வதைக்காதே என் கள்வனே

4.5
(8)

கள்வன்-18

நந்தாவிற்கு கால் செய்து உதவி வேண்டும் என்று கேட்டவள் அவன் என்ன உதவி என்று கேட்கவும் “அது வந்து அண்ணா மித்ரன் சாரோட அம்மா அப்பா எங்கே இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா..?” என்று கேட்டாள்.

அவள் கேட்ட கேள்வியில் ஒரு நிமிடம் ‌ புருவங்கள் முடிச்சிட யோசித்தவன் பின்பு அவளிடம் “அதை ஏன் நீ கேட்கிற..?” என்று அவளை திருப்பிக் கேட்டான். “இல்லண்ணா அது வந்து அவரோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணம்.. அது தெறிந்தில இருந்து என்னால நிம்மதியா இருக்க முடியல. அதனால அவங்க அம்மா அப்பா கிட்ட நானே பேசி புரிய வைக்கிறேன்.. அதுக்கப்புறம் அவங்க புரிஞ்சிப் பாங்க தானே..?” என்றாள்.

“நீ சொல்றது நல்லா தான் இருக்கு.. ஆனா நீ சொன்ன உடனேயே அவங்க அவ்வளவு சீக்கிரம் நம்பிடுவாங்களா..? பெத்த பையனையே அவங்க நம்பல.. நீ சொல்றத எப்படி நம்புவாங்கனு நெனைக்குற..” என்றான் நந்தா.

“இல்லண்ணா என்னால முடிஞ்ச வரைக்கும் நான் அவங்ககிட்ட எடுத்து சொல்லிப் புரிய வைக்கிறேன்.. அவங்க கண்டிப்பா நம்புவாங்க.. நீங்க எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணுங்க.. அவங்க எங்க இருக்காங்க அப்படின்னு மட்டும் எனக்கு சொல்லுங்கண்ணா ப்ளீஸ்..” என்று கெஞ்சினாள்.

சில நிமிடம் யோசித்தவன் அவளிடம் “சரிமா நான் அவங்க எங்க இருக்காங்கன்னு உனக்கு நாளைக்கு ஆபீஸ்ல சொல்றேன்..” என்று போனை கட் செய்தான்.

இங்கு மதியோ போனை வைத்தவள் நாளைய விடியலுக்காக காத்துக் கொண்டிருந்தாள்.

மறுநாள் காலை..

இன்று ஓணம் பண்டிகை..!!

அதனால் காலையில் சீக்கிரமாகவே எழுந்து பக்கத்தில் இருக்கும் மார்க்கெட் சென்று சில காய்கறிகளை வாங்கியவள் அவசரமாக சமையலையும் முடித்தாள்.

அதை கவனித்துக் கொண்டிருந்த லியாவோ அவளை விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தது.

‘என்ன இவ இன்னைக்கு புதுசா தெரியுறா..’ என்று நினைத்தது. ஆனாலும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை.

மதியோ சமையலை முடித்தவள் கேரளா சாரி அணிந்து கொண்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று அங்கு தன் வேண்டுதலை முன்வைத்தாள்.

“கடவுளே நான் இதுவரைக்கும் எனக்காக வேண்டியதே இல்லை.. ஆனா இப்போ அவருக்காக வேண்ட வந்து இருக்கேன்.. அவருடைய அம்மா அப்பா கிட்ட நான் போய் உண்மையை சொன்னதும் அவங்க அதை புரிஞ்சுகிட்டு அவர் கூட சந்தோஷமா இருக்கணும்.. அவர் இழந்த பழைய வாழ்க்கை அவருக்கு திரும்பவும் கிடைக்கணும்.. அது போதும் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.. நான் தான் தனியா கஷ்டப்படுறேன் அவருக்கும் அந்த நிலைமை வரக்கூடாது.. இதுக்கு அப்புறமாவது அவர் குடும்பத்தோட அவர் சந்தோஷமா இருக்கணும்..” என்று சாமி கும்பிட்டவள் நெற்றியில் திருநீறு, குங்குமம் வைத்துக்கொண்டு ஒரு சிறிய பேப்பரில் திருநீறும், குங்குமம் எடுத்துக் கொண்டவள் தன் அலுவலகம் நோக்கிச் சென்றாள்.

உள்ளே நுழைந்தவள் நேராக தனது கேபினுக்குள் சென்று லியாவை அங்கே இருக்கச் சொல்லிவிட்டு தனது பேக்கையும் அங்கே வைத்துவிட்டு ஒரு சிறிய பாக்ஸை மட்டும் கையில் எடுத்தவள் மித்ரனின் அறைநோக்கிச் சென்றவள் அவனின் அறைக் கதவைத் தட்டி அனுமதி கேட்டாள்.

அவன் உள்ளே வர அனுமதி தந்ததும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவள் நேராக எதுவும் சொல்லாமல் தன் கையில் வைத்திருந்த பாக்ஸை அவன் முன் இருந்த டேபிள் மீது வைத்துவிட்டு தான் கொண்டு வந்திருந்த சாமி பிரசாதத்தை பிரித்தவள் அவன் நிமிர்ந்து பார்க்கும் முன்பே அவன் நெற்றியில் வைத்து விட்டவள் அவன் முகத்திற்கு அருகில் வந்து அவனுடைய கண்களை மறைத்தவாறு தன் ஒற்றை கையை அவன் கண்கள் மேல் வைத்து விபூதி அவன் கண்ணில் படாத வாறு அழகாக ஊதியும் விட்டாள்.

அவளுடைய மூச்சுக் காற்று மிக அருகில் அவன் மேல் பட உடல் சிலிர்த்தது.

ஒரு நொடி என்ன நடந்தது என்று யோகிக்க முடியாமல் அப்படியே ஆடிப் போய் அமர்ந்திருந்தான் மித்ரன்.

அவன் மீண்டும் தன்னிலை திரும்புவதற்கு முன்பு அந்த பாக்ஸை கையில் எடுத்தவள் அதைத் திறந்து ஒரு கவளம் சாப்பாட்டை கையில் எடுத்தவள் அவன் வாயின் அருகே கொண்டு சென்றாள்.

அவனுக்கோ அடுத்தடுத்த அதிர்ச்சி தாங்க முடியாமல் என்ன செய்வது என்று கூட புரியாது அப்படியே அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

அவளோ முதலில் அவனது மனதினை குளிர வைக்கும் முன்பு அவனது வயிற்றை இப்பொழுது குளிர வைக்க வேண்டும் என்று நினைத்தவள், அதிகாலை மூன்று மணிக்கு நந்தாவிற்கு கால் செய்தாள்.

அவனும் நல்ல உறக்கத்தில் இருந்தவன் தொலைபேசி ரிங் ஆகவும் “ஐயோ இந்த நேரத்துல எவன்டா தூங்க விடாமல் இப்படி போன் பண்றது.. பேபி நீ மாமாவ இன்னும் இறுக்கமா கட்டி பிடிச்சுக்கோ..” என்றவன் தன் கனவை தொடர்ந்தான்.

மீண்டும் தொலைபேசி அழைக்க “இரு பேபி மாமா இப்ப வந்துடுறேன்..” என்று தனுக்குத் தானே கூறியவன் “ச்சை..” என்று சலித்தபடியே போனை எடுத்து காதல் வைத்தான்.

அந்தப் பக்கத்தில் இருந்த மதியோ “ஹலோ அண்ணா..?” என்க, இவனுக்கோ இருந்த அந்த அரைகுறை தூக்கம் கூட பறந்து போனது.

சட்டென்று எழுந்து அமர்ந்தவன் “என்னமா இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க..?” என்று கேட்டான். அவளும் “அண்ணா அவருக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்..?” என்று கேட்டாள்.

அவள் கேட்ட கேள்வியில் ஒரு நிமிடம் தன் மொபைலை காதில் இருந்து எடுத்து தன் முகத்திற்கு முன்னே பார்த்தவன் அதில் தெரிந்த மணியை பார்க்க மணி 3 என்று காட்ட, தன் தலையை எங்கு கொண்டு முட்டிக் கொள்வது என்று தெரியாமல் அவளிடம் எதற்கு என்று கேட்டான்.

“ஏமா மூணு மணிக்கு போன் போட்டு கேட்கிற கேள்வியாம்மா இது..?” என்று அவன் கேட்க, அவளோ “சாரி அண்ணா ப்ளீஸ் அவருக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்னு சொல்லுங்க..?” என்றாள்.

அவனும் “அவருக்கு அவங்க அம்மா கையால செய்யற வெண்பொங்கலும் சாம்பாரும் ரொம்ப பிடிக்கும்..” என்றான்.

“சரி அண்ணா..” என்றவள் அவன் பதில் பேசும் முன்பே போனை கட் பண்ணி விட்டாள்.

இவனும் அவள் போனை வைத்ததும் “இவ என்ன பண்ண காத்திருக்காளோ தெரியலையே.. ஆண்டவா மித்திரன் சார் கிட்ட இருந்து இவளை நீ தான் காப்பாத்தணும்.. அவர் எந்த நேரத்தில எப்படி இருப்பாருனு கூட தெரியாது.. இவ திரும்பவும் அவங்க அம்மாவை ஞாபகப்படுத்த போறாளே.. இவளுக்கு நான் என்ன சொல்லி புரிய வைக்கிறது..” என்று யோசித்தவாறே தான் விட்ட தூக்கத்தை மீண்டும் தொடர்ந்தான்.

மதியும் நந்தா சொன்னது போல வெண்பொங்கல் சாம்பார் செய்து எடுத்துக் கொண்டு வந்தவள் அவனின் வாய் அருகே ஒரு கவளம் எடுத்து நீட்டினாள்.

அவனோ இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாது இருக்க, “சார் சார்..” என்று அழைக்க அவன் சட்டென நிமிர்ந்தவன் “ஹான்..” என்று சொல்ல வாய் எடுக்க அதற்குள் கையில் வைத்திருந்த உணவை அவன் வாயில் திணித்து விட்டாள் அவன் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்காமல்.

இல்லையென்றால் அவன் எப்படியும் தன்னை காயப்படுத்த தான் செய்வான் என்று தெரிந்தவள் மீண்டும் மீண்டும் கையில் உணவை எடுத்தவள் அவனுக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல் முழுவதையும் ஊட்டி முடித்தாள்.

அந்த கணம் அவனுமே அந்த சாப்பாட்டு ருசியில் தன்னை மறந்து அனைத்தையும் உண்டு முடித்தான். தன் அம்மாவே தனக்கு ஊட்டியதைப் போன்ற உணர்வு அந்தக் கணம் அவனுக்குத் தோன்றியது.

மறுப்பேதும் சொல்லாமல் அவள் கொடுக்க கொடுக்க இவனும் அமிர்தமாக நினைத்துக் கொண்டு உண்டான். அவன் கண்கள் கூட சற்றே கலங்கத்தான் செய்தன.

சாப்பாட்டை அவனுக்கு ஊட்டி முடித்தவள் தன்னுடைய புடவை முந்தானையை எடுத்து அவனுடைய வாயையை துடைத்தும் விட்டாள். அதன் பிறகே அவனுக்கு என்ன நடந்தது என்று யூகிக்க முடிந்தது.

இவ்வளவு நேரமும் ஏதோ மாய உலகில் சஞ்சரித்தவன் போல் இருந்தவன் தன் சுயம் வந்ததும் சட்டென இருக்கையை விட்டு எழுந்தவன் அவளை நெருங்கி வந்து அவளது கழுத்தை பிடித்து அவளை உற்றுப் பார்த்தான்.

பார்க்க தேவலோக மங்கை பூமியில் வந்தது போல இருந்தாள்.

அவளை இன்றுதான் முதல்முறையாக புடவையில் பார்க்கிறான் அவ்வளவு அழகாக இருந்தாள். அவளுடைய அழகில் அவன் மயங்கினாலும் அதை அவளிடம் காட்டிக் கொள்ளாமல் சற்று முறைப்பாகவே அவளிடம் பேசினான்.

“என்ன இதெல்லாம் இப்படி பண்றதுக்கு உனக்கு யார் உரிமை கொடுத்தது..?” என்று அவள் கண்களை பார்த்து கேட்க, இதற்கு முன்பு அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவள் கண்களில் தெரியும் பயம் இப்போது அவள் கண்களில் தெரியவில்லை. அதற்கு மாறாக அவள் கண்களில் கனிவு மட்டுமே தெரிந்தது.

அதை பார்த்த இவனுக்கு தான் ஒரு நிமிடம் இதயம் தடம் மாறியது. ‘என்ன பார்வை இது பயம் போய் இப்போ வேற எதுவோ தெரியுதே..’ என்று நினைத்தான்.

அவளோ லேசாக சிரித்தவள் எதுவும் சொல்லாமல் தன் கழுத்தில் இருந்த அவன் கையை எடுத்து விட்டு அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, அவளுடைய கையைப் பிடித்து சுண்டி இழுக்க அவளும் சுருண்டு வந்து அவன் மேல் விழுந்தாள். விழுந்தவளை தன்னோடு இறுக்கிக் கொண்டவன்,

“என்னடி நான் கேட்டுகிட்டு இருக்கேன் என்ன மதிக்காம நீ உன் பாட்டுக்கு போனா என்ன அர்த்தம்.. என் மேல உள்ள பயம் போயிருச்சா என்ன..?” என்று அவள் கன்னத்தை தன் கையில் பிடித்தபடி கேட்க, அவளோ அவன் கேட்கும் கேள்விகளை கவனிக்காதவள் போல அவன் கண்களை மென்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

மீண்டும் அவனுக்கு கோபம் வர அதை பார்த்தவளும் “இப்ப என்ன பண்ண போறீங்க.. முடிஞ்சா என்ன கிஸ் பண்ணுவீங்க.. இல்லன்னா என்ன அங்க இங்க தொடுவீங்க அவ்வளவுதானே.. ஓகே நீங்க என்ன வேணா பண்ணிக்கலாம் நான் எதுவும் சொல்ல மாட்டேன்..” என்றபடி தன் கைகளை விரித்து நின்றிருந்தாள்.

அதை பார்த்தவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏன் அவளிடம் இந்த திடீர் மாற்றம் என்றும் யோசிக்க முடியவில்லை. சட்டென தன் கைப்பிடியில் இருந்து அவளை விடுவித்தவன் அவளுடைய முகம் பார்க்காது “இங்கிருந்து போ முதல்ல..” என்றான்.

அவளோ மீண்டும் அவனை சீண்டும் பொருட்டு “என்னாச்சு சார் உங்ககிட்ட இருந்து ரொம்ப எதிர்பார்த்தேன்..” என்றவள் அவனை அடிக்கண்ணால் பார்த்துக் கொண்டே “நீங்க என்ன பழிவாங்கலையா சார்..?” என்று அவள் இழுத்து சொல்ல, இவனுக்கோ ஆத்திரமாக வந்தது.

இருந்தும் அவளிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல் “உன்னை இங்கிருந்து போன்னு சொன்னேன் போடி இங்க இருந்து..” என்று கர்ஜித்தான்.

அவளும் லேசாக சிரித்தபடி அங்கிருந்து கிளம்பி விட்டாள். வெளியே வந்தவள் எதிரே இருந்த ஆளைப் பார்த்து உறைந்து போய் நின்று விட்டாள்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

1 thought on “வதைக்காதே என் கள்வனே”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!