காயமின்றி வாழும் காதல் – 20
அடுத்த இரண்டு நாளில் ரவி சென்னைக்கு புறப்பட்டு சென்றான். இனி திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு தான் வர முடியும் என்று சொல்லி சென்றான். ஒரு மாதம் தானே இருந்தது திருமணத்திற்கு. எந்த தடையும் தடங்கலும் வந்து விடக்கூடாது என்று கடவுளை வேண்டியபடி திருமண வேலையை பார்த்தனர் இரு வீட்டிலும்.
புறப்படும் முன் சொல்லிக் கொள்ள வந்த ரவியை குறிஞ்சியுடன் தனியே பேச சொல்லி அனுப்பினார் கோகிலா. அம்மாவை ஏதும் சொல்லமுடியாமல் பல்லை கடித்தாள் குறிஞ்சி. அவன் ஏதாவது எல்லை மீறுவான் என்று அவனை தனியே பார்க்க கூடாது என்று இருந்தாள் குறிஞ்சி. இப்போதெல்லாம் குறிஞ்சி ரவி வீட்டிற்கு செல்ல முடியாதே! அதனால் அவர்கள் அன்றைக்கு பிறகு பார்த்துக் கொள்ளவே இல்லை. அவள் அறைக்கு வந்தவன், அவள் உஷாராக கதவை திறந்தே வைக்க சிரித்தான். மாப்பிள்ளை என்று அனுப்பி வைத்த பின் யார் வருவார்கள்?
“என்ன குள்ளி, அன்னைக்கு நடந்த விஷயத்திலே ஸ்டக் ஆகி நிற்கிறே போல்! நான் அதை நினைக்கவே இல்லை. ஆனால் நீ இப்படி குறிப்பு கொடுத்த அப்புறம் நான் சும்மா போனா நல்லாவா இருக்கும்?” என்றவன், கதவு திறந்து இருப்பதையும் பொருட்படுத்தாமல் அவளை இழுத்து அவள் உதட்டோடு உதடு உரசி, பின் அவளின் உதட்டோடு தன் உதட்டை நன்றாக பொருத்தி கொண்டான். கத்த வேண்டும் என்று தோன்றினாலும் அவனை காயப்படுத்த மனமின்றி அவன் அணைப்புக்குள் அடங்கி நின்றாள் குறிஞ்சி. வஞ்சியவளின் ஒரு மனம் அவனையும் அவன் முத்தத்தையும் ரசிக்க தான் செய்தது.
“ஒரு மாசம் கழிச்சு பார்ப்போம் குள்ளி, ஒழுங்கா அடக்க ஒடுக்கமா இரு! ஏதாவது பிரச்சனையை இழுத்து விட்றாதே! பாவம் உங்கப்பா” என்று செல்லமாக மிரட்டினான் ரவி.
ஆனால் அவனின் அன்பு பற்றி தெரியாதவளுக்கு முகம் சுணங்கி விட்டது! ஆனால் காட்டிக்கொள்ளாமல்,
“நீங்க மட்டும் என்ன ஒழுங்கு? பாவம் மாமாவும் தான்!” கௌஷிகாவை மனதில் வைத்து கூறினாள் குறிஞ்சி.
“என்னோட வம்பு வளர்க்க ரொம்ப ஆசைப்படுறே போல், சண்டை போட தான் ரொம்ப பிடிக்குமே? ஆனா பாரு, நான் பார்க்க வளர்ந்த குள்ளி நீ! உன் பருப்பு எதுவும் என்கிட்ட வேகாது” என்றவன் அவளை கரங்களால் சீண்டி சிவக்க வைத்தான்.
துள்ளியவள், “அப்படி எல்லாம் என்னை பத்தி ஈஸியா நினைக்காதீங்க! உங்களுக்கு டப் கொடுப்பேன்” என்றாள் இவளும் மிரட்டலாக.
“ஹஹ எப்படி டப் கொடுப்பே சொல்லேன்!” அவளின் கோபம் அவனுக்கு சிரிப்பாக தான் இருந்தது.
“செய்றப்போ பாருங்க!” பழிப்பு காட்டினாள் குறிஞ்சி.
“ம்ம்….சரி டி குள்ளி! ரிஸ்க் எடுத்து உன்னை கல்யாணம் பண்ணுறேன்! லைப் இன்டரெஸ்டிங்கா போகணும்! என்ன? பார்த்து செய்!” என்று மீண்டும் கிண்டல் அடித்து விட்டு வேகமாக அவள் இதழில் ஒற்றி விட்டு கிளம்பினான் ரவி.
நான் எதை நம்பி ரிஸ்க் எடுக்கிறேன் தெரியலை! அவனை திருமணம் செய்வதை பற்றி மனதோடு சொல்லி கொண்டாள் குறிஞ்சி.
*************
ஒரு மாதம் கழித்து,
திருமணத்திற்கு என இரண்டு வாரங்கள் லீவ் எடுத்து கொண்டு இன்று காலையில் தான் ஊருக்கு வந்தான் ரவி. இன்னும் இரண்டு நாட்களில் திருமணம்.
கடந்த ஒரு மாதத்தில் ரவியும் குறிஞ்சியும் பேசிக் கொள்ளவில்லை. தன்னை அப்படி முத்தமிட்டவன், ஆசையாக அழைத்து பேசுவான் என்று எதிர்பார்த்தாள் குறிஞ்சி. ஆனால் எதிர்பாராத திருமணம், அதற்கு விடுமுறை எடுக்க வேண்டி இருக்க, அவனுக்கு வேலை பளுவை உயர்த்தி இருந்தது அது. அதோடு குறிஞ்சியை அழைத்து வர வீடு பார்க்க வேண்டி வேறு இருந்தது. அனைத்தும் சேர்ந்து அவளுடன் பேச ஆசை இருந்தாலும் அவள் நிச்சயம் முறுக்குவாள், அதனால் பேசி வீணாக சண்டை வளர்க்க வேண்டாம் என்று ஆசையை கட்டுப்படுத்தி கொண்டு சும்மா இருந்தான் ரவி. அது குறிஞ்சிக்கு பலத்த ஏமாற்றத்தையும் அவன் மேல் நம்பிக்கையின்மையும் கொடுத்து விட்டது. அவன் எண்ணம், தேவை மட்டுமே அவனுக்கு பெரிது என்று தோன்றியது அவளுக்கு.
இரண்டு நாட்கள் விரைந்தோடி திருமண நாளும் வந்தே விட்டது.
சொந்த ஊரில் சொந்த பந்தங்கள் மத்தியில் மிக சிறப்பாக மகனின் திருமணத்தை நடத்தினார் மூர்த்தி. ஒற்றை பெண்ணான குறிஞ்சிக்கு கணக்கு வழக்கு இல்லாமல் அறிவழகன் சீர் செய்தார். மருமகளை பெண் அழைக்க பல்லக்கு ஏற்பாடு செய்து இருந்தார் மூர்த்தி. அவருக்கு போட்டியாக அறிவழகன் மாப்பிள்ளை அழைப்பிற்கு குதிரை வண்டி ஏற்பாடு செய்து இருந்தார். முதல் நாள் வானவேடிக்கை அமளிதுமளி பட்டது. ஆண்கள் சந்தோஷத்தில் பணத்தை வாரி இறைத்து திருமணம் செய்தார்கள். பெண்கள் இருவருக்கும் தான் திருஷ்டி பட்டு விட போகிறது என்று பயமாக இருந்தது.
அனைவரும் சந்தோஷமாக இருக்க மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் அவரவர் எண்ணத்தில் மூழ்கி இருந்தனர். ஒரு மாசம் கழிச்சு வந்து இருக்கேன், ஆசையா பார்க்காம ஆராய்ச்சியா பார்க்கிறா பாரேன்! கடுப்பாக வந்தது ரவிக்கு.
இன்னைக்கு இவர் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கலாம்? முதல் ராத்திரியை நினைத்து பயந்தாள் குறிஞ்சி. அந்த அளவிற்கு அவளை யோசிக்க வைத்திருந்தான் ரவி அவனின் ஆளுமையில்.
தாலி கட்டும் போது குனிந்து இருந்தவளின் காதில், “பொண்டாட்டி, என்னை பாரு டி” என்று அவனை பார்க்க வைத்து தான் தாலி கட்டினான் ரவி. மூணு முடிச்சையும் அவன் தான் போட்டான். திருமணத்திற்கு முதல் நாளே ஷ்யாமளாவிடம் சொல்லி விட்டான்,
“இங்க பாரு, சும்மாவே நீ தான் அவளுக்கு மவுத் பீஸ்! இனிமே அந்த கதையெல்லாம் என்கிட்ட செல்லாது! மொத்தமா அவ என் கன்ட்ரால் தான். எல்லா உரிமையும் எனக்கு தான். அதனால் நான் தான் மூணு முடிச்சையும் போடுவேன். நீ ஒத்து!”
“அடப்பாவி!” சிரித்தாள் ஷ்யாமளா.
சொன்னது போலவே ஆசையாக மூன்று முடிச்சையும் சுற்றி நின்றவர்களின் கிண்டல் கேலி எதையும் பொருட்படுத்தாமல் சிரிப்புடன் போட்டான் ரவி.
அவனின் உரிமை உணர்வை அனைவரும் பொண்டாட்டி மேல் பாசம் என்றே பார்த்தார்கள். ஆனால் சம்பந்தபட்டவளுக்கு விஷயம் தெரிவிக்கபட்ட போது அவளுக்கு மட்டும் தப்பாக தான் தெரிந்தது. அதென்ன கன்ட்ரோல்! அப்படி என்னை அடக்கி வைக்க நான் என்ன பைத்தியமா? ஆத்திரமாக வந்தது அவளுக்கு.
அவனை நோக்கிய கண்களுக்கு முத்தம் கொடுக்க ஆசையாக இருந்தது அவனுக்கு. ஆனால் சொந்தங்கள் ஒரு வழி செய்து விடுவார்கள் என்று அடக்கி கொண்டான்.
தண்ணீர் குடத்திற்குள் சங்கும் மோதிரமும் போட்டு எடுக்க சொல்லும் போது தண்ணிக்குள் அவள் விரலை வளைத்து பிடித்து கொண்டான் ரவி. எடு எடு என்று சொல்லிய சுற்றி நின்றவர்கள், ரவியின் வேலையை கண்டுபிடித்து சிரிக்க, இவள் முகம் செவ்வானமானது. அவன் எதை பற்றியும் கவலை படவில்லை. கண்களால் அவள் கெஞ்ச,
“அத்தான் எனக்கு வேணும் சொல்லு, ரெண்டையும் உன்கிட்டயே கொடுத்துறேன்! இல்லை கையை விட மாட்டேன்” என்று அத்தனை பேர் முன்னிலும் பேரம் பேசினான்.
ப்ளீஸ் என்று அவள் வாயசைக்க, “வாயை திறந்து நீ கேட்டா தான்” என்றான் மறுபடி. அனைவரும்,
“அப்போ நீ என்ன கேட்டாலும் செஞ்சு கொடுப்பேன்னு சொல்றான் ரவி. கேளு கேளு” என்றார்கள். அவர்களுக்கு எல்லாம் அவன் குறிஞ்சிக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறான் என்று தோன்றியது. வழக்கம் போல் அவளுக்கு மட்டும் அடக்குமுறையாக தெரிந்தது. அவன்கிட்ட போய் நான் நிற்கணுமா? அவன் கிட்ட கெஞ்சணுமா? என்று நினைத்தாள்.
“எனக்கு வேண்டாம், அவரே எடுத்ததா இருக்கட்டும்” என்றாள் குறிஞ்சி கோபத்தில் முகம் சிவக்க.
என்கிட்ட கேட்டா என்ன? என்ற நினைத்த அவன் பிடிவாதமாக அவள் கையை பிடித்து கொண்டே இருக்க, சுற்றி இருந்தவர்கள் பொறுமை பறக்க, இவள் தான் இறங்கி போவது போல் ஆனது.
“கொடுங்க அத்தான்” என்றாள் பல்லை கடித்து கொண்டு. உனக்கு இல்லாததா? என்றவன் அவள் கையை விட்டு அவள் கைக்குள் இரண்டு பொருளையும் வைத்து திணித்தான்.
மாலை மறைவில், கிடைத்த தனிமையில் எல்லாம் அவளை சீண்ட ரவிக்கு மிகவும் பிடித்து இருந்தது. கொஞ்சம் முகம் சிவந்தாலும் அதையும் மீறி அவளின் விலகல் ரவிக்கு புரிந்தது. கௌஷிகாவின் விஷயம் இவளை என்னுடன் ஒன்ற விடாமல் தடுக்கிறதோ? முதல் முத்தம் கொடுத்து அன்றே அதை பத்தி பேசினாளே! யோசித்தான் ரவி.
அவனுக்கு எந்த குழப்பமும் இப்போது இல்லை. அவனுக்கு குறிஞ்சியின் மேல் நிறைய ஆசை இருக்கிறது என்று தான் தெரிந்து இருந்ததே! திருமணம், முதல் இரவு அனைத்தையும் அவன் இயல்பாக தான் எதிர்பார்த்தான். சொல்ல போனால் உண்மையில் மிகவும் சந்தோஷமாகவும் இருந்தான். அதனால் இப்போது அவளின் விலகல் அவனுக்கு அலாரம் அடிக்க வைத்தது. அப்படி எல்லாம் உன்னை விலகி போக விட மாட்டேன் குள்ளி, உனக்கும் எனக்கும் இடையில் ஒன்னும் கிடையாது! என்று சொல்லி கொண்டான்.
கௌஷிகாவின் விஷயத்தால் அவனுக்கு உண்மையில் பயமாக இருந்தது. அவள் கேட்டது போல் இடைவெளி கடைபிடித்தால் அவனால் குறிஞ்சியிடம் ஒரு அளவுக்கு மேல் உரிமை எடுக்க முடியாது. உரிமை, நெருக்கம் இல்லாவிட்டால் அவர்களால் நெருங்கி பழகி அவர்களுக்குள் இருக்கும் வேற்றுமையை களைய முடியாது.
சண்டையோ, சமாதானமோ என் பொண்டாட்டி என்பதை அவள் மனதில் பதிந்துகொண்டு போடட்டும் என்று நினைத்தான் ரவி. அவள் சண்டை போடுவாள் என்பது அவ்வளவு நிச்சயம் அவனுக்கு. கௌஷிகாவின் விஷயம் மட்டுமே நினைத்தானே தவிர அவளின் எந்த சஞ்சலம் பத்தியும் அவனுக்கு கொஞ்சம் கூட ஐடியா இல்லை.
குறிஞ்சி பயந்த முதல் இரவும் வந்தது. அவளை எளிமையாக அலங்கரித்தாள் ஷ்யாமளா. புன்னகையுடன் குறிஞ்சிக்கு தலை பின்னி கொண்டு இருந்தாள் அவள்.
“சிரிக்காதீங்க மதினி. எரிச்சலா இருக்கு” என்று அவளை கடித்தாள் குறிஞ்சி.
“ஹேய், நான் என் தம்பியோட சேட்டையை நினைச்சு சிரிக்கிறேன். உன்னை விட மோசமான ஆள் போல் அவன். இவ்ளோ சேட்டை செய்வான்னு இப்போ தான் எனக்கு தெரியும்” என்றாள்.
“எல்லாம் வேணும்னே என்னை வம்பு இழுக்க தான் பண்றார். நீங்க ரொம்ப பெருமைபட்டுக்க வேண்டாம்.”
“சரி, நீயாச்சு! என் தம்பியாச்சு! நான் தலையை கொடுக்கலை பா! அவன் வேற சொல்லி இருக்கான்” என்றாள்.
பெரியவர்கள் எல்லாம் மனம் நிறைந்து இருவரையும் ஆசிர்வாதம் செய்தனர். ரவி அறைக்கு சென்ற பின், குறிஞ்சியை பிடித்து கொண்டு கோகிலா அறிவுரை கூறப் போக, விடுடி என் மருமகளை என்ற மேகலா, ஷ்யாமளாவிடம் குறிஞ்சியை அழைத்து போய் மாடியில் விட சொன்னார். குறிஞ்சியின் மனநிலை புரிந்த ஷ்யாமளா,
“உன் காதல் நிறைவேறும்னு நாம நினைக்கவே இல்லை, நிறைவேறிடுச்சு. அது மாதிரி உன்னை சீக்கிரம் அவனுக்கு புரியும், உன் மேல் விருப்பம் இல்லைனா ரவி இவ்ளோ சந்தோஷமா இருப்பானா? கொஞ்சம் யோசி” என்று மட்டும் சொல்லி உள்ளே அனுப்பினாள்.
குறிஞ்சியின் தலையில் எதுவும் ஏறவில்லை. முழுக்க பதட்டம் மட்டுமே! ரவியை குறித்து மட்டுமில்லை, அவளை குறித்தும் தான். அவன் தன்னை அணுகினால் தன்னால் முழு எதிர்ப்பு காட்ட முடியாது என்பதை உணர்ந்து இருந்ததால் வந்த பதட்டம். விருப்பு மற்றும் வெறுப்பு என்று இருந்தாள் குறிஞ்சி.
கதவை திறந்து கொண்டு தயக்கமாக உள்ளே வந்த குறிஞ்சியை கண்ட ரவிக்கு அவளின் பதட்டம் அப்பட்டமாக தெரிந்தது. ரவி வருவதற்கு முன்பே ஷ்யாமளா பால், பழங்கள் அனைத்தையும் அறையினுள் வைத்து விட்டாள். குறிஞ்சியின் மனநிலைக்கு இந்த சம்பிரதாயம் எல்லாம் தேவையில்லை என்று நினைத்தாள் அவள். அதனால் அவளிடம் எதையும் கொடுக்கவில்லை.
“ட்ரஸ் சேஞ்ச் எதுவும் பண்ணிக்கிறியா? அதோ அதுக்கு பின்னால் போய் பண்ணிக்கோ” என்றான் ரவி இயல்பாக. அவன் அறையில் மரத்தில் செய்யப்பட்ட தடுப்பு ஒன்று இருந்தது. குறிஞ்சியின் உடைகள் கொஞ்சம் இங்கே வைத்து இருப்பதாக ஷ்யாமளா சொல்லி இருந்தாள். அதனால் அவள் நைட்டியை தேடி எடுத்தவள், தடுப்பிற்கு அந்த பக்கம் சென்று உடை மாற்றினாள்.
ஓரவிழியில் கண்ட ரவிக்கு அவள் கணுக்கால் மட்டுமே தெரிந்தது. அதை காணும் போதே அவனுக்கு ஆசைகள் துளிர் விட ஆரம்பித்தது. கழட்டப்பட்ட ஒவ்வொரு உடுப்பும் தடுப்பில் போடப்பட ரவியின் கற்பனை விரிந்தது. இப்போதே அவளை உணர வேண்டும் என்று தவித்தான் ரவி. ஆனால் அவளுக்கு போதிய நேரம் கொடுக்க வேண்டும் என்று தெரிந்ததால் தன்னை அடக்கி கொண்டான்.
உடைகளை மடித்து அந்த தடுப்பிலேயே போட்டு விட்டு மெத்தையில் சாய்ந்து அமர்ந்து இருந்த அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டாள் குறிஞ்சி.
“தூக்கம் வருதா பொண்டாட்டி?” என்றான் குறும்பாக ரவி. அவளை பேச வைத்தால் சூழ்நிலை கொஞ்சம் இலகுவாக இருக்கும் என்று ஆரம்பித்தான்.
ஆமாம் என்று சொல்வதா இல்லை என்று சொல்வதா என்று சீரியஸாக யோசனை செய்தாள் குறிஞ்சி. அவள் சொல்லும் பதிலுக்கு அவன் எப்படி பேசுவான் என்று யோசித்தாள்.
“ஒரு பதில் சொல்ல இவ்ளோ யோசனை யா? பரவாயில்லையே தாலி கட்டின அன்னைக்கே நல்ல முன்னேற்றம்! இனிமே இதே மாதிரி என்ன செஞ்சாலும் யோசிச்சு செய்!” சீண்டினான் அவளை.
அவன் எதிர்பார்த்த மாதிரி அவனின் சீண்டல் நன்றாக வேலை செய்தது.
“கல்யாணம் தான் யோசிக்காம பண்ணிக்கிட்டேன்! இனிமே எதுனாலும் யோசிச்சு தான் செய்யணும்.” நக்கலாக வந்தது பதில்.
“இல்லையே, அத்தானுக்கு பொண்டாட்டி வேணுமாம் அதனால் ஓக்கே சொல்ல போறேன்னு தானே என்கிட்ட சொன்னே?”
கடவுளே! இவன் எப்படினாலும் அந்த விஷயத்திற்கே வந்துட்டானே! நினைத்தவளுக்கு படப்படப்பாக வந்தது. அவள் படபடப்பை கூட்டுவது போல் எழுந்து வந்து அவள் அருகில் அமர்ந்தான் ரவி. மனது மட்டுமில்லாமல் விழியும் படப்படக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள் குறிஞ்சி. காலையில் ஆசைபட்டதை இப்போது செய்தான் ரவி. அவளின் படபடக்கும் விழிகளில் முத்தமிட்டான். கைகளை இறுக்கி கொண்டு கண்களை மூடி கொண்டாள் குறிஞ்சி.