26. காயமின்றி வாழும் காதல்

5
(12)

காயமின்றி வாழும் காதல் – 26

நான்கு மாதம் கழித்து, ஒரு சனிக்கிழமை காலை,

“அய்யோ கிளாஸுக்கு நேரம் ஆச்சு!” புலம்பியபடி கிளம்பி கொண்டு இருந்தான் ரவி. வாரத்தில் ஒரு நாள் தான் அந்த கிளாஸ்.

“எனக்கு போகவே பிடிக்கலை அந்த க்ளாஸுக்கு. செல்வம் பெரியப்பா பையன் என் பக்கத்தில் உட்கார்ந்து என்னை டார்ச்சர் பண்றார்டி! அவருக்கு சொல்லி தரணுமாம்.”

அறையை ஒதுங்க வைத்து கொண்டு இருந்த குறிஞ்சி சிரிப்பை அடக்கினாள். அவனுடன் சகஜமாக பேச மாட்டாள் குறிஞ்சி அறைக்குள். அவர்களுக்குள் எதுவும் சரியாகவில்லை. குறிஞ்சி இறங்கி வந்தாலே தவிர எதுவும் சரியாகாது. அவளுக்கே தெரியும் அவள் பிடிவாதம் செய்கிறாள் என்று. ஆனால் மறுபடி மறுபடி காயப்பட வேண்டாம் என்பது அவள் வாதம்! ஏதேனும் பிரச்சனை வந்தால் ரவி தாக்கு பிடிக்க மாட்டான் என்று தான் இன்னமும் நினைக்கிறாள் குறிஞ்சி.

அவள் பேசாதது பற்றி ரவிக்கு ஒன்றுமில்லை. அவன் எப்போதும் போல் இருப்பான். அவளிடம் எதையும் எதிர்பார்ப்பது இல்லை அவன். முன்பு குறிஞ்சி இருந்தது போல் இப்போது ரவி.

அறைக்குள் அவனை ஒதுக்குபவள் வெளியில் பெரியவர்களுக்காக அவனுடன் சாதாரணமாக பேசிக் கொள்வாள். தனிமையில் பெரிய இடைவெளி உண்டு!

அவள் கர்ப்பம் ஆகவில்லையே என்று இரு அம்மாக்களும் கவலைபட, “அத்தான் கடை வேலை எல்லாம் நல்லா பிடிபட்ட அப்புறம் பார்த்துக்கலாம் சொல்லிட்டாங்க” என்று அடித்து விட்டாள்.

அவளை வற்புறுத்தியோ, அவளின் விருப்பம் இல்லாமலோ அவளை ஆட்கொள்ள ரவிக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை. அவனுடன் அவள் ஆத்மார்த்தமாக இணைந்ததின் ருசியை அனுபவித்தான் இப்போது அவனிடம் இருந்து விலகி கீழே படுக்கும் அவளை நெருங்க துளி கூட விருப்பப்படவில்லை. அவள் மனம் மாறி அவனை புரிந்து கொள்ளட்டும் என்று காத்திருக்கிறான்.

இருவரின் காதலும் காயமின்றி வாழுகிறது! ஆனால் அந்த இருவரும் சேர்ந்து காதலை எப்போது வாழ வைக்க போகிறார்கள் தெரியவில்லை.

தயாராகி வெளியே சென்றவனை தன்னை மீறி ரசித்து பார்த்தாள் குறிஞ்சி. அவளின் பார்வையை கண்டு கொண்டவன், போகும் முன், அவளை நெருங்கி, அவள் கண்களை பார்த்து கொண்டே,

“அழகா இருக்கீங்கனு சொன்னா குறைஞ்சு போய்டுவியா? உன் கண்ணு சொல்றதை வாய் சொல்றதுக்கு எவ்ளோ நேரம் ஆகும்? சரியான அகம் புடிச்ச கழுதை!” என்றான் செல்லமாக.

அவள் பதில் பேச மாட்டாள் என்று தெரிந்ததும், “சரி வாயாலே பேச வேண்டாம், ஒரு முத்தம் மட்டும் கொடு” என்றான். அவள் முறைத்தாள். அவன் இன்னும் அவளை நெருங்க, அவள் முகத்தை திருப்பி கொள்வாள் என்று உணர்ந்த ரவி அவளுக்கு முன் அவன் முகத்தை நகர்த்த, இருவரின் உதடுகளும் உரசியது.

நான்கு மாதங்களில் அவளை தீண்டாதவனுக்கு இந்த சின்ன இதழ் ஸ்பரிசம் பெரிய தவிப்பை தந்தது. விலகி போக முடியாமல், தவிப்புடன் அவள் இதழ்களை தனக்குள் எடுத்து கொண்டான். அவளுக்காக அவன் எவ்வளவு ஏங்குகிறான் என்று அந்த முத்தத்தில் தெரிந்தது குறிஞ்சிக்கு. மனமே இல்லாமல் அவளை விட்டான் ரவி. அவனுக்கு முகம் காட்டாமல் முகத்தை திருப்பி கொண்டாளே தவிர எதுவும் சொல்லவில்லை அவள்.

“நடந்ததுக்கு நான் பொறுப்பில்லை பா! உன் லிப்ஸ் தான் பட்டுச்சு பர்ஸ்ட்” என்றான் ரவி. அவள் நிச்சயம் ஏதாவது பேசுவாள் என்று எதிர்பார்த்தான். அவளுடன் ஸ்வீட் நத்திங்ஸ் பேச அவனுக்கு ஆசையாக இருந்தது.

“ஓ! அப்போ இவ்ளோ நேரம் உங்க லிப்ஸ் வேலையே செய்யலை! அமைதியா அசையாம இருந்துச்சா?”

“ஓ! அசைஞ்சுதா? எனக்கு தெரியலையே? வேகமாக இருந்துச்சா இல்லை ஓக்கே வா?” அவள் இதழ்களை விரல் கொண்டு தடவியவன் கேள்வி கேட்டான்.

“ரொம்ப தான்…. முதல்ல நீங்க இங்க இருந்து அசையுங்க, கிளம்புங்க!”

“ஹேய், நான் எங்கே அசையனும்? சொல்லேன்! சரியா புரியலை!” அவன் வேறு விதமாக பேச அவள் முகம் வெட்கத்தில் சிவந்து விட்டது!

“கடவுளே! ப்ளீஸ்….” சிரித்து விட்டாள் குறிஞ்சி.

“என்னவோ போ! என்னை அவ்ளோ விரும்புறே, இவ்ளோ விரும்புறேனு சொல்றே! கொஞ்சம் கூட அதெல்லாம் உன் நடவடிக்கையில் தெரியலையே? காதல் சம்மந்தப்பட்ட ஆக்ஷன் வெரி புவர் மேடம்! நான் கொஞ்சம் சொல்லி தரவா? ப்ளீஸ்…. நல்லா சொல்லி தருவேன்!” முத்தம் பத்தாமல் மொத்தம் கேட்டான் ரவி.

“நீங்க கிளாஸ் கட் அடிக்க பார்க்கிறீங்கனு மாமா கிட்ட சொல்லவா?” அவனை அனுமதித்து விடுவாள் என்று பயந்து அவனை துரத்தினாள் குறிஞ்சி.

“அவன் மேல் அவளுக்கும் கோபம் எதுவும் இல்லையே! ஒதுக்கம் தான் காட்டுகிறாளே தவிர அவனை ஒதுக்க அவளால் என்றும் முடியாது!”

“ஊரில் இருக்கவங்க கிட்ட எல்லாம் சிரிச்சு சிரிச்சு பேசினா பத்தாது குள்ளி! உள்ளத்தில் இருக்கவங்க கிட்ட பேசணும்! அது கூட புரியலை உனக்கு! போ!” அலுத்து கொண்டே கிளம்பி விட்டான் ரவி.

இப்போது ரவி டிப்ளமோ இன் அக்ரி படிக்கிறான். உரக்கடை என்பது கவர்மெண்ட் சம்பந்தப்பட்டது என்பதால் அது வைத்து இருக்க லைசென்ஸ வேண்டும். அந்த லைசென்ஸ் வேண்டும் என்றால் அக்ரி சம்பந்தமாக படித்து இருக்க வேண்டும் என்ற ரூல் இருக்கிறது. புதிதாக ரூல்ஸ் வந்த பிறகு மூர்த்தியே படித்து சர்ட்டிபிகேட்டே வாங்கி இருந்தார். வயதானவர்களுக்கு அதை படிக்க நன்றாக உதவி செய்தனர். ட்ரைனிங் வகுப்புகள் கொடுத்தனர்.

எதிர்காலத்தில் அப்பாவின் பெயரில் இருப்பதை ரவியின் பெயரில் மாற்ற முடியாது என்பதால் இவன் பெயருக்கு புதிதாக வாங்கவேண்டும். இனி நான் ஊரில் தான் இருக்க போகிறேன் என்று ரவி சொன்னபோது நீ படித்து விடு என்று சொல்லிவிட்டார் மூர்த்தி.

அவர் ஹாஸ்பிடலில் இருந்து வந்தவுடன், இரண்டு நாளிலேயே தந்தையிடம் சென்று சொல்லி விட்டான் ரவி.

“அப்பா நான் ஊரிலே செட்டில் ஆகலாம்னு முடிவு பண்ணிட்டேன் பா!”

“என்ன பா? மருமக சென்னைக்கு வரலையாமா?” சிரித்தார் மூர்த்தி.

“உங்களுக்காக தான் பா. இவ்ளோ பெரிய பிசினஸை உருவாக்கி இருக்கீங்க! நான் உள்ளே வந்த அப்போ தான் புரிஞ்சுது, உங்களுக்கு எவ்ளோ வேலை இருக்குனு. முன்னாடி புரியாம நான் ரொம்ப ஈஸியா எடுத்துகிட்டேன் உங்க உழைப்பை. மன்னிச்சுடுங்க பா.”

“என்னடா பெரிய வார்த்தை எல்லாம் பேசுறே? ரொம்ப சந்தோஷம் நீ இப்படி சொல்றது. நீயா இஷ்டப்பட்டு தான் வரணும் தான் நான் உன்னை வர சொல்லலை. இதுக்காக தான் எனக்கு இப்படி ஆச்சு போல்! நடக்கிற எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்! என்றார் மூர்த்தி நெகிழ்ந்து. சொல்லவில்லை என்றாலும் மகன் வந்து இந்த தொழிலை பார்க்க மாட்டானா?” என்று ஏங்கியவர் தான் அவர்.

கடந்த நான்கு மாதமும் மிகவும் பிசியாக சென்றது ரவிக்கு. இவன் கடைக்கு வந்தவுடன், அதுவரை மூர்த்திக்கு உதவியாக இருந்தவர் தான் வேலையை விட்டு நின்று கொள்கிறேன், உங்களுக்காக தான் இவ்வளவு நாள் இருந்தேன் என்றார். வயசானவர் சொல்லும் போது என்ன சொல்வது? சரி என்று நல்ல செட்டில்மெண்ட் செய்து அனுப்பி வைத்தனர். நடக்க முடியாமல் இருந்த மூர்த்தியாலும் கடைக்கு அடிக்கடி வர முடியவில்லை. அவர் வராத போது, ரவி சந்தேகம் வரும் போது உடனுக்குடன் போன் செய்து பேசி தெரிந்து கொள்வான். மிகவும் சிரமப்பட்டான் என்று தான் சொல்ல வேண்டும். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. மூர்த்தி மகனுடன் தினமும் கடைக்கு செல்கிறார். ஆனால் அரை நாள் மட்டுமே! அதற்கு மேல் அவர் உடல் ஒத்துழைக்க வில்லை.

ஊரில் நண்பர்களும் இல்லை. பிசினஸ் டென்ஷன் குறித்து பேச அவனுக்கு ஆளே இல்லை. சென்னையில் இருக்கும் நண்பர்களுக்கு இதை பேசி போர் அடிக்க விரும்பவில்லை ரவி. குறிஞ்சி நன்றாக பேசினால் அவன் கஷ்டத்தை சொல்ல முடியும். அவள் தான் பேசுவது இல்லையே!

முன்பு மூர்த்திக்கு செய்த உதவி கூட அவள் இப்போது ரவிக்கு செய்வதில்லை. பேங்க் வேலை அனைத்தும் இவன் தான். கடை என்றாலும் ஆபிஸ் ஒர்க் பார்க்கும் ஆட்கள் குறைவு. எப்படி தான் தந்தை சமாளித்தாரோ என்று மலைத்து போவான் ரவி பல நேரங்களில். இத்தனைக்கும் அவர் நன்றாக உருவாக்கி விட்டார். இவன் மேனேஜ் மட்டுமே செய்கிறான்.

**********

அன்று குறிஞ்சியை தொலைபேசியில் அழைத்தாள் அவளின் பள்ளி தோழி கலையரசி. அடுத்த தெருவில் தான் அவள் வீடு. திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது அவளுக்கு. அவளுக்கு ஒரு உதவி வேண்டும், நேரில் சந்திப்போமா? என்றாள்.

“என்ன கலை? என்ன வேணும்?”

“என் பிரண்ட் திருநெல்வேலியில் ஒரு கடையில் வேலை பார்க்கிறான். அவன் வீட்டில் ஒரு எதிர்பாராத செலவுனு அவங்க முதலாளி கிட்ட காசு கேட்டு இருக்கான். ஆனா அவர் ஏற்கனவே நிறைய கடன் வாங்கிட்டேனு சொல்லி பணம் கொடுக்கலையாம். இவன் அவசரத்துக்கு அவருக்கு தெரியாம பில்லிங்கல நிறைய குளறுபடி பண்ணிட்டான். அதை முதலாளி செக் பண்றதுக்கு முன்னாடி இன்னும் இரண்டு நாளைக்குள்ள பணத்தை அட்ஜெஸ்ட் செய்யணும். ப்ளீஸ் பா நீ தான் ஹெல்ப் பண்ணணும். பணம் கொஞ்சம் வேணும் பா.”

“ஏன் இப்படி பண்ணார்? தப்பு தானே?” என்றாள் குறிஞ்சி.

“எங்கேயும் பணம் புரட்ட முடியாம தான் குறிஞ்சி.”

“எவ்ளோ?”

“அம்பதாயிரம்!”

“அவ்ளோ பணம் எல்லாம் ஈசியா பில்லிங்கில் இப்போ ஏமாத்த முடியாதே கடையில்!” சந்தேகமாக கேட்டாள் குறிஞ்சி. அவள் எதையோ மறைப்பது போல் தோன்றியது குறிஞ்சிக்கு.

“அதெல்லாம் எனக்கு தெரியலைடி. ஆனா பணம் வேணும் பா. ப்ளீஸ்….”

“ஐந்தாயிரம் வரைனா நான் தருவேன்! இவ்ளோ பெரிய தொகைனா நான் எங்க அப்பாவை தான் கேட்கணும். ஆனா அப்பா கூட யார் என்னனு கேட்பாங்க! இந்த விஷயத்தை எப்படி சொல்றது?” மிகவும் தயங்கினாள் குறிஞ்சி. பின்,

“நான் கேட்டு சொல்லவா? என்னால உறுதியா பணம் தரேன்னு சொல்ல முடியாதுடி” என்றாள்.

“அய்யோ, ப்ளீஸ் குறிஞ்சி. ரொம்ப இக்கட்டான சூழ்நிலைடி. பணம் கொடுக்கலைனா கூட பரவாயில்லை. உன் நகை ஏதாவது கொடு டி. நாங்க அடகு வைச்சிட்டு சீக்கிரம் உனக்கு திருப்பி கொடுத்துருறோம். என்கிட்ட இருக்க கொஞ்சம் நகையும் என் மாமியார் கிட்ட தாண்டி இருக்கு. அதை நான் கேட்க முடியாது.”

அவள் நகையை கேட்டதும் அதிர்ச்சி ஆனாள் குறிஞ்சி. “ஹேய் அப்படி எல்லாம் என்னால் நகை எல்லாம் கொடுக்க முடியாதுடி. எங்க வீட்டிலும் பெரியவங்க கிட்ட தான் இருக்கு” என்றாள்.

“நீ பொறந்த வீடு, கட்டிக்கிட்ட வீடு ரெண்டுமே வசதி தானே! ஒன்னு இரண்டு காணாமல் போனா கூட யாருக்கு என்ன தெரிய போகுது! ப்ளீஸ்டி.”

அவளின் அதீத பதட்டம் பார்த்து குறிஞ்சிக்கு வித்தியாசமாக இருந்தது. ஒரு வகையில் பயமாக கூட இருந்தது. இவள் என்ன இப்படி பேசுகிறாள் என்று! அவள் ஒன்றும் நெருங்கிய தோழியும் அல்ல. அடுத்த தெருவில் இருப்பதால் பார்த்தால் இரண்டு வார்த்தை பேசுவாள். பள்ளியில் ஒரே வகுப்பு. அவ்வளவே!

“நாளைக்கு நான் போன் பண்ணி சொல்றேன்டி” என்று அவளை அனுப்பி வைத்தாள் குறிஞ்சி.

கொடுக்கலாமா? வேண்டாமா என்று மிகவும் யோசித்தவள், இது போன்ற ஆட்களுக்கு உதவ போகிறாயா என்று வீட்டு பெரியவர்கள் தன்னை தொலைத்து விடுவார்கள் என்று அவர்களிடம் சொல்லாமல் தன்னிடம் இருந்த ஒரு ஐந்தாயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து விடலாம் என்று முடிவெடுத்தாள்.

மறுநாள் காலையிலேயே அவளை அழைத்து,

“உன் வீட்டிற்கு பக்கத்தில வா, நான் பணம் கொண்டு வந்து தர்றேன்” என்றாள் குறிஞ்சி.

“அய்யோ, நான் பணத்தை வாங்கி வீட்டில் வைக்க முடியாது பா. வெளில போலாமா?” என்றாள் அவள்.

“நான் வெறும் ஐந்தாயிரம் தான் கொண்டு வர போறேன். என்னால அவ்ளோ தான் முடியும்” என்றாள் குறிஞ்சி.

“இவ்வளவு கம்மியாக வா? சரி பரவாயில்லை” என்றவள், ஒரு மூணு மணி போல் அங்கே வர்றியா?” என்று ஒரு இடத்தை குறிப்பிட்டாள்.

அதன் பின் மதிய உணவு வேளை முடிந்து, மேகலா, மூர்த்தி என அனைவரும் உறங்க, பால் கறந்து கொண்டு இருந்த வாசுகியிடம் வெளில போயிட்டு வரேன் என்று சொல்லி விட்டு கிளம்பினாள் குறிஞ்சி. ரவி அன்று வேலையாக வெளியூர் சென்றிருந்தான். வர மாலை நான்கு மணிக்கு மேல் ஆகி விடும் என்று சொல்லி சென்றிருந்தான். அவன் வருவதற்குள் சென்று பணத்தை மட்டும் கொடுத்து விட்டு வந்து விடுவோம் என்று கிளம்பி போனாள் குறிஞ்சி.

மகள் வண்டியில் கிளம்புவதை உள்ளிருந்து பார்த்த கோகிலா, இப்போது எங்கே போகிறாள் என்று கேட்பதற்கு வெளியில் வருவதற்குள் அவள் டூவிலர் பறந்து இருந்தது!

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!