காயமின்றி வாழும் காதல் – 25
ரவியின் நண்பர்கள் அவன் கிளம்ப ஏற்பாடு எல்லாம் செய்து கொடுத்து அவனை அனுப்பி வைத்தார்கள். எப்படி கிளம்பினான்? என்ன பேசினான் எதுவும் தெரியாது ரவிக்கு. மூர்த்தியை திருநெல்வேலி ஹாஸ்பிடலில் சேர்த்து இருந்தார்கள். ஊருக்குள் வந்து எங்கே போக வேண்டும் என்று டிரைவர் கேட்க, ஆஸ்பத்திரிக்கு வழி சொன்னான் ரவி. அங்கே வாசலிலேயே அவர்களின் சொந்தங்கள் பலர் குழுமி இருந்தனர். ஷ்யாமளாவின் கணவன் வந்து ரவியை அழைத்து உள்ளே சென்று விட்டான். கண்ணீர் ஊற்ற யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் தலையை மட்டும் அசைத்தான் ரவி. மூர்த்திக்கு தலையில் ஆபரேஷன் செய்து இருந்தார்கள். பல மணி நேரம் நடந்தது ஆபரேஷன். இனி இருபத்தி நான்கு மணி நேரம் கழித்து தான் எதுவும் சொல்ல முடியும் என்று சொல்லி இருந்தார்கள். அதனால் அனைவரும் அங்கிருந்த தனி அறையில் காத்து இருந்தார்கள். ரவியை கண்டதும் மேகலா பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்தார். அம்மாவை கட்டி கொண்ட மகனும் வெடித்து அழ, அனைவரும் அவர்களை சூழ்ந்து கொண்டு கதறினார்கள். அனைவரின் அழுகையும் ஓய, ரவி வந்தது அவர்களுக்கும் பெரிய ஆறுதலாக இருந்தது. முதல் அதிர்ச்சி, அழுகை எல்லாம் கடந்து சூழ்நிலையை கையில் எடுத்து கொண்டான் ரவி. அது வரை குறிஞ்சியிடமும், ஷ்யாமளாவின் கணவனிடமும் தான் மருத்துவர்கள் எல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். குறிஞ்சி அவனை தலைமை மருத்துவரிடம் அழைத்து சென்று அறிமுகப்படுத்தினாள்.
அன்று மதியம் அறையில் எல்லாம் சுருண்டு கிடந்தனர். அனைவருக்கும் ஜுஸ் வாங்கி வந்து மல்லுகட்டி கொடுத்து கொண்டு இருந்தாள் குறிஞ்சி. கடைசியாக வெளியில் நாற்காலியில் தலையை கவிழ்ந்து அமர்ந்து இருந்த ரவியின் முன் மண்டியிட்டு அமர்ந்தவள், அவனுக்கும் ஜூஸ் கொடுத்தாள். வேண்டாம் என்று மறுத்தவனிடம்,
“என் மாமா ரொம்ப திடமானவர். எவனோ இடிச்சிட்டு போனதுக்கு எல்லாம் அவ்ளோ ஈஸியா எல்லாம் நம்மளை விட்டு போக மாட்டார். நிச்சயம் திரும்ப வருவார். நீங்க தான் அதுவரை எல்லாரையும் பார்க்கணும்! குடிங்க” என்றாள்.
காலையில் இருந்து அனைவருக்கும் தைரியம் சொன்னாலும் ரவியால் திடமாக இருக்க முடியவில்லை. இப்படி ஆகி விட்டால், அப்படி ஆகி விடுமோ என்று ஊசல் ஆடியது மனது. இப்போது குறிஞ்சி வந்து அவனுக்கு தைரியம் வர, குழந்தை போல் அவளை கட்டிக் கொண்டு ஆறுதல் தேடினான் ரவி.
அவள் பேசியதை உள்ளே இருந்து கேட்ட அனைவருக்குமே தெம்பாக தான் இருந்தது.
கொடிய இருபத்தி நான்கு மணி நேரம் கழித்து, டாக்டர் நல்ல வார்த்தை சொன்னார். அதற்கு பிறகு மூர்த்தியின் நிலைமை முழுக்க ஏறுமுகம் தான். இந்தியாவில் இருக்கும் அவருக்கு தெரிந்த கோயில் அனைத்திலும் வேண்டுதல் வைத்து விட்டார் மேகலா! நமக்கு மேல் இருக்கும் சக்தி பெரிய சக்தி அல்லவா!
ஒன்றரை மாதம் கழித்து,
போன வாரம் தான் மூர்த்தியை ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தனர். அவர் மருத்துவமனையில் இருக்க, மற்றவர்கள் திருநெல்வேலியில் வீடு எடுத்து தங்கி விட்டனர். மேகலாவும் அறிவழகனும் மூர்த்தியுடன் மருத்துவமனையிலேயே இருந்தார்கள். அவர்களுக்கு சாப்பாடு சமைத்து கொண்டு போய் கொடுப்பாள் குறிஞ்சி. கோகிலாவும் ஷ்யாமளாவும் மாறி மாறி திருநெல்வேலி வீட்டில் சென்று இருப்பார்கள். ரவி தான் திருச்செந்தூருக்கும் திருநெல்வேலிக்கும் அலைந்தான்.
கடை வேலை எல்லாம் நம்பிக்கையானவர்கள் சிலர் இருந்ததால் ஓடியது. அவர்களோடு சேர்ந்து அனைத்து வேலைகளையும் பார்த்தான் ரவி. அப்படியும் ஒரு கடையில் இருந்து வசூல் செய்த பணத்தை தூக்கி கொண்டு ஓடி விட்டான் ஒருவன். பேருக்கு போலீசில் புகார் கொடுத்து வைத்தான். அதை பற்றி கவலைப்பட யாருக்கும் நேரம் இல்லை.
ஒரு வாரம் திருநெல்வேலியில் இருந்து மீண்டும் ஒரு செக் அப் செய்து கொண்டு, இப்போது தான் திருச்செந்தூர் வந்து கொண்டு இருக்கிறார்கள். காரை ரவி தான் ஓட்டுகிறான். மேகலா பின்னால் மூர்த்தியிடன் அமர்ந்து இருந்தார். முன்னால் அறிவழகன். வீடு வந்தவர்களை ஆரத்தி கரைத்து வரவேற்றார் கோகிலா.
மற்றது எல்லாம் நன்றாகி விட்டாலும்,காலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் நன்றாக நடக்க இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் என்று சொல்லி அதற்குறிய பயிற்சி செய்ய சொல்லி இருக்கிறார்கள் மருத்துவர்கள். இப்போது வாக்கர் வைத்து தான் நடக்கிறார் மூர்த்தி.
வீடு வந்த நிம்மதியில் இருந்தார்கள் அன்று அனைவரும். வெகு நாட்களுக்கு பிறகு குடும்பமாக அமர்ந்து பேசி சிரித்து கொண்டு இருந்தார்கள். பின் அனைவரும் படுக்க செல்ல, சென்னையில் இருந்து வந்த பிறகு இப்போது தான் ரவியிடன் தனியாக இரவை கழிக்க போகிறாள் குறிஞ்சி. திருநெல்வேலியில் இருந்த வரை சில நாள் வருவான் பல நாள் வரமாட்டான். இரவெல்லாம் முழித்து கணக்கு பார்ப்பான் என்று ஷ்யாமளா மூலம் தெரிந்து கொண்டாள். அவர்கள் பெரிதாக பேசிக் கொள்ளவே இல்லை! தேவையான பேச்சு அதுவும் பெரியவர்கள் பற்றி, வாங்க வேண்டிய பொருட்கள் என்று தான் ஓடியது. இவளும் பேசவில்லை, அவனும் வேறு பேச முயற்சிக்க கூட இல்லை! அவன் நிலைமையும் அதற்கு அப்போது இடம் கொடுக்கவில்லை.
இப்போது அவனுடன் தனியே செல்ல மனமில்லை என்றாலும் இன்றே எதையும் ஆரம்பிக்க வேண்டாம் என்று அமைதி காத்தாள் குறிஞ்சி.
அவர்கள் அறைக்கு வந்த பின், ரவி எதுவும் பேசாமல் படுத்து விட்டான். குறிஞ்சி படுக்கும் முன் லைட்டை நிறுத்த அவன் பக்கம் வர, மூடியிருந்த அவன் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.
“இப்போ ஏன் அழுறீங்க? மாமா தான் நல்லபடியா வந்துட்டாங்களே” என்றாள் ஆதரவாக.
“ம்ம்…..” என்றவன் பதிலே பேசவில்லை. பேச முடியவில்லை அவனால். நடந்தததை நினைத்து பார்க்கிறான் என்று புரிந்தது அவளுக்கு.
அவனின் தவிப்பு புரிய, அவன் அருகில் அமர்ந்து கொண்டாள் குறிஞ்சி. அவள் அமர்ந்தது புரிய,
“பெரிய போராட்டமா இருந்தாலும் அப்பா நல்லபடியா வந்துட்டார். இல்லைனா….” என்றதோடு நிறுத்தி கொண்டான் ரவி. மிகவும் இறுக்கமாக இருந்தான். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இருந்த அழுத்தம், அப்படியே அவனை அழுத்தியது. எதையோ நினைத்து கவலைப்படுகிறான், குழப்பி கொள்கிறான் என்று அவளுக்கு தோன்றியது.
“ஒன்னும் யோசிக்காம தூங்குங்க! எல்லாம் சரியா போயிடும்” என்று எழுந்து லைட்டை நிறுத்தி விட்டு அவனுக்கு முதுகு காட்டி படுத்தாள் குறிஞ்சி.
“நான் சரியா தூங்கி ரெண்டு மாசம் கிட்ட ஆக போகுது குறிஞ்சி” என்றான் மெல்லமாக. அவள் பிரிந்து வந்தததையும் சேர்ந்து சொன்னான் ரவி. எந்த எதிர்வினையும் இன்றி அப்படியே படுத்தபடி இருந்தாள் குறிஞ்சி. அவன் அசைவில் இருந்து அவன் இவளை நெருங்கி வருகிறான் என்று புரிய கண்களை இறுக்க மூடிக் கொண்டாள் குறிஞ்சி. பின்னிருந்து அவளை அணைத்த ரவி, அவள் காதில் மெல்லமாக,
“எனக்கு ஹெல்ப் பண்ணு ப்ளீஸ்!” என்றான். அவன் என்ன கேட்கிறான் என்று புரியாத பெண் இல்லையே அவள். அந்நேரத்தில் அவன் மனதில் இருக்கும் தவிப்பை அவளும் உணர்ந்தாள். அதே போல் கடந்த ஒரு மாதமாக அவனின் வேலை பளுவையும் கண்ணார கண்டவளுக்கு அவனின் வேண்டுகோளை மறுக்க முடியவில்லை.
மெதுவாக அவன் பக்கம் திரும்பி படுத்து கொண்டாள் குறிஞ்சி. தேங்க்ஸ் என்ற ரவி, அன்று அவளை கையாண்ட விதத்தில் அவளுக்கு நிறைய வித்தியாசம் தெரிந்தது. இன்றும் குஞ்ச்சமா என்று அழைக்க தான் செய்தான். அவளும் அந்த குஞ்சம்மாவில் உருக தான் செய்தாள். ஆனால் முன்பு வரும் குஞ்சம்மாவில் ஆசை, அன்போடு ஒரு துள்ளல் இருக்கும்! எதை பற்றியும் கவலை இல்லாத ரவியின் உற்சாகம் தெரியும். ஆனால் இன்று வந்த குஞ்சம்மாவில், என்னை விட்டு சென்று விடாதே என்ற பரிதவிப்பு இருந்தது. நீ தான் என்னுடைய ஆதாரம் என்ற சரணாகதி இருந்தது. அவனுக்காக என்று ஆரம்பித்த உறவு எப்போது இருவருக்குமாக மாறியது என்று தெரியாது! ஆனால் மிகவும் பூரணத்துவமான தாம்பத்தியமாக இருந்தது அன்று. இதற்கு முன்பும் அவனுடன் குறிஞ்சி சந்தோஷமாக இருந்திருக்கிறாள் தான். ஆனால் இது போல் மனதால் மிகவும் நிறைவாக உணர்ந்ததில்லை. தாம்பத்யம் என்பது வெறும் உடல் மட்டும் கலப்பது அல்ல மனதாலும் ஒருவருடன் ஒருவர் கலப்பது என்று இருவரும் உணர்ந்து கொண்ட நாள் இது!
*********
நெடுநாளைக்கு பிறகு நன்றாக தூங்கி எழுந்த ரவி, எழுந்த உடனேயே குறிஞ்சியை பார்க்க விரும்பினான். குறிஞ்சி அவனுக்கு எவ்வளவு இன்றியமையாதவள் என்று உணர்ந்த மற்றொரு நாள் நேற்று. அவன் மனம் அவளின் அருகில் மட்டுமே இந்த அளவிற்கு நிம்மதி, சந்தோஷம், ஆசுவாசம் அடையும். வேறு எதிலும் அவனுக்கு இது போல் நிறைவு வராது.
குளித்து விட்டு வந்தவன், வீடெங்கும் அவளை தேடினான். அவன் குறிஞ்சியை தான் தேடுகிறான் என்று உணர்ந்த மேகலா,
“கோயிலுக்கு போறேன்னு போனா டா” என்றார். அதை கேட்டவனுக்கு மிகுந்த ஏமாற்றம், மற்றும் கோபமும் சேர்ந்து வந்தது. அவளை பார்க்கணும்னு தவிக்கிறேன், அவளுக்கு அப்படி ஒன்னும் கிடையாது என்று பொருமினான். சரி நான் போய் அழைச்சிட்டு வரேன் என்று கிளம்பினான். இவன் சென்று சேர, சரியாக புடவை தலைப்பு காற்றில் பறக்க எதிரே நடந்து வந்து கொண்டு இருந்தாள் குறிஞ்சி. இவனை கண்டதும் ஆச்சர்யம் வந்தாலும், நேற்றைய நினைவில் முகம் விகசிக்க தான் செய்தது. அதை ரசித்து பார்த்து கொண்டே வந்தான் ரவி.
“ஏன் தனியா வந்தே? என்கிட்ட சொன்னா நான் அழைச்சிட்டு வந்து இருப்பேன்ல?” அவளை கண்டதும் கோபம் குறைந்து போனாலும் தன் ஏமாற்றத்தை காட்டினான் ரவி.
“நீங்க இப்படி எல்லாம் செய்யணும்னு அவசியம் இல்லை!” என்றாள் பட்டுகொள்ளாமல்.
அவளின் சம்மதத்தில் அவர்களின் பிரச்சனை முடிந்து விட்டது என்று நினைத்த ரவிக்கு ஆயாசமாக இருந்தது. இதை வேறு நான் சமாளிக்க வேண்டுமா என்று நினைத்தவன் முகம் போன போக்கை கண்டு சிரிப்பை அடக்கினாள் குறிஞ்சி.
“ம்ப்ச்…. என்ன குறிஞ்சி? இன்னும் ஏன் அதையே சொல்றே?” நேற்று இரவு நடந்ததை குறிப்பிடுகிறான் என்று புரிந்தது அவளுக்கு.
“நீங்க எமோஷனலா வீக்கா இருந்த மொமெண்ட் அது! ஒரு கஷ்டமான நேரத்தில என்னால உங்க கஷ்டத்தை போக்க முடியும்னு தெரியுறப்போ தவிர்க்க முடியாமல் செஞ்சேன். ஆனா என்னை கஷ்டப்படுத்திகிட்டு உங்க பொண்டாட்டியா உங்க கூடவே இருக்கணும்னு அவசியம் இல்லை” என்றாள்.
“ஓ! எனக்கு பாவம் பார்த்தீங்க! அப்போ நான் டெய்லி கூப்பிட்டா கூட வருவே! ஆனா எனக்கு பொண்டாட்டி இல்லை அப்படியா? அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?” அவள் பேச்சில் கோபம் தலைக்கு ஏறியது ரவிக்கு. இப்படி இருந்த உணர்வு அது? இருந்த நல்ல மனநிலை கெட்டது அவனுக்கு.
“சே! நீங்க இப்படி தான் மோசமா பேசுவீங்க! எனக்கு தெரியும்! நான் மாமா உடம்புக்காக தான் பார்க்கிறேன். இல்லைனா இப்போவே விஷயத்தை சொல்லிடுவேன்!” என்றாள் கடுகடுவென்று.
இவளிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று தெரிந்தது ரவிக்கு. ஆனாலும் மனதில் இருப்பதை சொன்னான்.
“ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சுக்கோ குறிஞ்சி, நான் பேசினது தப்பு தான்! ஆனா கடைசியா நடந்த விஷயத்தை தவிர எல்லாத்திலும் உன் தப்பும் இருக்கு! அதை யாரும் மறுக்க மாட்டங்க. உனக்காக யாரும் அதை சொல்லி காட்டுறதில்லை அவ்ளோ தான். நீ ஒன்னும் தப்பே செய்யாத பொண்ணு இல்லை! புரிஞ்சுக்கோ.”
“பரவாயில்லை நான் அப்படி தான்!” கோபமாக பேசினாள் குறிஞ்சி.
“சொல்றதை கேளுடி அரைவேக்காடு, அவசரக்குடுக்கை!”
“என்ன அரைவேக்காடா? அவசரக்குடுக்கையா?” வேகமாக அவனை விட்டு விலகி நடந்தாள் குறிஞ்சி.
வேகமாக சென்று அவள் கையை பிடித்து நிறுத்தியவன்,
“முன்னாடி அப்படி இருந்த குறிஞ்சியை பிடிக்காதுனு நினைச்சேன்! இப்போ இருக்க குறிஞ்சி, எப்படி இருந்தாலும் பிடிக்கும்! உன் காதலே வேண்டாம்னு சொன்னேன். ஆனா இப்போ உன் காதல் தான் என்னை இயக்கிட்டு இருக்கு! என் இயக்கம் இருக்கணுமா நிற்கணுமானு நீ முடிவு பண்ணு!”
“இதெல்லாம் ரொம்ப ஓவர்!” சிரித்து கொண்டே சொன்னாள் குறிஞ்சி. அவன் கடைசியாக வேண்டும் என்றே தான் டையலாக் பேசினான். அவனும் சிரித்து கொண்டு தான் இருந்தான்.
“நீ என்ன வேணா சொல்லிக்க, ஆனா நான் சொல்ல வர்றது ஒரே ஒரு விஷயம் தான். பிரச்சனை வேண்டாம்னு நினைச்ச உன் அத்தான் எவ்ளோ பிரச்சனை வந்தாலும் அந்த பிரச்சனைக்குறிய பொண்ணோட எந்த பிரச்சனையும் பண்ணாம இருப்பான்!”
“ஹாஹா!” அவனின் ரைமிங் பேச்சில் அடக்க முடியாமல் சத்தமாக சிரித்தாள் குறிஞ்சி.
பொது இடம் என்று பார்க்காமல் அவள் கன்னத்தில் ஆசையாக முத்தம் வைத்தவன், அவளை இழுத்து கொண்டு வீடு சென்றான்.