இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நான் இல்லை..!!

5
(15)

Episode – 02

 

அவளோ, வேலைகளில் கவனமாக இருந்தவள், ஏதோ உந்த முகத்தை திருப்பி அவனைப் பார்க்க,

 

அவனோ, இமைக்காது கூர் விழிகளால் அவளையே முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

அந்தப் பார்வையைக் கண்டவளுக்கு ஒரு நொடி உடலுக்குள் பூகம்பம் வந்து போனது.

 

உடனே தனது பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டவள்,

 

“என்ன இவன் இப்படிப் பார்க்கிறான்?”,  என முணுமுணுத்துக் கொண்டு, தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.

அதன் பிறகு மறந்தும் அவள் அவனின் புறம் திரும்பவில்லை.

 

விழாவும் ஆரம்பமானது. அங்கு வந்த மற்ற விஐபிக்களில் ஒருவர் கூட,

ஆதி மூலனைப் பற்றி ஒரு வார்த்தையேனும் கூறாது தமது பேச்சை முடித்துக் கொள்ளவில்லை.

 

அனைவரும் அவனைப் புகழ்ந்து பேச, 

அபர்ணாவுக்கு உள்ளுக்குள் எரிந்து கொண்டு வந்தது. 

 

ஆனாலும் வெளிக்காட்டாது பல்லைக் கடித்துக் கொண்டு நிற்க,

 

அவளின் பாவனைகளை ஒன்று கூட விடாது  கவனித்துக் கொண்டு இருந்தான் ஆதி மூலன்.

 

“ஒரு சின்னப் பொண்ணு நீ, நீ என்ன அவமானப்படுத்துறீயா?,என்னைக் கண்டு பெரிய அரசியல் வாதிங்க எல்லாம் தெறிச்சு ஓடிப் போறாங்க. நான் மூச்சு பலமா விட்டாலே மயங்கிப் போற மாதிரி இருக்கிற இவ எனக்கு திமிர் காட்டுறா. போ…. போ…. இன்னும் எவ்வளவு தூரத்துக்கு போறாய்னு நானும் பார்க்கிறன்.” என எண்ணிக் கறுவிக் கொண்டவன் வாய் மட்டும் திறக்கவில்லை.

 

அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்க, அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கும் தருணமும் வந்து சேர்ந்தது.

 

அனைவருக்கும் பொறுப்பாக நின்று சிற்றுண்டிகள் காபி மற்றும் கூல் ட்ரிங்க்ஸ்சை அவரவர்களின் விருப்பப்படி கேட்டு வழங்கிய அபர்ணா,

ஆதி மூலன் அருகில் வந்ததும், முகத்தை கோணிக் கொண்டு, தனக்கு அருகில் நின்று கொண்டு இருந்த நண்பியிடம் அவனுக்கு உணவுகள் அடங்கிய தட்டை வழங்க சொன்னாள்.

 

அவனிடம், எது வேணும் என்று கூட அவள் கேட்கவே இல்லை.

 

அவளின் நண்பியும், ஒரு தட்டையும், கூல் ட்ரிங்க்ஸ்சையும் கொடுக்க,

 

அபர்ணாவை பார்த்த வண்ணம், “வேண்டாம்.” என்பது போல தலையாட்டினான் ஆதி.

 

அப்போதும் விடாது, அபர்ணா அவனை இன்னும் தரம் குறைத்துப் பேசும் வகையில்,

 

“அது தானே சாருக்கு இதெல்லாம் பிடிக்குமா?, அவரு அல்ககோல் லவ்விங் பர்சன் போல, அவரோட அடிதடி வேலைக்கு அவருக்கு அது தானே வசதியாக இருக்கும்.” என கூற,

 

அவளை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவன், கையைக் கட்டிக் கொண்டு வேறு புறம் பார்வையை திருப்ப,

 

அவனின் கூர் பார்வையில் ஒரு வித ஒவ்வாத உணர்வு அபர்ணாவுக்கு உருவாக, அங்கு தொடர்ந்தும் நிற்க முடியாது நகர்ந்து விட்டாள்.

 

அந்த நாளின் நிகழ்வுகளும் நல்ல படியாக நடந்து முடிய, விடை பெற்றுக் கிளம்பிய ஆதியின் பார்வை அங்கு புன்னகை உடன் நண்பிகளுடன் பேசிக் கொண்டு இருந்த அபர்ணாவின் மீது படிந்தது.

 

அவளோ, தன் வெண் பற்கள் பளிச்சிட, தலை முடியைக் கோதிய வண்ணம், கண்கள் சுருங்கி விரிய, சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தாள்.

 

அவளின் மீது வன்மம் கொள்ள, ஏனோ ஆதிக்கு மனம் வரவில்லை.

 

அவன் ஒருவரின் மீது வன்மம் கொண்டால், அதனால் உண்டாகும் விளைவுகளை குறித்த நபர் தாங்கிக் கொள்ளவே மாட்டார். அவரை துரத்தித் துரத்தி அடித்து ஒன்றும் இல்லாது ஆக்கி ,  விடுவான் அவன்.

 

அப்படிப் பட்டவன் ஒரு பெண் மீது வன்மம் கொள்ள வேண்டாம் என தனக்குள் எண்ணிக் கொண்டு, 

 

அவளை நாடி செல்ல, அவளோ, அவன் வருவது அறியாது அவனைப் பற்றியே நண்பிகளிடம் கடிந்து பேசிக் கொண்டு இருந்தாள்.

 

அங்கு நின்றவர்களில் ஒரு நண்பி, 

அபர்ணா, “அவர் முகத்தில வடு இருந்தாலும் எவ்வளவு ஹாண்ட்சம்மா இருக்கார். அவர பார்த்து எதுக்குடி இப்படி பொரிஞ்சு தள்ளுறாய்?” என கேட்க,

 

“பன்னி கூட  சில வேளை அழகாத் தெரியும். ஆனா அது எங்க உருளும்னு தெரியும் தானே, அவனும் அவன் மூஞ்சயும். சே….” என கூற,

 

அவள் சொன்னதைக் கேட்டு, ஆதியின் கால்கள் அப்படியே தரித்து நின்று விட்டது.

 

அவனின் முகமோ கோபத்தில் அனலாக கொதிக்க, 

 

அவளையே உறுத்து விழித்தவன், 

“இன்னும் அவள் என்ன சொல்கிறாள்?”  என உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான்.

 

அபர்ணாவின் பேச்சைக் கேட்டு திகைத்துப் போன, ஒரு நண்பியோ, 

 

“ஏய்…. என்ன பேச்சு இது?, நீ இப்படி எல்லாம் பேச மாட்டீயே. ஏன் அவர் மேல உனக்கு இப்படி ஒரு கோபம்?, கொஞ்சம் அமைதியா இருடி. யாரும் நீ பேசுறத கேட்டு அவர் கிட்ட சொல்லிடப் போறாங்க. அப்புறம் பிரச்சனை பெரிசாயிடும்.” என அதட்ட,

 

அபர்ணாவோ, அவன் மேல உள்ள மொத்தக் கோபத்தையும் அன்றே பேசித் தீர்த்து விடும் நோக்கில்,

 

“சே…. அவனப் பார்த்து எனக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை. இவன மாதிரி ஒருத்தன் என் குடும்பத்துல இருந்தா…. நானே விஷம் வைச்சு  கொன்னு இருப்பன். ரௌடிப் பய.” என ஒரு வித அழுத்தமான குரலில் கூறி முடிக்க,

 

சரியாக அதே நேரம் கையை தட்டினான் ஆதி.

 

அந்த ஓசையில், யார் என திரும்பிப் பார்த்த அபர்ணா அங்கு கோபத்தின் மொத்த உருவமாக நின்று கொண்டு இருந்த, ஆதியைக் கண்டு  பயந்து போய் நிற்க,

 

“நாங்க இல்ல சார், இவ தான்.” என கூறிக் கொண்டு அவளின் நண்பிகள் யாவரும் ஓடி மறைய,

 

“ஏய்…. நில்லுங்கடி.” என தானும் அங்கிருந்து விரைவாக விலகிப் போக எண்ணியவளின் முன்பாக இடை மறிப்பது போல வந்து நின்றான் ஆதி. 

 

அபர்ணாவோ, அவனைக் கடந்து போக முடியாது, மெல்ல நிமிர்ந்து பார்க்க,

 

“நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளான்னு கடந்து போகத் தான் நினைச்சேன். ஆனா நீ என்ன ரொம்ப சீண்டிட்டாய். 

என்ன சொன்னா என்ன மாதிரி ஒருத்தர் உங்க வீட்டுல இருந்தா நீ விஷம் வைப்பீயா?, அப்போ எத்தனை லீற்றர் வேணுமோ இப்பவே வாங்கி வைச்சுக்கோ.”

 

“உங்க வீட்டுல ஒருத்தரா என்ன நீ ஏத்துக்க வேண்டிய பாவமான நிலை உனக்கு வரப் போகுது. இந்த ஆதிய ரொம்ப குறைச்சு எடை போட்டுட்டாய் நீ, உனக்கு நான் யார்ன்னு போகப் போகப் புரியும். எந்த வாயால என்ன கேவலமா பேசுனீயோ…. அதே வாயால  என்ன மரியாதையா கூப்பிட வேண்டி வரும். 

அப்போ என்ன பண்ணுவாய்னு நானும் பார்க்கிறேன்.” என அவளை நோக்கி சீறியவன், அவளை நோக்கி ஒற்றை விரலை காட்டி எச்சரிக்கை செய்து விட்டும் போனான். 

 

அவன் போனதும் புயல் அடித்து ஓய்ந்தது போல திகைத்துப் போய் நின்ற அபர்ணாவோ, அவனை ரொம்ப சீண்டி விட்டோமோ என காலம் தாழ்த்தி எண்ணினாள்.

 

அந்த ஒற்றை நிகழ்வின் விளைவு தான் இந்தக் கலியாணம். 

 

சொன்னதோடு நிறுத்தாது, மறு நாளே அபர்ணா குடும்பத்தை பற்றி அறிந்து கொண்டவன்,

 

அவளுக்கு தாய் இல்லை என்பதையும், அக்கா மேல் உயிரையே வைத்து இருக்கிறாள் என்பதையும் விசாரித்து தெரிந்து கொண்டான்.

 

அடுத்து அவளின் தந்தையை பற்றி தகவல்கள் சேகரிக்க சொன்னவன், 

 

அவர் புடவைத் தொழிலில் கொடி கட்டிப் பறக்கிறார் என்ற தகவல் வரவும்,

“நாட் பேட்.” என சொல்லிக் கொண்டு, அவரின் வியாபாரத்தில் மறைமுகமாக குடைச்சல்கள் கொடுக்க ஆரம்பித்தான்.

 

அதன் விளைவு அடுத்த இரு மாதங்களில், தொழிலில் திடீர் சரிவு, தொட்டது எல்லாம் தோல்வி. என அவருக்கு அடுத்தடுத்த அடிகள் விழ ஆரம்பித்தது.

 

“முதலில் சமாளித்து விடலாம்.”  என எண்ணியவர், 

 

“இனி மொத்தமாக மூழ்கிப் போய் விடுவேனோ, எழும்ப முடியாது போய் விடுமோ?” என எண்ணும் அளவுக்கு அவரின் தொழில் வீழ்ச்சியை நோக்கி நகர ஆரம்பித்தது.

 

“என்னடா இது விதியின் கொடூர செயல்….”  என அவர் குழம்பித் தவிக்க ஆரம்பித்தார்.

 

அது விதி அல்ல, எல்லாம் ஆதி மூலனின் சதி ஆட்டம். என யார் அவரிடம் சொல்வது.

 

அப்படியே, அவரின் மொத்த சேமிப்புக்களும் கரைய ஆரம்பிக்க, இதற்கு மேலே முடியாது என எண்ணியவர்,

 

தன் நண்பர்களிடம் உதவி கேட்க செல்ல, அவர்களின் கை காட்டுதலின் பேரில் இறுதியாக அவர் கரை சேர்ந்த இடம் தான் ஆதிமூலனின் கோட்டை.

 

அவருக்கு உதவி செய்வது போல உள்ளே வந்தவன், அதற்கு பதிலாக கேட்டது அவரின் பெண்ணை திருமணம் செய்து தரும்படி தான்.

 

அவனின் டார்கெட் அபர்ணா தான். 

 

ஆனால் அவளின் பதினேழு வயது அவனுக்கு இடித்தது. ஆகவே அவளின் அக்காவை பணயமாக்க முடிவு பண்ணினான். 

 

அவன் கேட்டதில் முதலில் அதிர்ந்து தயங்கியவர், அவனின் பண பலம், மற்றும் ஆட்களின் பலம் என்பவற்றைப் பார்த்து மகளும் வசதியாக வாழ்வாள், தான் எண்ணியதும் நடக்கும் என எண்ணி தலை ஆட்டினார்.

 

அதன் பின்பு தனது மூத்த மகளிடமும் மெதுவாக விடயத்தைக் கூறினார்.

 

அதிர்ந்து கூட பேச தெரியாத, அமைதியான அழகுப் பெண் சிலை தான் அவரின் மூத்த பெண் தமயந்தி.

 

பத்தொன்பது வயதில் வெளியூரில் இசைக்  கல்லூரியில் படித்துக் கொண்டு, முன் பள்ளி ஆசிரியையாக வேலையும் பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.

 

எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும், தான் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெண்ணவளின் நோக்கத்திற்கு யாரும் தடை போடவில்லை. 

 

இப்போது தந்தை திடீர் என அழைத்து திருமணம் என்கவும், குழப்பம் கொண்டவள்,

 

“இப்போ என் கலியாணத்திற்கு என்னப்பா அவசரம்?”என மென் குரலில் கேட்டாள்.

 

அவரோ, “அம்மாடி, அவசரம் வந்திடிச்சும்மா.” என உடைந்த குரலில் கூறியவர் நடந்த அனைத்தையும் கூற,

 

திகைத்துப் போன பெண்ணவளும், 

“ஆனா அப்பா…. ஒருத்தர் பணம் கொடுக்கிறார்ன்னு கலியாணம் செய்றது என்னவோ எனக்கு சரியா படலயே?” என கேட்க,

 

“அது எனக்கும் தெரியும்மா, ஆனா வேற வழி இல்லம்மா, அவர் பெரிய பணக்காரர், கண்டிப்பா உன்ன ரொம்ப நல்லாப் பார்த்துப்பார். நீ கலியாணத்துக்கு பிறகு படிக்கவும் ஓகே சொல்லிட்டார்.” என கூறி மகளின் மனசை பேசியே கரைத்து விட்டார்.

 

அவள் அப்போதும் சற்று யோசிக்கவும், 

“அம்மா என் பேர் நிலைக்கிறதும் , ஏன் நான் உயிரோட இருக்கிறதும் இப்போ உன் கையில தான் இருக்கு.” என கூறி கை எடுத்துக் கும்பிட,

 

பதறிப் போனவள், “சரி அப்பா, நான் கிளம்பி வரேன். கலியாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.” என கூறி விட,

 

அவரும் கலியாணத்துக்கு நாள் குறித்து விட்டார்.

 

இவ்வளவும் சொன்னவர், மாப்பிள்ளை பேரை மட்டும் கூறவில்லை. கூறி இருந்தால் தமயந்தி கண்டிப்பாக மறுத்து இருப்பாள்.

 

அதே நேரம், அபர்ணாவுக்கு, அக்காக்கு திருமணம் என்கிற விடயம் மட்டும் தான் சொல்லப் பட்டு இருந்தது.

 

 “அக்கா ஓகே சொல்லிட்டாளா?, அப்போ அக்கா இங்க வரப் போறாங்களா?” என எண்ணிக் குதூகலித்தவள், அப்பாவின் தெரிவு தப்பாகாது என எண்ணி அமைதியாகி விட்டாள்.

 

அவளுக்கு தன் அக்கா இனி தன் கூடவே இருக்கப் போகிறாள் என்கிற மகிழ்ச்சி.

 

அதே நேரம் கோடீஸ்வரன், விடயத்தை ஆதி மூலனிடம் சொல்ல,

 

அவனோ, “ஓஹ்….” என மட்டும் கூறியவன், 

 

“உங்க இரண்டாவது பொண்ணுக்கு மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?” என கேட்டான்.

 

அவரும், “இல்ல தம்பி அவ பரீட்சையில கொஞ்சம் பிஸி, இன்னும் உங்கள பத்தி சொல்லல….” என இழுக்க,

 

“அது தானே எனக்கும் வசதி, இல்லன்னா சில் வண்டு இந்நேரம் பிரச்சனையைக் கிளப்பி இருக்கும்.” என எண்ணிக் கொண்டவன்,

 

அடுத்த பிளான் போட்டு, 

கலியாணத்திற்கு முதல் நாள் இரவு நிச்சய தார்த்தம் என்றும், மறு நாள் திருமணம் என்றும், 

 

திருமண வேலைகளை தான் பார்த்துக் கொள்வதாகவும், கலியாண பத்திரிகை முதல் பந்தல், விருந்து வரை அனைத்தும் தன் பொறுப்பு எனவும் கூறி விட்டான்.

 

ஆகவே, எந்த டென்ஷனும் இல்லாமல் கோடீஸ்வரனும் திருமணதிற்கு ரெடி ஆகினார்.

 

சொன்னபடி, நிச்சயதார்த்த நாள் காலையில் தமயந்தியும் வந்து இறங்கி விட்டாள். 

 

அக்காவும், தங்கையும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு கொஞ்சித் தீர்த்து விட்டனர்.

 

அந்த நாள் மாலையில் மொத்த சந்தோஷத்தையும், குழி தோண்டி புதைப்பது போல வந்து இறங்கினான் ஆதி மூலன்.

 

அவனைக் கண்டதும், “இவன் எங்க இங்க?” என திகைத்துப் போன, 

 

அபர்ணா “அப்பா இவன் ….” என திக்கித் திணறிக் கேட்க,

 

கோடீஸ்வரனோ, “ இவன் இல்லம்மா…. இவர்.” என திருத்தி விட்டு,

 

“இவர் தான் உங்க அக்காவுக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை.” என கூற நெஞ்சிலே கை வைத்தபடி, 

 

அப்படியே அதிர்ந்து போய் ஆதியைப் பார்க்க,

 

அவனோ, அவளை நோக்கி எள்ளலாக புன்னகை செய்து விட்டு, 

 

“இனி என்ன எல்லாம் நடக்கப் போகுது பார்.”என்கிற ரீதியில் ஒரு பார்வை பார்த்து விட்டு, அவளைக் கடந்து செல்ல, மொத்தமாக உடைந்து போய் நின்றாள் அபர்ணா. 

 

தலை சுற்றுவது போல இருக்க, 

அருகில் இருந்த தூணைப் பிடித்துக் கொண்டவள்,

 

“இல்ல…. இல்ல…. இது நடக்கவே கூடாது.” என உருப்போட்டுக் கொண்டு, ஓடியவள் நிச்சயத்திற்கு பொன்நிற பட்டில், அழகான பொன் சிலை போல ரெடி ஆகி புன்னகை உடன் நின்று கொண்டு இருந்த தனது அக்காவைக் கண்டு கண் கலங்க,

 

“அக்கா….” என கதறலுடன் தமயந்தியை அணைத்துக் கொண்டு, 

 

“அக்கா என்ன  மன்னிச்சுடு…. என்னால தான் உனக்கு இந்த நிலைமை.” என கூறி அழுது கொண்டே நடந்தவை அனைத்தையும் சொல்லி முடிக்க,

 

தமயந்தி தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டாள்.

 

தங்கை சொன்ன விடயங்களில் உள்ளுக்குள் உதறல் எடுக்க,

 

அப்பாவிடம் பேச செல்ல ஆரம்பிக்க,

அதற்குள் நிச்சயத்திற்கு நேரம் ஆகிவிட்டது என கூறி அவளை அழைத்துக் கொண்டு சென்று விட்டனர்.

 

அடுத்து, அபர்ணாவின் கசங்கிய முகத்தைப் பார்த்துக் கொண்டே, மோதிரத்தை தமயந்தியின் கையில் அணிவித்து இருந்தான் ஆதி.

 

அந்த நாள் நிகழ்வுகள் முடிந்த போதும், நிம்மதி இன்றி தவித்த இரு பெண்களும் கிடைத்த சொற்ப நேரத்தில், 

 

ஓடிச் சென்று தந்தையிடம்  ஆதியைப் பற்றிக் கூறி திருமணத்தை நிறுத்த சொல்லிக் கேட்க, 

 

அவரோ, “தலைக்கு மேல வெள்ளம் போயாச்சும்மா. இனி எதுவும் செய்ய முடியாது. அந்த தம்பி ரொம்ப நல்லவர். அவர் எனக்கு வாக்கு கொடுத்து இருக்கார். நீ நல்லா இருப்பாய்மா.” என கூறினார்.

 

அபர்ணாவோ, “அப்பா…. அக்கா பயந்த சுபாவம் உள்ளவங்க. அவங்கள போய் அந்த முரடனுக்கு…. வேணாம் அப்பா. இந்தக் கலியாணம் வேணாம் அப்பா.” என அழுது கொண்டே கூறினாள். 

 

ஆனால் அவரோ, “திருமணம் நடந்தே ஆக வேண்டும்.” என விடாப் பிடியாக நின்று கொண்டார்.

 

தமயந்தியும், அபர்ணாவும் அழுது விட்டு, ஆளுக்கு ஒரு மூலையில் ஒதுங்கிக் கொண்டனர்.

 

மறு நாள் திருமண நாளும் விடிந்து மண மேடை வரைக்கும் வந்தாச்சு.

 

நடந்த அனைத்தையும், மண மேடையில் நின்று நினைத்துப் பார்த்து, கலங்கிப் போய் நின்றவளை சொடக்கு போட்டு அழைத்தவன்,

 

“ஏய்…. மச்சினிச்சி போய் என் வருங்கால பொண்டாட்டிய கூட்டிக் கொண்டு வா. இப்பவே கனவு காணக் கூடாதும்மா. உனக்கு இன்னும் வயசு இருக்கு.” என கூற, 

 

அவனை முறைத்துப் பார்த்தாள் அபர்ணா. 

 

அவனோ, “நான் உன் அத்தான் ஆகப் போறன். மரியாதை முக்கியம் அம்மணி. இனி நான் என்ன சொன்னாலும் நீ தலையாட்டித் தான் ஆகணும்.” என ஒரு வித அழுத்தத்துடன் கூறினான்.

 

அவனை எதுவும் செய்ய முடியாது,

உடைந்து போன மனதுடன், தனது தமக்கையை அழைத்து வர சென்றாள் அபர்ணா.

 

மறு புறம், கலியாணத்திற்கு தயாராகி நின்ற நம்ம அப்பாவி ஹீரோயின் தமயந்தியோ,

 

அனைவரையும் வெளியில் அனுப்பி விட்டு, பெரு மூச்சு ஒன்றுடன் ஒரு பேப்பரில்,

 

“அப்பா, என்னால இந்தக் கலியாணத்துக்கு சம்மதிக்க முடியாது, அபர்ணா குட்டி அவ்வளவு சொன்ன பிறகும் அந்த மனுஷன என்னால கலியாணம் பண்ணிக்க முடியாது. என் தங்கையை பழி வாங்க நடக்கிற கலியாணம்ப்பா இது. இப்படி ஒரு கலியாணம் எதுக்குப்பா?”

 

“என்னால ஓடிப் போய் வாழ முடியும். ஆனா உங்க மானம் மொத்தமும் போய்டும். அதனால நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். என் உயிர விட்டுடலாம்னு இருக்கேன். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாம போயிடுறேன் அப்பா. அபர்ணா தான் ரொம்ப அழுவா. அவள கவனமா பார்த்துக்கோங்க. என்னால யாரையும் எதிர்த்து சண்டை போடவும் முடியாது. யாரையும் காயப் படுத்தவும் முடியாது. அதனால தான் இந்த முடிவு.” என எழுதி முடித்தவள்,

 

கண்ணீருடன் கை எழுத்து போட்டு விட்டு, கடிதத்தை மடித்து வைத்து விட்டு,

 

தூக்க மாத்திரை பாட்டிலை எடுக்க, அவளின் பின்னிருந்த கதவு திறந்து  கொள்ளும் சத்தம் கேட்க , 

 

“யாரு?”  என அவள் பதறிப் போய் திரும்பிப் பார்க்க,

 

உள்ளே வந்த அறிமுகம் இல்லாத ஒருவன், அவளின் முகத்தில் மயக்க மருந்தை அடித்து விட்டு, அவள் மயங்கிய அடுத்த நொடி, அவள் எழுதி வைத்து இருந்த லெட்டரை எடுத்துப் பார்த்து விட்டு,

 

ஒரு கேலிப் புன்னகை உடன் கிழித்து எறிந்து விட்டு, அந்தக் கடிதத்திற்கு பதிலாக தான் கொண்டு வந்த கடிதத்தை வைத்து விட்டு,

 

“இனி தான் இருக்கு ஆட்டம்.” என கண்கள் சிவக்க கூறிக் கொண்டு, தமயந்தியை யாருக்கும் தெரியாது தூக்கிக் கொண்டு சென்று விட்டான்.

 

அந்த நபர் போனதும் தான் அங்கு வந்து சேர்ந்தாள் அபர்ணா, 

 

சோகமே உருவாக கதவைத் திறந்தவள், அங்கு தனது அக்காவைக் காணாது, முதலில் திகைத்துப் போனாள். 

 

“அக்கா…. அக்கா….” என பதட்டமாக அழைத்தபடியே அங்கும் இங்கும் தேடியவள்,

 

“கலியாணம் வேணாம்னு அக்கா தப்பான முடிவு எதுவும் எடுத்து இருப்பாங்களோ…. இப்போ என்ன செய்றது?” என புலம்பிக் கொண்டு,

 

அங்கிருந்த மேசையின் புறம் பார்வையைத் திருப்ப, 

 

அங்கு தூக்க மாத்திரை போத்தல் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தது.

 

“அய்யோ…. அக்கா.” என அந்த பாட்டில் நோக்கிப் போனவள், அப்போது தான் அதன் அருகே இருந்த கடிதத்தில் பார்வையை செலுத்தினாள்.

 

“என்ன கடிதம் இது?” என குழப்பமாக எண்ணியபடியே எடுத்து படிக்க ஆரம்பித்தாள் அவள்.

 

அதிலே, “தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும், ஒரு ரௌடியை தன்னால் திருமணம் செய்யவே முடியாது எனவும், அதை விடவும் தான் ஒருத்தரை மனசார விரும்புவதாகவும் அவர் கூடவே செல்வதாகவும், தன்னைத் தேட வேண்டாம்.” எனவும் எழுதி சைனும் இடப்பட்டு இருந்தது.

 

தமயந்தியை தூக்கி சென்றது யார்?

 

இனி ஆதி மூலன் எடுக்கப் போகும் முடிவு என்ன?

 

இரு பெண்களின் வாழ்க்கையும் இனி என்ன ஆகும்?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்..

 

அடுத்த எபி நாளைக்கு வரும் மக்காஸ் ❤❤❤❤

 

உங்க லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுங்க மக்காஸ் ❤❤❤❤❤

 

இனி தொடர்ந்து எபிகள் வரும் 😍😍😍😍

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நான் இல்லை..!!”

    1. தாரதி

      அடுத்த எபில பாருங்கடா ❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!