அத்தியாயம் – 1
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கார் வந்திருச்சு” என்று பதட்டமாக ஓடி வந்தாள் யாழ்நிலா.
“ஹே பாத்து டி” என்று அவளை பிடித்து நிறுத்திய பைரவி,
“என்னை தான் டி பொண்ணு பார்க்க வந்திருக்காங்க. நீ ஏன் இவ்வளவு படபடப்பா இருக்கா?” என்று அவள் கன்னம் கிள்ளினாள்.
“உன்னை மாதிரி என்னால் நிதானமா இருக்க முடியலையே அக்கா. ஒருமாதிரி பயமா இருக்கு எல்லாம் நல்லபடியா நடக்கனும்னு”
“எதுவும் நம்ப கையில இல்லை யாழ். ரொம்ப யோசிக்காத. எது நடக்கனும்னு இருக்கோ அது கண்டிப்பா நடக்க தான் போகுது” என்றவள் கலக்கமாக நின்றிருந்த யாழ்நிலா தலையை ஆதரவாக தடவி,
“அம்மாக்கு ஹெல்ப் பண்ணலாம் வா” என்று கையோடு அவளை அழைத்து சென்றிருந்தாள் பைரவி.
அதே நேரம் பெண் வீட்டிற்கு முன், வண்டியை விட்டு இறங்க மறுக்கும் பெரிய மகனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார் மீனாட்சி.
“இதுக்கு தான் நான் வரலன்னு சொன்னேன். ஜெய் வர லேட்டாகும் அங்க கொண்டு வந்து விட்டா மட்டும் போதும்னு சொன்னத நம்பி வந்தேன் பாருங்க என்ன சொல்லனும்” என்று எரிந்து விழுந்தான்.
“டேய் உன் தம்பிக்கு பொண்ணு பார்க்க போகும் போது நீயில்லமா எப்படி டா?”
“எனக்கு விருப்பம் இல்லைன்னு எத்தனை தடவை சொல்லுறது. எப்பவும் உங்க இஷ்டத்துக்கு நடக்கணும்னு நினைக்காதீங்க. இதைபத்தி பேசி பேசி எனக்கு டயர்ட் தான் ஆகுது.” என்று நிதானமாக பேசியவன் பின்னே அமர்ந்திருந்த தந்தையை ஆழ்ந்து பார்த்தான்.
“மீனா அவனுக்கு விருப்பம் இல்லன்னா விடேன்” என்று அந்த பேச்சிற்கு முற்றுபிழை வைத்தார் ஆதிகேசன்.
வர நேரமாகும் என்று சொல்லிருந்த ஜெய் பிரகாஷ் கூட அங்கே வந்து சேர்ந்து இருந்தான். ஆனால் இவர்கள் காரை விட்டு இறங்குவதாக தெரியவில்லை.
சற்று பொறுத்து பார்த்த பைரவியின் அன்னை அவரது கணவரை வெளியே சென்று என்னவென்று பார்க்க சொல்ல அவரும் வாசலுக்கு வந்தார். உள்ளே ஏதோ வாக்குவாதம் நடப்பது போல தெரிந்ததால் தாங்கியபடி கார் கதவிடம் வந்தார் ஆனந்தராஜ்.
அதை பார்த்த ஆதிகேசன் மரியாதை நிமித்தமாக வேகமாக கதவை திறந்து இறங்கினார். அவர் இறங்கியதும் வேறுவழியின்றி இசைவேந்தனும் மீனாட்சியும் இறங்கினார்கள். அவர்களை பார்த்து ஜெய் பிரகாஷ் இறங்கி அவர்களிடம் சென்றான்.
அனைவரும் இறங்கியதை பார்த்த பெண் வீட்டினர் வெளியே வந்து வரவேற்க, இது எல்லாம் இசைவேந்தனுக்கு புதிதாக தெரிந்தது. இது போன்ற நிகழ்ச்சிகளை முடிந்தவரை தவிர்த்து விடுவான். இன்றும் அது போல தவிர்க்க நினைக்க, சந்தர்ப்ப சூழ்நிலையால் பங்குபெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டான்.
உதட்டில் செயற்கையான சிரிப்பை ஒட்டவைக்க தெரியாதவன். அவனது உணர்வுகளை வெளியே காட்ட கூட தெரியாதவன். ஏன் அவனை பெற்றவர்களுக்கும் உடன் பிறந்தவனுக்குமே புரியாத புதிராக இருப்பவன், புதியவர்களுக்கு எப்படி தெரிவான்.
அவனை பார்த்ததும் அனைவருக்கும் புரிந்தது அவனது பிடித்தமின்மை இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.
பெண் பார்க்கும் படலம் சுபமாக முடித்தால் திருமணம் உறுதி செய்யும் நிகழ்ச்சிக்கு உறவினர்களை அழைத்துக்கொள்ளலாம் என்று முன்பே பேசி வைத்திருந்ததால் ஆதிகேசன் யாரையும் அழைக்கவில்லை.
அதற்கு மாறாக ஆனந்தராஜ்ஜின் வீட்டிற்குள் இருபது நபர்கள் பாய் போட்டு அமர்ந்திருந்தனர். அதை பார்த்த இசைவேந்தன் அவன் தந்தையை முறைக்க அவரோ அவனை பார்க்காமல் வேறு பக்கம் திரும்பினார்.
அருகே அமர்ந்திருந்த ஜெய்யிடம் சாய்ந்தவன், “பொண்ணுக்கு இவ்வளவு தான் சொந்தமா இல்ல லாரியில ஏதாவது வந்துட்டு இருக்காங்களா டா?”
“டேய் சும்மா இரு டா?”
“என்னமோ போ டா. நல்லா இருந்தா சரி. நிஜமாவே பொண்ணை பிடிச்சு தான் சரின்னு சொன்னியா இல்லை அம்மாக்காக சொன்னியா?”
“நிஜமா பிடிச்சு தான் ஓகே சொன்னேன்” என்று அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே பைரவி காபியோடு சபைக்கு வந்தாள்.
அவள் பின்னே அவள் அன்னை வித்யா வந்தார். சபையில் இருந்த முத்த மனிதர் ஒருவர் அந்த சூழ்நிலையை கலகலப்பாக்க, “மாப்பிள்ளை தம்பி அங்க பேசுனது போதும். எங்க பொண்ணை நிமிர்ந்து பாருங்க. சரியா பார்க்காம போயிட்டா திரும்பி காமிக்க நாங்க வைக்கிற போட்டியில ஜெயிக்கனுமாக்கும்” என்று நகைக்க இருவரும் நிமிர்ந்தார்கள்.
ஜெய் ரசனையாக பார்க்க, இசைவேந்தனோ அதிர்ந்து இருக்கையில் இருந்து எழுந்தே விட்டான்.
“என்னாச்சு தம்பி?” என்று ஆனந்தராஜ் எழுந்திரிக்க,
“இது…..” என்று கை நீட்டியவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.
“இவ என் தம்பி பொண்ணு யாழ்நிலா. என் தம்பி ஒரு வருசத்துக்கு முன்னாடி தான் ஒரு விபத்தில் இறந்தான். சின்ன வயசிலேயே மூளை காய்ச்சல என் தம்பி மனைவி இறந்துட்டா. என் தம்பியோட இருந்ததை விட எங்க வீட்டில தான் அதிகம் வளர்ந்தா. பைரவி எப்படியோ அப்படி தான் எங்க எல்லாருக்கும்” என்றவர் அவனின் அதிர்ந்த முகத்தை கேள்வியாக பார்த்தார்.
அவர் பேசியதை காதில் வாங்கினாநே தவிர எதுவும் பேசாமல் வெளியே சென்றுவிட்டான். அவனோட செல்ல நினைத்த ஜெய்யின் கையை பிடித்த மீனாட்சி , “அப்பறம் பேசிக்கலாம் ஜெய்” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேச அமைதியாக சபையை கவனிக்க ஆரம்பித்தான்.
இசைவேந்தனின் செய்கை அங்கிருந்த அனைவரையும் குழப்பியது. மேலும் அதை கிளற விரும்பாத ஆதிகேசன், “நம்ப மத்ததை பேசலாமா?” என்று வந்த வேலைக்கான பேச்சை தொடங்கினார்.
“பேசலாம் சம்பந்தி” என்று தன் விருப்பத்தை தெரிவித்தார் ஆனந்தராஜ்.
அவ்வளவு தான், தன் பக்கத்தில் இருந்த காலி இடத்தில் பைரவியை அமர வைத்து அவளோட பேச ஆரம்பித்தார் மீனாட்சி. அது ஜெய்க்கு வசதியாக போக மிக அருகில் அவளை சைட் அடிக்க ஆரம்பித்தான்.
அவன் பார்த்துக்கொண்டே இருப்பது அவளுக்கு ஒரு விதமான கிளர்ச்சியை கொடுக்க ஒரு கட்டத்தில் அவனை திரும்பி பார்த்து விட்டாள். அதற்காக காத்திருந்தவன் போல அவளை பார்த்து கண்ணடிக்க, அவசரமாக திரும்பி விட்டாள். அதில் பொங்கி வந்த சிரிப்பை அடக்க பெரும்பாடுப்பட்டான் ஜெய் பிரகாஷ்.
அதற்குள் யாழ்நிலாவுடன் உள்ளே சென்ற வித்யா அனைவருக்கும் பலகாரங்களை ஒரு தட்டில் அடுக்கி யாழ்நிலாவை கொடுக்க சொல்ல, தயக்கமாக பார்த்தாள்.
“என்ன டா” என்று பரிவாக வித்யா கேட்டதும்,
“வித்யாம்மா பயமா இருக்கு. என்னால ஏதாவது தப்பா நடந்திருமொன்னு”
“லூசு பொண்ணே.” என்று சேலை தலைப்பால் அவள் முகத்தை அழுத்தி துடைத்து, “போய் எல்லாருக்கும் கொடு. நான் மீதி தட்டை எடுத்து வரேன்” என்று அவளை அனுப்பியவருக்கும் இசைவேந்தனின் செயலால் ஒரு பதட்டம் இருக்க தான் செய்தது. என்னவென்று தெரியாமல் தாமாகவே கற்பனை செய்ய கூடாது என்று அந்த நினைப்பிற்கு முற்றுபுள்ளி வைத்து வெளியே சென்றார்.
“என் பையனை பிடிச்சிருக்கா பைரவி?” என்று மீனாட்சி நேரடியாக கேட்டுவிட, வித்யாவை பார்த்தாள்.
சொல்லு என்பது போல அவர் தலையசைக்க, “ம்ம்” என்று சன்னமான குரலில் அவளது விருப்பதை தெரிவித்தாள்.
“எங்களுக்கு ஃபோட்டோல பார்த்ததும் பைரவியை ரொம்ப பிடிச்சது. ஜஸ்ட் போர்மலிட்டிக்காக தான் வந்தோம். இன்னைக்கே நாள் நல்லா இருக்கு, பூ வைச்சு முடிவு சொல்லுறது தான் எங்க வழக்கம். ஒரு தாம்பலம் தரிங்களா சம்பந்தி” என்று மீனாட்சி கேட்டதும் மனதில் தோன்றிய நிம்மதியுடன் இதோ கொண்டு வரேன் அண்ணி என வேகமாக சமையலறைக்குள் சென்றார் வித்யா.
அனைவருக்கும் பலகாரம் கொடுத்துவிட்டு உள்ளே சென்ற யாழ்நிலா கையில் ஒரு தட்டைக் கொடுத்த வித்யா, “மாப்பிள்ளை அண்ணனுக்கு கொடுத்துட்டு வா யாழ்”
“நான் நானா …. இல்லை வித்யாம்மா நீங்க போய் கொடுங்க”
“சமந்தி அம்மா இன்னைக்கே நாள் நல்லா இருக்கு பைரவிக்கு பூ வைச்சுட்டுப் போறேன்னு சொன்னாங்க. நான் தட்டு ரெடி பண்ணனும் டா. இங்க தான எல்லாரும் இருக்கோம் எதுக்கு இவ்வளவு பயம் உனக்கு?”
“இல்லை அவங்கள பார்த்தா பயமா இருக்கு” என்றாள் உள்ளே போன குரலில்.
“ப்ளிஸ் டா” என்றதும் எதுவும் பேசாமல் அவனிடம் சென்றாள்.
வெளியே நின்றிருந்தவனுக்கு என்ன என்னவோ யோசனை வந்தது. உள்ளே தன் வீட்டினருக்கு பைரவியை பிடித்து விட்டது என்பது அவர்கள் பேசுவதில் இசைவேந்தனுக்கு உறுதியாக புரிந்தது.
ஏதோ நிழல் ஆட திரும்பி பார்த்தவனின் கண்களில் யாழ்நிலா பட்டாள்.
‘என்ன?’ என்று அவன் கண்களால் கேட்க,
“ஹான் வித்யாம்மா கொடுக்க சொன்னாங்க” என்று தட்டுத் தடுமாறி கூறினாள்.
“எதுக்கு என்னை பார்த்து பயப்படுற?”
“இல்ல நீங்க டெரரா இருக்கீங்க அதனால கொஞ்சம் பயமா இருக்கு” என்று மறைக்காமல் சொல்லிவிட்டாள்.
பேசிவிட்டு அவன் திட்டுவானோ என்று பதறி அவனை பார்க்க, அவனோ இதுவரை யாருக்கும் காட்டாத அவன் தெத்துப்பல் தெரிய அழகாக சிரித்தான்.
அவனையே பார்த்திருந்தவள், “நீங்க சிரிச்சா அழகா இருக்கீங்க” என்று சொன்னதும் அவன் புன்னகை மேலும் விரிந்தது.
“உன் அப்பா பேரு என்ன?”
அவனது கேள்வியில் மறக்க நினைத்த நினைவுகள் அனைத்தும் நினைவிற்கு வர முட்டுக்கொண்டு வந்த கண்ணீரை அவனுக்கு காமிக்க பிடிக்காமல், “இன்பராஜ்” என்று விசும்பலுக்கு நடுவே கூறி வேகமாக உள்ளே ஓடிவிட்டாள்.
அவளது சோகம் அவனுக்கு தெரிந்ததால் அவளை தொடராமல் அவள் கொடுத்து சென்ற இனிப்பை பொறுமையாக சாப்பிட்டான்.
இசைவேந்தன் சென்றதும் உடனே வெளியே வர முடியாததால் சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ஜெய், “என்னாச்சு” என்று கேட்டான்.
“ஒன்னும் இல்லை டா. வா உள்ள போகலாம்” என்று அவனுக்கு அடுத்து பேச வாய்பளிக்காமல் உள்ளே அழைத்து சென்றுவிட்டான்.
மீனாட்சி சபை முன்னே பைரவியின் தலையில் பூ வைத்ததும், அடுத்து என்ன தேதியில் திருமண உறுதி பேசும் படலத்தை பேசலாம் என்பது வரை பேசியதை காதில் போட்டுக் கொண்டானே தவிர எதுவும் பேசவில்லை.
சிறிது நேரம் அமைதியாக இருந்த இசைவேந்தன் , “சரி நம்ப மட்டுமே பேசிட்டு இருந்தா பொண்ணும் பையனும் எப்போ பேசுவாங்க?” என்று குறும்பாக யாழ்நிலாவை பார்த்து கேட்க அவனை முறைத்து பைரவி கையை சுரண்டினாள்.
“என்ன டி”
“அக்கா மாமாவோட அண்ணாவுக்கு கல்யாணம் ஆகிருச்சா?”
“அது வந்து….” என்று அவள் ஆரம்பிக்கும்போது
“யாழ் … பைரவியோட மாடிக்கு போய்ட்டு வா டா … மாப்பிள்ளை தனியா பேசனுமாம்” என்றார் வித்யா.
“மாமா என்னை கரடின்னு திட்டவா?” என்று வித்யாவிடம் மெதுவாக கூறும்போதே ,
“நீயும் வா டி” என்று பைரவி அழைத்து செல்ல மானசீகமாக தலையில் அடித்து பைரவியின் இழுப்பிற்கு சென்றாள்.
ஜெய்யுடன் இசைவேந்தனும் எழுந்திருக்க, அவனை கேள்வியாக பார்த்தார் ஆனந்தராஜ்.
“முன்ன பின்ன தெரியாத ரெண்டு பொண்ணுங்க கூட என் தம்பியை எப்படி தனியா அனுப்பி வைக்க முடியும். நானும் கூட போவேன்” என்று சொல்லி ஜெய்யை கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு மாடி ஏறினான்.
அவனது பதிலில் ஆனந்தராஜ் மற்றும் அவரது சொந்தங்கள் சிரிக்க, ஆதிகேசன் மீனாட்சி வாயை பிளந்து பார்த்தனர். அவர்கள் பெற்ற மகனா இப்படி பேசிவிட்டு செல்வதென்று.
இப்படி எல்லாம் அவனுக்கு பேச தெரியுமா என்று அதிர்ந்து போயிருந்தனர் இருவரும். இது வெறும் ஆரம்பம் இன்னும் அவன் செய்வதில் அவர்களுக்கு நெஞ்சுவலியே வர போகிறது என்று தெரியாமல் ஆனந்தராஜ் வித்யா தம்பதியினரிடம் நட்பு பாராட்ட ஆரம்பித்தனர் அதிகேசனும் மீனாட்சியும்.