்சியிடமும்,
“உனக்கு என்ன சந்தேகம்னாலும் கேட்டு முடிச்சிடு” என்றிருந்தாள்.
அன்று மாலை, அலுவலகம் வேலை எல்லாம் முடித்து ஒரு ஏழு மணி போல் குறிஞ்சியின் வீட்டிற்கு வந்தான் ரவி. இதுவரை எத்தனையோ முறை வந்திருக்கிறான். ஆனால் இன்று மாப்பிள்ளை என்று முடிவு செய்த பின் வருவதால் வரவேற்பு தடபுடலாக இருப்பது போல் தோன்றியது அவனுக்கு.
“மாப்பிள்ளை வந்துட்டார் பாரு வள்ளி! வந்து அழைச்சிட்டு போ” என்றார் கோகிலா.
“வாங்க அத்தான்” என்று வந்து அழைத்த குறிஞ்சி புடவை கட்டி இருந்தாள். என் ரூமுக்கு போலாம் என்று அவள் முன்னே நடக்க இவன் அவள் பின்னே நடந்தான். ஒரு பத்தடி நடப்பதற்குள் அவளை ஒரு அங்குலம் கூட மிச்சம் விடாமல் மொய்த்தன ரவியின் கண்கள். ஜெர்மனியில் இருந்து வந்த பிறகு தான் நான் இவளை இது போல் பார்க்கிறேன் என்று நினைத்து கொண்டு ரசித்தான் ரவி. இப்போது இவர்களுக்கு திருமணம் வேறு ஆக போவதால் ரசனைக்கு போன முறை போல் எந்த கட்டுபாடும் போடவில்லை அவன். அவனுக்குள் ஏற்பட்ட மாற்றம் அவனுக்கு பிடித்தது. அதை தருபவளிடம் அதை காட்ட தவித்தான் ரவி. இது என்னடா சோதனை என்று பெருமூச்சு விட்டபடி அவள் காட்டிய நாற்காலியில் அமர்ந்தான். அவள் சற்று தள்ளி மெத்தையில் அமர்ந்து கொண்டாள்.
“என்ன பேசணும்?” என்றான் ரவி வேகமாக. இங்கிருந்து எவ்வளவு விரைவில் கிளம்புகிறேனோ அவ்வளவு நல்லது என்று நினைத்தான்.
பேச்சுக்கு நேர்மாறாக அவன் பார்வை நிதானமாக அவளை ஊசியாய் ஊடுருவ அவனுடன் தனித்து இருக்கவே ஒரு மாதிரியாக இருந்தது அவளுக்கு.
“இல்லை…. உங்களுக்கு இந்த கல்யாணம்….” என்று அவள் ஆரம்பிக்க,
“உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலையா?” கூர்மையாக வந்தது கேள்வி.
“நான் யாரையும் காதலிக்கலை!” அவனின் பேசிய தொனியில் இவளுக்கு கோபம் வர பட்டென்று பேசினாள் குறிஞ்சி.
“ஆனா கல்யாணம் நிச்சயம் ஆகி இருந்தது!” என்றான் அவனும் பட்டென்று.
அது கூட உன்னால தாண்டா! என்று சொல்ல முடியாமல், “ரெண்டும் ஒண்ணு இல்லை. எனக்கு எல்லா மாப்பிள்ளையும் ஒன்னு தான்! உங்களுக்கு எல்லா பொண்ணும் ஒண்ணா?” என்றாள் நக்கலாக.
“இப்போ நான் என்ன சொல்லணும் இல்லை செய்யணும் எதிர்பார்க்கிறே? எல்லாம் உனக்கு தெரிஞ்சுது தான்! யாரும் எதையும் மறைக்கலை” என்றான் ரவி சலிப்பாக.
“என்னை உங்களால்…. உங்களுக்கு என்னை….” எப்படி கேட்பது சொல்வது என்று புரியாமல் தடுமாறினாள் குறிஞ்சி.
அந்நேரம் அவளின் தவிப்பை கண்டவனுக்கு மனம் கனிந்தது. அவளின் தவிப்பை போக்கவேண்டும் என்று தோன்ற, அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்தான் ரவி. அவளை பார்த்து கொண்டே அவளை நெருங்கியவன், கை கொடுத்து அவளை எழுப்பினான். மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல் எழுந்தாள் குறிஞ்சி.
“உனக்கு இருக்க கேள்விகெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது!” அதனால் என்று அவள் முகத்தை கையில் தாங்கியவன், அவள் இரண்டு கன்னத்திலும் முத்தம் வைத்தான். பின் அவள் கண்களை காண, அவை மூடி இருந்தது. இதழ்கள் துடித்து கொண்டு இருந்தது. அதை பார்த்து கொண்டே நெற்றியில் முத்தமிட்டவன், ஆசையை அடக்க முடியாமல் அவள் இதழில் முத்தமிட்டான். அவன் இதழ் ஸ்பரிசம் புரிய, படக்கென்று கண்களை திறந்தாள் குறிஞ்சி. ஆனால் அவன் கண்கள் மூடி இருந்தது. அவளில் ஆழ்ந்து இருந்தான் ரவி. மனதில் பல கேள்வி இருக்க அவனுடன் ஒன்ற முடியாமல் தவித்தாள் குறிஞ்சி. மெதுவாக அவனை விலக்க, அதை வெட்கம் என்று நினைத்த ரவி,
“உன் சந்தேகம் எல்லாம் தீர்ந்துச்சா?” என்றான் சின்ன சிரிப்புடன்.
அவனை நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் அவன் எதிர்பார்த்த உணர்வு இல்லை. கண்கள் கலங்க,
“முத்தம் கொடுக்கிறது அவ்ளோ ஈஸியா உங்களுக்கு?” என்றாள் கோபமாக.
அவள் என்ன அர்த்தத்தில் கேட்கிறாள் என்று புரியவில்லை அவனுக்கு. அவன் புரியாமல் நோக்கவும்,
“அன்னைக்கு மாடியில் நான் தூங்கலை” என்றாள் எங்கோ பார்த்து கொண்டு. அவளால் இன்றும் வருத்தப்படும் ரவியின் முகத்தை பார்க்க முடியாது.
அவள் சொல்லி ஓரிரு வினாடி கழித்து தான் அவனுக்கு முழு அர்த்தம் விளங்கியது. சற்று நேரம் அமைதியாக இருந்தவன்,
“நான் லவ் பண்ணினது உனக்கு தெரியும் தானே?” என்றான் பதில் கேள்வியாய். அப்போ நீ அதெல்லாம் எதிர்பார்த்து இருக்க வேண்டும் என்பது போல் இருந்தது அவன் பேச்சு.
“அப்போ, இது…. இப்போ எப்படி….?” என்றாள் எரிச்சலாக.
“அது என் பாஸ்ட்! அது முடிஞ்சு போச்சு! அதோட மிச்சம் எதுவும் என்கிட்ட இல்லை! நீ என் புயூச்சர். நீ இந்த கல்யாணம் பத்தி ரொம்ப சந்தேகப்பட்டே, உடைஞ்சு போன மாதிரி இருந்தே, இதை நான் எப்படி எடுத்துக்கிறேன்னு காட்ட தான் இந்த முத்தம்! இயல்பா இருனு உன்னையும் சொல்றேன்! ” என்றான் ரவி சாதாரணமாக.
“அவ்ளோ சீக்கிரம் அவங்களை மறந்துட்டீங்களா?” நக்கலாக கேட்டாள் குறிஞ்சி.
“இப்போ உனக்கு என்ன பிரச்சனை?” கடுப்பாகி விட்டான் ரவி. அவன் மனதார அவளை திருமணம் செய்து கொள்கிறான் என்று காட்டி விட்டதாக அவன் நினைத்தான். இன்று குறிஞ்சியிடம் அவன் இப்படி செய்ததை அவனாலே நம்ப முடியவில்லை. என்ன தான் கௌஷிகாவை நினைக்க விட்டாலும் குறிஞ்சியிடன் இந்த நெருக்கம் மிக வேகம் தானே? அவளும் பாயிண்ட்டாக கேள்வி கேட்க, பதில் சொல்ல முடியவில்லை அவனால்.
ரவி சொல்லியதை ஏற்க முடியவில்லை அவளால். தீடீரென்ற அவனின் நெருக்கத்திற்கு அர்த்தம் தெரியவில்லை அவளுக்கு. அவன் மனம் தெரியவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகாமல் அவள் தவித்தாள்.
“என்னை பிடிக்காது தானே உங்களுக்கு? இனிமே நான் உங்க பொண்டாட்டினா எப்படி?” துணிந்து கேட்டு விட்டாள்.
“கொஞ்சம் பிடிக்காது தான்! பரவாயில்லை! நீ தான்னு ஆய்டுச்சு! இப்படியே போகட்டும் பார்த்துக்கலாம்” என்றான் ரவி. இது ஒரு கேள்வியா என்பது போல்.
அவள் மனம் முரண்டியது. அதெப்படி என்னை கொஞ்சமும் பிடிக்காது ஆனால் இப்போ கல்யாணம் என்ற உடனே முத்தம் கொடுப்பானா? கடுப்பானவள்,
“அதெல்லாம் முடியாது! எனக்கு இஷ்டம் இல்லை. எல்லாத்தையும் நீங்க சொல்ற மாதிரி இப்படியே போகட்டும்னு என்னால எடுத்துக்க முடியாது” என்றாள்.
“அப்புறம்….” என்றான் ரவி கதை கேட்பது போல்,
“நாம கொஞ்சம் பழகி….”
“நாம என்ன தெரியாதவங்களா?”
“கல்யாணம் பெரிய விஷயம்! நாம பிரண்ட்ஸ் மாதிரி நல்லா புரிஞ்சுகிட்டு….”
“ஹலோ, இந்த கதையில் எல்லாம் வர்ற மாதிரி எல்லாம் என்னால முடியாது! உன் கூட தான் இத்தனை வருஷம் பழகி இருக்கேனே! பழகினது எல்லாம் போதும். எனக்கு பிரண்ட் எல்லாம் வேண்டாம், பொண்டாட்டி தான் வேணும்! அதுக்கு ரெடினா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு. இல்லைனா உங்க அப்பா கிட்ட போய் சொல்லிடு” என்றான் வேகமாக.
அவளை ஸ்பரிசித்த இதழ்களும் கரங்களும் மீண்டும் அவளை அவனிடம் இழுக்க துடிக்க, அவளின் இந்த பேச்சிற்கு சம்மதம் சொல்ல முடியாமல் மறுத்தான் ரவி. இங்கு வரும் வரை கூட அவனுக்கு இப்படி உணர்வுகள் வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை! அவளை கண்டதும் அவனின் எண்ணங்கள் எல்லாம் மாறி போவதை நினைத்து ஆச்சர்யம் அடைந்தான் ரவி. இத்தனை வருஷம் இல்லாமல் இப்போ மட்டும் ஏன் இப்படி? அவனுக்கு புரியவே இல்லை.
ஒன்றும் சொல்லாமல் முறைத்தாள் குறிஞ்சி. இதை போய் சொல்ல முடியுமா? கோகிலாவே இவளை திட்டுவாரே! திருமணத்திற்கு பின் தான் சம்மதிக்கவில்லை என்றால் ரவியால் ஒன்றும் செய்யமுடியாது. அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இப்போதைக்கு அந்த பேச்சை விட்டாள் குறிஞ்சி.
“என்ன, என்ன சொல்ல போறே?” உல்லாசமாக வம்புஇழுத்தான் ரவி.
“ஹான்…. உங்க மாப்பிள்ளைக்கு இப்போ அவசரமா பொண்டாட்டி வேணுமாம்! வேற வழி இல்லை கட்டிக்கிறேன்னு தான் சொல்லணும்” என்றாள் குறிஞ்சி முறைத்து கொண்டே.
அவள் சம்மதத்தில் அப்படி ஒரு சந்தோஷம் வந்தது அவனுக்கு. அதோடு அவள் சொன்ன அழகில் கிளர்ந்தவன், முதலில் இருந்த கொஞ்சம் நஞ்ச தயக்கத்தையும் விட்டு, அவளை வேகமாக தன்னிடம் இழுத்து இறுக்கி அணைத்தான். அணைத்தவன் அவள் கழுத்து வளைவில் முத்தமிட்டு,
“அப்போ பொண்டாட்டியோட கடமை எல்லாம் என்னனு உனக்கு தெரியும்! அப்படி தானே?” என்றான் சரசமாக. பேச்சு பேச்சாக இருக்க, அவன் கரங்கள் அவளை அவன் இஷ்டப்படி வளைத்தது.
ஒரே நேரத்தில் விருப்பமும் விருப்பமின்மையாலும் தவித்தாள் குறிஞ்சி. அவன் அணைப்பது பிடித்தாலும் அதில் அவளுக்கான அவன் காதல் இல்லையே! இந்த இடத்தில் யார் இருந்தாலும் அவன் இதை தானே செய்வான் என்று கண்ணை கரித்தது குறிஞ்சிக்கு. முயன்று அவனை தள்ளி விட்டு வெளியே ஓடினாள் குறிஞ்சி.
சற்று நேரம் அறைக்குள்ளேயே இருந்தான் ரவி. அவனை நிதானப்படுத்தி கொண்டு வெளியே வந்தான். அவளை அவன் கையணைப்பில் வைத்து இருந்தவனுக்கு உலகமே மறந்து இருந்தது. அவள் மட்டுமே அவன் நெஞ்சை நிறைத்து இருந்தாள். அவள் சென்ற பின், சிரித்து கொண்டு அமர்ந்து இருந்தவனுக்கு, குறிஞ்சியால் தான் இப்படி சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறேன், இவள் மேல் என்னையும் அறியாமல் எனக்கு அன்பும், உரிமை உணர்வும் இருக்கிறது. அதனால் தான் சட்டென்று அவளிடம் இப்படி நடந்து கொண்டேன் என்று நினைத்தான். ஏனென்றால் ஒரு முறை கூட கௌஷிகாவிடம் இப்படிப்பட்ட உணர்வு குவியலை அவன் உணர்ந்ததில்லை.
வெளியே சென்ற மகளின் முகத்தை பாராமல் பார்த்த கோகிலாவிற்கு பரம திருப்தி! பல குழப்பம் இருந்தாலும், ரவியின் அணைப்பு அவளுக்கு தந்த உணர்வை மறைக்க முடியவில்லை குறிஞ்சியால். இந்த பூரிப்பை தானே குமாருடன் நிச்சயம் ஆன நாளில் இருந்து அவர் மகள் முகத்தில் தேடினார் கோகிலா.