பரீட்சை – 11
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
இந்தக் காட்சியைக்
காண
எதற்கு நான்
உயிரோடு இருக்கிறேன்..
இன்னும் காலன்
எந்தன்
இன்னுயிரை எடுத்துச்
செல்லாமல் இருக்கிறானே..
என் இதயச்
சிறையில்
இருப்பவனை இன்று
இதயமே இல்லாதவர்கள்…
கை விலங்கு
போட்டு
கைது செய்து
அழைத்துப் போக
என் கண்ணாளன்
அவன்
காவலர்களுடன் போவதை
கண்ட பின்னும்
இன்னும் என்
நெஞ்சு
வெடித்து சிதறாமல்
நிலையாய் நிற்கிறதே …
###############
இதயமே…இதயமே…!!
“டேய் அருண்.. நீ மட்டும் என் கையில கிடைச்ச.. தேஜூவுக்கு நீ கொடுத்த வேதனைக்கெல்லாம் உன்னை உயிரோட விடமாட்டேன் டா..”
அங்கிருந்த மேஜையில் தன் கையால் ஓங்கி குத்தினான் ராம்.. சுற்றி இருந்த அனைவரும் அவன் நிலையை கண்டு பயப்படுவதா இல்லை அனுதாபப்படுவதா என்று தெரியாமல் அவனை குழப்பத்துடன் பார்த்து கொண்டிருந்தார்கள்..
“உங்க கோவத்தை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க ராம்.. இந்த வீடியோவை பார்த்தா உங்க மனைவிக்கு விருப்பம் இல்லாமதான் அந்த அருண் அவங்களை கடத்தி வச்சிருக்கான்னு தோணுது.. அதனால நம்ம முதல்ல அந்த அருணும் உங்க மனைவியும் இருக்கிற இடத்தை கண்டுபிடிக்கணும்.. நான் திரும்பவும் இந்த கேஸை ரீஓபன் பண்றேன்.. இந்த ஸ்கூலோட வாசல்ல இருக்கிற ஏதாவது ஒரு சிசிடிவி கேமராவில அவன் வண்டி இல்ல வேற ஏதாவது டீடைல்ஸ் கிடைக்குதான்னு பார்க்கலாம்.. ஆனா எனக்கு ஒரு டூ டேஸ் டைம் கொடுங்க..” என்றார் இன்ஸ்பெக்டர்…
“ஓகே.. இன்ஸ்பெக்டர்.. இப்ப புரியுதா? நான் என் மனைவி மேல ஏன் அவ்வளவு அசைக்க முடியாத நம்பிக்கை வெச்சிருந்தேன்னு.. அவ நெருப்புக்குள்ள விழுந்து எரிவாளே தவிர எனக்கு துரோகம் பண்ண மாட்டா எந்த காலத்திலயும்” என்றான் ராம் கண்களில் உறுதியுடன்..
“ஓகே.. ஐ அண்டர் ஸ்டாண்ட்… ஐ அம் சாரி.. உங்ககிட்ட ஒவ்வொரு முறையும் உங்க மனைவி அவரோட இஷ்டப்பட்டுதான் போயிருப்பாங்கன்னு சொன்னது உங்களுக்கு எவ்வளவு ஹர்ட்டாகியிருக்கும்னு எனக்கு புரியுது” என்ற சொன்னார் அவர்..
“இட்ஸ் ஓகே இன்ஸ்பெக்டர்.. அவங்களை சீக்கிரம் எனக்கு தேடி கண்டுபிடிச்சு கொடுத்துடுங்க.. அது போதும்..” என்று இன்ஸ்பெக்டரிடம் சொன்னவன் தன் மனதுக்குள் “அவனை மட்டும் தேடி கண்டுபிடிச்சு கொடுங்க.. அதுக்கப்புறம் இருக்கு அவனுக்கு” என்று மனதினுள் கருவிக்கொண்டான்..
பள்ளி தலைமை ஆசிரியர் பக்கம் திரும்பியவன் “மேடம்.. ரொம்ப தேங்க்ஸ் மேடம்.. நீங்க கோ ஆபரேட் பண்ணினதனாலதான் இந்த கேஸை இன்ஸ்பெக்டர் ரீஓபன் பண்ணினாரு..” என்ற சொன்னான் அவன்..
“இட்ஸ் ஓகே மிஸ்டர் ராம்.. எங்க ஸ்கூல்ல படிக்கிற பிள்ளைகளோட அம்மா அவங்க.. அவங்களுக்கு ஏதாவது ஆபத்து இருந்து அதுக்கு எங்களால ஹெல்ப் பண்ண முடியும்னா அதை பண்றது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல.. அதனால அவங்க கிடைச்சாங்கன்னா அதைவிட சந்தோஷம் தர்ற விஷயம் எங்களுக்கு வேற எதுவும் இல்லை..” என்று சொன்னார் அந்த தலைமை ஆசிரியை..
“சரி சார்.. வீட்ல என் பிள்ளைங்க அம்மா அப்பாவோட தனியா இருப்பாங்க.. நான் போகணும்”
எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் ராம்..
தேஜுவை தன் காரில் அழைத்துக்கொண்டு தன் வீட்டின் அருகே வந்த அருண் அங்கே தெருவோரத்தில் எதையோ பார்த்தவன் அப்படியே வண்டியை நிறுத்தி லாக் செய்துவிட்டு ( இல்லையென்றால் தேஜு ஓடி விடுவாளே..) அவன் பார்த்த இடத்தை நோக்கி நடந்து போனான்…. தேஜூ காரினுள் இருந்தபடி அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்..
குப்பை மண்டி கிடந்த இடத்தில் போய் நின்றவன் அப்படியே கீழே அமர்ந்து அந்த குப்பையோடு குப்பையாக இருந்த ஒரு நாய்க்குட்டியை கையில் எடுத்தான்.. அதன் மேல் முழுவதுமாக ஏதேதோ குப்பையும் சாக்கடை அழுக்கும் ஒட்டிக்கொண்டு பார்க்கவே அருவருப்பாக இருந்தது..
ஆனால் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அதை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டு அதை தூக்கிக் கொண்டு காருக்கு வந்தவன் காரின் பின் இருக்கையில் அந்த நாய்க்குட்டியை வைத்துவிட்டு கதவை மூடி காரை ஓட்டிக்கொண்டு வீட்டுக்குள் சென்றான்..
வீட்டுக்குள் சென்றவுடன் கல்யாணி அம்மாள் வரவும் “கல்யாணிம்மா.. நீங்க அஸ்வினியை உள்ள கூட்டிட்டு போங்க.. நான் இதோ வரேன்..” என்று சொன்னவன் தேஜுவும் கல்யாணியம்மாவும் உள்ளே செல்ல அந்த நாய்க்குட்டியை காரிலிருந்து எடுத்துக்கொண்டு அவர்கள் பின்னே வந்தான்.. தேஜுவை அவள் வழக்கமாய் தங்கும் அறைக்கு கூட்டி வந்துவிட்டார் கல்யாணி அம்மாள்..
“கல்யாணிம்மா.. இந்த குட்டி செல்லத்துக்கு கொஞ்சம் பால் ரெடி பண்ணி வைங்க.. ” கல்யாணி அம்மாவிடம் சொல்லிவிட்டு நாய்க்குட்டியோடு உள்ளே சென்று விட்டான்..
அவன் அந்த நாய்க்குட்டியிடம் நடந்துக்கொண்டதை பார்த்து அப்படியே பிரமித்து போய் தன் கண்களை நம்ப முடியாமல் நின்றிருந்தாள் தேஜஸ்வினி..
நாய்க்குட்டியை நேரே குளியலறைக்குள் எடுத்து சென்றவன்.. அதை ஒரு அகலமான வாளிக்குள் விட்டு சோப்பு போட்டு நன்கு கழுவி குளிப்பாட்டி சுத்தமாக்கினான்.. அவன் கை கால்கள் உடை எல்லாம் அழுக்காகி இருந்தன..
ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அதை மறுபடியும் தூக்கிக் கொண்டு வெளியே வந்தவன் “என்னடா ரொம்ப குளிருதா?” என்று சொல்லி அதை ஒரு மென்மையான துவாலையால் துடைத்து விட்டதும் அதுவும் நன்றி கூறும் வகையில் அவன் கைக்குள் இன்னும் நன்றாக புகுந்து கொண்டு “ஊ ஊ” என்று சத்தமிட்டு கொண்டிருந்தது..
ஒரு சிறிய பஞ்சு மெத்தையை அந்த அறையின் ஒரு ஓரமாக விரித்தவன் அதில் அந்த நாய் குட்டியை படுக்க வைத்தான்.. அதன் பிறகு கல்யாணி அம்மாள் பாலை கொண்டு வர அந்த பாத்திரத்தை அதற்கு குடிக்க வைத்து விட்டு “பாலை குடிடா குட்டி” என்று அதன் தலையை தடவி கொடுத்துக்கொண்டே அந்த பாலை குடிக்க வைத்தான்..
நாய்க்குட்டி வெகு நாளாக பசியோடு இருந்தது போல இருந்தது.. பாலை பார்ததவுடன் அவசர அவசரமாக விரும்பி உண்டது..
“கல்யாணிம்மா இவருக்கு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை ஏதாவது குடுங்க.. பாவம்.. எவ்வளவு நாளா சாப்பிடலன்னு தெரியல” என்று சொன்னவன் குளியலறைக்கு போய் தன்னையும் சுத்தப்படுத்திக் கொண்டு உடையை மாற்றிக்கொண்டு வந்தான்..
“சாப்பாடு ரெடியா கல்யாணிம்மா?” என்று கேட்டவன் “அதெல்லாம் அப்பவே ரெடி ஆயிடுச்சு தம்பி.. நீங்க என்னென்ன பண்ண சொன்னீங்களோ அதெல்லாம் செஞ்சு வச்சுட்டேன்..” என்றார் கல்யாணி அம்மா..
“அதெல்லாமே என் அஷ்ஷூக்கு பிடிச்ச ஐட்டம்ஸ்.. வா அஷ்ஷூ.. போய் சாப்பிடலாம்..” என்றான்..
அவளுக்கோ அவனை என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. ஒரு சிறிய நாய்க்குட்டி மேல் இருக்கும் பரிதாபம் கூட அவள் மேல் அவனுக்கு இல்லை என்பது அவளுக்கு மேலும் எரிச்சலையே தந்தது..
நாளுக்கு நாள் அவனுடைய விசித்திரமான நடவடிக்கைகளால் அவளுக்கு மேலும் மேலும் புரியாத புதிராக மாறிக் கொண்டிருந்தான் அவன்..
வேறு வழி இல்லாமல் உண்ண சென்றவள் அவளுக்கு பிடித்த “ஃபிரைட் ரைஸ்” “பன்னீர் பட்டர் மசாலா” “உருளைக்கிழங்கு வறுவலும்” சாப்பாட்டு மேஜையை அலங்கரித்துக் கொண்டிருக்க தன் கண்களை நம்பவே முடியாமல் அப்படியே அமர்ந்து அந்த உணவை உண்டு கொண்டிருந்தாள்..
சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவன் கைபேசியில் ஏதோ குறுஞ்செய்தி வந்ததுபோல் மணி அடிக்க அதை எடுத்து பார்த்தவன் முகம் மாறியது..
அதன் பிறகு ” ம்ம்ம்ம்.. இன்ட்ரஸ்டிங்.. உன்னோட ராம் எனக்கு ரொம்ப டஃப் கொடுக்கிறான் அஷ்ஷூம்மா.. எனக்கு சரி சமமான எதிரி தான் போல இருக்கு அவன்.. இவனோட போட்டி போடுறது ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா போயிட்டு இருக்கு.. ஆனா இந்த அருணை பத்தி அவனுக்கு எதுவுமே தெரியாது இல்ல..? போகப் போக புரிஞ்சுப்பான்..” என்றான்..
தேஜூவுக்கு அவன் சொல்வது ஒன்றுமே விளங்கவில்லை.. “என்ன சொல்ற நீ? எனக்கு புரியல.. அவருக்கு ஏதாவது ஆபத்து வந்ததுன்னு தெரிஞ்சுதுன்னா நான் சும்மாவே இருக்க மாட்டேன்.. உன்னை கொலை பண்ண கூட தயங்க மாட்டேன்..” என்று அவள் சொல்லவும் அவன் சத்தமாக சிரித்தான்..
“உன் கையால நீ என்னை கொன்னு நான் செத்துப் போனேனா அதைவிட எனக்கு சந்தோஷம் தர்ற விஷயம் எதுவுமே கிடையாது.. ஆனா அது இவ்ளோ சீக்கிரம் நடக்க வேண்டாம் பேபி.. நம்ம கொஞ்சம் ஜாலியா லைஃபை என்ஜாய் பண்ணிட்டு அப்புறம் செத்துப் போறது பத்தி யோசிக்கலாம்.. ஒன்னும் பிரச்சனை இல்ல..” என்றான் அவன்..
சாப்பிட்டு முடித்து அவள் அருகில் எழுந்து வந்தவன் அவள் முதுகு பக்கம் குனிந்து அவள் முகத்தருகே தோள் இடுக்கில் முகத்தைக் கொண்டு வரவும் அவள் தன் முகத்தை பின்பக்கமாக அவனை விட்டு தூரமாக தள்ளவும் “பயப்படாதே பேபி.. உன்னை ஒண்ணும் பண்ண மாட்டேன்.. இதோ இந்த வீடியோவை காட்ட தான் வந்தேன்..” என்று சொல்லி அவளுக்கு ஒரு காணொளியை காண்பித்தான்.. தன் கைபேசியில்..
அதைப் பார்த்தவள் கண்களில் உடனே நீர் கோர்த்துக் கொண்டது.. அதில் குழந்தைகள் ராமிடம் அவளைப் பற்றி சொல்லவும் ராம் அவர்கள் சொன்னதற்கு “உங்க அம்மா ஏதோ ஆபத்தில இருக்கா.. அவளை காப்பாத்தணும்” என்று சொல்லி அவர்களை உள்ளே அழைத்துக் கொண்டு போவதும் தெரிந்தது..
அதன் பிறகு “கொஞ்சம் இரு பேபி.. இன்னொரு வீடியோ இருக்கு” என்று சொல்லி இன்ஸ்பெக்டர், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை, தன் பிள்ளைகளின் வகுப்பாசிரியை மற்றும் ராம் நால்வரும் நின்று கொண்டு ஏதோ ஒரு காணொளியை பார்த்துக் கொண்டிருக்க அப்போது அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு தேஜூவுக்கு அந்த கைபேசி வழியாகவே தன் ராமிடம் சென்று சேர்ந்து விட வேண்டும் என்று தோன்றியது..
“எனக்கு தெரியும் ராம்.. நீங்க என்னை சந்தேகப்படமாட்டீங்கன்னு… என்ன நிலைமை வந்தாலும் எனக்கு பக்க பலமா இருப்பீங்கன்னு எனக்கு தெரியும்..” என்று சொன்னவள் அருண் பக்கம் திரும்பி “இப்போ உனக்கு புரிஞ்சிருச்சா? என் ராம் எப்படின்னு நான் சொன்னேன் இல்ல? அவர் என்னை இம்மி அளவுக்கு கூட சந்தேகப்படமாட்டார்னு.. இப்ப நீ என்ன சொல்ற?”
தன்னவனை பற்றிய பெருமிதம் கண்களில் மின்ன அவள் கேட்கவும் “ஓகே.. இந்த முறை நான் தோத்துட்டேன்.. ஒத்துக்குறேன்.. அதனால இப்போதைக்கு நம்ம கல்யாணம் போஸ்ட்போனாகி இருக்கு.. அவ்வளவுதான்.. நாளைக்கு காலைல நான் சொன்னபடி உன்னை கூட்டிட்டு போய் உன் புருஷனை காட்டுறேன்.. ஆனா நீ மறைஞ்சிருந்துதான் பார்க்க வேண்டியிருக்கும்.. அவன் முன்னாடி போய் நின்னு ஏதாவது சீன் போடலாம்னு நினைச்சேன்னா உனக்கு தெரியும் நான் என்ன பண்ணுவேன்னு” என்றான் அவன்..
“என்னை ஏன்டா இப்படி டார்ச்சர் பண்ற..? நானும் அவரும் ஒருத்தரை ஒருத்தர் எவ்வளவு விரும்புறோன்னு உனக்கு தெரியுது இல்ல? அப்புறமா ஏன் என்னை கூட்டிட்டு வந்து வச்சிருக்கே? எங்க இருந்துடா வந்த நீ என் வாழ்க்கையில? உன்னை கெஞ்சி கேட்கிறேன் என்னை விட்டுடு.. ப்ளீஸ்..” என்றாள் அவள்..
“இதை பாரு அஷ்ஷூ டியர்.. இப்ப கூட உன்னை கூட்டிட்டு போய் உன் புருஷனை காண்பிக்கிறதுக்கு காரணம் நான் உன்கிட்ட வாக்கு கொடுத்துட்டேன்.. அஷ்ஷூகிட்ட கொடுத்த வாக்கை நான் மீற மாட்டேன்.. அதுக்காக மட்டுமே உன்னை கூட்டிட்டு போறேன்.. மத்தபடி நீ என்னை தவிர வேற யார நினைச்சாலும் எனக்கு மனசு வலிக்குது அஷ்யூ பேபி.. சரி.. இப்போதைக்கு நாளைக்கு போய் ஒன் டெம்பரரி புருஷனை பார்த்துட்டு வரலாம்.. நைட் சந்தோஷமா தூங்கு..” என்று சொல்லி கை கழுவ சென்றுவிட்டான்..
“ஐயோ கடவுளே.. இந்த வேதனை எப்ப தான் தீரும் எனக்கு? ராம் எப்படி தவிச்சுக்கிட்டிருக்கிறாரோ.. நான் இல்லாம..?” என்று புலம்பியவள் இரவு முழுவதும் மறுநாள் தன் ஆருயிர் கணவனை காண போகிறோம் என்ற சந்தோஷத்தில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்திருந்தாள்..
அடுத்த நாள் காலை எழுந்தவுடன் தான் முதல் நாள் உடுத்தி இருந்த பிங்க் நிற சேலையையே உடுத்திக் கொண்டு அருண் வந்து தன்னை அழைத்து போவதற்காக காத்திருந்தாள்..
காலை 10 மணிக்கு அவள் அறைக்கு வந்த அருண்.. “அஷ்ஷூ பேபி.. பிரேக்ஃபாஸ்ட் சாப்டியா இல்லையா?” என்று கேட்கவும் “ரொம்ப முக்கியம்.. எனக்கு என் ராமை பார்க்கற வரைக்கும் தொண்டைல எதுவும் இறங்காது.. இப்ப நான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டா என்ன சாப்பிடலைன்னா என்ன?” என்று அவள் முணுமுணுக்க “எதுவா இருந்தாலும் சத்தமா சொல்லு பேபி.. இப்படி சைலண்டா பேசாதன்னு உனக்கு எத்தனை வாட்டி சொல்றது?” என்றானவன்..
“கல்யாணிம்மா” என்று கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வந்த கல்யாணிம்மா “சொல்லுங்க தம்பி” என்றார்..
“ஆமா அஷ்ஷூ பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டாச்சா?” என்று கேட்கவும் “இல்ல தம்பி.. காலையிலிருந்து நானும் அந்த பொண்ணை சாப்பிட கூப்பிட்டுட்டுதான் இருக்கேன்.. ஆனா வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சுக்கிட்டு இருக்கு தம்பி..” என்று அவர் சொல்லவும் “ஏன் அஷ்ஷூம்மா.. என் கம்பெனி இல்லாம பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட பிடிக்கலையா? அது கொஞ்சம் டயர்டா இருந்ததா? கொஞ்சம் எக்ஸ்ட்ரா தூங்கிட்டேன்.. அதுக்கப்புறம் எக்ஸ்ஸர்சைஸ் பண்ணிட்டு குளிச்சிட்டு படுக்க லேட் ஆயிடுச்சு.. சரி வா.. இப்போ பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம்..”
அவள் கையை பிடித்து இழுத்தவனை எரித்து விடுவது போல் முறைத்தாள்..
“இந்த கையை பிடிக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத.. மரியாதை கெட்டுரும்..”
அவன் கையை உதறிவிட்டு “எனக்கு எதுவும் சாப்பிட வேண்டாம்” அவள் அடம்பிடித்து அங்கேயே உட்கார்ந்திருந்தாள்..
“ஓகே.. அப்ப எனக்கும் சாப்பிட வேண்டாம்.. எனக்கு சாப்பிடாம எங்கேயும் வெளியே போகமுடியாது.. அதனால இன்னைக்கு உன் டெம்ப்ரவரி புருஷனை பார்க்கவும் போகவேண்டாம்..” என்று சொல்லி அவன் அறைக்கு செல்ல அவன் திரும்பவும் “இல்ல இல்ல.. சாப்பிடலாம்.. சாப்பிட்டு கிளம்பலாம்..” என்று சொல்லி எழுந்து நின்றாள் அவள்..
“இப்போ எனக்கு மூடில்ல அஷ்ஷூமா.. நீ வேணா போய் சாப்பிட்டுக்கோ..” என்று அவன் சொல்லவும் “ப்ளீஸ்.. எனக்காக சாப்டு.. போய் அவரை பாத்துட்டு வரலாம்..” என்று கெஞ்சினாள் அவள்..
“அப்படியா? அப்படின்னா ஓகே.. நீ இவ்ளோ கெஞ்சறதை பார்க்க எனக்கும் பாவமா இருக்கு.. சரி வா.. சாப்பிட்டு போலாம்..” என்று அவளை அழைத்துக்கொண்டு காலை சிற்றுண்டி முடித்துவிட்டு இருவரும் கிளம்பி சென்றார்கள்..
அருணுடைய வண்டி ராமினுடைய வங்கியின் வாசலில் நின்றது.. காரிலிருந்து இறங்கும் முன்னே தேஜூ கண்ட காட்சி அப்படியே அவள் உயிரையே உறைய வைத்து விட்டது..
ராமின் கைகளில் விலங்கு மாட்டி இருக்க அவனை காவலர்கள் போலீஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டிருந்தனர்..
தொடரும்….
வாசகர்களுக்கு வேண்டுகோள்: உங்கள் விமர்சனங்கள் ( கமெண்ட்ஸ்) மற்றும் ஸ்டார் ரேட்டிங்க்ஸை எதிர்பார்த்து உங்கள் தோழி காத்திருக்கிறேன என்பதை மறக்காதீர்கள்.. ஃப்ரெண்ட்ஸ்!!!