24. காயமின்றி வாழும் காதல்

5
(7)

காயமின்றி வாழும் காதல் – 24

குறிஞ்சியை அனுப்பி விட்டு வந்தவனுக்கு வீட்டினுள் நுழைய கூட பிடிக்கவில்லை. தினமும் அவன் அலுவலகத்தில் இருந்து வரும் போது சிரித்த முகமாக கதவை திறக்கும் அவள் முகம் மனதில் மின்னியது. எவ்வளவு வேலை இருந்தாலும் அவ்வப்போது அவள் நினைவு வந்து விடும் அவனுக்கு. உடனே அவளை அழைத்து இரண்டு வார்த்தை பேசி வைப்பான். அப்போது எல்லாம் அவளை தனியே வீட்டில் விட்டு வந்ததால் வந்த பொறுப்பு என்று நினைத்தவனுக்கு இப்போது தான் அது பொறுப்பு அல்ல, அவள் மேல் இருக்கும் அளப்பரியா முடியா காதல் என்று புரிந்தது. அவள் குரல் கேட்கவே அவளை அழைத்து இருக்கிறான் என்று புரிந்தது. திருச்செந்தூரில் ஒர்க் பிரம் ஹோம் செய்த போது அவள் அவன் வீட்டிற்கு வரும் வரை உற்சாகமின்றி இருப்பவன் அவள் வந்ததும் சட்டென்று புத்துணர்ச்சி பெற்றது ஏன் என்று இன்று புரிந்தது.

அவளோடு அவன் உணர்ந்த ஆசை, நெருக்கம், தாபம் அனைத்தும் தெளிவானது ரவிக்கு. அனைத்திற்கும் மேலாக குமார் வந்த அன்று அவன் உணர்ந்த உணர்வெல்லாம் இன்று அவனை பார்த்து சிரித்தது. ஏதேதோ காரணம் கண்டுபிடிச்சியே, உன் மனசை கண்டுபிடிச்சியா? எப்படி இப்படி ஒரு முட்டாளா இருந்து இருக்கிறேன்? அப்படி ஏன் திரை போட்டுக்கிட்டு பிடிவாதமா இருந்தேன்? தன்னையே திட்டி கொண்டான் ரவி.

கௌஷிகா ஜெர்மனியில் இருந்து புனே சென்ற போது, அதன் பின்னர் காதலை முடித்து கொண்ட போதும் ஒரு நிமிஷம் கூட அவளை மிஸ் செய்வதாக ரவிக்கு தோன்றியதே இல்லை. பரவாயில்லை நாம ரொம்ப எமோஷனல் ஆள் இல்லை என்று அவனை பற்றி அவனே பெருமை பட்டு இருக்கிறான். ஆனால் இன்று குறிஞ்சியிடம் ஓடத் துடிக்கும் மனதும், எப்போது வேண்டுமானாலும் நான் கரையை கடப்பேன் என்று நிற்கும் கண்ணீரும் அவனுக்கு அவன் மனதை அழகாக காட்டியது.

அவன் அப்பா சொன்னது இப்போது புரிந்தது. குறிஞ்சிக்கு, இவன் காதலுக்கு முன்பே மாப்பிள்ளை பார்த்து இருந்தால் அப்போதே காதலை உணர்ந்து இருப்பான் ரவி. அவள் இவனுக்கு இல்லை என்ற நிலை வரவே இல்லாததால் அவனால் அவன் போட்டு இருந்த முகமூடியை மீறி அவன் காதலை உணர முடியவில்லை.

காதலை உணர்ந்ததும் கண்ணீர் கரையை உடைக்க, சற்று நேரம் கண்ணீர் வழிய அமர்ந்து இருந்தான் ரவி. ஒவ்வொரு முறையும் அவளை காயப்படுத்தியது எல்லாம் நினைவில் வந்து மனதெல்லாம் அறுத்தது. இவன் தவறு செய்து இருக்கும் நிலையில் கூட அவளின் கோபமும் விலகலும் அவனை மிகவும் வாட்டுகிறது, ஏற்று கொள்ள முடியவில்லை! அவனின் குஞ்சம்மாவை எவ்வளவு வருந்த வைத்து விட்டான்! நொந்து கொண்டான் ரவி!

அதற்கு மேல் தனியே அங்கே இருக்க முடியாமல் வீட்டை பூட்டியவன், நண்பர்கள் அறைக்கு சென்றான்.

“என்ன மச்சி? பிரகாசமா இருந்த நீ இப்போ பியூஸ் போன பல்ப் மாதிரி இருக்கே? தங்கச்சியோட சண்டை போட்டு வந்துட்டியா?” என்றான் ஒரு நண்பன்.

“ஊருக்கு போய்ட்டா டா” என்றான் சண்டை என்று சொல்லாமல்.

“இப்போ இப்படி தான் இருக்கும்! கொஞ்சம் வருஷம் கழிச்சு நீயே தயவு செஞ்சு ஊருக்கு போம்மானு வழியனுப்பி வைப்பே! பிரீயா விடு…. புது மாப்பிள்ளை பீலிங் இதெல்லாம்” என்று ஒட்டினார்கள் அவனை.

அவர்களுக்கு பதில் எதுவும் சொல்லவில்லை ரவி. அமைதியாக படுத்து விட்டான். எவ்வளவு யோசித்து இருந்தால் இப்படி தெளிவாக எனக்கு பை சொல்லுவாள்! என்னை மன்னிக்கவே மாட்டாளா? பயமாக இருந்தது அவனுக்கு. அவள் இல்லாத ஒரு வாழ்வை அவனால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. அவள் வேண்டும், அவளின் முழு மனதோடு வேண்டும். அவளை போல் நானும் அவளை காதல் செய்வேன்! அவள் சொன்னது போல் இல்லாமல் அவளால் என்ன பிரச்சனை வந்தாலும் என் காதல் மாறாமல் இருப்பது போல் காதலிப்பேன். அவள் என்கூட இருந்தால் போதும், வேறு ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி தன் மனதில் நம்பிக்கையை வளர்த்தான் ரவி. அப்படி எல்லாம் என்னை விட்டு சுலபமாக அவளை போக விட மாட்டேன் என்று முடிவு செய்து கொண்டான் ரவி. அதற்கு பின் தான் அவனால் கண் அசர முடிந்தது. ஆனாலும் உறங்க முடியவில்லை. நினைவில் கூட குறிஞ்சி அவனுடன் பெரிதாக சண்டை போட வில்லை ஆனால் கனவில் அவனிடம் மூச்சு வாங்க பேசி, அழுது சண்டை போட்டாள். மன்னிப்பு கேட்டே ஓய்ந்து போனான் ரவி. கனவில் இருந்து முழித்தவனுக்கு சிரிப்பு தாங்கவில்லை. கனவில் கூட சண்டை போடுறவளா தான் தோணுது! என்று.

பஸ்ஸில் சென்று கொண்டு இருந்தவளுக்கும் தூக்கமே வரவில்லை. என்ன தான் அவனிடம் தைரியமாக பேசிவிட்டு வந்தாலும், உயிரும் உணர்வுமுமாக வாழ்ந்தது அவளை கொன்றது. அவனின் குஞ்சம்மாவில் அவளை தொலைத்து இருந்தாள் குறிஞ்சி. அவன் அதை சொல்லும் விதத்தில் உருகி போவாள் அவள்!

இந்த திருமணத்தை முடித்து கொள்வது அவ்வளவு சுலபம் இல்லை, பெற்றோர்கள் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்களை மீறி செய்ய வேண்டும் என்று கவலைப்பட்டாள் குறிஞ்சி.

மீண்டும் மனதை இறுக்கி பிடி! வேறு யாருடனும் பிரச்சனை என்றாலே தாங்க மாட்டான்! நீ முன்பு நினைத்தது போல் அவனுடனே பிரச்சனை செய்! கீழ்ப்படிதல் இல்லை என்றாலே உன் அத்தான் காணாமல் போவான்! அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டாள்.

குறிஞ்சி ஊருக்கு வந்து ஒரு வாரம் ஆகி விட்டது. ரவி அடிக்கடி அவளுக்கு போன் செய்து பேசுவான்.அவளும் சகஜமாக இருக்க, யாருக்கும் எந்த சந்தேகமும் தோன்றவில்லை. ஷ்யாமளா வந்து பார்த்து விட்டு இரண்டு நாள் தங்கி விட்டு சென்றாள். அவளிடமும் எதையும் சொல்ல வில்லை குறிஞ்சி. அவன் அடிக்கடி போன் செய்த போது,

“எனக்கு அடிக்கடி ஏன் போன் பண்றீங்க?” எரிந்து விழுந்தாள் அவனிடம். அவன் உருகுவது போல் பேச ஒரு சமயம் சாதாரணமாக இருந்தாலும் இன்னொரு சமயம் இவளுக்கு கண்ணை கரித்தது! அந்த கோபத்தை அவனிடம் காட்டினாள்.

“இப்போ என்னால் ஊருக்கு வர முடியாது! விஷயத்தையும் சொல்ல முடியாது. அப்படி இருக்கும் போது நான் உன்கிட்ட பேசலைனா சந்தேகம் வரும் எல்லாருக்கும். கேட்பாங்க” என்றான் ரவி.

“ஓ! உள்ளுக்குள்ளே ஒரு காரணத்தை வைச்சுக்கிட்டு வெளியில் வேற மாதிரி செய்றதை உங்களுக்கு நல்லா வருது! நடத்துங்க! நடத்துங்க!” தனக்காக பேசுகிறானோ என்ற சந்தேகம் போனதில் கொஞ்சம் ஏமாற்றம் வர வார்த்தையால் குத்தினாள் குறிஞ்சி ரவியை.

மிகவும் மகிழ்ந்து போய் விட்டான் ரவி. கோபம் வருகிறதே குறிஞ்சிக்கு தன் மேல்! ஏதோ என்னிடம் எதிர்பார்த்து இருக்கிறாள் தானே? சந்தோஷப்பட்டு போனான் அவன். இல்லையேல் ஞானி போல் உணர்ச்சியே இல்லாமல் அல்லவா பேசுவாள்.

அடுத்த வாரத்தில் ஒரு நாள், மேகலாவின் வீட்டிற்கு வந்தார் கோகிலா. குறிஞ்சியும் மேகலாவும் வேலை செய்து கொண்டு இருந்தனர். குறிஞ்சி இருவர் வீட்டிலுமாக இருப்பாள்.

“நீ வந்து ஒரு வாரம் ஆச்சே, எப்போ கிளம்ப போறே? மாப்பிள்ளை வந்து உன்னை அழைச்சிட்டு போவரா? இல்லை நீயே போய்டுவியா?” கோகிலாவிற்கு சந்தேகம் ஆரம்பித்து இருந்தது. திருமணம் ஆகி இரண்டு மாதத்தில் என்ன தான் பெற்றோரை பார்க்க வேண்டும் என்று தோன்றினாலும் ஒரு வாரமாக வந்து இருந்து இப்படி ஊரை சுத்தி வருவாளா ஒருத்தி?

“ரவி எதுவும் உன்கிட்ட சண்டை போட்டனா வள்ளி?” மேகலாவும் கேட்டார்.

“ஏன் இவ போட மாட்டாளா மதினி?”

“என் மருமக ஆரம்பிச்சு இருக்க மாட்டா!” மேகலாவின் கூற்றில் கோகிலாவிற்கு சந்தோஷமாக இருந்தது. உண்மை தானே, குறிஞ்சி யார் மனதையும் நோகடிப்பது போல் பேச மாட்டாள், ஆனால் அதற்காக பேசுபவர்களை சும்மாவும் விடமாட்டாள்.

“அவங்களுக்கு ரொம்ப வேலை இருக்குனு தான் நான் போர் அடிச்சு ஊருக்கு வந்தேன். அத்தான் வருவாங்க, அதுக்கு அப்புறம் தான் எதுனாலும் முடிவு” என்று மறைமுகமாக சொல்லி சென்றாள் குறிஞ்சி.

பெண்களின் மூலம் ஆண்களுக்கு அவர்களின் சந்தேகம் கடத்தப்பட, மூர்த்தி யோசிக்காமல் மகனை அழைத்து விட்டார்.

“என்ன பா? நல்லா இருக்கியா?”

“நல்லா இருக்கேன்! சொல்லுங்க பா!”

“நீதான் பா சொல்லணும்!”

“வள்ளி ஏதாவது சொன்னாளா?” பதட்டத்தில் மாட்டினான் ரவி. அவர் அவனின் மனநிலையை அறிய போட்டு வாங்க முயற்சிக்கவும் அழகாக மாட்டினான் ரவி. விஷயம் ஒன்றுமில்லை என்றால், என்ன பா சொல்ல என்றோ? ஒன்னுமில்லை வழக்கம் போல் தான் என்றோ தானே பதில் சொல்லி இருப்பான்.

“அப்போ பிரச்சனை தான்!” என்றவர், நடந்ததை கேட்டு தெரிந்து கொண்டவர்,

“வள்ளி மத்த விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ராங்கான ஆளு தான் ஆனா உறவு விஷயத்தில் ரொம்ப பூஞ்சை மனசு. நீ இப்படி பண்ணிட்டியே ரவி? ரொம்ப தப்பு பா! பழைய விஷயத்தை பிடிச்சு தொங்கிட்டே இருந்தா எப்படி ஒருத்தங்க கூட மேற்கொண்டு பழக முடியும்? அவங்க மாறி இருக்கவே மாட்டங்களா?” மிகவும் வருத்தப்பட்டார் மூர்த்தி.

“தப்பு தான் பா!”

சரி இப்போ என்ன பண்ண போறே?

“அவ கேட்கிற மாதிரி எல்லாம் என்னால இந்த கல்யாணத்தை முறிக்க முடியாது பா! அதனால் தான் நான் இப்போ ஊருக்கு வரலை. கொஞ்ச நாள் கழிச்சு வந்து அவளை சமாதானம் பண்ணலாம்னு இருக்கேன். அப்போவும் அவ சமாதானம் ஆகலைனா நான் வேலையை விட்டுட்டு ஊருக்கே வந்துடுறேன். கடையை பார்த்துக்கிறேன்” என்றான்.

“நல்ல மகன் டா நீ! அப்பாவுக்காக வர மாட்டே! பொண்டாட்டிகாக வருவேன்னு என்கிட்டயே சொல்றே!” சிரித்தார் மூர்த்தி.

“உங்களுக்கு பிடிச்ச மருமக தானே! சந்தோஷம் தானே உங்களுக்கு?உங்களுக்கு எப்படி பா தெரிஞ்சுது எனக்கு குறிஞ்சியை பிடிச்சு இருக்குனு? எனக்கே தெரியாது பா போன வாரம் வரை!”

“வள்ளி கல்யாண விஷயத்தில், அடிபட்டு இருந்தப்போ எல்லாம் உன் முகத்திலேயே தெரிஞ்சுது! உனக்கு புரியலைனும் புரிஞ்சுது! கடவுளா பார்த்து சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்தார், நான் பிடிச்சுக்கிட்டேன்” என்றார் மூர்த்தி இலகுவாக.

“நான் தான் சொதப்பிட்டேன் பா! பாவம் அவ!”

“சரி பண்ணலாம், நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்? கவலைபடாதே! நாளை தள்ளாம கிளம்பி வா” என்றார்.

“சரி பா, ஆபிஸ்ல சொல்லி கொஞ்ச நாளைக்கு ஒர்க் பிரம் ஹோம் கிடைக்குதானு பார்க்கிறேன்!” என்றான்.

அப்பாவிடம் பேசி விட்டு வைத்தவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவரின் எண்ணம் அனைத்தும் எப்போதும் அனைவருக்கும் நல்லதையே தான் நினைக்கும். எப்படி கணித்து இருக்கிறார் என்று பெருமை கொண்டான். அந்த அப்பாவுக்கு மகனாக இருந்து கொண்டு தவறை திருத்தி கொள்ளா விட்டால் என்ன பெருமை? நிச்சயம் அப்பா பெருமைபடும் படி வாழ வேண்டும் என்று நினைத்து கொண்டான் ரவி.

அவனாலேயே அவன் அப்பாவிற்கு அதிகம் திருஷ்டி ஆகி விட்டதோ என்னவோ, அன்று இரவு வந்த அழைப்பு அவன் வாழ்வின் ஆதாரத்தையே ஆட்டி வைத்தது போல் இருந்தது.

கடையில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்த அவரை கார் ஒன்று இடித்து, தூக்கி வீசி இருந்தது. மூன்று இடங்களில் எலும்பு முறிவு, தலையில் காயம் என மிகவும் ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருக்கிறார் மூர்த்தி என்று ஷ்யாமளாவின் கணவன் அழைத்து சொன்னான்.

“நீ எவ்ளோ சீக்கிரம் வரமுடியுமோ வந்துடு ரவி! நம்ம வீட்டு ஆளுங்க யாரும் பேசுற நிலைமையிலேயே இல்லை! என்னாலே தாங்கிக்க முடியலை” என்றான்.

அவனுக்கு மட்டுமா ஆதாரம் அவர்? அப்பா! அப்பா! மனம் அரற்றியது! வாய் விட்டு கதறினான் ரவி.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!